இதோ வெற்றி தன்னுடைய புது வாடகை வீட்டில் பால்கனியில் நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் இப்போது யாரும் இல்லை . தந்தை, தங்கையுடன் பெரிய பிரச்சனையாகி வீட்டை விட்டு வெளியே வந்திருந்தான். மலர் இப்போது ரவியின் வீட்டில் அவன் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறாள். வித்யா? அவனின் உயிர் அவன் அவளுடன் இருக்க வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாள் . இதோ இப்போது இங்கே நின்று கொண்டிருக்கிறான். காலையில் மலரின் உதவியுடன் பால் காய்ச்சினான் . காய்ச்சிய பாலை அவர்கள் இருவர் மட்டுமே குடித்தார்கள். இவர்கள் இருக்கும் ப்ளோரில் இரு வீடுகள் தான். எதிரில் இருக்கும் வீடு பூட்டி இருந்தது. அங்கும் யாரோ லீசிற்குத் தான் வருவார்கள் போலும்.
இன்னும் யாருடைய வாழ்வும் செட்டில் ஆன மாதிரி தெரியவில்லை. வெற்றியின் காதல் விவகாரம் அவன் தந்தைக்கு தெரிந்ததற்கு பிறகு என்ன நடந்தது? பார்க்கலாம்.
அன்று தோழியின் இறப்பிற்கு சென்று வந்தவளுக்கு மனம் ஆறவே இல்லை.
“அவ எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா? தமிழ் பொண்ணுதான். பாக்க கேரளா பொண்ணு மாதிரி அவ்ளோ அழகா இருப்பா . எத்தனை பசங்க அவ பின்னாடியே சுத்தி இருக்காங்க தெரியுமா? எங்க ஊரிலேயே நாந்தான் முதல்ல பெரிய படிப்பு படிக்க வந்துருக்கேன். பெரிய வீடு கட்டி அம்மா அப்பாவை பெரிய சோபால உகாத்தி வைக்கணும். கூலி வேலை செஞ்சவங்க சீக்கிரமா முதலாளி ஆகணும் இப்டி எவ்ளோ ஆசையோட இருந்தா தெரியுமா? அவங்க கீழ் ஜாதி காரங்களாம். அதனால அவங்க ஊருல, சேரில் உக்கார கூடாதாம். எப்பவும் ஓரமா கை கட்டித் தான் நிக்கணுமாம். அவ அம்மா அப்பாவை சோபால உக்காத்தி வைக்கணும். அதுதான் அவளோட பெரிய கனவே. அவ சொன்ன போது முதல்ல நாங்க எல்லாம் சிரிச்சோம். அப்புறம் அவ விவரிச்ச போது தான் எங்களுக்கே புரிஞ்சது.அந்த பொண்ண போய் இப்டி பண்ணிட்டாங்களே! கண்டிப்பா அவ தற்கொலை பண்ணி இருக்க மாட்டா . ஊருல அவ எத்தனையோ கொடுமை எல்லாம் பார்த்துதான் வளர்ந்துருக்கா. அவளுக்கு மன உறுதி அதிகம்.
“ஏன் மேடம். உங்க காலேஜு ஒனறு …”
“அவரு ரொம்ப நல்லவரு தான் வெற்றி. நம்ம தொழில் துறை மந்திரி அருணாச்சலம் சார் இருக்காருல்ல. அவரோட காலேஜுதான் இது. அவரு கூட ரொம்ப நல்லவருதான் வெற்றி. பேரு தான் அவரோட காலேஜு. ஆனா அவரு எப்பவும் வந்ததே இல்ல. அவரு பையன்தான் சில சமயம் வருவாரு”
“பையனா?”
“ம்! நம்ம அதிபன் அருணாச்சலம். அவரோட கம்பனிலதானே இப்ப நான் வேலை செய்யறேன்”
“அப்ப அன்னிக்கு நான் வராத போது அவருதான் உங்கள கொண்டு வந்து வீட்டுல விட்டதா?”
“ம்! ஆமாம் “ எப்போதும் காதணி ஆட அவள் ஆமாம் சொல்வது அவனுக்கு பிடிக்கும். இந்த ஆமாம் நிச்சயம் பிடிக்கவில்லை. எனக்கும்தான்.
“வெற்றிக்கு மனதில் எங்கோ ஏதோ ஒரு மூலையில் சுரீரென்றது. ஏதோ தவறாக இருக்குமோ?”
மனதின் எச்சரிக்கை ஒலியை நாம் அலட்சிய படுத்தலாமா ? இல்லை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? வெற்றிக்கு அது மிகவும் முக்கியம்தான். ஆனால் வருங்காலத்தில் வித்யா செய்ய போகும் சிறு சிறு தவறுகளால் எல்லாமே தலை கீழாக மாறி விடுமே ?
விதி …… வலியது…..
அதற்கு பிறகு வந்த நாட்களில் அவர்களின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதற்கு கூட முடியாதவனாகிப் போனார் விஜயன். எல்லாம் அதிபனின் கைவண்ணமே . விஜயன் தற்போது இருக்கும் வீட்டிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் அதிபனின் புது கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிஸ் வர போகிறது. ஏற்கனவே இவர்களின் அருகில் இருந்த வீட்டை பேரம் பேசி வாங்கி விட்டார்கள். விஜயனுக்குத்தான் இந்த இடத்தை விட்டு நகர இஷ்டமில்லை. வாழ்க்கையில் வெற்றி கண்டு முதன் முதலில் வாங்கிய வீடு. காயத்ரிக்காக வாங்கிய வீடு. தன்னை மட்டுமே நம்பி வந்தவளுக்காக வாங்கிய வீடு. அப்போது கையில் இருந்த பணத்தில் சிறியதாக கட்டி பிறகு பணம் வரவ பெரியதாக்கி இருந்தார்கள். இன்னும் இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் அவர் வாயே திறக்கவில்லை. இது தன் மனம் கவர்ந்தவளின் வீடு என்ற விஷயத்தை அதிபனும் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் இன்னும் அவனுக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு விஷயம் பெரியதாக இல்லை. அவனுக்கு கீழ் இருக்கும் ஆட்களே இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் முடித்து விடுவார்கள். அதிபனுக்கு தெரிந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? தான் யார் என்பதை காட்ட வீட்டு பெண்ணை தூக்கிச் சென்று கட்டிலில் வீரத்தை காட்டி இருப்பான். அப்படி ஒன்று நடக்குமா?
அதிபனின் அலுவலகத்தில் வித்யா வேலை பார்க்கவும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். பல பெண்களை கட்டிலில் வீழ்த்தியவனுக்கு ஏனோ மனதின் காதலை வித்யாவிடம் சொல்ல முடியவில்லை.
அவன் வீரத்தை காட்டிய பெண்களில் நம் மதுவும் அடக்கம். அந்த மூன்று பெண்களின் கொலை வழக்கு சம்பந்தமாக சில சமயங்களில் அவள் அதிபனை சந்திக்க வேண்டி இருந்தது. தனக்கு எதிராக அவள் ஆதாரம் சேமித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவனும் அறிந்து கொண்டான். வழக்கம் போல அழைத்து மிரட்டினார்கள்தான். அவள் மசியவில்லை. குடும்பத்தை வைத்து மிரட்டலாம் என்றால் குடும்பமும் இல்லை என்னதான் செய்ய? தெரிந்த பல வழிகளில் இதுவும் ஒன்று. போதை மருந்து கொடுத்து அவளை அசிங்க படுத்தி இருந்தார்கள். ஒரு முறை அல்ல . பல முறை. வீட்டில் கொண்டு வந்து தள்ளி விட்டு போனார்கள். அடுத்த இரு தினங்களுக்கு அவள் எழும்பவில்லை. வீட்டில் வந்து பார்த்த காவலர்கள்தான் அவளை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவளின் நிலை கண்டு ஆண் பெண் வேறுபாடு இன்றி கண்ணீர் வடித்தார்கள். அத்துடன் அவள் விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட காவலர்களை பார்த்த மருத்துவருக்கும் மனதிற்கு நிறைவாகவே இருந்தது. அவரும் விஷயத்தை வெளியில் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று வாக்களித்தார். ஹை பீவர் . விடுப்பில் இருந்தாள் ஒரு வாரம். உடலில் இருந்து முழுவதுமாக போதை பொருள் அகற்றப்பட்டது.
எப்படிப்பட்ட பெண் அவள்!ஆணுக்கு ஆணாக பெண்ணுக்கு பெண்ணாக, உடன் வேலை பார்ப்பவர்களுக்கு அக்காவாக, அன்னையாக, தோழியாக. அவளைப் போன்றவளைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். சில தினங்கள் கழித்து அவளுடன் வேலை செய்யும் பெண் காவலர் வந்தார்.
“எப்படி இருக்கீங்க. மேடம்?”
“இருக்கேன். ஏதோ இன்னும் உயிரோட இருக்கேன்”
சிறு மௌனம்.
மதுவே தொடர்ந்தாள்
“என்ன விஷயம் ரூபா? ஸ்டேஷன்ல எல்லாம் எப்படி போகுது “
“ஏதோ போகுது மேடம். நீங்க இருக்கும்போது இருந்த மாதிரி இல்ல மேடம். புது எஸ் பீ வேற மாதிரி இருக்காரு மேடம். ஆளும் பாக்கற பார்வையும் அருவருப்பா இருக்கு மேடம். பேண்ட தாண்டி உள்ள பாக்கற மாதிரி. பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பினாள் .
“ம்! இது எல்லா இடங்களிலேயும் நடக்கறது தானே”
“இருக்கலாம் மேடம். அது எல்லாம் தட்டி கேக்கறதுக்குத்தானே நாம? நமக்கே இப்டி ஒரு நிலைமைன்னா மத்த பொண்ணுங்க?”
“எனக்கு இதை பத்தி எல்லாம் பேசுற தகுதியே கிடையாது ரூபா. என்னையே என்னால காப்பாத்திக்க முடியல. நான் எப்படி மத்த பொண்ணுங்கள காப்பாத்துவேன்?”
கண்ணில் கண்ணீர் வரவில்லை. ஆனால் விரக்தி இருந்தது.
“நோ மேடம் நீங்க தைரியத்தை விடக் கூடாது. இந்தாங்க. இது உங்களுக்காக. புத்தகத்தை வாங்கிக் கொண்டாள் .
“புக் மட்டும் வெய்ட் இல்ல மேடம். உள்ள இருக்கற விஷயங்களும்தான்”
புது புத்தகத்தின் வாசம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். புது பணக்கட்டின் வாசம் மட்டும்தான் உசத்தியா? இது அதையும் தாண்டி. நிச்சயம் வேற லெவல். இவள் பேசுவதை குறு புன்னகையுடன் ரசித்து கேட்டவன் இப்போது எங்கே?
அது பெண் காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புத்தகம். அதில் அவர்கள் எப்படி எல்லாம் கடினங்களை சந்தித்து முன்னேறி இருக்கிறார்கள் என்று அவர்கள் வாயாலே சொல்லக் கேட்டு எழுதிய புத்தகம். யாரும் எளியதாக எந்த விஷயத்தையும் அடைந்து விடுவதில்லை. இருந்தாலும், இழந்த இழப்புகளை இந்த புத்தகம் திருப்பி தந்து விடுமா? மனதில் நினைக்கவில்லை. வாயினால் கேட்டே விட்டாள் .
“ஏன் மேடம் கொடுக்காது? நீங்க என்ன இழந்துருக்கீங்க? கற்பா? இப்ப நாம வெளில படி இறங்கறதுலேர்ந்து ரோட்டுல போகர ஒவ்வொருத்தனும் நம்மள கண்ணாலேயே மேட்டர் முடிச்சிடறாங்க மேடம். வேலை போச்சுன்னு சொல்லப் போறீங்களா? அன்னிக்கு செத்து போன பொண்ணோட அம்மா தன்னோட பொண்ணுக்கு நியாயம் கிடைக்குன்னு நம்பிகிட்டு இருக்காங்க மேடம். அவங்க சட்டத்தை நம்பல. உங்கள நம்புறாங்க”
“நல்லா பேசற ரூபா”
“ஸ்கூல்ல பேச்சுப் போட்டில நான்தான் மேடம் பர்ஸ்ட்”
மௌனம்…..
“மேடம் உங்களோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்னு தெரிஞ்சு போச்சு”
“நான் அதை பத்தி சொல்லல மேடம். நீங்க வேலை நேரத்துல போதை மருந்து சாப்பிட்டதால் தானே உங்கள சஸ்பென்ஷன்ல வச்சுருக்காங்க”
“நீங்க அந்த நிலமைல இருந்த அதிர்ச்சினால் எங்க யாராலையுமே யோசிக்க முடியல. ஆனா அந்த டாக்டர் மேடம் என்னை கூப்பிட்டு பேசினாங்க. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி எந்த பழக்கமும் உங்களுக்கு இருந்ததில்லை. இதுதான் பர்ஸ்ட் டைம் . அதை ரொம்ப ஈஸியா நிரூபிக்க முடியும். அதே மாதிரி அந்த டீ குடுக்கற பையன் என்னை ரோட்டுல பார்த்து உண்மைய சொல்லிட்டான் . அவன் நமக்கு டீ கொண்டு வரும்போது அந்த மாஸ்டர் உங்களுக்குன்னு வேற டீ குடுத்திருக்காரு. நீங்க சர்க்கரை நிறைய போட வேண்டான்னு சொன்னீங்களாம். அப்டின்னு அந்த மாஸ்டர் சொல்லி இருக்கான்.சோ அதுலதான் போதை மருந்து கலந்துருக்குன்னும் நாம் ஈஸியா காட்டிடலாம். எங்களுக்கு யாருக்கும் எந்த விஷயமும் தெரிஞ்ச மாதிரி நாங்க வெளில காட்டிக்கல. அதனால அந்த மாஸ்டரும் இங்கையேதான் கேசுவலா சுத்திகிட்டு இருக்கான். அவனையும் அமுக்கிடலாம். நீங்க ஓகே சொல்லுங்க மேடம். எல்லா விட்னஸையும் நாங்க கலெக்ட் பண்ணறோம் “
இத்தனை நேரம் வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாது இருந்தவளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தாள் அவளின் வலது கை ரூபா.
“நான் கிளம்பறேன் மேடம்” சோபாவில் இருந்து எழுந்து கொண்டவள் ,
“எத்தனை அழகு, கம்பீரம், படிப்பு, பணம் எல்லாம் இருந்தாலும் இராவணன் அழிஞ்சதுக்கு காரணம் அவனோட பெண்ணாசைதான் மேடம். பொண்ணுங்கள அசிங்க படுத்தறவங்க என்னிக்குமே நல்லா இருக்க மாட்டாங்க மேடம். அந்த அதிபனுக்கு அழிவு காலம் வந்துடுச்சு போல. நாம அவனுக்கு ஒரு முடிவு கட்டலாம் மேடம். பழைய மதுவா நீங்க திரும்பி வாங்க. அதப் பார்த்து அவனே பயப்படணும்”
அவள் கிளம்பியவுடன் மதுவுக்கு ரூபாவை பற்றி இப்படித் தோன்றியது.
‘இந்த ரூபாவுக்கு இத்தனை எல்லாம் பேசத் தெரியாது. பள்ளி பேச்சுப் போட்டிக்கு அம்மாவும் ஆசிரியர்களும் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பரிசுகள் வாங்கி இருக்கலாம். அதே போல அவளுக்கு இப்போதும் யாராவது எழுதிக் கொடுத்து பேசிக்கிறாளா? இருக்கலாம். ஏன் இருக்கக் கூடாது? மதுவின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன் தான் இருக்கிறானே? இந்த புத்தகமும் அவன் தான் வாங்கி கொடுத்திருப்பான்’
அந்த நிலையிலும் அவனை நினைத்தால் மனதில் ஏதோ ஒரு தென்றல் வீசத்தான் செய்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டன. அவனைப் பற்றி இவள் நினைத்துக் கொள்வாள். அவன்? நினைப்பானா தெரியாது. ஒவ்வொரு நாளும் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக விஷயங்களை சேகரிக்க ஓடிக் கொண்டிருப்பவன். தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலுவலகத்தில் அவருக்கு கீழ் நேரடியாக வேலை பார்க்கும் சில முக்கியமான அதிகாரிகளில் இவனும் ஒருவன். நினைத்த நேரத்தில் எல்லாம் அவனிடம் பேசிவிட முடியாது. திடீர் திடீரென்று ஏதேதோ புது எண்ணில் இருந்து ஜெய் ஹிந்த் என்று மட்டும் எஸ் எம் எஸ் வரும். ஏதோ பெரிய விஷயம் செய்திருக்கிறார்கள் என்பதை இவள் புரிந்து கொள்வாள். இதுதான் இவர்களின் காதல் கதை. “எப்படி இருக்க? என்ன பண்ணற? சாப்பிட்டியா? தூங்கினியா?” எந்த கடலையும் வறுப்பதில்லை. உடல் பிரிந்திருந்தாலும் அவர்களின் மனம் பேசிக் கொண்டுகான் இருக்கிறது.
இங்கே அதிபன் வீட்டில்……..
“என்னப்பா? பிசினெஸ் எல்லாம் எப்படி போகுது?
“தந்தையும் மகனும் தோட்டத்தில் அமர்ந்து நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஞாயிறு என்றாலும் இருவருக்குமே நேரம் இருக்காது. இருந்தாலும் சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டும் என்றால் நேரம் ஒதுக்கித்தானே ஆக வேண்டும்.
இருவருக்கும் அதிபனின் அன்னை தேநீரும் பக்கோடாவும் வைத்து விட்டுப் போனார். அந்த நேரத்தில் அங்கே எந்த வேலைக் காரர்களுக்கும் அனுமதி இல்லை. தொழில் விஷயம், லாபம், நட்டம் , பினாமி விஷயங்கள், பத்திர பதிவு எல்லாம் பேசினார்கள்.
“சரிப்பா! எல்லா விஷயத்துலையும் ஒரு கண்ணு இருக்கட்டும் “
“எஸ் டாட்! “
“கொசு நம்மளையே சுத்தி சுத்தி வரும். கோபத்துல நாம அடிச்சுட்டோன்னு நினைச்சுகிட்டு இருப்போம் . ஆனா அது செத்துருக்காது. ஒனக்கு எதுவும் நான் சொல்லித் தெரிய வேணாம். அந்த போலீஸ் காரி விஷயத்துல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்” சொல்லி விட்டு இடுப்பு வேட்டியை சரி செய்து கொண்டு நகர்ந்து கொண்டார் அருணாச்சலம்.
அதிபனின் செல்லம் ப்ளாக்கி அங்கே வந்து மேலே தாவி தாவி அவனை கொஞ்சியது. வேறு யாரும் அல்ல.நம் பைரவரின் இனம் தான். அதிபனும் அதோடு கொஞ்சி விளையாடினாலும் தந்தை சொன்னது மூளையில் ஓடிக் கொண்டேதான் இருந்தது.
இங்கே இவன் யோசித்ததையே தான் அங்கே தில்லியில் அர்ஜுனும் யோசித்துக் கொண்டிருந்தான். இந்த கொசுவை ஊதினாப் போதுன்னு நினைச்சது தப்போ?