அம்பிகாவின் வார்த்தைகள் கரிகாலனை தாக்கியது என்று தான் சொல்ல வேண்டும். அம்பிகா சொல்வது நிதர்சனம், உண்மை, மறுப்பு சொல்ல முடியாது. தன் தவறு குத்தியது. தான் சரியான கணவன் இல்லை என்று உள்மனம் எடுத்து காட்டியது.
அம்பிகா தொடர்ந்தாள், “எங்களை பார்த்தாலே நீங்க ஒதுங்கி போவீங்க. அப்படி இருக்க உங்க பொண்டாட்டிய தேடி வந்து நாங்க ஏன் பேசினோம் தெரியுமா…” என்று கேட்க.
“தெரியாது…” என்றான் புரியாமல்.
“ வாத்தியாருக்கு கல்யாணம் ஆனது தெரியும். பொண்டாட்டிய கூட்டி வர தான் மேக்கு தெருவுல பெரிய வீடு பார்த்தீங்க. கல்யாணம் ஆகி மாசம் ஆச்சு. நீங்க வீட்டை காலி பண்றது பத்தி ஒன்னுமே சொல்லல. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு, நடு ராத்திரி, யார் துணையும் இல்லாம, புருசனுக்கும் சொல்லாம வந்து இறங்கினா. யாருக்கும் தெரியும் ஏதோ பிரச்சனைன்னு, அதான் வந்தோம். அந்த பொண்ணுக்கு என்ன கஷ்டமோ, அம்மா வீடு, புருசன் வீட்டு ஆட்கள் யாரும் கூட வராம, புருசன தேடி ராத்திரி வந்துருக்கு. நாமளும் தள்ளி நிக்க கூடாது, புது இடம் துணைக்கு ஆள் வேணும்ன்னு தான் பேசுனோம். ஆனா, கூட பொறந்தவ மாதிரி பட்டுன்னு ஒட்டிக்கிட்டா… அவ அழுகை சத்தம் கேட்கும் போது, இது அவங்க குடும்ப பிரச்சனை தானன்னு தள்ளி நிக்க முடியலை…” என்று விளக்கம் கொடுத்தாள் அம்பிகா.
புரிந்து கொண்ட கரிகாலன் சரி என்று தலையசைக்க, அங்கு முரண்டு பிடித்தாள் மது.
“நான் என்னக்கா தப்பு செஞ்சேன். ஒருத்தனை உண்மையா காதலிச்சேன், விதி கூடலை. அப்புறம் வீட்டுல பார்த்த பையனை தான கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எப்பவோ முடிஞ்சத, நானே மறந்ததை, இவங்க எல்லோரும் தான் புடிச்சு தொங்குறாங்க. அன்னைக்கு அவங்க அம்மா, என்னை அவ்வளவு பேசுறாங்க. எனக்காக, இவர் ஒரு வார்த்தை கூட பேசலை தான… என்னை தான் வீட்டை விட்டு போக சொன்னாரு. என் ராசி எங்கேயும் ஒட்டாது போல. இப்பவும் நான் தான் இவங்களை தேடி வந்தேன். அவங்க என்னை நினைக்கவே இல்லை…” மதுக்கு அழுகை தொடர்ந்தது. அவள் அடி மனதில் கணவன் மேல் இருந்த ஒரு குறையும் வெளி வந்தது.
அவளை சிரிப்புடன் பார்த்த சுமதி, “நாம பொம்பளைக எல்லாம் அப்படி தான் இருக்கோம். நம்ம புருசன், நமக்கு தான் பேசணும்ன்னு. கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல உம் புருசன் உம் பக்கம் தான் நிக்கணும்ன்னு நீ நினைக்கிற … சரி தான். அதே போல தான, முப்பது வருசமா பெத்து, வளத்தவங்க , நம்ம மகன் நம்ம பக்கம் தான் நிக்கணும்ன்னு நினைப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகி பதினைந்து வருசம் ஆச்சு. ஒரு நாளும் உங்க மாமன், அவங்க அம்மாவ எதிர்த்து எனக்கு ஆதரவா பேசினதில்லை. உன்னை மாதிரி நான் நினைச்சா, எம் பொழப்பு நகருமா… மதுமிதா மாமியார் தான் சரியில்லை, கரிகாலன் அம்மா சரியாத்தான் இருக்காங்க…” என்று விளக்கியும், மது மனம் முரண்டு தான் செய்தது.
“அடியே மதுரகாரி!… எல்லா ஆம்பளைகளும் அப்படி தாண்டி… பெத்தவளை ஒதுக்கி வைக்க மாட்டாங்க, தப்பாவே இருந்தாலும், உன்னை மாதிரி தொண்டை கிழிய கத்தி சண்டை போட்டா தான் ஆச்சா… சிலர் அழுத்தமா, அமைதியா தான் நிப்பாங்க. பிரச்சனையோட வீரியத்தை குறைக்க கூட உன்னை போக சொல்லி இருக்கலாம். நம்ம பொண்டாட்டி தானே, நம்மை புரிஞ்சுப்பான்னு நினைக்கலாம். ஏதோ ஒன்னு உம் மேல அன்பு, பாசம் எதுவுமில்லாமா இல்லை. அது உனக்கும் தெரியும். அதுனால தான நடு ராத்திரி புருசனை தேடி வந்த. அந்த நம்பிக்கைய எப்பவும் வை. நம்ம ஊர்ல ஆம்பளைகளுக்கு அகராதியே வேற, அதுல மாறுபட்ட ஆளு நம்ம வாத்தியார் தான்…” சொன்னவள்,
“உனக்கு ஒன்னு தெரியுமா மது. வாத்தியார் ரொம்ப நல்ல மாதிரி.நீ உன் கண்ணோட்டத்தில தான் எல்லாரையும் பாக்குற. எனக்கு நான் நேர்மையா இருக்கேன்னு சொல்லிட்டு, உன் விசயம் திறந்த புத்தகமா இருக்கு. அப்ப எல்லாரும் படிச்சு கருத்து சொல்ல தான் செய்வாங்க. நான் காதலிச்சது என்ன தப்புன்னு எல்லார்ட்டையும் நீதி கேக்குற, கருத்து சொன்ன சுருண்டு போற. மொத அதிலிருந்து நீ வெளிய வா… எல்லாமே தெரிஞ்ச ஒரு நல்ல மனுசன் கூட வாழ்க்கை அமஞ்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லி, அந்த வாழ்க்கைய காப்பாத்திக்க பாரு. அதை விட்டு அந்த மனுசன குத்தி பதம் பார்க்காத. உனக்கு உலக விவரமே தெரியலை மது. என் அயித்த மகனை கட்டிக்க நினைப்பு இருந்துச்சு, உண்மை தான். வெறும் நினைப்பு தான். அதை சும்மா கூட உங்க மாமன் கிட்ட சொன்னதில்லை. இத்தனை வருடத்தில் எவ்வளவோ பார்த்துட்டோம். ஆனா, ஒரு நாளும் இதை பத்தி மூச்சு விட்டதில்லை. நான் பேசுறது பத்தாம்பசிளிதனமா, முட்டாள் தனமா தான் தெரியும். ஆனா, இது தான் எதார்த்தம் மது. ஒரு ஆம்பளை, வீட்டுல பொண்டாட்டி இருக்க, அடுத்த பொண்ண வச்சிருப்பாங்க. அவங்க கிட்ட போய் நியாயம் கேட்டா, எம் பொண்டாட்டி சாப்பாடே போடுறது இல்லை, துணி துவைக்கல, பிள்ளைகளை பார்க்கல, செலவு செய்யிறா, வீட்டை பார்க்கல, எங்க அம்மா, அப்பாவை பார்க்கல, பொறுப்பு இல்லை, போன்னு பாக்குற, சமையல் செய்யல, ராத்திரி என்னை கண்டுக்கவே இல்லை… இப்படி ஆயிரம் காரணம் சொல்லுவாங்க. இது எல்லாம் தப்பு தான். ஆனா, சரிசெய்ய முடியாத தப்பு கிடையாது. ஆனா, அதை காரணம் காட்டி, தன் தப்பை பூசி மொழுகிடுவாங்க. தான் திமிரெடுத்து தப்பு பண்ணதுக்கு பொண்டாட்டி தான் காரணம் சொல்ற ஆம்பளைகளும் இருக்காங்க. அதை சரின்னு சொல்ற சமூகமும் இருக்கு. பொண்டாட்டி சரியில்லை அவன் என்ன பண்ணுவான். நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் தப்பு பண்ண போறன்… இது தான் பேச்சா இருக்கும். அதே மாதிரி நாமளும், புருசன் குடிகாரன், அடிக்கிறான், வேலைக்கு போகல, பொறுப்பு இல்லை… இப்படி சொல்லி ஒதுங்க முடியுமா. பொம்பளை நீ தான் அனுசரிச்சு, விட்டு குடுத்து போகணும்… ஒத்த வார்த்தையில சொல்லி முடிச்சுருவாங்க… அவங்க ரெண்டு பொண்ணுக கழுத்துல கூட தாலி கட்டுவாங்க, அதே மாதிரி நாம ரெண்டு தாலி போட முடியுமா….”
மது முகம் அருவருப்பை காட்டியது.
“பார்த்தையா… வெறும் வாய் வார்த்தை சொல்ல கூட ஏத்துக்க முடியலை. நாம பொம்பளைக அப்படித்தான். நீ கதலிச்சது தப்பான்னு கேட்டா… தெரியாது. ஆனா, அதுக்கு ஊரு முன்னாடி நியாயம் கேட்ட பார்த்தியா… அது தப்பு தான். அப்படி தான் இருக்கு நாம வாழ்ற இடம். இந்த உலகத்துல உனக்கு மட்டுமா அசைபட்ட வாழ்க்கை கிடைக்கல, நீ மட்டுமா கஷ்டபடுற, உனக்கு மட்டுமா ஏமாற்றம்… போடி பைத்தியக்காரி. என் அயித்த மகன் யாரை கட்டி இருக்காங்க தெரியுமா… என் சொந்த தங்கச்சி தான்…
“என்ன” என்று அதிர்ந்து பார்த்தாள் மது. ஐயோ! எவ்வளவு வலி…
“ நான் ஆசைப்பட்ட வாழ்க்கை, எந்தங்கச்சி நல்லா வாழ்றா… எனக்கு குடிகார புருசன், கொத்தி திங்கும் மாமியார், வருமானம் இல்லை, சொந்த வீடு இல்லை. கடை, கடையா ஏறி, இறங்கி டீ வித்தேன். நான் அழுகிறதா இருந்தா எம்புட்டு அழுக… நான் யார் கிட்ட போய் நியாயம் கேட்க. பிள்ளைகளை மனசுல வச்சு, வைராக்கியமா தான் இருந்தேன். ஒரு நாள் காலம் கை கொடுக்க, இப்ப நிமிந்து நின்னாச்சு மது. நாங்களாம் சந்தோசமா தான் இருக்கோம்ன்னு நினைச்சியா… எங்களுக்கும் மனசுல ஆயிரம் இருக்கு. உங்க மாமன் வருமானத்தை ஒளிச்சு வைக்க மாட்டார். வரவு, செலவு எல்லாம் எம் கையில தான். நல்ல மாதிரி தான், ஆனா கை நீட்டுவார். இடம், பொருள் எல்லாம் பார்க்க மாட்டார். கோபம் வந்தா பட்டுன்னு கை நீளும். மகன் மூஞ்சிய காட்டவும் தான் கொஞ்சம் அடக்கி இருக்காங்க… எனக்கு ஆதரவா பேசமாட்டாங்க தான். ஆனா, தனியா கூட்டி வந்துட்டாங்க. தினமும் கேக்குற மாமியார் பேச்சை, இப்ப எப்பவாது தான் கேக்குறேன். அதுல ஒரு ஆறுதல். எனக்கும் மேல அம்பிகா அக்கா…” என்று சுமதி சொல்ல.
“அவங்களுக்கு என்ன?… அந்த மாமா ரொம்ப அமைதி ஆச்சே…” என்று பயந்து போய் மது கேட்டாள்.
“ரொம்ப அமைதி தான். அவருக்குள்ளும் ஒரு அரக்கன் இருக்கான். வேற என்ன… குடி தான். எப்பவும் இல்லை. சனிக்கிழமை ராத்திரி மட்டும். அதுவும் சும்மா கிடையாது, பேசியே கொள்ளுவார். ஒரு பொட்டு தூக்கம் இருக்காது அம்பிகா அக்காக்கு, அவர தனியா ஒரு ரூம்ல போட்டு, இவங்க பிள்ளைக கூட இருந்தாலும் விட மாட்டார். அவங்கள கத்தி, கூப்பிட்டு சண்டை போடுவார். உடுப்பு ஒழுங்கா இருக்காது, பேச்சும் சரியா இருக்காது. வயசு பொண்ணு இருக்குற வீடு, ரொம்ப சங்கடம் தான். காரணமில்லாம தான் அந்தக்காவ அம்புட்டு பேசுவார். அதுனால தான், பிள்ளைக அவங்க பாட்டி வீட்டுக்கு போயிருவாங்க. சில நேரம் என் வீட்டுல தங்க வைப்பேன். திங்க கிழமை காலையில வெள்ளை வேட்டி சட்டை, நெத்தில பட்டைன்னு எதுவுமே நடக்காத மாதிரி கிளம்பி போவாங்க. அதை தவிர்த்து பார்த்தா, அந்த மனுசன் நல்லவர் தான். இந்த வீடு கூட அக்கா பேருல தான் இருக்கு. சக்தி மீறி தான் பிள்ளைகளை படிக்க வைக்குறாங்க. இதையெல்லாம் யோசிச்சு உட்கார்ந்தா எங்க பொழப்பு நகருமா… தினக்கி ஆளுக்கு ஒரு பக்கம் சண்டைய போட்டா, பிள்ளைக படிப்பு என்ன ஆகுறது. நாங்க நல்லா இருந்தா தான் எம் பிள்ளைகளை நிலை நிறுத்த முடியும். இப்ப சொல்லு வாழ்க்கை உனக்கு மட்டும் தான் கஷ்டமா, அசிங்கம், அவமானம் எல்லாம் உனக்கு மட்டும் தானா?… எம் மருமகள் வந்தாலும் உம் மாமன் என் மேல கை நீட்டுவான். அம்பிகா அக்காக்கு மருமகன் வந்தாலும், அவங்க வீட்டுகாரர் இப்படி தான் குடிச்சுட்டு ஆடுவார். எங்க பாடு என்னைக்கு தீரும். இந்த போராட்டம் எங்களுக்கு கடைசி வரைக்கும் தான். இப்ப உன் புருசனை யோசி. வாழ்க்கை உனக்கு வஞ்சனை செய்யலை மது, வசந்தம் தான் விரிச்சு நிக்குது. சும்மா பழச புடிச்சு தொங்காத…உனக்கு நடந்தது அநியாயமாவே இருக்கட்டும். அதுக்கு நியாயம் தான் இந்த வாழ்க்கை. அதை நல்ல படியா தக்க வச்சுக்க. சின்னவங்க சண்டை போட்டா பெரியவங்க சேர்த்து வைப்பாங்க, இங்க பெரியவங்க தான் சண்டை போடுறாங்க. அதை வச்சு நீங்க சண்டை போடாதீங்க. முக்கியமா நீ, முன் கோபத்தை குறை…” என்று சொல்லிய சுமதி, மது முகத்தை தான் பார்த்தாள்.
“உனக்காக உன் புருசன் பேசலை, அதான உன் பெரிய குறை. என் பொண்டாட்டிய பேசின யாரும் எனக்கு தேவையில்லைன்னு நீ கத்துன மாதிரி, வாத்தியாரும் கத்துவாரா… கூறுகெட்டவளே! உம் மாமியார் உன்னை முழுசா ஒதுக்க நினைச்சாங்க. அத்து விட்டு வேற பொண்ணை தான் உன் இடத்தில கொண்டு வர பேசினாங்க. அத்து விட கெடு வச்சாங்க தான, அப்புறம் ஏன் அதை செய்யல. நல்ல யோசி… உன் புருசன் உன் பக்கம் நின்னதால தான் மேற்கொண்டு அந்த பேச்சு போகல…” என்று சொல்ல, மதுக்கு ஒரு பரவசம், தான் மட்டும் தான் அவனை தேடினோம் என்று இருந்த ஏக்கம் குறைந்தது.
“இங்க பாரு மது. உனக்கு முழு ஆதரவு உன் புருசன் மட்டும் தான். அப்ப அவரையும், நீ கஷ்ட படுத்த கூடாது. நான் எப்படி இருந்தாலும் எம் பொண்டாட்டி ஒழுக்கமா தான் இருக்கணும்ன்னு நினைக்கிற ஆம்பளைகளுக்கு மத்தியில , நிசமாவே வாத்தியாரு தங்கமான மனுசன். அவர் நிக்க நான் காதலிச்சது என்ன தப்புன்னு, பெத்தவங்க கூட சண்டை போடுற. இதுவரை எப்படியோ, இப்ப கரிகாலன் உன் புருசன், அவங்க கூட நீ சந்தோசமா வாழ்ற, அவருக்கு துணை நிக்குற, உன்னை தாங்கி நிக்க உன் புருசன் இருக்க, அடுத்தவங்க விமர்சனத்துக்கு துணிஞ்சு புதுமை பெண்ணா பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உன் கடந்த காலத்தை யாரும் பேசாத மாதிரி, வாத்தியார் கூட உன் வாழ்க்கையை மாத்து. அதுக்காக தான நீ இங்க வந்த… யார் தடுத்தும் என் புருசன் மட்டும் போதும்ன்னு தான் இருக்க, அப்ப ஒரு பேச்சுக்கு கூட பழசை இழுக்காத… உன் வயசுல எங்களுக்கு சொல்ல ஆள் இல்லை மது. அடி பட்டு தான் கரை சேர்ந்தோம். உன் மாமியார் விடுவாங்கன்னு நினைக்காத, இத விட பெரிய சண்டை போட்டவங்க எல்லாம் ஒன்னுமே நடக்காத மாதிரி சேர்ந்து பார்த்திருக்கேன். காலம் போன நீயும் வாத்தியார் குடும்ப வட்டத்தில் வருவ, உன்னை தாண்டாம உன் புருசன் நின்னா… நீ பெரிய பிரச்சனையா நினைக்கிற மாமியார் எல்லாம் எளிதா கடந்து போயிருவ… கல்யாண வாழ்க்கை நிறைய கடக்கணும், அதுல மாமியார், நாத்துனார் , மச்சான், கொழுந்தன் எல்லாம் ஒரு பகுதி தான். காலத்துக்கும் உன் கூட மல்லு கட்ட மாட்டாங்க. நீ புதுசுல அதான் அவங்களுக்கான உரிமையை காட்டுறாங்க. உன் புருசன அனுசரிச்சு போ… மத்ததை அமைதியா கடந்து போ…” என்று சுமதி தெளிவான விளக்கம் கொடுத்த பின் தெளிந்து கொண்டாள் மது.
அங்கே அம்பிகா, “உங்களை நம்பி, நீங்க மட்டும் போதும்ன்னு தான் மது உங்களை தேடி வந்தா… அவ குணத்துக்கு நிச்சயம் உங்களை தேடி வந்திருக்க மாட்ட. அவ இயல்பு மீறி பண்ணுன ஒரு விசயம் நீங்க தான் வாத்தியாரே… திரும்ப அவளை விடுற மாதிரி ஒரு நிலைய அவளுக்கு கொடுக்காதீங்க. தாங்க மாட்டா… நீங்க , அவளுக்கு மட்டும் தான்னு ஒரு எண்ணம். அதான் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறா…”
மனைவி குணம் தான் கணவனுக்கு தெரியுமே… சின்ன சிரிப்போடு ஆமாம் என்று தலையசைக்க,
“பொம்பளைக, எங்க உலகம் ரொம்ப சின்னது வாத்தியாரே… புருசன், பிள்ளைக, குடும்பம் இதை தாண்டி பெருசா நாங்க யோசிக்க மாட்டோம். அடிப்படை எங்க வளர்ப்பு அது தான். இன்னொரு வீட்டுக்கு போறவ தான, அப்படி சொல்லி தான் வளர்ப்பாங்க. அதனால் தான் என்னவோ, கழுத்துல தாலி ஏறின உடனே, புருசன் தான் குடும்பம்ன்ற வட்டதுகுள்ள நாங்க எளிதா வந்துறோம். ஆனா, நீங்க, அதுல எங்களை சேர்க்கிறது இல்லை. நாங்க என்ன தான் விட்டு கொடுத்து போனாலும், நீ நேத்து வந்தவ உனக்கு உரிமையில்லைன்னு முடிச்சுடுவாங்க… இப்பவும் உங்க வாழ்க்கைக்கான முதல் அடிய எடுத்து வச்சது மது தான். அதுக்கு அப்புறம் தான், நீங்க தாங்குறது, பாதுகாக்கிறது எல்லாம். நீங்க மட்டும் போதும்ன்னு வந்த அவளுக்கு, உங்க வீட்டு ஆட்கள் பண்ணியது கொடுமை தான் வாத்தியாரே. நீங்க, அந்த வீட்டு பையன். உங்களை என்னவும் பேசட்டும், அவளை பேச அவங்க யாரு? ரொம்ப எளிதா உங்க பொண்டாட்டி ஒழுக்கத்தை வீதியில விட்ட உங்க வீட்டு ஆட்களுக்கு என்ன பதில் பேசுனிங்க. அவளுக்கான நியாயம் தான் என்ன… வாய் வார்த்தையா கேட்ட எங்களுக்கு மனசு பதறுச்சு. நாளைக்கு எல்லாம் ஒண்ணா ஆனதுக்கு அப்புறம் அவ மேல ஒரு சொல் வர கூடாது… அதுக்கு நீங்க என்ன பண்ணீங்க…” சரமாரி கேள்வி தான்.
“இதை எல்லாம் கேட்க இவ யாருன்னு நினைக்கிறீங்களா?… சொன்னா காது குடுத்து கேக்குற மனுசன். அதான், அவளுக்காவது நியாயம் கிடைக்கட்டும் என்று தான்…” என்று தீர்மானமாக அம்பிகா சொல்ல.
“அவளுக்கான நியாயம் நான் தான். அதே போல, எங்க வீட்டில ,என் மனைவி பத்தி ஒரு வார்த்தையும் வராது. அப்படி பேசின எங்கம்மாக்கு ஏற்பட்ட இழப்பும் நான் தான். என் மேல அவங்களுக்கான உரிமைய தான் இழந்து நிக்குறாங்க. என் கடமை மட்டும் தான் அங்க போகுது. இல்லைன்னா மதுவ இங்க இருக்க விட மாட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும். அப்ப தான் என் மனைவிய பத்தி ஒரு வார்த்தை வராம இருக்கும். எம் மேல இருந்த உரிமை தான அவங்களை அப்படி பேச சொல்லுச்சு. அதான், அந்த உரிமைய அவங்க கிட்ட இருந்து எடுத்துட்டேன். இது நிரந்தரம் இல்லை தான். ஆனா, மகன் கை விட்டு போயிருவானோன்ற பயம்தான் அவங்க வாய கட்டும்…” என்ற பதில் அம்பிகாக்கு திருப்தி தான்.
“ரொம்ப உரிமை எடுத்து பேசிட்டோம். உங்களுக்கு எதுவும்…” என்று ஆரம்பிக்கும் போத,
“நிச்சயமா இல்லைங்க. எங்க வீட்டுல அவ்வளவு பேர் இருந்தும், எங்கப்பா தவிர வேற யாரும் உம் பொண்டாட்டி கூட பேசு, சமாதானம் பண்ணு, சேர்ந்து வாழுங்க… அப்படி ஒருத்தர் சொல்லலை. வெறும் பழக்கம் தான், சொந்தம் கூட கிடையாது. ஆனா, இவ்வளவு அக்கறை… என்ன சொல்ல, கடவுள் நல்ல நட்பை கொடுத்து இருக்கார்…” என்று இத்தனை வருடத்தில் நீண்டு பேசினான்.
முன்பே அவன் நல்லவன் என்று தெரியும். தற்போது அவனின் பேச்சு பெரிய மரியாதையை தந்தது.
ஏற்கனவே புரிதல் உள்ள தம்பதிகள் தான் இருவரும். தற்போது கிடைத்த அறிவுரை, நல்ல ஒரு தெளிவையும், அடுத்த கட்ட வாழ்வு எவ்வாறு நகர வேண்டும் என்பதையும் எடுத்து காட்ட, கெட்டியாக பிடித்து கொண்டார்கள்.
முன்பே இருந்த நெருக்கம் இன்னும் இன்னும் தான் அதிகரித்தது. அத்தோடு அவர்களின் பாட்டு கச்சேரியும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்…
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்…
இதமாக தான் பதமாக தான் எனை தீண்டு தாகம் தணியும்…!
ஓட்டைக்குள் வந்த மலரினை பறித்தேன்…
ஓசைகளின்றி மணி முத்தம் பதித்தேன்…
பழச்சறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்…
அந்தி பகல் வந்ததொரு இன்ப மயக்கம்…
அஞ்சு விரல் பட்டவுடன் மெல்ல சிலிர்க்கும்…
இடை வெளி இன்றி இவர்கள் நடத்திய தொடர் கச்சேரி, கனியாகி விட்டது. ஆம், மது கர்ப்பம் உண்டாகி விட்டாள். அவள் ஆசைப்பட்டு எதிர்பார்த்தது தான். அடுத்த இரண்டு மாதத்தில் நடந்து விட்டது. நல்ல பிள்ளையாக கரிகாலன் இரண்டு வீட்டுக்கும் தெரிய படுத்தி விட்டான். அவன் வீட்டில், அவன் தந்தையை தவிர பெரிதாக யாரும் பட்டுக்கொள்ள வில்லை.
அதிலும் கருப்பாயி, “பசப்பி… திருட்டு தனமா குடும்பம் நடத்தி மாசமான, அதை நான் ஏத்துக்குவேனா… அதையும், இதையும் பேசி… அழுது நடிச்சு மயக்கிட்டா எம் புள்ளையை… என் கைக்குள்ள இருந்தவனை , அவ காரியமா இழுத்து கிட்டா… ஊமை ஊரா கெடுக்கும் சரியாத்தான் இருக்கு. என்கிட்ட வீராப்பு காட்டுறான் உன் மவன்… முகம் கொடுத்து பேசலை. நான் தான பெத்தேன் நல்லது, கெட்டது எனக்கு பார்க்க தெரியாது. வளத்த கெடா தான் நெஞ்சுல முட்டுது.பெத்த தாயை ஒதுக்கி, எப்படி வாழ்வான். சாமி கேக்கும் பாரு… பெத்தவ தான் என்னைக்கும் உசத்தி. கெட்டு அழிஞ்சு வருவான் பாரு…” என்று ஆங்கரமாக பேச,
வாய மூடு, ஓங்கி ஒரு மீதி மிதிச்சேன், எந்திரிக்க மாட்ட… கூடவே இருந்து கொத்துறன்னு தான். அந்த புள்ளையா கூட்டி தனியா போய்ட்டான். மகன் அண்ட விடாம வச்சிருந்தா… நீ என்ன பண்ண, அதா நினை. எல்லாத்துக்கும் வீட்டுக்கு வந்த பிள்ளைய குறை சொல்லாத…” கணவர் சத்தம் போடவும் தான் வாய் மூடினார்
ஆனால், நெஞ்சு கொதித்தது. எங்களை எல்லாம் முட்டாள் ஆகிவிட்டாள். என் மகன் நல்வன் தான். இவள் தான் ஏதோ சொல்லி கொடுத்து, தங்களிடம் அண்ட விடாமல் வைக்கிறாள். மகன் கை வர வரை பொறுமை தான் காக்க வேண்டும். என் மகன் என்னிடம் வரட்டும். அப்புறம் தெரியும், இந்த கருப்பாயி யார் என்று…
இரண்டு நாட்களாக கரிகாலன் சரியில்லை. ஏதோ ஒரு பதட்டத்தில் தான் இருந்தான். ஆரம்பகால, கர்ப உபாதைகள் மதுக்கு அதிகம் இருக்க, முதலில் கணவனை கண்டு கொள்ள வில்லை. அதன் பின் கண்டு விட்டாள். அதை கணவனிடம் கேட்கவும் செய்தாள் தான். அவன் சரியாக பதில் சொல்லாமல் சமாளித்து செல்ல, ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது. எப்படி கண்டு பிடிக்க என்று யோசித்தவள், அவன் போனை தான் ஆராய்ந்தாள். அப்போது, அந்த பக்கம் இருந்து போன் வர, விசயம் வெளி வந்து விட்டது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்கிறார்கள். வட்டி சரியாக தான் கட்டி வருகிறான். அவர்களுக்கு தேவை வட்டி இல்லை முதல் … அது தான் திண்டாட்டம். முழு பணம் ஏழு லட்சம், திடீரென்று எங்கு செல்வது. தற்போது இரண்டு வீட்டு பக்கத்திலும் உறவாட முடியாது.
மனைவிக்கு தெரியாது என்றே தனியாக சமாளித்தான் கரிகாலன். அவள் பார்க்காத போது, வீட்டின் பின்புறம் சென்று, தயவாக, மருகி நின்று பதில் பேசுவதை மனைவி பார்த்து கொண்டு தான் இருந்தாள். அடுத்தவரிடம் கெஞ்சுகிறான், கொஞ்ச நாள் பொறுத்துக்க சொல்லி தலைகுனிந்து கேட்கிறான். பொறுக்க வில்லை மதுக்கு, கணவனின் நிலை அவளை பாதித்தது. குழந்தை என்ற சந்தோசம் கூட பின் சென்று, பண பிரச்சனை முன் நின்றது. அடைக்கும் மார்க்கம் தெரியாமல் மது சோர்ந்து தலை சாய்த்த போது தான், கழுத்தில் கிடந்த தாலி கொடி உறுத்தியது. பத்து பவுன் கிட்டத்தட்ட ஐந்து லட்சம், சீட்டு காசு, மிச்சம் இருக்கும் சிறு தோடு, மோதிரம் என்று ஒரு வழி தோன்ற,அடுத்து யோசிக்க வில்லை. செயல்படுத்த துணிந்து விட்டாள்.
கரிகாலன் குல தெய்வக் கோவில் கிடா வெட்டு… சின்ன பாண்டி வர வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டார் கருப்பாயி. எங்கே மகன் முழுதாக பொண்டாட்டி பக்கம் சாய்ந்து விடுவானோ என்ற பயம் மிகுந்து இருந்தது. தன்னை முழுதாக ஒதுக்கி விட்டான் என்று தான் நினைத்தார். அவனை கட்டி இழுக்க இது தானே சமயம்.
பாண்டிக்கு ஆச்சர்யம் தான். ஆனால், மனைவிக்கு பிள்ளைகள் மீதான பாசம் தெரியும் என்பதால் , அவரே போய் அழைத்து வருவதாக சொல்லி விட்டார்..
தற்போது வீட்டில் பெரும்பாலான வேலைகளை கரிகாலன் தான் செய்வான். அம்பிகா, சுமதி என்று இருவர் வீட்டில் இருந்தும் ஏதேனும் ஒன்று தினமும் வரும். கரிகாலன் பள்ளி சென்ற பின், அவள் துணைக்கு இவர்கள் இருவர் தான். பல நாள் பகல் பொழுதில் கீழ அம்பிகா வீட்டில் தான் படுத்து கொள்வாள். கம்மங்களி, சோளகூல், கருவாட்டு தொக்கு, மாவடு என்று நாக்கின் ருசி பார்த்து வைத்து கொடுப்பார்கள்.
அன்றும் கணவன் வேலைக்கு சென்ற பின், கீழ வந்தவள், தான் எடுத்திருக்கும் முடிவை சொன்னாள். பதறி போனார்கள் இருவரும்.
“ஐயோ! என்னடி இது… நகை விசயம், இது சாதாரணமா முடியாது. அதுவும் தாலி கொடி… அடகு வச்சாவாது பரவாயில்லை. நீ விக்கணும் சொல்ற… உன் புருசன் நெனைச்சாவே பயமா இருக்கு. யார் ஒத்துக்குவா…” என்று பலவாறு எடுத்து சொல்லியும். மது மனம் சமாதானம் அடைய வில்லை. அவளுக்கு தன் கணவன், அடுத்தவரிடம் கெஞ்சி நின்ற தோற்றமே கண் முன் வர, திடமாகி கொண்டாள்.
மது தனியே செல்ல, அவளை திட்டி கொண்டு உடன் சென்றார்கள். கர்ப்பிணி பெண் தனியாக விட முடியாதே… அவளின் இரண்டு பவுன் ஜெயின் இருந்தது. அவள் அப்பத்தா போட்டு விட்டது. எப்போதும் மது கழுத்தில் தான் இருக்கும். அதில் தான் சுமதி தாலியை கோர்த்து மாட்டி விட்டாள். அவளின் பத்து சவரன் தாலி கொடி, இரண்டு மோதிரம், கை ஜெயின், ஒரு தொடு என்று எல்லாம் போட்டு தான் பணத்தை புரட்டினாள். பற்றாக்குறைக்கு சீட்டு காசும் எடுத்து விட்டாள். முடியும் முன் எடுத்ததால், பாதி பணம் மட்டுமே கிடைத்தது.ஆனால், கடன் அடைக்க போதுமானது தான். மற்றதை விட தாலி கொடியை எடுக்கும் போது மனம் வலித்தது. எளிதாக கண்டறிய முடியாத பொருள். அவ்வளவு ஆசையாக கழுத்தில் சுமப்பாள். பொன் என்பதெல்லாம் தாண்டி, தனக்கானது என்ற உரிமை இருந்தது. மாமியாரிடம் மலுக்கு நின்றதும், இதை காக்கும் பொருட் தான். இன்று எல்லாம் போச்சு. கடைசி முறையாக அதை கண்ணில் காணும் போது, தாங்க முடியவில்லை. கண்களில் கராகரவென நீர் வந்து விட்டது. ரொம்பவும் நாசுக் பார்ப்பாள் தான். அன்று, பேங்கில் தடுத்தும் கண்ணீர் வந்து விட்டது. தாலி கொடியை விட, அதை கட்டிய கணவனுக்கு தானே முக்கியத்துவம்.
என்ன தான் உடன் நின்றாலும், முடிவு பெரியது என்பதால், எல்லாம் முடித்து வெளிவரும் போதே கரிகாலனுக்கு அழைத்து சொல்லி விட்டார் அம்பிகா.
பதறி போய் தான் வந்தான். அழுது, முகம் வீங்கி போய் அமர்ந்திருந்த மனைவியை பார்த்து, பரிதாபம் இல்லாமல் கோபம் தான் வந்தது. அவளை பிடித்து சத்தம் போட, வாய் திறக்கவில்லை மது. சில நாளில் கண்டது தான். கணவன் கோபமாக இருக்கும் போது, இவள் அமைதியாகி கொண்டாள், அவன் கோபம் குறைந்து விடும்.அதை தான் செய்தாள். அவளோடு கத்தி சோர்ந்து போனவன், மனைவி அருகே வந்து, மது என்று மென்மையாக அழைத்தான்.
“ என்னால முடியாது கரிகாலன். நான் உயிரோட இருக்குற வர, நீங்க யார் முன்னாடியோ தலை குனிஞ்சு நிக்கிறத பார்க்க முடியாது. அவ்வளவு பணத்துக்கு நாம எங்க போறது. இதை விட்டா வேற வழி இல்லை கரிகாலன். பிளீஸ் என்னை தடுக்காதீங்க… கடன் கொடுத்தவங்க விட மாட்டாங்க. ஒவ்வொரு முறையும் கெஞ்சி, மருகி நிக்க வேணாம் கரிகாலன். கடன் இல்லாத வாழ்க்கை எவ்வளவு நிம்மதி, இந்த நகைய விட, நிம்மதியான வாழ்க்கை முக்கியம் கரிகாலன். என் புருசன் தன்னோடு தன்மானத்தை விட்டு கொடுத்து கிடைக்கிற நகை எனக்கு வேணாம்…” என்றாள் திடமாக.
“அப்புறம் ஏன் மதும்மா அழுற…”
“அது வேற கரிகாலன். முதல் தடவை என் கழுத்துல போடும் போது, இது என்ன நாய் சங்கிலி மாதிரி இவ்வளவு பெருசுன்னு முணங்குனேன். இப்ப இழந்து நிக்கும் போது வலிக்குது. அடகு வச்சா கூட, நம்ம பொருள் தான்னு நினைப்பு இருக்கும். நான் முழுசா வித்துட்டேன். ரொம்ப வலிக்குது கரிகாலன்…” என்று கணவன் தோல் சாய்ந்தாள்.
கடன் முழுதாக அடைக்க பட்டது. அவன் நிம்மதி தான் பறி போனது. புல்லு போல் மனைவி கழுத்தில் கிடக்கும் தாலி உறுத்த தொடங்கியது. மது தேறி விட, அவன் சோர்ந்து போனான்.
“கரிகாலன் விடுங்க, அடுத்து சுதாரிச்சு வாழ்வோம்…”
“எனக்கு வாழவே தெரியலை மது. கொஞ்சமும் புத்தி இல்லை. என்னால கடன் கழிக்க முடியுமா?… எந்த யோசனையும் இல்லாம இறங்கிட்டேன். முட்டாள் நான்… நீ மட்டும் இல்லனா எனக்கு வாழவே தெரியாது மது. இப்படி தான் மண்ணு மாதிரி, யார் என்ன சொன்னாலும் கேட்டு இருந்திருப்பேன். உனக்கெல்லலாம் நான் தகுதியே இல்லை மது…”
“உங்க மதிப்பு உங்களுக்கே தெரியல கரிகாலன். எனக்கு முழு வாழ்க்கைய தூக்கி கையில கொடுத்து இருக்கீங்க கரிகாலன். அந்த வாழ்க்கைக்கான மதிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்…” என்றவள்.
“ இரண்டு பேர் கடவுள் கிட்ட தொடர்ந்து அழுதாங்களாம். கடவுள் என்னை தண்ணில போட்டார், அது தான் கஷ்டம்ன்னு ஒருத்தரும், தரையில போட்டார் அது தான் கஷ்டம்ன்னு ஒருத்தரும் தொடர்ந்து அழுதாங்களாம். பார்த்த கடவுள், ரெண்டு பேரையும் மாத்தி போட்டார். அப்பவும் இதுதான் கஷ்டம்ன்னு சொல்லி அழுகை நிக்கலையாம். உண்மை என்னனா, ரெண்டுமே கஷ்டம் தான். மனிதனுக்கு ஓய்வு மரண படுக்கை தான். உங்களை வச்சு தான் எனக்கு கஷ்டம் கிடையாது கரிகாலன். நீங்க வரம், இந்த மதுக்கு மட்டும் கிடைச்ச வரம். கவலைய விடுங்க, விதி நாம எங்க விட்டாலும் பரவாயில்லை. தண்ணில விட்டாலும் நீந்துவோம், தரையில் விட்டாலும் ஓடுவோம்…”
“மது, ஐ லவ் யூ … நீ இல்லாத வாழ்க்கைய யோசிக்க கூட முடியாது…” என்று உண்மையாகவே உருகி சொன்னான் கரிகாலன்.
அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் பெண். அப்படி எல்லாம் காதல் சொல்பவன் கிடையாது. என்றோ சொல்லும் இந்த வார்த்தை அவளுக்கு பொக்கிஷம்…