தமிழிசையின் ஐந்தாம் மாதத்தில் வீட்டு வேலை முடிக்க பட்டு, நல்ல நாளில் புது வீடு செல்ல முடிவு எடுக்க பட்டது. ஆனால், அதிலும் ஒரு சிக்கலை கொண்டு வந்தார் கருப்பாயி. பிறந்த பிள்ளை புது வீட்டிற்கு வர வேண்டும், சரி தான். அதற்கு முன் அங்கு பால் காய்ச்சி வரவேற்பது யார்?…
சின்ன பாண்டிக்கு மனைவியை தாண்டி யாரும் செய்ய ஒப்ப வில்லை. பிள்ளையோடு தான் அவள் வர முடியும். மனைவி தான் என்று கணவன் நிக்க. அதற்கு ஒரு ஆட்டம் ஆடி விட்டார் கருப்பாயி. கடைசியில்,அவர் தான் அதிகாலையில் பால் காய்ச்சி, சாமி கும்பிட்டு வழிபாடு நடத்தினார். சின்ன பாண்டி வரவில்லை. கருப்பாயிக்கு அது தேவையும் இல்லை. என் மகன் வீடு, எனக்கு தான் முதல், அதன் பின் தான் மனைவி , பிள்ளை எல்லாம்.
காலை பத்து மணிக்கு மது, தன் மகளோடு, அவள் சுற்றமும், உற்றமும் சூழ வந்து விட்டாள். அவளோடு , அவள் சீர் பொருட்களும் தான். மீனாட்சி சொன்னதில் ஒன்றும் குறைவு இல்லாமல் வந்து விட்டது. அத்தோடு குட்டி இளவரசிக்கு புது காரும் வந்தது. ஊரே இவர்கள் பேச்சு தான். அசந்து போகும் அளவுக்கு அவ்வளவு சீர். சின்ன பாண்டிக்கு சங்கடமாக இருந்தது. சுந்தரம் சொல்லி விட்டார், ஒற்றை பெண் வேற யாருக்கு செய்ய…
சின்ன பாண்டி வீடு மொத்தமும் அங்கே தான். எங்களுக்கு தான் முதல் உரிமை என்பது போல் தான் நடந்து கொண்டார்கள். பிறந்த பிள்ளையை பார்க்காத சகு கூட, புது வீட்டில் உரிமையுடன் நடமாட… பற்றி கொண்டது மீனாட்சிக்கு.
சுந்தரம் தெளிவாக சொல்லி விட்டார், “யாருக்காக இல்லையென்றாலும் கரிகாலன் என்ற ஒருவனுக்காக கண்டு கொள்ளாமல் செல்ல தான் வேண்டும் மீனா. நம் மகள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை மட்டும் கணக்கில் கொள், மற்றதை தூக்கி போடு…” என்றார் தெளிவாக.
மகளை தாங்கும் மருமகன் இருக்க, மற்றது எதுக்கு… அவரும் உணர்ந்து கொண்டார்.
பேத்தியை யாருக்கும் தராமல் கையிலே வைத்திருந்தார் கருப்பாயி. மகன் வீட்டு வாரிசு என்று அவர் பக்க சொந்தங்களுக்கு மட்டுமே காட்டி கொண்டு நின்றார். அடுத்த ஒரு வாரத்தில் ஆரவாரம் ஓய்ந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. சின்ன பாண்டிக்கும், தன் ஊருக்கு பக்கத்திலே மாற்றல் கிடைக்க. அவர்கள் வாழ்வு அம்சமாக தொடங்கியது. உண்மையான வாழ்வை அனுபவிக்க தொடங்கினான். மனைவி, மகள் பொழுது ஏகாந்தம் தான். மது வீட்டளவில் ஒரு பேக்கரியை தொடங்கி விட்டாள். கணவனுக்கு கை கொடுக்க தான். சிறு குழந்தையை வைத்து கொண்டு வேலைக்கு செல்வது இயலாது. அத்தோடு, மாலை கணவன் வீடு வரும் போது, இவள் இருக்க வேண்டும். கரிகாலன் கண் வீட்டில் நுழையும் போதே அவளை தான் தேடும். எங்கும் பொருந்தி போகும் மது, இங்கும் பொருந்தி கொண்டாள். அவ்வப்போது மாமியார் என்ற நாட்டாமை வர தான் செய்தது. இவள் அதையெல்லாம் தூசியாக தட்டி விட பழகி கொண்டாள்.
அன்று மாலையில் ஏதோ ஒரு வேலையாக இருந்தவளை அழைத்தது ஒரு குரல். வினித்ரா தான்…
“மதும்மா… வீட்டுல அம்மாவுக்கும், அப்பத்தாவுக்கும் சண்டை. நீங்க வாங்க…” பதட்டத்தோடு சொன்னாள் பெண். வேகமாக பின்னாடியே சென்றாள் மது. எதுவென்றாலும் ஒரே ஊர், ஒரே குடும்பம் தள்ளி நிக்க முடியாது. அங்கு சகுந்தலா கத்தி கொண்டு இருந்தாள். கருப்பாயி இறுகி நின்று இருந்தார். மாமியாரை பார்த்த மது அதிர்ந்தாள். கண்ணில் நீர், இமை தாண்ட வில்லை. உற்று நோக்கினால் தெரியும். தன் மாமியாரா!… அதிர்ச்சியாக இருந்தது.
சகு ஆரம்பித்தாள், “ நியே நியாத்தை சொல்லு மது… வசந்தி மாமியார் செத்தாங்க தான, அன்னைக்கே எல்லா முறையும் செஞ்சி தான் வந்தோம். முப்பதுக்கு அஞ்சு பவுன் நகை எடுத்து போகணுமாம்…” என்றாள் கோபமாக.
அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை மதுக்கு. இரண்டரை லட்ச ரூபாய், யார் செய்ய முடியும்.
“இவ்வளவு காசுக்கு நாம எங்க போறது. கேட்டா… நாம ரெண்டு பேரும் பாதி, பாதி போடணுமாம். எவ்வளவு ஏத்தம்… இந்தம்மா நமக்கு சொத்தா குடுத்துச்சு. அந்த ஓட்டு வீட்டை தாண்டி ஒன்னும் இல்லை. பேச்சை கேளு, நாடு தாங்காது…”
“ ஏய் வாய குறைடி!… ஏதோ அண்ணன் மகன்னு கட்டி வந்தா… அட்டமா ஆடுற. எம் மகளுக்கு போகதான் உங்களுக்கு, நான் பிள்ளை பெத்து முழுசா உங்களுக்கு தூக்கி தருவேனா. மொட்டு…” என்றார் கோபமாக.
மதுக்கும் கோபம் வந்தது அந்த வார்த்தையில்… விடுவாளா சகுந்தலா…
“யார் மொட்டு, நீங்க தான் அத்தை மொட்டு. நாங்க அதுல தலைஞ்சு வந்துருக்கோம். நீங்க, உங்க மாமியார் கொடுத்த ஓட்டு வீட்டை அப்படியே வச்சு இருக்கீங்க. ஆனா, நாங்க அதை மாத்தி கௌரவமாக இருக்கோம். இப்ப சொல்லுங்க யார் மொட்டு?…” கருப்பாயி அண்ணன் மகள், வேற என்ன எதிர் பார்க்க முடியும்.
“அக்கா” என்று மது இழுக்க,
“ நெசம் தான் மது. எம்புட்ட விட்டு கொடுக்க. அவங்க மகளுக்கு அவங்க எவ்வளவும் செய்யட்டும் நாம தடுக்கலை… அதுக்கு நம்ம உசுர ஏன் வாங்கணும். நமக்கு ஏதாவது சொத்து கொடுத்த கூட பரவாயில்லை. இங்க எதுவும் கிடையாது. என் கல்யாணம் முடிஞ்சு பதினைந்து வருசம் கழிச்சு தான் சொந்த வீடு கட்டுனோம். ரெண்டு பொம்பளை பிள்ளைக்க சரியா நிக்குது. இவங்க மகளுக்கே பார்த்தா, நம்ம பிள்ளைக்கு எப்ப சேர்க்குறது. நகை விலைய பார்த்தியா… ஒரு பையனும் இருக்கான். எங்க பாடு தீரல, இவங்களை பார்க்க முடியுமா… பசின்னு இல்லாம சோறு தான் போட முடியும். இவங்க பிள்ளையை இவங்க தான் சுமக்கணும். வசதி இல்லன்னா வரிசையா எதுக்கு பிள்ளை பெறணும்…” இந்த வார்த்தையின் பின் கருப்பாயி அங்கு நிற்க வில்லை சென்று விட்டார்.
மதுக்கு மனது சங்கட பட்டது. “விடு மது… போய் மகன்ட்ட ஒப்பாரி வைக்கும். இன்னைக்கு நான் பேசினது தான் சரி. இதே வார்த்தையை நாளைக்கு எம் மருமக என்னை பார்த்து கேட்க கூடாது பாரு…” என்று சொன்னவள், உள்ளே சென்று விட்டாள்.
சகு மனதில் வேற ஒன்று ஓடி கொண்டு இருந்தது. ஒன்னாக இருந்த வர, சின்ன பாண்டி தான் அதிகம் செலவு செய்வான். அதனால் கணக்கு என்று எதுவும் பார்த்தது இல்லை. மது வந்த பின் வேறகி விட்டது. அத்தோடு, அவர்களின் தற்போதைய நிலை உறுத்த தொடங்கியது. வீடு, கார், அரசு வேலை என்று அவர்கள் நிக்க, தாங்கள் பின் தங்கி விட கூடாதே…
ஒரு வாரத்திற்கு முகத்தை தூக்கி கொண்டு இருந்தார் கருப்பாயி. இரு மகன்களும் சமாதானம் செய்தார்கள் தவிர, அவரின் கோரிக்கைக்கு உடன் பட வில்லை. இதை காரணம் கொண்டு சகு , மாமனார், மாமியார் பொறுப்பை மது பக்கம் தள்ளி விட்டாள்.
அதை இயல்பாக ஏற்று கொண்டாள் மது. கருப்பாயி… யாராலும் மாற்ற முடியாது. ஆனால், மது அவரை அழகாக கை கொண்டு விடுவாள். சின்ன பாண்டிக்கே ஆச்சர்யம் தான். மது இயல்பாக அவரை இழுத்து கொள்வாள்.
“இந்த கீரையை ஆஞ்சு குடுங்க, நீங்க ஊறுகாய் போட்டா தான் கெட்டு போகாம இருக்கு… ஓடை பக்கம் போன பிரண்டை கொண்டு வாங்க குழம்பு நல்லா இருக்கும்…” என்று எப்படியாவது மாமியாரை சரி கட்டி விடுவாள்.
பல நேரம் முட்டியும் கொள்ளும், “ பிள்ளைக்கு கண்டதையும் வாங்கி குடுக்காதீங்க, கறி ஊட்ட வேணாம் தொங்கும்…” என்றாவது சத்தம் போட்டால்.
ஊரில் நாலு பேரிடமாவது சொல்லி விடுவார், “ எம் பேத்திய தூக்க விட மாட்றா, ஆசையா எதுவும் வாங்கி கொடுத்த பேசுறா…”
தமிழிசை என்ற அழகான பெயரை தூக்கி விட்டு பாண்டியம்மா என்று தான் கருப்பாயி அழைப்பார். மதுக்கு கோபம் எகிறும், சாமி பேரு, எதுவும் சொன்ன சாமி குத்தம் ஆகிவிடும் என்று வாயை அடைத்து விடுவார்.
எவ்வளவு முட்டி கொண்டாலும் கருப்பாயிக்கு, தன் சின்ன மருமகளிடம் தான் ஒட்டுதல். சகு பக்கம் செல்லவே மாட்டார். மது அவரின் துணையை ஏற்று கொள்வாள்.
“அத்தை, நான் வீட்டை சுத்தம் பண்றேன், நீங்க வெளிய பாருங்க… உடம்பு முடியலை நான் குழம்பு வைக்கிறேன், நீங்க சாதம் வைங்க… எனக்கு வேலை இருக்கு, பாப்பாவை தூங்க வைங்க… முத்து மாமா தோட்டத்தில் கடலை ஆய்றாங்க, நீங்க வேலைக்கு காசு வாங்காம கடலை வாங்கி வாங்க…”
அங்கு ஊர் கோவில், அது முடிய சித்திரை திருவிழா என்பதால், அவளை அழைத்து செல்ல மது பெற்றோர் வந்து விட்டார்கள். மகள் குடும்பம் செய்யும் அழகை காணவும் தான்… அவள் மாமியார் உடனான அவள் மாற்றம் எதிர்பாராதது…
அதுவும் கருப்பாயி, நல்ல முறையில் நலம் விசாரித்தார். மது மாமனார் வந்து மரியாதையாக பேசி சென்றார். இது எல்லாம் அவர்களுக்கு அதிர்ச்சி தான். தாய் வீட்டில் எல்லாவற்றையும் பகிரும் எண்ணம் அவளுக்கு கிடையாது. சிறிது நேரத்தில் பெரிய பாண்டி வந்தான்…
“ வாங்க மாமா” என்று சொல்லி உணவு எடுத்து வைத்தாள் மது.
“ ம்ம்… உங்கக்கா விசேஷ வீடு போய்ட்டாளாம்…” என்று அமர்ந்தவன் சாப்பிடுவதில் கவனம் ஆனான். சகு வெளியில் சென்று இருக்க, மதிய உணவு தம்பி வீட்டில்.
அவள் பெற்றோர் உடன் மரியாதையாக நலம் விசாரித்தவன், “ ஏத்தா மது… அந்த அருவாவ தூக்கி போடு, ரெண்டு இளநீர் வெட்டி போடுறேன். அத்தைக்கும், மாமாக்கும் வெயிலுக்கு இதமா இருக்கும்…”
சற்று நேரத்தில் வந்த கருப்பாயி, “ இந்தாடி, இதை உள்ள வை… முருகன் வீட்டு மாடு கண்ணு போட்டுச்சு, உனக்கு தான் சீம்பால் பிடிக்குமே… சொல்லி வச்சேன். பாண்டியம்மா எங்க, நான் தூக்கி போறேன், நீ செத்த நேரம் பெத்தவங்கட்ட பேசு…” என்று எழுந்தவர்,
“ஆமா கறிக்கு சொன்னையா… வேண்டாம் சொல்லாத. வசந்தி வீட்டுல ரெண்டு கோழி சொல்லி இருக்கேன். உன் புருசன் கொண்டு வருவான். நீ தொடாத, உனக்கு பக்குவம் வராது. நான் வந்து வைக்கிறேன்…” என்றவர் சென்று விட்டார்.
இரண்டு நாள் திருவிழா, சொந்தமெல்லாம் கரிகாலன் வீடு தான். அழகாக இழுத்து கொண்டாள் மது. என்றோ வரும் பங்காளி வீட்டு சொந்தம், குறை என்று இல்லாமல் செய்வாள் மது…
இரவில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். சுந்தரம் கூட மெல்ல அவர் வட்ட ஆட்களுடன் கலந்து விட்டார். அன்றைய இளவட்ட பாட்டு கச்சேரியில் மதுவும் சேர்ந்து கொண்டாள். அவள் முறை வந்த போது, பெரிதாக யோசிக்க வில்லை…
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ… மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ… கள்வனோ…
கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ…
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ…
சந்தம் கொஞ்சும் சங்க தமிழ் பாண்டியனோ….
அவ்வளவு தான் சுற்றி இருந்த அனைவரும் கை தட்டி ஆர்பரிக்க, கரிகால பாண்டியனுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. தன் பெற்றோர், மாமனார் வீடு, பங்காளி மக்கள் சூழ மனைவியின் பாட்டு, ஒரு மாதிரி சமாளிக்க முடியாமல் இருந்தான்.
சுத்தி போடணும் என்று எண்ணி கொண்டார் மீனாட்சி.
சகு கூட சொல்லி விட்டாள், “ எனக்கு அயித்த மகன் தான்… ஒரு நாளும் நான்லாம் நிமிந்து பார்த்தது இல்லை. ஒத்த பிள்ளை பெத்த பின்னாடி வெட்கம் விட்டு எப்படி பாட…
தன் பெற்றோர் உடன் சித்திரை திருவிழாவிற்கு மதுரை சென்று விட்டாள். பாண்டியன் வர வில்லை. வேலை இருப்பதால் திருகல்யாணம் அன்று வருவதாக சொல்லி விட்டான். மீனாட்சி தாங்க முடியாமல் கேட்டு விட்டார்…
“உம் புருசன் உன் கைக்குள்ள இருக்கான்னு நான் நினைக்க, நீ தான் அவன் கைக்குள்ள இருக்க… நீ ஏன் இதெல்லாம் செய்ற… உன் மச்சான் பொண்டாட்டி எப்படி ஒதுங்கி நிக்குறா…”
“அப்ப நீ என்ன நினைச்ச, சினிமா மாதிரி ஒதுங்கியே இருப்பாங்கன்னா… தீபாவளிக்கு சண்டை போட்டு பொங்கலுக்கு சேர்ந்திடுவாங்க. அது தான் குடும்பம். அவங்க யாரோ இல்லை. எம் புருசனை பெத்தவங்க, தள்ளி நிக்கலாம், ஒதுக்க முடியாது. எம் புருசன் எனக்காக நின்னார், நான் அவருக்காக நிக்குறேன். வருசத்தில ஒரு நாள். எங்களுக்கு அதிகமான செலவு சாப்பாட்டுக்கு தான். அதுக்கு நான் கணக்கு பார்க்க மாட்டேன். அதை தானே நான் அன்னைக்கும் சொன்னேன். வருசத்தில் ஒரு நாள் செய்யலாம், வருசம் முழுக்க செய்ய முடியாது. அதை தெளிவா புரிஞ்சுகிட்டாங்க. நல்ல விதமாக பழகுறாங்கு, நானும் நல்ல விதமா நடக்குறேன். அவ்வளவு தான். எல்லாரோடையும் நாங்க ஒன்னு சேருவோம், அதே நேரத்தில் எங்க குடும்பம்ன்னு ஓரடி பின்ன நிப்போம். அந்த வட்டத்தில் நான், என் புருசன், என் குழந்தை மட்டும் தான். எங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்க சந்தோசமா தான் இருக்கோம்…”
சுந்தரதிற்கு பெருமை, மகள் வாழ்வை புரிந்து கொண்டாள் என்று… உண்மை தான், இன்றும் எங்களுக்காக நிற்பது கரிகாலன் தான். அப்ப அவனுக்காக மது நிற்க வேண்டும் தான்.
தாமரை வண்ண பட்டு புடவை அணிந்து, குடை ஜிமிக்கி, கண்ணாடி வளையல் என்று அம்சமாக மது தயாராகி நின்றும், கணவன் வர வில்லை. பொறுத்து பார்த்தவள், பின் மகளோடு திருகல்யாணம் பார்க்க சென்று விட்டாள்.
நல்ல கூட்டம், மகள் பசிக்கு அழுகவும் தான். அங்கிருந்த ஒரு பேக்கிரிக்கு அழைத்து சென்றாள். மகளுக்கு வாங்கி கொடுத்த பின், தனக்காக ஹனி கேக் ஆர்டர் செய்ய, அந்த சத்தம் ஒருவனை ஈர்த்தது.
“ஐயோ! என் ஹனி…” என்றதில் அரண்டு போய் திரும்பி பார்க்க,
அவன் ஹரி கிருஷ்ணன். ஒரு காலத்தில் அவனுக்காக உருகி நின்றவள். அவன் மட்டும் போதும் என்று தனக்கான எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு அவனோடு வந்தவள் தான்.ஆனால், வாழ்வு மிகப்பெரிய தோல்வியை பரிசாக கொடுக்க துவண்டு விட்டாள்.
அவளின் அதிர்ச்சி குறையாமல் தான் அவனும் பார்த்து நின்றான். மனதில் முள் குத்தியது. தன்னை நம்பி வந்த பெண்ணை காப்பாற்ற துப்பில்லாமல் கை விட்டவன். இல்லை, அவனின் செல்ல ஹனியை காக்க தான் கை விட்டான். அவளின் உயிர் முன் நிற்க முழுதாக உதறி விட்டான். காலம் கடந்த பின்னும், அவன் பல நாள் உறக்கத்தை களவாடியவள் இவள் தான்.
அதிர்ச்சி மறைந்து தன்னை நிதானமாக்கி கொண்டார்கள்.
“ எப்படி இருக்க ஹ… மது?…”
“ ம்ம்…” பேச தெரிய வில்லை.
அவளை ஆராய்ந்தான், அவனின் ஹனி என்ற அடையாளம் மறைந்து போய் இருந்தது. பூசிய உடல்வாகு, குண்டு கன்னம், கனமான தாலி கொடி, கழுத்தில் புது மஞ்சள் கயிறு, நெற்றியில் சந்தனம், குங்குமம் என்று பல இருந்தது.
“நீ நல்லா இருக்கணும் மது. ரொம்ப நல்லா இருக்கணும்… இந்த ஆறு வருசம் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை…” தொண்டை அடைத்தது.
“இனி தூங்குங்க ஹரி. ரொம்ப நிம்மதியா தூங்குங்க… ஏன்னா, நான் நல்லா இருக்கேன். ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கேன்…” என்று முடித்து கொண்டவள். அவன் பக்கத்திலிருந்த ஐந்து வயது பையனின் தலையை செல்லமாக களைத்து செல்ல,
தமிழிசையை மெல்ல தூக்கினான் ஹரி. கொஞ்சம் கண் கலங்கும் போல் இருந்தது. மது சாதரணமாக தான் இருந்தாள். அவன் தான் உடையும் நிலை… அவன், ஆண் என்ற போர்வைக்குள் சமூகத்தின் பார்வையில் இருந்து மறைந்து விட்டான். ஆனால், அவன் ஹனி, பெண் என்ற பார்வையில் எவ்வளவு வலிகளை கடந்து நிற்பாள். நிச்சயம் நல்ல வாழ்க்கை துணை அமைந்திருக்கும்.
“இந்த உலகம் எப்போதுமே நம்ம எண்ணங்களுக்கு வண்ணம் பூசாது. விதி எனக்கு கொடுத்த தோல்விய நான் வெற்றியா மாத்திகிட்டேன்…” என்று சின்ன சிரிப்பில் சொன்னவள், தன் குழந்தையோடு நகர்ந்து விட்டாள்.
அவள் அருகே ஒருவன் வருவது தெரிந்தது. சந்தோசமாக குழந்தையை தூக்கி கொள்கிறான். அவனிடம் குழந்தை ஜாடை தெரிகிறது. மது முகம் பூரிக்க சிரிக்கிறாள். பின் நகருகிறது அந்த குடும்பம்.
மது தன் வண்டியில் மகளை முன் நிறுத்தி அமர, பின் பக்கம் அவள் கணவன். கூட்ட நெரிசலில் ஓட்ட முடியாமல் பல முறை காலை கீழ வைத்து விட்டாள். எத்தனை முறை சொல்லி கொடுத்தேன், மறந்து விட்டாள், தன்னை போல…
இந்த பரந்த உலகம் வசந்தம் கொண்ட பல கதவுகளை உடையது. நாம் தான் இது ஒன்று தான் வேண்டும் என்று அதிலே தொங்கி கொண்டு அதனோடு வாழ்ந்து, மடிந்தும் போகிறோம். யாருக்கு தான் பாடு இல்லை. அம்பிக்கு அவள் கணவன், மதுக்கு அவள் மாமியார், சுமதிக்கு அவள் கணவன்.
தட்டில் போட்ட உணவை வீணாக்க கூடாது என்பது போல், கடவுள் தந்த வாழ்வையும் வீணாக்க கூடாது. இந்த வாழ்வின் பிறவி கடனை முழுமையாக அடைந்து தீர்க்காமல், இறைவனை தரிசிப்பது எவ்வாறு?…