மின்னல் வேகத்தில் வீட்டை அடைந்த ரகுவின் கால்கள் வீட்டின் வாயிலை நெருங்கவும் சற்று திணறி தான் போனது. ஒரு வார்த்தை தான் தேவைப்பட்டது அவளது மனதை அவனுக்கு எடுத்துக்காட்ட, இதோ ஓடி வந்துவிட்டான் மனைவியை தேடி.
சில மணி நேரங்களுக்கு முன்பு ரிசார்ட்டில், ரகு நண்பனுக்கு தகவல் கூறி தன்னுடைய பையை எடுத்து வாயிலில் வந்து தேட, அவள் அங்கு இல்லை. வேகமாக வண்டியை விரட்டி பேருந்து நிலையம் வந்து தேட சரியாக அவள் ஒரு பேருந்தை நோக்கி சென்றாள்.
அவளை மறித்து ரகு பேச நினைக்க அதற்குள் அவள் ஏறிய வாகனம் புறப்பட்டுவிட்டது. பின்னாலே சென்றவன் அவளை பொது இடங்கள் எங்கும் நிறுத்தாமல் வீடு வரை நிதானமாக தொடர்ந்து வந்தான்.
அவனுக்கு தெரியும் அழைத்தாலும் மனைவி தன்னோடு வரப்போவதில்லை என்று. அதனாலே தூரத்தில் நின்றே அவளை கவனித்தவன் அவள் வீட்டின் உள்ளே செல்லும் வரை அவள் முன்பே வந்து நிற்கவில்லை.
இப்பொழுது உடல் நடுங்க வீட்டின் உள்ளே சென்றவன் பூனை போல் நுழைந்து கதவை அடைத்து திவ்யாவை தேட, அவனுக்கு வேலையே வைக்காமல் அறையிலிருந்து சத்தம் வந்தது.
வரவழைத்த தைரியமும், அவள் வார்த்தை கொடுத்த உந்துதலும் அவனை நடக்க வைத்தது.
அறையினுள்ளே வந்த திவ்யாவுக்கு கோவம், ஆற்றாமை என ரகுவை நிற்க வைத்து கேள்வி கேட்க தோன்றியது.
அதே நேரம் மனதின் ஓரம் ஒரு வெறுமை. வெறுமை உண்டாக்கும் வெற்றிடம் அடர் கானகத்தில் படர்ந்தோடும் நீரோடை போல் படர்ந்து விசாலமானது.
அதே போல் தான் மனித மனமும், தேவையான பல சிந்தனைகளோடு, தேவையற்ற சில எண்ணங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். இரண்டு நாட்கள் ரகுவின் செயல்கள் எல்லாம் அவள் மனதை உடைத்திருந்தது.
வரும் வழி எங்கும் பல சிந்தனைகளோடு பயணித்து வந்தவளால் வீட்டிற்குள் வந்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே மூச்சாக குளியலறை சென்று அழுது தீர்த்து முகம் கழுவி அறைக்குள் வந்தாள்.
ரகுவின் அன்னை கார்த்திகா வீட்டை சுத்தப்படுத்தி தான் சென்றிருந்தார். அவளது பையை தேட, அது ஒரு மூலையில் இருந்தது. ஆனால் அதில் துணிகள் எதுவும் இல்லை.
அலமாரியை தேட, அனைத்தும் அங்கு தான் இருந்தன. மாமியாரை திட்டி மீண்டும் உடையை எடுத்து பெட்டியில் அடுக்க, வந்தான் ரகு உள்ளே. வீட்டை விட்டு செல்கிறாள் என நினைத்து பதறினான், “என்ன திவ்யா பண்ற?”
மௌனம்
“ஹே என்னடி பண்ற, எங்கையும் போறியா?”
மீண்டும் மௌனம். ஒருவேளை வீட்டை விட்டு மீண்டும் வெளியில் செல்ல எண்ணம் கொண்டாளோ என்று நினைத்து தவித்துப்போனான். அவள் சென்று இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்கவில்லை ரகு அந்த நாளில்.
சண்டை மட்டுமே இருந்த இல்லற வாழ்க்கையிலிருந்து தப்பித்தோம் என நிமித்தி மூச்சு விட்டு கண்களை திறக்க அவன் உலகமே களையிழந்து வண்ணங்கள் தொலைத்து போயிருந்தது. கற்பனையோ என கடினப்பட்டு நாட்களை ஓட்டி பார்க்க… ம்ஹூம் சிறிதும் மாற்றமில்லை.
ஏதோ தவறிய உணர்வு. விடாப்பிடியாக ‘எல்லாம் கற்பனையே’ என்று கூறி மனதை சமன் செய்தும் அதே வெறுமை தான்.
‘அவ இல்லனா என்ன, என்னால இருக்க முடியாதா? அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சது. இனியாவது சந்தோசமா இருப்பேன்’ தன்னை தானே வசைப்பாடி விறைப்பாக நிமிர்ந்த நேரம் தான் வந்து நின்றாள் திவ்யா.
முகத்தை தூக்கி வைத்து நின்றாலும் மூன்று மாதங்களில் இல்லாத ஒரு நிம்மதி மனதோடு வந்து ஒட்டிக்கொண்டது. எங்கே அந்த திருப்த்தியை மனம் எந்நாளும் நாடிவிடுமோ என்ற பயமே அவனை அவளை விட்டு விலக்கியே வைத்திருந்தது.
அவளது ஆசையை நிறைவேற்ற தான் இந்த இடைவெளி என்ற சமாதானமும் செய்துகொண்டான். ஆனால் அவன் மறந்தது, ‘இருத்தல் என்பதே காதலின் நிலையான கவிதை’ என்பதை.
எளிதாக விவாகரத்து என்ற பேச்சை எடுத்துவிட்டு தள்ளி தள்ளி நின்றனர், அதன் பிறகு தான் புரிந்தது, இந்த காதல் கொண்ட இதயம் இரத்தின சுமைகளை தாங்கும் ரணங்கள் மிகுந்த இதயமென்று.
என்ன தான் மானம்கெட்ட மனமோ, அடிபட்டு அடிபட்டு மீண்டும் துவங்கிய இடத்திலே வந்து நிற்கிறது.
அன்று அவள் செல்லட்டும் என மகிழ்ந்த உள்ளம் இன்று பதைபதைக்கிறது அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணி. தனக்காக பெற்றோரிடம் சண்டையிடும் திவ்யாவின் அந்த புது பரிமாணம் கூட காதலுக்கு கவர்ச்சியாய் இருந்தது.
எங்கு அந்த ஈர்ப்பு தன்னை விட்டு விலகிடுமோ என்ற பயத்தில் கோவத்தை காட்டினான், “என்னடி இது புது பழக்கம், எதுக்கு எடுத்தாலும் கோவிச்சிட்டு வீட்டை விட்டு கெளம்புறது?” அவள் முன்னே வந்து உடையை எடுக்க விடாமல் தடுத்து நின்றான்.
“வழி விட்டு நில்லு” என்றாள் அவனை பார்க்காமல்.
“அதெல்லாம் முடியாது. இனி உனக்கு வழி விடுற எண்ணமே எனக்கு இல்ல”
“ஆமா ஆமா வழி விடுற எண்ணம் வராது, மொத்தமா என்னோட வழிய அடைகிற எண்ணம் தான் இருக்கும்”
“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி போகுது, அங்கையும் என்னமோ சொன்ன இப்பயும் வேற அர்த்தத்தை மனசுல வச்சிட்டு பேசுற மாதிரி இருக்கு?” கண்கள் இடுங்க அவளை முறைத்தான்.
“ஏன் எந்த அர்த்தத்துல சொல்றேன்னு உனக்கு புரியாதா?”
“அர்த்தம் புரியல, ஆனா சொல்ற ஆள மட்டும் யார்னு தெரியிது” மீண்டும் திவ்யா அமைதியாகிவிட, அவளது அமைதியில் சலிப்புற்றவன்,
காரமாக வார்த்தையை திவ்யா விட, ஏற்கனவே விஜியின் செயலில் அடிபட்டிருந்தவன் திவ்யாவின் வார்த்தையில் சினம் பிறக்க, “நானும் அப்ப இருந்து பாக்குறேன் ரொம்ப தான் துள்ளுற, என்ன தான்டி உனக்கு பிரச்சனை?” குரலை உயர்த்தி சற்று கட்டமாகவே கேட்டான்.
அவளுக்கும் கோவம் சளைக்காமல் இருக்க தன்னுடைய கையை பற்றியிருந்தவனை தள்ளிவிட்டு, “நீ தான்டா என்னோட பிரச்சனை. ப்ரன்ட் ப்ரன்ட்னு சொல்லிட்டு ஒருத்தி உன்ன ரசிக்கிறத கூட கவனிக்காம அவகிட்ட உன்ன பத்தி சொல்லி, என்ன பத்தி சொல்லி, நம்மள பத்தியும் எல்லாத்தையும் வச்சிருக்க பாத்தியா… இத மட்டும் தான் சொன்னியா இல்ல வேற..” என்று இழுத்தவளை,
“ஏய்” கடும் சினத்தோடு நிறுத்தினான்.
“என்ன மிரட்டுற வேலை வசிக்காத ரகு, தெருல போறவங்க வர்றவங்க எல்லார்கிட்டையும் உனக்கு என்ன பத்தி அசிங்கமா பேசணும். அது தான?”
“ஏன் நீ உன்னோட ப்ரன்ட்ஸ் கூட பேசுனதே இல்லையா, இல்ல நம்ம சண்டையை பத்தி தான் சொன்னதே இல்லையா”
“சொல்லிருக்கேன், ஆனா அது எல்லாம் ஒரு லிமிட்ல நிக்கும்”
“நான் என்னத்த லிமிட் மீறி போனேன்னு நீ பாத்த?”
“அதை நீ தான் ப்பா சொல்லணும், எதுக்கு ரகு வாழ்க்கைல மறுபடியும் வந்த, போனவ அப்படியே போகாம அவனை முழுசா கொல்ல போறியானு கேக்குறா”
சாரை சாரையாக கண்ணீர் வெளியேற மேலும் தொடர்ந்தாள் கண்களை துடைத்து, “அதான் எதுக்கு இன்னொருதடவ எல்லை மீறி நீ எதுவும் என்னால தற்கொலை பண்ணிக்க போனா…” வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது திவ்யாவுக்கு.
மனையாளின் கண்ணீர் அவன் கோவத்தை மொத்தமாய் மட்டுப்படுத்தியது. மெதுவாக, “திவ்யா…” என்றழைத்தான்.
“வேணாம்… என்னோட சுயநலத்துக்காக யாரோட உயிரோடவும் நான் விளையாட விரும்பல. உன் அம்மா அப்பா இருந்தாங்கனு தான் இத்தனை நாள் இருந்தேன், இல்லனா அப்பயே போயிருப்பேன்”
அவனை விலக்கிவிட்டு உடையை எடுக்க அவள் கை பிடித்து தன்னில் இழுத்துக்கொண்டான். அவனோடான நெருக்கத்தை வெறுத்தவளுக்கு மேலும் அழுகை வர அவனை விட்டு விலகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டாள்.
“திமுறாத திவ்யா. அன்னைக்கு ஏதோ ரொம்ப சண்டை போட்ருந்தோம், அந்த கோவத்துல தெரியாம ட்ரின்க் பண்ணி எங்கையோ போய் முடிஞ்சது”
“அதுக்குன்னு சாகுற அளவா ரகு?” வேதனையோடு அவனிடம் கேட்டவள் முகத்தை திருப்பி அழுதாள்.
“தெரியாம பண்ணிட்டேன் ம்மா… அந்த குற்ற உணர்ச்சில தான் ரெண்டு நாள் வீட்டுக்கே வராம இருந்தேன். நான் உன்கிட்ட பேசணும் என்ன திரும்பி பாரேன்”
“எனக்கு உன்கிட்ட பேச வேணாம்” திருப்பவில்லை அவளும் முகத்தை அழுகை அழுகையாக வந்தது. அவனும் விடவில்லை.
“ஆனா நான் பேசணும்” என்றான் இளகிய குரலில்.
அவன் பிடியை தளர்த்த போராடி தோற்று போன பெண்ணவள் அவனின் கரத்தினுள்ளே இறுதியாக அடங்கி தான் போனாள்.
“விஜி உன்ன வந்து பாத்தாளா?” அவன் கேள்வியில் அன்று விஜி கூறிய ரகுவின் தற்கொலை முயற்சி நிறைவுக்கு வர உடல் நடுங்கியது.
மனைவியின் உடல் மாற்றம் தந்த பதிலில், “அவளுக்கும் எனக்கும் நடுல நட்புன்னு கோட தவற எதுவுமில்லை… நான் என்னோட பாண்ட் ஆஃப் வியூ பத்தி சொல்றேன். அவளோட மனசெல்லாம் மாத்திட்டு இருக்குறது என்னோட வேலை இல்ல”
“அவளோட பார்வை போதுமே ரகு அவளுக்கு உன் மேல என்ன அபிப்ராயம் இருக்குனு சொல்ல” பேச முடியாமல் தலை கோதி நின்றான்.
“இவளுக்கும் நமக்கும் இனிமேல் என்ன சம்மதம்னு நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிருப்ப. ம்?”
“அப்டிலாம் இல்லடி. அது தேவையில்லாத விசியம்னு தான் விட்டேன்”
மறுப்பாக தலையை ஆட்டினாள், “உனக்கும் அவளை பிடிக்கும்னு தான சொன்ன? நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோ ரகு…”
“ச்சி அறிவிருக்காடி… மடச்சி மாதிரி பேசுற?” கோவமாக காய்ந்தான் அவளை தள்ளிவிட்டு.
“அடேயப்பா ரொம்ப தான் நடிக்கிற, என்னமோ உன் பொண்டாட்டி மாதிரி அவ என்ன வந்து அசிங்கமா பேசுறா, நீ உரிமை குடுக்காமையா இதெல்லாம் நடக்குது?”
“உன்ன என்ன பேசுனா சொல்லு நான் அவளை கிழிச்சு விடுறேன் அதை விட்டு அறிவு கெட்ட தனமா இருக்கு உன்னோட பேச்செல்லாம், அவ ஏதோ உரிமைல அப்டி பேசிட்டா, அதுக்குன்னு இப்படியா நீ ரியாக்ட் பண்ணுவ”
“ஓ அவளுக்கு உன் வாழ்க்கைல உரிமை இருக்கும், ஆனா எனக்கு உன்னோட ஒரு சின்ன பொருள் மேல கூட உரிமை இல்ல. பொது இடம்னு கூட பாக்காம என்ன பேசுவா…
என்னோட அப்பா அம்மாவ வர வச்சு அவங்க கூட என்ன அனுப்பி வக்கிர அளவு உனக்கும் என் மேல உரிமை இருக்கும். ஆனா, நான்… நீங்க எல்லார் சொல்றதையும் கேட்டுட்டு அப்டியே நடக்கணும். அப்டி தான?” உணர்ச்சி துடைத்த முகத்தோடு ரகுவை பார்த்து திவ்யா கேட்டதில் தவித்து தான் போனான்.
“நான் வேலை பாக்குறதை கூட உன்கிட்ட சொல்லணும், ஆனா நீ கார் வாங்குனதை சொல்லல, ஆஸ்திரேலியா போக போற விசயத்தை கூட சொல்லல. ஏன் ரகு?” தலை குனிந்து நின்றவனிடம் கண்ணீரோடு கேட்டாள், அவளது கேள்விக்கு பதில் கொடுக்க தான் முடியவில்லை ஆணவனால்.
“உன்னோடது புது கார்னு நீ விஜயலக்ஷ்மி கூட பேசிட்டு இருந்தப்போ தான் எனக்கு தெரிஞ்சது. என்னை தாண்டி பேசிட்டு போன நீ, அப்போ கூட என்ன உன் கூட கார்ல கூட்டிட்டு போகணும்னு தோணலல…”