“வேற எப்படி சொன்னிங்க சார்? ஷாப்பிங் போறா, அலட்டிக்கிறா, அடங்காபிடாரி, இப்டி தான் சொல்லி வச்சிருக்க உன் அம்மாகிட்ட. என்ன நினைப்பாங்க என்ன பத்தி அவங்க?
என்னைக்குடா நீ எனக்கு கை நிறைய காசு குடுத்து செலவு பண்ணுனு சொன்ன? ரெண்டாயிரம் மூவாயிரம் குடுப்ப. அதையே ரெண்டு வாரம் நான் வச்சுக்கணும். எனக்காகனு பாக்காம எப்போ வெளிய போனாலும் உனக்காகவும் சேர்த்து தான் வாங்கிட்டு வருவேன். ஏன் அதை சொல்லல உன் அம்மாகிட்ட?
ஆக மொத்தம், நான் உன் கதைல வில்லி அப்டி தான?” என்றவள் கரம் அவன் சட்டையிலிருந்து மெல்ல தளர அப்பொழுது தான் அவன் கை அவளது இடையில் இருப்பதையே அவள் உணர்ந்தாள்.
ஏதேதோ பேசி அவனோடு சண்டையிட்டு அழுக தான் மனம் ஆசை கொண்டது. ஆனால் முடியவில்லை. மனதில் பெரிதாக பாரம் இருந்தது. தோன்றியதை எல்லாம் ஒருவரோடு பகிர்ந்து, அதற்கான தீர்வை தேட தவித்த மனதிற்கு எவரும் கண்ணில் படவில்லை.
உள்ளேயே வைத்து மருக தான் செய்தாள். சோர்வோடு அவன் கையை எடுத்துவிட்டு எழ பார்க்க, இம்முறை சுய உணர்வோடு அவள் இடையோடு பிடித்து அருகிலே நெருக்கி வைத்துக்கொண்டான்.
“அழுதியா?” என்றான் அவள் முகம் பார்த்து.
“நான் எதுக்குடா அழுக போறேன், நீயே வேணாம்னு முடிவு பண்ணியாச்சு இதுல உன் குடும்பம் என்ன எப்படி நினைச்சா எனக்கு என்ன?” என்றாள் கமறிய குரலில்.
அவள் கண்களை பார்த்து ஊடுருவியது அவன் விழிகள், “அப்றம் ஏன் கண்ணு சிவந்துருக்கு?”
“தலை வலி, தூக்கம் இல்லாததுனு எனக்கு ஆயிரம் காரணம் இருக்கும். இல்ல சரக்கு கூட அடிச்சிருப்பேன் உனக்கென்ன வந்துச்சு, போ போய் படு” அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயல அசரவில்லை ரகு.
அவள் கையை தன்னோடு பிடித்துவைத்துக்கொண்டவன், “பேசுறப்போ ஓட பாக்காத திவ்யா. நமக்கு இடைல ஆறு வருஷம் உறவு. நட்பு, காதல், கல்யாணம்னு எல்லாமே. இந்த ஆறு வருசத்துல உன் கண் எதுக்கு சிவந்துருகுணு கூடவா என்னால கண்டு பிடிக்க முடியாது? அழுத்துருக்க நீ” என்றான் பொய் கூறி மறுக்கவே கூடாதென்ற பார்வையோடு.
“இல்ல…”
“உன் கை நடுங்குது” தன் கைகளினுள் இருந்த அவள் கைகளை சுட்டிக்காட்டினான்.
“பீவர் வர்ற மாதிரி இருக்கு. அதுனால…” அவள் பேசி முடிக்கும் முன்பே அவன் கை தயங்காமல் அவள் நெற்றியை ஆராய்ந்து பின்னர் அவள் கழுத்து வளைவில் வந்து ஆராய்ந்து.
திடுக்கிட்டு அவன் முகம் பார்க்க, அவனது முகத்திலோ பார்வையிலோ சலனமே இல்லை.
“காய்ச்சல் எதுவும் இல்லையே. நெத்தில டெம்ப்பரேச்சர் நார்மலா தான் இருக்கு” மீண்டும் அவள் நெற்றி கன்னம் என்ன தொட்டு பார்த்து கையை எடுத்தான்.
திவ்யா அசையாது அவனை மிரட்சியோடு பார்த்து படுத்திருக்க, “அப்போ பொய் தான் சொல்ற. கண்டிப்பா எதையோ மறைக்கிற என்கிட்ட”
பொய் கூறி நழுவிடும் வாய்ப்பு இதுவரை திவ்யாவுக்கு கிட்டியதில்லை ரகுவிடமிருந்து. அவளது சிறு அசைவை பார்த்தே அதில் இருக்கும் செய்தியை உணர்பவனுக்கு இன்றும் பெரிதாக சிரமம் இருக்கவில்லை.
உண்மையை கூறி அவனது மனத்தினையும் வேதனைப்படுத்த விரும்பவில்லை திவ்யா. உன்னை விட்டு போக முடியாமல் தான் அழுகிறேன் என கூறினால் யோசித்து அவளுக்காக தங்கள் விவாகரத்தையும் நிறுத்திடுவான் என்று தெரிந்து பேச்சை மாற்ற முயன்றாள்.
“உன்ன டெய்லி வந்து பிக்அப், ட்ராப் பண்ற அந்த பொண்ணு யாரு ரகு?” பல நாட்களாக மனதை அரித்த கேள்வி அது.
இன்று தன்னையும் அறியாமல் ஏதேனும் பேச வேண்டும் என்றே பேசினாள். விஜியிடம் பேசியதை எல்லாம் நினைத்து பார்த்தவன் மனதில் குற்றவுணர்ச்சி ஆழமாக வேரூன்றியது.
பல நாள் விஜியோடு வாகனத்தில் ஏறி செல்லும் பொழுதும் சரி, இல்லம் திரும்பி வரும் பொழுதும் இருவரையும் கவனிக்கும் அவள் பார்வையின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணர்கிறான். திவ்யா விஜியின் எண்ணத்தை புரிந்துவைத்துளாள்.
ஏற்கனவே திருமணம் செய்ய போகிறேன், வீட்டில் அவசரப்படுத்துகிறார்கள் என விளையாட்டாக கூறியது கூட தவறாகி போனதோ என்ற வருத்தம் வேறு மலையாய் நின்று மலைக்க வைத்தது.
சிறு சிறு தவறுகள் செய்து அவளிடம் மழுப்பி அடி வாங்கி திக்கி திணறி உண்மையை உரைப்பவன், இன்று தான் அவளுக்கு தெரிந்து திடமாக பொய்யுரைக்கிறான் அதுவும் அவள் முகத்திற்கு நேராக.
“ஓ” என்றாள் விழி மூடி தூங்க தயாராகும் எண்ணத்தோடு.
நீண்ட அமைதிக்கு பிறகு, “ஆறு மாசம் முன்னாடி தான் தெரியும் விஜிய” முன்பு கேட்டதை விட மிக நெருக்கமாக இருந்தது அவன் குரல்.
கண்களை திறந்து திவ்யா பார்க்க அவளை விட்டு ஒரு அடி இடைவேளையில் தான் இருந்தான் ரகுநந்தன்.
“என்ன மாதிரியே இருப்பா திவ்யா. சிக்கனம். அவளோட குடும்பம் நல்ல வசதி ஆனாலும் பணத்தோட அருமை தெரிஞ்சு அதுக்கு தக்கன இருப்பா. என்ன மாதிரியே எல்லாரையும் நம்புவா.
நான் வேலைல ஜாயின் பண்ண புதுசுல எப்படி வேலை தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் அதே மாதிரி தான் அவளும். என்ன பாக்குற மாதிரியே இருந்தது. ஏதோ ஒரு வகைல என்னை அறியாமலே அவ கூட ரொம்ப கிளோஸ் ஆகிட்டேன்”
மனம் கேட்காமல் அவளிடம் உண்மையை ரகு வைக்க திவ்யாவால் உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்க விடாமல் போராட வேண்டி இருந்தது. இறுகிய உடலையும், உறைந்த இதயத்தின் வேதனையும் என அகமும் புறமும் நாடகமே ஆடியது. அவன் கைகளை தன்னிடமிருந்து எடுத்துவிட்டு கண்களை மூடி இடைவேளை விட்டு படுத்தாள்.
‘அவனுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறது’ திவ்யாவின் மூளை காட்டு கத்தலில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டிருக்க தலையே வெடித்துவிடும் அளவு தலை வலி தெறித்தது.
சுருங்கியிருந்த அவள் புருவமும், மெத்தை விரிப்பை பற்றியிருந்த இறுக்கமும் அவளில் ஏதோ சரியில்லை என கூற பலத்த யோசனைக்கு பிறகு அவளது கையை பற்றி பெருவிரல் கொண்டு மென்மையாக வருடினான்.
அதில் உணர்வு பெற்று சுதாரித்தவள் மூடிய கண்களோடு தன்னுடைய கையை பின்னுக்கு இழுத்து மேலும் பின்னே நகர, அதற்கு மேல் படுக்கை இல்லாமல் போக, கீழே விழப் போனவளை நொடியில் சுதாரித்து பிடித்துக்கொண்டான் ரகு, “பாத்து ம்மா” என்ற அக்கறை செய்தியோடு.
அவனுக்கு பதில் கூறாமல் கலவையான உணர்வுகளில் மூழ்கி தத்தளித்திருந்தவள், “முடியுமா ரகு நம்மளால?” கேள்வியை அவனிடம் வைத்தாள்.
“புரியல”
“நம்மள, நம்ம நினைவுகளை நம்மளால மறக்க முடியுமா?”
“முடியாதுனு நினைக்கிறியா திவ்யா?”
“எனக்கு தெரியல” தலை அசைத்தாள் உண்மையாக.
‘என்னால முடியாது’ என மனதில் தோன்றியதை சொல்லாமல் விட்டான் ரகு.
“ஆனா அது தானே நல்லது? என்ன நீயும், உன்ன நானும் வெறுத்தே வாழ்ந்துட தான ஆகணும்”
“என்ன வெறுக்க ஆரமிச்சிட்டியா ரகு?” மெல்ல போலியாக சிரித்தான்,
“நமக்குள்ள வெறுப்பு வந்ததை என்னைக்காவது உணர்த்துருக்கியா?” மௌனமாய் திவ்யா இருந்தது அவனுக்கு ஏதோ போல் ஆனது.
“ம்ம்ம் அப்போ இருக்குதுல?”
அதற்கும் வேதனையோடு சிரித்தவன், “அவ்ளோ தான் அப்போ ரொம்ப ஈஸி” என்றவன் மேலும், “என்ன சண்டை போட தான் உன்ன மாதிரி ஒரு ரவுடி பொம்பள கூட இருக்க மாட்டா”
அவன் கூறியதில் அவளுக்கும் சிரிப்பு வந்திட, “நாம வித்யாசமானவங்க தான் இல்ல? டிவோர்ஸ் பண்ண போறவங்க யாராவது இப்டி சிரிச்சிட்டு ஒரே ரூம்ல படுத்து கதை பேசுவாங்களா. நம்மள பாரு.
உன் அம்மாவை பாத்து பயப்புடுறேன், நல்ல மருமக மாதிரி வீட்டை சுத்தம் பண்றேன், ஒரே ரூம், ஒரே பெட்-னு டிவோர்ஸ்னு ஒன்னே மறந்து போன மாதிரி இருக்கு” என்றாள் தன்னையே மறந்து ஏதோ சிந்தனையில்.
“மொத்தமா மறந்துட முடியாதா?”
ஏக்கத்தோடு அவன் பேசியதை சரியாக கேட்காதவள், “என்ன ரகு?” என்றாள்.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, “நாளைக்கு அம்மாகிட்ட பேசி அவங்கள இங்க படுக்க சொல்றேன்”
“எல்லாத்தையும் மறந்துட கூடாதா ரகு” எதிர்பார்ப்பில் ஆசையாக அவளை அவன் பார்க்க அந்த பார்வைக்கும் எதிர்மறையான எண்ணத்தை உருவகப்படுத்திக்கொண்டு,
“டிவோ… டிவோர்ஸ் ஆகுற வர எந்த சண்டை இல்லாம காலேஜ் ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருந்த மாதிரி இருக்கலாமா?” திக்கி திணறி தயக்கத்தோடு அவள் கேட்க என்ன சொல்வதென தெரியாமல் தவித்தான் ரகு.
விஜியின் செயல்களில் பெரிதும் அடி பட்டாலும் அவள் அவ்வாறு கேட்டிராவிட்டால் திவ்யாவின் மேல் இருக்கும் அவனது உறுதியான நேசத்தின் ஆழம் விளங்கியது.
அவசரத்தில் முடிவெடுத்துவிட்டோமோ என்ற தவிப்பு இந்த சில மணி நேரங்களில் புரிய, அதனை அவள் நெருக்கமும் அவள் வார்த்தைகளும் தீவிரமாக்கி அவள் விருப்பத்தையும் எண்ணாமல் தன்னோடு நிறுத்தி வைக்க கூறியது.
ஆனால் அதே மனம், அவளது விருப்பத்தை பற்றிய சிந்தனையை தூண்டிவிட்டு அவன் ஆசைகளை மறுபரீசலனை செய்ய கூற அமைதியாகி போனது.
“டிவோர்ஸ் வர இல்ல, எப்பவும் நாம ஒரு நல்ல ப்ரன்ட்ஸா கண்டிப்பா இருக்கலாம்”
வார்த்தைகளுக்கு மாறாக இருவரின் பார்வையும் உடலும் செயல்படுவதையோ மனம் மற்றவர்பால் சாய்வதையும் கவனிக்க தவறினர். சாத்தியமற்றதை பற்றிய இந்த உரையாடல் பேராசையாக இருப்பினும் கேட்க, பேச, ருசித்தது.
இழக்கப்போவதை பற்றி யோசிக்காமல் இருக்கும் இந்த ராகம் போன்ற இனிய பேச்சுகளை அசைபோட்டுக்கொண்டே தன்னையும் மீறி திவ்யா உறங்கியிருக்க, விழி எடுக்காது அவளை தன்னுள் சிறை செய்தவன் மெல்ல அவளை நெருங்கி மூக்கோடு மூக்கை உரசிவிடும் நெருக்கத்தில் படுத்து பரிதவிப்பான வார்த்தைகளில்,
“கோவிந்தம்மா உன் மனசு மாற வாய்ப்பே இல்லையாடி? என்ன விட்டு இருந்துடுவியா நீ?” கலங்கிய விழிகளோடு ஏக்கமாய் கேள்வி கேட்கவன் உறக்கம் தூரம் சென்றிருந்தது.
நீண்ட நாட்கள் பிறகு தனக்கான இடத்தில் படுத்த நிம்மதியில் அசந்து திவ்யா உறங்கிப்போக, இதையே சாதகமாக பயன்படுத்தி அவளது கன்னம் படர முத்தமிட்டு கனத்த இதயத்தை சுமந்தபடியே வெகு நேரமாகி உறங்கினான் திவ்யாவின் காதல் கணவன்.
How is the chapter? Bore adikitha story? Perusa read panrapo impact ilala?
Dont worry vegama story mudichittu nxt story poidalam.