ஆரவாரத்தோடு மழையானது வெளுத்து வாங்கி அந்த இடத்தையே தலைகீழாக புரட்டி போட்டிருந்தது. அதிலும் கோடை காலத்து மழைக்கு சொல்லவே தேவையில்லை. மழையை காட்டிலும் இடி மின்னலின் தாக்கம் தான் அதிகம் இருந்தது.
இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாக சென்னை மாநகரில் விடாது மழை பொழிந்துகொண்டே இருக்கும் காரணத்தினால் கோடை காலம் குளிர் காலமாக மாறியிருந்தது.. இன்றும் குளிர் காற்றும், இடது தோளின் பக்கம் தண்ணீர் சொட்டு போட்டுக்கொண்டே இருக்க, உடல் குளிரால் நடுங்கியது. உடலை மேலும் குறுகி சுவற்றோடு ஒட்டி அமர்ந்தாள்.
ஆனால் பயன் தான் பூஜ்யம் இதற்கு மேல் ஒட்டி செல்ல சுவரை இடிக்க தான் வேண்டும்.
இரவு காற்று உடலினுள் மோத ஊசியாக குத்திய பனிக்காற்றை கூட கவனத்தில் கொள்ளாமல் கேட் அருகில் அமர்ந்திருந்தாள் அவள். மணி ஒன்பதை தாண்டியிருந்தது.
தெருவில் செல்பவர்களுக்கு இவளை கவனிக்கும் நேரம் எல்லாம் இல்லை. ஆனால் அவளுக்கு அது கடினமாக இருந்தது அனைவரும் தன்னையே பார்த்து சிரிப்பது போல் பிரமை தோன்றியது.
நொடிக்கொருமுறை வாயிலை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். அவள் எதிர்பார்ப்பை வீணாகாமல் கையில் குடையோடு நடந்து வந்தாள் ஒரு பெண்.
“என்னடி இது இவ்வளவு நேரம்?” நொந்துக்கொண்டு பாவமாக பார்த்தாள் அந்த பெண்ணை.
“திவ்யா என்ன மன்னிச்சிருடி” என்றாள் வந்தவள் தயக்கமாக.
திவ்யாவுக்கு இருந்த நம்பிக்கையெல்லாம் காற்றில் கரைந்தே போனது, “சசி உன்ன மட்டும் தான்டி முழுசா நம்பிருக்கேன் கை விரிச்சிடாதடி” தோழியின் கை பிடித்து பயத்திற்கு ஆறுதல் தேடினாள்.
சங்கடமாக கண்களை அலைபாயவிட்ட சசி தோழி முகம் பார்க்காமல் அவள் எதிர்பார்த்த ஆறுதலை தரமறுத்தது பெண்ணுக்கு ஏதோ புரிய வைத்தது, “சரி வா நீ” என அந்த பெண்கள் தங்கும் விடுதிக்குள் தோழி கை பிடித்து இழுத்துச் சென்றாள்.
மூன்று மாடி கட்டிடமதில் அறைக்கு மூவர் கணக்கில் குறைந்தது அறுவது பெண்களாவது தங்கியிருப்பார்கள். அந்த விடுதிக்கும் சசிக்கும் சுமார் இரண்டு வருட தொடர்பு. படிப்பை முடித்து வேலை என பார்க்க துவங்கிய நாளில் இருந்து அங்கு தான் இருந்தாள் அவள்.
செலவுக்கேற்ற சம்பளம் என இருந்த சசிக்கு அங்கு வாடகை கொடுப்பதில் பிரச்சனை இல்லாமல் செல்ல அவளுக்கு அங்கு நல்ல பெயரே.
மூன்று மாதங்களுக்கு முன்பு வாடிய முகத்தோடு வந்த தோழியை அரவணைத்து தன்னோடு இருக்க வைத்துக்கொண்டாள் சசி. சரியாக திவ்யா அங்கு வந்த நேரத்தில் சசிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட கையேடு வேலையை விட்டு வர கூறிய பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரில் தோழியை பத்திரமாக இருக்க கூறி சென்றுவிட்டாள் சசி.
வார்டன் முன்னே தோழியை அழைத்து வந்து நின்ற சசி, “மேடம்” என்றாள் தயங்கி.
சசியை பார்த்ததும் எதற்காக பேசவந்துள்ளாள் என தெரிந்தவர், “வேணாம் சசி. உன் ப்ரன்ட்ட காப்பாத்த நீ என்ன பேசுனாலும் நான் கேக்க தயாரா இல்ல”
“மேடம் ப்ளீஸ் கொஞ்சம் டைம் தாங்களேன்” கெஞ்சி பார்த்தாள் சசி.
“மூணு மாசம் டைம் கொடுத்துட்டேன் சசி. எல்லாம் உனக்காக தான். அதுவும் எல்லாரையும் விட ஆயிரம் கம்மியா தான் விட்டேன். நீ இருந்தப்போ குடுத்த மூவாயிரம் தான் இந்த பொண்ணு குடுத்த காசு. அதுக்கு அப்றம் ஒரு ரூவா கூட குடுக்கல”
“வேலை கிடைச்ச ஒடனே தந்துடுவா மேடம். ப்ளீஸ்”
“முடியவே முடியாது சசி. நான் சத்தரமா வச்சு நடத்துறேன் போறவங்க வர்றவங்க எல்லாருக்கும் சும்மா வந்து தங்கிட்டு போக? ஒரு மாசம் ரெண்டு மாசம் பரவால்ல கஷ்டப்படுத்தனு விட்டேன், மூணு மாசமாச்சு வாடகை குடுத்து. காசு எடுத்து வைங்க இல்லனா கையோட கூட்டிட்டு போய்ட்டு”
அதற்கு மேல் பேச எதுவுமில்லை என சென்றுவிட்டார் அவர். அவர் பின்னாலே சென்ற சசி எவ்வளவோ பேசி பார்த்தும் பயன் இல்லாமல் போக தோல்வியோடு திவ்யா அருகே வந்தாள்.
“என்ன சசி சொன்னாங்க?” கேட்டாள் திவ்யா.
தோழியின் பை எல்லாம் பார்த்தவள், “இதெல்லாம் தூக்கி வெளிய வச்ச பிறகும் இந்த கேள்வி கேக்கலாமா திவ்யா?”
“நீ… நீ ஏதாவது பணம் வச்சிருக்கியா சசி” தயங்கினாள் திவ்யா.
இதுவரை பணத்திற்கு எங்கும் கேட்டு நின்றதில்லை அவள், இதுவே முதல் முறை. அசிங்கமாக இருந்தது. நினைத்ததும் கைக்கு பணம் வந்து பழகியவளுக்கு பத்தாயிரம் கூட கையில் புரளாமல் இருப்பது அவமானமாய் இருந்தது. கூனி குறுகி தலை கவிழ்ந்தாள்.
“என்கிட்ட இருந்தா நான் ஏன்டி அந்த அம்மாகிட்ட இப்டி கெஞ்சிட்டு இருக்க போறேன்? வேலைய விட்டு மூணு மாசமாச்சு. கல்யாணத்துக்கு எல்லாம் செலவாகிடுச்சு. என் செலவுக்கே வீட்டுல தான் காசு வாங்குறேன் திவ்யா”
“வெளிய எங்கையாவது கடன் வா… வாங்கி” கண்களில் நீர் கோர்த்தது பாவைக்கு.
“ரெண்டு வாரத்துல கல்யாணத்த வச்சிட்டு இங்க நான் வந்ததே பெருசு இல்லனா கூட அப்டியே வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன். அண்ணன் வேற வீட்டுல இருக்கான்”
புரிந்தது திவ்யாவுக்கு, “இல்ல சசி நான் உன்கூட வரேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்” உள் மனம் ஊமையாக கதறியது தன்னுடைய நிலையை எண்ணி.
“இப்ப என்ன பண்ண போற? எங்க போக போற?” கண்களில் கண்ணீர் பெறுக தோளை குலுக்கி சிரித்தவள் அனுமதியின்றி சில கண்ணீர் துளிகள் கன்னத்தில் வடிய, உடனே கண்ணீரை துடைத்து சிரித்தாள்.
சசிக்கு மனம் கனத்தது ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை. தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றிடலாம் ஆனால் அவள் மேல் கல்லூரி காலத்திலே ஒரு கண்ணை வைத்திருந்த சகோதரன் இருக்கும் வீட்டில் இப்பொழுது அழைத்து திவ்யாவை சென்றால் நன்றாக இருக்காதென்ற பயம் தான் சசியை அமைதியாக்கியது.
“உன் வீட்டுக்கு போ திவ்யா” சசி கூறவும் தலையை வேகமாக ஆட்டினாள் திவ்யா.
“அங்க எப்படி சசி..” ஒரே நாளில் எத்தனை சோதனைகள் தான் மனம் தாங்கும்?
“யோசிக்கிற நேரமில்லை திவ்யா. வேலை கிடைக்கிற வர இரு. கிடைச்ச அடுத்த நாளே வெளிய வந்துடு. உனக்கு பாதுகாப்பான இடமும் அது தான். இன்னைக்கு நைட் மட்டும் இங்க இருக்க அந்த அம்மாகிட்ட பேசுறேன். எனக்கு நேரமாச்சு அம்மா தேடுவாங்க வா”
தோழியை அழைத்து வார்டானிடம் சென்றாள், “நாளைக்கு காலி பண்ணிடுவா மேடம்”
“ஏம்மா இப்பயே போகணும் சொன்னேன்ல?” என்றார் அவர் கடுமையாக.
“ப்ளீஸ் மேடம். இந்த நேரத்துல எங்க போவா அவா? நாளைக்கு காலைல எந்திரிச்ச ஒடனே கெளம்பிடுவா ப்ளீஸ்”
சசிக்கு பின்னால் தலை தாழ்த்தி நின்ற திவ்யாவை பார்த்தவர், “சரி… நாளைக்கு நானா சொல்ல முன்ன போக சொல்லிடு” திவ்யாவை முறைத்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தோழியின் கை பிடித்த சசி, “என்ன தப்பா நினைச்சுக்காத திவ்யா, உனக்கு உதவி பண்ண முடியாத சூழ்நிலைல இருக்கேன்டி. சாரி” தோழியை தோளில் தட்டி அனுப்பி வைத்தவள் தான் முன்பு தங்கியிருந்த அதே அறைக்குள் சென்று படுத்துகொண்டாள்.
உறக்கம் வரவே இல்லை இரவு முழுதும். அந்த இடத்தில் படுக்கவே அவமானமாக இருந்தது, முகத்தில் அடித்தார் போல் பேசி வெளியே செல் என்பவரிடம் தன்மானத்தை காட்ட முடியாமல் பாதுகாப்பிற்காக பணிந்து போக வேண்டி உள்ளதே, இனி இது தான் என் வாழ்க்கையா? சுய மரியாதையை தொலைத்து தான் வாழ போகிறேனா? பல கேள்விகள், பல வேதனைகள் சூழ்ந்து உறக்கத்தை பறித்தது.
காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்த பெண்ணவள் எவரிடமும் சொல்லாமல் விடுதியை விட்டு வெளியேறியிருந்தாள்.
விடுதியிலுந்து துவங்கிய நடைபயணம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வந்து தான் நின்றது. கையில் பணமே இல்லை, ஒரு வேலை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய நிலை தான் இப்பொழுது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் அவளை அதிகம் வாட்டியிருந்தது.
வேதனை மிகுதியில் வர வேண்டிய இடத்திற்கு வந்தவள் அந்த உயர்ந்த கட்டிடத்தை தலை தூக்கி பார்க்க, காலை வெயில் கண் கூசியது. முடிந்தது என நினைத்த அத்தியாயம், தொடரும் என்ற நிலையில் அங்கேயே வந்து நிறுத்தியிருந்தது. காலத்தின் செயல்.
பத்து மாடி கட்டிடம் அது. சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அந்த தெரு எப்பொழுதை போல இப்பொழுதும் பரபரப்பாக இருந்தது. கையிலிருந்த பெரிய பையை தூக்கி நடக்கவே கடினமாக இருந்தது அவளுக்கு.
இதில் தெருவில் விளையாடும் குழந்தைகள் வேறு மேலே வந்து மோதும் அளவு இடித்து இடித்து செல்ல பல தெருக்கள் தாண்டி நடந்தே வந்தவளுக்கு கை கால் எல்லாம் அசதியாக இருந்தது. இதில் தன்னை சிலர் பார்க்கும் பார்வை வேறு நடையின் வேகத்தை கூட்ட கட்டாயப்படுத்தியது.
அதில் ஒருவர் தன்னை பார்த்து பேச வர, வேகமாக மின்தூக்கியினுள் நுழைந்துகொண்டாள். மின்தூக்கி ஒவ்வொரு தளம் மேலே செல்ல செல்ல நெஞ்சாங்கூடு வெடித்துவிடும் பயம் அவளுக்கு. அந்த பயம் தயக்கமாக மாற, சரியாக ஏழாவது மாடி வந்ததற்கான அறிகுறியாக மின்தூக்கியின் கதவு திறந்து அவளை வெளியேற்றியது.
கால்கள் தடுமாறியது மீண்டும் அந்த வீட்டினுள்ளே செல்வதற்கு. வீம்பாக இனி இங்கு வரவே மாட்டேன் என கூறியாயிற்று ஆனால் இன்று இந்த இல்லத்தை தவிர வேறு வழியில்லை அவளுக்கு.
எச்சில் கூட்டி விழுங்கினாள் பயத்தை. கதவை தட்ட சென்ற கைகள் மீண்டும் கீழே இறங்கியது. தயக்கம். கோவம். ஏமாற்றம். கையாலாகாத்தனம். முட்டி நின்ற அழுகை அவளது இறுகிய தாடையின் உபயத்தினால் இளமாகாமல் போனது.
கையில் இத்தனை பெரிய படிப்பு உள்ளது என்ற அசட்டு நம்பிக்கை இன்று இப்படியான நிலையில் கொண்டு வந்து விட்டது விதியின் செயல் என்று கூட அதன் மீது பழி போட முடியாதே. அனைத்திற்கும் காரணம் அவள் மட்டுமே என அவளுக்கே நெற்றி பொட்டில் அடித்து கூறியிருந்தது காலம்.
அந்த நேரம் அங்கு வந்த ஒருவன் இவளை பார்த்ததும், “என்ன க்கா வந்துட்டியா? அப்போ அரை லிட்டர் பால் வச்சுக்குறியா? நீ வாங்குனா தான் க்கா எனக்கு பாலே விக்கித்து… ராசியான கை உனக்கு”
கேள்வி கேட்டு பதிலே எதிர் பாராமல் அரை லிட்டர் பால் பாக்கெட்டை கதவின் அருகில் இருந்த சிறு கூடையில் போட்டு அவளை பார்த்து அவன் சிரிக்க,
“உனக்கு நான் பால் ஊத்துறதுக்குள்ள ஓடிடுடா” பற்களை கடித்து அவள் எச்சரிக்க அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டான் அவன்.
‘முட்டாள் முட்டாள்’ தன்னையே திட்டி வீட்டு வாயிலின் எதிரில் இருந்த படிகளில் அமர்ந்தாள்.
கலக்கத்தோடு அருகில் இருந்த கம்பியில் தலை சாய்த்து அமர்த்தவளது கண்கள் கண்ணீரை விடுவிக்க துவங்கிய நேரம் அவள் தட்ட எத்தனித்த கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்களை துடைத்து துரிதமாக எழுந்து நின்றாள்.
திறக்க பட்ட கதவினுள்ளிருந்து வெளி வந்தவனை மேலும் கீழும் பார்த்தாள். ஷார்ட்ஸ் ஒன்று மட்டுமே அணிந்து நின்றான். மேல் உடலில் எதுவுமில்லை, அவனது மெல்லிய தங்க சங்கிலியை தவிர.
இப்பொழுது தான் எழுந்தது போல் முகம் துடைக்கும் சிறு துவாலை இடது கையிலிருக்க தாடையை துடைத்துக்கொண்டே பாலை எடுக்க, அந்த கூடையை பார்த்து, “கிறுக்கன் அரை லிட்டர் எவன் கேட்டானாம், அவங்கப்பனா காசு குடுப்பான்”
திட்டிக்கொண்டே திரும்பியவன் அங்கு படிகளுக்கு அருகே நின்றவளை பார்த்து ஒரு நொடி அசையாது நின்றான். அவன் பார்வை தன் மேல் தான் விழுந்தது என தெரிந்தவள் உள்ளுணர்வு அவனை முற்றிலும் தவிர்த்தது.
ஒரு சில நொடிகள் அவளை நின்று பார்த்தவன் எதுவும் நடவாதது போல் முகத்தை சர்வ சாதாரணமாக வைத்து வீட்டினுள் சென்று கதவை அடைக்க போனான்.
முகத்தை வேறு பக்கம் திருப்பி இருந்தவள் காதுகளில் கதவு அசையும் சத்தம் கேட்டு திரும்ப, பாதி மூடியிருந்தான் கதவினை. துரிதமாக செயலாற்றியவள் கதவினை மூட விடாமல் காலை உள்ளே விட்டு தடுக்க, அவன் அடைத்த வேகத்தில் காலில் கதவு சற்று பலமாகவே மோதிட நல்ல வேலையாக ஷூ அணிந்திருந்தாள்.
வெறும் காலோடோ, அல்லது செருப்பு அணிந்து இந்த முயற்சியை செய்திருந்தால் அவ்வளவு தான்.
நிர்மலமான முகத்தோடு திரும்பியவன் அவளை பார்த்து, ‘என்ன?’ என்றான் வார்த்தை கொடுக்காமல் ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி.
ஆத்திரம் எல்லையில்லாமல் வந்தது. இவனிடம் இப்படி கையை பிசைந்து நிற்க வேண்டுமா என்ற ஆதங்கம் வேறு. அவனை பார்ப்பதையே தவிர்த்து கண்ணீரை மறைக்க வேறு பக்கம் திரும்பி நின்றாள்.
“கல்லு மாதிரி நின்னா உனக்கு அபிஷேகமா பண்ண முடியும்? என்னனு சொல்லி தொலை” எரிச்சலுற்றான் அவன்.
அவளோ மேலும் பேசாமல் தன்னை விரட்டும் முனைப்பிலே நிற்பவனை கண் சிமிட்டாது. பார்த்தாள்.
அவள் பேசப்போவதில்லை என தெரிந்து, “அதான் டிவோர்ஸ் பேப்பர் எல்லாம் சைன் பண்ணி குடுத்துட்டேன்ல இன்னும் என்ன வந்து நிக்கிற?” காலை நேரமாதலால் அவன் மெதுவாக பேசுவது கூட அவளுக்கு ஒலி பெருக்கியை வைத்து பேசுவது போல் அவமானமாக இருந்தது.
“உள்ள போய் பேசலாமா?” தன்மையாக கேட்டாள்.
“உள்ள போய் பேசலாம் ஒண்ணுமில்ல. ஏதாவது பொருள் வச்சிட்டு போய்ட்டனா சொல்லு எடுத்து தர்றேன்”
நறநறவென பற்களை கடித்தவள் சிறிதும் யோசிக்காமல் தன்னுடைய பையை எடுத்து அவனை தள்ளிவிட்டு வீட்டினுள் நுழைந்துவிட்டாள்.
அவளது செய்கையை எதிர்பாராதவன் அவள் கை பிடித்து நிறுத்தினான், “என்னடி யாரை கேட்டு உள்ள வந்த?”
“யாரை கேக்கணும் நான்?” அவனுக்கு நிகராக சண்டையிட்டு குரலை உயர்த்தினாள்.
“என்ன கேக்கணும். என்னோட வீடு இது. நான் வாடகை குடுத்து தங்குறேன். உன் இஷ்டத்துக்கு திறந்த வீட்டுக்குள்ள நாய் வந்த மாதிரி வர்ற?”
“நான் யார்கிட்டயும் அனுமதி கேட்டுட்டு நிக்க மாட்டேன். நான் இங்க தான் இருப்பேன். அட்லீஸ்ட் டிவோர்ஸ் கிடைக்கிற வர”
“என்னது டிவோர்ஸ் கிடைக்கிற வரையா? அதெல்லாம் முடியாது. உன் கூட மனுஷன் இருக்க முடியுமா? ஒழுங்கா வந்த வழியே ஓடிரு. இல்லனா நடக்குறதே வேற”
“ஏய் போட்டுக்கோடி. அந்த கூஜா வாயனுக்கு பயப்புடுற ஆள் நான் இல்ல”
“அவனுக்கு பயப்பிட மாட்ட, ஆனா போலீஸ்க்கு பயந்து தானே ராஜா ஆகணும்?” அவளது பேச்சை கேட்டு அமைதியாக இடையில் கை வைத்து முறைத்தான்.
“டிவோர்ஸ்க்கு தான் அப்ளை பண்ணிருக்கோம். இன்னும் கிடைக்கலைல? அது வர நான் இங்க இருப்பேன், இருக்கலாம். மீறி என்ன வெளிய விரட்ட பாத்த அடுத்த நிமிஷம் போலீஸ் நிக்கும் இங்க” தைரியமாக வார்த்தைகள் வந்தது இப்பொழுது அவளுக்கு.