அடுத்த நாள் அதிகாலையில் வைசாலி எழுந்து பார்க்க, அப்போதும் மண்டபம் பரபரப்பாக இருந்தது. நேற்று இரவு பாதிக்கும் மேல் தூங்கவே இல்லை. வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மணமக்கள் மட்டுமே நிம்மதியாக தூங்கி எழுந்திருந்தனர். திருமண வேலைகள் மளமளவென ஆரம்பிக்க, முகூர்த்தபுடவையை கட்டிக் கொண்டு வந்து நின்றவளை, அரசன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“பார்த்து கழுத்து சுழுக்க போகுது” என்று பார்த்தசாரதி அரசனின் முகத்தை திருப்பி விட, “பழி வாங்குறீங்களா அத்தான்?” என்று கேட்டான்.
“பின்ன? எங்க கல்யாணத்துல எவ்வளவு அராஜகம் பண்ண? இன்னைக்கு இருக்கு உனக்கு”
“அத்தான்.. வேணாம்.. அழுதுடுவேன்…”
“அழு மகனே.. எப்பவும் கல்யாண பொண்ணு தான் அழனுமா? இன்னைக்கு நீ அழுற..” என்று அமுதா வந்து சொல்லி விட்டு நடக்க, அரசன் பாவமாக பார்த்து வைத்தான்.
அஞ்சனாவின் கல்யாணத்தின் போது, அவன் செய்த கலாட்டா கொஞ்சம் நஞ்சமில்லை.
பார்த்தசாரதியை அவ்வளவு கிண்டலடித்து வைத்திருந்தான். அஞ்சனாவோடு கிளம்பும் போது, அஞ்சனா பெற்றவர்களை பிரியும் துக்கத்தில் அழுது விட்டாள்.
அமுதவல்லி சமாளித்துக் கொண்டாலும், சக்கர நாற்காலியில் இருந்த மகேந்திரன் கண்ணீர் விட, அஞ்சனா மேலும் அழ, பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதிக்கே என்னவோ போல் ஆகி விட்டது.
எல்லாவற்றையும் பார்த்த அரசன், அஞ்சனாவை அனுப்ப முடியாது என்று கையைப்பிடித்துக் கொண்டு நின்று விட்டான்.
“எங்கக்கா அழும் போது எப்படி அனுப்ப? அதுனால நீங்க மட்டும் கிளம்புங்க அத்தான்” என்று கூறி விட, கூட்டம் மொத்தமும் அதிர்ந்து விட்டது.
ஆளாளுக்கு அரசனை அதட்ட, அவன் அசையவும் இல்லை. அஞ்சனாவின் கையையும் விடவில்லை. பிடித்தபிடியில் நின்று இருந்தான். அந்த கலாட்டாவில் அஞ்சனாவின் அழுகை குறைந்து நின்றே விட்டது.
பார்த்தசாரதி அவளை பாவமாய் பார்த்து அரசனை நோக்கி கண்காட்ட, அஞ்சனாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“நான் அழ மாட்டேன் அரசா.. சந்தோசமா கிளம்புறேன். சரியா?” என்று அஞ்சனா தம்பியிடம் பேச, “சத்தியமா? அழாம சந்தோசமா அத்தான் கூட கிளம்பனும். சிரிச்சுட்டே..” என்று கையை நீட்டினான்.
அந்த கையை பிடித்துக் கொண்டவளுக்கு, பாசத்தில் தொண்டை அடைத்தாலும் அழாமல் புன்னகைத்தாள்.
“மீறி கண்ணு கலங்குச்சுனா உன்னை விட மாட்டேன். சந்தோசமா போயிட்டு வரனும். ஓகே?”
அஞ்சனா அவனது அக்கரையில் அகமகிழ்ந்து சந்தோசமாக தலையாட்ட, அவனே அழைத்து வந்து காரில் அமர வைத்தான்.
“சிரிச்சுட்டே கிளம்புக்கா. அழுது அத்தானையும் சேர்த்து அழ வச்சுடாத. இப்பவே பாதி அழுற மாதிரி தான் நிக்கிறாரு” என்று கூறி, அஞ்சனாவின் தலையை ஆட்டி வைத்தான்.
பார்த்தசாரதியின் முகத்தை பார்த்தவள், மேலும் புன்னகை விரிய தலையாட்டினாள்.
அந்த சந்தோசம் சற்றும் குறையாமல், பார்த்தசாரதியோடு கிளம்பினாள் அஞ்சனா. அப்படி ஒரு புன்னகையோடு ஆரம்பித்த பயணம். இன்று வரை எந்த மனசுணக்கமும் இல்லாமல் இயல்பாய் இன்பமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று வைசாலி அழுதால், தான் செய்த வேலை திருப்பி நடப்பது உறுதி என்று அரசனுக்கு புரிய, வைசாலியின் பக்கம் குனிந்தான்.
“லாலி.. கிளம்பும் போது அழுவியா?”
“நான் ஏன் அழப்போறேன்? என் கூட வாழப்போறத நினைச்சு நீங்க பயந்து அழாம இருந்தா சரி”
“அடிங்க.. இப்ப வீர வசனமெல்லாம் பேசிட்டு கிளம்பும் போது அழுது வச்ச பிச்சுடுவேன்” என்று மிரட்டினான்.
“அதான் அழ மாட்டேன்னு சொல்லுறேன்ல?”
“அப்ப சரி” என்று அமைதியாகி விட்டான்.
ஐயர் தன் வேலைகளை முடித்து தாலியை நீட்ட, அரசன் அதை எடுத்துக் கொண்டான்.
அவன் சரியாக பிடித்திருக்கிறானா என்று மற்றவர்கள் தாலியை ஆராய, அரசன் வைசாலியை பார்த்தான். அவள் ஒற்றை புருவத்தை உயர்த்தினாள். அதில் புன்னகையோடு கட்டி ஒரு முடிச்சை மட்டுமே போட்டான்.
மீதம் இரண்டை அஞ்சனா போட்டு முடிக்க, குங்குமம் வைத்தான். அதில் மிக அருகே கைக்குள் வந்தவளிடம், “வெல்கம் டூ மை லைஃப் மிஸஸ் சோப்பு” என்று கூற, வைசாலிக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்து விட்டது.
சிரிப்பை அடக்கியபடி அரசனை நோக்கி பார்வையை உயர்த்த, அந்த தருணத்தை அழகாக புகைப்படம் எடுத்து வைத்தனர்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து, விருந்தினர்களோட புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
தனியாக மணக்கோலத்தில் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படமெடுத்தார் புகைப்பட கலைஞர். எல்லாம் முடிந்து சாப்பிட்டு முடிக்கும் போது, இருவருமே களைத்துப்போனார்கள்.
“என்னால முடியல.. டயர்ட்டா இருக்கு” என்று ரகசியமாக வைசாலி சினுங்க, “ஓகே ஓகே.. கார்ல போகும் போது ரெஸ்ட் எடுக்கலாம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கமா” என்று சமாதானம் கூறினான்.
குடும்பம் மொத்தமாய் அரசனின் சொந்த ஊருக்கு கிளம்ப, வைசாலியின் பெற்றோர்களையும், அவர்களது நெருங்கிய சொந்தங்களையும் சேர்த்தே ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
அதனால் வைசாலி பிரிவுத்துயரில் அழாமல் காரில் ஏறி விட, அரசன் பார்த்தசாரதியை பார்த்து சிரித்தான்.
“எப்புடி அத்தான்?”
“உனக்கு கொடுத்து வச்சுருக்கு மச்சான்” என்று சிரித்து விட்டு, அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
எல்லோருமே வேலையில் சுகமாக களைத்து இருக்க, அந்த ஓய்வு அவர்களுக்கு தேவைப்பட்டது.
பார்த்தசாரதி பின்னால் பார்த்தான். அரசனின் தோளில் வைசாலி சாய்ந்திருக்க, அரசன் அவள் தலையில் கன்னத்தை வைத்திருந்தான்.
“ஏன்டா மச்சான்.. இதெல்லாம் ஓவரா இல்ல?”
“ரோட்ட பாருங்க அத்தான். பின்னாடி பார்த்து கண்ணு வைக்காதீங்க”
அரசன் கண்ணைத்திறக்காமலே பேச, “நேரம்டா.. உங்கக்கா எல்லாம் உங்களயே திரும்பி திரும்பி பார்த்துட்டு வந்தா.. அப்புறம் ஊர வேடிக்கை பார்த்தா. பக்கத்துல இருக்க என்னை மனுசனா கூட மதிக்கல. இங்க என்னடானா.. ம்ம்.. உனக்கு நிஜம்மாவே அதிர்ஷ்டம் இருக்குடா” என்று பெருமூச்சு விட்டான்.
கேட்டிருந்த மூவருமே அடக்க முடியாமல் சிரித்து விட, மணிகர்ணிக்கா மட்டும் புரியாமல் மூவரையும் பார்த்து வைத்தாள்.
வீடு வந்து சேர்ந்ததும் அடுத்த கட்ட வேலைகள் இழுத்துக் கொண்டது.
இரவு அலங்காரம் முடிந்து, அஞ்சனா வைசாலியை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
உறவுப்பெண்கள் எல்லோரும் வைசாலியை கிண்டலாக பேசி சிரிக்க, “நானே டாக்டர்.. என்னமோ எனக்கு தெரியாதத பேசிட்ட மாதிரி சிரிக்கிறத பாருங்களேன் ஆறு” என்று அஞ்சனாவின் காதைக்கடித்தாள் வைசாலி.
அஞ்சனாவிற்கு தான் பக்கென சிரிப்பு வந்து விட்டது.
“அவங்க ஜாலிய கெடுப்பானேன்? விடு விடு” என்று அழைத்துச் சென்று அரசனின் அறை முன்னால் விட்டாள்.
“அவன் குளிச்சுட்டு இருக்கான். உள்ள போ. வந்துடுவான்” என்று கூறி விட்டு அஞ்சனா திரும்ப, “ஹலோ ஃபைவ் அண்ணி.. வேர் இஸ் பால் சொம்பு?” என்று நிறுத்தினாள்.
அவளது சத்தத்தில் அதிர்ந்த அஞ்சனா, “உஸ்ஸ்.. மானத்த வாங்காத. உள்ள ஏற்கனவே வச்சாச்சு. போய் தொலை” என்று துரத்தி விட்டாள்.
வைசாலி சிரித்தபடி உள்ளே சென்றாள்.
அறை முழுவதும் அலங்காரத்தில் ஜொலித்தது. கலைந்து கிடைந்த பொருட்கள் எல்லாம் ஓரம் கட்டப்படிருந்தது. முதலில் அவள் வந்த போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.
அப்போது அரசன் மட்டுமே உபயோகித்து இருந்தான். இப்போது திருமணவேலைகளில் நிறைய பொருட்களை அந்த அறையில் வைத்து எடுத்திருக்கின்றனர்.
“நாட் பேட்” என்று அந்த அறையின் அலங்காரங்களை பார்த்துக் கொண்டிருக்க, கதவு திறக்கப்பட்டது.
அரசன் உள்ளே வர அவனை மேலும் கீழும் பார்த்தாள். குளித்து வேறு வேட்டி சட்டைக்கு மாறியிருந்தான்.
“காலையில இருந்ததே நல்லா இருந்துச்சு” என்று கூற, தன்னை குனிந்து பார்த்தவன், “ரெண்டுமே அத்தான் செக்ஷன் தான்” என்றபடி கதவை அடைத்து தாளிட்டான்.
வைசாலி அறையை வேடிக்கை பார்த்துக் கொண்டு திரும்பி நிற்க, அரசன் அருகே வந்து முகத்தை கூர்ந்து பார்த்தான். சாதாரணமாக இருக்க முயற்சித்து, பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது திணறலில் மெல்லிய மயக்கம் அரசனை சூழ்ந்தது. அதே மயக்கத்தோடு “லாலி” என்று அவளது தோளை வளைத்து அணைத்தான்.
படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சை வெளியே காட்ட முடியாமல், அவனது தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“என்னமோ நானே டாக்டர்.. எனக்கு எதுவும் தெரியாம இல்லனு பேசிட்டு வந்தாளாமே.. அந்த பொண்ண பார்த்த?” என்று சிரிக்க, அவனது கையில் கிள்ளி வைத்தாள்.
அதற்கு வாய்விட்டு சிரித்தவன், “இந்த படபடப்பு போக என் கிட்ட ஒரு ட்ரீட்மெண்ட் இருக்கு.. பார்க்குறியா?” என்று அவள் முகத்தை நிமிர்த்தி கண் சிமிட்டி கேட்டான்.
அந்த பாவனையில் வைசாலி நடுங்கிய கைகளை கோர்த்துக் கொண்டு, பதில் எதுவும் சொல்லாமல் நின்றாள்.
“டாக்டருக்கே ட்ரீட்மெண்ட்டானு இப்ப நீ கேட்டுருக்கனும் தெரியுமா?” என்று அரசன் சிரிக்க, வைசாலிக்கு இயல்பாய் இருக்க முடியவில்லை.
தட்டுத்தடுமாறி பார்வையை எங்கெங்கோ சுற்ற விட, அவளை இழுத்துக் கொண்டு வந்து மேசையருகே நிறுத்தினான்.
அந்த மேசையில் இருந்த பொருட்களை எல்லாம் நன்றாக பார்த்தாள்.
அவள் வரைந்திருந்த படத்தை ப்ரேம் போட்டு வைத்திருந்தான். அதைப்பார்த்ததும் வைசாலியின் படபடப்பு குறைந்து முகத்தில் புன்னகை வந்தது. அடுத்ததாக கண்ணாடி டம்ளரில் பாலை மூடி வைத்திருந்தனர். அதை பார்த்து இன்னும் சிரிப்பு விரிய அடுத்தை பார்த்தாள்.
பெரிதாக அலங்காரம் செய்த கூடை இருந்தது. அதில் துணியை போட்டு மூடி வைத்திருக்க, “திறந்து பாரு” என்றான்.
“ஃப்ரூட்ஸ் ஸ்வீட் இருக்கப்போகுது.. எத்தனை படத்துல பார்த்துருப்போம்?” என்று இயல்பாய் கிண்டலடித்துக் கொண்டே துணியை அகற்றினாள்.
உள்ளே அழகாக அடுக்கப்பட்டிருந்த முறுக்கை பார்த்து முதலில் அதிர்ந்தவள், பக்கென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“என்ன இது?” என்று கேட்டவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
முறுக்கை பார்க்க பார்க்க சிரிப்பு வந்து கொண்டே இருந்தது. அவள் நன்றாக சிரித்து ஓயும் வரை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவன், பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.
சட்டென சிரிப்பு குறைந்து வெட்கம் வந்து விட அமைதியானாள்.
“எவன் எவன் எதெதோ கொடுத்து கரெக்ட் பண்ணுறான். நீ இந்த முறுக்குல தான விழுந்த. அதான் உனக்கு நம்ம கல்யாணத்துக்கு என்னோட பரிசு.. முறுக்கு பிடிச்சுருக்கா?” என்று கேட்டவனின் அணைப்பு இறுக, வைசாலிக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது மறந்து போனது.
அவளை தன் பக்கம் திருப்பியவன், சிவந்து போன முகத்தை மெல்ல உயர்த்தினான்.
“லாலி..”
“….”
“நீ ஒன்னு கேட்ட தெரியுமா? எப்படி டிஸ்டர்ப் பண்ணுறனு.. இப்ப பதில் சொல்லவா?” என்று கேட்டு கண்ணடித்தான்.
“ஹான்..” என்று அவள் விழிக்க, அரசன் பதில் சொன்னான்.
“எனக்கு பதிலே வேணாம்” என்று வைசாலி திணறிப்போகும் அளவு பதிலை கொடுத்திருந்தான்.
அதிகாலை நல்ல தூக்கத்தில் இருந்தவன் காதில், அந்த சத்தம் விழுந்தது. எதோ ஒரு சத்தம் காதை மெல்ல தொட்டுச் செல்ல, கண்ணை திறக்காமலே சத்தத்தை ஆராய முனைந்தான். முடியவில்லை.
‘என்ன சவுண்ட் இது?’ என்ற சந்தேகத்தோடு கண்ணை திறந்து பார்க்க, மெல்லிய வெளிச்சம் அறையில் பரவியிருந்தது.
கட்டிலில் தெரிந்த வெள்ளை உருவத்தை, கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். அந்த உருவத்திடம் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது.
சத்தமில்லாமல் எட்டிப்பார்த்தான். தலைவரை போர்வையை போர்த்திக் கொண்டு, கறுக் மொறுக் என்ற சத்தத்தோடு வைசாலி முறுக்கை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள்.
மெல்ல அவள் பக்கம் உருண்டு சென்று எழுந்து அமர்ந்து, அவளை ஒரு கையால் அணைக்க, திடுக்கிட்டு திரும்பி பார்த்து புன்னகைத்தாள்.
“தூங்கலையா?” என்று முறுக்கை வாயில் திணித்தபடியே கேட்டாள்.
“இந்நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க?”
“பசிச்சது.. அதான்.. இந்த சத்தம் தான் எழுப்பிடுச்சா? சாரி.. இவ்வளவு நேரம் பால்ல ஊற வச்சு தான் சாப்பிட்டேன். பால் தீந்து போச்சு. அதான் சத்தம் வந்துடுச்சு”
அருகே இருந்த டம்ளரை பார்த்தான். மொத்தமும் காலியாக இருந்தது. கூடையில் முறுக்கும் பாதியாகி இருந்தது
“பசிச்சா கிட்சன்ல எதையாவது சாப்பிட எடுத்து வர வேண்டியது தான? முறுக்கு அஜீரணம் ஆகிடாத?”
“அதெல்லாம் ஆகாது. ஆனாலும் பார்த்துக்கலாம். இந்நேரத்துல எப்படி கிட்சனுக்கு போறது? பார்த்தா ஓட்டுவாங்க.” என்றவள் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
“இப்ப ஓகே தூங்கலாம்” என்று தண்ணீர் டம்ளரை வைத்தவளை, பிடித்து தூக்கி தனக்குள் கொண்டு வந்தான்.
“ஹேய்..” என்று பதறியவள், “இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுரும்” என்று சினுங்கினாள்.
“அதுனால?” என்றவன் சில்மிஷங்களை தொடங்க, “நான் தூங்கவே இல்ல.. இப்ப தூங்குனா தான் காலையில எந்திரிக்க முடியும்” என்று கெஞ்சினாள்.
“அது நீ எலி மாதிரி கொறிச்சு என்னை எழுப்புறதுக்கு முன்னாடி செஞ்சு இருக்கனும்”
“யோவ்.. பசிச்சதுனு சாப்பிட்டேன். அது குத்தமா?”
“சாப்பிட்டதும் தூங்கக்கூடாது லாலி..” என்று அரசன் கண்ணடிக்க, தலையணை வைத்து அவனை மொத்தினாள். அதையும் வாங்கிக் கொண்டு, அவனது காரியத்தில் கண்ணாக இருந்தான்.
அடுத்த நாள் காலை விடிய, அமுதவல்லி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் அத்த” என்று வைசாலி வர, அவளை திரும்பிப் பார்த்தார்.
குளித்து சுடிதாரில் வந்தாள்.
“ஃப்ரிட்ஜில பூ இருக்கு எடுத்து வச்சுக்கோ சாலி..”
“சாலியா?”
“சித்ரா அப்படி தான கூப்பிடும் உன்னை? அதான் நானும் பழகிட்டேன்” என்று அமுதவல்லி சிரிக்க, அவரது கன்னத்தை கிள்ளியவள், “சோ ஸ்வீட் அத்த” என்றாள்.
பூவை எடுத்து வைத்துக் கொண்டே அவரது வேலையை பார்த்து விட்டு, “இந்நேரத்துலயே வேலை பார்க்குறீங்க? மார்னிங் டிபன் மண்டபத்துலனு சொன்னாங்க” என்று கேட்டாள்.
“அங்க போற வரை எல்லாரும் பசி தாங்க மாட்டாங்க சாலி. எந்திரிச்சதும் டீ குடிக்கிற ஆளுங்களும் இருக்காங்க. போட்டு வச்சுட்டா குடிச்சுப்பாங்க. இட்லிய முன் பசிக்கு சாப்பிட்டுட்டு கிளம்பட்டும்னு ஊத்தி வைக்கிறேன்”
“நான் டீ போடுறேன்” என்று வைசாலியும் வேலையில் இறங்கி விட்டாள்.
அமுதவல்லி சொன்ன அளவில் போட்டு முடிக்க, சிலர் எழுந்து விட்டனர். வைசாலி அமுதவல்லியோடு பேசியபடி வேலை செய்வதை பார்த்து, அதிசயத்து விட்டார்கள்.
“அமுதா.. நீ கொடுத்து வச்சவ போ.. காலையில எழுந்து, முதல் நாளே உனக்கு வேலை பார்க்குது உன் மருமக. என் மருமகளுக்கெல்லாம் இன்னும் கடுகுக்கும் மிளகுக்கும் வித்தியாசம் தெரியல” என்று நொடித்துக் கொண்டே வைசாலியிடம் தேநீரை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
இப்படி ஒரு சிலர் வந்து வம்பு பேசினாலும், எல்லோரையும் அமுதா அங்கு நிற்க விடாமல் எதாவது சொல்லி துரத்தினார். வைசாலி பேசவே இல்லை. வெறும் புன்னகை மட்டுமே.
“இங்க நின்னா பேசிட்டே இருப்பாங்க. போய் சேலைய கட்டி கிளம்பு போ”
“எந்த மாதிரி சேலை கட்டட்டும்?”
“பட்டு சேலை கட்டுமா. ஒரு வாரத்துக்கு பார்க்க வந்துட்டே இருப்பாங்க. பட்டு சேலை தான் சரியா இருக்கும்”
வைசாலி தலையாட்டி விட்டு திரும்ப, அரசன் வந்து விட்டான்.
“ம்மா.. டீ இருக்கா?”
“இப்ப தான் எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்கனு மறுபடியும் பால அடுப்புல வச்சேன். போடுறேன் இரு”
“விடுங்க நான் போட்டுக்கிறேன்” என்றவன் வைசாலியை மேலும் கீழும் பார்த்து விட்டு, அருகே வந்து நின்று கொண்டான்.
அமுதாவிற்கும் அரசனுக்கும் நடுவில் வைசாலி நின்று இருந்தாள்.
இட்லிகளை சூடாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.
அரசன் அவள் பக்கம் திரும்பாமல், கொதித்த பாலை தேவையான அளவு மட்டும் எடுத்து, அவனுக்கென தனியாக தேநீரை தயாரித்துக் கொண்டான்.
அதற்குள் இருவர் வந்து மூவரும் நிற்பதை பார்த்து கேலி பேசி விட்டுச் சென்று விட்டனர்.
தேநீரை கையில் எடுத்தவன், “இங்க நின்னா ஆளாளுக்கு பேசுவாங்க. நான் ரூம்க்கே போறேன்” என்று கிளம்பி விட்டான்.
அவன் அந்த பக்கம் நகர்ந்ததுமே, அவன் தேநீர் தயாரித்த பாத்திரத்தை எடுத்தாள் வைசாலி. இரண்டு சொட்டு தான் அதில் மிச்சம் இருந்தது. அதை உள்ளங்கையில் ஊற்றி சுவை பார்த்தாள். அவனது சுவை ஓரளவுக்கு பிடிபடும் போல் இருந்தது.
வெளியே சென்ற அரசன் வைசாலியையும் அழைக்கலாம் என்று திரும்பி வர, அவன் கண்ணில் வைசாலி செய்த காரியம் தவறாமல் விழுந்தது.
மருமகளின் செய்கையும் மகன் அங்கே நிற்பதையும் பார்த்து விட்டு, அமுதவல்லி வேலையை போட்டு விட்டு வெளியேறி விட்டார்.
அவர் சென்றதும் கதவை அடைத்தவன், வைசாலியை பின்னாலிருந்து அணைத்தான்.
பயந்து போய் பாத்திரத்தை கீழே போடப்போனவள், சுதாரித்து வைத்து விட்டாள். அருகே அமுதவல்லி நிற்கிறாரா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
“இதையே குடிச்சு பார்க்கலாமே” என்று அரசன் டம்ளரை அவள் வாயருகே கொண்டு செல்ல, மறுக்காமல் குடித்தாள்.
“நைஸ்” என்றவள் அவனது கையைப்பிடித்து மீண்டும் ஒரு முறை குடித்தாள்.
“நல்லா இருக்கு கிங்.” என்று புன்னகைத்தவள், அவனது கையை விலக்கி விட்டு, இட்லியை எடுத்து விட்டு அடுத்த இட்லியை ஊற்றி வைத்தாள்.
அரசனின் பார்வை அவளிடமே நிலைத்து இருக்க, “இப்படியே பார்த்துட்டு இருந்தா கண்ண நோண்டிருவேன்” என்று மிரட்டினாள்.
“எங்க பண்ணு?”
“நீங்க கிளம்பலயா? மண்டபம் போகனும்”
“அத விட முக்கியமான வேலை இங்க இருக்கே” என்றபடி தேநீரை உறிஞ்சினான்.
அவனது பார்வையில் இருந்த குறும்பில் முறைத்து வைத்தவள், “நான் போய் கிளம்புறேன் அப்போ” என்று வெளியேறி விட்டாள்.
அறைக்குள் நுழையும் போது, அரசனும் பின்னால் வந்து விட்டான்.
தன் சேலை இருந்த பெட்டியை தூக்கி வைத்து திறந்தாள். விதவிதமான புடவைகள் இருக்க, எதை அணிவது என்று குழம்பி விட்டாள்.
“திறந்து வச்சுட்டு என்ன பார்க்குற?”
“நீங்க என்ன கலர் சர்ட் போடுவீங்க?”
“ஏன்?”
“மேட்ச்சா போடுவோம்” என்று வைசாலி கண்சிமிட்ட, அரசன் சிரிப்போடு அவனது அலமாரியை திறந்து காட்டினான்.
“இது எல்லாம் புதுசு தான். நீயே செலக்ட் பண்ணு” என்று கூறி விட்டு தேநீரோடு அவளையும் ரசிக்க ஆரம்பித்தான்.
அவனது சட்டைகளை அலசி ஆராய்ந்து, அதே நிறத்தில் தன்னிடமும் சேலை இருக்கிறதா என்று பார்த்து, ஒன்றை தேர்வு செய்தாள்.
“இத போடுங்க இன்னைக்கு” என்றதும் அரசன் தலையசைத்தான்.
“சரி கிளம்புங்க. நான் சேலைய மாத்திக்கிறேன்” என்றதும், அரசனின் பார்வையில் குறும்பு கூடியது.
“இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல?” என்று கேட்டு சிரிக்க, அவனை பிடித்து வெளியே தள்ளியவளின் முகம் சிவந்து விட்டது.
அவள் தள்ளியபோது அலட்டிக் கொள்ளாமல் வெளியே வந்தவன் வாய்விட்டு சிரிக்க, ஒற்றை விரலில் பத்திரம் காட்டி விட்டு கதவை அடைத்து விட்டாள்.
அரை மணிநேரம் கழித்து அரசன் உள்ளே செல்ல, வைசாலி தயாராகி இருந்தாள். நேற்றை விட இன்று அதீத அழகோடு மிளிர்ந்தவளை, அரசன் ரசனையாக பார்த்தான்.
“என்ன லுக்கு?” என்று வைசாலி புன்னகைக்க, “தூங்கனும் தூங்கனும்னு சொல்லிட்டு எனக்கு முன்னாடி எந்திரிச்சுட்ட?” என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தான்.
“ஹாஸ்பிடல்ல நைட் டியூட்டு பார்த்து பழக்கம்”
அவள் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னாள். அதற்கடுத்து அரசனின் பார்வை மாறியதில், அவளையும் மீறி முகம் சிவந்து விட்டது.
சிதறிக்கிடந்த பூவை தூக்கி அவன் மீது எறிந்து விட்டு, கண்ணாடியில் தன்னை நன்றாக பார்த்தாள்.
“ஓகே தான?” என்று அரசனை கேட்க, “டபுள் ஓகே” என்றான்.
அருகே வந்தவன் லேசாக எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்து விட்டு, கண்ணாடியை திரும்பிப் பார்த்தாள்.
“இப்ப லிப்ஸ்டிக் சரியா இருக்கு” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்.
அரசன் வேகமாக கண்ணாடியை பார்த்தான். அவன் கன்னத்தில் எதுவுமே இல்லை.