ரகு பரபரப்பாக இல்லத்தை புரட்டி போட்டுக்கொண்டிருந்தான். இதை எல்லாம் அமைதியாக மோகனும் திவ்யாவும் பார்வையிட, மகனின் பரபரப்பிற்கு இணையாக தானும் பரபரப்பில் இருந்தார் கார்த்திகா.
“பாரு பாத்துட்டே தான் இருக்கா, ஆனா ஒரு ஹெல்ப் பண்ணல” மருமகளை முறைத்து மகனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தார்.
அவருக்கு அவள் மேல் கோவம். எத்தனை எடுத்துக்கூறி மகனோடு பேச கூறினார், அவளோ அவன் பக்கமே அடுத்து வந்த மூன்று நாட்களில் திரும்பவில்லை.
அவளது காரணம் அவரை சென்றடையவில்லை. சென்றடையும் மார்க்கத்தையும் திவ்யா நாடவில்லை. தனக்கே அவன் செயல் உயிரை வதைக்கிறதே, இதை பெற்ற தாய் தந்தையிடம் கூறி அவர்களையும் வாட்டுவதா என்ற எண்ணம் தான்.
அதே போல் தான் அவனும், மனதில் இருந்த குழப்பம், கேள்வி, கவலைகளை எல்லாம் கண் முன்னே வைத்து அவளை மொத்தமாய் தவிர்த்தான். அலுவலகம் செல்வதும், வந்ததும் அன்னை தந்தையோடு நேரம் செலவழிப்பதும் என இருந்தான்.
திவ்யா இரவு அவனோடு அறையில் உறங்காமல் அத்தைக்கு அருகில் இடித்து படுத்துகொண்டாள். கார்த்திகா உள்ளே செல்ல கூறியும் அடங்காது இருக்க, வேறு வழி இல்லாமல் விட்டுவிட்டார்.
அவளது செயலை பார்த்த ரகுவுக்கும் அத்தனை கோவம். ‘போடி போ’ என தூங்கா இரவை கழித்தான்.
“ம்மா நீங்க ஹெல்ப் பண்றதா இருந்தா பண்ணுங்க இல்லையா நானே பாத்துக்குறேன். சும்மா யாரையும் கூப்புடாதிங்க” என்றான் அவளை முறைத்து.
அவனை பார்க்க பார்க்க அவன் செயல் தான் நினைவில் வந்து இம்சித்தது, அனைத்தும் வெறுத்தது போல் வெறுமை சூழ்ந்தது மனதில்.
“தேவை தான்டா, கல்யாணம் ஆகியும் உனக்கு உன் பொண்டாட்டி சேவகம் பண்ணாம நான் பண்ணனும்னு தலையெழுத்து” நொடித்துக்கொண்டு உதவினார்.
நல்லவேளை அவர் பேசியது திவ்யாவுக்கு கேட்கவில்லை. அரக்க பறக்க ரகு தயாராவது அவன் கல்லூரி தோழன் குமாரின் திருமணத்திற்கு தான். திருமணத்தோடு இணைந்து அந்த விழாவை ஒரு சிறிய சந்திப்பாகவும் மாற்றிட அவன் கல்லூரி நண்பர்கள் முடிவெடுத்திருக்க உற்சாகமாக கிளம்புகிறான்.
“எதுக்குடா கோட் எல்லாம்?”
“ம்மா அழகா தெரிய வேணாம்? புதுசு புதுசா பொண்ணுங்கள பாப்பேன் ம்மா” என்றான் ரகு உல்லாசமாக.
“உன் பொண்டாட்டி இருக்கா” முணுமுணுத்தார் கார்த்திகா.
“இருந்தா என்னவாம்… அதான் அவளே போக போறாளே”
திவ்யா காதில் கேட்கவே பேசினான் கோவமாக, “அப்போ நான் யாரை பாத்தா அவளுக்கு என்ன. சும்மா என் பொண்டாட்டி என் பொண்டாட்டின்னு பேசாதீங்க” அன்னையிடம் காய்ந்தான்.
“ரகு தப்புடா” தந்தையின் குரல் கண்டித்தது மருமகளின் அமைதி நிலையை பார்த்து.
“இவர் ஒருத்தர்… தர்மர் மாதிரி நியாயம் பேச வந்துட்டார்” அன்னையிடம் புலம்பினான்.
சரியாக அழைப்பு மணி அடிக்க தினேஷ் உரிமையாக வீட்டினுள் நுழைந்து பெரியவர்கள் இருவரையும் நலம் விசாரித்து, திவ்யாவை பார்த்து “என்னமா நீ துணி எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்றான் புரியாமல்.
“டேய்” ரகு நண்பனை முறைத்தான் பேசாதே என்று.
நண்பனின் செய்தி அறியாத தினேஷ், “என்னடா மச்சான், திவ்யா கெளம்பு ம்மா, பசங்க எல்லாம் போன் மேல போன் பண்ணிட்டே இருக்காங்க”
“திவ்யாவையுமா இன்வைட் பண்ணிருந்தாங்க தினேஷ்?” மகனை முறைத்து தினேஷிடம் கேட்டார் மோகன்.
“ஆமா ப்பா, இவன் டிவோர்ஸ் வாங்க போற விசியம் அங்க யாருக்கும் தெரியாதுல அதான் திவ்யாவையும் அவன் வர சொன்னான். இவங்களுக்கு ரூம் கூட அலாட் பண்ணியாச்சு”
“நான் வரல ண்ணா” என்றது திவ்யாவின் மெல்லிய குரல்.
அவளை பார்த்து ரகு முறைக்க, “ஏன் ம்மா நீ வருவன்னு பொண்ணுங்க எல்லாம் ஆசையா இருக்காங்க” ரகுவின் பெண் தோழிகளோடு திவ்யாவின் நெருக்கத்தை உணர்ந்து பேசினான்.
“ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்க” என்றாள் நொடிப்பாக.
ரகு அவளை முறைத்தபடியே இளகாமல் நிற்க, கார்த்திகாவிடம், “எப்படியாவது அவளை ஒத்துக்க வச்சிடுங்க ம்மா. இத விட நல்ல சந்தர்ப்பம் இனி கெடைக்காது. அடுத்த வாரம் டிவோர்ஸ் பர்ஸ்ட் ஹியரிங் இருக்கு அவங்களுக்கு” என்றவன் நண்பன் கை பிடித்து அறைக்குள் இழுத்து சென்றான்.
அறை கதவை அடைத்த பிறகு தினேஷ் கையை உதறிய ரகு அவன் சட்டையை பிடித்து, “ஏன்டா ஒரு மனுஷனை நிம்மதியா ரெண்டு நாள் இருக்க விட மாட்டிங்களா? மூடிட்டு கீழயே நிக்க வேண்டியது தான?” என்றான் சீற்றமாக.
“ஆமா அந்த பொண்ணு வந்தா இவர் நிம்மதி கேட்டு போகுது. சும்மா ஊளையிட்டுட்டு இருக்காத. இந்த மாதிரி பண்ணுவனு தெரிஞ்சு தான் மேல வந்தது. திவ்யா வரலைனா ஆயிரம் கேள்வி கேப்பாங்க பசங்க.
நான் பொய் சொல்லி உன்ன காப்பாத்த எல்லாம் மாட்டேன். உண்மைய சொல்லிட்டு ஓரம் நின்னுடுவேன் அப்றம் நீ தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லி, எல்லாரும் ஆறுதல் சொல்றத கேக்கணும்” பற்களை கடித்து தாடை இறுக கோவமாக நின்றான் ரகு.
“அதுக்கெல்லாம் சரின்னா தாராளமா விட்டு வா” என்றவன் வெளியேறியிருக்க தினேஷின் அதே வார்த்தைகளை கூறி தான் கார்த்திகாவும் சமாதானம் செய்திருந்தார் திவ்யாவை.
அரை மனதாய் வருவதற்கு சரி என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் தேவையானவை அனைத்தையும் எடுத்து கிளம்பியிருந்தாள்.
“நாங்களும் கெளம்புறோம் ரகு. இன்னொரு வீட்டு சாவி எடுத்துக்கோ” என்றார் கார்த்திகா.
எதுவும் பேசாமல் அமைதியாக செல்லும் திவ்யாவிடமிருந்து பார்வையை அகற்றாமல் அவள் சென்ற பிறகு அன்னையை பார்த்து முறைப்போடு சாவியை தேடினான்.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா அந்த கோவத்தை எல்லாம் நம்ம மேல தான் இறக்குவானுங்க இந்த பசங்க” என நொடித்துக்கொண்டு சமையலறை சென்றுவிட்டார் கார்த்திகா.
திவ்யா, மோகன் கார்த்திகாவிடம் கூறி முன்னமே கீழே இறங்கியிருக்க வாகனத்தை எதிர்பார்த்து வந்தவள் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.
சில நொடிகளில் ரகு, தினேஷ் வர ரகு தன்னுடைய வாகனத்தை எடுத்து வந்து நிறுத்தினான். அதில் ஏற அதிக தயக்கம் இருந்தாலும் வழி இல்லாமல் மௌனமாய் பின்னால் ஏறி அமர, அந்த பயணம் அவளுக்கு மௌனமாகவும் ரகுவுக்கு அதிகப்படியான கோவத்தோடும் நகர்ந்தது.
மஹாபலிபுரம் அடைந்ததும் நண்பன் குறிப்பிட்டிருந்த ரிஸார்ட்டை தேடி சென்றடையவே ஏழு மணிக்கு மேல் ஆகியது.
அங்கு இறங்கியது தான் தாமதம் திவ்யாவை ஒரு கூட்டம் இழுத்துச்செல்ல, ரகு தினேஷ் மற்ற நண்பர்களோடு ஐக்கியமாகிவிட்டனர். கூச்சல், கலாட்டா, ஆர்ப்பரிப்பு என பல உணர்வுகளுக்கும் இருவரும் சிக்கி தவிக்க இருவரது மனக்கசப்பு இருந்த இடம் தெரியாமல் போனது.
அனைவரும் ஒன்றாய் கூடி இரவு உணவு கேலி பேச்சுகள் என அழகாய் கழிந்தது. மணி நள்ளிரவை தாண்டியதையும் எவரும் கருத்தில் ஏற்றாமல் பழைய கால நினைவுகளை மீண்டும் கட்டவிழ்க்க நேரத்திற்கு பஞ்சமானது.
இரவு இரண்டு மணிக்கு மேல் ஆன பிறகு தான் ஒவ்வொருவராக கிளம்ப, இறுதியில் மிஞ்சியிருந்தது அவர்கள் மூவரும் தான். ரகு கையில் ஒரு சாவி மட்டுமே இருந்தது.
காரணமே இல்லாமல் நண்பன் தினேஷை பார்த்து முறைக்க, “அப்டி பாத்தா இன்னொரு ரூம் சாவி தானா என் கைல வந்து ஒட்டிக்குமா?”
“ரூம் மாத்தி விடு” என்றான் புரியாமல்.
“வெண்ண, எப்படி மாத்தி விட? அவன் அவன் புது பொண்டாட்டி, புது புருஷன்னு வந்துருக்கான். எவனும் உனக்காக தியாகி பட்டம் வாங்கிட்டு நிக்க மாட்டான்”
“சரி அப்போ நான் உன் ரூம்க்கு வர்றேன்”
“என் ரூம்ல ஏற்கனவே அஞ்சுபேர் இருக்கோம். நீ வந்தா வாசல்ல தான் படுக்க முடியும் பரவல்லையா?”
பொறுத்து பொறுத்து பார்த்த திவ்யா, வேகமாக ரகு கையிலிருந்த சாவியை பிடுங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறு குடிலுக்கு செல்ல அவளை தீயாய் முறைத்தவன், “பாரு திமிரு. ஒடம்பு மொத்தமும் கொழுப்பும் திமிரும் தான் அடைச்சு கெடக்குது”
“உன்கூட பழகுன இத்தனை வருசத்துல அந்த பொண்ணுக்கு இது கூட வரலைனா எப்படி?”
அதற்கும் நண்பனை பார்த்து சிரித்த தினேஷ் தன்னுடைய பையை எடுத்து வேறு பக்கம் நடக்க, மணலில் ட்ராலியை இழுக்க சிரமப்பட்டு நடக்கும் திவ்யாவை நெருங்கி அதை பிடுங்கி அவளை விட வேகமாக முன்னேறினான்.
அந்த ரிசார்ட் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய குடில்களை கொண்டது. தங்களுக்கென ஒதுங்கியிருந்த குடிலை அடைந்தவன் கதவை திறந்து உள்ளே செல்ல நடுவில் பஞ்சு மெத்தையும் அதன் வலது பக்கம் இருவர் அமரும் சோபா, மற்றொரு பக்கம் குளியலறை இருந்தது.
வாசலில் நின்று அவ்விடத்தை ஆராய்ந்தவனை தள்ளிவிட்டு திவ்யா உள்ளே நகர தடம் தடுமாறி பின்னர் சுதாரித்து அவளை முறைத்தான்.
“திமிருடி உனக்கு” என்றான் வேகமாக.
அவளோ அவன் கையில் இருந்த பையை பிடிங்கி இரவு உடையை எடுத்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். அவள் வரும் முன்பு தானும் உடை மாற்றி சோர்வாய் மெத்தையில் படுக்க உறக்கம் வரவில்லை.
திவ்யாவும் தயக்கம் இல்லாமல் இருவருக்கும் இடைவெளி விட்டு படுத்தாள். நண்பர்களோடு இருந்த தூக்கம், இப்பொழுது தனிமையில் இருக்கும் பொழுது இல்லை.
திவ்யா பக்கம் அசைவு தெரிய அவளை நோக்கி திரும்பி படுத்தவன் அவளிடம் பேச வாயை திறப்பதும் பின்னர் தயங்குவதுமாய் இருக்க, “எதுவும் சொன்னியா?” கேட்டாள் அவன் பக்கம் திரும்பி.
“என்ன எதுவும் பேச மாட்டிக்கிற?” என்றான் பொறுக்க முடியாமல்.
“என்ன பேசணும் உங்கிட்ட?” என்றாள் அவளும்.
“ஏன் பேச கூடாது? அன்னைக்கு ப்ரன்ட்ஸா இருக்கலாம்னு பேசுனோம்ல. அதுபடி நடந்துக்குறது தான நாணயமான பேச்சு?”
“நீ உன்னோட எல்லா ப்ரன்ட்ஸ் கூடயும் தினமும் காண்டாக்ட்ல தான் இருக்கியா ரகு?” இல்லை என தலை ஆட்டினான்.
“அதே மாதிரி இதையும் நினைச்சுக்கோ” என்றாள் தன்னை இது எதுவும் பாதிக்காதது போல்.
அவனுக்கு தான் சுர்ரென கோவம் வந்தது, “அப்டிலாம் முடியாதுடி. பேசுறேன்னு சொன்னவ அடுத்த நாளே அது என்ன மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்குற பழக்கம்?”
“உங்கிட்ட பேச புடிக்கலனு அர்த்தம்” என்றாள் மெதுவாக.
“ம்ம்ம் பிடிக்காது பிடிக்காது. எப்டி பிடிக்கும் அதான் இப்போலாம் மனுசனா கூட மதிக்கிறதே இல்லையே அதுலையே நானும் தெரிஞ்சிருக்கும். சும்மா நாய் மாதிரி உன்பின்னாடியே சுத்துறேன் பாரு என்ன சொல்லணும்”
“சொல்லிக்கோடா நல்லா சொல்லிக்கோ. உன் வாயில என்ன என்ன வருதோ அதை சொல்லிக்கோ” திரும்பி படுத்தவள், “ப்ராடு. என் பின்னாடி சுத்துனானாம்ல வாய திறந்தாலே பொய் தான்” என திட்டவும் மறக்கவில்லை.
அவளை பிடித்து வேகமாக திருப்பியவன், “ஏன் உன் பின்னாடி நான் சுத்தவே இல்லையா?”
“சுத்துன. அதை விட அதிகமா மத்த பொண்ணுங்க பின்னாடி சுத்துன சுத்திட்டும் இருக்க”
“யார் பின்னாடி சுத்துனத நீ பாத்த?”
“உங்கிட்ட பேசுற நிலமைல நான் இல்ல. ஒழுங்கா படுத்து தூங்கு இல்லையா தூக்கி வெளிய போட்டுடுவேன்” என்றவள் அவனை சிறிதும் மதிக்காமல் உறக்கத்தின் பிடியில் விழுந்தாள்.
மறுநாள் காலை உல்லாசமாகவே துவங்கியது. உறக்கத்தில் ஆழ்ந்திருந்த இருவரையும் கதவினை தட்டும் ஒலி அடித்து எழுப்ப வெளியில் நின்றிருந்தனர் நண்பர்கள்.
“காதல் பறவைகளா நைட் ரொம்ப வேலையோ?” என்ற கிண்டல் பேச்சு வர முகம் கருத்த திவ்யா உள்ளே சென்று பதுங்கிக்கொண்டாள்.
“ஏண்டா?” இயலாமையில் மொத்த கூட்டத்தையும் இழுத்து காலை உணவிற்கு தயாரானான் ரகு.
அந்த ரெசார்ட்டின் பெரிய உணவகத்தில் அனைவரும் குழுமியிருக்க அவ்விடமே அவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தயக்கம் நிறைந்த விழிகளோடு அவ்விடம் வந்த திவ்யா பெண்களோடு அமர்ந்துகொள்ள,
“நீ ஏன் ம்மா இங்க வர்ற, உன் புருஷனை பாரு எங்களை முறைக்கிறான்” என்றாள் ஒருத்தி கிண்டலாய்.
“இல்ல க்கா நான் இங்கையே இருக்கேன்” ரகுவை பார்க்காமல் அந்த பெண்ணுக்கு பதில் கொடுத்தாள் திவ்யா.
“எதுக்கு காதல் ஜோடிகளை பிரிச்ச பாவம் எங்களுக்கு… நீ அவன் பக்கத்துலயே போ. டேய் தினேஷு நீ இப்டி வா” வம்படியாக இருவரின் இடத்தையும் மாற்றிவிட்டு தான் அடங்கினர்.
“பாரு இப்ப தான் என் மாப்பிள்ளைக்கு முகம் பிரகாசமா மாறிருக்கு” என்ற தினேஷை பார்வையாலே எரித்து,
“டேய் அடங்கு டா” என்றான் ரகு.
“ஏன் ரகு பொண்டாட்டி கொடுமையை இந்நேரம் நீயும் அனுபவிக்க ஆரமிச்சிருப்பியே” என்றான் ரகுவை போல் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒருவன்.
கேள்வி கேட்ட கணவனை அவன் மனைவி தலையில் அடித்து, “உன்ன மாதிரி பேருக்கா லவ் பண்ணாங்க அவங்க? ஆசையா அனுபவிச்சு உருகி லவ் பண்ணாங்கடா” என்றாள்.
திவ்யா ரகு இருவருக்கும் அவ்விடத்தில் அமர்த்திருப்பதற்கே சங்கடமாக இருந்தது. பழைய நினைவுகளில் மூழ்கினால் தங்களுக்கு தானே பிரிந்து செல்லும் பொழுது மேலும் துன்பத்தை கொடுக்கும்!