யுகத்தின் தலைவன் அத்தியாயம் 14
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 14
கங்காவின் சீரும், கோடை விடுமுறையும் முடிந்து முதல்நாள் பள்ளி திறந்தது. அது மிகவும் ஸ்ட்ரிக்ட்டான கிருஸ்தவ பள்ளி. பெண் கல்விக்காக உருவாக்கப்பட்ட பள்ளி.
எத்தனையோ பெண் ஆசிரியைகளையும்,பெண் மருத்துவர்களையும்,பெண் செவிலியர்களையும்,பெண் காவலர்களையும்,பெண் ஆடிட்டர்களையும், குடும்பத்தை பொறுமையுடனும், அன்புடனும் நடத்திச் செல்ல தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் தொலைத்த குடும்ப தலைவிகளையும் உருவாக்கிய பள்ளி.
அங்குள்ள கட்டிடம், அதில் உள்ள கரும்பலகைகள்,நாற்காலிகள், மரங்கள் கூட கொஞ்சம் கர்வமாகத் தான் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த பள்ளியின் சாதனைகளையும்,வாங்கிய மெடல்களையும், கைதட்டல்களையும் தங்களுள் உள்வாங்கிக் கொண்டு..
Advertisement
ஒன்றரை மாத கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி திறந்ததால், வேப்பமர சருகுகளும், பாதானிக்காய் மர இலைகளும்,ரோஜா நிற பூகன்வில்லா பூக்களும் காற்றில் சிதறிக் கிடந்தன.
பிஇடி டீச்சர் விசில் அடித்து குப்பைகளை அப்புறப்படுத்த துரிதப்படுத்தினார்.
வெள்ளை நிற புளூமேரியா மரத்தின் அடியில் கங்காவின் கைகளை பிடித்தபடி, சுமதி ஒரே அழுகை,” நாம் பிரிஞ்சுருவோம் கங்கா” என,
கங்காவின் உயிர்த் தோழி சுமதி. அவர்கள் இருவரும் உறவினர் என்பதையும் தாண்டி நகமும் சதையும் போல பிரியாமல் இருந்தனர்.
Advertisement
அடுத்த வகுப்பிற்கு செல்ல இன்று மதியம் வகுப்பு பிரிக்கிறார்கள்.
இந்த வருடம் எந்த செக்சனில் பிரித்து விடுகிறார்களோ,அதே வகுப்பில் தான் மீதமுள்ள நான்கு வருடங்களும் படிக்க வேண்டும்.
Advertisement
அழுத கண்களோடு நின்று கொண்டிருந்தவளை ஆசிரியை ரோஸி பார்த்து விட்டார்.
ஏம்மா அழுகிறே?
இவ என் ப்ரெண்ட் கங்கா.இவ செக்சன்லேயே என்னை சேர்த்து விடுங்கனு தேம்பிக் கொண்டே கூறினாள்.
Advertisement
சரி பர்ஸ்ட்.அழுகையை நிறுத்திட்டு உன் பேர் என்னனு சொல்லு.
“என் பேர் சுமதி.இவ என் ப்ரெண்ட் கங்கா. இந்த டைம் க்ளாஸ் பிரிச்சா நாலு வருஷமும் அதே க்ளாஸ்லதான் படிக்கனும்.நாங்க ஒரு வேளை வேற வேற க்ளாஸ் போயிட்டோம்னா நாலு வருஷம் பிரிஞ்சுதான் படிக்கனும்.
எங்களை ஒரே க்ளாஸ்லே சேர்த்து விடுங்க” என கண்ணீரை துடைத்தவாறே கூறினாள்.
மதியம் செக்சன் பிரிக்கும் போது என்னை வந்து கூப்பிடுங்க,ரெண்டு பேரையும் ஒரே க்ளாஸ்லே சேர்த்து விடறேன்.நீ உன் ப்ரெண்ட் கூடவே படிப்பையா என உறுதியளித்தார் அதன்பின்பே சுமதி அமைதியானாள்.
குப்பைகளை அப்புறப்படுத்திய பிறகு வழிபாட்டுக் கூட்டம்.சுட்டெரிக்கும் வெயிலில் மாணவிகள் தங்கள் முன்பும், பின்பும்,பக்கவாட்டிலும் கைகளை நீட்டி இடைவெளி எடுத்து வரிசையாக நின்றனர்.
சாரண இயக்க மாணவிகள் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ஆங்காங்கே ரெடியாக நின்றனர்.வெயிலின் தாக்கத்தால் யாரேனும் மயங்கினால் அவர்களுக்கு புகட்ட பிஇடி ஆசிரியரின் ஏற்பாடு.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜெப அட்டையை எடுத்து படிக்க,மாணவிகள் பின் தொடர்ந்தனர்.
“அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.
எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனை சோதனைகளையும் நீக்கி உமது திருபெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக – ஆமென்.”
இதனைத் தொடர்ந்து அன்றைய செய்தி தமிழிலும் ஆங்கிலத்திலும்,பொது அறிவு, திருக்குறள், தலைமை ஆசிரியையின் முதல் நாள் வரவேற்புரை, நாட்டுப்பண் என இனிதே முடிவடைந்தது அந்த வழிபாட்டு கூட்டம்.
மதியம் வகுப்பு பிரிக்கும் நிகழ்வு. மரத்தடியில் எல்லா ஆசிரியர்களும் கூடி இருக்க ரோஸி டீச்சர் மட்டும் மிஸ்ஸிங்.
இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நின்றனர். மாணவிகள் ஆல்பபெட்ஸ் ஆர்டர் படி வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர்.
கங்கா, கே லெட்டர் முன்னாடியே வந்துரும் நீ போய் லைன்லே நில்லு நான் ‘ரெஸ்ட்ரூம்’னு பொய் சொல்லிட்டு, ஸ்டாப் ரூம் போய் ரோஸி டீச்சரே கூட்டிட்டு வரேன் என சுமதி கிளம்பி விட்டாள்.
மூச்சு வாங்க வேகமாக ஸ்டாப் ரூமினுள் சென்று ரோஸி டீச்சரை தேட, அவர் மத்திய உணவிற்காக வீடு சென்றுவிட்டதாக தகவல் சொல்லப்பட்டது. முகத்தை தொங்க போட்ட படியே க்ரவுண்டிற்கு வந்தாள்.
ஏய்! இங்க வா,எல்லா புள்ளைகளும் லைன்லே நிக்கறாங்க நீ மட்டும் எங்கடீ போய்ட்டு வரே என பிஇடி கடுகடுத்த முகத்தோடு கேட்க ஒரு நிமிடம் பயந்தே விட்டாள்.
ரெஸ்ட்ரூம் டீச்சர் என்றாள்.
உங்களுக்கு உடனே வந்துருமே. இப்போதானடி லஞ்ச் முடிஞ்சு போ..போய் ஒழுங்கா லைன்ல நில்லு.
ஏய் இங்க வாங்கடீ என வாலண்டியர் பிள்ளைகளை அழைத்து,இவளோட லெட்டர் என்னனு கேட்டு நிக்க வைங்க என கட்டளை இட்டார்.
எஸ் வரிசையில் ஒரு கூட்டமே நின்றது. அதற்குள் கங்கா ‘ஏ’ வகுப்பில் நிற்க வைக்கப்பட்டாள்.
சுமதிக்கு ஒரே அழுகை. கொஞ்சம் விட்டிருந்தால் கத்தி அழுதிருப்பாள்.
அவளுக்கு முன்னாள் நின்றவர்கள் ஏ- பி – சி என ஒவ்வொரு வகுப்பிலும் நின்று கொண்டு வந்தனர். தோழிகள் இருவருக்கும் ‘பக் பக்’ என இதயம் படபடத்தது.
சுமதி தன் முன்னாள் நிற்பவர்கள் ஒவ்வொருவரையும் ‘ ஏ பி சி’ என மனதிற்குள் கணக்கெடுத்துக் கொண்டே வர,அவள் ‘பி’ செக்ஷன் செல்ல வேண்டி வந்தது.
இப்போது அழுவது முட்டாள் தனம் என புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்தாள்.
ஆசிரியர்களும்,வாலண்டியர் மாணவிகளும் தன்னை பார்க்கிறார்களா? என ஒரு முறை உறுதி படுத்திக் கொண்டு, தனக்கு முன்னாள் நின்ற மாணவியை பின்னால் வரச் சொல்லி நின்று கொண்டாள்.
இனிதாக ‘ஏ’ பிரிவு வகுப்பிலேயே சுமதியும் சேர்ந்து விட்டாள்.
