காய்கறியை கழுவி எடுத்து, கத்தியையும் காய்கறி இருந்த தட்டில் போட்டு கையில் தூக்கிக் கொண்டாள் மீனாட்சி.
வெளியே வந்து கூடத்தில் அமர்ந்தவள், காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேர் எதிராக இறுக்கமாக அமர்ந்து இருந்த தந்தையையும் அவள் கண்டுகொள்ளவில்லை. புலம்பிக் கொண்டிருந்த தாயையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
அவள் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
“என்ன தான் நினைச்சுட்டு இருக்காங்க? இவ்வளவு நாள் ஆசை காட்டிட்டு இன்னைக்கு வேற இடத்துல நிச்சயம் பண்ணுவாங்களா? இத கேட்க வரப்போறீங்களா இல்லையா?” என்று அகிலாண்டேஸ்வரி கேட்க, ராமலிங்கம் வாயைத்திறக்கவே இல்லை.
கேட்ட விசயத்தில் அவரும் சற்று அதிர்ந்து இருந்தார்.
“நீங்க வர மாட்டீங்க? பரவாயில்ல.. என் மகளுக்காக நானே போய் நியாயம் கேட்குறேன்” என்று கிளம்பியதுமே, வாசலில் கதவை திறந்து கொண்டு மகாலட்சுமி வந்தார்.
“அகிலா..” என்று குரல் கொடுத்தபடி வந்தவர், “எங்க கிளம்பிட்ட?” என்று கொண்டே உள்ளே வந்து நின்றார்.
“நீங்களும் தான சேர்ந்துட்டு என் மக வாழ்க்கைய அழிச்சுட்டீங்க.. உங்க அண்ணி பண்ணுறது கொஞ்சமாச்சும் சரியா? இப்படி மண்ணள்ளி போட்டுட்டாங்களே.. கேட்க மாட்டீங்களா?”
“என்ன பேசுற நீ?” என்று முறைத்துக் கொண்டே மீனாட்சியை பார்க்க, அவள் திரும்பவே இல்லை.
“விருந்து சொல்லி இருக்காங்க. வீட்டுல சமைச்சுடாதனு சொல்ல தான் வந்தேன். என்ன பேசிட்டு இருக்க?”
“இப்ப எதுக்கு இவ்வளவு குதிக்கிற? மீனாட்சி வாழ்க்கைக்கு என்ன குறை வந்துச்சு?”
“தெரியாத மாதிரி பேசாதீங்ககா”
“நீ தான் இப்ப தேவையில்லாம பேசிட்டு இருக்க. என்னைக்காவது அண்ணியோ அரசனோ உனக்கு வாக்கு கொடுத்துருக்காங்களா? ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே அரசன் தெளிவா சொல்லிட்டு தான் போனான். நீயா தான் இன்னும் பிடிச்சு தொங்கிட்டு இருக்க”
“ஓஹோ.. உங்களுக்கு உங்க பிறந்த வீட்டு ஆளுங்க பெருசுல.. விட்டுக் கொடுக்காம தான் பேசுவீங்க”
மஹாலட்சுமி அகிலாண்டேஸ்வரியை முறைத்தார்.
“பேசனும்னு பேசிட்டு இருக்காத அகிலா.”
“நிஜத்த தான சொல்லுறேன். உங்களால உங்க பிறந்த வீட்ட விட்டுக் கொடுக்க முடியல. என் பொண்ணு வாழ்க்கை எப்படி போனா என்னனு அவங்களுக்கு பரிஞ்சு பேசுறீங்க?”
“ஓஹோ.. ஆமா.. என்னால என் அண்ணி குடும்பத்த விட்டுக் கொடுக்க முடியாது தான். வேணும்னா இப்படி பண்ணுவோமா? நீ உன் தம்பி மகனுக்கு மீனாட்சிய கட்டி வைக்க பாரேன். அவனுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சுல?”
“அக்கா.. என் பேசுறீங்க?”
“ஏன்மா? அவன் வேலைக்கு போகாத தருதல.. அவனுக்கு உன் மகள கொடுக்க முடியாதா?”
“அக்கா.. என் தம்பி மகன பத்தி நீங்க பேசாதீங்க”
“ஏன்? உன்னால உன் தம்பி மகன் தருதலையா இருந்தும் விட்டுக் கொடுக்க முடியல. என் அண்ணன் மகன் ஊரையே காக்குற போலீஸ் காரன். அவன நான் விட்டுக் கொடுத்துடுவனா? எதுவும் பேச முடியலனு பிறந்த வீட்ட விட்டுக் கொடுக்க மாட்டேன்னு பேசுற? யோசிச்சு பேசு அகிலா. யோசிக்காம நீ விடுற வார்த்தை பலர காயப்படுத்துது.”
“இப்ப என்னங்குறீங்க? அவங்க பண்ணது தான் சரிங்குறீங்களா? என் புள்ளை வாழ்க்கைய பத்தி யோசிக்கவே மாட்டீங்களா?”
“மறுபடியும் மறுபடியும் இதையே பேசாத. மீனாட்சி வாழ்க்கைக்கு எந்த குறையும் இது வரை வரல. இனியும் வராது. அத்த செஞ்சு வச்ச வேலை. நீயும் விடாம பேசிட்டு இருக்க. இங்க பாரு.. அரசன் அந்த பொண்ணு மேல ஆசைப்படுறான். ரெண்டு பேரும் ஒன்னா படிச்சு ஒன்னா வளர்ந்த புள்ளைங்க. இப்ப கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுதுங்க. அமுதா அண்ணி ஊரக்கூட்டி விசயத்தை சொல்லியாச்சு. இனியும் சும்மா பழைசையே பிடிச்சு தொங்காம ஆகுற வேலைய பாரு”
மகாலட்சுமி முடிந்தவரை அமைதியாக தான் பேசினார். அவரையும் மீறி அழுத்தமும் கோபமும் வார்த்தையில் வெளிப்பட்டு இருந்தது.
“பெரியம்மா.. டீ போடப்போறேன். உங்களுக்கு வேணுமா?” என்று மீனாட்சி நறுக்கிய காய்கறி தட்டோடு எழ, “போடு மீனா. தொண்டை வரண்டு போச்சு” என்று அங்கேயே அமர்ந்து விட்டார்.
அகிலாண்டேஸ்வரிக்கு பேச முடியவில்லை. ஊரே கூடி அரசனுக்கும் அந்த பெண்ணுக்கும் மாலை மாற்ற வைத்த கதையை கேட்டு, நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது. அவருடைய வாழ்நாள் லட்சியம் தகர்ந்து போனதில், அப்படியே கண்ணீர் விட்டபடி அமர்ந்து விட்டார்.
ராமலிங்கம் கூட அமைதியாகவே இருந்தார். அவருக்கும் ஏமாற்றம் தான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்ட முடியவில்லை. மனைவியைப்போல் வாய்விட்டு புலம்பவும் முடியவில்லை.
மீனாட்சி தான் எதையும் கண்டு கொள்ளாமல், டீயை போட்டு எடுத்து வந்து மகாலட்சிமியிடம் கொடுத்து விட்டு தானும் குடித்தாள். பிறகு அவள் போக்கில் சமையல் வேலையை ஆரம்பித்து விட்டாள்.
_____
ஒருவழியாக விழா முடிந்து எல்லோரும் வீடு வந்து சேர, எல்லோரின் முகத்திலும் சந்தோச அயர்ச்சி.
ஆளாளுக்கு அன்று நடந்ததை பேசி பூரித்துக் கொண்டிருந்தனர். வைசாலி அறைக்குள் சென்று விழுந்து விட்டாள். காலையிலிருந்து அவளை கொலு பொம்மையாக எல்லோரும் பார்த்து ரசிக்கின்றனர்.
சேலையை கூட மாற்றாமல் அப்படியே படுத்துக் கிடக்க, சித்ரா வந்தார்.
“அப்படியே படுத்துக்கிடக்காத சாலி.. எந்திரி.. போய் முகத்த கழுவு.. எப்ப இருந்து சோம்பேறியான?”
“உங்கள உட்கார வச்சு ஊரே மாத்தி மாத்தி வந்து பேசுனா தெரியும். செம்ம டயர்ட்மா.. இதுல இந்த சேலை வேற.. இதை கழட்டி போட்டா நிம்மதியா இருக்கும்”
“எல்லாரும் வருவாங்க சாலி. நைட் மாத்திக்க”
“அப்ப நைட்டே ஃபேஸ் வாஷ் பண்ணிக்கிறேன்” என்று படுத்துக் கொண்டாள்.
மகள் அருகே வந்து அமர்ந்தவர், “அரசன பிடிச்சுருக்கானு கேட்கும் போது இல்லனு சொல்லிட்டு இங்க வந்து அப்படியே மாத்தி பேசிட்டல?” என்று சிரித்தார்.
“அதுல உங்களுக்கு வருத்தம் எதுவும் இருக்காமா?”
“ச்சே ச்சே.. இல்லடா. நீ சொல்லலனு வை.. நாங்களே கேட்ருப்போம். இது பெரியவங்க பேசுன கல்யாணமா மாறி இருக்கும். அவ்வளவு தான்”
“போங்கமா” என்று கவிழ்ந்து படுத்துக் கொண்டவள், ‘இந்த சோப்பு கூட பேச ட்ரை பண்ணல பாரேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.
பார்த்தசாரதி இரவே கிளம்ப வேண்டியிருக்க, அஞ்சனா அவனை கவனிக்க, எஞ்சியிருந்தவர்களை அமுதவல்லியும் அரசனும் தான் கவனித்தனர்.
எல்லோரும் விடை பெற்று சென்று விட, இரவு பார்த்தசாரதியும் கிளம்பி விட்டான். அவனோடு அவனது பெற்றோர்களும் வேலை இருக்கிறதென கிளம்ப பார்க்க, அமுதவல்லி விட வில்லை.
“நாளைக்கு அஞ்சு, மணி கூட போகலாம். இருங்க. மாப்பிள்ளைக்கு வேலை இருக்குனு ஓடுறாரு. நீங்களும் வந்ததும் போகனுமா? நாளைக்கு அரசன் வைசாலி நிச்சயத்துக்கு நாள் பார்க்கலாம்னு இருக்கேன். இருந்து அதெல்லாம் பார்த்துட்டு அப்புறம் கிளம்பிக்கலாம்” என்று முடித்து விட்டார்.
இது வைசாலிக்கு தெரியபடுத்தப்பட, “அதுக்குள்ளயா?” என்று வாயைப்பிளந்தாள்.
“ஏன்? இன்னும் ஒரு வருசம் ரெண்டு பேரும் கம்முனு இருக்கலாம்னு ஐடியா எதுவும் இருக்க?” என்று அஞ்சனா முறைக்க, “இல்லையே” என்று நல்ல பிள்ளையாக கையை விரித்தாள்.
“நாளைக்கு அடுத்த முகூர்த்தம் எது இருக்குனு பார்த்து உடனே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறேன் இரு”
‘ஆளாளுக்கு பேசுறாங்க. சம்பந்தபட்ட பக்கி மட்டும் வாயைத்திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்குதே’ என்று சற்று தள்ளி நின்று இருந்தவனை முறைத்து வைத்தாள்.
அரசன் அதை உணர்ந்தார் போல் திரும்பி பார்க்க அவனை நன்றாக முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
நள்ளிரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, அரசனின் கைபேசி அதிர்ந்து அவனை எழுப்பியது.
பெயரை பார்த்தவன், “நினைச்சேன்.. முறைக்கும் போதே” என்று சிரித்துக் கொண்டே எடுத்துக் காதில் வைத்தான்.
“என்னமா மலையேறியாச்சா?”
“கடுப்ப கிளப்பாம எந்திரிச்சு வெளிய வா”
“வெளியவா?”
“ஆமா. ஹாலுக்கு வா”
“ஹாலுக்கா? நடு ராத்திரில ஹால்ல? லாலி.. என்ன பேசுற?”
“இப்ப வரல.. நான் வந்து உன் ரூம் கதவ தட்டி மொத்த பேரையும் எழுப்பி விட்டுருவேன்”
“ஏய்..” என்று அதட்டியவன், “சரி இரு வர்ரேன்” என்று எழுந்து வந்தான்.
தொலைகாட்சி சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருக்க, அதன் முன்னால் வைசாலி அமர்ந்து இருந்தாள்.
“இவளுக்கு தைரியத்த பாரேன்!” என்று அச்சரியபட்டுக் கொண்டே அருகில் சென்றான்.
“நடு ராத்திரில இப்படிப் பேய் மாதிரி உட்கார்ந்து இருக்கியே.. யாராவது எந்திரிச்சு வந்து பார்த்து பயந்துட மாட்டாங்க?”
“அதுக்கு தான் டீவிய போட்டுருக்கேன்”
அவனை திரும்பியும் பார்க்காமல் பேச,, “அது சரி. நீ இப்படி உட்கார்ந்துருக்கதே தப்பு.. இப்ப என்னையும் கூப்பிட்டு வச்சுருக்க.. ரெண்டு பேரையும் இன்னேரத்துல பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று கேட்டான்.
“என்ன நினைப்பாங்க? ஒரு ரூம்ல தனியா உட்கார்ந்தா பேசுறோம்? நடு ஹால். யார் வேணா வர்ர இடம். டீவி பார்த்துட்டே பேசுறோம். இதுக்கெல்லாம் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. போய் உட்கார்”
அரசனுக்கு அவளது தைரியத்தில் இன்னும் ஆச்சரியமானது.
‘ஊர் முன்னாடி பொண்டாட்டினு சொன்னவளாச்சே’ என்று நினைத்து சிரித்துக் கொண்டு அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்வையை பதித்தான்.
சில நிமிடங்கள் வரை இருவருமே மௌனமாக இருக்க, அரசன் அவளை திரும்பிப் பார்த்தான்.
தொலைசாட்சியின் மறைந்து மறைந்து வந்த வெளிச்சத்தில், வைசாலி அழகோவியமாக தெரிய ரசிக்க ஆரம்பித்து விட்டான்.
“என்ன பார்வை?” என்று வைசாலி திரும்பாமல் கேட்க, “நீ பேசல. நான் பார்க்கிறேன்” என்றான்.
“அம்மா நிச்சயத்துக்கு நாள் பார்க்க போறாங்க. உங்கள விட மாட்டாங்க”
“அதுக்கு நாங்க இருக்கனும்னு அவசியம் இல்லையே”
“இப்ப என்ன வேணும் உனக்கு?”
வைசாலி பேசவில்லை. தொலைகாட்சி பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
அரசன் அவளை கூர்ந்து பார்த்து விட்டு, “நாளைக்கு ஈவ்னிங் பேசலாம் லாலி” என்று அழுத்தமாக கூறி விட்டு எழுந்து கொண்டான்.
வைசாலி அசையாமல் இருக்க, “இப்ப எந்திரி போய் தூங்கு” என்றான்.
“எனக்கு தூக்கம் வரல”
“எனக்கு வருது. நடு ராத்திரில தான் மலையேறனும்னு வேண்டுதல் எதுவும் வச்சுருக்கியா?” என்று கிண்டலாக கேட்டுக் கொண்டே ரிமோட்டை பிடுங்கி டீவியை அணைத்தான்.
வைசாலி அவனை முறைக்க, “இப்ப எந்திரிச்சு போறியா இல்லையா?” என்று அதட்டினான்.
“போடா” என்று எழுந்தவள், அவனை பிடித்து தள்ளி விட்டு வேகமாக அறை பக்கம் சென்று விட்டாள்.
அவள் சென்னதும் மூச்சை இழுத்து விட்டவன், சுற்றியும் பார்த்து விட்டு சிரிப்போடு சென்று விட்டான்.
__________
தங்கமீனாட்சி கல்லூரி கிளம்பிக் கொண்டிருக்க, “மீனா..” என்றபடி வந்து சேர்ந்தார் மகாலட்சுமி.
“என்ன பெரியம்மா?” என்று கேட்டபடி வேகமாக வர, “உங்கம்மா எங்க?” என்று கேட்டார்.
“தெரியல” என்று தோளை குலுக்கினாள்.
“சரி இந்தா.. ஃபீஸ் கட்ட பணம். காலையில தான் உங்க பெரியப்பா எடுத்துட்டு வந்தாரு”
உடனே வாங்கி உள்ளே வைக்க, அதை பார்த்துக் கொண்டே ராமலிங்கம் வந்தார். அவரால் மகளது படிப்புக்கு செலவு செய்ய முடியாது. அவ்வளவு சம்பாதிக்கவில்லை அவர்.
அதனால் மகாலட்சி தான் மீனாட்சியின் கல்லூரி செலவை மொத்தமாக பார்த்துக் கொள்கிறார்.
இவரை பற்றி:நேற்று இரவு அகிலாண்டேஸ்வரி பேசியது நினைவு வந்தது.
“உங்க அண்ணிக்கு மீனா மேல பாசமிருந்தா அவங்க அண்ணன் வீட்டுல பேசி இருக்கனும்ல? மீனாவும் மக தான் மக தான்னு சொல்லிட்டு அவங்க அண்ணன் குடும்பத்துக்கு மட்டும் பார்க்குறாங்க.” என்று ஆரம்பித்தவர் இன்னும் அதிகமாக பேசினார்.
“இல்ல.. அங்க வேலை கிடக்கு. மீனா காலேஜ் கிளம்புறதுக்குள்ள ஃபீஸ்ஸ கொண்டு வந்து கொடுக்கலாம்னு தான் ஓடி வந்தேன். கிளம்புறேன். மீனா.. கிளம்புறேன்டா”
இருவரிடமும் சொல்லி விட்டு அவர் சென்று விட, மீனாட்சி தந்தையை ஒரு நொடி பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள்.
கல்லூரி பேருந்திலேயே சென்று இறங்கியவளை, அவளது தோழிகள் பிடித்துக் கொண்டனர்.
அது பெண்கள் மட்டுமே படிக்கும் தனியார் கல்லூரி. பணமும் அதிகமாகவே செலவாகும். அவளுக்கு பிடித்த படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்று, மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார் மகாலட்சுமி.
கவனமெல்லாம் தோழிகளின் பேச்சில் இருந்தாலும், மனம் இரண்டு நாட்களாக ஊரில் நடந்ததை தான் நினைத்துக் கொண்டிருந்தது.
“என்னபா? சைலண்ட்டா இருக்க? எப்பவும் பேச மாட்ட தான். இன்னைக்கு கேட்டதுக்கு கூட தலைய மட்டும் ஆட்டுற? வீட்டுல எதுவும் பிரச்சனையா?” கேட்டாள் தோழி.
மீனாட்சி ஒரு நொடி தன் காலை பார்த்து விட்டு, “உனக்கு என்னை பார்த்தா என்ன தோணும்?” என்று கேட்டாள்.
“என்ன தோணும்னா?”
“ம்ம்.. என்னை பத்தி என்ன நினைக்கிற சொல்லு”
“நீ ரொம்ப அமைதி. ஓவர் படிப்ஸ். டாப்பர். லைட்டா பொறாமை.. இந்த புள்ளை மட்டும் இவ்வளவு மார்க் வாங்கிடுதேனு.. இதெல்லாம் தான் தோணும்”
“என்னை பார்த்து பரிதாபமா இருக்குமா? என் கால்.. நொண்டினு..” என்று கேட்கும் போதே துக்கம் தொண்டை அடைத்து கண்கலங்கி விட்டது.
அந்த பெண் அதிர்ந்து போய், “நான் அப்படிலாம் நினைச்சதே இல்ல மீனாட்சி. யாராவது அப்படி சொல்லிட்டாங்களா? அதான் சோகமா இருக்கியா?” என்று கேட்க, தலையாட்டினாள்.
“அவங்க சொல்லுறதெல்லாம் காதுல வாங்காத.. யார்னு என் கிட்ட சொல்லு மூஞ்சிய பேத்துடுவோம். நம்ம ஹெச் ஓ டி கிட்ட போட்டு கொடுத்துடுவோம். சொல்லு யாரு?”
அவள் அழுவதை பார்த்து எல்லோரும் கேட்க, விசயத்தை சொல்லி விட்டாள் தோழி. எல்லோருமே யாரென்று கேட்டு கொந்தளித்தனர்.
“யார்னு சொல்லு மீனாட்சி.. ப்ரின்ஸிபல் கிட்டயே போய் சொல்லுவோம்.” என்று வற்புறுத்தி கேட்டும் அவள் பதில் சொல்லவில்லை.
சொந்தம் பந்தமென்று எதுவுமே இல்லை. அவளைப்போலவே சமவயதுடைய பெண்கள் தான் எல்லோரும். ஆனால், எல்லோருமே அவளை ஒரு வார்த்தை சொன்னதை பொறுத்துக் கொள்ளாமல் கோபப்படுகின்றனர்.
ஆனால் பெற்ற அன்னை? மீனாட்சிக்கு கண்ணீர் உடைப்பெடுக்க, முகத்தை மறைத்து படுத்துக் கொண்டாள்.
விசயம் வகுப்பு பேராசிரியைக்கு தெரிந்து ஹெச்ஓடி வரை சென்றது.
அவர் தனியாக அழைத்துக் கேட்க, தாங்க முடியாமல் சொல்லி விட்டாள். ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்?
மாணவிகளோ வேலை செய்பவர்களோ இப்படி நடந்திருந்தால், அவர் முறையான நடவடிக்கை எடுத்திருக்கலாம். மீனாட்சியின் அன்னையே பேசி வைத்திருக்கிறார்.
“இதையே நினைச்சுட்டு அழுதுட்டு இருக்க கூடாது தங்கமீனாட்சி. வீட்டுல எதையாவது பேசுனா பஸ்ல ஏறும் போதே அதை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு காலேஜ்க்கு கலகலப்பா வரனும். படிக்குற வேலைய மட்டும் தான் பார்க்கனும். அவங்க சொன்னத இங்க வர நினைச்சு அழுதுட்டு இருக்க கூடாது. இப்ப போய் முகத்த கழுவிட்டு க்ளாஸ கவனி” என்று அனுப்பி வைத்தார்.
அதோடு மீனாட்சியின் அன்னையிடம் பேச முடிவு செய்து விட்டார்.
இது கல்லூரியில் நடக்க, அகிலாண்டேஸ்வரி அங்கு மேலும் பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார்.