காதலித்த பொழுது எத்தனை மகிழ்ச்சி, பரவசம் இருந்தது, அது ஏன் திருமணம் முடிந்த பிறகு காணாமல் போனது? அன்னை கூறியது போல் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் பிடித்தது தான் பிழையோ…
திருமணமே முடிக்காமல் காதலித்தே வாழ்ந்திருக்கலாமோ என்ற கேள்விக்கு உடனே அடுத்த கேள்வி வந்தது. அத்தனை வலிமை இல்லாததா உங்கள் காதல்?!! என்று.
பிழை. பிழை. பிழை. பிழையை தவிர எதுவும் தெரியவில்லை ரகுவுக்கு.
சோர்ந்து போனவன் அடுத்து எங்கும் செல்ல தோன்றாமல் அன்னையை பாராமல் தரையை பார்த்து, “நான் வீட்டுக்கு போறேன் ம்மா, தலை வலிக்கிது” என்றான்.
“புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் எப்படி சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்துல தலை வலி வருது?” என்றார் புருவம் உயர்த்தி கார்த்திகா.
திவ்யாவை பார்த்தவன், “ஏன் இன்னும் தலை வலி சரியாகலையா? டாக்டர் பாக்க போகலாமா?” என்றான் அக்கறையாக.
அவள் வேண்டாம் என்க, “நான் உங்க கூடவே வர்றேன் அத்தை”
தன்னோடு இருக்க பிடிக்காமல் தான் அன்னையோடு செல்ல துடிக்கிறாள் என நினைத்தவன் பற்களை கடித்து எவரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டான் இல்லத்திற்கு.
அவன் சென்றதும் அவளது தலை வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதன் பிறகு அருகில் இருந்த ஒரு வணிக வளாகத்திற்கு மாமனார், மாமியாரோடு சென்றவள் நாள் குதூகலமாக போனது.
அந்த பெரிய வளாகத்தை சலிக்க சலிக்க சுற்றி திரிந்தனர். அங்கு வேலை பார்ப்பவர்களை விட அவளுக்கு எந்த தளத்தில் எந்த கடை உள்ளதென கூறும் அளவிற்கு அனைத்தும் தெரிந்து போனது.
கால் வலிக்க சுற்றி திரிந்தவளுக்கு கால் வலியோடு பசியும் வர, அந்த மூத்த தம்பதியினர் அசராமல் இன்னும் சுற்ற தயாராக இருந்தனர்.
“எப்படி அத்தை?” என வியந்தேபோனாள்.
அலட்டாமல் சிரித்தவர் அங்கிருந்த ஒரு புட் கோர்ட் அழைத்து வந்து, “ரகுவ நீ கூட்டிட்டு வா, அப்போ தெரியும் ஷாப்பிங் ஓட சந்தோசம்”
அவளுக்கு பிட்ஸா ஒன்றை வாங்கி கொடுத்து தங்கள் இருவருக்கும் வழக்கமாய் வாங்கும் தோசை இரண்டை கூறவும் அவர்களை தடுத்து வகை வகையாய் உணவை வாங்கி கொடுத்தாள் திவ்யா.
இதுவரை பார்த்திராத உணவு வகைகளை ஆசையாக அதன் பெயரை கேட்டு கேட்டு உண்ண, மகிழ்ச்சியாக இரவு உணவு கழிந்தது.
மோகன் சில நொடிகளில் வருவதாக கூறி சென்றிருக்க, மருமகளை பார்த்த கார்த்திகா, “இப்ப தெம்பு வந்துடுச்சா?” என்றார் சாதாரணமாக.
“சொன்னா நம்ப மாட்டீங்க, நாக்குல ருசியான சாப்பாடு படவும் தான் உயிரே வந்த மாதிரி இருக்கு” என்றாள் பெருமூச்சோடு.
எலுமிச்சை சோடா ஒன்றை ஒரு மிடறு குடித்து வைத்தவர், “ஒரு நாளுக்கே உன்னால முடியலையே திவ்யா, தினமும் ஆபீஸ் போயிட்டு, வேலை இருக்கோ இல்லையோ, தனக்கு மேல இருக்கவன்கிட்ட ஏச்சு பேச்சு வாங்கி, களைச்சு போயி நிம்மதிய தேடி வீட்டுக்கு வர்றவனுக்கு ஒரு காபி கூட நாக்குக்கு ருசியா கிடைக்கலனா அது எவ்வளவு கோவத்தை குடுக்கும்னு நீ யோசிச்சு பாத்தியா?”
விக்கித்து அவரை பார்த்தாள் திவ்யா.
“என் பையன்னு உன்கிட்ட பேசுறேன்னு நினைக்காத ம்மா. மனுசங்க மனசு குரங்கு மாதிரி. ஆசை மனசுல நிறைஞ்சு இருந்தாலும் கோவம், பசினு வந்துட்டா தன்னையும் மீறி ஒரு மிருகம் வெளிய குதிக்கும்.
நீயும் ஆபீஸ் போயிருந்தா இந்த வார்த்தையை எல்லாம் உன்கிட்ட சொல்லிருக்கவே மாட்டேன். ஏன் நைட் சமையல் செய்யலானாலும் பரவால்ல,
ஆனா அந்த ஒரு காபி, டீயை ரகு உன்கிட்ட தினமும் எதிர்பார்த்து வந்து ஏமாந்துருப்பான். ஒரு அம்மாவா என்னால அதை ஆணித்தரமான சொல்ல முடியும்”
அவர் கூறியது போல் தினமும் இல்லம் திரும்புபவன் அவளை, ‘திவ்யா… திவி… கோவிந்தம்மா… பொண்டாட்டி’ என பல வகைகளில் கேட்டு கேட்டு நொந்து போனதை கண்ணாலே கண்டுள்ளாள்.
அதெல்லாம் அப்பொழுது சிரித்து, ‘போடா’ என கடந்தவளால் இப்பொழுது கடக்க முடியவில்லை.
“ஒருத்தரோட மனச தொடணும்னா முதல அவங்க வயித்தை நம்ம சமையல் மூலியமா நிறைக்கணும்னு சொல்லுவாங்க. நீ முதல தவறுன இடம் அதே சமையல்.
ஆம்பளைக்கு பொம்பள ஹெல்ப் பண்றதும், பொம்பளைக்கு ஆம்பள ஹெல்ப் பண்றதும் சரி தான். ஆனா அதை ஆம்பளைங்க கிட்ட இருந்து மட்டுமே எதிர்பாக்குறது தப்பில்லை? இதுவே நமக்கு நடந்தா ஒரு பட்டிமன்றமே நடத்திட மாட்டோம்?”
அழுத்தமான கேள்விகளை வைத்து வலிக்காமல் அவளை நோக்கி சிரித்தார் அந்த அன்னை.
“ரகுவுக்கு விளையாட்டுல ஆர்வம் அதிகம். ஸ்கூல் படிக்க ஆரமிச்ச காலத்துல இருந்து வருஷம் வருஷம் குறைஞ்சது ரெண்டு பிரைஸ் வாங்கிட்டு வந்துடுவான்.
அவ்ளோ பெரிய காலேஜ்ல சேர்ந்தது காரணம் கூட அந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா தான் உனக்கே தெரியும். அப்டி இருக்குறவன விளையாட விடாம உள்ளையே வச்சது கூட பரவால்ல, அவன் கூட நீயும் பேசாம இருந்துருகியே ம்மா… இது சரியா சொல்லு?”
திவ்யாவுக்கு கண்கள் கரித்தது, “பீல் பண்ணாத திவ்யா. நடந்தது நடந்து போச்சு இனி தப்ப நிறுத்திட்டு சேர்ந்து வாழலாமே”
“உங்க பையனுக்கு என்ன பிடிக்கல அத்தை” என்றவள் குரல் ஏகத்திற்கும் உடைந்திருந்தது.
ஆறுதலாய் அவள் கையை பற்றி, “அவன் சொன்னானா உங்கிட்ட?”
இல்லை என்றாள், “அவன் பண்றதுலையே தெரியிதே… பிடிக்காம தான டிவோர்ஸ்க்கு சரி சொல்லிட்டான்”
“சரி உனக்கு அவனை பிடிக்குமா?”
வைரமாய் ஒரு துளி கண்ணீர் வெளியேறியது அவள் தலையை ஆமாம் என ஆட்டிய பொழுது, “ரொம்ப… ரொம்ப… ரொம்பபப… பிடிக்கும்”
மருமகளின் பதிலில் அழகாய் சிரித்த கார்த்திகா, “அப்போ ஏன் ம்மா டிவோர்ஸ் கேட்ட?”
வாயடைத்து போனாள், இதற்கான பதிலை தான் பல நாட்கள் தன்னுள் தேடி தன்னையே திட்டிக்கொண்டிருக்கிறாளே, “ஏ… ஏதோ ஒரு கோவத்துல அவசரத்துல சொல்லிட்டேன். அதுக்காக உங்க பையன் எப்படி ஒடனே சரி போ னு சொல்லலாம்?” முணுமுணுப்பாக துவங்கியவள் இறுதியில் கோவமாக அத்தையிடம் வெடித்தாள்.
அவளை பார்த்து அவருக்கு சிரிப்பு தான் வந்தது.
“நீ கோவத்துல சொன்ன மாதிரி அவனும் சொல்லிருக்கலாமே” என்றார் மகனுக்கு பரிந்து.
“ஒடனே மகனுக்கு சப்போர்ட் பண்ணிடுங்க. ஏன் அவனுக்கு எங்க போச்சாம் அறிவு? விட முடியாதுடினு இழுத்து வைக்க வேண்டியது தான? எப்படா போவேன்னு காத்துட்டு இருந்தவன் மாதிரி சந்தோசமா இருக்கான்… புது கார் வாங்கிட்டான்..” கோவத்தில் அவளது நுனி மூக்கே சிவந்து போனது.
“அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சண்டை. எனக்கு பதில் சொல்லு. ரகுவுக்கு டிவோர்ஸ் குடுத்து நீ சந்தோசமா அவன் எண்ணமே இல்லாம இருந்துடுவியா?” அவள் அமைதியாக இருக்கவும் தானே பேசினார்,
“கண்டிப்பா மாட்ட. அவன் மனச தெரிஞ்சு புரிஞ்சு வாழ பழகு ம்மா. அவன் உன்கிட்ட பெருசு பெருசா எதையும் கேக்கல, கொஞ்சம் சுதந்திரம் கேக்குறான். அவனுக்கு புடிச்சதை செஞ்சு அவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.
அவன் போக்குல விடு. எங்க சுத்தினாலும் கடைசில உன்கிட்ட தான வருவான்… உன்ன விட்டு எங்கையும் போக மாட்டானே.. கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் காதலிச்சா போதுமா? கல்யாணத்துக்கு அப்றமும் அத விட தீவிரமா காதலிக்கனும்” தவறு இளைத்துவிட்டோமோ என்ற எண்ணம் ஆழமாய் வேரூன்ற துவங்கியது திவ்யாவுக்கு.
அவசரம், அவசரம், அனைத்திலும் அவசரம் தான். காதல் கூறியது, வீட்டினரின் ஒப்புதலுக்கு காத்திராமல் திருமணம் செய்ததிலிருந்து, இப்பொழுது விவாகரத்து வரை அனைத்தும் தன்னுடைய அவசர புத்தியால் வந்த வினை என உணர்ந்து மனத்தினுள்ளே வெதும்பினாள்.
அவளுக்கு யோசிக்க நேரம் கொடுக்கவே அந்த தம்பதி இன்னும் அந்த வளாகத்தை சுற்றி வர ஆசை கொண்டனர்.
இரு கையையும் தலைக்கு மேல் எடுத்து குடும்பிட்டு, “தெய்வங்களா உங்க ஆட்டைக்கு நான் வரல ப்பா… முடிச்சிட்டு சொல்லுங்க, கேட் கிட்ட வரேன்” என தப்பித்துவிட்டாள்.
கால் வலி ஒரு பக்கம், மற்றொரு காரணம் எந்த கடைக்கு சென்றாலும் கடையையே அலசி ஆராயும் அந்த தம்பதி, மிகவும் அரிதாக தான் பொருளை வாங்கினர், அதுவே அவளுக்கு சங்கடமாக போனது. அவர்கள் இருவரும் கண் விட்டு மறைந்த
நொடி திவ்யா முன்னாள் சட்டமாக வந்தமர்ந்தாள் விஜயலக்ஷ்மி. விஜியை பார்த்ததுமே திவ்யா அவளை அடையாளம் கண்டுகொள்ள அவளது வருகை எதனால் என தெரியாமல் அமைதிகாத்தாள்.
“நான் விஜயலக்ஷ்மி” தன்னை அறிமுகப்படுத்த திவ்யாவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
“தெரியும், ரகு தான் உங்கள பத்தி நிறையா சொல்லுவானே” என்றாள் அவளும்.
ஓ என்றதோடு திவ்யா நிறுத்திக்கொள்ள, “ரகு வரலையா?”
“இல்ல வீட்டுல இருக்கான்” என்றாள் திவ்யா.
“என்ன பத்தி ரகு சொல்லிருக்கானா உங்ககிட்ட?”
“இல்ல ஆபீஸ் விஷயத்தை பத்தி நாங்க வீட்டுல பேச மாட்டோம்” அழகாய் பதிலடி கொடுத்து ஒன்றும் நடவாதது போல் அமைதியாக இருந்தவளை பார்க்க வித்யாசமாக இருந்தது விஜிக்கு.
“ஏன் திவ்யா நீங்க மறுபடியும் வந்திங்க?”
திவ்யா புரியாமல் விழித்தாள் விஜி பேசும் தினுசில், “எங்க வந்தேன்?”
“ரகு வீட்டுக்கு?”
புருவங்கள் சுருங்க, “ஏன் உங்களுக்கு அதுல என்ன பிரச்சனை?” என கேட்டாள்.
“கொஞ்ச நாள் தான் அவன் சந்தோசமா இருந்தான். முகமே பிரகாசமா இருந்தது. எந்த கவலையும் இல்லாம…”
“ஒரு நிமிஷம் விஜயலக்ஷ்மி..” அவளை நிறுத்தி, “இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? சம்மந்தமே இல்லாம ஏன் ரகுவ பத்தி என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கீங்க?”
“அவன் என்னோட ப்ர்ன்ட், கொலீக்…”
“பொண்டாட்டியைவிட அந்த கொலீக் ஒன்னும் பெருசு இல்லங்க விஜயலக்ஷ்மி”
“உங்களுக்கு டிவோர்ஸ் ஆக போகுது மறந்துடாதீங்க. அப்போ நீங்க ரகுவுக்கு யாரோ ஒருத்தர் தான். எத்தனை நாள் இந்த பொண்டாட்டி டேக் வச்சிட்டே இருப்பிங்க?”
“அது டிவோர்ஸ் ஆனதும் பேசிக்கலாம் விஜயலக்ஷ்மி. இப்ப வர நான் ரகு வைப் தான்”
விஜி, “ஒருத்தரோட வாழ்க்கையை வெறுக்குற அளவு மாத்திட்டு எப்படி தான் இப்டி பேசுறிங்களோ தெரியல திவ்யா” ஒவ்வாமையை முகத்தை சுளித்து முறைத்தாள்.
திவ்யாவுக்கு கோவம், “அப்டி என்ன வாழ்க்கையை வெறுக்குற அளவு என்னோட ரகுவுக்கு நான் பண்ணிட்டதை நீங்க பாத்தீங்க? அப்டியே இருந்தாலும் அது எங்களுக்குள்ள பிரச்சனை. தேவையில்லாத மனுசங்க எல்லாம் வர வேணாம்”
“வர தாங்க செய்வேன். ஏன்னா அவன் பண்ண காரியம் அப்டி. இல்ல இல்ல… நீங்க பண்ண வச்ச காரியம் அது”
குழம்பி நின்றவளை பார்த்து மீண்டும் சினத்தோடு பேசினாள் விஜி, “உங்க கொடுமை தாங்காம ஒரு நாள் ஆபீஸ் அவுட்டிங் போன அன்னைக்கு ட்ரிங்க் பண்ணிட்டு கத்திய எடுத்து கைய அறுக்க போறேன்னு நிக்கிறான். இப்போ சொல்லுங்க, ஒருத்தனை சாகுற அளவு கொடுமை பண்ணி அதுவும் பத்தாம மறுபடியும் வந்து நிக்கிறிங்க. நல்லாவா இருக்கு இது?”
அஸ்டகோலமாக தன்னை பார்ப்பவள் பார்வை சிறிதும் திவ்யாவை அசைக்கவில்லை. ஆனால் எந்த நாளும் மதுவை தொட்டும் பார்க்காதவன் அதனை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளான் என தெரிந்த பிறகு எந்த மாதிரியான உணர்வில் திவ்யா தவித்தாள் என சொல்ல முடியவில்லை.
தற்கொலை எத்தனை பெரிய செயல்… என்னால் என்னவன் அந்த எல்லை வரை சென்றானா? அந்த அளவிற்கா அவனை கொடுமை செய்துவிட்டேன்? அதை என்னிடம் நேரடியாகவே கூறியிருக்கலாமே திருத்தியிருப்பேனே…
“திவ்யா” அவள் தோள் பிடித்து உலுக்கிய விஜி, “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” என்று அவ்விடத்தை விட்டு அகல, உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்த திவ்யாவை மீட்டெடுத்தது கார்த்திகாவும், மோகனும் தான்.
இரவு வீட்டிற்கு திரும்பும் பயணம் மௌனத்தில் கழிய, அவள் சிந்தனையை கலைக்க விரும்பாது அவள் போக்கில் விட்டார் கார்த்திகா. ஆனால் அவள் சிந்தனையில் எல்லாம் தேவையற்ற எண்ணங்கள் மட்டுமே விளையாண்டது.
அங்கு இல்லத்தில் தொலைக்காட்சியை வெறித்து அமர்ந்திருந்த ரகுவின் எண்ணங்களிலும், அவளுக்கு பிடிக்கவில்லை, அப்படியெனில் விவாகரத்து தான் ஒரே வழியா என்ற தவிப்பில் வேதனையை அனுபவித்து காதலை உள்ளேயே வைத்து பூட்டி விட்டான் ரகுநந்தன்.
Story innum 3 updates la over agidum
So How is the update?