தமயந்தி ஏபி நார்மல் விளம்பரத்தின் கடைசி ஷூட்டிங் சென்றாள்.
பிராண்ட் மேனேஜர் “இதுலே இன்னொரு நாலஞ்சு வருஷம் கண்டினியூ பண்ணலாம்ல்ல” என்று கேட்டார்.
இவள் ‘இல்லை முடியாது” என்று சொல்லிவிட்டு “வேலை கிடைத்திருக்கிறது” என்பதையும் சொல்லிவிட்டு புகைப்படம் எடுக்க தயாராக சென்றாள்.
தயாராகி வந்தவுடன் பார்த்தாள் அருணும் அங்கே இருந்தான்.
“தனி சூட்டிங் சொன்னீங்க” என்று பிராண்ட் மேனேஜரிடம் இவள் கேட்க “இல்ல இன்னைக்கு ஒரு நாள் தான் ரெண்டு பேரும் டைம் இருக்குன்னு சொல்லிருக்கீங்க அதனால இந்த ஒரு நாள்லயே எல்லா ஷூட்டிங்கும் முடிச்சிட போறோம் அதுக்கப்புறம் அடுத்த சீசன்ல இருந்து வேறு ஏதாவது புது மாடல் நான் புடிக்கணும்” என்றார் பெருமூச்சை இழுத்துவிட்டு.
எப்போதும் போல உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்வு எழுந்தாலும் வேலை மாடலிங் எல்லாமே ஒரே நேரத்தில் சமாளிப்பது கஷ்டமென அறிந்தவள் மௌனம் காத்தாள்.
இம்முறை போட்டோகிராபர் நெருங்கி நிற்க சொல்லும்போதெல்லாம் தமயந்தி வேற போஸ் கொடுக்கலாம்ல கேட்டு கேட்டு மாற்றி மாற்றி அவள் சௌகரியத்தை மனதில் வைத்தே நடந்து கொண்டாள். அருணுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்தது “ஏன் தமயந்தி என் பக்கத்துல நிக்க புடிக்கலைன்னா அதை வாய்விட்டு சொல்லிடுங்க சோலோ ஷூட்டிங்கே போங்க. எதுக்கு உங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு டீம்மயும் கஷ்டப்படுத்திக்கிட்டு”
தமயந்தி “அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
விடாமல் அருண் “எனக்கு அப்படி தோணல” என்று அருண் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். அதன்பின் தமயந்தி எதுவும் பேசாமல் ஒத்துழைக்க கடகடவென கேமெரா க்ளிக்கிட வேகமாக ஷூட்டிங் நடந்தது.
சிறிது நேரத்தில் திரும்பவும் நெருங்கி நின்று போட்டோ எடுக்க வேண்டிய சூழல் வரவும் அவள் பக்கம் நின்றான் அருண்.
அருண் “நீ ஏன் பேங்க் இன்டர்வியூ போக மாட்டேன்னு சொன்னே”
தமயந்தி “அங்க பேக்கேஜ் ரொம்ப கம்மி”
அருண் “உன் அப்பா சர்வீஸ்ல இருக்கும்போது தானே இறந்து போயிருக்காரு அவரோட வேலை உனக்கு வருமே”
தமயந்திக்கு ஆயிரம் எண்ணம் மேலோங்கியது. அப்பா இறப்பு கேள்விப்பட்டு அன்றே பூமியுடன் மற்ற மூவரும் வந்து பார்த்துவிட்டு அந்த இரவே கிளம்பியும் விட்டார்கள். அன்றைக்கு தமயந்தியின் நிலையில் அவளுக்கு அவள் துக்கத்தை அவர்கள் முன் காட்டிக்கொள்ள சங்கடமாக இருக்கவும் அவர்களும் அவளை மேலும் கஷ்டப்படுத்தாமல் ஊருக்கு சென்றுவிட்டார்கள். அதன்பின் எதுவும் அருண் பேசவேயில்லை. எடுத்ததும் வேறு வேலையை தேடு என சொல்வது அவளுக்கு எரிச்சல் ஆனது. இப்போது தந்தையின் வேலையை பற்றி பேசுகிறான் கோபம் தலைக்கு ஏறுகிறது. அப்பா உயிருடன் இருந்த காலத்திலேயே அம்மா ‘அவர் பணத்தை நம்பி நாங்கள் இல்லை’ என்பதை காட்டிக் கொள்ள நிறைய செய்திருக்கிறாள், இப்போது அவர் வேலை வாங்குவதை விடுவாரா? அம்மாவும் வேண்டாம் என்று சொல்ல அதே நேரத்தில் இவளுக்கும் அந்த ஊரில் இருக்க இஷ்டமில்லாததால் அதை பற்றி அவள் கண்டுகொள்ள போவதில்லையென முடிவில் இருந்தாள். இதையெல்லாம் எல்லாம் அருணிடம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை “எனக்கு பிடிக்கல” என்று முடித்துக் கொண்டாள்.
அருண் “அப்போ வேற ஏதாவது சாப்ட்வேர் இண்டஸ்ட்ரி பார்க்கலாம் தானே”
திரும்பி அவன் முகத்தை நேராய் பார்த்து நின்றவள் “ அருண் நான் போய் ஜாயினிங் லெட்டரை வாங்கிட்டு வந்துட்டேன் சென்னையில் தான் வேலை பார்க்க போறேன். இந்த மாசம் கடைசியில வேலையில் ஜாயின் பண்றேன்” என்றாள்.
அருணுக்கு அதிர்ச்சியானது. எதுவும் பேசாமல் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லிவிட்டு ஷூட்டிங் முடிந்ததும் கிளம்பி சென்றுவிட்டான்.
என்ன செய்கிறோம், என்ன எதிர்பார்க்கிறோம் என இருவருக்கும் தெரியவில்லை. அதேசமயம் அது இருவரையும் பாதிக்கிறது, அதை பற்றி பேசவும் இருவரும் தயாராக இல்லை. காதலா? நட்பா? அக்கறையா? என்னை நீ கண்டுக்கொள்ளவில்லை என கோபம் இவளுக்கு இருந்தால், எனக்கு நீ முக்கியத்துவம் கொடுக்காமல் போகிறாய் என்று அவனுக்கு கோபம். எதையும் இன்னதென சுட்டிக்காட்ட பேச தயங்கியே காலத்தை வீண் செய்தனர்.
அருண் எரிச்சலில் இருந்தபோது அவன் அம்மா அழைத்து மாமன்களின் மிரட்டலை பற்றி சொல்லவும் கோபத்தின் உச்சிக்கே சென்றான்.
புவன் அவன் குடும்பத்தின் அழுத்தத்தில் பைனான்ஸ் ஆபீஸ்சராக செல்லம்மாள் ட்ரஸ்டில் அமர்ந்தான். அங்கே அவர்கள் சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் நிறுவனங்களை அவன் கவனிக்க ஏற்பாடு ஆனது. நாடு முழுக்க அங்கங்கே ஏராளாமான கட்டுமான டெண்டர்களும், டவுன்ஷிப் அமைக்கும் தொழில் இனி அவன் கைவசம். அவன் திறமைக்கு அவனுக்கு கிடைத்த துறை கம்மியே என்றாலும் அது மட்டுமே அவனை பூமிக்கு நெருக்கத்தில் வைக்கும் மற்றதெல்லாம் வடக்கிலோ இல்லை வேறு நாட்டிலோ போய் தொழிலை கவனிக்கும் விதமாக இருக்க இதை செய்கிறேன் என வீட்டில் ஒத்துக்கொண்டான்.
கபிலன் புவனிடம் “சீக்கிரம் நல்ல இடமா போய் பாருடா கண்ணா அங்கிள் வீடு இனி உனக்கு ஒத்து வராது” என்று சொல்லும்போது அவருக்கே துக்கம் தொண்டை அடைத்தது.
புவன் “ம்ம்” என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு தனியாக அறைக்குள் சென்று தலையை கவிழ்த்து அமர்ந்துவிட்டான். வாழ்க்கை என்றுமே கொடூரமாக தான் வளைந்து நெளிந்து போகுமென அறிந்திருந்தாலும் தனிமையை எண்ணி இறுக்கமாக இருந்தது. வீடு திரும்பும் வேளை யாருமே காத்திருக்க மாட்டார்களென எண்ணும்போது சலிப்பாக இருந்தது.
சிரஞ்சீவி “நீ உன் இஷ்டத்துக்கு இங்க இரு மச்சான். அப்பா பார்த்துக்கலாம் விடு”
புவன் “தேங்க்ஸ் மச்சான்”
சிரஞ்சீவி “டேய்ய்ய் நான் சும்மா வார்த்தைக்கு சொன்னேன். நீ கிளம்பு மொத. அப்பறம் உனக்கெல்லாம் காவல் இருக்க என்னால முடியாது”
புவன் எதையும் பேசாமல் மனபாரம் ஏற “எனக்கு நானே கொடுத்துக்கிட்ட டைம்ல பூமியை சரிசெய்ய முடியலையே மச்சான்”
சிரஞ்சீவி “அதானே பார்த்தேன். நான் கூட என் மச்சான் என்னத்தான் மிஸ் பண்ணப்போறான்னு ஃபீல் ஆகிட்டேன்”
புவன் “இன்னும் ஒரே ஐடியா தான் இருக்கு. அவ இன்டெர்ன்ஷிப் டைம்ல ஏதாச்சும் பிளான் பண்ணாத்தான் உண்டு ”
சிரஞ்சீவி “அதானே இந்த அப்பாவி மூஞ்ச பார்த்து எல்லாரும் ஆட்டு குட்டின்னு நெனைக்கிறாங்க எனக்கு தானே தெரியும் இது நரின்னு”
புவன் “நான் நரின்னா நீ காண்டாமிருகம்”
சிரஞ்சீவி “காண்டாமிருகம் என்ன பண்ணும் தெரியுமா இப்படி குனிய வச்சு குத்தும்” என்று அடிக்க
புவன் “எனக்கு என்னிக்குமே இந்த ஃபன் எப்பவும் வேணும் மச்சான்” என்றவன் சிரஞ்சீவியை கட்டி அணைக்க
சிரஞ்சீவி “ஐய்யய இதெல்லாம் நம்ம வகையே இல்ல மச்சான்” என்று சொன்னாலும் அவனும் அணைத்து கொண்டான்
புவன் “மச்சான் இத நான் சொல்லியே ஆகணும். நாம லெவன்த் படிக்கிறப்ப ஒரு பொண்ணு எனக்கு ப்ரபோஸ் பண்ணிச்சு சொன்னேன்ல அது என்கிட்டே உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லிச்சு நான்தான் மாத்தி சொன்னேன்”
சிரஞ்சீவி “அடங்கொய்யா… உன்ன என்ன பண்றேன் பாரு” என்றவன் அணைத்த கையிலேயே அவன் கழுத்தை இறுக புவன் சிரித்துக்கொண்டே அவன் இடுப்பில் குத்த சட்டென பின்னால் துள்ளி விழுந்தான் சிரஞ்சீவி.
தமயந்தி வேலையில் சேரும் நாளும் வந்தது. ட்ரைனிங் தொடங்கியது மூன்று பேர் சேர்ந்து சினிமா துறையில் ப்ரொடியூசரின் வேலை என்ன, ப்ரொடக்ஷன் கம்பெனியின் வேலை என்ன அங்கு என்னவெல்லாம் நடக்கும். அவள் அங்கே என்னவெல்லாம் செய்ய முடியும் என்றெல்லாம் அவளுக்கு விளக்கமாய் சொன்னார்கள். சினிமா ரிலீஸ் தொடங்கி சினிமாவில் கிடைக்கும் லாபம் நஷ்டம், சினிமாவில் எது பாக்ஸ் ஆபிஸ் ஹிட், எது பிளாப் என்பதை எல்லாம் அவர்களுக்கு தெரிந்த வகையில் அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொன்னார்கள். விவரங்களைக் கேட்டு அறிந்து கொள்ளும் போது மலைப்பாக இருந்தது தமயந்திக்கு. பூமிகாவுக்கு அவளுக்கு பிடித்த கொரியன் சீரியல் எப்படி எடுத்தார்கள் என்பதை யூடியூபில் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். அதை பார்க்கும் போதே இவளுக்கு பிரமிப்பாக இருக்கும் எப்படி நம்ம பார்த்து ரசிக்கிற ஒரு விஷயத்தை இவங்க பின்னாடி இருந்து இப்படி செட் பண்ணனும்னு யோசிக்கிறாங்க என்று நிறைய தடவை ஆச்சரியப்பட்டிருக்கிறாள். இனிமேல் ஸ்கிரீனுக்கு பின்னாடி இவளும் நின்று வேலை பார்க்கப் போகிறாள். அதுவும் படமெடுக்க பணத்தை திரட்டுவது தொடங்கி அந்த படம் முடிய மற்ற வேலைகளை எல்லாவற்றையும் கவனித்து சீராக எடுத்துக் கொண்டு போய் ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு இவளுக்கு இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருந்தது.
மூன்று நாளில் விவரங்களை எல்லாம் இது இப்படித்தான் நடக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போய் விட்டார்கள் ட்ரெயினர்கள். மேலும் விவரம் வேண்டுமாயின் இந்த எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம் எப்போதும் வேண்டுமானாலும் உதவி செய்வோம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.
இப்போது தொடங்கியது தமயந்திக்கு சவால்.
தமயந்தியை வேலைக்கு எடுத்தாரே அவர் இவர்கள் நடத்தப் போகிற புரொடக்ஷன் கம்பெனி என்று ஒரு அழுக்கு கட்டிடத்தை அழைத்துச் சென்று காட்டி “இதுதான் ஆபீஸ்” என்றார். கூடவே “இத சீரமைச்சு நாம புரொடக்ஷன்க்கு போஸ்ட் ப்ரொடக்ஷன்க்கு எல்லாம் ஏத்தது போல பிக்ஸ் பண்ணனும். இங்க ஒரு அஞ்சாறு பேர நல்லா ஆட்களா பார்த்து வேலைக்கு எடுக்கணும். இதுக்கெல்லாம் இன்டீரியர் நீ தான்மா தேடிபிடித்து எல்லாம் ரெடி பண்ணனும் உனக்கு ஒரு ரெண்டு மாசம் டைம் தரேன். முடிச்சதும் வேலையை ஆரம்பிச்சிடலாம்.இதுக்கு உனக்கு பட்ஜெட்ல பதினைஞ்சுல இருந்து இருவது லட்சம் வரைக்கும் செலவுக்கு சார் ஒதுக்கி இருக்காரு. அதை பார்த்து சூதானமா செலவு பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
தமயந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் ஆட்களை வைத்து வேலை வாங்கணுமா? அது எப்படி முடியும்? அந்த கட்டிடம் இருக்கும் தெரு மிகவும் பரபரப்பான தெரு. எதிரே மியூசிக் ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்று இருந்தது இரண்டு கட்டிடம் தள்ளி வேறு ஒரு புரொடக்ஷன் கம்பெனி இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி திரும்பி சென்றால் அருணுடைய புரொடக்ஷன் கம்பெனி வந்துவிடும். பரபரப்பான தெருவில் எது எங்கே சென்று தேடுவது எங்கிருந்து தொடங்குவது என்பதை சுத்தமாக ‘ஐடியா’வே இல்லாதவளாக அமர்ந்தாள் தமயந்தி.
சிரஞ்சீவிடமிருந்து அழைப்பு வந்தது ” என்ன மேடம் பட்ட பகல்ல காயுற வெயில்ல ரோட்டோர பெஞ்சில் உட்கார்ந்து என்ன செய்றீங்க” கேட்டான்.
திரும்பி பார்த்தாள்… தூரத்தில் நடந்து வந்துகொண்டிருந்தான் சிரஞ்சீவி .
தமயந்தி அவனிடம் ” இந்த பில்டிங் இன்டீரியர் செய்ய ஆள் பார்க்கணும் சொல்லிட்டு போய்ட்டார் என் பாஸ். என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியல” என்றாள். சிரஞ்சீவி “அது ஒன்னும் பிரச்சனை இல்ல. எவனையாவது ஒரு பில்டர் கூப்பிட்டு கோட் வாங்கி செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்”
தமயந்தி “ஆனா அத எங்கிருந்து ஆரம்பிக்கணும்ன்னு தெரியல யார போய் பாக்கணும்ன்னு தெரியல”
“சரி பட்ஜெட் என்ன” கேட்டான் சிரஞ்சீவி. தமயந்தி அதற்கும் முழித்துகொண்டு நிற்க “சரி வா போவோம்” என்று அழைத்து கொண்டு பில்டர்களை சந்தித்து பேசினார்கள்.ஒரு விஷயம் புரிந்து விட்டது பட்ஜெட் என்று கொடுத்திருக்கும் காசு மிகவும் குறைவென.
இரண்டு நாள் மண்டையை பீய்த்து கொண்டு அலைந்த தமயந்தி கடைசியில் பிளைவுட் வேலை பார்க்கும் ஆட்களை போய் சந்தித்து முடிவு செய்தாள்.
“முதலில் நீ பில்டர் பிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி இந்த பில்டிங்கில் உனக்கு என்ன எல்லாம் வேணும்னு நீ பிக்ஸ் பண்ணனும் தம்ஸ்” என்றான் தமயந்தியின் நிலையை புரிந்து கொண்ட சிரஞ்சீவி. கூடவே “வேணும்ன்னா வரியா அருணோட ஆபீஸ் போய் பாத்துட்டு முடிவு செய்யலாம்” என்று அழைத்தான்.அதற்கு தமயந்தி “இல்ல இல்ல எதுனாலும் நம்ம இஷ்டத்துக்கு பாத்துக்கலாம் அங்கெல்லாம் வேண்டாம்” என்றாள்.
சிரஞ்சீவி அவனுக்கு தெரிந்ததை சொல்ல தொடங்கினான் “ ஒரு ஆஃபீஸ்க்கு ஒரு ரிசப்ஷன் வேணும், ப்ரொடக்ஷன் மேனேஜர் ரூம் வேணும், கதை டிஸ்கஸ் பண்றதுக்கு தனியா ஒரு ரூம் வேணும், மீட்டிங் போட ஒரு ரூம் வேணும், அப்புறம் சாப்பாடு அரேஞ் பண்ண அப்பறம் ரூம்குள்ள ஷூட்டிங்ன்ன அதுக்கு ஒரு ரூம்ன்னு சிலது தேவைப்படும் ” என்றான். இப்போது தமயந்திக்கு புரிந்தது சிரஞ்சீவி சொல்வது. இருவரும் சேர்ந்துக் கொண்டு சினிமா சான்ஸ் தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு புரொடக்ஷன் கம்பெனியாக ஏறி இறங்கி அவர்கள் உட்புற வடிவமைப்பை பார்த்தனர்.
தமயந்திக்கு அந்த கட்டடம் எப்படி இருக்க வேண்டுமென தெளிவு பிறக்கவே ஒரு மாதம் எடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அவள் இதுதான் வழியென ஒரு சிந்தனையில் இறங்கும்போது 45 நாட்கள் கடந்திருந்தது. பரபரப்பான தமயந்தி “சிரஞ்சீவி எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுத்தாங்க 45 நாள் இப்பவே போயிடுச்சு 15 நாள் எப்படி ஆபிஸ செட் பண்ண முடியும் எனக்கு ஒரே பதட்டமாக இருக்கு” என்றாள்
சிரஞ்சீவி “சரி ஆபிஸ் பேர் என்ன” என்று கேட்க
தமயந்தி “ஐயோ அதை நான்தான் முடிவு செய்யணும் சொன்னாங்க. அத மறந்த்துட்டேன் பாரேன்”
சிரஞ்சீவி “அப்போ அந்த வேலையை பாரு”
தமயந்தி “எனக்கு எப்படி பேர் வைக்கிறதுன்னே தெரியலியே”
சிரஞ்சீவி “அந்த ஓனர் என்ன பண்றார் போய் அவர்கிட்ட கேளு” என்று ஊக்கினான்.
தமயந்தி வேலைக்கு எடுத்தவரை அழைத்து கம்பெனி பேர் வைப்பது ரெஜிஸ்டர் செய்வது பற்றி கேட்க அவரோ “குட்.பரவால்லையே! நான் நீ எப்போ இதை பத்தி கேட்பன்னு பார்த்தேன். கொடுத்த டைம்க்கு முன்னயே கேட்டுட்டியே. நீயே ஒரு பேர் சொல்லும்மா நான் கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் பார்த்துக்கறேன்” என்றார்
சலிப்பில் தலையை உயர்த்தி வானத்தை பார்த்தவள் தமயந்தி நீல வானம் எல்லையற்று பளிச்சென இருப்பதை பார்த்து “சார் ஸ்கை புரடக்ஷன்ன்னு வச்சுப்போம்” என்றாள்.
கணநிமிடத்தில் உருவான நிறுவன பெயரை பற்றி கேள்விப்பட்டு கல்யாண் அவளை அழைத்து பாராட்டினார். கூடவே அவள் மிகவும் மெதுவாக வேலை செய்வதாகவும், கிரேட் பிஸ்னஸ் ஸ்கூலில் படித்தவளிடம் சுறுசுறுப்பு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சுர்ரென முள் தைத்த வலி உண்டானாலும் கூடவே உத்வேகம் ஒன்று பிறந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் ஸ்கை புரடக்ஷன் கட்டிடம் ஜோராக தயாராக தொடங்கியது. கூடவே சிரஞ்சீவி கொடுத்த ஐடியாவில் தமயந்தி சின்ன பட்ஜெட் படம் ஒன்றை வாங்கி ரிலீஸ் செய்து தியேட்டர்களுக்கு விநியோகம் செய்தாள்.
படம் ஒரு சில ஊரில் நன்றாக வரவேற்பு பெற்றது. சில இடங்களில் அடுத்த நாளே எடுத்துவிட்டார்களென தெரிவித்தார்கள். இந்த ஒரு அனுபவத்தில் அவளுக்கு ஒரு படத்தை எப்படி தேர்ந்தெடுத்து வாங்கவேண்டுமென தெரியவில்லை என தெரிந்தது. அதிலும் சினிமா ரசனையை பற்றி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதெல்லாம் தெரிந்த ஓர் ஆள் அவர்கள் நிறுவனத்தில் இருக்கவேண்டுமென முடிவு செய்தாள்.
சிரஞ்சீவியிடம் அவள் பிரச்சனையை அவள் சொல்ல அவன் அருணுக்கு சொல்ல அருண் பழைய டைரக்டர் யாரையாச்சும் வேலைக்கு வைக்க சொல்லு என்று ஐடியா கொடுக்க அதை சிரஞ்சீவி அவன் யோசனை போல சொல்லவும் இருவரும் பழைய இயக்குனர் யார் அவர்களுடன் வேலை செய்ய தயாரென தேடி அலைந்தார்கள். எல்லோருமே ஒரு தெருவோர ‘சினிமா என்சைக்ளோபீடியா’ ஒருவரை சொல்ல அவரை தேடி அலைந்தார்கள்.
தமயந்தியையும் சிரஞ்சீவியையும் தொடர்ந்து அந்த தெருவில் மூன்று முறை பார்த்த பெரியவர் ஒருவர் “யாரை தேடுறீங்கோ பசங்களா” கேட்டு வந்தார்.
சிரஞ்சீவி“இங்க முருகான்னு ஒருத்தர் இருக்குறாராம் அவரை தேடுறோம்”
பெரியவர் “ஏதே முருகன தேடுறீங்களா.எப்படி இருப்பாராம் அவரு”
“இந்த தெருவுல தான் இருப்பார்ன்னு சொன்னாங்க” என்று சிரஞ்சீவி
“ஹல்லோ நான்தான் முருகா என்றார்” பெரியவர் சிரஞ்சீவியின் தோளில் தட்டி
தமயந்தி “அவருக்கு சினிமா பத்தியல்லாம் நல்ல தெரியும் சொன்னாங்க”
“ஓ அப்படியா என்ன கேள்வி கேட்கணுமா கேளு பதில் சொல்றேன்னா இல்லையா பாரு” என்றார் மிடுக்காக
தமயந்தி கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னவர் “இப்ப இன்ன வேணும்ங்குற”
“எனக்கு சினிமா பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. கதை தேர்ந்தெடுக்க ஆள் வேணும் என் புரடக்ஷன் கம்பெனிக்கு”
“மாசா மாசம் காசு தருவியா”
தமயந்தி “தரேன் சம்பளத்துக்கு தான் கூப்பிடுறேன்”
“ஹாங் என்னிக்கு வரணும் சொல்லு அன்னிக்கு ஆபிஸ் வாசல்ல்ல இருப்பேன்”
தமயந்தி “சரி வரப்ப…” என்று தமயந்தி இழுக்க
“ஹான்…குளிச்சு சுத்தமா வாரேன் அதுக்கொரு ரெண்டாயிரம் எடுத்து வச்சிட்டு போ”
தமய்ந்தி முழித்துக்கொண்டு நிற்க சிரஞ்சீவி கேட்ட காசை கொடுத்தான்.
“அப்படி மட்டும் நீங்க வரல எங்கிருந்தாலும் தேடி வந்து வட்டியும் முதலுமா வாங்கிட்டுதான் போவேன்” என்று மிரட்டிவிட்டு வந்தாள் தமயந்தி.
அடுத்த நாள் காலை தமயந்தியின் ஆபிஸ் வாசலில் பெரியவர் படுத்திருந்தார்.
“நான் இடத்தை சொல்ல மறந்துட்டேனேன்னு நெனச்சேன். எப்படி கரெக்ட்டா வந்தீங்க” ஆச்சரியமாக கேட்டாள்
முருகா “அதான் அந்த அமுல் பேபி வக்கீலு உன்ன இந்த ஆபிஸ் காட்ட கூட்டின்னு வந்தானே அன்னிக்கே பார்த்துட்டேன். வந்துட்டேன். நீ எதுவும் கவலைப்படாத அடுத்து ஒரு வாரத்துல ரெண்டு படத்த நம்ம பேனர்லே ரிலீஸ் பண்ணுவோம். நான் கூட்டிட்டு வாரேன். நீ மத்த வேலையெல்லாம் பாரு”
தமயந்தி “அவரு வக்கீலன்னே நீங்க சொல்லித்தான் தெரியும்”
“ஹாங் கவனிச்சேன். இனிமேல அப்படி இருக்காத… எல்லாமே கவனிக்கணும் ஆனா டைம்முக்கு எடுத்து பேசணும் அதுவரை மூச் விடக்கூடாது சரியா… கத்துக்க” என்றார்
தமயந்திக்கு அடுத்த ஆளை தேடிபிடிக்கும் வேலை தொடங்கியது.