“அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி வந்து நின்னியே அது உன்னோட வெற்றி இல்லடா. லட்சம் பிரச்சனை வந்தாலும் கூடையே கைய புடிச்சு நின்னு,
‘இதே மாதிரி இன்னும் நூறு வருஷம் சந்தோசமா வாழுவேன்’-னு வாழ்ந்து காட்டி நெஞ்சை நிமிர்த்தி நிக்கிறப்போ ஒரு பெருமிதம் முகத்துல வரும் பாரு அந்த நேரம் தான் நீ உண்மைலயே ஜெயிச்சதா அர்த்தம்” மகனை பார்த்து தந்தை எதார்த்தத்தை கூற, அவர் தன்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது அவனுக்கு.
“லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா போதுமா, எத்தனை நாள் சந்தோசமா வாழ்ந்துடுறனு பாக்குறேனு இளக்காரமா சிரிச்ச அந்த பொண்ணோட குடும்பத்து முன்னாடியும் இந்த ஊர் முன்னாடியும் நெஞ்ச நிமிர்த்தி வந்து நிக்க வேணாம்?
கல்யாணம் பண்ணப்போ இருந்த பிடிவாதம் இப்ப எங்கடா போச்சு? சின்ன பிள்ளை அது. சரி தப்பு தெரியலனா சொல்லி குடுக்கணும். ரெண்டு தடவ மெதுவா சொல்லி புரியல்னா அழுத்தி சொல்லணும்.
அத விட்டு டிவோர்ஸ், பிடிக்கல, அவ்ளோ தான்னு சொல்ற”
உன் மேல் மொத்தமும் அதிருப்த்தி தான் என அவ்விடத்தை விட்டு அவர் அகன்றதும் அன்னையை பார்த்தான், “ஏன் ம்மா என்ன புரிஞ்சுக்கவே மாட்டிங்களா எப்பவும்?”
“புரிஞ்சுக்காமையா ரகு உன்ன ஏத்துக்குறோம்னு கால் பண்ணி சொன்னோம்? அப்போ தலைல போட்ட பாரேன் ஒரு பெரிய குண்டா… டிவோர்ஸ்னு…
நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்ன நேரம் கூட அவ்வளவு ஷாக் எங்களுக்கு இல்ல ரகு. பிடிவாதம் பிடிச்சாவது வாழ்க்கைல ஜெயிச்சா போதும்னு நினைச்சிட்டு இருந்தோம்”
உன் செயலில் ஏமாற்றம் மட்டுமே எனக்கு என தன்னை பார்த்த அன்னையை பார்க்கவே முடியவில்லை அவனால், “ம்மா அப்டி பாக்காதீங்க, என்ன பண்றது நானும்? சந்தோசமா தான் இருந்தோம், சின்ன சின்ன பிரச்சனை பெருசா உருமாறி முகம் சுளிக்கிற அளவு வந்து நிறுத்திடுச்சு. இப்ப நானே நினைச்சாலும் அவ பின்வாங்க மாட்டா ம்மா”
“ஏன்டா இதெல்லாம் ஒரு பிரச்சனைனு பிரிய நினைக்கிறதே தப்பு, இதுல அந்த பொண்ண வேற குறை சொல்ற”
“ஒரு தடவை உன் இஸ்டப்படியே விட்டது போதும் ரகு. நீ கொஞ்ச நேரம் முன்னாடி அடுக்குனது ஏதோ உளறுனது மாதிரி இருக்கு. உண்மையான காரணம், அழுத்தமான காரணம் எனக்கு சொல்லு”
விசித்திரமாக அன்னையை பார்த்தவன், “எவ்ளோ பெரிய விசியம் சொன்னேன், ஒலறுனேன்னு சொல்றிங்க”
“பின்ன என்ன மகனே, வசதியான குடும்பம், அப்பா அம்மா அண்ணனுங்கனு உள்ளங்கைல வச்சு தாங்குன குடும்பத்துல இருந்து வந்த பொண்ணால சட்டுனு தன்னோட சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்க முடியல. அதுக்கான வயசு இல்ல, பக்குவமும் அவகிட்ட இல்ல.
இல்ல கேக்குறேன், அப்டி செலவு தான் பண்ணட்டுமே உன் பொண்டாட்டி உன்னோட காசுல உரிமையா செலவு பண்ணாம வேற யார்கிட்ட இவ்வளவு உரிமையா பண்ண முடியும்? ஆயிரம் தான் பெத்த புள்ளையா இருந்தாலும் உன்கிட்ட என்னால ஒரு காசு தாடானு தயங்காம கேக்க முடியுமா சொல்லு” மௌனமாய் அன்னையை பார்த்தான் ரகு.
“கிரிக்கெட் விளையாட விடலனு ஒரு குத்தம் சொன்னியே, மாசத்துல நாலு வாரமும் போகணும்னு பிடிவாதம் பிடிச்சா எந்த பொண்ணு சரினு சொல்லும்?”
“ஏன் சொன்னா தான் என்ன?” என்றான் சண்டைக்கு தயாராகி.
சிலிர்த்து வந்த மகனின் தலையில் கொட்டி, “திமிருடா உனக்கு. ஈஸியா அந்த பொண்ணே உன்ன தேடி வீட்டை விட்டு வந்துச்சுல… அது தான் அவ பண்ண பெரிய தப்பு. பிடிவாதமா வீட்டுல சமாதானம் படுத்தி என்ன கூட்டிட்டு போனு நின்னுருக்கணும். அப்போ தெரிஞ்சிருக்கும் அவ அருமை”
விழி உயர்த்தி அன்னையை முறைத்தான், “என்ன முறைப்பு? குடும்பத்தை விட்டு நீ தான் வேணும்னு வந்த பொண்ணு கூட சனி ஞாயிறு டைம் ஸ்பென்ட் பண்ணாம எல்லா நாளும் வெளிய தான் சுத்துவேன்னு நிக்கிறது தப்பு இல்லையா?”
“என்ன இருக்க சொல்லிட்டு…”
“தப்பு தான்”
மகனை இடைமறித்தார் கார்த்திகா, “உன் கூட பேசாம அவ ப்ரன்ட்ட பேசுறது பெரிய தப்பு தான். ஆனா பிரிய அது ஒரு காரணம் இல்ல. உன்ன திவ்யா வெளிய விடாத மாதிரி அவளோட ஃபோன நீ ஓரமா வாங்கி வச்சு உங்களுக்குனு நேரத்தை ஒதுக்கிருக்கலாமே.
ஆம்பளைங்க நீங்க வெளிய நாள் எல்லாம் சுத்திட்டு வந்துடுங்க, ஆனா வீட்டுல இருக்க பொம்பளைங்கள வெளிய கூட்டிட்டு போக மனசு வராது. கேட்டா செலவாகும்னு ஒரு கேவலமான காரணம் வச்சிருப்பிங்க”
அன்னை பேசவும் தான் திவ்யா இன்று கடற்கரையில் வைத்து பேசியது நினைவிற்கு வந்தது. அவள் கூறியது போல் திருமணம் ஆன சில மாதங்கள் வீட்டை விட்டு இருவரும் வெளியே வரவில்லை.
கூடல், தேடல் என இவருக்கான நேரமாக மட்டுமே மாறிப்போனது. அதன் பிறகு வேலையில் ரகு மூழ்கிட, கொஞ்சம் கொஞ்சமாய் தங்களுக்கான நேரமும் குறைய துவங்கியது. சண்டை, முகம் சுளித்தல், பிடிவாதம் என நாட்கள் வெறுப்பாகவும் மன அழுத்தத்தோடும் மட்டுமே நகர்ந்தது.
“சொந்த விருப்பு வெறுப்பு எல்லாம் தூக்கி எறிஞ்சா தான் ரகு குடும்பம் குடும்பமா இருக்கும். என் இஷ்டம், என் ஆசைனு ஒரேடியா பிடிவாதம் பிடிக்கிறது உறவை பலவீனம் தான் படுத்தும்”
“அதுக்குன்னு எந்நேரமும் நானே விட்டு குடுத்து போக முடியுமா ம்மா? ரெண்டு பக்கமும் சரி சமமான பாலன்ஸ் வேணும்”
“இது தான் ரகு தப்பு. பக்குவம் முதல உனக்கு வரணும். அப்றம் உன்ன பாத்தே திவ்யாவும் கால போக்குல கத்துக்காமையா போய்டுவா?”
ரகு அமைதியாக இருக்க, உள்ளே வந்த அவன் தந்தை மனைவியிடம் தேநீர் கோப்பையை ஒப்படைத்து, “நேரமாச்சு வா படுக்கலாம். பொறுமையா ஒரு நாள் உன் மருமகளையும் வச்சு பேசு” மகனுக்கு மறைமுகமாக இப்பொழுது தாங்கள் கிளம்புவதாக இல்லை என்ற செய்தியை வைத்தார் மோகன்.
“என்னது… அப்போ நீங்க கெளம்புற ஐடியால வரலையா?”
“இல்ல” என்றார் அன்னை அலட்டாமல்.
“இதெல்லாம் சரி வராது, ஒழுங்கா காலைல கெளம்பி இருங்க நானே வீட்டுல வந்து விடுறேன்” என்றவன் பேச்சு முடிந்ததாக தங்கள் அறைக்குள் செல்ல அங்கு திவ்யா தன்னுடைய உடைகளை மடித்து கொண்டிருந்தாள்.
“ப்பா நாங்க டிவோர்ஸ் பண்ண போறோம். இப்போ இதெல்லாம் பண்றது உங்களுக்கே ஓவரா தெரியல?” கார்த்திகா மகன் கையில் இருந்த போர்வை, தலையணையை வாங்கி படுக்கவே தயாரானார்.
“சும்மா பேசிட்டே இருக்காதடா. லைட் ஆப் பண்ணு” தயக்கத்தோடு அவர்களையும் அறையையும் மாறி மாறி பார்த்த ரகு மெதுவாக அறைக்குள் நுழைந்தான்.
இப்பொழுது தான் வந்து சென்ற அறை இது தானா என்ற சந்தேகம் ரகுவுக்கு. சில நொடிகள் முன்பு தான் ஒரு தூசி கூட இல்லாமல் இருந்த தரையில் அவனுடைய உடைகள் சிதறி கிடந்தது. அதற்கு காரணமானவளோ எதுவும் நடக்காதது போல் மெத்தையில் நடுநாயகமாக அமர்ந்தாள்.
“திவ்யா என்ன இது?” பார்வையை அகற்றாமல் அவளிடம் கேட்டான்.
“உன் அப்பா அம்மா வருவாங்கனு க்ளீன் பண்ணேன், இப்போ தா அவங்க ஹால்ல இருக்காங்களே நீயே உன்னோடதை எடுத்து வை” என வினவினாள்.
அவளை முறைத்து கீழே கிடந்த உடைகளை அள்ளி மூட்டையாய் சுருட்டி அதே வடிவில் அலமாரியினுள் திணித்து கதவை மூடினான்.
“ஆனாலும் உனக்கு ஏத்தம் அதிகம்டி. நீட்டா மடிச்சு வச்சத்த வேணும்னே கண்டமேனிக்கு போட்ருக்க” அவளை அவள் முதுகோடு பிடித்து தள்ளி படுக்கையின் நுனியில் விட்டு சொகுசாக படுத்துகொண்டான் ரகு.
சினம் தலைக்கு ஏற, “டேய் ராஸ்கல், போடா அங்குட்டு” கடின பாறையை பிடித்து தள்ளுவது போல் சிரமமாக இருந்தாலும் திவ்யா தன்னுடைய முயற்சியை கை விடவில்லை.
முயன்ற மட்டும் தள்ளி பார்க்க பலனோ பூஜ்யமானது. அடித்து பார்த்தாள், உதைத்து பார்த்தாள், அசருவேனா என படுத்திருக்க சோர்ந்து அவன் அருகிலே விட்டதை பார்த்து படுத்துவிட்டாள். உஷ்ணமாக மூச்சு வாங்க கிடந்தவளை பார்த்து சிரித்தவன் அவள் பக்கம் திரும்பி தலைக்கு அணைவாய் கையை முட்டுக்கொடுத்து படுத்தான்.
“ஏன் உனக்கு இப்போல்லாம் இவ்ளோ கோவம் வருது?”
எதார்த்தமாக தான் கேட்டான், அவளோ இதற்காக தான் காத்திருப்பது போல் திரும்பி அவன் டீ-ஷர்ட்டை கொத்தாக பிடித்து ஆவேசமாக இழுக்க நிலை தடுமாறி அவளுக்கு அருகில் வந்து விழுந்தவன் கைகள் தன்னிச்சையாக அவளது இடையை பிடித்துக்கொண்டது. கோவத்தில் அவளும், அதிர்ச்சியில் அவனும் அதை கவனிக்க தவறினர்.
“என்னடா சொல்லிட்டு இருந்த உன் அம்மாகிட்ட?”
கேட்டுவிட்டாளோ என விழித்தவன், “நான்.. நான் என்ன சொன்னேன்?” என்றான் தெரியாதது போல்.
“நடிக்காத. நீ பேசுன எல்லாத்தையும் கேட்டேனே. ஏன்டா என்னமோ நான் கொடுமை படுத்தின மாதிரி பேசுன, ஏன் நீ பண்ண எதையும் சொல்ல மாட்டியா?” விழிகள் செவ்வானமாய் சிவந்திருந்தது பெண்ணுக்கு.
பதில் கூறாமல் இருந்தவன், சில நொடிகள் யோசனைக்கு பிறகு, “இல்லையே சொன்னேனே…” என்றவன், “ஏய் நான் என்னடி உன்ன கொடுமை படுத்துனேன். நீ தான் மனுஷனை மூச்சு விட முடியாம திரும்புன பக்கம் எல்லாம் குத்துணியே” என்றான் கேலி சிரிப்போடு.
அவனது டீ-ஷர்டில் இறுக்கத்தை கூட்டியவள், “அப்போ நீ எனக்கு சந்தோசத்தை மட்டும் தான் குடுத்தியா? எனக்கு புடிச்சதை மட்டும் தான் செஞ்ச… நான் தான் உன்ன கொடுமை படுத்தி, சோறு தண்ணி போடாம, உன் சொத்து மொத்தத்தையும் அழிச்சு நடு தெருவுல நிக்க வச்சேன். அப்டி தான?” என்றவள் குரல் கோவதத்தை மறைத்து எள்ளலில் நிறைந்திருந்தது.