உண்மையில் கரிகாலன் பயந்து போய் தான் நின்று இருந்தான். மனைவியை, அவன் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. அவள் வாய், அவன் அறிவான். எவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறாளோ… அவ்வளவு கோபம் கொள்வாள். அதுவும் வரைமுறை இன்றி கோபம் வரும்.
அப்படி கோபம் வந்தால் மரியாதை என்ன விலை என்று கேட்பாள். அவ்வளவு நல்ல பெண். கணவன் என்று பாராமல், அவனையும் வச்சு செய்வாள். போடா, வாட எல்லாம் சகஜமாக வந்து விழும்.
போனை பிடிங்கி காதில் வைத்ததும் கேட்டது தந்தை குரல் தான்.
“ கரிகாலன், பாப்பாவை பார்க்கணும் போல இருக்கு. நீ வெறும் போட்டோ தான் அனுப்புற, மது குரல் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு. எங்களை எல்லாம் நினைக்கவே இல்லையா… நாங்க வந்து பார்க்க வரவா…” என்று தந்தை பேசும் போதே, பின்னாடி தாயின் குரல்.
“கையோடு கூட்டிட்டு வருவோம். அங்க வசதி பத்தாது. பாப்பா ரொம்ப கஷ்டப் படும். நம்ம வீட்டுக்கு கூட்டி போவோம். பஞ்சாயத்தை அப்புறம் பேசுவோம்…” என்று மீனாட்சி சொல்ல.
மதுக்கு கோபம் வெளியேற தொடங்கியது.
“ நான் மது தான்பா பேசுறன். என்கிட்ட நீங்க நேரடியாகவே சொல்லுங்க. கரிகாலன் கிட்ட ஏன் பேசணும். உங்க பொண்டாட்டி என்னவோ சொல்றாங்க, அதையும் கேட்டு என்னன்னு சொல்லுங்க. அதுக்கும் நான் பதில் சொல்றேன். நமக்கு எதுக்கு இடையில ஒரு ஆள். நீங்க பேசுங்க, நான் பதில் கொடுக்கிறேன்…” மது கோபமாக சொல்ல,
“மது, அவர் உன் அப்பா. கொஞ்சம் மரியாதை கொடு. நிதானமாக பேசு…” கணவன் எடுத்து சொல்லியும்
“நான், எங்கப்பா கிட்ட பேசுறேன் கரிகாலன். எனக்கு வரைமுறையே கிடையாது. அதனால், நீங்க கொஞ்சம்…” என்று கையால் சைகை செய்ய
அப்படியே மடங்கி போனான் கரிகாலன்.
“சொல்லுங்க… உங்களுக்கு என்ன தெரியணும்?…” என்றாள் தீர்க்கமாக.
“மதும்மா… அப்பாக்கு எதுவுமே தெரியலை பாப்பா. இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. நீ ரொம்ப கஷ்டப் பட்டயாடா… எதுவுமே தெரியாம, நான் இருந்துருக்கேன். ரம்யா…” என்று சுந்தரம் எடுக்க.
“ரம்யா மேல எனக்கு எந்த கோபமும் இல்லைப்பா. உண்மையா, ரம்யா எனக்கு ஒரு ஆளே இல்லை. என்னால ஈசியா சமாளிச்சிருக்க முடியும். அந்த நேரம் நான் ரொம்ப கஷ்டத்தில இருந்தேன். அதான் கொஞ்சம் உடஞ்சு போனேன். வேற என்ன விளக்கம் வேணும்…”
“அப்பா தப்பு தான…”
“தப்பு தான்…”
. “உன்னை பார்க்கணும் போல இருக்கு. அப்பா வரவா பாப்பா…”
“எனக்கு நீங்க வேணாம். உங்களை எனக்கு பார்க்கவும் வேணாம்…” என்றாள் தயவு இன்றி
“மது, அவர் உங்க அப்பா. பார்த்து பேசு… அவர் ஒரு இதய நோயாளி. உன் கோபம், அவருக்கு தாங்காது. ரொம்ப நொந்து போய் இருக்கார் மது…” கணவன் தயவாக சொல்லியும்.
“எங்கப்பா கிட்ட நான் பேசணும் கரிகாலன். நீங்க யாரு?… நீங்க எதுக்கு இடையில வாரீங்க?… உங்க வேலையை மட்டும் பாருங்க…” என்று அவனிடமும் கத்திவிட்டாள்.
“நீங்க ஏன்ப்பா கரிகாலன் கிட்ட பேசுறீங்க. அவன்லாம் ஒரு ஆளா… உங்க தகுதிக்கு அவன் இடா… உங்க பொண்டாட்டிக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். தகுதி பார்த்து பேசுங்க, தராதரம் பார்த்து நடந்துகோங்க. அது தான மீனாட்சி அம்மாக்கு பிடிக்கும். நீங்க பேசுறது அவங்களுக்கு தெரியுமா…” என்று கேட்க.
“மது ஏன் டா?… கஷ்டமா இருக்கு…” என்றார் சுந்தரம், அருகில் தான் மீனாட்சியும் இருந்தார்.
“கஷ்டமா… என்னை விடவாப்பா… நான் பார்த்த வலியை விடவா நீங்க பார்த்துடீங்க… ஏன் என்னை விட்டீங்க?… எங்கப்பான்னு உங்களை எவ்வளவு நம்பினேன்…”
“மதும்மா… அப்பாக்கு எதுவும் தெரியலைடா…”
“நான் தான் ஆரம்பத்திலே சொல்லிட்டேன் டாடி. ரம்யா எனக்கு ஒரு ஆளே இல்லை. நான் கஷ்ட பட்டேன் தான், அது உங்களால மட்டும் தான். எங்கப்பான்னு நான் ரொம்ப பெருசா நினைச்சுருந்தேன். உங்களை நம்பினேன், நீங்க விட்டது தான் என்னை பாதிச்சது. ரம்யா இல்லை. உங்க யாரோடையும் போராட முடியாம, போராட விரும்பாமல் தான் ஒதுங்கி வந்துட்டேன்… எங்கப்பாவோட இளவரசி நான் தான்னு ரொம்ப தலைகணம், அதான் மண்டையில தட்டி கீழ தள்ளி விட்டீங்க…” ஆதங்கம் நெஞ்சு நிறைய இருந்தது.
“அப்படிலாம் எதுவும் இல்லைடா. நீ எப்பவும் அப்பாவோட இளவரசி தான்…” என்றார் தயவாக.
“உங்க இளவரசிய ஏன்ப்பா நீங்க விட்டீங்க…”
“நானா… இல்லைடா மது…” என்று தந்தை சொல் கோபத்தை உண்டு பண்ணியது.
“நீங்க என் கூட இருந்திருந்தா, நான் இங்க வந்து நிக்க வேண்டிய அவசியமே இல்லை. மனசு குறுகி நீங்க பேச வேண்டியதும் இல்லை. நீங்க பார்த்த மாப்பிள்ளை தான கரிகாலன். நீங்க சொல்லி தான கழுத்தை நீட்டினேன். அப்புறம் ஒத்து வரலை, நீங்க தான், வான்னு சொன்னீங்க. உங்க பின்னாடியே நான் வந்துட்டேன். ஆனா, எல்லாரும் எனக்கு என்ன பண்ணீங்க… என்னை அழுத்தி, ஓடச்சு மூலையில உட்கார வைக்க பார்த்தீங்க… எனக்காக, என் புருசன் வீட்டுல பேசுன நீங்க, சொந்த வீட்டுல பேசலை… யாரோ ஒருத்தவங்க என்னை பேசும் போது ரோசம் வந்துச்சு. ஆனா, உங்க வீட்டு ஆளுக பேசும் போது அமைதியா இருந்தீங்க. அது ஏன்?… அப்போ, என்னை பேசுனது பிரச்சனை இல்லை. யார் பேசுறாங்க அது தான் பிரச்சனை. உங்க அந்தஸ்துக்கு இருக்கவங்க என்னை பேசுனா, ஆமான்னு வாய மூடிக்கணும். இதுவே, தகுதி இல்லாதவங்கன்னு நீங்க நினைக்கிற ஆள் பேசுனா… சரிக்கு சரி சண்டைக்கு போவீங்க. அப்படி தானா…” என்று உக்கிரமாக கேட்க.
பதறி போய், “மது அப்படிலாம் இல்லடா… அப்பாவ உனக்கு தெரியாதா…” என்று விளக்கம் கொடுக்க சுந்தரம் வந்தார்.
“அப்படித்தான்… அப்படித்தான். இன்னைக்கு உங்க வீட்டுல வந்து நாட்டாமை பண்ணுற ஆட்களாம் யாரு?… நம்ம கஷ்டத்துல கூட நின்னவங்களா?… இல்லையே. என்னோட ஒழுக்கத்தை, என் வாழ்க்கைய விமர்சித்தவங்க. அவங்களா எனக்கு ஒரு நல்ல வழியை காட்ட போறாங்க. அவங்களுக்கும் குறைவா கரிகாலன்…” என்றாள் ஆத்திரமாக. பேச்சே வரவில்லை சுந்தரம் தம்பதிக்கு.
“உங்களுக்கு ஹார்ட் அட்டாக், நான் போலீஸ் ஸ்டேஷன்ல, அம்மா தனியா எவ்வளவு அல்லாடுனாங்க. இவங்க யாரு நம்ம கூட நின்னாங்க. ஒருத்தர் ஒரு உதவி செஞ்சாங்களா… பொம்பளை பிள்ளைக்கு செல்லம் குடுத்தீங்க, படிக்க வச்சிருக்க கூடாது, ஒழுக்கம் இல்லை, அழகுன்னு திமிர் அதான் கெட்டு போனா, பொம்பளை பிள்ளையை தலையில தூக்கி வச்சு ஆடுன சுந்தரத்துக்கு தேவை… இப்படி எவ்வளவு பேச்சு. எனக்கு கல்யாணமே ஆகாது. வீட்டோட தான் கிடக்க போறா… இதெல்லாம் யார் சொன்னா?… இப்ப நீங்க சொந்தம்ன்னு வீட்டுக்குள்ள விட்ட உங்க சொந்தம் தான் சொல்லுச்சு…” என்று மூச்சு வாங்கியவள்.
“இப்படி பேசுன உங்க சொந்தக்காரங்க முன்னாடி, நான் தலை நிமிர்ந்து வாழணும்ன்னு தான் வெளிய மாப்பிள்ளை பார்த்திங்க, அமஞ்சதா இல்லை அமைய தான் விட்டாங்களா, கிடையாது ஊர் பூரா எம் பேர் நாறடிச்சாங்க. வர்ற எல்லாரும் ஓடி போன பொண்ணுன்னு சொல்லியே முடக்கி போட்டாங்க. நானே, நாம தான் தப்புன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கும் அவங்க பேச்சு எல்லாம். நம்ம கிட்ட வசதி, வீடு, பணம், கார் எல்லாம் இருந்துச்சு. ஊர்ல பெரிய குடும்பம் தான். அதை வச்சு உங்களால எனக்கு நல்ல வரன் கொண்டு வர முடியலை. அதனால் தான் நீங்க கரிகாலனை தேர்வு செஞ்சிங்க. அது வரை சரியா தானப்பா போச்சு. அவங்க யாரும் என்னை கேக்கல, நீங்க தான் எனக்கு அவரை கேட்டீங்க. மறுப்பு சொல்லாம சரின்னு, தாலி கட்டினார். அப்புறம் குடும்ப பிரச்சனை, என்னை கூட்டி வந்துட்டீங்க. அது வரை தான் சரி. என்னை பெத்தவங்கன்னு உங்க பின்னாடி வந்த என்னை என்ன பண்ணீங்க… யார் முன்னாடி எல்லாம் நான் தலை நிமிர்ந்து வாழணும்ன்னு நினைச்சேனோ, அவங்க முன்னாடியே நான் வாழ்க்கையில தோத்து போய் நின்னேன். நாலு வருஷத்துக்கு முன்ன நான் வாங்குன பேச்சு, எனக்கு தீராத வலி. அதை மறந்து அவங்க கூட நான் எப்படி இழைய முடியும். உங்க அக்கா வீட்டுல மூணு பசங்க இருக்காங்க. யாராவது ஒருத்தருக்கு என்னை கேட்டாங்களா?… இன்னைக்கு அவங்க எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்க்க போறாங்களாம்… அவங்க முன்னாடி என்னை நிக்க வச்சு… உம் புருசன் தகுதி இல்லாதவன், தராதரம் தெரியலை, ஓட்டு வீடு, கஞ்சிக்கு வழி இல்லை, நாங்க தான் வாழ்க்கை கொடுத்தோம் என்னென்ன பேசுனாங்க. எனக்கு எவ்வளவு வலிக்கும்…” எப்போது அழுகை வந்தது என்று தெரியவில்லை. கண்களில் இருந்து நீர் இறங்கியது.
“எனக்கு ஒரு விசயம் தான் புரியவே இல்லை. எம் மாமியார் பேசுனது தப்புன்னு தான கரிகாலன் வேண்டாம்ன்னு சொன்னீங்க.உங்க வீட்டு ஆளுக என்னை பேசாத பேச்சா… அது ஏன் உங்களுக்கு, அம்மாவுக்கு எல்லாம் உறைக்கவே இல்லை. சரி அதா கூட விடுங்க, உங்க வீட்டு குத்து விளக்கு, மகாலட்சுமி என்னை என்னென்ன பேசுனா… வந்ததும் சாவிய தூக்கி கொடுத்து நிர்வாகம் பண்ண சொன்னீங்க தான. அவ அண்ணனை மாப்பிள்ளை கேட்கும் போது என்ன பேசுனா?… நான் நடத்தை கெட்டவ, ஒழுக்கமில்லாதவ, ஓடி போனவன்னு எவ்வளவு பேச்சு, அவளை நீங்க என்ன பண்ணீங்க. ஏன் இவ்வளவு பிரச்சனைக்கும் அவ தான் காரணம். எங்கிட்ட கரிகாலன் வேணாம்ன்னு சொன்ன மாதிரி, மாதவன் கிட்ட ரம்யா வேணாம்ன்னு சொன்னீங்களா?…. சொல்லல தான, மிஞ்சி போனா என்ன செய்வீங்க வீட்டை விட்டு வெளியே அனுப்புவீங்க. அதெல்லாம் ரம்யாக்கு ஒரு விசயமே இல்லை. சரியா ஒரு மாசம் கழிச்சு அவளே வந்துருவா!.. அம்மாவும் தான் என்னை பேசினாங்க, அவங்களை என்ன சொல்லுவீங்க. சண்டை வரும், வேற என்ன கோபம் இருக்கும், அவ்வளவு தான். அப்போ நீங்க எல்லாம் சரியாதான் இருக்கீங்க. நாங்க மட்டும் ஏன் விலகி நிக்கணும். எம் புருசன் தான் என்னை பேசவே இல்லையே. எம் மாமியார் தான பேசுனது. அதுக்கு எம் புருசன் பதில் சொல்லணும்…”
“இப்படியெல்லாம் ஆகும்ன்னு நாங்க யோசிக்கவே இல்லை மது…” தயங்கி தான் சுந்தரம் சொன்னார். அந்த நேர கோபம் முடிவு எடுத்தாச்சு, மது அளவுக்கு யோசிக்க வில்லை.
“ஏன் ஆகாது. உங்க வீட்டம்மா மரியாதை கொடுத்தா, மருமகள் தன்னாலே மரியாதை கொடுப்பா… நீங்க எங்களை நடத்திய விதம் தான், ரம்யாக்கு தைரியமே… அன்னைக்கு உங்ககிட்ட நான் என்னப்பா சொன்னேன். சீர் கொண்டு வர தான சொன்னேன். நீங்க என்ன பண்ணீங்க?… யார் தான் சீர் வாங்கல. எல்லாரும் அவங்க சக்திக்கு தக்க, தன் பொண்ணுக்கு சீர் செய்றாங்க. நீங்க எதிர்பார்த்தீங்க தான கவர்மென்ட் வேலை, சொந்த வீடு, தாலி கொடி எல்லாம் கேட்க தான செய்தீங்க. அதே மாதிரி உங்க மகளுக்கும் கொடுத்த என்னப்பா?… இவங்க அண்ணன் பொண்டாட்டி பத்து பவுன் போட்டு வந்தாங்களாம். அந்த பத்து பவுன் கூட எனக்கு போடலை. நான் சும்மா தான் வந்துருக்கேன்…”
“மது” என்று கத்தினான் கரிகாலன்.
“ஷ்… நான் தான் பேசணும்ன்னு சொன்னேன்ல, போங்க அந்த பக்கம். கல்யாண செலவு மாப்பிள்ளை வீட்டு பக்கம், நகை மட்டும் தான் போட்டு விட்டீங்க. அப்புறம் அதையும் வந்து வாங்கிட்டு போயாச்சு. கடைசில ஓட்டு வீட்டில சீர் கொண்டு வர மாட்டோம்ன்னு சொல்லிட்டீங்க. இது எல்லாம் தான் அவங்களுக்கு கோபம். நான் எப்படின்றது அவங்களுக்கு தேவையே இல்லை. என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணத்துக்கு சரி சொன்னாங்க. சீர்ல தான் பிரச்சனை தொடங்கிச்சு. இவர் கூட வாழ விருப்பம் இல்லைன்னா, நான் ஏன் உங்களை சீர் கொண்டு வர சொல்ல போறேன். எனக்கு ஒரு விசயம் புரியவே இல்லை. அந்த வீட்டுல உங்களுக்கு என்ன பிரச்சனை. அந்த ஓட்டு வீட்ட பார்த்து தானே பொண்ணு கொடுக்க வந்தீங்க. அந்த ஓட்டு வீட்டுல பொறந்தவன தான மாப்பிள்ளை பார்த்தீங்க. அப்புறம் அங்க சீர் வர என்ன பிரச்சனை. அந்த வீடு, அங்க இருக்கவங்க, கடன் எதுவுமே தெரியாதா… எல்லாம் தெரிஞ்சு, கரிகாலனை நம்பி தான் உங்க பொண்ணை கொடுத்தீங்க. அப்ப அவரை கூப்பிடு வச்சு தான் பேசி இருக்கணும். அவன் கூட வாழ விருப்பமான்னு என்னையும் கேட்டு இருக்கணும். உங்க விருப்பத்துக்கு நீங்க முடிவு எடுத்திங்க, எங்க விருப்பத்துக்கு நாங்க முடிவு எடுத்தோம். நீங்க பார்த்த அமெரிக்கா மாப்பிள்ளையை விட, கரிகாலன் சரின்னு தோணுச்சு. கரிகாலன், அப்படின்னா இளக்காரம். நமக்கு கீழ தான்னு ஒரு எண்ணம். நம்மளை மீறி நிக்க மாட்டான், நம்ம தோதுக்கு வளைவான். ஆனா, கரிகாலன் எப்படின்னு தெரிஞ்ச உங்களுக்கு கரிகாலன் அம்மா எப்படின்னு தெரியவே இல்லை. அவங்க வாய் பேசுவாங்கன்னு நீங்க நினைக்கவே இல்லை. அவங்க பேச்சு, அம்மாவ தூண்டி விட்டுருச்சு. அம்மாவும் கொஞ்சமா பேசலை. பசியோட இருக்குற ஒருத்தனுக்கு சாப்பாட்டை போட்டு, திரும்ப பிடிங்கிட்டா எப்படியோ, அது தான் அம்மா பார்த்த வேலை. இப்பவும் நீங்க கரிகாலனை தான் போன் பண்ணி பேசுறீங்க, எங்கிட்ட பேசலை. நான் சண்டை போடுவேன், கரிகாலன் அமைதி. ரொம்ப எளிதா சமாளிக்கலாம். எங்கிட்ட அப்படி முடியாதே… நீங்க நினைச்சது தான் நானும் நினைச்சேன். எவனோ தெரியாத ஒருத்தனுக்கு ரெண்டா தாரமா போறத விட, என்னை தாங்குற புருசனை அனுசரிச்சு போயிடலாம். நான் தான் அவனை தேடி வந்தேன். அதுல எனக்கு வருத்தம் கிடையாது.நான் எடுத்த முடிவு சரி தான். வேற ஒருத்தன இருந்தா உங்கம்மா பேசின்ன பேச்சுக்கு உன் கூட வாழ முடியாதுன்னு தான் சொல்லுவான். அப்படி சொல்லி இருந்தா, நான் ரோட்டுல தான் நிக்கனும்.கரிகாலன் நல்லவன். அதான், நான் நல்லா இருக்கேன்…” என்று மது தன் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் சொல்லி முடிக்க,
“மதும்மா… அப்பா, உனக்கு செய்ய கூடாதுன்னு நினைக்கல. உம் பேர்ல ஒரு கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வச்சு இருக்கோம்…” என்று சொல்ல.
“ஒரு கோடியா?… வெறும் ஏழு லட்சம், உங்க அக்கவுண்ட்ல சும்மா கிடக்கும். அந்த கடனை கழிக்க முடியாம நானும், எம் புருசனும் எவ்வளவு கஷ்ட படுறோம் தெரியுமா… என் வீட்டுக்காரர் நைட் வேலைக்கு போறாங்க. நான் டியூசன் எடுக்கிறேன். வருசத்துக்கு ஒரு லட்சமாது மிச்சம் பண்ண முடியுமான்னு தவிச்சு நிக்கிறோம். நான் தேவை படும் போது கிடைக்காத சொத்து, இனி தேவையில்லை. ஏன்னா?.. இந்த கஷ்டம் எங்களுக்கு பழகி போச்சு. இந்த கஷ்டத்திலும் சந்தோசமாக வாழ பழகிட்டோம். உங்க பணம் எங்களுக்கு வேணாம். உங்க வீட்டம்மா சொல்லி கொடுத்த பாடம் அப்படி…” என்று நக்கலாக மது சொல்ல.
இதுவரை அமைதியாக இருந்த மீனாட்சிக்கு கோபம் வந்தது.
“உன்னை வீட்டை விட்டு போன்னு சொன்ன உன் புருசன் நல்லவன். பெத்த தகப்பன் உனக்கு கெட்டவனா… நீ ஆயிரம் தப்பு பண்ண போதும், எம் மகன்னு கூட நின்னாரு, கொஞ்சமாது அந்த நினைப்பு இருக்கா… நீ ஒழுங்கா இருந்தா, ஊர் ஏன் பேச போகுது. உனக்காக தலை குனிந்து நின்ன மனுசன். நேத்து இன்னியாரம் கல்யாணம் முடிச்ச நீ எம் புருசன்ன்னு சொல்லுற… எங்களுக்கு எப்படி இருக்கும். போதும்டி ஆத்தா, உன்னை பெத்ததுக்கு இதுவரை நல்ல பேரு வாங்கி குடுத்துட்ட. மனசு குளிர்ந்து போச்சு. போ போய் உன்னை துரத்தி விட்ட புருசன் கூடவே இரு, அவன் தான் நல்லவன், உத்தமன், உசத்தி. என்னவோ நல்லா வாழ்ந்த சரிதான். அதை பார்த்தும் நாங்க தான் சந்தோச படுவோம். பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு தான்…” என்று மீனாட்சி அழுக.
“போதும் உன் நாடகம். அங்க இருந்த வரை ஒருவேளையாவது சாப்பிட சொன்னாயா… எதிரிய மாதிரி பார்த்த. நான் ரெண்டாவது படிக்கும் போது அப்பா, உன்னை கை நீட்டி அடிச்சாரு தான. நீ கூட தாலிய கலட்டி எறிஞ்சுட்டு, எங்களை கூட்டிட்டு போன. பத்து நாள் கூட இருக்காது. நீயா தான அப்பாவை தேடி வந்த… நீ வந்த தப்பில்லை. நான் வந்தா தப்பா. இது என்ன நியாயம்…” என்று மது எதிர் கேள்வி கேட்க.
“மீனாட்சி பொண்ணு தான. அப்புறம் வாய் எப்படி குறையும்…” என்று நினைத்தது அவள் பெருமைக்குரிய கணவன் தான்.
“அடியே! எம் புருசன் என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாரு…” என்று மீனாட்சியும் மகள் என்று பாராமல் சண்டைக்கு நிக்க.
“இப்ப என்ன உனக்கு, கரிகாலன் கூட நான் நிக்கிற காரணம் தெரியணும். அதான, நாலு வருசமா ஒரு பேரு என்னை துரத்தி அடிக்குது. என்னை நிமிர்ந்து நிக்க விடாம, நிமிரும் போதெல்லாம் குனிய வச்சு,ஓட ஓட விரட்டுது. நீ ஒரு ஓடுகாலி, ஒழுக்கமில்லாதவ, அவன் கூட தான ஓடி போன உன்னை விட்டு வச்சுருப்பான, இப்படி சொல்லியே மதுமிதாவா ஈசி டார்கெட், இந்த ஒன்ன சொல்லியே முடக்கி போட்டாங்க. என் பேரன் கல்யாணம் செய்தாலும், இந்த பேச்சு மாறாது போல. என் அம்மால இருந்து மாமியார், அண்ணன் பொண்டாட்டி, நாத்துனா, அத்தை, மாமா, சித்தி, பிரண்ட்ஸ் சொல்லாத ஆள் இல்லை. எனக்கு தெரிஞ்சும், தெரியாமலும் பேசி இருக்காங்க. என்னை கட்டிக்கிட்ட இந்த மனுசன் மட்டும் தான் ஒரு சொல் சொன்னது இல்லை…” தேம்பி அழுத படியே தான் பேசினாள்.
“இன்ன வரைக்கும் நான் தான் கோபத்துல ஒரு சொல் சொல்லுவேன் தவிர அவங்க ஒரு நாளும் கோபமா கூட பேச தெரியாது. நான் சரியான பாதையில தான் நிக்குறேன்னு ஒரு நம்பிக்கைய கொடுத்தது இந்த மனுசன் தான். என் கடந்த காலத்தில என்னை நடந்தாலும், அது இவருக்கு தேவையில்லை. நான் மதுமிதா, கரிகாலன் பொண்டாட்டி அவ்வளவு தான். எம் மாமியார், நாத்துனா, அவங்க குடும்பம் எப்படி இருந்தா எனக்கு என்ன, என் கழுத்துல தாலி கட்டுன மனுசன் என்னை நம்புறாங்க. காலத்துக்கும் என்னை தாங்கி துணை நிக்க போற உறவு எம் புருசன் தான். அவர் நம்பிக்கை மட்டும் போதும். மத்த யார் சொல்லும் என்னை பாதிக்காது. அவர் ஏமாளியா இருந்தா என்ன, நான் புத்தியா இருந்துறேன். நானும் தான் கோவகாரி, அவர் பொறுமையா தான் இருப்பாங்க. நான் அடிக்கடி சண்டை போடுவேன், வார்த்தையை விடுவேன், அவர் நிதானமா தான் இருப்பார். என்னை பாக்குற யாருக்கும் என் நல்ல வாழ்க்கை கண்ணுக்கு தெரியாது தான். வசதியில்லாதவன்னு தான் சொல்லுவாங்க, வாழ்க்கை இல்லாதவன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. வசதி தன்னால வரும், இந்த வாழ்க்கை இழந்தா திரும்ப வராது… அதான் கெட்டியா புடிச்சுட்டு இருக்கேன். இனி விடவே மாட்டேன்…” என்று அழுகையோடு சொல்லி முடிக்க.
பேச்சு வரவில்லை மீனாட்சிக்கு. மகளின் அழு குரல் சுந்தரத்தை ஏதோ செய்தது. ஏன் கரிகாலனிடம் சென்றாள் என்ற உண்மையை சொல்லி விட்டாள். நெஞ்சை தடவி கொண்டார் சுந்தரம்.
கரிகாலன், மனைவியை சத்தம் போட்டான். அவளின் கடந்த கால வலியை தோண்ட தான் வேண்டுமா… பெற்றவர் தானே ஏதோ சொல்லி விட்டு போகிறார் என்று விட்டால் தான் என்ன… என்று கடிய.
அவள் அழுகையின் சத்தம் இன்னும் கூடியது. தன்னையே குறை சொல்கிறான் என்று கோபம் எழ, அவளும் கத்த தொடங்கினாள்.
“ஆமா, நான் தான் தப்பு கரிகாலன். நான் மட்டும் தான் தப்பு. மதுமிதாவா… அம்மா வீட்டுலையும் சரியில்லை, புருசன் வீட்டுலையும் சரியில்லை. அவ தான் கெட்டவ… எல்லாரையும் குறை சொல்லிட்டு, சண்டைக்கு நிக்குறவ… நீங்க எல்லாம் சரியா… நீங்க எல்லாரும் தான் தப்பு…” என்று இவளும் கத்த தொடங்கினாள்.
அதுவரை அமைதியாக கீழே நின்று இருந்த அம்பிகாவும், சுமதியும் மேலே வந்து விட்டார்கள். ஏதோ புருசன், பொண்டாட்டி சண்டை என்று இருக்க. மதுவின் அழுகுரல் பெரிதாக, மனம் பொறுக்காமல் வந்து விட்டார்கள்.
அவர்களை பார்த்து தயங்கி நின்றான் கரிகாலன். சுமதி, அவளை கீழே இழுத்து செல்ல. அம்பிகா தேங்கி நின்றார்.
“ஏன் தம்பி ரொம்ப அழுறா?… கை எதுவும்…” என்று இழுக்க.
“ஐயோ! அக்கா, என்னை பார்த்த அடி குடுக்குற மாதிரியா இருக்கு. அடி வாங்குறவன் தான் நான். இது வேற, அவங்க அம்மா கூட கொஞ்சம் மனஸ்தாபம்…” என்றான்.
“நான் ஒரு விசயம் சொல்லவா, தப்பா நினைக்க கூடாது. சொல்லி காட்டவோ, மூட்டி குடுக்கவோ நான் பேசலை. அது வந்து…” என்று தயங்க
. “சும்மா சொல்லுங்க அக்கா. நான் தப்பா நினைக்க மாட்டேன்…” என்று கரிகாலன் சொல்ல.
“உங்கண்ணனும், உங்களை மாதிரி தான். தம்பி, தங்கச்சி,அவங்க வாழ்க்கைன்னு தான் உழைப்பு எல்லாம் போட்டாரு. கடமை முடிந்து, நமக்காக வாழலாம்ன்னு திரும்பி பார்த்த ரெண்டு பசங்க, சொந்த வீடு கூட இல்லை. அடுத்த கடமைய நோக்கி ஓட தொடங்கியாச்சு… பசங்க ரெண்டு பேரையும் நிலை நிறுத்திய பின்னாடி திரும்பி பார்த்த எங்க வாழ்க்கையே ஓடி போயிருக்கும். அடுத்த கொஞ்ச வருசம் தான், யாரோ முன்ன, யாரோ பின்ன தெரியாது. என்ன வாழ்ந்தோம்ன்னு யோசிச்சா நமக்கான கடமை மட்டும் தான் இருக்கும். நம்ம வாழ்க்கை முழுக்க அடுத்தவங்களுக்காக ஓடி இருப்போம். அவங்க உட்கார்ந்து தான் இருப்பாங்க. நாம் பெத்த பிள்ளைகள் வர. ஆனா, பொண்டாட்டி… புருசன் கடமைக்காக அவளும் சேர்ந்து தான் புருசன் கூட ஓடுவா… அவளுக்கான வாழ்க்கையும் வாழ்ந்திருக்க மாட்டாங்க…”
கரிகாலனுக்கு புரிந்தது. என்ன சொல்ல வருகிறர்கள் என்று…
“உங்க கல்யாணத்துக்கு முந்தி, உங்க குடும்பத்துக்காக வாங்குன கடன் தான இப்ப இருக்குறது. உங்க குடும்பம்ன்னா, உங்க அம்மா, அண்ணன், தங்கச்சி. இப்ப அந்த கடனை நீங்க தான் அடைக்கிறது. சரி, ஆன அந்த சுமையை யார் சுமக்குறது. மது தானா… கூட பொறந்த பிறப்பே, ஒருத்தருக்கொருத்தர் துணை நிக்க தான். நீங்க செய்ங்க, யாரும் வேணாம்னு சொல்லல. ஆனா, உங்களை வருத்தி, உங்க குடும்பத்தை கஷ்ட படுத்தி செய்ய வேண்டாம். இல்லைன்றதும் ஒரு பதில் தான். சில நேரம் அந்த பதிலையும் சொல்லலாம். இந்த ஊர்ல டிவி இல்லாத, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு உங்க வீடு தான். மது நிப்பா, நாளைக்கு குழந்தை வந்தா… அவங்களையும் சேர்த்து நாம கடன்ல தள்ள கூடாது. அவங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைச்சு கொடுக்கணும். நாம கூட தான் பொறந்ததோம், அதுக்காக கூடவே வாழ முடியாது. அவங்கவங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையில நாம இருக்க மாட்டோம்.உங்க தங்கச்சிக்கு தேவையான வசதி எல்லாம் செஞ்சு குடுத்த நீங்க, உங்க பொண்டாட்டிக்கு செய்ய முடியலை. உங்க கடனுக்காக யார் தன்னோடு தேவைகளை இழந்து நிக்குறா… உங்களோட சேர்ந்து கஷ்ட படுறா, அவளுக்கு என்ன கிடைக்க போகுது. இ ப்ப வாங்கி குடுக்க வேண்டிய பூவ, ஐம்பது வயசுல வாங்கி குடுத்தா பாசம் இருக்கும். ஆசை இருக்காது வாத்தியாரே…”
அங்கு சுமதி, அவளை வறுக்க தொடங்கினாள்.
“என்னா வாய் டி உனக்கு. எதுக்கு அம்புட்டு சத்தம். வாய் பேசதவன் கிடைச்சா சந்தோசமா வச்சு வாழ பாரு, சண்டைக்கு நிக்கிற… வாத்தியார் அமைதியா நிக்குறாங்க, உங்க மாமன் இருக்கணும் கன்னம் வீங்கி போகும். புருசனா அடிக்கிற மாதிரி பாய்ஞ்சி போறவ…”
“அடியே!… என் கதை தெரியுமா… நானும், அயித்த மகன கட் டிக்க ஆசை பட்டவ தான். கண்ணாலயே பேசுவோம். சொந்தம் தான் என்ன பிரச்சனை வர போகுதுன்னு நினைக்க. எங்கப்பரு சத்தமில்லாமல் உம் மாமனுக்கு பேசி முடிச்சு விட்டாங்க. ராத்திரி கொல்ல பக்கம் உட்கார்ந்து அழுதுட்டு, மனச ஏமாத்தி ஒத்த சொல்லு மறுப்பு சொல்லாம வாக்கப்ப்பட்டு வந்தேன். உலக குடிகாரன் உம் மாமன். பசிக்கு வயித்துல ஈர துணிய நான் போடுவேன். பிள்ளைக என்ன செய்யும். பெத்த வயிறு துடிச்சு போச்சு. ரோட்டுல டீ வித்தேன். அப்புறம்,கூல் ,தயிர், புளி சாதம் கிண்டி கடை கடையா வித்தேன். பிள்ளைக பெருசாக உம் மாமனுக்கு புத்தி வந்து தான் இட்லி கடை போட்டோம். அப்புறம் ஓட்டல், அப்படியே பொழப்பு போய்டுச்சு. ஒரு பொம்பளை மனசுல ஆயிரம் இருக்கும். நால சொல்லணும், ரெண்டை ஒளிக்கணும். எல்லாரும் அந்த வயசுல தடுமாறி நிக்குறது தான். அதையே பேச கூடாது. நீ பேசுற, வாத்தியாருக்கு எம்புட்டு சங்கட்டம். நல்லவனையும் நாம கெடுக்க கூடாது. விவரமா உன் வாழ்க்கையை பாரு. யார் துணையும் இல்லை…” என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தாள்.