கணவனின் அரண்ட முகத்தை பார்த்து தான் கொஞ்சம் தணிந்தாள் பெண். ஆனால், முகத்தில் கடுமை இன்னும் இருந்தது தான். உதடுகள் அழுகைக்கு துடித்தது,அவளால் ஒட்டவே முடியவில்லை. மனதை, எத்தனை சமாதானம் சொல்லியும், அவர்களை தன் குடும்பமாக எண்ணி இணைய முடியவில்லை.
தரையில் கூட உடல் தளர்ந்து அமரவில்லையெனில் , தன் மனதை என்ன சொல்ல!… கணவன், புது உறவு, பிடித்தம் என்பதெல்லாம் தாண்டி சூழல் நன்றாக அமைந்தால் தானே மனம் ஒன்ற முடியும். இங்கு வந்த முதல் நாளே குடும்ப அரசியல். கணவனின் அண்ணன் மனைவி தனக்கு அக்கா முறை, இன்னும் ஒரு முறை கூட தன்னிடம் பேசவில்லை. கூட்டம் அதிகம், வேலை என்பது போல் காட்டி கொண்டாள். இந்த வீட்டு பெண்கள் ஒத்துழைப்பு இல்லாது, தான் எவ்வாறு இவர்களோடு கலக்க முடியும். ரொம்பவும் கலங்கி போனாள் மது.
இதில் முதல் ராத்திரிக்கு அலங்காரம் எனவும், இன்னும் தவிப்பு கூடியது. எதுவும் தெரியாத சிறு பெண் அல்லவே!… அதுவும் இந்த அறை மூச்சு முட்ட தொடங்கியது. உணவை கூட சமாளித்து விடலாம். ஆனால், இந்த கழிவறை…. ம்கூம்… மூச்சை இழுத்து பிடித்தே போய் வந்தாள். அந்த இரும்பு வாளியில் இருக்கும் தண்ணியை மேனியில் ஊத்தவே பெரும்பாடு பட்டாள்.
வீடு சென்ற தாய், தந்தை இருவரும் தன்னை அழைத்து பேசவில்லை. அந்தளவுக்கா தான் பாரமாகி போனோம்!… வீட்டின் உள் வரவும் இல்லை, தன்னிடம் சொல்லி கொண்டு செல்லவும் இல்லை. பெற்றோர் கடமை என்பது போல தான் இருந்தது, அவர்கள் நடவடிக்கை.
இந்த வீட்டின் மனிதர்களோடு கலந்தாட முடியாமல் ஒதுங்கும் தன் குடும்பம், தன்னால் எப்படி உறவாட முடியும் என்று யோசிக்காமல், எவ்வாறு இந்த திருமணத்தில் தன்னை நுழைந்தார்கள்.
வாழ்வில் தான் செய்த தவறு தான் என்ன?… பொருந்தாத உறவுகளோடு, மனம் ஒன்றாத கணவனோடு தன் வாழ்க்கை எப்படி போகும்!… உண்மையில் கடவுள் மேல் தான் கோபம் வந்தது மதுக்கு. ஆசைப்பட்ட வாழ்க்கை தான் கிடைக்க வில்லை, விதி போல் அமைந்த வாழ்வு நன்றாக இருந்திருக்கலாம். தனக்கான போராட்டம் இன்னும் இருக்கோ!…
உடலும், மனமும் துவள, சோர்வாக சாய்ந்து வெளி காற்றை வாங்கி கொண்டிருந்தாள் மது, மனதில் எரியும் வெப்பம் உடலை தாக்காதவாறு… கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்று மனம் மாறி, மாறி பயணிக்க, வகையறியா மனதிகைப்பில் நின்று இருந்தவளின் கழுத்துக்கடியில், ஒரு வலிய ஆண் கரம் பட்ட உடன் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தாள்.
கணவன் தான். அவன் கையில் இருந்த அழுத்தமும், முகத்தில் இருந்த புன்னகையும், அவளுக்கு வேற ஒன்றை நினைவு படுத்த, அதன் தாக்கம் தான் ஓங்கி ஒரு அறை விட்டாள்.
கன்னத்தில் கை வைத்து மனைவியை பார்த்த கரிகாலனிடம் சில நொடிகள் அசைவே இல்லை. மனைவி தன்னை அடித்தாள் என்பதை உணர நேரம் தேவைப் பட்டது. அவனின் வகுப்பில் அடிவாங்கிய குழந்தை, கன்னத்தில் கை வைத்து பாவமாக பார்க்குமே ஒரு பார்வை!… அதை போல தான் மதுவை பார்த்தான். என்ன தப்பு செய்தேன் நான் என்று…
அவன் பார்வையில் மனம் பொறுக்காத மது, “எனக்கு இங்க முடியவே இல்லை, ரொம்ப தவிப்பா இருக்கு. என்னன்னு சொல்ல தெரியால, ஆன எல்லாத்தையும் உதரி தள்ள தோணுது. மூச்சு முட்டுது, வாழ்க்கையில ரொம்ப மோசமா தோத்து போன உணர்வு. முட்டி மோதி சமாளிக்க நினைச்சாலும் முடியலை” என்று இரு கை விரித்து, தன் இயலாமையை சொன்னவள்.
“எனக்குள்ள நான் போராடிட்டு நிக்கும் போது, நீங்க என்னை தொட்டதும் கோபம் வந்துருச்சு. மனசுல பதிய வச்சாலும் நீங்க எனக்குள்ள ஒட்டவே இல்லை. ஏதாவது, ஒரு அற்புதம் நடந்து எல்லாம் மாறாதான்னு ஏக்கமா இருக்கு” என்று அழுகைக்கு துடிக்கும் உதடுகளை அடக்கி கொண்டு பேசினாள்.
மதுவை வெறுமையாக பார்த்தான் பாண்டியன். அவளை பார்க்கவே ரொம்பவும் பாவமாக இருந்தது. வீட்டு பிரச்சனை தன்னை பாதிக்காது காட்டி கொண்டவன், மனைவியின் இத்தகைய பேச்சு முழுதாக பாதித்தது.
“உண்மையில் தோற்று போனது நான் தான். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே, பூவைத்து தனக்கானவள் என்று அறிவித்தவன். அவள் பற்றிய செய்திகளை கேட்டும், முழு மனதோடு தம் மனைவியாக்கி கொண்டவன். தன் மனைவி, தன் எதிர்காலம், தன் வாழ்வின் பாதி, தனக்கு மட்டுமேயான உலகம் என்று நான் எண்ணி நிக்க. இவள் ஒரு நொடியில் ஒட்ட வில்லை என்று விட்டாளே!… அவள் வாழ்வில் அற்புதம் வேண்டுமாம். எதற்கு?… அவள் வாழ்வில் இருந்து, தன்னை மறைக்கவா… நீ என் வாழ்வின் அற்புதம் என்று நான் நினைக்க, நான் உன் வாழ்வின் சாபம் என்று நீ உணர்த்தி விட்டாய் பெண்ணே” என்று மனம் ஊமையாக அழுதது. ஆனால், வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் சாதரணமாக பேசினான்.
“மூணு, நாலு தரம் கூப்டேன் நீ திரும்பல. ஏதோ ஒரு சிந்தனையில இருந்த… அதான், கை வச்சு அழுத்தி திருப்பினேன்” என்று தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தவன். அமைதியாக மனைவியை விட்டு நகர்ந்தான்.
மதுவின் முகம் இறுக்கத்தை விட்டு மாறவில்லை. அறையின் ஒரு பக்க கதவை மட்டும் திறந்து பாண்டியன் நிற்க. உள் பக்கம் மது நின்றாள். சிறு வீடு என்பதால் கூடத்தில் தான் அனைவருக்கும் உணவு. அதன் பொருட்டு வாயிற்படியில் தான் பாண்டியன் நிற்க முடியும். பெண் மக்கள் உணவு முடிய காத்திருந்தான்.
அவர்கள் பேச்சு குரல் மதுவின் காது வரை கேட்டது. ஆரம்பித்தது சகுந்தலா தான்,
“அத்தை! ராத்திரி சடங்கை இங்கேயே வைங்க… வயசுக்கு வந்த பொண்ணு வினித்ரா, அவளை வச்சுக்கிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு… எங்க வீட்டு சொந்த பந்தமும் நிக்குது, சின்ன பாண்டிக்கு தோது அமையாது. இந்த வீடு தான் ராசி, நான் இந்த வீட்டுல தான மூணு பிள்ளை பெத்தேன். வசந்தியும் இங்க தானே இருந்தா… ஏற்கனவே எங்க வீட்டுல, உம் மாமியார் சின்ன மருமகளுக்கு மட்டும் பத்து சவரன் தாலி கொடி போட்டாங்க… அம்புட்டு நல்லது, கெட்டது பார்த்த உனக்கு என்ன மிச்சம்ன்னு கொள்ள பேச்சு. வீணா மனசடவு வந்துரும்” என்று பணிவாக பேசியே, தன் வீட்டு பக்கம் வந்து விடாதீர்கள் என்று அறிக்கை கொடுத்தே வெளியேறினாள்.
அனைவரும் நிக்க தான் இந்த பேச்சு. கருப்பாயி மெதுவாக மகன் முகம் காண, அவன் தன் மனைவி முகம் பார்த்து நின்றான். மதுவின் ஒட்ட வில்லை என்பதன் அர்த்தம் ஓரளவுக்கு விளங்கியது. விரக்தி சிரிப்பு அவன் உதடுகளில் , நல்லவன் ஏமாளி என்பது எவ்வளவு உண்மை.
அமைதியாக நடந்து வந்தவன், அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து கொண்டான். மனம் நடந்ததை எண்ணியது. திட்டமிட்டு, லோன் போட்டு கட்டும் வீடு. அதில் என்ன பற்றாக்குறை வர போகுது. உண்மையில் பற்றாக்குறை ராஜபாண்டிக்கு தான். விசேஷம் வைத்த காசில் வீடு கட்ட, செலவு இழுத்து கொண்டது. அதே நேரம் பெரிய மகள் வினித்ரா வயதுக்கு வந்து விட, வீடு ரொம்ப அவசியமாகி போனது. உடன் பிறப்பு உதவ தானே, அதன் பொருட்டு தான் பாண்டியிடம் கேட்டது. அவனுக்கும் வீட்டு வேலை இருப்பதால், கையில் காசு இருக்கும் என்று தான் கேட்டான் பெரிய பாண்டி.
முதலில் தயக்கம் தான் கரிகாலனுக்கு. விரைவில் தந்து விடுவேன் என்று நம்பிக்கை கொடுத்தே தான் ராஜபாண்டி காசை வாங்கியது. அது, கருப்பாயி, சகுந்தலா, வசந்தி என்று எல்லோருக்கும் தெரியும்.
அடுத்து கரிகால பாண்டியனுக்கு கல்யாணம் கை கூட, மீண்டும் நம்பிக்கை தந்தது ராஜபாண்டி தான். ஏனென்றால், மது வீட்டில், சொந்த வீட்டை காரணம் காட்டி தான் பெண் தர சம்மதித்தது. அண்ணன் மேல் உள்ள நம்பிக்கையில் தான் கரிகால பாண்டியன் கல்யாண வேலையை தொடங்கியது. தாலி கொடி செலவு மட்டுமே ஐந்து லட்சத்தை தொட்டத்து. மத்த மூணு லட்சம், கல்யாண பொண்ணு கூட தோது போட்டு தான் மற்றவர்கள் உடை எடுத்தது. முக்கியமாக சகுந்தலா, மூத்த மருமகள் என்று யாரும் தடை சொல்லவில்லை.
கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்பு வரை காசு கை வந்து சேரவில்லை என்றதும் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டான் கரிகால பாண்டியன். வீடு அரைகுறையாக நிக்க, கல்யாணம் பண்ணி மனைவியை எங்கு கூட்டி செல்ல. சொந்த வீடு, அரசு உத்தியோகம் என்பதால் தானே, பெண் தருகிறார்கள். சரி என்று சொல்லி, திருமணம் பேசி, பத்திரிக்கை அடிச்சு கொடுத்தாச்சே… பயந்து போனான் பாண்டியன். வார்த்தை தவறுவது என்பது உண்மையில்லாத தன்மை தானே. தன் மேல் நம்பிக்கை வைத்து பெண் கொடுப்பவருக்கு, தான் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டுமே!…
ஆனால், அண்ணன் ராஜபாண்டி, தான் ஒரு சிக்கலில் இருப்பதாகவும், தற்போது பணம் தர இயலாது என்று சொன்னதோடு. திருமணம் முடிந்து தங்கள் வீட்டில் தங்கி கொள்ளலாம் என்றும் சொன்னான். வேற யாரும் என்றால் அடித்து கூட கேட்கலாம். சொந்த அண்ணன், ஒன்றும் சொல் முடியாமல் போனது. இதுவரை ஒன்றாக தானே குடித்தனம். அதனால் வேறு யோசிக்கவில்லை, வேற ஒருத்தர் வீடு என்றும் எண்ணவில்லை.அத்தோடு, கருப்பாயிம் எடுத்து சொல்ல, ஒத்து கொண்டான்.
மறு வீடு வரை தான் அண்ணன் வீடு. பின், தான் வேலை பார்க்கும் ராமநாதபுரம் கூட்டி சென்று விடலாம். அதன் பின், அண்ணன் பணம் கொடுக்க, வீட்டு வேலையை முடித்து விடலாம் என்று நினைக்கும் போது எளிதாக இருந்தது. நடக்கும் போது கடினமாக மாறி போனது. யாரின் குணம் யார் அறிவார்… மொத்தத்தில் பாவமாக நின்றது கரிகால பாண்டியன் தான்.
மதுவுக்கு இந்த காசு விவகாரம் எல்லாம் தெரியாது, வீடு கட்டாமல் பாதியில் நிக்குது என்று மட்டும் தான் தெரியும். அது தெரிய வரும் போது, அமைதியாக தள்ளி நிக்கும் மதுவின் குணம் என்னவென்று இவர்கள் அறிவர். கூட்டு குடும்பம் என்பது ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும், ஒருவர் மட்டுமே விட்டு கொடுத்து செல்ல முடியாதே.
இரவு மணி ஒன்பது நெருங்க, வந்திருக்கும் சொந்தம் எல்லாம் படுக்க ஆயத்தமானது. யாருக்கும் ராஜபாண்டி வீடு செல்ல விருப்பம் இல்லை. அதனால், பெண்கள் எல்லாம் வெளி திண்ணையின் அருகில் உள்ள இடத்தில் பாய் விரித்து படுத்து கொள்ள, ஆண்கள் எல்லாம் தங்கள் போர்வையை எடுத்து கொண்டு ஊர் கோவில் மந்தை நோக்கி சென்றார்கள்.
கருப்பாயி, தம் மகள் வசந்தி மூலம் சின்ன பாண்டி அறையை தயார் செய்து, புது மணமக்களை அறைக்கு அனுப்பி வைத்தவர்.பின்பு, சொந்தங்களின் வசதியை பார்த்த உடன் சென்றது பெரிய பாண்டிவீட்டுக்கு தான்.
அவர் வாசலை தொடும் போதே, வெளி வாயில் வரை பேச்சு குரல் கேட்டது. மருமகள் தான்,
“பத்து வருசம் அந்த ஓட்டு வீட்டுல உங்க கூட வாழ்ந்தேன். கொழுந்தன், நாத்துனான்னு எம்புட்டோ அனுசரிச்சு விட்டு கொடுத்து போயச்சு… இப்ப தான் சாமி கண்ணை திறந்து, எனக்குன்னு வழி விட்டுருக்கு. எம் புள்ளை, புருசன்னு செத்த நிம்மதியா இருக்கேன், உங்க வீட்டு ஆளுக சடவு பேச்சுக்கு நான் ஆள் இல்லை. பாடுபட்டு கட்டுன வீடு, முதல் நல்ல காரியம் நம்ம புள்ளைக்கு தான் நடக்கணும். எவளோ ஒருத்தி புருசன் கூட சந்தோசமா இருக்க, எம் வீட்டை நான் ஏன் தரணும். இந்த வீட்டுல ஒரு நல்லதுன்ன எம் புள்ளைகளுக்கு தான் இருக்கணும்” என்று ஆணித்தரமாக பேசினாள்.
ராஜபாண்டியும் மனைவி பேச்சில் உள்ள நியாயம் புரிந்து அமைதியாக நிக்க, அனைத்தையும் பார்த்தபடி உள்ளே வந்தார் கருப்பாயி.
மாமியாரை கண்டு சகு எழுந்து உள்ளே சென்றாள். அவளுக்கு தெரியும், தன் பேச்சுக்கு நேர் பதில் கொடுக்காமல் மகனிடம் சொல்ல வருவார் என்று… அதனால் தான், முன்பே தன் கருத்தை கணவன் மனதில் பதிய வைத்தாள். பெண் பிள்ளை, அதுவும் முதல் குழந்தை தந்தையின் செல்லம் அல்லவா… தம் மகளை நினைக்கும் போது, உடன் பிறப்பு பின்னே சென்று விட்டது.
தாங்கள் பேச்சை தாய் கேட்டு விட்டார் என்று கண்டவன், “ அம்மா! நம்ம சகு சொல்றதும் நியாயம் தானம்மா. எம்புட்டோ கஷ்ட பட்டு கட்டுன வீடு, அவ பிள்ளைகளுக்கு நல்லது நடக்க எண்ணுறா… வேற ஒரு பொண்ணு குடும்பம் பண்ணுன ராசி கெட்டு போகுமாம்… எதுக்கு வம்பு, கடன் வாங்கி நான் கட்டுன வீடு எம் புள்ளைகளுக்கு தான… கொஞ்ச நாள் பெரிய வீட்டுல இருக்கட்டும். அப்புறம், நான் காச குடுத்த பின்னாடி அவங்க வீட்டுக்கு போகட்டும்” என்ற ராஜ பாண்டி பேச்சுக்கு, தாயின் முகம் அதிருப்தியை வெளிப்படுத்த.
“அம்மா! நான் சாதாரண கூலி வேலை பாக்குறேன். தம்பி அரசாங்க உத்தியோகம், பொண்ணு எடுத்த இடமும் பெரிய ஆளுக தான். அவனுக்கு என்ன கஷ்டம் வர போகுது. தம்பி நல்லா தான் இருப்பான். அத்தோடு, அண்ணன், தம்பி நாங்க விட்டு கொடுத்து போகலாம். வேற வீட்டு பிள்ளைக கிட்ட எதிர்பார்க்க முடியாது ம்மா!…” என்ற பெரிய பாண்டி பேச்சில்,
“ காலம் மாறும் பெரிய பாண்டி. உம் பேச்சு எனக்கு ஒப்பல. உம் மனசு தெரிஞ்சு பேச்சு, இனிமே என்ன சொன்னாலும் உம் புத்தியில் ஏறாது. நீ சொன்னது தான் பெரிய பாண்டி, அண்ணன் – தம்பி விட்டு கொடுத்து போவீங்க. அடுத்த வீட்டு பொண்ணுக விட்டு குடுத்து போக மாட்டாங்க தான். இன்னைக்கு உம் பொண்டாட்டி, நாளைக்கு சின்னவன் பொண்டாட்டி. உம் பொண்டாட்டி பண்ண கூத்து கொஞ்சமில்லை,காசு விசயம் வெளிய தெரிஞ்சு, தம்பி பொண்டாட்டி கிட்ட பேச்சு வாங்கு முன்ன, வாங்குன காச எண்ணி வை மகனே! உம் வீட்டு படி ஏறி வர மாட்டான் சின்ன பாண்டி” என்று சொன்னதோடு, வேகமாக வெளியேறி விட்டார் கருப்பாயி.
அவருக்கு பெரிய பாண்டி பேச்சு மனம் ஒப்பவில்லை. கொஞ்சம் வெகுளி சின்ன பாண்டி. அதற்காக ஏமாற்றலாமா!… உடன் பிறந்த பாசமும் இல்லாமல் போனதே!…
முதல் இரவு என்ற எதார்த்த எதிர்பார்ப்பு, ஆசை, கனவு இன்றி தான். இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர். அந்த கால கல்யாண ஜமுக்காளம் விரித்து பூ, பழம் என்று அடுக்கி வைத்திருந்தார்கள். மல்லிகை பூவும், ஊது பத்தி வாசமும் அவர்களுள் ஒரு உணர்வையும் தூண்ட வில்லை. அவளின் இறுக்கம் பார்த்து கரிகால பாண்டியன்.
“ மது! கொஞ்ச நேரம் வெளிய நிக்கலாமா.. தெக்கு பக்கம் தென்னந்தோப்பு இருக்கு. காத்து நல்லா வரும். நீயும் வந்ததுல இருந்து உள்ளாரவே அடைஞ்சு கிடக்க, வா… வெளியே போய் பாப்போம்” என்று பேச்சை ஆரம்பிக்க. அவளுக்கும் அறை மூச்சு மட்டும் உணர்வு தான் என்பதால், மறுக்காமல் கணவன் உடன் வந்தாள்.
பின் வாசல் வழியாக தோப்பு வந்தார்கள். அங்கிருந்த கயிற்று கட்டிலை எடுத்து போட்டான் பாண்டியன். புது போர்வை விரித்து தன்னளவில் வசதி செய்து கொடுத்தான். பிகு செய்யாமல் அதில் அமர்ந்து வேடிக்கை பார்த்தாள் மது.
அவள் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன், தன் சட்டையை கலட்டி விட்டு வெறும் வேட்டி, பனியன் சகிதமாக அமர்ந்தான்.
“ முதல்ல நாம ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு, தெரிஞ்ச பின்னாடி தான் எல்லாம்….” என்று சொல்லிய மது. சினிமா டயலொக் அப்படியே சொல்றோம், கண்டு பிடிக்க போறான் என்று மனதில் ஒரு குரல்.
விகல்பம் ஏதுமில்லாமல் சரி என்று தலையசைத்தான் கணவன். அவள் ஆச்சரியமாக பார்க்க,
“என்ன இருக்கு மது. கல்யாணத்துக்கு முன்ன நாம பேசுனது இல்லை, கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நம்பிக்கை தர சூழல் எனக்கு இல்லை. புருசனா இருந்தாலும் நம்பிக்கை இல்லாத மனுசன் கூட எந்த பொண்ணு வாழ்க்கையை ஆரம்பிக்கும். எம் மேல உனக்கான நம்பிக்கை எனக்கு ரொம்ப முக்கியம். அந்த நம்பிக்கையை பெறாம, உங்கிட்ட எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. கட்டுன புருசன் கட்டாய படுத்துவான்னு நினைக்காத… பொண்ணு கிட்ட வீரம் காட்டாத கோழை நான்…” என்று சிறு சிரிப்போடு பாண்டியன் பதில் சொல்ல.
“தமிழ் வாத்தியார்… பேச சொல்லியா தரணும்” என்றாள் கேலி குரலில். கணவன் தன்னை கட்டாய படுத்த மாட்டான் என்பதில் தெளிவும், அமைதியும் வந்திருக்க. சகஜமாக பேச முயன்றாள்.
“எம் மனசுல உள்ளதை சொன்னேன் மது…” என்ற கணவனிடம்.
“ நீங்க ஏன் தமிழ் எடுத்தீங்க… தாய் மொழி பற்றா!” என்ற மனைவிக்கு.
“எனக்கு இங்கிலீஷ் வராது அதான் தமிழ் எடுத்தேன்” என்ற பதில் கொஞ்சம் சிரிப்பாக இருந்தது மனைவிக்கு.
“இங்கிலீஷ் ரொம்ப ஈசியான லாங்குவேஜ் தான். படிக்கிறதும் ரொம்ப எளிதா இருக்கும்…” என்ற மனைவியின் பேச்சில்,
“நீ தமிழ் வழி கல்வியா மது?…” என்ற பாண்டியனின் கேள்விக்கு.
“இல்லை. ஆங்கில வழி கல்விதான். ஏன் கரிகாலன்?…” என்ற மனைவியை பார்த்தவன்.
“தமிழ் வழி கல்வில படிச்ச யாராவது சொல்லட்டும் ஆங்கிலம் எளிதுன்னு. அப்ப ஒத்துக்கிறேன்…” என்ற பாண்டியன் பதில் அவளை சிரிக்க வைத்தது.
கடந்த ஒரு வாரத்தின் பின் சிரிக்கும் சிரிப்பு. கடமையாக இல்லாமல், இயல்பாக வரும் சிரிப்பு. அதை உணர்ந்தே இருந்தாள் மதுமிதா.
“அப்ப ஆங்கிலம் கஷ்டம். அப்படித்தான…” என்ற கேள்விக்கு.
ம்கூம்… என்று தலையாட்டி, “எனக்கு கஷ்டம்” என்றவன். அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து.
“மது!.. வாட் இஸ் யுவர் நேம் அப்படின்ற வார்த்தையை, நீ மாத்தி கேட்டன்னு வை. பட்டுன்னு என்னால பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் யோசிச்சு, அதுக்கு அர்த்தம் கண்டு புடிச்சு தான் சொல்லுவேன். அதான், அந்த பக்கமே நான் போகல…” என்றவனுக்கு.
“அப்ப, மத்த பாடமெல்லாம்…” என்று முடிக்காமல் இழுக்க.
“அதையும் காலேஜ்ல இங்கிலீஷ் தான் படிக்கணுமாம். இங்கிலீஷ, இங்கிலீஷ் மாதிரியே படிக்க முடியல. இதுல, கணக்கு, அறிவியல் எல்லாம் நான் எப்படி ஆங்கிலத்திலே படிப்பேன்…” என்ற பாண்டியனுக்கு.
“ அதனால” என்று மது நிக்க.
“அதனால் தான். தாய் மண்ணே வணக்கம்ன்னு ஒரே தாவ தாவிட்டேன். அந்த தமிழ் தாய்க்கும், சங்கம் வளர்த்த பாண்டியனுக்கு பின்னாடி இந்த கரிகால பாண்டியன் தான்னு நினைச்சது போல… என்னை அப்படியே உள்ள இழுத்துகிச்சு… நானும் மெய்நிகர் தமிழ் தாயெண்ணு மூழ்கிட்டேன்…” என்ற அவனின் விளக்கம். சிறு ரசனையும், பெரிதான புன்னகையும் கொடுத்தது.
“கரிகால பாண்டியன் நிறைய புத்தகம் படிப்பிங்க போல…” என்றதுக்கு .
“ம்கூம்… நிறைய வாசிப்பேன். அப்புறம் இசை. அதாவது, துள்ளல் தரும் பாட்டு கேப்பேன். எந்த காரணமும் இல்லாம, மனசுக்கு உற்சாகம் தரும், சுகமா நனைய செய்யும், முகத்தில சிரிப்பு வரும், கண்ணுல கனவு வர மாதிரி. இப்படி நிறைய பாட்டை, தூங்குவதற்கு முன்னாடி கேட்பேன்” என்ற கணவனுக்கு.
“நீங்கள் விரும்பி கேட்பவை!….” என்றாள் மது கேலி குரலில்.
“ராஜா பாடல்” என்றான் ஒற்றை வரியில்.
“ அப்படின்னா… ஒரு பாட்டை எடுத்து விடுவது!..” கணவனை கலாய்க்கும் எண்ணம் வந்தது மனைவிக்கு, முகத்தில் குறும்பு புன்னகையோடு அவள் பார்த்திருக்க.
தன்னை சரி செய்து அமர்ந்தவன். கொஞ்சம் குரலை சரி செய்து, தொடங்கினான்…
கண்ணாலம் கட்டும் முன்னே
ஹேய்!….
கெட்டி மேளம் கொட்டும் முன்னே
ஹேய் !…
கை விரலும் பாட்டால் என்ன ஆகாத…
வண்ணத்து பூச்சி போல
வெள்ளருக்கு பூவை போல
உன் அழகை கண்டா நெஞ்சம் ஆடாத….
அடி மஞ்சள் கழங்கை சிறு இன்ப கிழங்கே; கட்டி கரும்பை கொடி முல்லை அறும்பே….
அடி பாக்காம போனவளே குறுவம்மா…
ஒரு பெண்ணென வந்தது பொன்னுல பண்ணிய உருவமா…
மதுமிதா, தன் கணவனையே அசையாமல் பார்த்து நின்றாள். அவன் பாடும் பாடலில் ராகம் இழுத்து பாடவில்லை. வார்த்தையில் சரணம், அழுத்தம் கொண்டும் பாடவில்லை. ஆனால், உற்சாக குமிழி இருந்தது. மனைவி முன் பாடும் முதல் பாட்டு என்பதால் வெட்கம் கலந்து, கையை தட்டி, தலையை ஆட்டி, வாய் நிறைந்த சிரிப்போடு என்று அவன் பாடும் பாடல். மதுமிதாவுக்கு, அவன் பால் ரசனையை தூண்டியது.
காலையில் இருந்து அவனுக்கும் நிறைய மனஉளைச்சல் தான். மாமனார் வீட்டின் முன் அசிங்க பட்டு, சொந்த அண்ணன் குடும்பமே கை விட்டு, மருமகன் என்ற மதிப்பு இழந்து, மனைவியின் நம்பிக்கை இழந்து. அத்தோடு, அடியும் வாங்கி கொண்டு, மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தும் அதை முகத்தில் காட்டாமல். தன் மனைவியை சிரிக்க வைக்கும் வேலையில் இறங்கி விட்டானேன்.
தன் கோபத்தை கணவன் மேல் காட்டினோம். அவன் கோபத்தை யார் மேல் காட்டுவான்?… கணவன் மேல் நன் மதிப்பு தோன்றியது.
பாட்டு முடிந்த பின், ஹேய்… என்று ஆர்ப்பரித்து மது கை தட்ட. உண்மையில் வெட்கம் வந்தது கரிகால பாண்டியனுக்கு.