அடுத்தநாள் எட்டு மணிக்கு கண் விழித்தவள் தமயந்தி, “ஐயோ கல்யாணம் முடிஞ்சிடுச்சா போட்டோ எடுக்கலையே” என்று கத்திக்கொண்டே எழுந்தாள்.
எங்கு இருக்கிறோமென சுற்றி சுற்றி பார்த்தாள்.அருண் புவன் சிரஞ்சீவி மூவரும் தயாராகி அங்கு உணவு மேஜையில் உட்கார்ந்து காபி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
தமயந்தி “அருண் நாம இன்னும் கோலஹாபூர்ல தான் இருக்கோமா”
அருண் “ஆமா. எங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்க. முகம் கழுவிட்டு வா காபி சாப்பிடலாம்”
தமயந்தி“பூர்ணிமா கல்யாணம் முடிஞ்சிருச்சா ”
சிரஞ்சீவி “கல்யாணம் எல்லாம் முடிஞ்சிடுச்சு. பூர்ணிமா மாப்ள வீட்டுக்கு போய் இன்னைக்கு மத்தியானம் அவங்க ஊருக்கே பிளைட் ஏறுறாங்க. நாம தான் இன்னமும் இந்த ஊர்லே இருக்கோம் ”
தமயந்தி “ஐய்யோ…நான் எப்படி இங்க வந்தேன்”
புவன் “ சோஃபாக்கு எப்படி வந்து தூங்கினேன்னு தெரிஞ்சுக்கணுமா இல்ல இங்க எப்படி வந்தன்னு தெரிஞ்சுக்கணுமா”
தமயந்தி யோசனைக்குள் ஆழ்ந்தாள் “இல்ல… உங்க ரூமுக்கு எப்படி வந்தேன்னா… கரெக்ட்… என் லக்கேஜ் காணாம போச்சு… உங்களை தேடி இந்த கெஸ்ட் அவுஸ் வந்தேன்.எப்படி இந்த சோபாக்கு தூங்க வந்தேன்”
பெருமூச்சு விட்டவன் அருண் ” காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு வாந்தி எடுத்து பெட் எல்லாம் நாசம் பண்ணி அங்க புழுக்கமா இருக்குன்னு ஹால்ல வந்து படுத்துக்கிட்டே”
தமயந்தி “ஆமா ரைட்டு ஞாபகம் வந்திருச்சு ஆனா எனக்கு ஏன் இப்படி நடந்தது”
சிரித்துக் கொண்டே சிரஞ்சீவி “நல்ல நாலு ரவுண்ட் சரக்கு அடிச்சா அப்படித்தான் ஆகும்”
தமயந்தி “ஐய்யயோ நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் குடிச்ச ஞாபகமே எனக்கு இல்லையே”
சிரஞ்சீவி “இந்த ஊர்ல ஃப்ரூட் ஜூஸ்ல ஈஸ்ட் கலந்து அத ஊற போட்டு பில்டர் பண்ணி பாட்டில்ல அடைச்சி லோக்கல் சரக்கா விப்பாங்க அந்த லோக்கல் சரக்கத்தான் நேத்து நீ அடிச்சிருக்கே”
தமயந்தி “ஐயோ அது ஜூஸ் இல்லையா அப்போ… லோக்கல் ட்ரிங்க்ன்னு வாங்கி குடுத்தாங்க” அதிர்ந்தாள். சட்டென கடிகாரம் கண்ணில் பட அதில் நேரத்தை பார்த்தாள் “ஐயோ இன்னிக்கு சாயந்திரம் நாலு மணிக்கு எனக்கு ஊருக்கு ஏசி பஸ் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்”
சிரஞ்சீவி ” கண்டிப்பா போக முடியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல நீ ரெடி ஆகி வரலைன்னா உன்னை இந்த கெஸ்ட் ரூம்ல விட்டுட்டு நாங்க கிளம்பிடுவோம்”
தமயந்தி “ நெஜமாவா? ஐயோ என்கிட்ட பர்ஸ் இல்ல”
புவன் “உன் பேக் காணாம போயிருக்குங்குற விஷயத்தை கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கோம், கவலை படாத. உன் துப்பட்டா, உன் செருப்பு, உன் ஃபோன் எங்களால என்ன முடியுமோ அதை கலெக்ட் பண்ணி வச்சிருக்கோம். உன் ஃபோன் ஒர்க் ஆகல ஊர்ல போய் பாத்துக்கலாம் இப்ப கிளம்பு”
தமயந்தி “ ஐயோ எனக்கு மாத்திக்க டிரஸ்”
அருண் “போற வழியில வாங்கிக்கலாம்”
தமயந்திக்கு அவள் இரவு தூங்கிய அறைக்குள் செல்லவே குமட்டிகொண்டு வந்தது. அமைதியாக சோபாவிலேயே அமர்ந்து கொண்டாள். நிகழ்காலத்திற்கு வருவதற்கே நேரம் எடுத்தது.தலைவலி விடுவேனா என்றது.
ஆண்கள் மூவரும் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ” நாங்க போய் கார் எல்லாம் ரெடி பண்றோம் நீ ரெஃப்ரெஷ் ஆயிட்டு சீக்கிரம் தயாராயிடு ஊருக்கு போயிடலாம்” என்றார்கள்.
கண்களில் நீர் கரித்தது.
புவன் “என்ன ஆச்சு தம்மு ஏன் அழற”
தமயந்தி ” ஊர்ல அம்மாவோட ஃப்ரெண்ட் பொண்ணுக்கு கல்யாணம் இருக்கு. அவ திங்க்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு. அடுத்த மண்டே அவளுக்கு கல்யாணம் இன்னும் இங்கேயே இருக்கோமே ஊருக்கு போயிரலாம் தானே”
சிரஞ்சீவி “அது குடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்”
அழுகையிலும் கோபம் வெடித்தது தமயந்திக்கு “நான் ஒன்னும் வேணும்ன்னு குடிக்கல, எனக்கு அது என்னன்னு தெரியல”
சிரஞ்சீவி “ஏன் வீட்ல சொல்லி தரலையா தெரியாதவங்க எது கொடுத்தாலும் குடிக்க கூடாது சாப்பிடக்கூடாதுன்னு”
தமயந்திக்கு இயலாமையில் இன்னும் அழுகை பொங்கி வந்தது. அருண் சிரஞ்சீவியை இழுத்து கொண்டு வெளியே சென்றான்.
தமயந்தி தயாராகி வெளியே வர ஊருக்கு புறப்பட்டனர் நால்வரும். அந்த ஊர் விட்டு அடுத்த பெரிய ஊருக்கு வரும்போது தமயந்திக்கு தலைவலியும், பசியும் லெஹங்காவில் இருக்கும் சம்கி உறுத்தலும் எரிச்சல் உச்சத்தில் வைத்திருந்தது. தமயந்திக்கு அடுத்த அழுகை வெடிக்கும் முன் புவன் நல்ல கடை பார்த்து நிறுத்தினான். தமயந்தி அணிந்திருக்கும் ஆடையை மாற்றிக்கொண்டு பசியாறிய பின்பு தான் உயிருடன் இருப்பது போல உணர்ந்தாள்.
முன் சீட்டில் புவனும் சிரஞ்சீவியும் அமர்ந்திருக்க, அருணும் தமயந்தியும் பின்னால் உட்கார்ந்தவர்கள் அப்படியே தூங்கி போனார்கள். அருண் ராத்திரியெல்லாம் தூங்காமல் தமயந்தி அறைக்கு காவல் இருந்தான். சின்ன சத்தம் கேட்டாலும் முழித்து தூக்கம் கெடுத்துக்கொண்டவன் புவனை ஓட்ட சொல்லிவிட்டு தூங்கிப்போனான்.
அடுத்து அருண் முழித்து பார்க்கும் போது டோல்கேட்டில் வண்டி நின்றிருந்தது.
அருண் “நான் ஓட்டவா”
சிரஞ்சீவி “முடியாது அடுத்து நானு. இன்னும் ஒரு நூறு கிலோமீட்டர் ஓட்டிட்டு குடுக்கறேன்”
மூவரும் பேசிக்கொண்டிருக்க தமயந்தி முழித்தவள் வாந்தி வருகிறது என்று நின்றிருந்த வண்டியில் இருந்து இறங்கி ஓடிச்சென்று வாந்தி எடுத்தாள்.
சிரஞ்சீவி கிண்டலாக “அதுக்குத்தான் குடிக்க கூடாதுன்னு சொல்றது. பாரு நெட்டை கொக்கு சூம்பி குட்ட கொக்கு ஆகிடுச்சு”
தமயந்தி கண்களில் நீர் வழிய “மனசாட்சியே இல்லாத பாவி… நான் மட்டும் சரி ஆனேன்ன்னு வை என் மொத வேலை உன்னை மலைமேல இருந்து உருட்டி விடுறது தான்”
சிரஞ்சீவி “மலைக்கு தூக்கிட்டே போவியா தம்ஸ் ”
புவன் “டேய் சும்மா இரு. டாக்டர் கிட்ட போவோமா தம்மு”
தமயந்தி “ஐயோ வேணாம் நாம ஸ்பீடா ஊருக்கு போய் சேருவோம்”
சிரஞ்சீவி “ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் மச்சான். ஸ்பீடா போனா சொர்க்கத்துக்கு தான் போவோம். என்ன முறுக்கிட்டு போனாலும் இன்னும் பத்து மணிநேரம் ஆகும் ஊருக்கு போக” என்றவன் “நல்லா நாலு இளநி வாங்கி தரேன் குடிச்சிட்டே வா சரியா” என்றான்.
தமயந்தி “நான் நாளைக்கு சாயந்திரம் என் ஊருக்கு போயிட்டா கூட போதும். கல்யாண பொண்ணுக்கு ட்ரெஸ் எல்லாம் என்கிட்டே தான் இருக்கு” அழுகையை அடக்கிக்கொண்டு சொன்னாள்.
புவன் “சரி கண்டீப்பா போவோம். நீ அழாம தண்ணி குடிச்சிட்டே வா. இவன் பேச்சுக்கு எல்லாம் டவுன் ஆகாத சரியா” சமாதானம் பேசினான்.
தமயந்தி “நான் அது என்னன்னு தெரியாம குடிச்சிட்டேன். எங்க ஊர்ல எல்லாம் பதநீர் வித்துட்டு வருவாங்க.அம்மா வாங்கி தரமாட்டாங்க ஆனா குடிச்சா ஒன்னும் பண்ணாது அதுபோல நெனச்சிட்டேன். எவ்ளோ விளையாடினாலும் எனெர்ஜிக்கு ரெட் புல் கூட குடிக்காத ஆளு நானு” உருக்கமாக பேசினாள்.
கண் மூடி சீட்டில் சாய்ந்திருந்த அருண் சிரஞ்சீவியை பார்த்து “ப்ச் இனி கிண்டல் பண்ணாத” என்று அதிகாரமாக சொன்னான்.
தமயந்தி அப்போது அமைதியானவள் அடுத்த ஐந்து மணிநேரம் எதுவும் பேசாமல் வந்தாள்.
தமயந்தி “இன்னும் எவ்வளவு தூரம் போகனும்” என்று கேட்டாள்
சிரஞ்சீவி பேசாமலே இருக்க புவன் “இன்னும் முன்னூறு கிலோமீட்டர் போகனும்”
தமயந்தி “இப்பவே எனக்கு தலை சுத்துது”
சிரஞ்சீவி திரும்பி அவளை பார்த்தான், எதுவும் பேசவில்லை.
தமயந்தி “என்ன சொல்லனும் சொல்லித்தொலை”
சிரஞ்சீவி சிரித்து கொண்டே “தண்ணி குடி சரியாகும்” என்று சொல்லிவிட்டு “எங்கேயாவது ரூம் போட்டு தூங்கிட்டு காலைல போவோமா” கேட்டான்.
தமயந்தி கண்களில் நீர் கோர்க்கவும், சிரஞ்சீவி “காலைல ஆறு மணிக்கு கிளம்புனா கூட மதியம் ஊருக்கு போவோம் அப்பறம் உன் பாக் எல்லாம் எடுத்துட்டு ரெடியா இரு நாங்களே கார்லே கொண்டு போய் விட்டுடுறோம் சரியா? நாளைக்கு நைட் என்ன ஆனாலும் நீ உன் வீட்டுக்கு போயிடுவ என்ன?!”, மெதுவாக விரிவாக பேசினான்.
தமயந்தி சம்மதமென தலை அசைக்க அடுத்து வந்த ஊரில் தமயந்திக்கு ஒரு அறை ஆண்களுக்கு ஒரு அறை என்று எடுத்துக்கொண்டு தூங்கி போனார்கள்.
அடுத்த நாள் தயராகி இவர்கள் ஊருக்கு வந்து சேரும்போது மதியம் ஆனது. தமயந்தி வேகவேகமாக அவள் பொருட்களை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு கிளம்பி வர அடுத்து கும்பகோணம் நோக்கி பயணம் தொடங்கியது.
தமயந்தி “சாரி என்னால உங்களுக்கு எல்லாம் கஷ்டம்” என்றாள்.
அருண் “அப்படியெல்லாம் இல்ல, நீ எதையும் யோசிக்காம வா போகலாம்”
திரும்பவும் கார் பயணம் தொடங்கி இம்முறை நெடுஞ்சாலை வந்ததும் தமயந்தி “நான் ஓட்டவா” என்று கேட்டு வாங்கி ஓட்ட தொடங்கினாள்.
தமயந்தி “இதென்ன இப்படி தொட்டாலே பறக்குது” என்றவள் “ஐ நல்லா இருக்கு, செமையா இருக்கு” என்று வேகத்தை கூட்டி கூட்டி ஓட்டி பார்த்தாள்.
அருண் “பார்த்து ஓட்டு”
சிரஞ்சீவி “யம்மா யம்மா ப்ளீஸ் மா நான் இன்னும் பலத பார்க்க வேண்டி இருக்கு” என்று சொல்ல
புவன் “கம்மி ஸ்பீட்ல தான் மைலேஜ் வரும் இல்லனா நடுரோட்ல பெட்ரோல் தீர்ந்து போயிடும். ப்ளீஸ் கம்மி பண்ணு”
தமயந்தி “ஆனா நல்லா இருக்கே” என்றவள் நன்றாக ஓட்டிக்கொண்டிருந்த வேளை தொண்டையில் திரும்பவும் வாந்தி வரும் உணர்வு.
மெதுமெதுவாக ஸ்பீட் குறைத்துக்கொண்டு வந்து ஓரம் நிறுத்தி இடம் மாறி அமர்ந்தாள்.
அருண் “ஏன் என்ன ஆச்சு”
தமயந்தி “வாந்தி வர மாதிரி இருந்திச்சு”
சிரஞ்சீவி “பாங்க் குடிச்சதுல இருந்து ஒன்னும் சரியில்ல பார்த்துக்கோ. ஒன்னு நீ சாவ பாக்குற இல்ல எங்களை கொல்ல பாக்குற”
தமயந்திக்கு கோபம் வர “அருஉஉஉஉண்”
சிரஞ்சீவி அதற்கும் கிண்டல் செய்ய “ஊஊ…” என்று கத்த
புவன் “டேய் சும்மா இர்ரா”
இவர்கள் கலாட்டாவில் தமயந்தி ஊர் வரை வந்து சேர்ந்தார்கள். மாலை மங்கும் நேரமது.., தமயந்தி அவள் படித்த ஸ்கூல் காட்டி “இங்க தான் ப்ளஸ் டூ” படிச்சேன் என்றாள்.
சிரஞ்சீவி “மத்த ஸ்கூல் எல்லாம் எங்க பண்ண அப்போ”
தமயந்தி “நான் நிறைய ஸ்கூல் மாத்திட்டே இருந்தேன். அப்பா அம்மா ட்ரான்ஸ்பர் பொறுத்து அது”
கடை ஒன்றை காட்டி “இந்த கடையில தான் கொஞ்சநாள் நான் வேலை பார்த்தேன்” என்றாள் தமயந்தி
சிரஞ்சீவி “ஏன் நெறைய நாள் பார்க்கலையா” கிண்டலாக கேட்க
தமயந்தி “இல்ல கஸ்டமர் ஒருத்தர் ஓனர் பொண்ண கடைல வேலை செய்யுற பொண்ணுன்னும் என்னை ஓனர் பொண்ணுன்னும் நெனச்சி பேசினாங்களா…வேலைய விட்டு நிறுத்திட்டாங்க”
புவன் “அப்பறம்”
தமயந்தி “அப்பறமா என்ன ஒன்னும் ஆகல.., நான் வேற கடையில வேலைக்கு போனேன். அந்த காசுல செல் போன் வாங்கிக்கிட்டேன்”
புவன் “சூப்பரு… அப்போ ஸ்கூல் டேஸ்லே வேலை எல்லாம் பார்த்தியா நீ ”
தமயந்தி “ஆமா. எங்கப்பாக்கு விசித்திரமா ஒரு பழக்கம் இருக்கு. ஊரெல்லாம் கடன் வாங்குவார். அம்மா சம்பளம் நிறைய நேரம் கடன் அடைக்கவே போகுமா அதனால எங்க செலவ நாங்க பார்த்துகிற மாதிரி ஆகும்”
சிரஞ்சீவி “ஊரே முடிய போகுது எந்த பக்கம் போகணும் சொல்லு”
தமயந்தி “இந்த ரோட்டுலே தான் போகனும் நான் ஸ்டாப் சொல்றேன் அதுவரை போயிட்டே இரு”
சிரஞ்சீவி “என்ன வயல்வெளிலாம் வந்திருச்சு உன் வீடு வரல”
தமயந்தி “என் வீடு அதுக்கும் அந்தப்பக்கம் இருக்கு”
புவன் “ஏன் ஊருக்குள்ள இருந்தா வசதிப்படும்ல்ல”
தமயந்தி “அதுவா…ப்ச்… நான் பாப்பாவா இருந்தப்ப எங்க வீடு பக்கத்துல ஒரு அண்ணா இருந்தாங்க.அவங்க பி.டி டீச்சர் ஆக ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க.என் தங்கச்சி பிறந்த டைம்ல அவங்க வீட்லதான் நான் எப்பவும் இருப்பேன். எனக்கு மூணு வயசுல இருந்து அந்த அண்ணாதான் பாஸ்கெட் பால் சொல்லி கொடுத்தாங்க. அவங்கதான் ஸ்போர்ட்ஸ்லே ஆர்வம் வளர்த்துவிட்டாங்க. நான் ஆறாவது படிக்கும் போது அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆச்சா அப்புறம் அவங்க வைஃப்க்கு அவங்க என்னை ட்ரெயின் பண்றது புடிக்கல. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும்போது அந்த அண்ணாவோட வண்டில வந்தேன்னா அப்போ அந்த அக்கா அத பார்த்து நடுதெருல ஊரை கூட்டி அசிங்கமா பேசி சண்டை போட்டு என்னை அடிச்சு ரொம்ப பெரிய கலாட்டா ஆகிடுச்சு. அப்புறம் அம்மா என்னை அங்கிருந்து இந்த எங்க லேண்ட்க்கு கூட்டிட்டு வந்துட்டாங்க” என்று தமயந்தி சொல்லி முடிக்கும்போது அவள் வீடு வந்திருந்தது.
இதுதான் இதுதான் வீடு என்று அவள் சொல்லவும் புவன் காரை நிறுத்த தமயந்தியின் தங்கை “அக்கா வந்துட்டா” என்று கூவிக்கொண்டே வெளியே வந்தாள்.
குப்பிருட்டில் செடி கொடிகள் மட்டுமே தென்பட ரோடு ஓரமே பளிச்சென வீடு இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தால் ஒரு ஷோகேஸ் முழுக்க நிறைய ட்ராபியும் மெடல்களும் இருந்தது.
“இதெல்லாம்…”
தமயந்தியின் தங்கை “ஆமா இதெல்லாம் அக்கா வாங்குன ட்ராபி தான். டீம் கேப்டனா இருந்தாளா அதான்”
இன்னொரு பக்கம் பூமியும் தமயந்தியும் சேர்ந்து நின்று எடுத்த போட்டோ பெரிதாக பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.
புவன் “பூமிகா இங்க வந்திருப்பா போலயே”
தமயந்தியின் தங்கை “ஆமா பூமிக்காவுக்கு இங்க ரொம்ப புடிக்கும். வந்தா பத்து நாள் தங்கிட்டு போவாங்க”
விஷேஷ வீட்டிலிருந்து வந்த தமயந்தியின் அம்மா நன்றி தெரிவித்து உபசரித்தார். வீட்டை சுற்றிப்பார்த்த சிரஞ்சீவி “அதென்ன அங்க பெரிய ரூம்”
தமயந்தியின் அம்மா “அது குடோன். வாடகைக்கு விடுவோம்”
அவர்கள் வீடிருக்கும் இடத்தை சுற்றி காட்டினாள் தமயந்தி. தமயந்தியின் தங்கையுடன் புவனும் சிரஞ்சீவியும் சென்று மற்ற இடமெல்லாம் பார்க்க
தமயந்தியின் பக்கம் வந்த அருண் “ரொம்ப கஷ்டமா இருந்ததா” கேட்டான்.
தமயந்தி புரியாமல் பார்க்க “இப்போ கார்ல சொல்றதுக்கு கஷ்டமா இருந்ததா”
தமயந்தி “இல்ல அருண் சொல்றதுக்கு முன்ன வரை அப்படி இருந்தது.என்னால எப்பவும் யாருக்காச்சும் கஷ்டம் ஆகுது. அதுதான் கஷ்டமா இருக்கு. இப்ப கூட பாரேன்” என்று பேசிக்கொண்டிருந்தவளை இடைமறித்து அருண் “எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்ல. நீ பாரமா இல்ல. உனக்கு நடந்தது ஆக்சிடென்ட். அது எல்லோருக்கும் அப்படி நடக்கும்… அது சகஜம்” என்றான் அழுத்தமாக.
தமயந்தி “தெரியல பட் தேங்க்ஸ் என்னை கூட்டிட்டு வந்ததுக்கு… ஒருவேளை நீ பேக் தேடி எடுத்துக்கிட்டு வான்னு நீங்க போயிருந்தா நான் என்ன ஆகியிருப்பேன்” கேட்டாள் கண்களில் நீர் தேங்கி நிற்க
அருண் “அப்படியெல்லாம் போயிருக்கமாட்டோம்மா. நீ எங்க பிரெண்ட்”
தமயந்தி “நான் அப்படி போனவங்களை பார்த்திருக்கேன் அருண்” என்றாள் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு
அருண் “நோ நான் என்னிக்குமே அப்படி போகமாட்டேன்” என்று அவள் கண்களை பார்த்தான்.
சிவந்த கண்களிலும் வெளுத்திருந்த முகத்திலும் சோர்வும் சோகமும் கூத்தாட
அருண் “போ போய் ரெஸ்ட் எடு போ” என்றவன் “பாய்ஸ் கிளம்பலாம்” என்றவன் தமயந்தி குடும்பம் தங்கிவிட்டு போகலாம் என்று எத்தனை வற்புறுத்தியும் கிளம்பிவிட்டார்கள்.