மாரியாக வசவு சொற்களை பொழிந்துவிட்டனர். ஆனால் அப்பொழுதும் தன்னுடைய முடிவில் உறுதியாக தான் இருந்தான். இப்பொழுதும் உள்ளான்.
சரி செய்ய முடியும் என்ற அளவு சண்டைகள் தான் என்றாலும் ஒருவரை ஒருவர் ஒத்துபோய் வாழலாம் என்ற நிலையை தாண்டியிருந்ததாய் எண்ணம் அவர்களுக்கு.
தொட்ட விஷயமெல்லாம் சண்டையில் முடிய, கோவம் அதிகரித்து வார்த்தைகள் நிதானம் இல்லாமல் திசைமாறி தறிகெட்டு சென்றது.
“ரகு இத பாரேன்” ஆசையாக கேட்டுக்கொண்டே அவன் மடியில் வந்தமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்துகொள்ள, அவள் இடை வளைத்து அவள் தலை சாய்ந்தான் ரகு. அவள் காட்டிய தொடு திரையில் அழகாய் ஒவ்வொரு வடிவங்களில் மின்னியது சில கண்ணாடி பாத்திரங்கள்.
“இது எதுக்குடி?” என்றான் மெதுவாக.
“கண்டைனர் எதுக்குடா கேப்பாங்க? வாங்கி தர்றியா பருப்பு எல்லாம் அடுக்கி வச்சுக்கலாம். அழகா இருக்கும்” ஆசையாக அவன் முகம் பார்த்தாள்.
“அதெல்லாம் சமைக்கிறவங்களுக்கு ம்மா. நீ தான் சமைக்க மாட்டியே உனக்கு எதுக்கு அத வாங்கி காச வேஸ்ட் பண்ணனும்?”
“அதெல்லாம் நான் சமைப்பேன். பாரு ஆன்லைன்ல நெறையா விடீயோஸ் பாத்து வச்சிருக்கேன். இனி நீ டெய்லி ஆபீஸ் விட்டு வரப்போ ரக ரகமா செஞ்சு தருவேன்”
சத்தமாக சிரித்தவன் அவளது மூக்கை பிடித்து ஆட்டினான், “இப்டி சொல்லி தான் அவன் வாங்குன. மவளே கருகுன சிக்கன், தீஞ்ச கேக் தான் வந்தது. கண்டைனர் வாங்கி தர்றேன் ஆனா சமைக்க மட்டும் செய்யாத ப்ளீஸ்”
இடுப்பில் பலம் கொண்டு ரகுவை திவ்யா கிள்ள வலியில் கத்தியவன் வாயை பொத்தி அவன் முகத்திற்கு நேராக வந்து, “வாங்கி தர்றேன் சொல்லுடா” என்றாள் மிரட்டலாக.
அடுத்து கிள்ளிய அவன் இடுப்பை விடாமல், “வாங்கி தர்றேன்னு சொல்லு” வலியில் துடித்தவன் தவிப்பை அவள் கண்டுகொள்ளவே இல்லை,
“என் இடுப்பையே புடிச்சு நீ ஒடைச்சலும் வாங்கி தர மாட்டேன். ஆனதை பாத்துக்கோடி” அடுத்து பல நிமிடங்கள் போராடி பார்த்து தோற்று போனவள் அவனது கழுத்து வளைவில் சோகமாக கிடந்தாள்.
கொஞ்சல் மொழிகளில் சிறிதும் இளகாதவன் அவளது அமைதியில் மனம் தவிக்க, “ஒரு லாங் டிரைவ் போகலாமா?” என்றான்.
மின்னலாய் மின்னியவள் முகம் அடுத்த நொடியில் வாடியது, “நாளைக்கு உனக்கு ஆபீஸ் இருக்கே”
மனைவியின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன், “ரொம்ப தான் அக்கறை. கெளம்பி வாடி”
“அப்டியே தான் வருவேன்” மேலும் கீழும் பார்த்தான்.
எளிமையான இரவு உடை தான், “என் பொண்டாட்டி எவ்ளோ அழகுனு காமிக்கட்டுமா” அவளது இடையோடு இருந்த கைகள் இறுக்கமாக அவனது எண்ணத்தை புரிந்தவள் அருகில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து அவன் தலையில் வைத்து,
“துறை எங்க ஆரமிச்சு எங்க போவிங்கனு எனக்கு தெரியும். மரியாதையா கெளம்புடா” அவனை பிடித்து வெளியே அழைத்து சென்றாள்.
இருவரும் அந்த நாள் இரண்டு மணி நேர இரவு பயணத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்தனர், கடற்கரை சென்று வந்தது என அழகிய நிகழ்வுகள் நினைவுகளாக மாறியது.
மனைவியின் சின்ன சின்ன ஆசையை நிறைவேற்றியவன் வீட்டினுள் நுழைந்ததும் மனைவியை தன்னோடு அணைத்து தன்னுடைய ஆசையை மெல்ல மெல்ல அவளிடம் தேட துவங்கினான்.
அவனது கைகளில் சோர்ந்து கிடந்தவளை இன்னும் ஆசையோடு பார்த்தவன் அவளது கன்னத்தை மீசை கொண்டு கூச செய்ய,
“ரகு” என்ற சிரிப்போடு அவனை தள்ளி நிறுத்தியவள் இடையில் அவனது கைகள் கிச்சு கிச்சு மூட்ட, அந்த குறுகுறுப்பு தாங்காமல் வயிறு வலிக்க சிரித்தவள்,
“ரகு ரகு…” அவனது பெயரை மூச்சு விடாது அழைத்தாள். இருவரின் சிரிப்பு சத்தமும் காற்றினை நிறைந்திருக்க வியர்க்க விறுவிறுக்க எழுந்தமர்ந்தவள் தன்னை சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.
எங்கும் இருட்டு. ஆனால் அவர்களது கட்டிலில் இல்லாமல் வரவேற்பறையில் தலையில் இருந்தது அவள் உடல். போர்வை கழுத்து வரை இருக்க, வெயில் காலத்தின் தாக்கம் அவள் உடலை மொத்தமும் வியர்க்க செய்திருந்தது.
அப்பொழுது தான் அவளுக்கே புரிந்தது, அந்த உண்மையான கடந்த கால நிகழ்வு கணவாய் மாறி ஏகாந்த நாட்களை நினைவுபடுத்தியுள்ளதென.
கண்களை இறுக்கமாக மூடி மீண்டும் படுத்துகொண்டாள் எதை பற்றியும் யோசிக்கவே கூடாதென்ற முடிவோடு.
அதற்கடுத்து வந்த நாட்களும் இருவருக்கும் இது போலவே பட்டும் படாமலும் ஒரு மாதம் ஓடியது.
ரகு அன்று எவ்வளவு கூறியும் வீட்டில் இருந்த வேலை அனைத்தையும் அவளே செய்து முடித்துவிடுவாள். அவளை எதுவும் பேச முடியவில்லை அவனால்.
ஒரு முறை அவனே மன்னிப்பும் கேட்டான், “அன்னைக்கு காசு கேட்டது சும்மா உன்ன கிண்டல் பண்ண தான். அத நினைச்சு பீல் பண்ணாத திவ்யா. சாரி” என்று.
அவளோ அவனை பார்த்து எதுவும் பேசாமல் மீண்டும் வேலையை துவங்க அதற்கு பிறகு இருவருக்கும் இடையில் சுத்தமாக பேச்சுவார்த்தை நின்றுவிட்டது. வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் அவன் கண்ணில்படும் படி ஒரு காகிதத்தில் எழுதி வைக்க அவன் வாங்கி வந்துவிடுவான்.
மௌனமாய் சென்ற நாட்களுக்கிடையில் அன்று திவ்யா விண்ணப்பித்திருந்த ஒரு வேலைக்கு ஆன்லைனில் நேர்முக தேர்வு நடைபெற இருந்தது.
ரகுவின் மடிக்கணினியை எடுத்து அறையினுள் அமர்ந்திருந்த திவ்யா, தன்னுடைய நேரம் வந்ததும் கொடுத்திருந்த இணைப்பை பயன்படுத்தி நேர்காணல் செய்பருக்கு மதிய வணக்கத்தை கூறி தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டிருந்த பொழுதே வாயில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்ட திவ்யாவுக்கு வார்த்தைகள் உறைந்தது.
வந்தது நிச்சயம் ரகுவாக தான் இருக்குமென தெரியும். ஆனாலும் அவன் வரும் வேகம் அச்சத்தை கொடுத்தது.
“திவ்யா… வாட் ஹாட்பண்ட்?” பயத்தோடு அறை வாயிலிருந்து பார்வையை திருப்பி, “சாரி சார். ஐ அம் ஹாவிங் நாலேஜ் இன்…”
“கோத்தா டேய் காண்டு மயிரை கெளப்பாத. நீ விடுற பொய்யெல்லாம் எனக்கு தெரியாதாக்கோம். மவனே ட்ரவுசர அவுத்து ரோட்டுல…”
யாரையோ கைபேசியில் சரமாரியாக திட்டிக்கொண்டே அறையினுள் நுழைந்திருந்தவன் பேச்சை சற்றும் எதிர் பாராத திவ்யா, “ரகு நிறுத்து” என தடுத்து நிறுத்தினாள்.
ஆனால் அவனோ அவளை வழக்கம் போல் சட்டையே செய்யவில்லை.
“ஓடவிட்டுடுவேன். ஓ செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா? டேய் நீ கெளம்பி வாடா அப்போ தெரியும் நான் யாருன்னு. நீ என்ன என் ரூம்ல இருக்க வெளிய போ”
“ரகு ஐ அம் ஆன் இன்டெர்வியூ” திவ்யா குரலை உயர்த்தி அவனை முறைத்தாள்.
அப்பொழுது தான் வீட்டிலே சுடிதார் அணிந்திருந்தவளை கவனித்தான். கையில் மடிக்கணினி, காதில் காதொலிப்பான் என தொழில்முறை தேர்வுக்கு தேவையான முறையில் தன் இருந்தாள்.
“திவ்யா. வி வில் கனெக்ட் யூ லேட்டர்”
“சார் சாரி பார் தி…”
“இட்ஸ் ஓகே திவ்யா. வி வில் கால் பேக் யூ சூன்”
வற்புறுத்தி அவர்களை தடுத்து நிறுத்தவும் முடியாது பற்களை கடித்து, “அறிவில்லையா ரகு? நிறுத்துன்னு சொன்னா வேணும்னே பேசிட்டே போற?”
“இன்டெர்வியூ என்னாச்சு?” என்றான் பதட்டமாக.
“என்ன ஆனா உனக்கென்ன? அதான் உன்னால முடிஞ்சத நல்லா செஞ்சிடியே” இன்னும் கோவம் அப்படியே தான் இருந்தது.
பல விண்ணப்பங்கள் கொடுத்திருக்க ஓரிரு அழைப்புகள் வரும். அதிலும் இந்த ஒரு நிறுவனம் தான் நேர்முக தேர்வு வரை கொண்டு வந்திருந்தனர். கையில் இருந்த ஒரு வாய்ப்பும் நழுவியது போலிருந்தது.
“தெரியாம பண்ணிட்டேன் திவ்யா. நீ அவங்களுக்கு ஒரு மெயில் வேணா போட்டு பாறேன்” என்றான் உண்மையான வருத்தத்தோடு.
மடிக்கணினியை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு அவனிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் ரகு.
“இப்டியாடா ரகு சொதப்புவ?” என்ன செய்து சரி செய்யலாம் என யோசித்து பார்த்து எந்த வித தீர்வும் இல்லாமல் சோர்ந்துபோனான்.
தோழிகள், தோழர்கள் என தெரிந்த அனைவருக்கும் தன்னுடைய ரெஸ்யூம் அனுப்பி வைத்து அவர்கள் நிறுவனத்திலோ இல்லை தெரிந்த நிறுவனத்திலோ வேலை இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாள். ஆனால் அவளது நேரம் அனைத்தும் ஒரு பக்க தொடர்பாகவே இருந்தது.
எவரும் உதவ முன்வரவில்லை. அவர்களை மீண்டும் அழைத்து கேட்க திவ்யாவுக்கும் தயக்கமாக இருந்தது. வறட்சியாக திவ்யாவின் வாழ்க்கை செல்ல, அந்த பக்கம் ரகுவுக்கு மகிழ்ச்சியாக சென்றது. அலுவலகம், நண்பர்கள், பார்ட்டி என குதூகலமாக இருந்தான்.
ஆனால் வீட்டிற்கு வந்தால் அவனுடைய மகிழ்ச்சி வடிந்து, வாடியே திரிபவளை பார்க்க என்னவோ செய்யும். அன்று ஒரு நாள் ஞாயிறு இருவரும் வீட்டில் இருக்க வாயில் அழைப்பு மணி ஒலித்தது.
ரகு சென்று கதவை திறக்க, அங்கு அவனது கல்லூரி நண்பன் ஒருவன் வந்திருந்தான், உடன் தினேஷும்.
“என்னடா குமரா சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கிற? நீயாவது சொல்லிருக்க வேணாம்?” தினேஷை பார்த்து கேட்டு நண்பர்கள் இருவரையும் உள்ளே அழைத்தான்.
“ஏன்டா சொல்லிட்டு தான் வரணுமா உன் வீட்டுக்கு? சொல்லாம வந்தா கவனிக்க மாட்டியா என்ன?” என்றான் சிரிப்போடு குமரன்.
ரகு தினேஷ் இருவரின் முகமும் நொடியில் மாறியது. விவாகரத்து பற்றி இருவரை தவிர நட்பு வட்டாரத்தில் எவருக்கும் தெரியாது. இப்பொழுது கூட சொல்லிவிடலாம் ஆனால் சொல்லுமளவிற்கு குமரன் நெருங்கிய நண்பன் கிடையாது என்பதால் சொல்ல தயங்கினர் இருவரும்.
“கிட்சன்ல இருப்பா” என்றவன் எழுந்து, “நான் கூட்டிட்டு வர்றேன்” என சமையலறை சென்றான்.
குரல் கேட்டு அப்பொழுதே எட்டி பார்த்த திவ்யா வெளியில் வராமல் திட்டில் சாய்ந்து நின்றிருந்தாள். உள்ளே வந்த ரகு, “காலேஜ் மேட் வந்துருக்கான். டிவோர்ஸ் பத்தி தெரிய வேணாம்” ஏன் என கேட்க தூண்டிய மனதை அடக்கி சரி என்றாள்.
அனைவருக்கும் தேநீர் போடலாமென திரும்பியவன் அங்கு தயாராக இருந்த தேநீரை பார்த்து சிறிது பயந்து தான் போனான். இவள் செய்த தேநீரை கொடுத்தால் வந்தவன் நிலை என்னவாகும் என தோன்றினாலும் நண்பர்களுக்கும் அந்த கொடுமையை அனுபவிக்க விட்டான்.
திவ்யா முன்னே செல்ல கையில் தேநீர் தட்டை எடுத்து பின்னாலே வந்தான் ரகு.
அவனை பார்த்து சிரித்த குமரன், “டேய் காலேஜ் நாள்ல தான் அவ பின்னாடி சுத்துறனு பாத்தா இப்பயுமா?” என்றான் கேலியாக.
“அதெல்லாம் காலேஜோட முடிஞ்சது ண்ணா. இப்ப என்ன தவற மத்த எல்லா பொண்ணுங்க பின்னாடியும் போவான்” அவளது குரலில் இருந்தது கேலி என அனைவரும் நினைக்க தனது வேதனையை அந்த சிரிப்பில் மூடி புதைத்தாள் திவ்யதர்ஷினி.
“இன்னுமாடா நீ மாறல? ஏன்மா. இவன் உன்ன லவ் பண்ணப்பையும் சைட்ல மாக்ஸ் டீச்சர்க்கு லவ் லெட்டர் எழுதுனவன். தெரியாம வந்து விழுந்துட்டியே ம்மா”
“டேய் குமரா நல்லா இருக்க குடும்பத்துக்குள்ள கும்மியடிச்சிடாத” தினேஷ் பதறி அவனை திசை திருப்பினான். அவனோ சிரிப்போடு தேநீரை பருகிவிட்டு,
“முக்கியமான விஷயம் சொல்ல தான்டா வந்தேன். அடுத்த வாரம் கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு. மஹாபலிபுரம்ல ரிசார்ட்ல தான் மூணு நாள் கல்யாண செலிப்ரேஷன். பேச்சிலர் பார்ட்டி எல்லாம் இருக்கு ரூம் எல்லாம் புக் பண்ணிட்டேன்.
மறக்காம வந்துடுங்க. சண்டே தான் கல்யாணம். பசங்க எல்லாரையும் கூப்ட்ருக்கேன். ஒரு சின்ன மீட் அப் மாதிரி வச்சுக்கலாம்னு பேசுறாங்க”
எழுந்து நின்றவன், “திவ்யா நீயும் மறக்காம வந்துடு ம்மா, இந்த ஜொள்ளு வண்டிய தனியா விட்டுடாத” பத்திரிகையை இருவருக்கும் பொதுவாக கொடுத்து சில நேரம் கல்லூரி கால கதைகள் எல்லாம் பேசி சென்றான்.
மறுநாள் அலுவலகம் சென்ற ரகுவுக்கு இன்ப செய்தி காத்திருந்தது. ஆறு மாதம் அவசர வேலையாக ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு அவனுக்கும் அவனுடைய நண்பன் ஒருவனுக்கும் கிடைத்திருந்தது.
இரண்டு வாரங்கள் பிறகு செல்ல எல்லா ஏற்பாடுகளும் துவங்கிவிட்டதாக கூறியிருந்தனர். மகிழ்ச்சியில் டீம் மேட்ஸ் அனைவருக்கும் அவனுடைய விருந்து தான். உணவு இடைவேளையின் பொழுது நண்பர்களோடு இருக்க தினேஷின் அழைப்பு வந்தது.
“மச்சான் இன்னைக்கு எனக்கு ஒரே கொண்டாட்டம் தான்டா. சந்தோசமான விசியம் சொல்லணும்னு நினைச்சேன். நீயே கால் பண்ணிட்ட” என்றான் மடை திறந்த வெள்ளமாக.
நண்பனின் மகிழ்ச்சி ஆத்திரத்தை தர, அதை புறக்கணித்து, “வீட்டுல இருக்க புள்ளைய சர்வர் வேலைக்கு அனுப்பி வச்சு அப்டி என்ன கிழிக்கிற அளவு பண தேவை உனக்கு?” காட்டமாக தினேஷ் கத்தினான்.
சுற்றி நண்பர்கள் இருக்க அமைதியாக தள்ளி வந்தான், “தெளிவா பேசு டா. என்னாச்சு?”
“என்ன ஆகணும் இன்னும்? உன்ன நம்பி வந்ததுக்கு அந்த புள்ள அனுபவிக்க கூடாத எல்லாத்தையும் அனுபவிக்கித்து, இப்ப அடுத்தவன் தட்டை எடுத்து கழுவி… ச்சை பாக்கவே கஷ்டமா இருக்கு. நீ அங்க ஆடி பாடி சந்தோசமா இரு ராசா”
“அவளை எங்க பாத்த?”
“ஐ.டி பார்க் பக்கத்துல இருக்க மெட்ராஸ் ஹோட்டல்னு ஒரு ரோடு கடைல வேலை பாக்குறா. எப்படிடா அந்த பிள்ளையை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்க நீ? இப்டி எல்லாம் இருப்பனு தெரிஞ்சிருந்தா நானே உங்கள பிரிச்சு விட்ருப்பேன்” வருத்தமாக பேசி தினேஷ் இணைப்பை தூண்டிவித்துவிட செய்வதறியாமல் தவித்து நின்றான் ரகு.