Skip to content
Post Views: 18,385
“அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே…
ஓம் ஓம் ஓம் ஓம்…
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…”
என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க திரும்பும் திசையெங்கும் ‘அண்ணாமலையானுக்கு அரோகரா..!!’ என்ற கோஷமும் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரமும் ஓங்கி ஒலிக்க பக்தி பரவசத்துடன் பவுர்ணமி நாளில் கிரீவலப்பாதையை நிறைத்திருந்தது திரளான பக்தர்கள் கூட்டம்…
காவி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சுட்டெரிக்கும் மாலை நேர சூரியனால் அணிந்திருந்த வெள்ளை சட்டை தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டி கொண்டிருக்க வழியும் வியர்வையை பொருட்படுத்தாமல் முகத்தில் இறுக்கத்துடன் சமையல் நடந்து கொண்டிருந்த இடத்தில் ”இன்னும் முடியலையா..?? யாரும் காத்திருக்க கூடாது சீக்கிரம்” என்று ஓங்கி ஒலித்தது அதிர்துடியனின் கம்பீர குரல்.
Advertisement
அவன் குரலில் சிலருக்கு கைகளில் நடுக்கம் பிறந்தாலும் அதை வெளிக்காட்டாது இன்னும் வேகம் கூட்டி இருந்தனர் தங்கள் வேலையில்.
தலைமை சமையல்காரரை அழைத்து, ‘என்னல்லாம் முடிச்சி இருக்கீங்க..??’ என்றான்.
அவரோ சிறு தயக்கத்துடனே, ‘தம்பி புளியோதரையும் கேசரியும் தயாரா இருக்கு தயார். தயிர் சாதம் இன்னும் ஐஞ்சு நிமிஷம் எடுக்கும்’,
Advertisement
‘ மத்ததெல்லாம் ‘ என்றான் இடுங்கிய கண்களுடன்.
Advertisement
‘ பருப்பு இப்போ தான் வேக போட்டு இருக்கோம் ‘
“என்ன பொறுப்பில்லாத பதில் இது, உங்க கிட்ட பேசும் போதே ஆறுமணிக்கு எல்லாமே தயாரா இருக்கனும்ன்னு சொன்னேனே” என்று மீசையை நீவிவிட்டவாறே அவரை பார்க்க அதே நேரம் அவன் கைபேசி ஒலித்தது.
அதிர்துடியன் அவர் மீதிருந்த பார்வையை அகற்றாமல் அழைப்பை ஏற்க, ‘அதி’ என்று வாஞ்சையாக வந்தது அவன் அன்னையின் குரல்…
Advertisement
‘சொல்லுங்கம்மா’
‘வந்துட்டியாப்பா’
“ஆமா இப்பதான் கொஞ்சம் முன்ன வந்தேன், நீங்க எங்க இருக்கீங்க..??”
“கோவில் கோபுரம் கிட்ட இருக்கேன்”
“அங்க எதுக்கும்மா போனீங்க..?? இங்க பிள்ளையார் கோவில் கிட்ட இருந்தே தொடங்க வேண்டியது தானே..!!” என்றவனுக்கு அவர் செயல்களில் உடன்பாடு இல்லையென்றாலும் தன் ஆற்றாமையை கட்டுபடுத்தி அவரிடம் அத்தனை தன்மையாக வந்தது அவன் வார்த்தைகள்.
ஒரு நொடி மூச்சை எடுத்து விட்டு, “உங்களால நடக்க முடியாது வேண்டாம்ன்னு சொல்லியும் கேட்கலை நீங்க..!!”
“எதுவும் சொல்லாதப்பா கடைசியா ஈசனை நம்பி வந்திருக்கேன்.., அவர் கைவிட மாட்டார் என்னை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த அண்ணாமலையானே நிச்சயம் எனக்கு நடக்கிற சக்தியை கொடுப்பார் கண்டிப்பா என் வேண்டுதலை நிறைவேற்ற என் கூடவே இருந்து வழி நடத்துவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
‘ம்மா நான் தான் கல்யாணமே வேண்டா…’ என்று அவன் முடிக்கும் முன்னமே,
‘அதி’ என்ற அதட்டல் மரகதத்திடம்
அவனுமே தன் இடக்கர முஷ்ட்டியை ஒன்றாக குவித்து பின் விரித்து அதை மேலேடுத்து சென்று, ‘ சரிம்மா நான் ஒன்னும் சொல்லலை’ என்றான் விரல்களால் அழுத்தமாக நெற்றியை நீவிவிட்டு.
“அதி நீ இங்க வந்து கற்பூரம் ஏத்தி கும்பிட்டுட்டா நான் கிரிவலம் ஆரம்பிச்சிடுவேன்” என்று அவர் அழைக்க,
“இங்க பாருங்கம்மா என்னை எங்கயும் கூப்பிடாதீங்க நான் வர முடியாது.., இப்போ இங்க வந்ததே என் கையால அன்னதானம் செய்ய வேண்டிக்கிடீங்கன்னு நீங்க சொன்னதால வந்தேன் ஆனா இங்க வந்து பார்த்தா எல்லாம் பாதிலேயே நிற்குது.., எதுல வேணும்ன்னாலும் ஒருத்தரை காக்க வைக்கலாம் ஆனா சாப்பாட்டு விஷயத்துல மட்டும் காக்க வைக்க கூடாதுன்னு எத்தனையோ முறை ப்ரித்விக்கு எடுத்து சொல்லியும் இப்போ எல்லாமே இங்கு டிலே ஆகுது” என்றவனின் முகம் இயல்பை தொலைத்திருந்தது..,
‘அதி அது … ‘என்று மரகதம் தொடங்கவும்
“எந்த காரணமும் எனக்கு வேண்டாம்மா, நீங்க முதல்ல அவனுக்கு சப்போர்ட் பண்றதை நிறுத்துங்க அப்போதான் உருப்படுவான்” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை காரம்..!!
‘அதி ஒரு பத்து நிமிஷம் தான் ஆகும்’
“இல்லம்மா இப்போ அன்னதானத்தை விட்டு என்னால எங்கயும் நகர முடியாது நீங்க கும்பிட்டு தொடங்குங்க” என்றவனின் வார்த்தைகளில் இருந்த உறுதியை உணர்ந்தவர் ‘சரிப்பா’ என்றிட அவனும் கைபேசியை அணைத்து விட்டு…,
தன் எதிரே இருந்தவரிடம், ‘ஜூஸ், பால் ‘ என்ற அவனின் அடுத்த கேள்வியில் அடக்கப்பட்ட கோபத்தை உணர்ந்த சமையல்காரர்,
“தம்பி எங்க மேல எந்த தப்பும் இல்ல நீங்க சொன்ன நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னாடியே வந்துட்டோம் ஆனா மளிகை பொருள் பாதிக்கு பாதி வந்து சேரல, பாத்திரமும் அப்படியே , நாங்க என்ன பண்ண முடியும்..?? கைக்கு கிடைச்சதும் நாலு அடுப்புல உலை வச்சி வடிச்சி செய்துட்டு இருக்கோம் இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க சொன்னதெல்லாம் முடிச்சிடுவோம்”
“ஒரு பத்து நிமிஷம் குடுங்க ஜூஸ் ரெடி ஆகிடும்” என்று கூறவும்
‘சரி டைம் வேஸ்ட் பண்ணாம போய் சீக்கிரம் செய்ங்க’
‘சரி தம்பி’ என்று திரும்பியவரை மீண்டும் அழைத்தவன்.
‘முதல்ல பால் , ஜூஸ் இங்க வரணும் அடுத்து மத்ததை பண்ணுங்க’ என்றவன் உடனே தம்பிக்கு அழைத்தான்.
‘அதி அண்ணா’ என்ற எண்ணை கண்ட ப்ரித்விக்கு குப்பென வியர்த்து விட்டது, அருகே இருந்த சொக்கலிங்கம் ‘யார்டா..??’ என்று கேட்க,
“அண்ணா தான் சித்தப்பா” என்றவனின் முகத்தில் பதட்டம்,
‘பேசு’
‘என்ன பேச..??’ என்றவன் ‘கண்டிப்பா ஏன் லேட்ன்னு திட்றதுக்கு தான் கால் பண்ணுவாரு சித்தப்பா நீங்களே பேசுங்க.., என்னை கேட்டா நான் பாத்ரூம் போயிருக்கேன் சொல்லிடுங்க’ என்று அவரிடம் கொடுக்க,
‘சொல்லு துடியா’ என்றார் சொக்கலிங்கம்.
‘சித்தப்பு அவன் எங்க..??’ என்றவனின் குரலில் சீற்றம்
‘ப்ரித்வியா கேட்கிற..??’
‘அவன் போன் தானே உங்ககிட்ட இருக்கு’ என்று அவன் வார்த்தையை கடித்து துப்ப,
‘ஹீஹீ ஆமால்ல’ என்று அவர் அசடு வழியவும்
‘கொடுங்க’ என்றான் கட்டளையாக
‘எப்பா டேய் புடிடா நீயே பேசிக்கோ’ என்று உடனே சொக்கலிங்கம் ப்ரித்வியிடம் கைபேசியை அளிக்க,
‘அண்ணா’ என்று தயக்கமாக அவன்,
‘ஏன்டா உன்னை நம்பி ஒரு பொறுப்பை கொடுத்தா..” என்று எடுத்ததும் அவன் குரல் உயர்த்த,
உடனே ‘ண்ணா அண்ணா சாரிண்ணா சாரி என் பிரென்ட் டெலிவரிக்கு அவன் பொறுப்புன்னு சொல்லவும் நான் அதை நம்பி இருந்துட்டேன் இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவோம்” என்று தழைந்த குரலில் கூற,
‘இதெல்லாம் பொறுப்பானா பதிலாடா..?? ‘ என்று வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூட்டம் மெல்ல களைந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே கேட்ட அதியின் குரலில் தம்பி மீதான அதிருப்தியும் கோபமும் சமவிகிதத்தில்..!!
‘ப்ளீஸ்ண்ணா சாரி’ என்றவனை தடுத்து,
“அடுத்தவங்களை நம்பி இறங்கினாலும் அதை பத்தின நிலவரத்தை எப்பவும் தெரிஞ்சி வச்சிக்கனும்ன்னு எத்தனை முறை சொல்றது..”
‘ப்ளீஸ் ப்ளீஸ்ண்ணா இன்னொரு முறை இந்த தப்பு நடக்காது நான் வந்துட்டே இருக்கேன் டென்ஷன் ஆகாதீங்க’ என்று அவன் கெஞ்சவும்,
இதற்கு மேல் அவனை பேசுவதால் எதுவும் மாறப்போவதில்லை அதற்கு பதில் வேலையை தூரிதபடுத்துவது உத்தமம் என்பதால் ‘சரி வா’ என்று அழைப்பை துண்டித்தான்.
பின் அங்கிருந்த அவன் ஆட்களிடம் குடிநீர் கேனை இருபுறமும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் படி வைக்க சொல்லி அடுத்து தயாராகி இருந்த பழச்சாரும் பக்தர்களுக்கு கைக்கு சென்று சேரும்படி பார்த்து கொண்டவன் அதுநேரம் வரை அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த தம்பி மகனை தூக்கி கொண்டு அவனுக்கு பால் புகட்டினான்.
அதிர்துடியன் இருபத்து ஒன்பது வயது ஆண்மகன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் மற்றும் மரகதம் தம்பதியரின் மூத்த மகன் அவனுக்கு பின் ப்ரித்விராஜ் மற்றும் மகள் ஆராதனா என்று நிறைவான குடும்பம். சுந்தரலிங்கம் கிருஷ்ணகிரியில் பிரபலபுள்ளி அவர் இறங்காத தொழில் இல்லை அரசியலிலும் பெரும் செல்வாக்கு கொண்ட மனிதர் மரகதத்தை கைபிடித்த நாளில் இருந்தே அவர் தொட்ட அனைத்தும் வெற்றி தான்.
தந்தையின் தொழில்களே ஏராளமாக இருக்க அதிர்துடியன் வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்து விட்டு வந்த பின் சில காலம் அவர் தொழிலை நடத்தியவன் இப்போது தானே சொந்தமாக நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருபவன்.
தொழில் முறை போட்டிகள், எதிரிகள் பலர் இருந்தாலும் என்றுமே தொழிலில் சமரசம் என்ற வார்த்தைக்கே அதிர்துடியனிடம் இடமில்லை அத்தனை நேர்மையாக, கறாராக, திறம்பட செய்பவன் பேச்சிலும் பார்வையிலும் எதிராளியை கிடுகிடுக்க செய்து பந்தாடுபவன். அவனிடம் மோதி மண்ணை கவ்வியவர்கள் பலர்…!
அதிலும் அதிர்துடியனின் தொழில் திறமையை விட அவனது முன்கோபம் அவர்களிடம் பிரசித்தி பெற்றது. மகனுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த சுந்தரலிங்கத்திற்கு தன் மூத்த மகனை அரசியலில் களம் இறக்கும் எண்ணம் இருந்தும் அதற்கு பிடி கொடுக்காமல் நழுவி வருபவன்.
இருவருடங்களுக்கு முன் இருபத்தி ஐந்து வயதில் இரண்டாம் மகன் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்று வந்து நின்றபோது அதை எதிர்பாராத பெற்றோர் மூத்தவன் இருக்கையில் நிச்சயம் இளையவனுக்கு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர்.
அதை தொடர்ந்து அதிர்துடியனுக்கு பெண் பார்க்கும் படலம் தீவிரபடுத்த பட்ட போதும் அவர்கள் எதிர்பார்த்த அளவில் பெண் அமையவில்லை.., அதோடு அதிரும் “தனக்கு பெரிதாக திருமணத்தில் நாட்டமில்லை தோணும் போது செய்து கொள்கிறேன் என்று கூறியவன் இப்போது வேண்டும் என்று ப்ரித்வி கேட்டு செய்யாமல் போனால் நாளை அது விபரீதமாக முடிய வாய்ப்பு உண்டு” என்று கூறி பெற்றோரை சமாதனபடுத்தி தானே முன்னின்று தம்பியின் திருமணத்தை நடத்தி வைத்தான்.
அப்போதே மரகதத்திடம் சொந்தங்கள் மூத்தவனை வைத்துகொண்டு இளையவனுக்கு திருமணம் செய்தால் பெண் பார்க்கும் போது தேவை அற்ற பேச்சுக்கள் கிளம்பும் நாளை துடியனின் திருமணம் இதனால் தள்ளி போகவும் வாய்ப்பு என்று கூறி அவரை பயமுறுத்த.., இளைய மகனின் திருமணம் முடித்த கையோடு அதிரின் ஜாதகத்தை கையில் எடுத்து தீவிரமாக இறங்கியும் கடந்த ஒருவருடமாக சிலர் பிரித்விக்கு திருமணம் ஆனதை வைத்தே அவர்களை பெண் பார்க்க அழைக்க தயங்கிட பலர் அப்படியே பெண் பார்க்க அழைத்தாலும் அடுத்த கட்ட பேச்சுக்கு செல்ல தயங்கினர்.
முதலில் இருமுறை பெற்றோருடன் பெண் பார்க்க சென்றவன் அதன் பின் ‘நீங்களே பார்த்துகொள்ளுங்கள்’ என்று கூறி விட்டான். இப்போது அதிர்துடியனுக்கு வயது இருபத்தி ஒன்பது முடிய இன்னும் ஐந்து மாதங்களே இருப்பதால் அதற்குள் அவனுக்கு திருமணம் முடித்து விடவேண்டும் இல்லை என்றால் அதன் பின் ஐந்து வருடங்களுக்கு அவனுக்கு திருமண யோகம் இல்லை என்று அவர்கள் குடும்ப ஜோதிடர் கூறிவிட.., அவர் வயதிற்கும் உடல் நலத்திற்கும் இத்தனை அலைச்சல் கூடாது என்ற அதியின் வார்த்தைகளை மீறி பல கோவில்களுக்கு சென்று வேண்டுதலை வைத்து வந்த மரகதம் இன்று ஈசனின் பாதம் பற்றி மகனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டி மொத்த குடும்பத்தையும் இங்கு கூட்டி வந்துவிட்டார்.
error: Content is protected !!