“ஹ ஹா… சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!” என்று சகு குறும்பாய் சிரிக்க,
“போடி! ஒரு நிமிஷம் என் மூச்சே நின்னு போச்சு!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பார்வதி.
நாட்கள் நகர்ந்து, ரஞ்சுவின் கல்லூரி பேஃர்வெல் டேவும் வந்துவிட்டது. அவன் காதலுக்கு அவளிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போனது. ரஞ்சனும் அவன் காதலை விட்டுக் கொடுப்பதாக இல்லை!
சில நாட்களுக்குப் பின் ரஞ்சன் வேறு கல்லூரியில் சேர்ந்து தனது எம்.பி.ஏ படிப்பைத் தொடர ஆரம்பித்துவிட,
முதலில் அவன் தொல்லை விட்டது என்று நினைத்த பார்வதி, நாட்கள் செல்லச் செல்ல ஏதோ ஓர் தவிப்பை உணர்ந்தாள்.
அதன் தொடர்ச்சியாக இரண்டு வாரம் கழித்து எப்போதும் அவள் செல்லும் கோவிலின் அருகே அன்று எதிர்பாராமல் ரஞ்சனைக் கண்டதும், அவளையும் மீறி ஓர் உற்சாகம்! இதழோரம் சிறு மென்னகை! அவளுக்கே அது ஆச்சர்யம்! ‘அட இவனைப் பார்த்ததும் நம்ம மனசு ஏன் இவ்ளோ சந்தோஷப் படுது!’ என்று எண்ணி வியந்தவளுக்கு, தானும் அவனை நினைக்கத் துவங்கிவிட்டோம் என்பது புரியவில்லை!
ஆனால் வீடு திரும்பியதும் தன் தமக்கையின் முகத்தில் ஒளிர்ந்த சந்தோஷத்தைப் பார்த்த சகுந்தலாவுக்கு அவள் மனம் முழுதாகப் புரிந்துவிட்டது.
“ஆல் தி பெஸ்ட்!” என்று சகு கைகொடுக்க,
“எதுக்கு?!” என்றாள் பாரு புரியாமல்.
“நீயும் அவங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட க்கா…!” என்றாள் கண்ணடித்து.
“ம்!” என்று நாணியவள், “ஆனா எனக்கு அப்பாவை நினைச்சா ரொம்ப பயமாயிருக்குடி… நிச்சயமா அவர் அவங்களைக் கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மாட்டாரு!” என்றாள் கலக்கத்துடன்.
“உன் மனசு என்ன சொல்லுதோ அதை செய் க்கா.. காலம் முழுக்க அவரோடு வாழப் போறது நீ! உனக்கு பிடிச்சிருந்தா.. சம்மதம் சொல்லு..!” என்று தங்கை சொல்ல,
“ம் பார்க்கலாம்!” என்றவளுக்கு அவனிடம் காதலை ஒப்புக் கொள்ள மட்டும் தைரியம் வரவில்லை.
அன்று மகரசங்கராந்தியை முன்னிட்டு, கோவில் வீதியில் பாட்டுக் கச்சேரி, நடனம், என்று ஒரே அமர்க்களமாக இருந்தது. அன்று வெள்ளிக்கிழமையும் ஆதலால், எப்போதும் போல் பார்வதியும், சகுந்தலாவும் கோவிலுக்கு வந்திருந்ததனர்.
கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வந்த பின், “அக்கா…. கொஞ்ச நேரம் இருந்து பாட்டுக் கச்சேரி கேட்டுட்டுப் போலாமா?!” என்றாள் சகு.
“ம்ஹும் அதெல்லாம் வேண்டாம்! நேரமாகிடும் அம்மா திட்டுவாங்க!” என்று பெரியவள் மறுக்க,
“போக்கா… நீ சுத்த போர்! நான் போறேன்!” என்று பாட்டுக் கச்சேரி நடக்கும் இடத்திற்கு அவள் சென்றுவிட, அவளைத் தொடர்ந்த பார்வதியை,
“பாரு….!” என்ற ரஞ்சனின் அழைப்புக் கட்டிப் போட்டது.
இப்போது அவளுக்கு அவனிடம் பயம் குறைந்திருந்தது, ஆனாலும் முற்றிலும் அல்ல! அதனால் பதிலேதுமின்றி நின்றிருந்தாள்.
அவன் மறுபடியும் “பாரு…” என்று அழைக்க,
“ம்!” என்றாள் அவளுக்கே கேட்காத வண்ணம்.
“நான் உன்கிட்ட என் காதலைச் சொல்லி ஆறு மாசம் ஆகுது! நீ இன்னும் எனக்கு எந்த பதிலும் சொல்லல…!” என்றான் கைகளைக் கட்டிக் கொண்டு.
“நான் போகணும் எனக்கு நேரமாகுது!” என்று அவள் சொல்ல,
“தாராளமா போகலாம்! ஆனா பதில் சொல்லிட்டு போ…!” என்று அவன் சொல்ல,
“ப்ளீஸ் வழி விடுங்க..!” என்றாள் கெஞ்சலாக.
“இப்ப நீ பதில் சொல்லலைன்னா…. நான் உன்னை விட மாட்டேன்!” என்று அவன் அடமாக நிற்க, அவள் எதிரே தன் உறவுக்கரப் பெண் ஒருவரைப் பார்த்துவிட்டதைப் போல், யாரோ ஒரு பெண்ணை பார்த்து,
“திதி…!” என்று பார்வதி அழைக்க, அக்கணம் அவன் திரும்பிப் பார்க்க, அந்நொடியில் அவனிடமிருந்து தப்பி தன் தங்கையை நோக்கி ஓடினாள்.
பாரு தன் தங்கையை நெருங்கி, “வாடி வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்க,
அந்நேரத்திற்குள் மேடையில் ஏறிய ரஞ்சன், அங்கிருந்தவர்களிடம் அனுமதி பெற்று, அப்பாடலைப் பாடத் துவங்கினான்.
“பாரு…. ஓ… பாரு…
பாரு… ஓ… பாரு…
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி!
உனைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி!
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி!
உனைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி!
உன்னாலதான் மனம் பித்தானது!
கண்ணீருதான் என் சொத்தானது! {தேவதாசும்}
மதி மயக்கும் ஓவியமே கைப்பிடிப்பாயோ!
உன்னாலே ஏங்கினேன்! உள்மூச்சு வாங்கினேன்!
பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே..
உன்னோடு வாழணும் இல்லாட்டி சாகணும்!
அருகினில் வரணும், மனசையும் தரணும்
அழகிய கிளியே திருவடி சரணம்…
உருகாம உருகி நான் ஓடா தேயுறேன்!
பாரு… ஓ! பாரு… பாரு… ஓ… பாரு..! {தேவதாசும் }”
“அக்கா செம வாய்ஸ்ல… கல்யாணத்துக்கு அப்புறம் மாமாவை அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்டுகிட்டே இருக்கலாம்!” என்று சின்னவள் சொல்ல,
“ஏய்! அவரு ஏன் என் பெயர் சொல்லிப் பாடுறாரு…?! அந்த சாங்ல வேற பேர்தானே வரும்?!” என்று பார்வதி பெரிதாய் சந்தேகம் கேட்க,
“அவன் ல இருந்து அவருக்கு மாறிட்டியே…?!” என்றாள் கண்சிமிட்டி.
“சீ போடி!” என்றவள், மியுசிக் முடிந்து மறுபடியும் அவன் பாடத் துவங்கியதும், அதில் கவனம் செலுத்தலானாள்.
“தேவதாசப் போல நானும் பாட வேணுமா?!
உலகே மாயந்தான் வாழ்வே மாய்ந்தான்!
உன்னை நீங்கி நானும் உயிர் வாழ முடியுமா?!
அடியே பார்வதி… எனக்கு யார் கதி..?!
துடிக்குது காதல்! படிக்குது பாடல்!
விரும்பியும் ஏன்டி உனக்கிந்த ஊடல்?!
விடமாட்டேன் பெண்ணே நீ வந்தே தீரணும்…!
{பாரு… ஓ.. பாரு… பாரு.. ஓ பாரு… தேவதாசும்…”}
அவன் பாடி முடிக்கும் நேரம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “அச்சோ! ரொம்ப லேட் ஆகிடுச்சு! வாடி போகலாம் என்று தங்கையை இழுத்துக் கொண்டு செல்ல,
பாடி முடித்தவுடன் அவனுக்கு எழும்பிய கரகோஷத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்று தன் காதலியை நோக்கி மூச்சிரைக்க ஓடி வந்தான்.
“பாரு… பாரூ…!” என்று அவன் கத்திக் கொண்டே பின் தொடர,
“அச்சோ இவர் வேற வறாரே?!” என்று பதறியவள், வேக நடையிட்டு சென்றதோடல்லாமல், தங்கையையும், “சீக்கிரம் வாடி…!” என்று துரிதப் படுத்தினாள்.
ஆனால் ரஞ்சன் ஒன்று நினைத்தால் அதைச் செய்யாமல் விட்டுவிடுவானா என்ன? மிக வேகமாக அவளை நெருங்கி அவள் முன்னே வந்து தரிசனம் கொடுத்தவன், மூச்சிரைக்க,
“பாரு… ஷ்! ம்! அடுத்த வெள்ளிக்கிழமை ஷ்! என் பிறந்தநாள். இதேநேரம் நான் இங்க காத்திக்கிட்டு இருப்பேன்! ம்! அன்னிக்கு கண்டிப்பா நீ உன் பதிலை சொல்லியே ஆகணும்!” என்றான்.
“சொல்லலைன்னா என்ன பண்ணுவீங்க ரஞ்சு மாமா?!” என்று சின்னவள் கேட்க,
“சொல்லலன்னா… நேரா உங்க வீட்டுக்கு வந்து உங்கப்பாகிட்ட பொண்ணு கேட்பேன்!” என்றான் மிக கூலாக.
“ஹான்?!” என்று இரு பெண்களுமே வாய்பிளந்து நிற்க,
அப்போதுதான் சகு அவனை மாமா என்று அழைத்தது அவன் மண்டைக்கு உரைத்தது.
“நீ நீ என்ன ரஞ்சு மாமான்னா கூப்பிட்ட?!” என்று அதிசயித்துக் கேட்டவன்,
“அப்போ அப்போ… பாருவும் என்னை லவ் பண்றாளா?! என்று வாய்விட்டுக் கேட்டவன், ஹே…..!!! பாரு என்னை லவ் பண்ணிட்டா!!!!” என்று சுற்றம் கூட மறந்து குஷியில் கத்திவிட்டான்.
திரையினூடே அவனது சிரித்த முகத்தை சில நொடிகள் ரசித்து நின்றவள், பின் சுதாரித்து, வழிமறித்து நின்றிருந்தவனிடம், “நேரமாகுது வழிவிடுங்க!” என்றாள்.
“சுவர் சுவர் ஸ்வீட் ஹார்ட்! ஆனா அதுக்கு முன்னாடி என் பர்த்டே அன்னிக்கு நீ என்னோடு வெளில வரேன்னு ப்ராமிஸ் பண்ணு!” என்றான் கை நீட்டி.
சில நொடிகள் தயங்கியவள், “ப்ராமிஸ் பண்ணாதான் போகவிடுவேன்!” என்று அவன் பிடிவாதமாக நிற்கவும்,
அவள் கையை அவன் கை மீது வைத்து அவனுக்கு வாக்கு கொடுத்தாள். அவள் மலர்கையின் ஸ்பரிசத்தை ரசித்தவன்,
“தங்க யூ ஸோ மச் ஸ்வீட்டி..! இப்ப நீங்க போகலாம்!” என்று தன் கைகளை அகல விரித்து, தலை தாழ்த்தி அவளுக்கு வழிவிட்டான்.
அவள் நாணத்துடன் முன்னேற முயன்ற சமயம், “ஒரு நிமிஷம்!” என்று அவளைத் தடுத்து நிறுத்தியவன்,
“ஒரு தடவை இந்த முகத்திரையை எடுக்கறியா? உன் முகத்தை பார்க்ககணும்னு ஆசையா இருக்கு!” என்று அவன் ஆசையாய் கேட்க, அவள் மெல்ல தன் முகத்தை மறைத்திருந்த துப்பட்டாவை விலக்கினாள்.
அவள் முக அழகை அவன் பருகப் பருக, அவளின் செந்தாமரை முகம் செம்பருத்தியாய் சிவந்தது.
“ஹலோ நான் ஒருத்தி இங்க நிக்கிறேன்!” என்று சகு குரல் கொடுத்த பின்னே, இருவரும் தங்கள் காதல் மயக்கத்திலிருந்து விடுபட்டனர்.
அன்று அரும்பிய அவர்களின் காதல் கதை நாட்கள் செல்லச் செல்ல ஆலமரமாய் வேர்விட்டுத் தழைத்தது. ரஞ்சன் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தபின் மும்பையிலேயே வேலை தேடிக்கொண்டதும் தன் பார்வதிக்காகத்தான்.
பார்வதியும் தன் குடும்பத்திடம் இருந்து பெரிய எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் அவனை உயிர்க்குயிராய் நேசித்தாள். எத்தனை தடைகள் வந்தாலும் அவனைக் கைப்பிடித்தே தீருவேன் என்ற உறுதியோடு இருந்தாள். ஆனால் அவள் உறுதியைக் குலைக்கும் நாள் வெகு விரைவில் வரப்போகிறது என்பதை அவள் அறியவில்லை.