Skip to content
Post Views: 776
வானவில் வர்ணஜாலங்கள்.. 00
அன்று பௌர்ணமி நாள்.
Advertisement
அடர்ந்த வனம். நடு சாமம்.. பறவைகள், விலங்குகளின் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை..
Advertisement
Advertisement
காய்ந்து உதிர்ந்த இலைகளை மனித காலடிகள் மிதிக்கும் சத்தம் அப்போது புதிதாக கேட்டது..
Advertisement
வேகமாக மூச்சு வாங்கியப்படி ஒரு காதல் ஜோடி உயிருக்கு பயந்து அந்த வனத்தினுள் திசை தெரியாமல் ஓடி வந்துவிட்டார்கள்..
இனி அந்த வனமே அவர்களின் இருப்பிடம் ஆகிவிடும்..
ஒரு மரத்தில் மோதி இருவரும் கோர்திருந்த கைகள் பிரிந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடினார்கள்..
கயவர்கள் கையில் சிக்கி மடிவதை விட தற்பொழுது தாங்கள் மறைந்து உயிரோடு இருக்க வேண்டும்..
அதன் பின் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசை கொண்டார்கள்..
நேரம் செல்ல செல்ல மனித பேச்சு சத்தம் அதிகமாக கேட்டது..
“ டேய் அவங்களை பிடிங்கடா.. தப்பிக்க விடாதீங்க.. இன்னைக்கு அந்த கழுதைங்க இரண்டையும் இந்த காட்டுக்குள்ளயே வெட்டி புதைத்துவிட்டு தான் இங்க இருந்து நாம போகணும்.. ” என்று ஆவேசமான குரல்.
“ அண்ணே இந்த காட்டுல இதுக்கு மேல போக முடியாது. ஆபத்தான மிருகங்கள் இருக்கு சிங்கம், புலி இதை தாண்டி அவங்க போனால் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை.. ” என்று ஒரு குரல்.
“ மருது அண்ணே இந்த பக்கம் யாருமில்லை.. ” என்றும் அதனை தொடர்ந்து அனைத்து திசையிலும் யாருமில்லை என்று பல குரல்கள் வந்தது..
வந்தவர்களை காணவில்லை என்ற கோபத்தில் அவர்கள் சற்று தொலைதூரம் சென்றதும்
“ என்னங்க என்னை காப்பாத்துங்க எனக்கு முன்னாடி சிங்கம் நிக்கிது ரொம்ப பயமா இருக்குங்க.. ” என்று அவள் அழும் குரல் கேட்டது..
“ ஐயோ தங்கமே என்னால இப்ப அங்க வரமுடியாதே என்னை வழி மறித்து சிறுத்தை நிக்குதே..! தூய காதலோடு வீட்டை எதிர்த்து இருவரும் வாழ ஆசை கொண்டது தவறா?.. ஏன் இப்படி நமக்கு மட்டும் துன்பத்தின் மேல் துன்பம் வந்து சேர்க்கிறது..
இனி நாம் ஒருவரை ஒருவர் பார்க்கவோ..! காதலோடு கட்டி தழுவவோ முடியாதா?. என் தங்கமே..!
இருவரும் காட்டு விலங்கிற்கு பழியாக போகிறோமா?.. நம் வாழ்கை அவ்வளவு தானா?. இனி நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் என் கண்ணே..! ” என்று அவர் வேதனையுடன் பேசவும்
தாங்கள் பெற்ற உயிர் இரண்டு இப்படி துடிப்பதை நினைத்து வருந்தாமல் அவர்களை காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் பகையை காரணமா வைத்து அவர்களை கொல்ல துடிக்கும் நயவஞ்சக கூட்டம் அவர்களின் கதறல் சத்தத்தை காதில் வாங்கியபடி அங்கிருந்து சென்றது..
“ இரண்டு முண்டமும் செத்து ஒழியட்டும் காதலா பண்ணுறீங்க காதல். உங்க நிலைமையை பார்த்து இனி யாருக்கும் காதல் பண்ணனும் என்று நினைப்பே வர கூடாது.. ” என்று அந்த ஊரின் பெரிய மனிதன் என்னும் போர்வையில் இருக்கும் கழுகு கொடூரமாக சிரித்துக்கொண்டு அவனுடன் வந்த ஓநாய்களை அழைத்து கொண்டு சென்றது..
அந்த அடர்ந்த வனத்தினுள் பாதை தெரிந்து சென்றவர்களே யாரும் திரும்பி வந்ததே இல்லை..
அப்படி இருக்கும் போது காதல் கொண்ட இரு உயிர்கள் அவர்கள் உண்மை காதலை காப்பாற்ற நினைத்து அடர்ந்த வனத்தில் திக்கு திசை தெரியாமல் வந்து சிக்கிகொண்டார்கள்..
மனிதன் எனும் அரக்கர்களிடம் சிக்கி காதலை தொலைத்து மடிவதை விட இந்த காட்டு விலங்குகளிடம் சிக்கி தங்களின் உண்மை காதலை காப்பாற்றிய ஒரு சிறு மகிழ்வுடன் உயிர் விடுவதே மேல் என்று நினைத்தார்களோ..!
காட்டு விலங்குகளின் சத்தம் அதிகரிக்க அதனை தொடர்ந்து அலறல் சத்தமும் அந்த வனத்தின் அமைதியை குழைத்தது..
காதலிப்பது பாவமா?..
தூய காதல் என்றும் தோற்காது என்பதற்கு சான்றாக எங்கிருந்தோ வந்த சித்தாண்டி என்னும் சித்தர் தான் புரிந்த தவத்தின் பலனாக அந்த விலங்குகளிடம் இருந்து இரு உயிர்களையும் காப்பாற்றி யாருக்கும் தெரியாத ரகசிய மரகுகைக்குள் அழைத்து வந்துவிட்டார்..
அந்த மரத்தை சுற்றியும் முள் செடிகள் நிறைந்து இருந்ததால் அந்த மரத்தின் அடியில் அப்படி ஒரு ரகசிய குகை இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை..
இன்னும் தங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தழுவிக்கொண்டு உயிரோடு இருக்கிறோம் என்று அவர்களால் நம்ப முடியவில்லை..
அதிர்ச்சி, ஆச்சர்யம், மகிழ்ச்சி, ஆனந்தகண்ணீர்.
போன்ற உணர்ச்சிகளின் பிடியில் சற்று நேரம் கட்டுண்டு இருந்த காதல் ஜோடியை சித்தரின் ” குழந்தாய்.. ” என்னும் அன்பு அழைப்பு அவர்களை தற்காலிகமாக பிரித்தது. அதனால் கவனத்தை சித்தரின் பக்கம் திருப்பினார்கள்..
“ ஆம் நீங்கள் இன்னும் உயிரோடு இருப்பது உண்மைதான. நீங்கள் இருவரும் தற்பொழுது உயிர் துறக்க வேண்டியவர்கள் இல்லை..
நன்கு ஆண்டு அனுபவித்து வாழ்ந்து உங்களால் பல தலைமுறைகளை உருவாக்கபட வேண்டியவர்கள்..
இது எனக்கு விதிக்கப்பட்ட கட்டளையாகும்..
சில யுகங்களாக எனக்கு விதிக்கப்பட்ட கட்டளையை நான் நிறைவேற்றுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..
முன்னோர்கள் கூறியது போல் இதுவரையிலும் யாரும் இந்த வனத்திற்குள் உண்மை காதலுடன் உயிர் துறக்க வரவில்லை..
அவர்கள் கூறிய கட்டளையின்படி உங்களையே இவ்வளவு காலத்திற்குப் பின்பு நான் சந்தித்துள்ளேன்..
நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளோடும் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ வேண்டியவர்கள்.. அதனால் என் மூலம் காப்பாற்றப்பட்டிருக்குறீர்கள்..
இதோ என் முன்னோர்களின் கட்டளைப்படி உங்களை நான் சந்தித்து காப்பாற்றி விட்டேன்..
அதன் பின்பு இனி உங்களுக்கான கடமைகளை நான் விளக்கமாக கூறுகிறேன். அதை தெளிவாக கேட்டுக்கொண்டு காலத்திற்கும் அதை பின்பற்றுங்கள்..
இதோ இந்த பஞ்ச முக சிலையை நன்கு பௌர்ணமி வெளிச்சத்தில் அவதானித்துக் கொள்ளுங்கள்..
இந்த சிலை இனி உங்களது வம்சத்திற்கு சொந்தமானது..
நீங்கள் இருவரும் முறைப்படி ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டவர்கள்..
இனி இந்த வனத்தில் உங்களுக்கான பாதுகாப்பான இடத்தில் ஒரு குடில் அமைத்து உங்களது வாழ்க்கையை நன்றாக தொடங்குங்கள்..
நீங்கள் வாழும் குடிலில் இந்த பஞ்சமுக சிலையை வைத்து தினமும் காலை மாலை விளக்கேற்றி பூஜை செய்யுங்கள்..
விளக்கேற்றி பூஜை செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது..
அதாவது சுமங்கலி பெண்கள் தற்போது இங்கு இருக்கும் சுமங்கலி பெண் நீ. இன்றைய பௌர்ணமி நாளில் உன் கையால் இந்த பஞ்சமுக சிலைக்கு விளக்கேற்றி உங்களது வாழ்க்கையில் தொடக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்..
இனி வரும் காலங்களில் உன் மகள் உன் மருமகள் இருவரும் சுமங்கலிகளாக இருக்கும் வரையிலும் தினமும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஒற்றுமையோடு விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்..
பஞ்சமுக சிலைக்கு விளக்கேற்றி பூஜை செய்வதற்கு முக்கியமான நிபந்தனை அந்தப் பெண் உங்களது ரத்த வம்சமாக இருக்க வேண்டும் அல்லது உங்களது ரித்த வம்சம் மகனை திருமணம் செய்த மருமகளாக இருக்க வேண்டும் அவர்கள் சுமங்கலியாகவும் இருக்க வேண்டும்..
இப்படி உங்களது ஒவ்வொரு தலைமுறைக்கும் இதை நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்..
எந்த தலைமுறையில் பஞ்சமுக சிலைக்கு சுமங்கலி பெண்கள் விளக்கேற்றாமல் விடுகிறார்களோ அந்த தலைமுறை பாரிய இழப்பை சந்திக்கும்..
அந்த குடும்பத்து மகள் அல்லது மருமகள் ஒரே நேரத்தில் இருவரும் கணவனை இழந்து இருந்தால். அல்லது மகள் மட்டுமே அல்லது மருமகள் மட்டுமே கணவனை இழந்திருந்தால் அவர்களால் அந்த பஞ்சமுக சிலைக்கு விளக்கு ஏற்ற முடியாமல் போனால் அவர்களின் வம்சம் அடுத்த தலைமுறை என அனைத்தும் பாரிய துன்பத்திற்கு தள்ளப்படும்..
அப்படி எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பாக நான் சொல்லும் மந்திரத்தை உச்சரித்து தினமும் விளக்கேற்றி வழிபட்டு உங்களது தலைமுறையை சிறப்பித்துக் கொள்ளுங்கள்..
அரசலூர் என்னும் கிராமம் உங்களை நம்பி இனிவரும் காலங்களில் இந்த வனத்திற்கு அருகே உருவாகும் உங்களால்..
அந்த கிராமத்துக்கு அரசு குடும்பமாகிய உங்களது வம்சம் தான் தொடர்ந்து தலைமை வகிக்கும்..
இந்த சிலை வழிபாடு உங்களையும் உங்களை சார்ந்து இருக்கும் கிராம மக்களையும் நல்லபடியாகவே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வழி செய்யும்..
வழிபாடு செய்ய தவறும் பட்சத்தில் உங்கள் குடும்பம் மற்றும் இந்த ஊர் மக்கள் அனைவரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்..
மற்றும் ஒரு முக்கிய தகவல். நீங்கள் எவ்வளவு அவதானமாகவும், கவனமாகவும் இருந்தாலும் பஞ்சமுக சிலை என்பதால் ஐந்தாவது தலைமுறை வம்சத்தவர் இந்த சிலையின் ஐந்தாவது முகத்தின் சோதனைக்கு ஆளாவார்கள்..
அதற்கான தாக்கம் நான்காவது தலைமுறையின் இறுதியிலேயே ஆரம்பித்து விடும்..
ஐந்தாவது தலைமுறையின் ஆண் வாரிசால் பல சிக்கல்கள் உருவாகும்..
ஊருக்கே நல்லவன் ஆனாலும் ஒரு பெண்ணுக்கு தீங்கு செய்வான்..
ஒரு தலைவன் அனைத்து விதத்திலும் நல்லவனாக இருக்க வேண்டும்..
ஆனால் அவன் அவனுக்கு கொடுக்கப்பட்ட கடமையில் மட்டுமே நேர்மையாக, உண்மையாக, நல்லவனாக இருப்பான்.. அவன் சுய ஒழுக்கம் அங்கே கேள்விக்குறி? ஆகிவிடும்..
இவள் பெண் தானே இவளை என்ன செய்தால் என்ன நம் கடமைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று அவனுக்குள் இருக்கும் தீய குணம் தலைதூக்கும்..
நம்பி இருக்கும் மக்களுக்கு நல்லது செய்பவன். தன்னை நாடி வரும் பெண்ணுக்கு தீங்கு செய்தால் எப்படி அவன் உண்மையான தலைவனாக இருக்க முடியும்..
அவனின் இந்த குணத்தால் அந்த ஐந்தாவது தலைமுறை பல சிக்கலுக்கு உள்ளாகி பெறும் துன்பங்கள் வர காத்திருக்கிறது.. அதை நிவர்த்தி செய்ய தேவதை வருவாளா?.
ஒரு பெண்ணுக்கு கெடுதல் நினைத்தால் அவன் வம்சமே சீர்குலைந்து போகும் என்பது அவனுக்கு பல துன்பங்கள் அனுபவித்த பின்பு தான் பாடமாக கற்றுக்கொள்வான்..
இந்த செய்தியை உங்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது..
நீங்கள் உருவாக்கும் வம்சம் அடுத்தடுத்த தலைமுறையில் எப்படி இருக்கும் என்பதை நான் உங்களுக்கு மட்டுமே கூறியிருக்கிறேன்..
இதை உங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தி ஐந்தாவது தலைமுறை யின் ஆண் வாரிசை எச்சரிக்கை செய்ய முற்பட்டால் அவன் தன் இயல்புக்கு மாறாக தன்னை தயார்படுத்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தால் அவனின் உண்மைத்தன்மை கெட்டு பஞ்சமுக சிலையின் பாரிய இழப்பிற்கு உங்களது அடுத்தடுத்த வம்சங்கள் ஆளாகும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்..
அவன் அவனாக இருந்து அனைத்தையும் அனுபவத்தின் மூலம் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த தலைவனாக வேண்டும்..
அனுபவத்தை விட சிறந்த ஆசான் ஒன்றுமில்லை..
எனக்கு அடுத்து என் சீடர்கள் உங்கள் வம்சத்தை தொடர்ந்து வழி நடத்துவார்கள்..
அவர்களது அறிவுரைக்கு கட்டுப்பட்டு உங்களது தலைமுறையினர் நடந்தால் நல்லதே நடக்கும்..
சாங்கியங்களை மீறும் பட்சத்தில் வரும் விளைவுகளை அவர்களே சந்திக்க வேண்டும்.. ”
சொல்ல வேண்டிய அனைத்து விடயங்களும் பொறுமையாக சித்தாண்டி சித்தர் அவர்களுக்கு விளக்கி கூறியதை நன்றாக கேட்டுக் கொண்டு அவர்கள் இனி சந்தோசமாக வாழ்ந்து ஒரு ஊரையும் தங்கள் வம்சத்தினரையும் வழிநடத்த வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கேட்டுக் கொண்டு அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்..
பௌர்ணமி அன்றே அவளது கையால் பஞ்சமுக சிலைக்கு விளக்கு ஏற்றப்பட்டது..
சித்தரின் வழிகாட்டல் படி அவர் காட்டிய இடத்தில் ஓர் அழகிய குடில் அமைத்து அந்த இடத்திற்கு அரசலூர் எனும் பெயரை வைத்து அதை ஓர் ஊராக மாற்ற அனைத்து வழிகளையும் செய்தார்கள்..
இனி அந்த வம்சம் அரச வம்சம் அந்த வம்சத்தை சார்ந்து அந்த ஊரில் வாழும் மக்கள் அரசலூர் மக்கள்..
மக்களின் நன்மை, தீமைகள் அனைத்தும் அந்த குடும்பத்தின் கைகளில்..
அந்த குடும்பம் சீரும் சிறப்புமாக வாழ்வது அந்த பஞ்சமுக சிலையின் கையில்..
அந்த முதலாவது தலைமுறையினர் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக காதலோடு வாழ்ந்து அவர்களும் குழந்தை பெற்று அவர்களது வம்சம் தலைக்க ஆரம்பித்தது..
பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், வழிப்போக்கர்கள் என்று மக்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊரில் தங்களுக்கான இடத்தை துப்புரவு செய்து அங்கேயே வீடமைத்து அந்த ஊரையே சொந்த ஊராகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்..
ஊர் மக்களுக்கு கல்வி கற்பதற்கான வசதி, மருத்துவம், போன்ற அத்தியாவசிய தேவைகளை அந்த அரசன் ஆரம்பித்து வைத்தார்..
பஞ்சமுக வழிபாடு சிறப்பாக நடந்ததால் இந்த ஊர் அவர்கள் எண்ணியதற்கு அதிகமாகவே சீரும் சிறப்புமாக அனைத்து வளங்களும் பெற்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது..
சித்தர் சொன்ன ரகசியத்தை ஐந்தாவது தலைமுறையினருக்கு அவர்கள் யாரும் கடத்தவில்லை..
அந்த ரகசியத்தைத் தவிர மற்ற அனைத்து நல்ல விஷயங்களையும் அந்த குடும்பத்திற்கான பண்பாடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஊருக்கு அவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தி வழிநடத்தினார்கள்..
அதன்படி அனைத்தும் நன்றாகவே நடந்தது..
இதோ ஐந்தாவது தலைமுறையின் வாரிசாக அவன் பிறந்து விட்டான்..
அவனால் நடக்க போகும் சம்பவங்கள் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் அவனே பொறுப்பு..
அவன் ஒருவனது குணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதால் அதன் தாக்கம் நான்காவது தலைமுறையில் ஆரம்பித்து இதோ ஐந்தாவது தலைமுறையை போட்டு ஆட்ட ஆரம்பித்து விட்டது..
அவன் தனது தவறை உணர்ந்து திருந்துவானா?. அந்த தவறை உணர்ந்து திருந்தும் பொழுது தேவதை வந்து வரம் கொடுப்பாளா?.
தேவதையின் வரவினால் அந்த ஐந்தாவது தலைமுறை சீர் பெறுமா?..
எதிர்பாராத சுவாரசியங்களுடன் இந்த கதை தொடர்ந்து நகரும்..
ஒரு நாள் விட்டு ஒரு நாள் அத்தியாயம் வரும்..
தொடர்ந்து என்னோடு பயணித்து இந்த கதையை வெற்றிகரமாக முடிப்பதற்கு உங்களது கருத்துக்களை ஊக்கமாக தாருங்கள்..
error: Content is protected !!