தமயந்தியுடன் பூமியும் அவள் அம்மாவும் நிகழ்ச்சி முடித்துக்கொண்டு வீட்டுக்கு வர அன்று நடுராத்திரி ஒரு மணி ஆனது. வீடு திரும்புகையில் அம்பிகா பூமியிடம் “கல்யாண கச்சேரி எல்லாம் எதுவும் போக வேண்டாம் படிப்புல கவனம் செலுத்து அப்பதான் அடுத்த மூணு வருஷத்துல சி.ஏ முடிக்க முடியும்”
பூமிகா “அந்த கல்யாணத்துல கச்சேரிக்கு கூப்பிட்டா நான் போவேன். படிப்பு இந்த பக்கம் படிச்சுக்கிட்டே நான் அந்த பக்கம் பாடதான் போறேன்”
அம்பிகா “இரண்டுலயும் கவனம் செலுத்த ரொம்ப கஷ்டம்”
பூமிகா “ஏன் நீங்க என்ன கச்சேரிக்காக பிராக்டிஸ் பண்றதுக்கு ஃபோர்ஸ் பண்றப்போ நான் பண்ணலையா அதுவே பழக்கமா பண்ணிக்கிட்டு போறேன்”
அம்பிகாவால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.
மேடை அலங்காரமும் அரங்கத்தின் அலங்காரமும் அவர் அழைத்தவர்கள் திரண்டதும் பார்த்து பூரித்துப் போயிருந்தார் அம்பிகா. மகளிடம் தயாரா? மேடைக்கு போகலாமா என்று கேட்க வந்தவரிடம் பூமிகா ” ஏம்மா நீங்க தமயந்திக்கு காலேஜ் பீஸ் கட்ட உதவி செய்யவே இல்லை” கேட்டாள்
அம்பிகா புரியாமல் பார்க்க “தமயந்திக்கு காலேஜ் பீஸ் கட்ட காசு தேவைப்பட்டுச்சு நீ குடுப்ப நினச்சு தானே நான் உன்கிட்ட ஸ்ட்ரெயிட்டா வந்து கேட்டேன், ஆனா நீ உன் கிட்ட காசு இல்லன்னு சொல்லிட்டு எங்கேயோ ஸ்கூல் கட்ட இருபது லட்சம் டொனேஷன் கொடுத்த… உன்கிட்ட பெருசா நாங்க எவ்வளவு கேட்டோம் ஒரு அம்பதாயிரம் தானே கேட்டோம். அது உன்னால கொடுக்க முடியாம போயிடுச்சுல்ல. ஏன்மா எப்படி இருந்த, எப்போம்மா இப்படி சுயநலமான ஆளா மாறின” கேட்டுவிட்டு அம்பிகாவின் கால்களில் விழுந்து எழுந்து மேடைக்கு பாட சென்றாள்.
அம்பிகா அசந்துப் போனார். எதை சொல்லி மகளுக்கு புரிய வைப்பார்!
புவன் கோபத்தில் கொந்தளித்து ஆசுவாசமாகி வந்து மெத்தையில் படுத்த பின்பும் கண்களுக்கு முன் நீல வண்ணத்தில் மிலிர்ந்த பூமிகாவின் கண்கள் வந்து நின்றது. பூமிகாவின் உடை தேர்வுகள் அவன் அறிந்துது தான். பளிச்சென மின்னும் நிறம் என்றால் பூமிக்கு பிடித்துவிடும். மஞ்சள், பிங்க், ஆரஞ்சு, என்று எப்போதும் பளிச் வண்ணங்களில் தான் இருப்பாள். அன்றும் அப்படி அடர் நீல பார்டர் கொண்ட ‘ஸ்கை ப்ளூ’ பாவாடை தாவணியில் அழகாய் சாந்தமாய் முத்து சரம் அணிந்துக்கொண்டு சிரித்த முகமாக வணக்கம் சொல்ல கை கூப்பினாள். உறைந்து நின்றது காலம். அவள் பார்வை எங்கெங்கோ அலைந்து அவன் முகத்தில் பதிந்து தொடரவும் சக்கரையாக கரைந்தது காலம்.
அவள் ஆலாபனைகள் சலிக்கவில்லை, சுற்றுமுற்றும் உள்ளவர்கள் பேசும் சத்தம் மறைந்தது, அவன் மனம் எங்கேயோ அவளுக்கு பிடித்த அவன் தாத்தா பாட்டி வீடு ‘செல்லம்மாள் இல்ல’த்தில் அவளுடன் வாழும் நாட்களை எண்ணி எண்ணி களித்தது.
பூமி எப்போதும் போல கறாராக பேசி அம்மாவை கஷ்டப்படுத்தி தானும் ஒரு அழுகை அழுது தமயந்தியிடம் ‘நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்’ என்று புலம்பிவிட்டு அயர்ந்து தூங்கிப்போனாள். தமயந்திக்கு அந்த பறவை ‘ப்ரூச்’ தன்னிடமே இருக்கே என்று பாரமாக இருந்தது.
அந்த அர்த ராத்திரியில் அருணுக்கு மெசேஜ் செய்தாள்.
தமயந்தி: அந்த பின் என்கிட்டயே இருக்கே, நாளைக்கு காலேஜ் வரப்ப எடுத்துட்டு வரேன்
உடனேயே பதில் அனுப்பினான். அவனும் தூங்கவில்லை போலும்!
அருண் : உன்கிட்டயே இருக்கட்டும். நான் கொஞ்சம் பிசி. எங்கேணும் வச்சிட்டா கஷ்டம். என் வீட்டுக்கு போறப்போ கேட்டு வாங்கிட்டு போறேன்.
அருணின் பதில் படித்தவளுக்கு யோசனை மிகுந்தது.
தமயந்தி : ஹாஸ்டல்ல வச்சுக்க முடியாது. பூமி வீட்ல வெச்சிருக்கேன் பத்திரமா…சரியா…
அருண் : ஓகே
பதில் அனுப்பிவிட்டு தூக்கம் மறந்தது.பேச்சை தொடரவே ஆசை பிறந்தது. ஆனால் அவன் தேர்ந்தெடுத்த குர்தாவை பொறுத்துக்கொண்ட அருந்ததீ சற்றும் எதிர்பாராத விதமாக ‘ப்ரூச்’ எடுத்துக்கொடுத்து அதை மாட்டிக்கொண்டு இவர்கள் சென்றார்களா என்று ஆள் வைத்து பார்த்ததெல்லாம் நினைக்கும்போது நடுராத்திரியில் சிலிர்த்தது.
அருண் அவன் புத்திசாலித்தனத்தால் அம்மா மாமாவை மிஞ்சி அவர்களை அவனுக்கு அடங்கி போகவைக்கலாம்; அதன்பின் தேவா சொன்னதுபோல அவன் ஆசைப்பட்ட வாழ்வை வாழலாம். அதுவரை தமயந்தி காத்திருக்க வேண்டுமே! அதன்பின்னும் அவளுக்கு எதுவும் நடக்காமல் இருக்க அதை எதிர்கொள்ள அவளுக்கு தைரியம் இருக்க வேண்டுமே! அதிலும் அவனுக்காக அவள் இருப்பாளா? தெரியாதே! கண்ணெதிரில் இருப்பவர் யாருமே என்றைக்குமான காதல் என மகிழ்ச்சியாக வாழ்ந்து அவன் பார்க்கவில்லையே!
அருண் கவலைகளும் எண்ணங்களும் அதன் போக்கில் சென்றுகொண்டே இருந்தது. அதிகாலை விடிந்தது.
சிரஞ்சீவி “ என்னடா தூங்காம விட்டத்தை பார்த்துட்டு உட்கார்ந்திருக்க, என்ன ஜாக்கிங் போக கிரவுண்ட் பக்கம் போலாம் யோசிக்கிறியோ. அதெல்லாம் முடியாது என்கூட வந்து புஷ் அப்ஸ் எடு” பேசிக்கொண்ட காலை ‘ஒர்க் அவுட்’ செய்ய எழுந்து சென்றான்.
நாட்கள் அதுபோல வேகமாக சென்றது. அருண் அவன் எடுத்துக்கொண்ட முதல் ப்ராஜெக்ட் படத்தை ரிலீஸ் வரை கொண்டு வந்துவிட்டான். படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் பலது ஜோராக நடந்துக்கொண்டிருந்தது.
டிவியில் ஹீரோ, ஹீரோயின் எல்லோருமே ப்ரொட்யூசர் மிகவும் நல்லவர், வல்லவர், உதவி செய்பவர் என்று அவன் புகழ் பாடினார்கள்.
பூமி கல்யாணத்தில் கச்சேரி செய்ய ஒத்துக்கொண்டு செய்ய தொடங்கினாள். புவன் அடம்பிடித்து சிரஞ்சீவியை அழைத்துக்கொண்டு அந்த கல்யாணத்திற்கு சென்று பூமி இருக்கும் வரை இருந்து விட்டு அவள் கிளம்பியதும் நண்பனை வீட்டுக்கு போகலாமென கிளப்பினான். “டேய் மாப்ள பொண்ணு மேடைக்கு வந்தா கிப்ட் கொடுத்துட்டு போலாம்டா” என்று சிரஞ்சீவி பலமுறை சொல்லியும் அவனை தரதரவென இழுத்துக்கொண்டு பார்க்கிங் வந்தான். கம்பீரமாக ஜீப் ஏறிக்கொண்டிருந்தாள் பூமிகா.
சிரஞ்சீவி “இந்தம்மா மோவ் பாட்டு பாடுற மோவ் கிஃப்ட் தொறந்து பார்த்தியா”
பூமிகா “இல்ல நிறைய கிப்ட் வந்திருக்கா அதான் எதையும் திறந்து பார்க்கல”
சிரஞ்சீவி “இவ்வளவு நாள் ஆகியும் திறந்து பார்க்கலையா என்ன”
பூமி அவனை முறைத்தாள்
புவன் “திறந்து பாரு பூமி உனக்கு பிடிக்கும்”
பூமி “அருந்ததீ ஆன்ட்டி கொடுத்தது தானே அது”
புவன் “ செலக்ட் பண்ணது நாங்க… இந்த மாதிரி கச்சேரிக்கு வரும்போது அதை போட்டுட்டு வா.., அழகா இருக்கும்”
பூமிகா புவனை நின்று நிதானமாக பார்த்தாள் மெதுவாக ஆழமாக மூச்செடுத்து விட்டவள் உள்ளுக்குள் பூக்கும் எரிச்சலை தயவு தாட்சணியம் பார்க்காமல் கொட்டினாள் “ எனக்கே என்ன பாத்தா அசிங்கமா இருக்கு தெரியுமா நானும் என் குடும்பமும் இப்படி இருக்கிறதுக்கு காரணமானவங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்கேன்னு நினைக்கும் போது….”
அதிர்ந்தவன் சிரஞ்சீவி சட்டென புவன் கையைப் பிடித்தான். கோபம் கொந்தளித்தது. ஆனாலும் புவன் “பூமி நான் கொஞ்சம் பேசுறத கேளேன்” என்று கொஞ்சலாக பேச
கண்கள் சிவக்க பூமிகா “என் அப்பாவ திருப்பிக் கொடு கேட்கறேன், என் அம்மாவோட குழப்பம் இல்லாத அமைதியான முகத்தை திருப்பி கொடு கேட்கறேன் , என் சந்தோஷத்தை திருப்பி கொடு கேட்கறேன்… எப்படிடா என் முகத்தை பார்த்து பேச தோணுது… எப்படிடா ராத்திரி நிம்மதியா தூங்குறீங்க. எப்படி சாப்பிடுறீங்க என்னால எதுவும் முடியலையே… நான் நானா இல்ல, அத கூட பொறுத்துக்க முடியுது ஆனா எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட பேச வரீங்க பார்த்தீங்களா.. என்னால முடியல இந்த கொடுமையெல்லாம் சகிச்சுக்கவே முடியலடா பாவிகளா ” கத்தியவள் அங்கேயே முகத்தை பொத்தி அழ தொடங்கினாள்.
புவன் “பூமி ப்ளீஸ் அழாதே”
பூமிகா “போ, இங்கிருந்து போ… எனக்கு உங்களையெல்லாம் பார்க்கவே இஷ்டமில்லை… இப்போ நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்த விட்டு போகல கண்டிப்பா போலீசை கூப்பிடுவேன்”
சிரஞ்சீவி ” தேவையா மச்சான் இதுலாம் உனக்கு. வா வீட்டுக்கு போலாம்”
புவன் “என்னிக்காவது ஒரு நாள் எங்களை புரிஞ்சுக்கவே பூமி நீ”
பூமிகா “இதே மாதிரி என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தீங்கன்னா கண்டிப்பா உங்கள ஏதாவது செய்வேன்” மிரட்டினாள்.
சிரஞ்சீவி கோபத்தை அடக்கிக்கொண்டு ஓர் பார்வை பார்த்தான்
பூமி “என்ன என்னால முடியாது நெனைக்கிறியா. கண்டீப்பா உங்களையும் கொன்னுட்டு நானும் செத்துருவேன்” அழுதாள். சிரஞ்சீவிக்கு இப்போது வருத்தம் மேலெழுந்தது. புவன் ஸ்தம்பித்து நின்றிருந்தான். சிரஞ்சீவி அவனை தரதரவென இழுத்துச்சென்றான்.
பூமி அவளை சுதாரித்துகொண்டு புறப்பட வெகு நேரம் எடுத்தது. அவள் வீடு வரை அவளுக்கு பின்னாலேயே சென்று பார்த்துவிட்டு வீடு சேர்ந்தனர்.
வீடு திரும்பியவர்கள் கூடத்தில் கபிலனை சந்தித்தனர்.
கபிலன் “கல்யாணத்துக்கு போயிட்டு வந்துட்டீங்களா ராசா”
சிரஞ்சீவி “ இந்தப்பா நாளைக்கு காலைல முகூர்த்தத்துக்கு போயிட்டு இந்த மொய் பணத்தை நீயே கொடுத்துட்டு வந்துரு”
கபிலன் “ஏண்டா ரிசப்ஷனுக்கு போயிட்டு மொய் கொடுக்காம வந்தீங்களா”
சிரஞ்சீவி “பொண்ணு மாப்பிள்ளையையே பார்க்கல”
புவன் “அங்கிள் அப்படி என்னதான் அங்கிள் நடக்குது அந்த கமலநாதன் கேஸ்ல”
கபிலன் “ஏன் டா தம்பி”
இருவரும் பேசாமல் இருக்க
கபிலன் “என்னதான்டா ஆச்சு”
சிரஞ்சீவி “அந்த பூமிகா ஓவரா பேசுறாப்பா. நாம அவங்கப்பாவ கொன்னதா நினைச்சிட்டு இருக்கா”
கபிலன் சிரித்தார் “சொல்லவேண்டியது தானேடா, மொத மொத அந்தம்மா அம்பிகாவ அந்தாளு எல்லார் முன்னாடியும் அடிச்சான்.கொல்லணும்ன்னா அவனை அப்பவே கொன்னுருப்பேன்”
சிரஞ்சீவி “என்னப்பா உனக்கு சிரிப்பா இருக்கா. எனக்கு கோவம் வருது”
கபிலன் “டேய்… எனக்கு வீடு வாசல் பையன் எல்லாமே அந்தம்மா அம்பிகாவோட அப்பா ஏற்படுத்தி கொடுத்துத்தான். போர்ட்ல மூட்டை தூக்கிட்டு சின்ன சின்ன வேலை செஞ்சிட்டு இருந்தவன வா என்கூட எனக்கு துணையா இருன்னு ஊருக்குள்ள கூட்டின்னு வந்தார். அந்தம்ம்மா அம்பிகா டிகிரி முடிச்சப்ப ஊருக்கே சோறு போட்டு திருவிழா போல கொண்டாடினார். உங்கம்மா யாருன்னு நினைக்கிற, அவங்க ஆபிஸ்ல கிளர்க்கா வேலை பார்த்துட்டு இருந்தா. அவங்க வீட்ல கல்யாணத்துக்கு முடியாது சொன்னப்ப கோயில்ல வச்சு கல்யாணமும் செஞ்சு வச்சு நான் வாழ இந்த வீட்ட கொடுத்தார். அந்தாள் இந்த வீட்ல வச்சுட்டு போன பைல் எதுவுமே தூக்கிபோடாம நெஞ்சுல வச்சு சுமக்குறேன். நல்ல மனுஷன், வெளில அரசியல்வாதி, ரௌடிகிட்ட எல்லாம் கறாரா இருந்த மனுஷன் மருமகனுக்கு மரியாதைன்னு இடம் கொடுத்தார். கோயில் விஷேஷம் ஒன்னுல அம்பிகாவ அந்தாள் எல்லார் முன்னாடியும் அடிச்சான் பாரு அடுத்த ரெண்டு மூணு நாள்லே மனுஷன் போய்ட்டார். அவன் அவ்வளவு குத்தி பேசுன காலத்துலயும் நீ பொறந்து நான் உங்கம்மா இல்லாம கஷ்டப்படுற காலத்துல எனக்கு குழந்தைய வளர்க்க ஆள் ஏற்பாடு பண்ணிகொடுத்து உன்ன வளர்க்க உதவி செஞ்சது அம்பிகாதான். அவங்க மேலெல்லாம் கோபப்பட முடியாதுடா கண்ணா”
சிரஞ்சீவி அடங்கி போனான்.
புவன் “அங்கிள் அவளுக்கு என்ன பிடிக்கல அங்கிள்” என்றான் சோர்வாக
கபிலன் “பாரு கமலநாதன் மேல மூணு கேஸ் இருக்கு. ரெண்டு கேஸ்க்கு மீடியா வெளிச்சம் விழவே விழாது. அதுல ரொம்ப பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் மாட்டிட்டு இருக்காங்க. அவன் சம்பாதிச்ச காசெல்லாம் சம்மந்தப்பட்ட நஷ்டமான ஆட்களுக்கு அந்தம்மா அம்பிகா திருப்பி கொடுத்துட்டாங்க. ஒரு கேஸ் மட்டும்தான் பிரச்சனையில இருக்கு. அந்தாளோட கார் ஆக்சிடென்ட் கேஸ் அது, கொஞ்சம் சிக்கலாக போயிட்டு இருக்கு. ஆக்சிடென்ட் ஆன கார்ல கோடிக்கணக்குல காசு இருந்திருக்கு, அது எப்படி வந்ததுன்னு விசாரணை போயிட்டே இருக்கு. அது என்ன காசு, எதுக்கு அந்தாள் அவ்வளவு பணத்த எடுத்துட்டு போனான்னும் எதுவும் தெரியல”
புவன் “நான் ஏதாச்சும் செய்யட்டுமா அங்கிள்”
கபிலன் பதறினார் “வேண்டாம்டா கண்ணா. அது கேஸ் நியாயமா எந்த பிரச்சனையும் இல்லாம முடியனும்ன்னு தான் அம்பிகாவோட எண்ணம். அந்த மனுஷன பொண்ணு ஹீரோ போல நெனச்சிட்டு இருக்கா, அப்படியே இருக்கட்டும் நினைக்கிறாங்க. இதுல பணம் இருந்ததுன்னு மீடியால வந்திருச்சு, அது நியாயமா முடியுற வகையில முடியட்டும்”
புவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. இவ்வளவு நாட்களாக பூமிகா அவனை திட்டியாவது பேசட்டுமே என்று ஆசைப்பட்டவன் குழம்பி நின்றான்.
கபிலன் “நீ ஸ்பெயின் போய் செஸ் விளையாடிட்டு வா நான் அதுக்குள்ள இங்க என்ன பண்ண முடியுமோ அதை செஞ்சு வைக்குறேன்”
புவன் “என்னால விளையாட முடியாது அங்கிள் பிளான் கான்செல் பண்ணலாம்”
கபிலன் “அப்படியெல்லாம் பேசாத நீ செய்றத செய் நாம வரத பார்த்துக்கலாம்”
புவன் “ப்ச் அவளுக்கு என்ன புடிக்கல அங்கிள். என்னால அத தாங்கவே முடியல” சொல்லிவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.
கபிலன் மகனிடம் “நீ அவன பார்த்துக்க நாம பிரச்சனைய சீக்கிரம் முடிச்சிடலாம் சரியா”
சிரஞ்சீவி கோபத்தில் “ம்ம்” என்றான்
விஷயத்தை கேள்விப்பட்ட அருண் “குட்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
சிரஞ்சீவி யோசித்தவன் அருண் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டவன் அருணை பார்க்க அருண் சின்ன நக்கல் சிரிப்புடன் “ரைட் அவளுக்கு கோபம் போகல, பிரெண்ட்க்காக பொறுத்து போறா. நாம அவளை கடுப்பேத்துனா உள்ளதும் போயிடும்”
சிரஞ்சீவி “இப்ப வந்து சொல்றியே”
அருண் “இனி சாமார்த்தியமா நடந்துக்கோ”
சிரஞ்சீவி “ம்ம்க்கும் அதெங்க இங்க இருக்கு”