மறுநாள் காலையில் ரகு கண் விழித்த பொழுது சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்ந்தான். பல நாட்கள் பிறகு கிட்டிய அவளோடான நெருக்கம் அது.
திவ்யாவின் கைகள் ரகுவின் கழுத்தை வளைத்து பிடித்திருக்க, அவன் முகமோ அவளது கழுத்து வளைவில் புதைந்திருந்தது. அவளுக்கே உரிய பிரத்யேக கடலின் நறுமணம் அவன் நுரையீரல் எங்கும் சென்று நிரப்பி புத்துணர்ச்சியை கொடுத்தது.
இரவில் தெரியாமல் அணைத்திருப்பாள் என நினைத்தவன் மெல்ல அவளை விட்டு பிரிய மனமே இல்லாமல் விலகி வெளியில் சென்றான்.
ரகு எழுந்து சென்ற சில நொடிகளிலே உறக்கம் கலைந்தவள் விறுவிறுவென குளித்து முடித்து முடியை கொண்டையிட்டு வெளியில் வர பால்கனியில் சிரிப்பு சத்தம் நிறைந்திருந்தது.
கதவு திறக்கும் சத்தத்தில் ரகு திரும்பி பார்க்க, அவர்களை தொந்தரவு செய்யாமல் சமையல் அறை பக்கம் செல்லவிருந்தவளை, “சமைச்சாச்சு திவ்யா, நீ இங்க வா காபி குடிக்கலாம்” என அழைத்தான்.
அவனுக்கு அருகில் அவன் அன்னை மட்டும் இருக்க, அப்பொழுது தான் கையில் நான்கு காபி கப்புகளோடு வந்தார் மோகன், “வா ம்மா” என்ற அழைப்போடு.
இது தான் அவர் திவ்யாவிடம் பேசும் முதல் வார்த்தை. திருமணம் முடித்துக்கொண்டோம் என இருவரும் சென்று நின்ற பொழுது கூட மகனை மட்டுமே இருவரும் பேசினர்.
கார்த்திகா கூட, “உன் குடும்பத்தை பத்தி கூட யோசிக்கலல நீ?” என்ற கேள்வியை வைக்க, அவன் தந்தை அது கூட இல்லை, பார்வை மட்டும் தான்.
அவர் முகத்தில் அதிருப்த்தியை அன்று கண்டவள் அதன் பிறகு கூட அவரோடு பேச தயங்கினாள். இப்பொழுது அவர் வந்து மிக மிக சாதாரணமாக பேசவும் அதிர்ச்சியுற்றாள்.
‘நான் ரகுவ விட்டு போறதால தான் பேசுறாங்களோ… அதுனால தான் கோவம் போச்சோ’ என்ற கேள்வி தொற்றிக்கொண்டது.
பொடி நடையோடு அவர்களை நெருங்கியவள் தயக்கத்தோடு தனித்து நிற்க, “ச்சார் எடுக்க ஹெல்ப் பண்ணு திவ்யா” என உள்ளே அழைத்தான்.
வரவேற்பறையில் இருந்த நாற்காலியை எடுத்தவள் இடைமறித்து, “அவங்க ஒன்னும் பேயோ பிசாசோ இல்ல திவ்யா. ப்ரியா இரு. ஓகே?”
மென்மையாய் அவள் கன்னம் தட்டி ரகு செல்ல செல்பவனை அந்த நாற்காலியை வைத்தே அடிக்க தோன்றியது.
‘கருவாயா என் அப்பா வந்தா இப்டி தான் ஜாலியா நீ இருப்பியா?’ என அடித்து கேட்கவும் ஆவேசம் திவ்யாவுக்கு.
அமைதியாக அவர்களோடு அமர்ந்துகொண்டாலும் தானாக சென்று எதையும் பேசவில்லை. வலுக்கட்டாயமாக தங்களது உயரையாடலுக்குள் திவ்யாவையும் ரகு இழுத்துக்கொள்ள, தந்தை மகனுக்கு இடையே காரசார விவாதங்களும், அன்னை மகனுக்கு இடையில் பாச போரும் அழகாக நிகழ்ந்தன.
இவை அனைத்தையும் பார்த்த திவ்யாவுக்கு தன்னையே மீறி தன்னுடைய குடும்பத்து உறுப்பினர்கள் மன கண்ணில் தோன்றினர்.
உதவி என கேட்டு வீட்டின் வாயிலை மிதித்த பிறகும் வறட்டு கௌரவமும், பிடிவாதமும் தான் முக்கியமாகி போனதா? அப்படியெனில் அத்தனை ஆண்டுகள் தன் மேல் காட்டிய பாசம் எல்லாம் வேஷம் தானா? அவ்வளவு தானா இவர்கள்…
ஏன் ரகுவின் பெற்றோரை போல் இல்லை. ஏன் அவர்களை போல் இவர்களும் அனைத்தையும் மறந்து கஷ்ட நேரங்களில் துணை நிற்க கூடாது என கேள்விகள் மூளையை வண்டாய் குடைந்து பாடாய்படுத்தியது.
நேரம் ஆவதை உணர்ந்த ரகு எழ, “டேய் இன்னைக்கு டின்னர் வெளிய போறோம் வேகமா வந்துடு” என்றார் மோகன்.
தந்தை திவ்யாவை அழைக்கவில்லையே என அவர் அழைப்பை ஏற்க ரகு தயங்கி நிற்க, “நீயும் ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவ தான ம்மா?” என்றார் தாமாகவே மகனை கவனித்து.
“இல்ல இல்ல நான் எதுக்கு அங்கிள் நீங்க போய்ட்டு வாங்க” என்றாள்.
“நீ இல்லாம எப்படி ம்மா. கெளம்பி இரு. டேய் ரகு ஆபீஸ்ல இருந்து வரப்போ திவ்யாவையும் கூடிட்டே நேரா மால் வந்துடு” கணவனை தொடர்ந்து மனைவியும் கூற அவர்களிடம் மறுப்பு கூற முடியாமல் சரி என்றாள்.
காலை உணவை உண்ணும் நேரம் எல்லாம் ரகுவின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் குற்றவுணர்ச்சி மேலோங்கியது திவ்யாவுக்கு… மிகவும் ஆசுவாசமாக கிளம்புகிறான். தாங்கள் மட்டுமே இருந்த பொழுது நிற்க கூட நேரமில்லாமல் சமயலறையில் வேலை இருக்கும்.
உணவை ஒரு கைப்பிடி உண்டாலும் அதை ரசித்து உண்பவனையா இத்தனை நாட்கள் இந்த நிலையில் வைத்தோம் என்ற கலக்கம்.
உண்ட தட்டை கூட ஓரம் வைக்காத தந்தை, அண்ணன்களுக்கு இடையில் இருந்து வளர்ந்தவள் கண் முன்னே மனைவிக்கு உணவு பரிமாறி அவர் உண்டதும் அவர் தட்டையும் எடுத்து சென்று பாத்திரங்களை அடுப்படியில் சேர்ப்பதற்கு உதவும் மோகனின் செயல் அவள் கண்களுக்கு பேரழகாக இருந்தது.
ரகுவோடு அதிகம் முரண்டுபிடிக்காமல் ஒத்து வாழ்ந்திருந்தால் இந்த உறவுகளின் ரகசியத்தையும் அறிந்து ருசித்திருக்கலாமோ? பிழை செய்கிறோமோ?
தன்னை தானே கேள்வி மேல் கேள்வி கேட்டு சரியாக உண்ணாமல் வேலைக்கு சென்றுவிட்டாள். மாலை ரகுவோடு இல்லம் திரும்ப விரும்பாமல் ஐந்து மணிக்கே வீட்டிற்கு வந்திருந்தாள்.
அவ்வளவு சீக்கிரம் திவ்யாவை எதிர்பாராத கார்த்திகா, “என்னம்மா அதுக்குள்ள வந்துட்ட? ஆபீஸ்ல பெர்மிஷன் வாங்கிட்டியா?” என கேட்டார்.
“இல்ல அத்தை, நான் எப்பவும் இந்த நேரத்துல தான் வருவேன்”
அவளுக்கு வழிவிட்டு தலை சீவ சென்றவர், “பரவால்லயே திவ்யா, இப்டி பட்ட கம்பெனில இந்த ரகு பயலுக்கும் வேலை வாங்கி குடு. கொஞ்சம் பொலம்பாமையாவது இருப்பான்” சிரிப்போடு அவர் கூற, ஸ்தம்பித்து போனது திவ்யாவின் உடல்.
தன்னையே அவ்வேலை செய்ய வேண்டாம் என்பவனா அந்த வேலை செய்வான்.
“நான் ஆபீஸ்க்கு போகல அத்தை” அவளது பதிலில் புரியாமல் திரும்பினார் கார்த்திகா.
“நான் ஒரு சின்ன ஹோட்டல்ல வைய்ட்டரா ஒர்க் பண்றேன், உங்க பையனுக்கு அதெல்லாம் பிடிக்காது” சிரிப்போடு அங்கிருந்து அவள் நகர, அந்த சிரிப்பின் பின் ஒளிந்திருந்த வேதனையை படித்தவர் உள்ளம் அந்த சிறு பெண்ணுக்காக துடித்தது.
அவள் பின்னோடே சென்றவர், “என்னோட அப்பா ரிக்க்ஷா இழுத்தவர் திவ்யா. அதுக்காக என்னைக்கும் என் அம்மா வருத்தப்பட்டதில்ல, நானும் தினமும் அவர் வர்ற நேரம் அவரை ஓடி போய் கட்டிபிடிக்காம இருந்ததில்லை”
திவ்யா திரும்பி அவரை பார்த்தாள், “இப்ப வரைக்கும் என் அப்பா செஞ்ச வேலை எனக்கு கூச்சத்தை தந்தது இல்ல. மோகன் ஒரு டீ கடை வச்சிருந்தா கூட இதே அன்பு எனக்கு அவர் மேல இருந்துருக்கும். எ.சில நின்னு வேலை பாக்குறவன விட எந்த விதத்துலயும் நீ குறைஞ்சு போகல திவ்யா.
எதுக்கு இத இவ்ளோ தயக்கமா சொல்ற? நெஞ்ச நிமிர்த்தி தைரியமா பேசணும், ‘நான் ஹோட்டல்ல தான் வேலை பாக்குறேன்’னு. உன்னோட ஆசைய கடமையை நிறைவேத்த சரியான பாதைல தான் போற, தைரியமா பின்னாடி பாக்காம முன்னேறு”
தாய் நின்று கூற வேண்டிய வார்த்தைகள் தாயை போன்றவரிடமிருந்து வர, கண் கலங்கி போனது திவ்யாவுக்கு.
இரண்டே எட்டில் அவரை அடைந்தவள் அவரை கட்டிப்பிடித்து அவர் தோள் சாய்ந்து அழத் துவங்கினாள். பேச்சு சத்தம் கேட்டு அங்கு வந்த மோகன் இருவரையும் பார்த்து அமைதியாக ஒதுங்கிவிட, திவ்யாவின் முதுகை வருடி அவளை ஆசுவாசப்படுத்தினார் அந்த அன்னை.
“ஏன் என் அம்மா உங்கள மாதிரி இல்ல? ஏன் என்னோட வீட்டு மனுசங்க உங்கள மாதிரி என்ன புரிஞ்சுக்கல?” ஒரே நாளில் அதீத புரிதல் ஏற்படுமா…
பெண்ணின் மனதை இன்னொரு பெண் படித்துள்ளார் என்றெல்லாம் போலியான காரணங்களை கூறி சமாதானம் கூற முடியவில்லை.
“பட்ட படிப்பு படிச்சு, நாகரீகத்தோட சேர்த்து அறிவையும் வளத்த எங்களுக்கே உங்கள ஏத்துக்க ரெண்டு வருஷம் தேவை பட்டுச்சு. ஜாதி, அந்தஸ்து கௌரவம்னு யோசிச்சு அதுலையே ஊறி போன உன் அப்பா அம்மாக்கு உன்ன ஏத்துக்க டைம் எடுக்க தான் ம்மா செய்யும். பொறுத்துக்கோ”
“அது கெளரவம் இல்ல அத்தை, அகங்காரம். நீயா எப்படி என்ன கேக்காம முடிவெடுக்கலாம்னு அகங்காரம். அண்ணனுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. அந்த பொண்ணு அண்ணன் லவ் பண்ணவங்க.
அப்போ நான் பண்ணா தப்பு அவன் பண்ணா தப்பில்லையா? சரி அவனாவது எனக்கு சப்போர்ட் பண்ணிருக்கணும்ல. காச குடுத்து அசிங்கப்படுத்துறான். எனக்கென்ன பணமா வேணும்?
அவங்க வேணும்னு தானே த்தை போனேன். உங்க பையனும் என்கிட்ட அதிகமா சண்டை போட்டது அந்த பணத்தை வச்சு தான். அப்போ எல்லாருக்கும் நான் பணத்தாசை பிடிச்சவ மாதிரி தான தெரியிறேன்?” உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியவள் அழுகை அதிகரித்தது.
“இந்த வீட்டுல இருக்க உங்க பையன் காசு கேக்குறார். அதுக்கு தான் யாரையும் நம்பி இருக்க கூடாதுன்னு கிடைக்கிற வேலைய செய்றேன். இதுக்கும் போகாதனு நேத்து சண்டை. நான் என்ன தான் அத்தை பண்ணட்டும்?
கிட்சன், புகை தள்ளுற ரயில் இன்ஜின் மாதிரி இருக்கு. இந்த சோபா ஜெயில் மாதிரி இருக்கு. அந்த ரூம் பாதாள அறை மாதிரி மூச்சு முட்டுது. வேலைக்கு போகவானு ஒரு வருஷம் முன்னாடி கேட்டதுக்கு கொஞ்சி கெஞ்சி வேணாம்னு சொன்னவன், இன்னைக்கு சம்பாதிச்சு காசு தானு நிக்கிறான்.
பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. ஆறுதல் சொல்லவோ, அறிவுரை சொல்லவோ யாருமே இல்ல” தலையை பிடித்து கண்ணீர் சிந்தியவள் செயலில் அதிர்ச்சியுற்ற தம்பதியினர் திகைத்துப்போயினர்.
ஆறுதலாய் ஒரு வார்த்தை பேசியதற்கே மனதில் உள்ள பாதி குமுறலை வெளியிட்டவள் நிலை அவரை மேலும் மேலும் சிந்திக்க வைத்தது.
“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகியிருக்கு கார்த்திகா அந்த பொண்ணு. தூங்க சொல்லு. ரகுக்கு கால் பண்ணி நாளைக்கு வெளிய போகலாம்னு சொல்லிறேன்”
“வேணாம் மாமா” உடனே மறுப்பு தெரிவித்தாள், “நான் வெளிய வர்றேன். எனக்கு மைன்ட் ரிலாக்ஸ் ஆகணும். ப்ளீஸ்”
“ப்ளீஸ் எல்லாம் சொல்லாத ம்மா. நாம போகலாம். நீ கெளம்பி வா. நான் ரகுவை டாரக்ட்டா கோவிலுக்கு வர சொல்லிறேன்” மோகன் கூறவும் அறைக்குள் சென்று திவ்யா தயாராகி வர மூவரும் வெவ்வேறு மனநிலையோடு கோவிலுக்கு சென்றனர்.
கார்த்திகா அழைத்து சென்ற அந்த கோவிலை பார்த்ததும் திவ்யாவுக்கு இதயம் மேலும் உறைந்தது. அவர்களை தொடர்ந்து சில நொடிகளில் அங்கு வந்த ரகுவின் முகத்திலும் அசூசை தான்.
“கோவிலுக்கு வரப்போ சந்தோசமா வாடா” என்றார் அவன் தந்தை மகனின் முகம் பார்த்து.
“ஏன் உங்களுக்கு வேற கோவிலே தெரியலையா?” என்ற முறைப்போடு வாகனத்தை நிழலில் நிறுத்தி வர, அவன் கண்கள் திவ்யாவை சுற்றியே வட்டமிட்டது.
“ஏன் இந்த கோவிலுக்கு என்ன குறை. என் பொண்டாட்டிய நான் முதல் முதலா பாத்த கோவில்டா இது. அந்த சந்தோஷத்தையும், எங்க கல்யாணத்தையும் நினைச்சு பாத்து பூரிச்சு போக மறுபடியும் வந்துருக்கோம்” என்றார் மோகன் உற்சாகமாய்.
பெரியவர்கள் இருவரின் முகமும் மகிழ்ச்சி ததும்பி இருக்க, சிறியவர்கள் முகம் இரும்பாய் இறுகி இருந்தது.
பல நினைவுகளை அவ்விடம் சுமக்கவில்லை என்றாலும் முக்கியமான ஒரு நிகழ்வை கொண்டது அல்லவா இந்த திருத்தலம். இருவருக்கும் திருமணம் ஆன முருகன் ஆலயம். பல சத்தியம், மனம் நிறைந்த சிரிப்பு, பூரண திருப்த்தி என மிகவும் மகிழ்வோடு வாழ்க்கையை துவங்கிய இடம்.
கார்த்திகா மற்றும் மோகனோடு திவ்யா முன்னே நடக்க அவர்களை தொடர்ந்து மெதுவாக ரகு வந்தான். ஒவ்வொரு சந்நிதானத்தை கடக்கும் பொழுதும் அன்று கை கோர்த்து சிரிப்போடு பரிமாறிய வார்த்தைகள் காதில் ஒலித்து இம்சித்தது.
இருவரின் மனநிலையும் தங்கள் திருமண நாளுக்கே மீண்டும் மீண்டும் சென்று நின்றது. திருமணம் ஆன புதிதில் இரண்டு முறை அங்கு வந்தது.
அப்பொழுதெல்லாம் ரகுவே கூறுவான், “வருஷம் வருஷம் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல நம்ம கல்யாண நாள்ல கொழந்தை குட்டி எல்லாம் அள்ளிட்டு இங்க தான் வர்றோம் சரியா?” அவன் கூறிய வார்த்தையை அவனே மீறியிருந்தான் இரண்டு வருடமும்.
முதல் வருட திருமண நாள் அன்று அலுவலகம் சென்று தாமதமாக வந்தவன் அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு மட்டும் அவளை அழைத்து சென்றதோடு சரி.
அடுத்த வருடம், அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு, திருமண நாள் என்ற ஒன்றையே மறந்து சண்டையிட்டு அன்று இரவு இரண்டு மணிக்கு தான் ரகு வீட்டிற்கே வந்தது. அவ்வளவு தான்.
துவங்கிய வேகத்திலே எல்லாம் முடிந்தது. தண்டாயுதபாணி முன்னே வந்து கண்களை மூடி நின்றவள் கண்கள் குளம் கட்டி பரிதவித்தது.
ஈசனின் மகனிடம் வேண்ட எதுவும் இல்லை, என்ன உள்ளது அது சிறக்க செந்திலாண்டவனை வேண்டுவதற்கு? ரகுவுக்கு நெருப்பில் நிற்பது போல் கால்கள் நிலை கொள்ளவில்லை.
‘எனக்கு பொறுமை கொடுத்திருக்கலாம் அல்லவா? இல்லை அவள் பேசும் பொழுது ஊமையாகி இருக்கலாம். சண்டையிடும் பொழுது கை கட்டி வேடிக்கை பார்க்க வைத்திருக்கலாம். சினத்தை குறைத்திருக்கலாம். அதையும் மீறி கோவப்பட்டிருந்தாலும் அவளை சமாதானம் செய்ய என்னை நீயாவது தூண்டியிருக்கலாமே’ என இறைவனை தவிர யாரிடமும் சண்டைக்கு நிற்க தோன்றவில்லை.
‘இப்ப என்ன செய்றதுன்னு தெரியல, விடாம அவளை கெட்டியா பிடிச்சுக்கவா இல்ல அவ விருப்பப்படி விட்டுடவா?’ தலையை பிடித்து ஒரு தூணின் அருகே சென்று அமர்ந்துவிட்டான்.