மது மனதில் ஒரு சுணக்கதோடே காலை தேநீரை கையில் எடுத்தாள். அவளுக்கு தேநீர் இடைவேளை என்பது மிக பிடித்தமான ஒன்று. அதுவும் குளிர் காற்றில் தேநீர் தித்திப்பு சுகம் தான். லவ் வித் காஃபி என்றில்லாமல் லவ் வித் டீ எனும் வகை சார்ந்தவள். அதுவும் இஞ்சி, ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க கொதிக்க சூடாக உள்ளே இறக்க வேண்டும். அவ்வளவு ரசனை அதன் மேல். ஆனால், என்று கரிகாலன் வீடு வந்தாளோ, அன்றே அவளின் டீ மோகம் குறைந்து போனது.
பெயருக்கு தொண்டையில் சரிக்கும் சுடுநீர் தான் இவர்களுக்கு தேநீர். குறைவான பாலில் அதிக நீர் விட்டு, எவ்வளவு பேர் வந்தாலும் சமாளிக்கும் சமர்த்தியசாலி கருப்பாயி. உணவு தான் இப்படி என்றால் டீ யுமா!.. கொஞ்சம் சேர்த்து பால் வாங்கி, நன்றாக டீ போட்டால் தான் என்னவாம்… எந்த ஊரில் வெள்ளை கலறில் டீ இருக்கும். அந்த டீ தூள் சேர்த்து போட்டால் கூட வாசனையிலாவது குடிக்கலாம், அதுக்கும் வழி இல்லை. சிக்கனத்தை செலவில் குறைக்க வேண்டுமே தவிர உணவில் குறைக்க கூடாது.
இந்த ஆறு நாளில் டீ, உணவு, பாத்ரும், படுக்கை அறை என்று எல்லாவற்றையும் ஓர் பிடிவாதத்தில் தன்னை தான் சமாளித்து தள்ளி போகிறாள் தவிர இது தான் தன் வாழ்வு என்ற சகஜ நிலை மட்டும் வரவே இல்லை. காலை எழும் போதே, பாத்ரும் ஃப்ரீயா இருக்கணும், டீ கொஞ்சம் திக்கா இருக்கணும், காலை உணவு டிஃப்பென் வேணும், மதியம் கார குழம்பு இல்லாமல் புலாவ் இருக்கணும் என்ற பல கட்ட வேண்டுதலோடு தான் தொடங்கும்.
பதினெட்டு வயதில் இருந்து கண்ட கல்யாண கனவு, இந்த கரிசட்டி வாயனுக்கு கழுத்தை நீட்ட தானா…. அய்யோ!.. பாத்ரும் சிங்கரா இருந்தேன், இப்போ பத்து நிமிசத்துக்கு மேல மூச்சு முட்டி போய் ஓடி வாரேன்… கல்யாணம், ஹனிமூன் எல்லாருக்கும் வாய்க்காது போல … நம்மை மாதிரி எத்தனை பேர், புகுந்த வீட்டு பழக்கத்தோடு ஒன்ற முடியாமல் பாடுபட்டார்களோ!… இந்த வீடு என்று பழகும் எனக்கு… அன்றைய நாள் சோர்வோடு பெயருக்கு டீ என்று இருக்கும் தேநீரை கையில் எடுத்தாள் மது. கணவனை இன்னும் காணவில்லை. பின் கட்டில் அவர்கள் இருவரின் ஈர துணிகள் காய போட பட்டிருக்க, வேற எங்கயோ வேலையாக சென்றிருக்கான் போல என்று தான் நினைத்து கொண்டாள் மனைவி. ஒரு நாள் துவைத்தான், பின் அதுவே அவன் வேலையாக்கி விட்டாள் அவன் மனைவி.
பாசி பச்சையில் பட்டு புடவை எடுத்து அணிந்து கொண்டாள். இன்னும் சுடிதார், நைட்டி என்று முன்னேறவில்லை. இங்கு எல்லோரும் சேலையில் இருக்க, இவளும் இதையே கடைபிடிக்க வேண்டிய கட்டாயம். தன் ஒப்பனை முடித்து வெளி வந்தவளிடம், ஜாதி பூவை நீட்டினான் கரிகாலன். என்ன என்று கேள்வியாக மது பார்க்க.
மறுவீட்டு அழைப்பு என்ற ஒற்றை பதில், அவளுக்கு சந்தோஷம் கரை கண்டது. இந்த மூச்சு முட்டும் சூழலில் இருந்து வெளியேற போவதின் அறிகுறி அவள் முகத்தில் தோன்ற, கணவன் மனம் சுருங்கியது. தங்களோடு ஒட்டவே மாட்டாளா என்று… மூன்று நாள் விருந்து முடிந்த பின் இங்கு தானே வர வேண்டும் என்று எண்ணம் கரிகாலன் மனதில் தோன்றிய போதும், அதை வெளிக்காட்டி மனைவியின் மகிழ்ச்சியை அழிக்க விரும்பாமல், அவளை ஒட்டியே நடந்தான்.
காலை உணவு, மது பயந்தது போல கத்தரிக்காய் புளிக்குழம்பு. அட கொடுமையே… என்று அலறிய மனதை அடக்கி அமர்ந்தாள். அவள் வீட்டில் இருந்து பத்து மணி மேல் தான் கூட்டி செல்ல வருவார்கள். காலை உணவை முடித்து செல்ல வேண்டும் என்பது மாமியாரின் கட்டளை… சோற்றை போட்டு புளிக்குழம்பை விட, முகத்தை தூக்கிய படி கணவனை பார்த்தாள் பெண். அவன் மனைவியை திரும்பி கூட பார்க்க வில்லை. இவன் ஒருத்தன் மெளன சாமியார்… தனியா இருந்தா கால் கூட பிடிச்சு விடுவான், குடும்பமா இருக்கும் போது ஏறெடுத்து கூட பார்க்கமாட்டான் என்ற மனதிலே கணவனுக்கு பாராட்டு வாசித்தவள். மாமியாரின் அதட்டல் பார்வையில், வேகமாக உணவை உள்ளே தள்ளினாள்.
ஆஅஅ… அவ்வளவு காரம். சே…. இந்தம்மா எண்ணெயை பன்னீர் மாதிரி தெளித்து விட்டு, மசால் அள்ளி போட்டுருக்கு… மனதோடு முனங்கினாள் மது. அவளின் முகம் பார்த்த கருப்பாயி,
“ஏத்தா… இன்னும் என்ன சாப்பிடாம… வயசு புள்ளை வாய் நிறைய சோத்தை அள்ளி வை … காரமா இருக்கா ?.. நீங்க மறுவீடு போன பின்னாடி, நானும் உங்க மாமனும் தானா! எங்களுக்கு எதுக்கு சுடு சோறு. ராத்திரி பழைய கஞ்சிக்கு காரசாரம இருந்தா தான் உள்ளே இறங்கும்….” என்ற மாமியாருக்கு, சரி என்று தலையாட்டி உண்ண தொடங்கினாள் மது.
நல்லெண்ணெய் வாசனை தூக்க கார குழம்பு வைத்து சாப்பிட சொல்லி கெஞ்சும் தாயின் முகம் மனதோரம் நினைவு வந்தது. பலமான பெருமூச்சு ஒன்றை விட்டு, சோற்றை மட்டும் உள்ளே தள்ள,
கத்தரிக்காய் விலை நாப்பது ரூபாய் என்ற மாமியாரின் அரட்டலில், சாதத்தோடு கத்தரிக்காயும் உள்ளே சென்றது. கண் கலங்குவது போல் இருக்க, நிமிர்ந்து மாமியாரை பார்த்தாள். அவரும் உண்டு கொண்டு தான் இருந்தார். தட்டில் கிடக்கும் பச்சை மிளகாயை கூட வீணாக்காமல் உண்ண, கணவனை பார்த்தாள் அவனும் அவ்வாறே!… சற்று தள்ளி அமர்ந்து சாப்பிடும் மாமனாரை பார்க்க, அங்கேயும் அப்படி தான். தட்டை தவிர கறிவேப்பிலை கூட வீணாக்காமல் உண்டார்கள்.
அய்யோ! அம்மா… காய்ச்சல் வருதே… என்று மனதில் ஒரு குரல். பெரும்பாடு பட்டு உணவை முடித்தாள். விருந்தினர்கள் சென்றதோடு கறி குழம்பும் சென்று விட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் சாப்பிடும் அவளுக்கு எப்படி சரிப்படும், கறி எடுக்க காரணம் தேடும் குடும்பத்தில். அதுவும் தீபாவளிக்கு என்று இப்போதே கோழி வளர்க்கிறார் கருப்பாயி.
காலை பதினோரு மணிக்கு தான் மதுவின் அண்ணனும், அண்ணியும் வந்தார்கள். அவர்கள் வீட்டு கார் சத்தம் கேட்டதும், ஆர்வத்தில் வெளி வந்தவளுக்கு இறங்கிய முகங்களை கண்டு உற்சாகம் குறைந்தது. அவள் அப்பாவின் கார் அது, அதனால் தான் மதுவின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. புன்னகையோடு வந்த அண்ணனை கண்டு, தானும் லேசாக புன்னகை செய்தாள். அதே வரவேற்பு புன்னகையோடு ரம்யாவை பார்க்க, அவள் பார்வையில் ஆராய்ச்சி மட்டுமே தெரிந்தது.
மதுவின், கணவன் வீட்டு சூழலை எள்ளல் தூக்க ஆராய்ச்சி பார்வையில், சிறு சிரிப்பு கலந்து பார்த்தாள். தங்களை விருந்துக்கு அழைக்கும் எண்ணத்தோடு வரவில்லை, தன் வீட்டின் நிலை காண தான் வந்தாள் என்று கண்டு கொண்டாள் மது.
வீட்டின் வெளிப்புறம் இருந்த வேப்ப மரத்திலே, சேர் போட்டு அமர்ந்து கொண்டார்கள். விசாரிப்பாக கூட வீட்டின் உள்ளே வர வில்லை. சம்பிரதாயமாக கொடுத்த சொம்பு நீர், அப்படியே தான் இருந்தது. வீட்டில் மாடு இருந்தும் காலை, மாலை என்று இரண்டு வேளை பால் கறக்கும் போது மட்டும் தான் பால் வாங்குவார்களே,தவிர எல்லா நேரமும் வீட்டில் பால் இருக்காது. அதே நேரத்தில் ஃப்ரிட்ஜ்ம் கிடையாது. மோர் கலந்து மருமகள் கையில் கொடுத்தார் கருப்பாயி.
மது தன் வீட்டு ஆட்களுக்கு கொடுக்க, மறுக்காமல் வாங்கி கொண்டார்கள். ஆனால், குடிக்க தான் இல்லை. பேச்சு சுவாரஸ்யத்தில் குடிக்காதது போல் காட்டி கொண்டார்கள். சம்மந்தி வீட்டு ஆட்கள் என்று சாம்பார், காய், அப்பளம் என்று சாப்பாடு தயாராக தான் இருந்தது.
“நல்ல நேரம் போய்டும் பெரியம்மா… ராகு காலத்திலே இங்கிருந்து கூட்டி போய், எங்க வீட்டுல நுழைய விடனும். அத்தை அராத்தி கரைச்சு ரெடியா வச்சு இருக்காங்க…” என்று ஏதேதோ சொல்லி சமாளித்து கிளம்பி விட்டார்கள்.
இவர்களின் ஒட்டாத தன்மை புரியாமல் இருக்குமா… என்ன?… இதற்கு முன்பே இரண்டு சமந்தம் பண்ணியவர் கருப்பாயி. தங்கள் மேல் ஒரு சொல் வர கூடாது என்ற அடிப்படையில், சம்பிரதாய உபசரிப்பு முடிந்த உடன் வழியனுப்பி வைத்தார்.
வீடு வரும் வரை மது வாய் திறக்க வில்லை. முறையாக ஒரு ஆரத்தி எடுத்து, தடபுடலாக கறி விருந்து வைத்து என்று போன்ற பிரமாத வரவேற்பு தான். ஆனால் அவளுக்கு தான் ஒன்ற முடியவில்லை. ஒரே மகள், அவ்வளவு செல்லம்… மறு வீட்டு அழைப்புக்கு பெற்றோர் தானே வர வேண்டும். கட்டி கொடுத்த பெண்ணின் இல் வாழ்வை கண்ணார காணும் எண்ணம் இல்லையா!… இல்லாமல் என்ன?… மகளை காண வந்தால், சம்மந்தி உபசரிப்புக்கு ஈடு கொடுக்க வேண்டும். வீட்டின் உள் கூட வராதவர்கள் அல்லது வர விரும்பாதவர்கள். அந்த ஓட்டு வீட்டில் அமர்ந்து உணவு உண்ணுவார்களா?… அந்த வீட்டில் கொடுத்த சொம்பு நீரை குடிக்க யோசித்தாவர்கள் ஒரு நொடியும் தன்னை யோசிக்க வில்லையே…
மாப்பிள்ளை படித்தவனா, அரசு வேலையா, நல்ல மனிதனா என்று ஆராய்ந்தாவர்கள். அவர்கள் வீட்டு சூழலை ஆராய வில்லையா… ஏன்?.. அந்த காலத்து மாமியார், மருமகள் பஞ்சாயத்து, குடும்ப அரசியல் எல்லாம் எனக்கு ஒத்து வருமா!… பெற்றோருக்கு பிள்ளை பாராமாகி விட்டதா… ஆம், பாரம் தான். அதனால் தானே வந்த வரனுக்கு தள்ளி விட்டார்கள். எதுவும் கேட்க முடியாது. மனம் தாங்காமல் கேட்டால், “உன் ஒழுக்க லட்சணம்” என்று பதில் வரும்.
ஊர், உலகத்தில் நடக்காததா… ஒருவனை உண்மையாக காதலித்தேன்…அந்த காதலுக்காக போராடினேன்… இதுவே ஒரு ஆண் என்றால், அது பாராட்டுக்கு உரியது. பெண் என்றால் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் போய்விடும். ஆண் , தன் காதலுக்காக சமூகத்தை எதிர்த்து போராடினால் அது வீரம், இலக்கணம், பெருமை. அதுவே பெண் என்றால் இச்சை, காமம், வளர்ப்பு சரியில்லை, அடக்கம் இல்லை என்று எல்லாம் எதிர்மறை பட்டங்கள் தான்.
ஒருவனை காதலிப்போம், இன்னொருவனை கல்யாணம் செய்வோம் என்று ஒரு பெண் காதலில் விழுவாள். கட்டையில் போகும் வரை ஒருவன் தான் என்ற எண்ணம் தனக்கும் இல்லாமலா இருந்தது. அதனால் தானே அவ்வளவு போராடினேன். ஆனாலும் விதி, தோற்று போனேன். தன் பாட்டி ஒரு பழமொழி சொல்வார்கள், “பொட்ட கோழி கூவி பொழுது விடியாது” என்று, கடைசில அது தான் உண்மையாகி போனது.
வாழ்வில் ஒரு முறை தோற்றால், மனம் மறுமாலை ஏற்காத… மீண்டும் ஒரு கனவு, ஆசை, எதிர்பார்ப்பு தோன்றாத… பிடிக்காத ஒருவனோடு, கொஞ்சமும் ஒட்டாத குடும்பத்தோடு, தன் ஆயுள் முழுக்க எவ்வாறு கழிப்பது. இவர்கள் எனக்கு செய்த பெரிய அநீதி இது தான்.
இந்த சமூகமும், சூழ நிற்கும் உறவுகளும், சொந்தமும் தன் மேல் சுமத்திய குற்றத்தை ஒரு நாளும் தான் ஒப்பு கொள்ள போவதில்லை. காதல் மனித அடையாளம், என் காதலில் என்ன பிழை?… இன்று கை நீட்டி குற்றம் சாட்டும் பலரும், இள வயதில் சிறு சலனமும் இல்லாமல் கடந்திருக்க முடியுமா!… எனக்காக, என் காதலுக்காக, என் வாழ்க்கைக்காக நானே போராடினேன். நிமிர்ந்து நின்று போராடினேன். அப்படி நிமிர்ந்து நின்றதுக்கு தான் முதுகு எலும்பு உடைய முடக்கி விட்டார்கள்.
காலங்காலமாக பெண்களை அடக்கி ஆளும் உக்தி ஒழுக்கம் தானே. ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை வீதியில் விமர்சித்தால், மானம் உள்ள பெண் மடங்கி போவாள்… தன்னையும் மடக்கி விட்டார்கள், தன் ஒழுக்கத்தை விமர்சித்து.
தனக்கு நடந்த அநீதி எண்ணி மனம் உலையாக கொதிக்க, உள்ளுக்குள்ளே புழுங்கி கொண்டிருந்தவள். தன் அருகே அமர்ந்திருக்கும் தன் சரிபாதியை மறந்தாள். தனக்கு எப்படி புகுந்த வீடு புதிதோ அதே போல் கணவனுக்கும் மாமியார் வீடு புதிது என்பதை மறந்து தான் போனாள்.
உணவு முடிய உள்ளே வந்தவள், யாரையும் கண்டு கொள்ளாமல், மேலே தன் அறைக்கு சென்று விட்டாள். கரிகாலன் அமைதியாக பார்த்து நிற்க, சங்கட பட்டு நெளிந்தது அவன் மாமனார் தான். தன்னை கண்டு கொள்ளாமல் செல்லும் மனைவியை, பின் தொடரும் எண்ணம் இல்லாமல் வரவேற்பறையிலே அமர்ந்து கொண்டான்.
மருமகன் அமர்ந்திருக்க, தாங்கள் அறைக்கு செல்ல முடியாது என்று உணர்ந்த சுந்தரமும், கரிகாலன் கூடவே அமர்ந்து கொள்ள, பேச்சு நாட்டு நடப்பை அலசியது. தன் அறைக்கு வந்த மதுக்கு, மனம் லேசான உணர்வு. சிறுவயது முதல் வளர்ந்த இடம், தற்போது சொர்க்கமாக தெரிந்தது. தன் ஆடை, அணிமணிகளை களைந்து எறிந்து விட்டு, இலகுவான உடைக்கு மாறியவள், முதலில் செய்தது ஜன்னல் அனைத்தையும் மூடி, இழுத்து போத்தி உறங்கியதை தான். அப்படி ஒரு சுகமான உறக்கம், ரொம்பவும் சௌகரியமான தன் அறையில் சுதந்திரமாக உறங்கும் உறக்கம்.
இரவு நெருங்கும் போது வந்தவள், கணவனை கண்டு அறிமுக புன்னகை மட்டுமே சிந்தினாள். அவளின் உடையை பார்த்து அமைதியாகி கொண்டான் கரிகாலன். மற்றவர்களுக்கு வித்தியாசமாக தெரியாத போது, தன் கேள்வி தப்பான அர்த்தம் கொடுக்கம் என்ற எண்ணம் ஒரு காரணம். முட்டிக்கும் கொஞ்சம் இறங்கி இருந்தது. அவனின் அண்ணன் மகள் வினித்ரா, வயதுக்கு வந்த பின், இந்த மாதிரி உடைகளை வீட்டில் தடை செய்து விட்டார்கள். ஒட்ட முடியவில்லை என்று மது சொன்னதன் அர்த்தம், தற்போது நன்றாக புரிந்தது.
இரவு உணவுக்கு பின், கொஞ்சம் தூரம் லேசாக நடந்து வந்தவன், திரும்ப வீட்டிற்குள் வரும் போது மனைவி இல்லை. அறிந்தது தான் என்றாலும் கொஞ்சம் ஏமாற்றம் தான். மாப்பிள்ளை என்று தன்னை தாங்க வேண்டாம். இந்த வீட்டில் தனக்கு நெருக்கமான உறவு மது தானே, இயல்பாக பழகும் வரை உடன் நிற்கலாம் தானே. குளிக்க, உடை மாற்ற, பாத்ரும் செல்ல, கொஞ்சம் சாய்ந்து கொள்ள போன்ற தேவைகளுக்கு மனம் மனைவியை நாடியது. ஆண்கள் இருவரும் வெளியே சென்றிருக்க, வீட்டில் புழங்கும் மாமியாரிடம், எவ்வாறு கேட்பது பாத்ரூம் செல்ல வேண்டும் என்று, தயக்கமாக இருந்தது.
மெதுவாக மாடியேறி மனைவியின் அறைக்கு செல்ல, பின்னாடியே வந்தார் மீனாட்சி. முன்பே பழக்கம் என்பதால் பாண்டியன் என்று தான் அழைப்பார்.
“பாண்டி! இது தான் பாப்பா அறை, உள்ளேயே எல்லா வசதியும் இருக்கு, எதுக்கும் வெளிய வர தேவையில்லை. வலது பக்கம் குட்டி ஃப்ரிட்ஜ் இருக்கு. அதுல குடிக்க ஜுஸ், கலர், பழம் எல்லாம் இருக்கும். அப்புறம் ஏ. சி இருக்கு, ஆன் பண்ணிக்க பாண்டி.டேபிள் மேல சூடா பால் இருக்க, பாத்ரூம் அட்டாச் தான்…” என்று சொல்லி செல்ல.
அமைதியாக பார்த்தவன் மனதில் சிறு யோசனை. தன் கல்யாணம் நடந்தது ஆவணி மாதம். அதன் தொட்டு வரும் புரட்டாசி, ஐப்பசி மாதம் எல்லாம் மழை, காத்து குளிர் தான். தனக்கு ஏ.சி என்ன அவசியம். அவர்கள் வசதி தெரிந்தது தானே. ஆரம்பத்திலே சொற்களில் பிழை எண்ண கூடாது என்று உணர்ந்தவன், உள்ளே சென்றான்.