கரிகாலனின் மனம் கொஞ்சம் சோர்வு கண்டது. இயல்பாக, தன் மனைவியின் குடும்பம் என்று கலந்து உறவாட முடியவில்லை. பார்வையிலே தள்ளி நிறுத்தி விடுகிறார்கள். நீ என் உறவாக இருக்கலாம், ஆனால் எனக்கு சமமாக இருக்க முடியாது என்பது போல். அவர்கள் கௌரவம், அந்தஸ்து அவர்களோடே, எனக்கு என்ன வந்தது. நான் பெண் எடுத்த குடும்பம், அந்த ஒட்டுதல் மட்டும் போதும். ஏதேனும் நல்லதுக்கு தலையை காட்டி ஒதுங்கி கொள்ளலாம். மாப்பிள்ளை முறுக்கை காட்டி பிணையவெல்லாம் வேண்டாம்.
திருமணத்திற்கு அடிப்படை தகுதிகளை பார்க்கும் போது, குடும்ப வளமையும் கருத்தில் கொள்ள வேண்டும் போல, தன்னாலும் சரி, மதுவாலும் சரி, இரு பக்கமும் ஒட்ட முடியவில்லை. அதுவும், மச்சான் மாதவன் பார்வையே, நீ எங்களுக்கு இணை இல்லை என்பதாகத்தான் இருக்கும்.
அறைக்கு சென்று மனைவியை பார்த்தால், மெத்தையில் அமர்ந்து போன் பேசி கொண்டிருந்தாள். அவளை பார்த்து தலையாட்டி விட்டு, சத்தம் செய்யாமல் குளியலறை சென்று, தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தான். அவனை பார்த்து மலர்ந்து சிரித்த மனைவி,
“ இப்பத்தான் ரொம்ப ரிலக்ஸ இருக்கு கரிகாலன். ஐ மிஸ் மை பெட், பாத்ரும். அப்புறம் இந்த டிரஸ், எனக்கு நைட் ஃப்ரீயா தூங்குறது தான் பிடிக்கும். இந்த டோர் லாக் பண்ண எந்த சத்தமும் கேட்காது. மியூசிக் கேட்டுட்டே நிம்மதியா தூங்குவேன். உங்க வீட்டுல நாலு மணிக்கே பால் கறக்குர சத்தம் கேட்கும். உங்க அம்மா வீட்டு வேலை பார்க்க ஆரம்பிப்பாங்க, உங்க அப்பா சத்தம் கேட்கும், அடுத்து நீங்க எழுவீங்க. தூக்கமே போய்டும். இன்னைக்கு ஹேப்பியா தூங்குவேன்.” என்ற மனைவின் பேச்சை கணவன் ரசிக்க வில்லை.
கிராமத்தில் பொழுது நாலு மணிக்கே துவங்கி விடும். இவளை தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்வான். அது மட்டும் தானே முடியும், அதை விட்டு, இவள் தூங்குவதற்கு, அவர்கள் வேலையை தடுக்க முடியுமா… புது பெண் என்று அம்மா அமைதியாக போகிறார். நாள் சென்றால் இவளும் பழகத்தான் வேண்டும். அதை சொல்லாமல்,
“என் வேலை வெளி ஊர்ல மது. புது வீடு ஒன்னு அங்க பார்த்துருக்கேன். நாம அங்க தான் போனும். நாம ரெண்டு பேர் மட்டும் தான், யாரும் தொந்தரவு கிடையாது. நீ ஃப்ரியா இருக்கலாம்” என்று கணவன் சமாதான வார்த்தைகள் சொல்ல.
அதை காதில் வாங்கதது போல அமைதியாக போனை பார்த்திருந்தாள் மனைவி. உண்மையில் கோபம் வந்து விட்டது கரிகாலனுக்கு. இது என்ன தோரணை , திமிர் என்று முனங்கி கொண்டே மறுபக்கம் திரும்பி படுத்து விட்டான்.
அவனுக்கு கட்டாந்தரையோ, பஞ்சு மெத்தையோ தூக்கம் வந்தால் எல்லாம் ஒன்னு தான். விசேஷ நாட்களில் பஸ்ஸில் கூட்டம் அதிகம் இருக்கும் போது படியிலே தூங்கிய நாட்களும் உண்டு. மனிதனுக்கு தேவை நல்ல தூக்கம் தான், தூங்கும் இடம் ஒரு பொருட் அல்ல. உண்மையில் தள்ளாத அசதி ஏற்படும் போது உடல் தன்னை போல் உறக்கத்திற்கு சென்று விடும் தவிர சொகுசு தேடாது.
மறுவீட்டு விருந்து சலிப்பாக சென்றது கரிகாலனுக்கு. மூன்று நாள் கடந்தும் வெளியேறும் எண்ணம் மனைவிக்கு கொஞ்சமும் இல்லை. வாழ்வதே!உண்ண, உறங்க என்பது போல் தான் நடந்து கொள்கிறாள். அவளின் நடத்தை எப்படி இருந்தது என்றால், நல்ல உணவு, உறக்கம் கிட்டாமல் கஷ்டபட்டது போல் எப்போதும் எதையாவது உண்பதும், இழுத்து போத்தி உறங்குவதுமாக தான் இருந்தாள்.
அவள் அப்படி தேடி ஆசையாக உண்பதை பார்க்கும் வீட்டார்களுக்கு உருகி விடும். நல்ல சாப்பாடு போட வில்லை என்ற குத்தல் பேச்சும் வாங்கி கொள்வான். நல்ல சாப்பாடு என்று இவர்கள் எதை சொல்கிறார்கள் வகை தொகையாக உண்பதையா… கருவாடு பிடிக்காது, கார குழம்பு பிடிக்காது, கறி குழம்பு தண்ணியா இருக்க கூடாது, தோசைக்கு மூணு சட்னி வேண்டும் என்று பலதரபட்ட விருப்பம் மதுக்கு. கூட்டு குடும்பம், சொந்தம் எல்லாம் பக்கத்தில், கறி எடுத்தாலும், பூரி போட்டாலும் கண்டிப்பாக பெரிய மகன் வீடு செல்லும், அத்தை வீடு, தங்கை வீடு என்று யாரையும் விட முடியாது. அவன் அம்மாக்கு இட்லி, தோசை, பூரியே விசேஷ உணவு தான். மற்ற மக்களை விட்டு உண்ண மனம் வராது. எல்லாருக்கும் வரும் படி பார்த்து கொள்ள வேண்டும்.
மதுக்காக மட்டும் தான் மூன்று வேளையும் சூடான உணவு. மாடு, தோட்டம் வைத்து கொண்டு மூன்று நேரத்துக்கும் சமையல் செய்வதே பெரிய வேலை கருப்பாயிக்கு. இதில் அவள் எதிர்பார்க்கும் வகை எல்லாம் கேட்டா… மாமியாரின் வேறொரு முகத்தை பார்க்க நேரிடும்.
“இதில் சின்ன மருமகளுக்கு, உங்க அம்மா சமைச்சு போடுறாங்க. பணம் பவுசு காட்டுது…” என்று மதினி சக்கு மூக்கை உறிஞ்சுவது வேற கதை.
அன்று மாதவன், வந்த புது படத்திற்கு இரண்டு டிக்கெட் கொண்டு வந்து கொடுத்து போக சொல்ல,
“முடியாதும்மா… எனக்கு இந்த நாலு நாளும் சரியா தூக்கம் இல்லை. பெட், ஏ. சி இல்லாம எவ்வளவு கஷ்டம் தெரியுமா… புடிச்ச சாப்பாடு கூட கேட்டு வாங்கி சாப்பிட முடியலை. எனக்கு அங்க எல்லாரையும் பார்த்தா பயமா இருக்கு. மாமியார் பார்வையிலே மிரட்டுராங்க…” என்று சோகமன முகத்தோடு மகள் சொன்னதும். துடித்து போனார் மீனாட்சி.
“ஐயோ! எம் புள்ளை சாப்பாட்டுக்கு கஷ்ட பட்டுச்சா!… நான் அப்பவே உங்கப்பா கிட்ட சொன்னேன் குட்டீம்மா. கொஞ்சம் பொறுங்க, இன்னும் நல்ல இடமாவே வரும், அவசரபடாதீங்கன்னு… எங்க கேட்டாரு மனுசன். ஒத்த காலுல நின்னு முடிச்சாங்க. இப்ப கஷ்டம் யாருக்கு…” என்ற புலம்ப, நல்ல சாப்பாடு இல்லை என்பது அவள் மீது பரிதாபத்தை தோற்று விக்க. அடுத்து எல்லாம் அவள் விருப்பம் தான்.
மறுவீடு முடிந்ததும், மனைவியோடு அவனை வெளியேற்ற, யாரும் தயாராக இல்லை. அதற்கும் மது தான் காரணம். ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும்,
“இந்த டேஸ்ட் அவங்க வீட்டுல இல்லைம்மா. ஒரு நேரம் தான் கறி குழம்பு போடுறாங்க. நிறைய பேரு இருக்காங்க கேட்டு வாங்கி சாப்பிட கூச்சமா இருக்கு. இவெனிங் ஸ்நாக்ஸ் தரமாட்றாங்க…” என புலம்பி கொண்டு தான் சாப்பிடுவாள்.
ஆரம்பத்தில், இது எல்லாம் ஒரு குறையா என்று கண்டு கொள்ளாத சுந்தரம் கூட, அடுத்தடுத்து மகளை கவனித்தார். அடிப்படை தேவைகளுக்கு மகள் கஷ்ட படுவது போல் தோன்ற, கரிகாலன் வீடு செல்ல அனுமதிக்க வில்லை. கரிகாலனும் முயன்றான் நிலையை புரிய வைக்க,
“ சார்… கூட்டு குடும்பம்… கொஞ்ச நாள் போன, தான ஒட்டுதல் வரும். மது ரொம்ப செல்லம் போல, அதான் அனுசரிப்பு குணம் வரல. அங்கேயே இருந்தா தான், மதுக்கு தன் குடும்பம்ன்னு புரிதல் வரும். ஒருத்தர ஒருத்தர் சார்ந்து, உதவி செஞ்சு வாழ்வது தான் கூட்டு குடும்பம், இப்படி தான் இருக்கணும், சொந்தத்தை இழுத்து போகணும் எல்லாம் ஒன்னா இருந்தா தான் வரும்…” என்று நயந்தே தான் சொன்னான் கரிகாலன். அவ்வளவு மரியாதை அவர் மேல், அதன் தொட்டு தானே கல்யாணமும்.
அந்த மரியாதைக்கு குறைவில்லாமல் தான் சுந்தரமும் நடப்பார். அந்தளவு நல்ல மனிதர். ஆனால், நல்ல மனிதர் என்பதை விட, பெரியது பெண் பிள்ளையின் தகப்பன் என்ற ஸ்தானம். அதை தான் அவரும் உணர்த்தினார்.
“இல்லை பாண்டி, பாப்பா ரொம்ப சங்கட படுது. வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னாலே முகம் இருண்டு போகுது. குடும்ப பொறுப்பு, அனுசரிப்பு எல்லாம் கொஞ்ச நாள் போகட்டும். அது சின்ன பிள்ளை, விவரம் புரியாம ஏதாவது பேசி மனஸ்தாபம் வந்துடும். லீவ் முடியிர வரை இங்கையும், அங்கையுமா இருங்க…” என்று மாமனார் முடித்து விட, பதில் பேச முடியவில்லை கரிகாலனால். சச்சரவு அவன் குணம் கிடையாது என்பதால், அமைதியாகி கொண்டான்.
சுந்தரம் மேல் மதிப்பும், மரியாதையும் அவனுக்கு தானே தவிர, அவன் தாய்க்கு இல்லையே. உண்மையை சொன்னால் தாயை கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்தவன்.
“ எம்மா… எனக்கு மேல படிக்கணும். அதுக்கு காலேஜ் சேரணும், நிறைய வேலை இருக்கு. நான் ஒரு பத்து நாள் இங்க தான் இருக்கணும்…” என்று மகன் ஆரம்பிக்க.
“ஐயா பாண்டி!… மறுவீட்டு சீர் முடிஞ்சு, அப்புறம் எம்புட்டு நாள்வேனா மாமியார் வீட்டுல இரு. சொந்ததுக்கு பதில் சொல்ல முடியாதுலே… உம் மருமவ என்ன கொண்டு வந்தான்னு கேட்பாங்க…” என்று நடைமுறையை சொன்னார் கருப்பாயி.
கரிகாலன் முகம் யோசனையானது. இதுவரை சீர் என்று மாமியார் வீட்டில் வாய் திறக்க வில்லை. அவர்கள் வேலையை தான் பார்க்கிறார்கள். அப்படி இருக்க, தான் எவ்வாறு சீர் பற்றி வாய் திறக்க முடியும். ஆனால், தகவலாக சொல்லிவிடுவோம் என்று எண்ணியவன். சுந்தரத்தை தேடி சென்றான்.
“ சார்… அம்மா சொல்றாங்க, சீர் முடிஞ்ச பின்ன இங்க வந்து இருங்க. சம்மந்தி வீட்டுக்கும், கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்தில் கறி விருந்து வைக்கணும்…” என்று தயக்கமாக தான் சொன்னான்.
அவன் எதிர்பார்த்தது போலவே மீனாட்சி ,
“அது ஒன்னு தான் குறைச்சல் தம்பி. நீங்க சொன்ன படி, வீடு கட்டி கல்யாணம் பண்ணல, ஆன பொண்ணு வீட்டு சீர் மட்டும் முன்னுக்கு வந்துறனும். உங்க அம்மா நல்ல நியாயம் தெரிஞ்சவங்க தான்…” என்று குறையாக சொல்ல
“அப்படி இல்லைங்க அத்தை. நடைமுறை வழக்கத்தை சொன்னாங்க அம்மா…” என்று தன்மையாக தான் சொன்னான்.
“நடைமுறை படி நீங்க என்ன நடந்து கிட்டீங்க. ஊரை கூட்டி மண்டபம் புடிச்சு பெரிய கல்யாணமா நடந்தது?.. இல்லை எம் மகளுக்கு தான் லட்ச ரூபாய் புடவையா?.. ஒத்த தாலி கொடி தாண்டி பரிச சங்கிலி போடலை. அந்த காலத்தில எம் மாமியார் எனக்கு அட்டியல் போட்டாங்க. எம் மகளுக்கு தான் குடுப்பணை இல்லை…” என்று சாட.
“மீனாட்சி கொஞ்சம் அமைதியா இரு…” என்று அதட்டல் அல்லாமல் வெறும் வார்த்தையில் முடித்தார் சுந்தரம்.
“இல்லைங்க… சம்மந்தகாரங்க கிட்ட நேர பேசுனா தான் வாக்குவாதம். பாண்டி… நம்ம மருமகன். இப்போ நம்ம வீட்ல ஒருத்தன். இதுல என்ன சங்கடம். நம்ம மாப்பிள்ளை கிட்ட மனசுல பட்டதை உரிமையா சொல்றோம். அவ்வளவு தான்…” என்று சாதாரண பேச்சாகவே முடித்து விட்டார் மீனாட்சி.
தானும் சாதரணமாக தான் சொன்னேன். சீர் முக்கியமில்லை என்று உணர்த்த, கரிகாலன் சொன்ன வார்த்தை தான் வம்பாகி போனது.
“எங்க மதினி சொந்தம் தான். மாமன் மகள், ஒன்னுக்குள்ள ஒன்னு. ஆனாலும் ஊர் முன்ன மரியாதைக்கு சீர் கொண்டு வந்தாங்க…” என்று சொல்லி முடிக்க கூட இல்லை, கொதித்து போனார் மீனாட்சி.
சீர் செய்ய வக்கு இல்லாமையா நாங்க இருக்கோம். எம் மகளுக்கு வாங்குன பீரோ வைக்க இடம் காணுமா உம்ம வீடு. கொடுத்த வாக்க காப்பாத்த முடியாம நிக்கிறது நீதான் தம்பி. பேசி முடிக்கும் போது… சொந்த வீடு, கவர்மென்ட் வேலைக்கு தான் பொண்ணு குடுத்தோம். தாலி கட்டி முடிய தான் உம் வம்சி எங்களுக்கு தெரியுது. புள்ளை பொழைக்கட்டும்ன்னு விட்டு வந்தோம். ஊர் முன்னாடி அசிங்க படுத்தி, அத்து கூட்டிட்டு வந்துருகனும்…” என்ற ஆங்காரமாக பேச
மீனாட்சி என்று சத்தம் போட்டு எழுந்து நின்று விட்டார் சுந்தரம். “ என்ன பேச்சு இதெல்லாம்? அத்து விடவா கட்டி கொடுத்தது…” கோபம் குறையாமல் பேச
“ எனக்கு மட்டும் ஆசையா என்ன? வாழ்ற பிள்ளையா நான் மட்டும் ஏன் பிரிக்க போறேன். உங்க மாப்பிள்ளை பேசுனது கேக்கலையா?… யார யார் கூட இணை கூட்டுராங்க… பத்து பவுன் கூட இல்லாம வந்த அவளும், எண்பது பவுன் நகை போட்டு போன எம் மகளும் ஒன்னா!… அவ கொண்டு வந்த நாலு சட்டி எம் மகளுக்கு இல்லமையா இருக்கு…” என்று மூக்கை சிந்தியவர்.
“ பாப்பாவுக்கு செஞ்சா கட்டில் பர்மா தேக்கு, டைன்னிங் டேபிள் மட்டும் அறுபதாயிரம் ரூபாய், பித்தளை பாத்திரம் மட்டும் நாலு லட்சம். இட்லி சட்டி, பொங்கல் பானை, ஆப்பம் எடுக்குறது, புட்டு உலக்கு எல்லாம் பித்தளை – சில்வர்ன்னு ரெண்டு ரகத்திலும் வாங்கி வச்சுருக்கேன். இருவத்தியொரு அண்டா, நாப்பத்தி ஒன்னு பானை எடுத்து வகையா அடுக்கி வச்சுருக்கேன். வீடு கூட்டுற விளக்கமாத்துல இருந்து, அம்மி கல் வரை எடுத்து ரெடியா இருக்கு. யாருக்கு?… எம் மகளுக்கு!…” என்று நெஞ்சை உருவ
பாத்திருந்த பாண்டிக்கு பயம் நெஞ்சை கவ்வியது. என்ன உணர்வென்று தெரியாமல், அதிர்ந்து போய் அவர்களை பார்த்திருந்தான் பாண்டியன். அவன் ஒரு அப்பாவி… யாரேனும் அடித்தால் கூட சச்சரவு வேண்டாம் என்று முதுகை காட்டும் குணம் கொண்டவன். அதனால் தானே தன் வீட்டு மருமகனாக சுந்தரம் கேட்டது.
அத்தோடு விடும் எண்ணம் மீனாட்சிக்கு இல்லை போல, “ அம்புட்டு சீர் வச்சு, இரட்டை கெடா புடிச்சு, எம் சொந்தம் ஐநூறு பேர கூட்டி நாங்க வந்தா…” என்று இழுத்தவர்.
“வச்சு பாக்குறதுக்கு உங்க கிட்ட என்ன இருக்கு. அன்னைக்கு நின்னையே மாலையும் கழுத்துமா ரோட்டுல… நீ சொன்ன அண்ணன் பொண்டாட்டி தான் வீதில நிக்க வச்சு கதவை பூட்டுனா… கொண்டு வந்த சீர் இறக்க இடம் இருக்கா, வந்திருக்கிற சொந்தம் இருக்க வீடு இருக்க… இப்ப இருக்கிறது எம் மக வீடா?… எம் மக வீட்டுல தான் சீர் கொண்டு வைப்பேன். அவ வீட்டுல தான் கை நனைப்பேன்…” என்று முகமெல்லாம் வேர்க்க பேசி கொண்டிருந்தார் மீனாட்சி.
பாண்டியன் முகம் அவமானத்தில் சிறுத்து போனது. ஒருவனின் இயலாமையை, வறுமையை அழகாக காட்டி கொடுத்து விட்டார். பேசாமல் எழுந்து பின் பக்கம் சென்று விட்டான் பாண்டியன்.
வாயடைத்து போய் பார்த்தால் ரம்யா. இவ்வளவு சீரா எடுத்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் பொறாமை தான். அவர்கள் சம்பாத்தியம் கேட்க முடியாது என்று உணர்ந்தவள்,
“ஏன் அத்தை! அவங்க தான் வாய் தொறந்து சீர்ன்னு கேட்டாங்களே. கொடுத்து விட்டா தான் என்னவாம், அவங்களுக்கு தக்க கொஞ்சமா கொடுப்போம்” என்று நயமாக கூற
“அடி போடி இவளே!… நான் ஆசையா எடுத்து வச்சுருக்காது எம் புள்ளை புழங்க தான். பெரிய வீட்டுல (மாமியார் வீடு) கொண்டு போய் வச்சா, மாமியார் – நாத்தி – அண்ணன் பொண்டாட்டின்னு ஒன்னா போகாது. சீட்டு போட்டு நான் எடுத்தது, எம் மகளுக்கு. தெருவுல நிக்க வச்சு வேடிக்கை பார்த்து அந்த சிறுக்கிக்குகு சமமா இவன் பேசுவான். நான் மருமகன்னு வாய மூடி போவேனா?… இனி பேசும்போது யோசிக்கணும். எம் மகளுக்கு நான் வருவேன்னு நினைப்பும் இருக்கணும்…” என்று புள்ளைபூச்சியை அடக்கி விட்ட கர்வத்தில் பேசினார்.
அவர் நினைத்தது போல், அவர் வாய்க்கு பயந்து தான் போனான் கரிகாலன்.
அவனின் செத்த முகம், சுந்தரதிற்கு கவலையை தந்தது. கூடிய மட்டிலும் அவன் கூடவே இருந்தார். அவனோடு நேரம் செலவிட, கொஞ்சம் மனம் மாறினான். பின்னே, மகள் தான் கணவனை கொஞ்சமும் கண்டு கொள்ள வில்லையே. அவள் தனி உலகில் இருக்க, அதில் நுழையாமல் பாண்டியன் இருக்க, தன்னோடு இறுக்கி கொண்டார். மனைவியின் செயலுக்கு சிறு சமாதானம்.
அடுத்தடுத்து நாட்கள் கடந்து போனது. கரிகாலன் முழுதாக சுந்தரத்துடன் ஒட்டி கொண்டான். அவரோடு இணைந்து வயல், தோட்டம் என்று தன் பொழுதை கடத்தினான். அவருக்கும் நிறைவு தான், மகன் தொடாத வயல் வேலையை மருமகன் பார்க்கிறான் என்று. இதுவே அவன் நிலையை குறைத்து காட்டும் என்று ஒரு நாளும் எண்ணி இருக்க மாட்டான்.
மதுக்கு பிடிக்கும் என்று ஒரு நாள் வாழைப் பூ எடுத்து வந்தான். வெளியில் காய் விலை அதிகம் தோட்டத்து காய் நல்ல ருசி பாரேன்… என்று மச்சான் மாதவன் சொல்வதை கேட்டவன். தோட்டம் செல்லும் போது எல்லாம் காய் கொண்டு வர ஆரம்பித்தான்.
அப்படி தான் ஒரு நாள் மீனாட்சி, “ தம்பி பாண்டி… திண்டுக்கல ஒரு கல்யாணம், அவசரமா போகனும். மாதவனா காருக்கு பெட்ரோல் போட சொன்னேன், மறந்துட்டான் போல, நீ கொஞ்சம் சிரமம் பார்க்கமா பெட்ரோல் போட்டு வா பாண்டியா…” என்று தயவாக கேட்க, தப்பாக எண்ணாமல் செய்தான்.
“ கறி எடுக்க ஆள் இல்லை. நீயும் இந்த வீட்டு ஆம்பிளை தான் போய் வா தம்பி” என்று அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் ரம்யா,
“ அண்ணா!… மீன் சுத்தம் செய்யாம வாங்கி வந்துடாங்க . கொஞ்சம் சுத்தம் பண்ணி குடுங்க” என்று அதிகாரத்துக்கு கொஞ்சம் குறைவான தோணியில் சொன்னாள்.
சற்று மன நெருடல் தான் கரிகாலனினுக்கு. முன்பெல்லாம் மாப்பிளை விருந்து அமர்களப்படும். தற்போது மீனாட்சி , “பாண்டியா… ரொம்ப வேலை. நிக்க கூட முடியலை . நீயே கொஞ்சம் போட்டு சாப்பிடு. நம்ம வீடு தானே” என்று சொன்னவர் தான் அடுத்த கவனிப்பு, அவன் மாமனார் இருந்தால் மட்டும் தான்.
யாரையும் அவன் குற்றம் குறையாக எண்ண வில்லை. அவன் குணமும் அதுவல்லவே. அவன் மனைவியே கண்டு கொள்ள வில்லை, வேற யாரை குறை சொல்ல. அவளை பொறுத்த வரை, இத்திருமணம் அவளுக்கான அடையாளம். யாரேனும் திருமணமாகி விட்டதா என்றால், ஆம் என்ற சொல்லுக்கு உரியவன் மட்டும் தான் கரிகால பாண்டியன். மத்தபடி தன் நட்புகளோடு தினம் ஒரு கொண்டாட்டம் தான் மதுமிதாவுக்கு.
கரிகாலன் அமைதியும் ஒரு நாள் உடைந்தது. வீடு காலை நேர பரபரப்பில் இயங்கி கொண்டிருக்க, அவசரமாக வந்தாள் ரம்யா.
“அண்ணா!… அவருக்கு அவசர வேலை. டிரஸ் அயன் பண்ணனும், எனக்கும் குழந்தையை பார்க்கணும். நீங்க அயன் பண்ணி கொடுத்திடுங்க…” என்று ஒரு சட்டையை கொடுத்து சென்றாள். அதிர்ந்து போய் பார்த்தான் பாண்டியன்.
அவன் வீட்டில் செய்யாததும் அல்ல… ஆனால், அவள் சொன்ன தோரணை தான் கருத்து. ஏதோ தெரிந்த பழக்கமான, வீட்டு வேலையாட்களை ஏவுவது போல் சொல்லி சென்றாள். புரிந்து கொண்டான் கரிகால பாண்டியன்.
கல்லூரியில், தமிழ் கதை ஆசிரியர் ஒருவர் சொன்ன கதை, சட்டென்று அவன் மனதில் தோன்றியது. அது என்னவென்றால், விருந்துக்கு செல்லும் புது மாப்பிள்ளைக்கு, தாய்மார் சொல்லி அனுப்புவார்களாம்.
“ அப்படி ஒருவன் மாமியார் வீட்டு விருந்துக்கு செல்ல, அவன் தாய், “வட்டியில் முகம் தெரியும் போது வந்து விடு மகனே” என்று சொல்லி அனுப்பி வைத்தார்களாம். புரியாத மகனும் தலையாட்டி சென்றான். முதல் நாள் நாட்டு கோழி விருந்து படு அமர்க்களம். இரண்டாம் நாள் ஆட்டு கறி விருந்து அசத்தல், மூன்றாம் நாள் கண்மாய் சூரை மீன் பிரமாதம். இதையெல்லாம் கவனித்த புது மாப்பிள்ளையும், மாமியார் வீட்டோடு தங்க. அடுத்த நாள் முட்டை, அதற்கடுத்து கருவாட்டு குழம்பு, அப்புறம் சாம்பார், ரசம் என்று சென்றது. நாள் செல்ல, ஒரு நாள் சாப்பிட அமர்ந்த நம்ம புது மாப்பிள்ளைக்கு வட்டி நிறைய தாண்ணி சோறும், வெங்காயமும் காத்து கிடந்தது. மனம் சுணக்கம் கொள்ள, நீர் சோற்றை நோக்கி முகம் குனிந்தான், அதில் அவன் முகம் தான் தெரிந்தது. தாய் சொல்லி அனுப்பிய சேதி தெளிவாக புரிய, கையோடு மனைவியை புடித்து கொண்டு கிளம்பி விட்டான்”
அதை நினைவு கூர்ந்த கரிகாலன். தன் மடமையும் புரிந்து கொண்டான். அடுத்த முதல் வேலையே, மாமனாரிடம் சென்றவன், தம் மனைவியை கை பிடித்து, யார் சொல்லியும் கேட்காமல், தம் ஊர் நோக்கி புறப்பட்டான். அங்கு அவனுக்கு காத்திருக்கும் பூகம்பம் தெரியாமல்.