பால் வண்ண சுடிதாரில் இருந்தவளின் எளிமையான அழகில், தன் கோபம் தானாக குறைவதை உணர்ந்தவன் கோபத்தை இழுத்துப் பிடிக்கும் பொருட்டு அவள் புறமிருந்து பார்வையைத் திருப்பி வேறுபுறம் நோக்கினான்.
நேத்ரா கார் அருகே வந்தவுடன் ஆட்டோ லாக்கை விடுவித்தவன், அவள் முன்னே ஏறியதும் காரை வேகமாக செலுத்தினான்.
காரில் ஏறி அமர்ந்தது முதல் நளன் நேத்ராவிடம் எதுவும் பேசாமல் இருக்கவும், ஏன் அவள் புறம் திரும்பாமல் கூட இருக்கவும், அங்கிருந்த சாக்லேட்டைப் பிரித்து உண்டு கொண்டே “நளன் ப்ளீஸ் நான் உங்க கிட்ட சொல்லீட்டு தானே போனேன் மேரேஜ் பங்க்ஷன் போறேன்னு… பின்ன ஏன் இவ்வளவு கோபம்” என்றாள் நேத்ரா வாயில் சாக்லெட்டை மென்று கொண்டே.
காரின் கியரை வேகமாக மாற்றியவன் நேத்ராவை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் காரை செலுத்தினான்.
நேத்ரா காரில் ஏறும்போதே லேசாகத் தூரிய மழை இப்போது வலுப்பெறவும், சென்னை மாநகரின் நெரிசலில் இருந்து தூரமாகத் தள்ளிப் போய் காரை நிறுத்தினான். நிறுத்தியவன் அப்போதும் நேத்ரா புறம் திரும்பாமல், காரின் முன்னே வெறிதுக் கொண்டிருந்தான்.
அவன் காரை நிறுத்தியது பேசுவதற்காகத் தான், என்று நினைத்த நேத்ரா நளன் மீண்டும் அமைதியாக இருக்கவும்,
“அம்மு ப்ளீஸ்… என்னால முடியலை, எனக்கும் கஷ்டமா தான் இருந்தது, நான் என்ன பண்றது, சுத்தியே சொந்தங்கள் எல்லாம் இருக்கும் போது என்னால என்ன தான் பண்ண முடியும், நீங்களும் என்னை புரிஞ்சுக்கவே மாட்டீங்கிறீங்க… அதுவுமில்லாம எப்பவும் சாட்ல தானே பேசுவோம் திடீர்ன்னு கால் பண்ணா?
எனக்கு ஒரு மாதிரி…. சாரி அம்மு ப்ளீஸ் என் கூட பேசுங்க” என்று பேசிக்கொண்டே போனவள், தான் என்ன சொல்லி நளனை அழைத்தோம் என்ற ஞாபகம் வந்ததும் பேச்சிழந்து, வாயில் வைத்த சாக்லேட்டுடன் வாயைப் பிளந்தபடி நளனை வெறித்தாள்.
நேத்ரா பேச ஆரம்பித்தது முதல் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளின் ‘அம்மு’ என்ற அழைப்பில் இருகியிருந்த முகம் நெகிழ்ச்சியில் திளைக்க, மலர்ந்த புன்னகையுடன் நேத்ரா புறம் திரும்பியவன்,
அவன் சீட் பெல்ட்டை விடுவித்து விட்டு நேத்ராவின் பின்னந்தலையை அவன் புறம் இழுத்து அவளது சாக்லேட் உதடுகளை அவன் உதடுகளுக்குள் கொண்டு வந்தான்.
சாக்லேட்டின் சுவை கரைந்து இதழ் தேனின் சுவையை சுவைக்க ஆரம்பித்தவனுக்கு, சாக்லேட்டை விட அவளது இதழ்தேன் அமிர்தமாக இனிக்க, அதிலிருந்து விடுபடப் பிடிக்காமல் மெதுவாக அவள் இதழிலிருந்து தன் இதழைப் பிரித்தான்.
நளனை அம்மு என்று அழைத்ததில் தன் வாயில் வைத்த சாக்லேட்டுடன் வாயைப் பிளந்தபடி நளனை வெறித்தவள், அவனது திடீர் இதழொற்றலில் முதலில் திமிறியவள் பின்பு கண்களை மூடி அந்த முதல் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.
நேத்ராவின் இதழை விடுவித்தவன் அவள் சிப்பி இமைகள் மூடியிருப்பதைக் கண்டு புன்னகைத்தவன் அவள் மூடிய விழிகளைப் பார்த்து “ஹனி, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான்.
நளனின் ‘ஹனி, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’ என்ற வாக்கியத்தில் கண்களை மெல்ல மலர்த்தியவள், தான் இன்னும் அவனது கைச்சிறையில் இருப்பது உணர்ந்து அவனிடமிருந்து விடுபட்டு கண்களை கீழே தாழ்த்தினாள்.
இதழ் தேனை சுவைத்தவன் கூடவே அவள் இதழையும் பூட்டிவிட்டானோ? பேச்சற்று அவனை வெறித்திருந்தாள் நேத்ரா.
“உன்னின் அழகு – நான்
ஆட்கொள்ள படைக்கப்பட்டதா!
உந்தன் அழகு
உயிரோட்டமாகுமா! – என் வாழ்வில்
உன்னோடு வாழும் காலங்களுடன்!
– உன் அன்பின் வழியினில்
என்னவளின் அழகுக்காக….
நேத்ரா அமைதியாக இருக்கவும், தன் இருகை கொண்டு தலை முடியைக் கோதியவன் “ஹனி, ஐ நோ… பட் என்னால முடியலை, அதாவது எப்படி சொல்றது, என்னால உன் கூட பேசாம, உன்னை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியலை, ஒரு நாளே என்னால முடியாதப்போ, நீ இல்லாம என்னால கண்டிப்பா வாழ முடியாது” என்றவன் நேத்ராவின் முகம் பார்க்க,
அவளின் அதிர்ச்சியடைந்த முகத்தைக் கண்டவன், அவன் இரு கைகள் கொண்டு நேத்ராவின் கன்னம் தாங்கியவன் அவன் விழிகளை நேத்ராவின் விழிகளுடன் கலக்க விட்டான்.
நேத்ராவின் கண்களை நேராக பார்த்தவன் “ஹனி, வில் யூ மேரி மீ” என்றான் கேள்வியாக அவள் கன்னம் தாங்கியவாறு.
தலையை மேலும் கீழும் ஆட்டியவளை “எஸ், தேங்க்யூ, தேங்க்யூ சோ மச்” என்றவன் நேத்ராவை தன்னோடு இறுக அணைத்து, மீண்டும் அவளுள் புதையப் போனவனை,
“அம்மு ப்ளீஸ் வேண்டாம், இது கார்…” என்றவளின் வெட்கத்தைக் கண்டு புன்னகைத்தவன், நேத்ராவைப் பார்த்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான் விரிந்த புன்னகையுடன்.
பின் நேத்ராவை அவள் தெருவின் முன் இறக்கி விடுவதற்காக காரை நிறுத்தியவன் “ஹனி என்னால ரொம்ப நாளெல்லாம் வெய்ட் பண்ண முடியாது, சோ இன்னைக்கே உங்க வீட்ல பேசீரு” என்றவனிடம்,
“என்னது இன்னைக்கேவா? அதெல்லாம் முடியாது, எனக்கு ஒரு ஒன் மந்த் டைம் கொடுங்க நான் பக்குவமா பேசி வீட்ல புரிய வைக்கிறேன்” என்ற நேத்ராவை,
“நீ சரியா வர மாட்ட, வா நான் இப்போவே உங்க வீட்ல பேசுறேன்” என்று காரை கிளப்பியவனிடம் கெஞ்சி கொஞ்சி இன்னும் ஒரு வாரத்திற்குள் பேசுவதாக உறுதி கூறியிருந்தாள் நேத்ரா.
நளனிடம் விடைபெற்று வீடு வர இரவு ஏழு மணியைக் கடந்திருந்தது. வீட்டினுள் நுழைந்தவள் வெளியே தன் அண்ணனின் காலணிகளைக் கண்டதும், “எப்பவும் லேட்டா வருவான், இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டான்” என்று நினைத்தவள்,
அப்போது தான் உள்ளே வந்திருந்தவன் அங்கே சோஃபாவிலேயே அமர்ந்திருக்க, நேத்ராவை கண்டு முறைத்தான்.
நந்தனின் அருகில் வந்தவள் “என்னடா எப்போ வந்தன்னு கேட்டா மொறைக்கிற” என்றவள் அவன் அருகில் அமரவும்,
சடாரென்று எழுந்தவன் “என் ரூமுக்கு வா, உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று விட்டு விறுவிறுவென அவன் அறைக்கு விரைந்தான்.
நந்தனைப் பின் தொடர்ந்து சென்ற நேத்ரா அவன் அறைக்குள் நுழையவும் “யார் அது?” என்ற நந்தனின் கேள்வியில்,
“அய்யய்யோ மாட்டிகிட்டோமே, காதலிக்க ஆரம்பிச்ச முதல் நாள்லயே வா, சரி சமாளிப்போம்” என்று நினைத்தவள்,
“யார்ண்ணா?” என்றாள் எதுவும் தெரியாத பெண்ணாக.
“ஹேய் குட்டி பிசாசு, உன்னோட பெர்பாமென்ஸ் பத்தலை, என்று நேத்ராவின் தலையில் குட்டியவன், இப்போ பென்ஸ் கார்ல வந்து இறங்குனியே, யாரது?” என்றான் இடுப்பில் கைகுற்றி.
ஆம் நேத்ரா காரிலிருந்து இறங்கும் நேரம் தான், நந்தன் அவன் பைக்கில் அத்தெருவைக் கடந்து வீடு வந்து கொண்டிருந்தான். முதலில் கவனிக்காதவன் பின் அவன் பைக்கின் சைடு மிர்ரர் வழியே தான் நேத்ராவைக் கண்டான்.
காரினுள் யாரென்று பார்க்க முயன்றவன் காரின் கண்ணாடி முழு கருப்பு நிறமாக இருக்கவும், யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.
நந்தன் பார்த்து விட்டதை அவன் பேச்சிலிருந்து புரிந்து கொண்டாள். “சரி எப்படியும் இவன் கிட்ட தான் ஹெல்ப் கேக்கணும், அதுக்கு இவன்கிட்ட இப்போவே சொல்லீடலாம்” என்று நினைத்தவள்,
“அண்ணா நானும் அவரும்….” என்றவளை
“என்ன அவரா” என்று கூர் பார்வை பார்த்தவனிடம்,
“அண்ணா ப்ளீஸ் கோபப்படாத, நான் சொல்லி முடிச்சிடுறேன், என்றவள் அண்ணா அவரு நளன் கார்த்திகேயன் நான் படிச்ச காலேஜ் சேர்மனோட பையன்”, என்று ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அனைத்தும் கூறினாள். (முத்தத்தை மட்டும் தவிர்த்து)
கூறி முடித்தவள் “அண்ணா நீ தான்ணா எப்படியாவது அம்மா அப்பா கிட்ட பேசணும்” என்றவளிடம்
“நீ சொல்றதெல்லாம் சரி தான், ஆனா அவ்வளவு பெரிய பணக்காரரு, வெளிநாட்டில படிச்சவரு எதுக்காக உன்னை விரும்பணும், அது தான் எனக்கு யோசனையா இருக்கு” என்றவன் தாடையை தடவி யோசிக்கவும்,
“அண்ணா நீ வேணா அவரை நாளைக்கு மீட் பண்ணி பேசி பாரேன், உனக்கே தெரியும்” என்றவளின் முகத்தைக் கூர்ந்து நோக்கியவன்,
“சரி ஓகே நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம், அப்போ தான் என்னால கான்பிடென்ட்டா அப்பா அம்மா கிட்ட பேச முடியும்” என்றவனிடம்
“தேங்க்ஸ்ணா” என்று விட்டு அவலறைக்கு ஓடியிருந்தாள் நேத்ரா.
அவலறைக்கு சென்றவள் நளனுக்கு பேசி நாளை நந்தகுமாரை சந்தித்து பேசும் விஷயத்தை கூறிவிட்டு, வனிதாவிடமும் விஷயத்தைக் கூறினாள்.
“ஹேய் செம்ம டி, ஆனா சொல்ல கூடாது அன்னைக்கு என்னோட பைக்கு மட்டும் மக்கர் பண்ணாம இருந்ததுன்னா இன்னைக்கு இது நடந்தே இருந்திருகாது, நீ தேங்க்ஸ் சொல்லனும்னா என்னோட பைக்குக்கு தான் மொதல்ல சொல்லணும்” என்ற வனிதாவிடம்
“ஆமாமா, அந்த ஓட்ட பைக்குக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு நீயே சொல்லீடு” என்றாள் நேத்ரா,
“என்ன டி ரொம்ப தான் வெக்கபடுற மாதிரி இருக்குது, சரி சாரு அக்நாலேஜ்மெண்ட் எதுவும் கொடுத்தாரா” என்ற வனிதாவுக்கு,
“அக்நாலேஜ்மெண்டா… என்று யோசித்தவள் பின்பு சீ போடீ” என்றுவிட்டு அணைப்பை துண்டித்தாள்.
இங்கு நளன் வினோத்திடம் அவன் நேத்ராவிடம் காதலைச் சொன்ன விஷயத்தை சந்தோஷமாக கூறிக்கொண்டிருந்தான்.
“டேய் நளா அப்பா அம்மா கிட்ட சொல்லலாம் டா அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்ற வினோத்திற்கு,
“இல்ல டா நாளைக்கு நேத்ராவோட அண்ணனை மீட் பண்ண போறேன், அதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்” என்றான் நளன்.
“அதுவும் சரிதான், நான் வேணா உன் கூட நாளைக்கு வரவா” என்ற வினோத்திற்கு “இல்ல டா வினோ அது நல்லா இருக்காது, நான் மட்டும் போறேன்” என்றான்.
அடுத்தநாள், புல்வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்ட ஒரு அழகான பப்பெட் ஹோட்டலில் நளன் நந்தகுமாரனை சந்தித்தான், நேத்ராவுடன்.