அருண் அலுவலகத்திலிருந்து புவன், சிரஞ்சீவி, அருண் மூன்று பேரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அருணுக்கு ஷிவானி கைபேசியில் அழைத்தாள் பரபரப்பாக “என்ன அருண் அண்ணா அம்மா ஏதோ கல்யாணம் பத்தி எல்லாம் பேசுறாங்க என்ன நடக்குது அங்க” கேட்டாள்
அருண் ரோட்டிலேயே கவனம் வைத்துக்கொண்டிருந்தவன் “புரியலை எனக்கு” என்றான்
ஷிவானி “ப்ச் அம்மா கால் பண்ணாங்க. அருண கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லு உங்க பெரியப்பாகிட்ட இப்பவேன்னு சொல்றாங்க”
அருண் கைபேசி கார் ஸ்பீக்கரில் கனெக்ட் ஆகியிருக்க, ஷிவானியின் குரல் கார் முழுக்க எதிரொலித்திருந்தது.
காரை செலுத்திக்கொண்டே அருண் அவன் பக்கமாக அமர்ந்திருந்த சிரஞ்சீவி முகத்தை பார்த்தான். சிரஞ்சீவி முகம் இருண்டு தென்பட்டது.
அருண் “ நீ பதறாத.நான் அம்மாகிட்ட பேசிட்டு வந்து உனக்கு என்ன பண்ணலாம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அடுத்து உடனேயே அருந்ததீக்கு அழைத்தான். அருந்ததி அழைப்பை ஏற்ற உடனே “என்னம்மா எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டீங்களா என்ன” கேட்டான்
அருந்ததீ “இல்லையே.நான் அப்படி எல்லாம் எதுவும் முடிவு செய்யல்லையே” என்றார்.
உடனே அருண் “அத்தை ஏதோ ஷிவானிகிட்ட பேசி இருப்பாங்க போல… கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டிருக்காங்க. நீங்க என்னனு கொஞ்சம் பாருங்க. அதெல்லாம் இப்போதைக்கு முடியாது.இப்ப இருக்கிற நிலைமை என்ன கல்யாணம் எல்லாம் செய்ற மாதிரியா இருக்கு! முதல்ல கடன்ல இருந்து வெளியே வருவோம். நீங்க அத்தகிட்ட பேசுங்க” என்றான்.
அருண் ‘கடனிலிருந்து வெளி வருவோம்’ என்று சொன்னது அருந்ததிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக மகன் பிரச்சனையை தீர்க்க கைகொடுக்கிறேன் என்கிறான்.அதுதானே முக்கியம்.
அருந்ததீ “நீ எதும் கவலைப்படாத கண்ணா.உன் அத்தை ஏதாச்சும் ஓவர் திங்கிங் பண்ணி டிராமா பண்ணிருப்பா. நான் பாத்துக்குறேன். நீ அதை பத்தி எல்லாம் யோசிக்காதே. என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு சொல்லு.அதை செய்யலாம் நாம” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
அருண் கைபேசி அழைப்பு துண்டித்ததும் புவன் ” என்னடா பண்ண போற”
அருண் “ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்கவிடாம சுத்த விட்டுட்டே இருக்காங்க. கொஞ்சமும் யோசிக்காம அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷன்ன நான் மீட்டு எடுக்கணும்ன்னு எங்க அம்மா என்னை சொல்றாங்க. நல்லவேளை வேற பிஸ்னஸ் ஆரம்பிச்சேன்,இல்லன்னா வெளில கடன் வாங்கியாச்சும் என்னை அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷன்ன மீட்டெடுக்க சொல்லிட்டு இவங்கெல்லாம் ஜாலியா இருந்திருப்பாங்க. இப்போதைக்கு நல்லா போய்ட்டு இருக்கிறது ஏ.என்.ஆர் தியேட்டர்ஸும், ஏ.என்.ஆர் தீம் பார்க்கும்தான். ரெண்டும் அம்மா கையிலதான் இருக்கு அதனால இப்பவே ஷிவானிய எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சு என்ன கைக்குள்ள போட்டுக்கணும் நினைக்கிது எங்க அத்தை… யப்பா இந்த ட்ராமா எல்லாம் விட்டு ஒதுங்கி இருக்கலாம் பார்த்தா விட…மாட்டேங்குறாங்க” சலித்துக்கொண்டான்.
புவன் “ஆன்ட்டி என்ன யோசிக்கறாங்க நினைக்கற”
அருண் “அம்மாக்கு அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷன் முடங்கி இருக்கிறது பிடிக்கல. அவங்களோட கெத்து குறையுதுல்ல… அதுக்காகவாவது மீட்டு எடக்கணும் நினைக்கறாங்க… ஆனா கடன் அடைக்கிறதுக்கு காசு பத்தல மினிமம் ஐம்பது கோடி கட்டணும், அதுக்கு அடுத்து ரெண்டு மாசம் வட்டி தேத்தனும். அத இவங்களால திரட்ட முடியல…அம்மா கைல இருக்கிற ரெண்டையும் அடமானம் வெச்சா கூட அவ்வளவு வராது.,அப்படியே வந்தாலும் அம்மா பெரிய சிக்கல்ல மாட்டிப்பாங்க. எல்லாமே போகுற நிலைமை வந்துரும். என்ன செய்ய போறாங்க தெரியல”
புவன் “பிரைவேட் லோன் ஏதாச்சும் போவாங்க நினைக்கிறேன்”
அருண் “என் மாமனுங்க நிலைமைக்கு அப்படி போனா அவ்வளவுதான்”
புவனும் அருணும் பேசிக்கொண்டிருந்த போதும் சிரஞ்சீவி பேசாமல் ரோட்டையை வெறித்து பார்த்துக் கொண்டு வந்தான்.
புவன் சிரஞ்சீவியை பார்த்து “கவலைப்படாத மச்சான் அருணுக்கு கல்யாணம் செய்யணும்ன்னா கோடி கணக்குல வேணும்.அந்த காசு இப்போ அவங்ககிட்ட இல்ல”
புவன் எவ்வளவு பேசியும் சிரஞ்சீவி பதில் சொல்லாமலே அவன் யோசனையில் அவன் இருந்தான். வாயாடி சிரஞ்சீவி வாயை திறக்காமல் இருப்பது நல்லதிற்க்கே இல்லை.
பள்ளி நாட்களில் அருணுக்கும் சிரஞ்சீவிக்கும் வீடியோ கேம்ஸ்களில் பெரிய அளவில் ஆர்வம் இருந்தது. வார இறுதி நாட்களில், விடுமுறைகளில்,புவன் அருண் சிரஞ்சீவி மூவரும் அருண் வீட்டில்தான் இருப்பார்கள். புவனுக்கும் சிரஞ்சீவிக்கும் அருண் வீட்டில் யாரும் யாரையும் சரியாக நடத்த மாட்டார்களென சிறுவயதில் இருந்தே தெரியும். விடுமுறை நாட்களில் பல நாட்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாமல் இவர்கள் மூவரும் கூடவே ஷிவானியும் மட்டும் இருப்பதே நிலமையாக இருக்கும். சில நாட்களில் அருந்ததீ வீட்டில் இருப்பார். அருந்ததீ அவர் மனநிலை பொறுத்து நடந்துகொள்வார். சில நேரம் மகிழ்ச்சியாக மகன்களா என்று அழைத்து ஸ்நாக்ஸ் செய்துகொடுத்து ஸ்விம்மிங் அழைத்துச்சென்று மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார். சில நேரம் ‘அமைதியா இருக்கமாட்டீங்க? சத்தம் வந்தது தொலைச்சிருவேன்’ என்று கத்திவிட்டு போவார்.
புவன் அடிக்கடி செஸ் ப்ராக்டிஸ் என்று சென்றுவிட அருனும் சிரஞ்சீவியும் எந்நேரமும் கேம் கன்சோல்லில் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த வயதில் கெட்ட வார்த்தையில் திட்டுவதும், எல்லாம் தெரிந்து வைத்திருப்பவன் என்று காட்டிகொள்வது தான் பெரிய ஆளாக காட்டுமென நினைப்பில் இருப்பான் சிரஞ்சீவி. அருண் வீட்டில் அருண் கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் இருக்கும் அறையில் இவர்கள் கூடவே ஷிவானியும் இருப்பாள். அந்த அறையிலேயே ஒரு ஓரத்தில் உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பாள். ஷிவானியிடம் சிரஞ்சீவி அதிகமாக பேசமாட்டான் ஆனால் அவள் முட்டி அளவே போடும் டிரஸ்களை, ஸ்லீவ்லெஸ் ட்ரெஸ்களை கிண்டல் செய்வான். சிரஞ்சீவி விளையாட்டில் தோற்று ஏதாவது சத்தமாக கெட்ட வார்த்தை சொன்னால் கூட பக்கத்தில் கொஞ்ச தூரத்திலேயே அமர்ந்திருக்கும் ஷிவானி முகத்தில் சிறிய மாற்றம் கூட தென்படாது.சில நேரங்களில் அவனே “தானாக கெட்ட வார்த்தை வந்துருது கண்டுக்காத” என்று சொல்வான். ஷிவானியோ பதிலுக்கு “அப்படியா! நீ ஏதாவது சொன்னியா என்ன” என்று கேட்டுவிட்டு அவள் வேலையை தொடர்வாள். சிரஞ்சீவியின் பேச்சை, அவன் தைரியமாக யாரையும் எதிர்த்து பேசும் விதத்தை ஷிவானி ஆச்சரியமாக பார்ப்பாள். அதுவே அவன் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொண்டு சொதப்பினால் கிண்டல் செய்து சிரிப்பாள். கடைசியில் அவளே சொல்லியும் கொடுப்பாள். அவள் வெளித்தோற்றம் எளிதில் அணுக முடியாத விதமாக இருந்தாலும் பழகினால் ஷிவானி நல்ல ஒரு ஃபிரெண்ட்.
கொஞ்சம் கொஞ்சமாக அருணும் சிரஞ்சீவியும் குத்துசண்டையில் ஆர்வத்தை காட்ட அதிக நேர உடற்பயிற்சி திளைத்தார்கள். அதன் விளைவாக சிரஞ்சீவி கைகளில் பைசெப்ஸ் வர தொடங்கியது.ஷிவானி எப்போதுமே அவன் பைசெப்ஸ் பற்றி அவனிடம் பேசுவாள். சிரஞ்சீவியின் உயரமும் உருவம் மாற தொடங்கியிருந்த நேரம் ஷிவானி அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்.
ஒரு நாள் ஷிவானி ‘அருண் அருண்’ என்று கூப்பிட்டு விளையாட்டில் தொந்திரவு செய்துகொண்டே இருக்க சிரஞ்சீவி ” அது என்ன எப்பப்பாரு அருண் அருண்னு கூப்பிடுற அருண் அண்ணான்னு கூப்பிடு உன்ன விட அவன் பெரியவன் தானே” என்றான்.
ஷிவானி சிரித்துக்கொண்டே “ஆமா நீங்க எல்லோரும் என்னை விட பெரியவங்கதான் ஆனா என்ன விட ஒரு கிளாஸ் கீழ படிக்கிறீங்க சின்னப்பசங்களா” என்று கர்வமாக பேசினாள் .
சிரஞ்சீவி “அதெல்லாம் தெரியாது அவன்ன அண்ணான்னு கூப்பிடு”
அருண் “டேய் பெரியவங்கல்லாம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா பேசிட்டு இருக்காங்க அப்புறம் எப்படி அண்ணான்னுல்லாம் கூப்பிடுறது”
ஷிவானி “அய்யய்ய அருண் எனக்கெல்லாம் இந்த வீட்டை விட்டு வெளியில போனா போதும்ன்னு இருக்கு நான்னல்லாம் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ப்பா”
சிரஞ்சீவி “அப்ப அண்ணான்னு கூப்பிடுறதுல என்ன பிரச்சனை அண்ணான்னு கூப்பிடு”
ஷிவானி “அதென்ன நான் அவன அண்ணான்னு கூப்பிடுறதுல நீ ரொம்ப தீவிரமா இருக்கே! ஏன் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன” கிண்டலாக கேட்டாள்
சிரஞ்சீவி “இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன் வா ” என்றான்
ஷிவானி “பொறு பொறு எங்க பெரியப்பா ரண்டாவது கல்யாணம் பண்ணிக்க பொண்ணு தேடிட்டு இருக்காரு அவரு கல்யாணம் பண்ண பின்னாடி பண்ணுவோம்” என்று பேசி சிரித்தாள்.
முழுக்க முழுக்க கிண்டலான பேச்சாக இருந்தாலும் அதுதான் சிரஞ்சீவி மனதில் விழுந்த விதை. அதன்பின் சிரஞ்சீவிக்கு சிவானி மீது தனி அக்கறை பிறந்தது. ஷிவானி மெடிக்கல் காலேஜ் சேர்ந்த பின்பு அங்கே நிறைய ராக்கிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அடிக்கடி அந்த கல்லூரி சென்று பார்த்துவிட்டு வருவான். ஒரு கட்டத்தில் ஷிவானிக்கு பொதுவாகவே திருமணத்தில் நாட்டமில்லை என்பது புரியத் தொடங்கியது. என்றேனும் ஒரு நாள் நமக்கு திருமணம் என்றால் இவளுடன்தான் அதற்குள் ஷிவானியின் கவனத்தை நம் பக்கம் திருப்பிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தான் சிரஞ்சீவி.
காலம் செல்ல செல்ல முதிர்ச்சி கூட கூட காதல் சித்திரவதை தொடங்கியது. நாம தான் எதோ ஒரு மாயைல இருக்கோம் என்று சிரஞ்சீவி அவனை அவனே நம்ப வைக்க தினமும் பாடுபடுகிறான். திடுமென ஓர் எண்ணம் உதிக்கும் ஷிவானி யாரோ தெரியாத ஆள கல்யாணம் செய்துகிட்டு கஷ்டப்படறதுக்கு நம்மள கல்யாணம் செய்துக்கலாம் தானே என்று தோன்றும். சிலநேரம் கல்யாணம் கொழந்த குட்டி எல்லாம் கஷ்டம் ஜாலியா ஊர் சுத்திட்டு திரியலாம். அருணுக்கு புவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆன பின்பு ஊர் சுற்ற துணைக்கு ஷிவானியை அழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றும். ஷிவானி வேண்டுமா வேண்டாமா என்றே அவனுக்கு தெரியவில்லை ஆனாலும் அவளை யாருக்கும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை. அது உற்ற நண்பன் அருணாகவே இருந்தாலும் சண்டையிட மனம் உந்துகிறது. இதில் அவன் எண்ணத்தை அவளிடம் சொன்னானா என்றால் அதுவும் இல்லை.
நண்பர்கள் மூவரும் காதல் குழப்பத்தில் நீந்திகொண்டிருக்க…
பூர்ணிமாவின் திருமணம் கோலாப்பூர் அரண்மனையில் நடப்பதாக முடிவானது. திருமணத்திற்கு முக்கியமான அரசியல் பிரமுகர்கள் எல்லாம் வருவதால் முன்அனுமதியுடன் மட்டுமே வைபவத்தில் கலந்துக் கொள்ள முடியும்.
ஆதலால் பூர்ணிமா வகுப்பில் உள்ளோர் எல்லாரையும் அழைக்க முடிவு செய்ததால் வகுப்பின் முன்னே சென்று நின்றாள்.
“ஹாய் எல்லோருக்கும் என்னை தெரியும் என்று நினைக்கிறேன், இத்தனை நாள் உங்க யார்கிட்டயும் சொல்லாம இருந்ததுக்கு சாரி இந்த காலேஜ்ல படிக்கறதா சொன்ன பிரின்சஸ் நான்தான். ஏகதந்தா பூர்ணிமா ஷா என் முழு பெயர். நான் ராஜா மஹான் ஷா என்பவரை கல்யாணம் செய்துக்க போறேன். எங்க கல்யாணம் கோலாப்பூர் அரண்மனையிலே இரண்டு மாசத்துல நடக்கப் போகுது. அதுல கலந்துக்க முன்னாடியே அனுமதி இருக்கணும். எங்க செக்யூரிட்டி டிபார்ட்மெண்ட்ல சொல்லி நான் உங்க எல்லாருக்கும் அனுமதி சீட்டு வாங்கி கொடுத்துடறேன். முறையா இன்விடேஷன் எல்லாருக்கும் கொடுக்கறேன். சோ உங்க எல்லாரையும் என் கல்யாணத்தில் எதிர்பார்ப்பேன். லொகேஷன், விவரங்களுக்கு சிரஞ்சீவி அண்ட் தமயந்தியை கேட்டுக்கோங்க. தேங்க்யூ” என்றாள்.
திகைத்தாலும் எல்லோரும் வாழ்த்துக்கள் மழையில் அவளை நனைத்தனர்.
தமயந்தி அடுத்த நான்கு மாதத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம் என மாபெரும் திட்டமே வகுத்தாள். இரண்டாம் மாதம் பூர்ணிமாவின் திருமணம், மூன்றாம் மாதம் ‘பிளேஸ்மென்ட்’டில் வேலை வாங்கி நான்காம் மாதம் எக்ஸாம்ஸ் எல்லாம் முடித்து கல்லூரிக்கு பை பை சொல்லப்போகிறாள். அடுத்த கொஞ்ச நாட்கள் ஊரில் அம்மா தங்கையுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வேலையில் சேர்ந்து இஷ்டம் போலே சம்பாதித்தை செலவழிக்க போகிறோமென முடிவு செய்தாள்.
சிரஞ்சீவிக்கு திடீர் ஞானோதயம். தந்தையிடம் அருண் போல சினிமா துறையில் போவதா, இல்லை ‘லாஜிஸ்டிக்ஸ்’ பார்ப்பதா என்று கேட்டு நின்றான். கபிலன் அவனுக்கு பிடித்தது போல செய்ய சொன்னார். அவரை போல பஞ்சாயத்து அடிதடி தவிர அவன் எது செய்யவும் துணை நிற்பதாக சொன்னார். அவன் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றாலும் ஓகே என்றார் கபிலன்.
தமயந்தி “எனக்கு போட்டியா வராதடா” என்று அவனை விரட்டினாள்.
புவனுக்கு அவன் சித்தப்பாவிடமிருந்து சின்னய்யா குரூப்ஸ் பார்த்துக்கொள்ள தயாராக ட்ரைனிங் வா என்று தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. அவன் எண்ணியது போல பூமியை சமாதானம் செய்ய முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் அந்தரத்தில் நின்றான்.
பூமிகாவின் படிப்பு இன்னமும் உழைப்பை கொடு என்று உயிரை வாங்கியது. எவ்வளவு முயற்சி செய்தாலும் தோல்வியே கண்டு நின்றாள். அம்பிகா கச்சேரியில் பாடுவதை நிறுத்திக்கொண்டு அவர்கள் ஆடிட்டிங் அலுவலகத்தில் கவனம் செலுத்த சொன்னார். பூமிகாவிற்கு பாடுவதுதான் பிடித்திருந்தது.