தடதடவென ஓடும் சத்தம் காதுகளை அடைய ஆழ்ந்த உறக்கம் அல்லாது மேலோட்டமான உறக்கத்தில் இருந்த திவ்யாவின் தூக்கம் அந்த சத்தத்தில் மொத்தமாய் கலைந்தது.
மெல்ல எழுந்து அமர்ந்தவள் சுற்றம் பார்த்து, இருட்டாக இருந்த அறையை விளக்கின் மூலம் ஒளிரவிட்டு குளியறைக்குள் புகுந்துகொண்டாள். காலை குளித்தாலும் மாலையும் ஒரு குளியலை உடல் தேடுவது அவளுக்கே ஆச்சிரியம் தான். என்று தான் இத்தனை சுறுசுறுப்பானோம் என்ற கேள்வி தோன்றாமலும் இல்லை.
ஆனால் அவள் வாழ்க்கையே மாறியது போல அவளும் மாறியதில் தவறில்லையே. கணவனோடு இணைந்து விவாகரத்தை ரத்து செய்து மகிழ்ச்சியாக ஒரு வாரம் உலா வந்தார்கள் சிங்கார சென்னையையே.
ரகுவும் வேலைக்கு விடுப்பெடுத்து மனைவியோடு சுற்றி திரிய, கணவன் ஆஸ்திரேலியா கிளம்பும் பொழுது சிரிப்போடு டாட்டா கூறும் மனைவியை பார்த்து அசந்து தான் போனான். என்ன என கேட்டதற்கு, ‘என் அத்தையோடு நாட்களை செலவழிக்க போகிறேன்’ என கூறி இன்னும் விரிந்து சிரித்தாள்.
‘சரி தான் போடி’ என முகத்தை தூக்கி வைத்து செல்லமாய் கோவத்தோடு போனவனுக்கு அடுத்த ஒரே வாரத்தில் மனைவியின் கண்ணீர் முகம் தான் தொடு திரையில் வந்து ஒலித்தது.
“வீராப்பா பேசுன பேச்செல்லாம் எங்க போச்சு?” என கணவன் சிரிப்பு தான் இறுதியில் கிடைத்தது.
ஆறு மாதங்கள் என கூறி சென்றவன் இல்லாதது பைரவிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. முதல் ஒரு வாரம் அடிக்கடி கணவன் நினைவு வந்தாலும், நாட்கள் நகர அவன் எண்ணம் மட்டும் தான் இருந்தது. வேலையில் கூட அதிக கவனம் தவறி பலமுறை திட்டுவாங்கி கட்டிக்கொண்டதுண்டு.
அதையும் அவனிடம் கூற திரை குலுங்க சிரிக்க தான் செய்வான், “உன்கிட்ட சொன்னேன் பாரு” என நொடித்துக்கொண்டு மீண்டும் அவனிடமே கூறி தன்னுடைய ஏக்கத்தை அவனுக்கு கடத்திவிடுவாள்.
அவனுக்கும் அவள் வாடிய முகத்தை காண பாவமாக தான் இருந்தது, ஆனால் வேறு வழி இல்லையே. வருட கணக்கில் அங்கு வேலையெனில் அவளையும் கையேடு அழைத்து சென்றிருக்கலாம், ஆனால் இது ஆறு மாத வேலையாகி போக தான் மட்டும் சென்றான்.
மனைவியும் தானும் வருகிறேன் என அதிகம் கேட்கவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து அதன் பிறகு கேட்க துவங்க அவளது மனதின் போக்கை மாற்ற எண்ணி அன்னை மூலம் திவ்யாவுக்கு ஊக்கமளித்து அவள் படித்த படிப்பிற்கு தகுந்தாற் போல் வேலை தேட தூண்டினான்.
மகன் கூறியதற்கு இரண்டு மடங்கு அதிகம் வேலை செய்து அடுத்த மூன்று மாதத்தில் அவளை வேலை ஒன்றையும் வாங்க வைத்துவிட்டார். ரகுவையும் கார்த்திகாவையும் கையில் பிடிக்க இயலவில்லை.
வேலை வாங்கிய திவ்யாவை விட அவர்கள் ஆர்ப்பாட்டம் தான் அதிகமிருந்தது. அனைத்தையும் மோகனும் திவ்யாவும் பார்வையாளராக தான் தூரம் நின்று பார்த்தனர். அதன் பிறகு திவ்யாவுக்கு ரகுவை நினைத்து வருந்த அதிகம் நேரமில்லை எனினும் இரவு அவனோடு காணொளி மூலம் பேசும் பொழுது பலமுறை அழுதுவிடுவாள்.
அவன் கூறும் எந்த சமாதானமும் வேலை செய்யாமல் போனது. ரகுவுக்கும் நாளுக்கு நாள் அழகாய் தெரியும் மனைவியை விட்டு தள்ளி நிற்க முடியவில்லை.
தன்னுடைய காதல் நிறைந்த கண்களுக்கு அவ்வாறு தெரிகிறாளா இல்லை உண்மையாகவே நாளுக்கு நாள் மெருகேறி போகிறாளோ என்ற சந்தேகம் வேறு.
இதற்கிடையில் ஒரு நாள் மோகன் வீட்டிற்கே அவள் பெற்றோர் வந்து நிற்க, அத்தை மாமா முன்பு எதுவும் பேசாது அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
மோகன் கார்த்திகாவுக்கு வீடு தேடி வந்தவர்களை அவமதிக்க தோன்றவில்லை, உள்ளே அழைத்து சமாதான பேச்சு, மன்னிப்பு படலத்தை எல்லாம் முடித்து வந்தவர்களுக்கு இன்முகத்தோடு விருந்து படைத்ததே ஓய்ந்தனர்.
பெண்ணை பெற்றவருக்கு அத்தனை சந்தோசம் அவர்கள் கவனிப்பில், ஆனால் மகள் பேசாதது தான் மன சுணக்கத்திற்கு காரணமாகியது. அவளும் மாமனார் மாமியாரின் பேச்சை மதித்து வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவது, அவர்களுக்கு தேவையானதை செய்தாலும் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை.
நாட்கள் செல்லட்டும் சரியாகிவிடுவாள் என கார்த்திகா தான் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
ரகுவிடம் அதை கோவமாக அவன் கூற அப்படியா, எப்படி உடனே மனம் மாறினார்கள் என ஆச்சிரியமாக கேட்டு வைத்தான்.
ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் அவனே. மூன்று மாதங்களுக்கு மேல் அவளது தந்தையோடு அலைபேசியில் தொடர்பிலே இருந்தான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அவள் சற்று மனம் தெளிந்து காணப்பட, இது தான் நீங்கள் செல்ல சரியான நேரம் என அவருக்கு வழி வகுத்து அமைத்து கொடுத்து அவளை உடனே கட்டாயப்படுத்தாமல் விசாரிப்புகளோடு மட்டும் வாருங்கள் எனவும் கூற அவன் கூறியது போலவே செய்திருந்தனர் அவள் வீட்டினர்.
அதுவும் ரகு எறிந்த கல் சரியாக வேலையும் செய்திருந்தது. ‘அது எப்படி நீ இல்லாதபோ வருவாங்களா? ஏன் நீ இருந்தப்போ வந்திருக்கலாம்ல?’ என்று வார்த்தையும் விட்டாள்.
அந்த ஒரு வார்த்தை போதுமே, உடனே மாமனாரிடம் அவள் மாற்றத்தை கூறி மாதம் ஒரு முறை தான் வரும் வரை அவளை சென்று பாருங்கள் என கூறி திவ்யாவுக்கு பெற்றோரின் மேல் இருந்த கோவத்தை குறைத்தான்.
அவளுக்கும் அவர்கள் மேல் அதிகம் கோவத்தை பிடித்து வைக்க முடியவில்லை, சகஜமாக பேச துவங்கவில்லை என்றாலும் வாருங்கள் என வீட்டிற்கு வரும் நேரம் அழைப்பாள், அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
‘போதும்டா நீ இது பேசுனதே, அப்பாவுக்கு சந்தோசம்’ சிறு பிள்ளை போல் அழுதவரைப் பார்த்து அவளுக்கும் அழுகை பெருகியது.
பெண் பிள்ளை அல்லவா அதிகம் கோவத்தை பிடித்து வைக்க முடியவில்லை அதுவும் தந்தையாரின் கண்ணீரை பார்த்து அவள் பிடிவாதம் ஆட்டம் தான் கண்டது.
தன்னையே தேற்றிக்கொண்டு ரகுவை வர நச்சரிக்க துவங்கினாள். அவர்களை சோதிக்கவே ரகுவின் வேலை நினைத்த ஆறு மாதங்களை தாண்டி ஏழாம் மாதத்தையும் கடந்திருக்க மொத்தமாய் வாடி தான் போனாள் திவ்யா.
மோகனுக்கோ வாடிய கொடியாய் இருக்கும் மருமகளை பார்த்து வருத்தம் மேலிட மனைவியிடம் மகனை வேலையை விட்டாவது வர கூறினார்.
அடுத்த இரண்டாம் நாள் வேலையை முடித்து எவருக்கும் தகவல் கொடுக்காது வீட்டில் வந்து இறங்கிய ரகுவை அனைவரும் ஆச்சிரியத்தோடு தான் பார்த்தனர்.
அன்று இரவு உணவை முடித்து அறைக்குள் செல்லும் வரை அவனிடம் ஒரு வார்த்தை அவள் பேசவில்லை, தங்கள் அறைக்குள் சென்றதும் இருந்த ஏக்கத்தை எல்லாம் கோவமாய் மாற்றி அவனை சரமாரியாக அடித்த பிறகே அவனை இறுக்கமாக கட்டி அணைத்து மகிழ்ச்சி பெருமூச்சு விட்டாள்.
இன்றளவும், ‘இந்த மாதிரி வரவேற்ப்ப நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லடி’ என அடிக்கடி அவளை கிண்டலும் செய்வான்.
படாரென கதவை திறந்து வந்த அவர்கள் மூன்று வயது புதல்வன் வேதவ், கட்டிலில் மேல் இருந்த அவனது உடையை எடுத்துக்கொண்டு வந்த அதே வேகத்தில், “திவ்யா நான் தாத்தாகிட்ட போறேன்”
வீடே அலறும் வகையில் ஓட, “டேய் பேர சொல்லாதடா” மகனை திட்டிக்கொண்டே அவனை வேகமாக அவள் வரும் முன்பு சிறுவன் ஓடிவிட்டான்.
அவன் வெளியேறிய அந்த இடைவேளையில் அவனை விட அவசரமாக வந்த ரகு அவளை பதமாய் பிடித்து நிறுத்தினான், “ஹே பாத்து மெதுவாடி” மெல்ல அவளை உள்ளே இழுத்து வந்து கதவை அடைத்தான்,
“பாரு இன்னும் ஒழுங்கா டிரஸ் கூட பண்ணல” அவளது உடையை சரி செய்தான் அவசரமாக.
“உன்ன பாத்து தான் ரகு அவனும் என்ன பேர் சொல்லி பேசுறான்” கணவனை பார்த்து குற்றம் சாட்டி முறைத்தாள்.
“சரி தான் இனிமேல் அப்போ உன்ன நான் அம்மா அம்மானு சொல்லுறேன்” என்றவன் உடனே அவளது இதழை சிறை செய்து சில நொடிகள் தனது தேவையை எடுத்து அவளது கழுத்தில் தன்னுடைய முகத்தை பதிக்க,
மனைவியின் உடல் தளர்வை உணர்ந்தவன் அவளது பின்னிடையோடு மெல்ல அணைத்து அவளது வாசத்தை உள் இழுத்தான்.
“ரகு இப்போ தான்டா குளிச்சேன்” உள்ளிறங்கிய குரலில் அவள் பேசியது கணவனுக்கு கேட்காமல் போனது.
“வாசமா இருக்கடி கோவிந்தம்மா” அவளை மேலும் மேலும் ஆசையாக அணைக்க அவளால் அவனது ஆசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சு சீரற்று போனது.
அதனை நொடியில் உணர்ந்தவன் தன்னுடைய தேவையை அடக்கி அவளை ஆசுவாச படுத்த மெல்ல அவள் முதுகை வருடினான், “சரிடா சரிடா… சாரி” மன்னிப்பு வேண்டி இறுதியாக அவளது சுடிதாரை சற்று மேலே தூக்கி தங்கள் இரண்டாம் மகவு வளரும் மனைவியின் மணி வயிற்றில் தந்தையாய் பாசத்தோடு முத்தம் ஒன்றை வைத்து பிரிந்து நின்றான்.
“நாளுக்கு நாள் அழகாகிட்டே போறடி, அப்றம் சம்பவம் நடந்தா என்ன எதுவும் சொல்ல கூடாது சொல்லிட்டேன்” முகத்தை உர்ரென்று வைத்து பேசும் ரகுவை பார்த்து சிரிப்பு குபீரென வந்தது திவ்யாவுக்கு.
சரியாக அந்த நேரம் ஹாரன் சத்தம் கேட்க, “வந்துட்டானுங்க உன்னோட துவாரபாலகர்கள். எப்பா இவனுங்க ஊர்ல இல்லனு தெரிஞ்சு தான் வெள்ளி கிழமை லீவு எடுத்துட்டு வந்தேன்.
பாரு மூக்கு வேர்த்து ஒடனே வந்துட்டானுங்க. இல்ல தெரியாம தான் கேக்குறேன், நான் என்ன உன் நிலைமை புரியாம பாஞ்சிடவாடி போறேன் எதுக்கு உன்ன இப்டி பாதுகாக்குறானுங்க இவனுங்க?”
கணவன் புலம்ப புலம்ப திவ்யாவுக்கு சிரிப்பு தாளவில்லை அவன் தோளினை பற்றி வயிறு வலிக்க சிரித்தாள். அவளை மெதுவாக பற்றியவன், “சரி போதும் ரொம்ப சிரிக்காத அப்றம் வயிறு புடிச்சுக்குச்சுனு அழுவ”
சரி என தலையை ஆட்டி இயல்பிற்கு வந்தாள்.
“நீ வெளிய போ இல்லனா உன் அண்ணனுங்க குளிக்க கூட விட மாட்டானுங்க” எனவும் திவ்யா வெளியே நகர அவளை மீண்டும் பிடித்து நிறுத்தி அவள் நெற்றியிலும் கன்னத்திலும் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்து, “இப்போ போ” என அனுமதி கொடுத்தான்.
மகனோடு விளையாடிய வியர்வை கூடா காயாதிருக்க தன்னை நெருங்கியவனை தள்ளி நிறுத்த மனமே இல்லாது அவனோடு ஒட்டியே நின்றவள் மீண்டும் ஒருமுறை தன்னை சரி செய்து தன்னுடைய ஒன்பது மாத வயிற்றை பத்திரமாக பிடித்து வெளியேறினாள்.
அவ்வளவு தான் அவர்களுக்கான நேரம், இனி திவ்யாவின் நேரத்தை எல்லாம் அவள் வீட்டினர் களவாடிவிடுவார்கள்.
அரை மணி நேரத்திற்கு ஓவர் முறை பழசாறு ஒன்று வர, அடுத்த ஐந்து நிமிடத்தில் காரமாக ஏதாவது ஒரு ஸ்னாக் வரும். இதில் திவ்யாவுக்கு ஆனந்தமோ இல்லையோ அவள் மகனுக்கு கொள்ளை ஆனந்தம்,
நினைத்தது எல்லாம் அம்மாவை சாக்காய் வைத்து வாங்கிவிடுவான். இன்று நேற்றல்ல இந்த கவனிப்பு, பல ஆண்டுகளாக இது தான் நடக்கும். திவ்யாவின் தலை பிரசவத்திற்கு அவள் வீட்டினர் எவ்வளவோ அழைத்தும் வரவே மாட்டேன் என மறுத்துவிட்டாள், கோவம் இன்னும் உள்ளதென்று.
ரகுவும் எவ்வளவோ எடுத்து கூறியும் பிடிவாதமாய் நின்றவள் தான் நினைத்ததை தான் இறுதியாக சாதித்தாள்.
ரகுவுக்கும் கோவம் வர அடுத்த பிரசவத்திற்கு செல்கிறேன் என்ற வாக்கோடு அவனை சமாதானம் செய்தாள்.
முதல் பிரசவத்திற்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இளைய சகோதரன் திருமணம், மூத்த சகோதரன் குழந்தைக்கு பெயர் வைப்பது காது குத்துவது என நிகழ்ச்சிகள் அடுக்கிக்கொண்டு போக அவளது கோவமும் குறைந்துவிட இதோ இரண்டாவது பிரசவத்திற்கு அன்னை வீடு வந்துவிட்டாள், அதுவும் ஒன்பதாவது மாதத்தில் தான்.
எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவம் நடைபெறலாம் என்னும் நிலையில் ரகுவால் சென்னையில் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அடிக்கடி மனைவியின் நிலையை கேட்டு தெரிந்துகொண்டவன் வார இறுதி நாட்களில் ஓடி வந்துவிடுகிறான்.
அதுவும் மனைவி நேற்று காலையே அடிக்கடி வயிறு வலி வருகிறது என கூறவும் முடியவில்லை அடுத்த மூன்று மணி நேரத்தில் அவள் முன்னாள் நின்றான்.
“ம்மா பண்ணீர் பிங்கர்ஸ் பாட்டி வேணுமா கேட்டாங்க? நான் கொண்டு வரவா”
தன் முன்னே வந்து கேட்ட மகனிடம் வேண்டாம் என திவ்யா கூற அவனோ ஓடி சென்று பாட்டியிடம் வாங்கி வந்து அன்னைக்கு அதனை ஊட்டிவிட அவளுக்கு சுருக் சுருக்கென வயிற்றில் ஏற்படும் வலியில் எதுவும் உண்ண தோன்றவில்லை.
“வேணாம்டா போ” சற்று கோவமாகவே திவ்யா மகனை கடிய,
அவன் அன்னையின் முகத்தை தீவிரமாக பார்த்து உடனே “அப்பா…” என தந்தையை நோக்கி ஓடிவிட்டான்.
“ஏன்டி பிள்ளையை திட்டுற” பேரன் மேல் இருந்த பாசத்தில் மகளை அவர் அதட்ட அவளோ எதற்கும் பதில் கொடுக்கவில்லை.
அமர்ந்திருந்தால் தான் வலி எடுக்குமோ என சற்று காலாற நடந்தவள் அப்படியே வீட்டிற்கு வெளியே வர அவளை தொடர்ந்து அவளது சகோதரர்கள், அண்ணி, அவர்கள் குழந்தைகள் என அனைவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டனர்.
சகோதரர்கள் இருவருக்கும் முதலில் ஒரு ஆன் குழந்தையும் இரண்டாவது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
அந்த நால்வருக்கும் அவர்கள் அத்தை என்றால் கொள்ளை பிரியம், தினமும் திவ்யாவிடம் அலைபேசியில் பேசிவிட வேண்டும், அதோடு ரகுவை பார்த்தாள் தலைகீழாக தான் சேட்டை எல்லாம் இருக்கும்.
திவ்யாவின் சகோதரர்களை வலைப்பதற்கு பதில் தெளிவாக அவர்கள் பிள்ளைகளை வளைத்துவிட்டான். அவர்களும் எந்நேரமும் ‘மாமா மாமா’ என்று அவன் பின்னால் தான் சுற்றி திரிவார்கள்.
வெளியில் தானே சென்று விளையாட கூடாது, வீட்டிலே ஒரு கூட்டத்தையே உருவாக்குகிறேன் என்ற சபதத்தில் வீட்டில் உள்ள பொடுசுகள் அனைத்தையும் கட்டி இழுத்து தன்வசமாகிக்கொண்டான் ரகு.
“அத்தை நீங்க நடந்தா குட்டி பாப்பாக்கு கால் வலிக்காதா?” என திவ்யாவின் மூத்த சகோதரன் இளைய மகள் தன்னுடைய அத்தையிடம் கண்களை சுருக்கி வருத்தமாக கேட்க திவ்யாவுக்கு வலியை மீறிய சிரிப்பு.
அவளது அழகு சடையை ஆட்டிவிட்டு, “பாப்பா வெளிய வந்து உன்ன மாதிரி நடந்தா தான் கால் வலிக்கும். இப்போ அத்தை தான தூக்கி வச்சிருக்கேன்”
“அப்போ என்னையும் தூங்குறீங்களா? மாமா பால் எடுத்துட்டு வர சொல்லி கால் வலிக்கிது” தன்னுடைய பிஞ்சு கால்களை காட்டி பாவமாக கேட்க அடுத்த நொடி அந்த சின்ன குழந்தை காற்றில் இருந்தது.