வைர நெக்லஸ் போட வேண்டாம் என்று தடுக்கும் அன்னையை கூர்ந்து ஒரு முறை பார்த்தவன், “உங்களுக்கு புரியலைன்னா, வலிச்சாலும் பரவாயில்லைன்னு புரிய வைக்க வேண்டியதுதான்.”
“என்ன புரியலை எனக்கு ?”, என்று கேட்டார் கோமதி.
“நீ என்னை திட்டினயே , அதைவிட நிறைய பேச்சு மஞ்சரி இந்த நாலு மாசத்துல அவ அம்மாகிட்ட கேட்டிருக்கா. ‘அதான் அவங்க அம்மா வேண்டாம்னு சொன்னதும் போயிட்டானே, நீ ஏன் கிடந்து உருகறன்னு’, திட்டிருக்காங்க. என்னை மாதிரி அவ லேட்டாவா வர முடியும் ? தினமும் சாயந்திரம் ஏச்சு பேச்சு எல்லாத்தையும் தாங்கிட்டு இருந்திருக்கா. “
“எல்லாம் உங்களால, நீங்க வேண்டாம்னு சொன்னதால. அவங்க அம்மாவுக்கு புரிய வெக்கணும் இல்லை ? மஞ்சரி எனக்கு எவ்வளவு முக்கியம்னு ? இதெல்லாம் சொல்லிகிட்டு இருந்தா புரியாது. நான் அவளுக்கு செய்யறதுலதான் புரியணும். “, கோமதி கண்கள் கலங்கியது கண்டும் நிறுத்தவில்லை ராஜேந்திரன்.
“விக்ரம், வேதாவோட வளைகாப்புக்கு போட்ட வளைக்கு எவ்வளவு சந்தோஷப் பட்டீங்க ? யோசிங்க. மாப்பிள்ளைக்கு வேதா மேல எவ்வளவு பாசம்னு அது பார்த்துதானே உங்களுக்குப் புரிஞ்சுது ? குழந்தை பிறந்ததுக்கு விக்ரம் அவ்வளவு பெரிய பூக்கூடைய அனுப்பினதை எல்லார்கிட்டயும் காட்டி பெருமைபட்டுக்கலை ? “
“அதே மாதிரி மஞ்சரி அம்மா நெனச்சாதான், அவ பட்ட கஷ்டம் கொஞ்சமாவது குறையும். எல்லார் மாதிரியும் தாலிக்கொடிய போட்டா,அதுல என்ன பெருமை ?”
“தெரியும்மா. அதுனால அவ வாங்கின பேச்சு இல்லைன்னு ஆகிடுமா ? இல்லை வலிதான் போயிடுமா ? அவளை ரொம்ப கஷ்டப்பட்டுதான் பழயபடி கொண்டுவர பாக்கறேன்.”, சற்று சமாதானக் குரலில் பேசினான்.
“மா… வேதாக்கு அவ புருஷன் வாங்கிப் போடுவான். நான் மஞ்சரிக்கு போடற மாதிரி.”
இந்த சம்பாஷனையை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சௌந்தர்ராஜான், “இல்லை ராஜா, அம்மா சொலறதுலயும் நியாயம் இருக்கு. நீ நெனைக்கறதும் தப்பில்லை. ஒண்ணு பண்ணலாம். நாளைக்கு நீ ஆசைப்பட்டபடியே வைரத்தோடும் நெக்லஸும் வாங்கிடலாம். தாலிக் கொடியும் வாங்கலாம். “
அம்மாவும் பிள்ளையும் அவரைத்தான் பார்த்திருந்தனர். “ மாப்பிளளை, பொண்ணு அழைப்பில, நம்ம வழக்கம் போல தாலிக் கொடிய பவுனா குடுத்துடலாம். நீ தாலி கட்டி முடிச்சதும், சபையிலயே அவளுக்கு போட்டுவிடு. உன்னோட கல்யாணப் பரிசா. அதை யாரும் குறை சொல்ல முடியாது. நீ விரும்பற மாதிரி மஞ்சரிக்கு நீ கொடுக்கற முக்கியத்துவமும் எல்லாருக்குமே தெரியும். அவங்க அம்மாவும் பெருமைபட்டுக்கலாம். முழுக்க முழுக்க உன்னோட கிஃப்டா இருக்கும்.”
தாய், மகன் இருவருக்குமே முகம் மலர்ந்துவிட்டது. ராஜேந்திரன் அன்னையைப் பார்க்க, “ இது சரி வரும்டா. இப்படியே பண்ணலாம்.”, என்றவர், “ ஏன் ராஜா…மஞ்சரி என் மேல ரொம்ப வருத்ததுல இருக்காளா ?”, கொஞ்சம் கவலையாய்க் கேட்டார்.
“நல்ல பொண்ணுமா அவ, புரிஞ்சுக்குவா உன்னை. “, என்றதோடு முடித்துக்கொண்டான். வருத்தமில்லை என்று எப்படி சொல்லமுடியும் ?
வியாழனன்று , பிரபலமான நகை கடையில் இரு குடும்பமும் சந்தித்துக்கொண்டார்கள். முறைப்படி தாலி அதோடு கோர்க்க வேண்டிய உருப்படிகள் எடுத்து முடித்து, பின் தாலிக் கொடி மாடல்களைப் பார்த்தார்கள்.
ராஜேந்திரன் வீட்டிலேயே பாடம் எடுத்திருந்தான் கோமதிக்கு. “அம்மா, போட்டுக்கப் போறது அவ. அதனால அவ இஷடப்படியே எடுக்கட்டும். நீ போட வேண்டிய பவுனோட கூட கொஞ்சம் இருந்தாலும் அங்க வெச்சு கேக்காத. பார்த்துக்கலாம்.”.
காஞ்சனா கோமதியை பார்த்து எடுக்க சொல்லி அழைத்தபோதும், “ இருங்க, மஞ்சு அவ இஷ்டப்பட்டதை எடுக்கட்டும். நம்ம அதை பார்த்து சொல்லலாம்.” என்றுவிட்டார்.
ராஜேந்திரனை ஒரு பார்வை பார்த்தவள், இரண்டு மாடல்களை எடுத்து வைத்தாள். கண்ணிற்கோ கழுத்திற்கோ உறுத்தாமல் இருந்தது இரண்டுமே. பின் அம்மாவையும் மாமியாரையும் அழைத்துக் காண்பித்தாள். இருவருமாய் ஒன்றை தேர்ந்தெடுத்தார்கள்.
அதன்பின் ராஜேந்திரன், “ அத்தை, மஞ்சரிக்கு என் கல்யாணப் பரிசா வைர நெக்லசும் தோடும் வாங்கலாம்னு இருக்கேன். வாங்க, டயமண்ட் செக்ஷன் போகலாம்”, என்றதும் மஞ்சரி ஆச்சரியமாய் பார்க்க, காஞ்சனா முகம் மலர
“ஓ…சரிங்க மாப்பிள்ளை. மஞ்சு நீ சொல்லவே இல்லையே”, என்று அவளை பார்த்தார்.
கைலாசம், காஞ்சனாவுடன் ஏதோ பேச, சௌந்தர் ராஜன், “நீங்க ரெண்டு பேரும் பார்த்து எடுங்கப்பா. நாங்க கொஞ்சம் உக்கார்றோம். டயர்டாய் இருக்கு.”, என்று மனைவியை அழைத்துக் கொண்டு சற்று தள்ளியிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“ராஜா மஞ்சரிக்கு அவனோட பரிசா வாங்கறான். இதுல நமக்கு என்ன வேலை. அவங்க முடிவு செய்யறதுதான் சரி.” , என்றார் சௌந்தர்ராஜன்.
“வாஸ்தவம்தான்.”, என்று அவர்களும் அமர, காஞ்சனா கோமதியிடம், “ அண்ணி, மாப்பிள்ளைக்கு வைர மோதிரம், ப்ரேஸ்லெட் போடலாம்னு யோசனை. கையோடவே எடுத்துடலாமா ?”
கோமதிக்கு ஒரமாய் இருந்த வருத்தம் கொஞ்சம் நீங்கியது. நாம் இவ்வளவு செய்கிறோம் பெண்ணிற்கு, ஆனால் ராஜாவுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லவேயில்லையே? என்று அவருக்குள் இருந்த உறுத்தல் இப்போது மட்டுப்பட்டது.
“அதுக்கென்ன அண்ணி. எடுத்துடலாம். அவங்க வேலை ஆனதும் இதுவும் எடுக்கலாம்.”, என்று சம்மதமாய் தலையசைத்தார் கோமதி.
அங்கே, சந்தோஷமாய் ராஜேந்திரனுடன் சிரித்துப் பேசியபடியே மஞ்சரி அவளுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்தாள். புடவைக்கும் அணியலாம், சல்வாருக்கும் போட்டுக்கொள்ளும் வகையில், நேர்த்தியாய் இருந்தது.
பெற்றவர்களை அழைத்து காண்பித்து சம்மதம் கேட்டார்கள். அப்போது காஞ்சனா, “அண்ணி, நான் இவளுக்கு கல்யாணத்திற்கு எடுக்கறதா இருந்தேன். மாப்பிள்ளை வாங்கறதுனால, வைர வளையலா எங்க பங்குக்கு போட்டுடறோம்.” , எனவும் கோமதியின் முகம் மலர்ந்தது.
ஒரு வாறாக நகை வாங்கும் படலம் திருப்தியாக முடிந்தது.
அங்கே சிங்கபூரிலோ, இந்தியா திரும்புவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியிருந்தது. எதை எடுத்துச் செல்வது, எவற்றை தெரிந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வருவது என்று பிரித்து பாக் செய்ய ஆரம்பித்தார்கள். கோமதி கல்யாண வேலைகள் நடப்பதையெல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்துக்கொண்டிருந்தார் மகளுக்கு. வேதாவும் முடிந்தவரை கோமதி தானாக எதுவும் முடிவு செய்யாது, மகனை கலந்தாலோசிக்குமாறு தாய்க்கு பாடமெடுத்துக்கொண்டிருந்தாள்.
கேம் தியரி பற்றி அவள் படித்துக்கொண்டிருந்த ஆன்லைன் கோர்ஸ் முடித்து, அதுக்கான பரீட்சையும் முடித்து செர்டிஃபிக்கேட் வாங்கியிருந்தாள். விக்ரம் அவளை இரு வாரங்கள் முன்னரே செல்லச் சொல்லியிருந்தாலும், வேண்டாம் எல்லாரும் சேர்ந்து செல்வோம் என்றிருந்தாள்.
கல்யாணத்திற்கு மூன்று வாரங்கள் முன், ஒரு வழியாய் சென்னை வந்து சேர்ந்தார்கள். மேல் வீட்டை காலி செய்ய முன்பே ஏற்பாடு செய்திருந்தான் விக்ரம். மேல் வீடு பெயிண்ட் அடித்து, மர வேலைகள் செய்ய என்று ஆரம்பித்திருக்க, ராகவன் வீட்டில் அவர்கள் அறையில் தங்கிக்கொண்டிருந்தார்கள்.
விக்ரம் வேதா குழந்தையுடன் சென்று ஒரு நாள் மாலை மஞ்சரியைப் பார்த்து வந்தார்கள். கல்யாண வேலைகளில் வேதாவும் அவ்வப்போது பங்கு கொள்ள, விக்ரம் அவனுடைய ஆடிட்டர் தணிகாசலத்திடமே வேலையில் சேர்ந்தான். இந்த முறை சம்பளம் மட்டுமல்லாமல், வருடாந்திர லாபத்தில் பங்கும் பெறும் பங்குதாரனாக. வருடத்தில் அவன் பார்க்கும் க்ளையண்ட்கள், அவர்கள் தரும் ஆலோசனை கட்டணங்கள் பொறுத்து, அவன் ஆபீசுக்கு ஈட்டித்தரும் வருமானம் பொறுத்து பங்கு விகிதம் நிர்ணயிக்கப்படும். மூன்று சீனியர்களுடன் இவன் நான்காவதாய் சேர்ந்தான்.
வேதாவும், அவள் விரும்பியபடியே, கேம் தியரி ரிசர்ச் டெவெலப்மெண்டில், ரிசர்ச் அசோசியட்டாய் சேர, அவள் ஆசைப்பட்ட கம்பனிக்கு சிங்கப்பூரிலிருந்த போதே விண்ணப்பித்திருந்தாள். இரண்டு நேர்காணல்கள் போன், ஸ்கைப் மூலம் ஏற்கனவே நடந்தேறியது. இறுதியாக, சென்னை வந்ததும் நேரே பார்த்து முடிவு செய்வதாக இருந்தது. டைடல் பார்க்கில் இருந்தது அந்த பன்னாட்டுஅலுவலகம்.
மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு, நேர்காணலுக்குச் சென்றாள். அலுவலகம் , அவளின் டிபார்ட்மெண்ட் ஹெட், எச்.ஆர் என்று முடித்து, ரீஜென் ஹெட்டையும் பார்த்து வெளி வரும்போது, இரண்டு நாளில் முடிவு சொல்வதாய் சொன்னார். கிட்டத்தட்ட கிடைத்துவிடும் என்று டிபார்ட்மெண்ட் ஹெட் நம்பிக்கை கொடுத்து அனுப்பினார்.
மறு நாளே, போனில் வேலைக்கான லெட்டர் அவள் மெய்லுக்கு அனுப்பியிருப்பதாக செய்தி வந்தது. பார்த்தவள் உடனே விக்ரமிற்கு அனுப்பினாள். ஆரம்ப சம்பளமே மாதம் நாற்பதாயிரம். பர்வதம் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார்.
ராகவனும் மாலினியும் மகிழ்ந்து வாழ்த்தினார்கள். பர்வதம் சும்மாயிருக்காமல், “இப்பவே இவ்வளவு சம்பளம் தராங்களே, நீயும் இங்க வேலைக்கு பாரேன் மாலினி. உங்க கம்பனிவிட இவங்க பரவாயில்லை போல இருக்கே.”, என்றார்.
வேதா சங்கடத்துடன் மாலினியைப் பார்க்க, அவள் சலனமேயில்லாமல் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தாள். ராகவன், “அவ வேலையை விட்டுட்டு மேல M.B.A படிக்கலாம்னு இருக்காமா. எப்பவோ செஞ்சிருக்கவேண்டியது. இந்த குடும்பத்துக்கு உழைச்சி கொட்டவேண்டியதா இருந்துச்சு. அதனால வேலைக்கு போயிட்டு இருந்தாள். பத்தாததுக்கு குழந்தைங்க கொஞ்சம் வளரட்டும்னு இருந்தோம். அதான் இப்ப எல்லா வேலையும் ஆச்சே. இனியாச்சம் அவ இஷ்டப்படி படிக்கட்டும்.”, எனவும் பர்வதம் அதிர்ச்சியானார்.
“நல்ல வேலையை விட்டுட்டு திரும்ப படிச்சு, அப்பறம் வேலை தேடி, வருஷக் கணக்கா ஆகுமேடா ? “, பர்வதத்துக்கு கவலை தொற்றிக்கொண்டது.
“அண்ணிக்கு இருக்க எக்ஸ்பீரியன்ஸுக்கு , M.B.A முடிச்சா வேதாவைவிட இன்னுமே அதிகமா சம்பளம் வாங்குவாங்க. மா இரண்டு வருஷம் படிக்க ஆகும்தான். அதனால என்ன ?”, என்றான் விக்ரம், பர்வதத்தின் மீதான எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காட்டியபடி. அவனை சட்டை செய்யாத பர்வதம், பெரிய மகனிடம் திரும்பி,
“இல்லை ராகவா. வீட்டுக்கடன் இருக்கு, காருக்கு வேற இன்னும் லோன் கட்டணும். உன் சம்பளம் மட்டும்னா செலவுக்கு சரியா போயிடுமே…”, என்று இழுத்தார்.
“நீங்களே இவ்வளவு யோசிக்கறீங்கன்னா, நானும் மாலினியும் யோசிக்க மாட்டோமா ? என்னை கல்யாணம் பண்ணதுனால எத்தனையோ ஆசைங்களை விட்டுக்கொடுத்திருக்கா. மூத்தவனா செய்ய வேண்டிய கடமையெல்லாம் அப்பா இடத்துலர்ந்து செஞ்சிட்டேன். இனியாச்சம் என் பொண்டாட்டி ஆசைங்களைப் பார்க்கறேன். உங்க பிள்ளைங்களுக்குத் தெரியும், அவங்க வாழ்க்கையை, குடும்பத்தைப் பார்த்துக்கன்னு நம்புங்கமா. எப்ப பார்த்தாலும் கடன், லோனு, பணம் சேருன்னு சொல்லிட்டு இருக்காதீங்க.”, என்றாவது தோன்றும் கோபம் ராகவனிடம் அன்று வெளிப்பட்டது.
முகம் சுருங்கி உள்ளே சென்றுவிட்டார் பர்வதம். ராகவனை நிமிர்ந்து பார்த்த மாலினி, “ஏங்க இவ்வளவு கோவம். இப்ப நாந்தான் போய் மலையிறக்கணும் அத்தையை.என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு விடலாமில்லை. நாம செய்யறதை செய்யப் போறோம். நான் பக்குவமா சொல்லிருப்பேன்.”, என்றாள் மெல்லிய குரலில்.
“ஷ்… நீ எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சன்னு எல்லாருக்கும் தெரியும். உன் திறமைக்கு இது அங்கீகாரம். அதை யாருக்காகவும் ஏன் மறைக்கணும் ? அவங்க பார்வை வட்டத்துல, அவ்வளவுதான் அவங்களுக்கு யோசிக்கத் தெரியும். பண பிரச்சனை அவங்க வாழ்க்கையில பிரதானமா இருந்திருக்கு. அதனால மாமா மாதிரி சேர்க்காம செலவு செஞ்சிட்டு கஷடப்படுவோமோன்னு ஒரு பயம் எப்பவும்.”
“போங்க அண்ணி. உங்களுக்கும் வேதாவுக்கும் சிண்டு முடியற மாதிரி பேசறோம்னு தெரியாமலா பேசினாங்க அப்படி ?”, விக்ரம் கேட்டான்.
புன்னகைத்தவள், “அவங்க கேட்ட போது நினைச்சிருக்க மாட்டாங்க விக்ரம். நானும் அந்த கம்பனில சேர்ந்தா எனக்கும் இன்னும் சம்பளம் வரும்னு அந்த ஆங்கிள்ளதான் கேட்டாங்க. இன்னேரம் செஞ்ச தப்பு புரிஞ்சிருக்கும். சங்கடபட்டுகிட்டு கலங்கிட்டு இருப்பாங்க இப்ப.”
“எல்லாம் பட்டு தேறித்தான் வந்துச்சு. எனக்கும் கோபம், எரிச்சல்,புகைச்சல், கஷ்டம் எல்லாம் வரும்தான். அத்தனைக்கும் உங்கண்ணாதான் வடிகாலா இருப்பார்.”, என்று ராகவனை நோக்கி ஒரு பார்வை செலுத்தினாள், புன்னகயோடே. ராகவனுக்கு என்ன புரிந்ததோ, அவன் பதிலுக்கு உதிர்த்த மர்மப் புன்னகை மாலினிக்கு என்ன செய்தி சொல்லியதோ, விக்ரமிற்கு புரியவில்லை.
“ உடனே ரியாக்ட் பண்ணாம ஒரு நிமிஷம் நிதானிச்சு பேசினா, அடுத்தாள் ஏன், எதுக்கு இப்படி பேசறாங்கன்னு புரியும். அப்பறம் ஹாண்டில் பண்ணிக்கலாம். பக்குவமும் நிதானமும் அனுபவபட படத்தான் வரும் விக்ரம்.”, என்றாள் மாலினி.
“கல்யாணமாகி வந்த நாளா உங்களுக்கு அனுபவத்துக்குத்தான் குறைச்சலே இல்லையே. இந்தக் குடும்பத்துக்குன்னே உங்களை நேர்ந்துவிட்டிருக்காங்க. அம்மாவுக்கும் காயத்ரிக்கும் உங்க அருமை தெரியலை அண்ணி.”, என்றான் வருத்தமாக.
“ஷ்… என்னதிது விக்ரம் ? எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கண்ணா இஸ் வொர்த் ஆல் திஸ். அவருக்காக இதைவிடவும் செய்யலாம், தாங்கலாம். என்னோட நிழலாய் அவர் இருக்கவும்தான் எல்லாத்தையும் சமாளிக்கறேன். நீ என்ன அவர் என்னை பார்த்துக்காத மாதிரி பேசற ?”, சீரியசாய் பேச ஆரம்பித்தவள், விளையாட்டாய் விக்ரமை சண்டைக்கு இழுத்தாள்.
“அச்சோ… நான் ஒண்ணுமே சொல்லலை. அதுவும் இனி உங்க ஆசையெல்லாம் தீர்க்கறதா சொல்லிருக்கார். எனக்குமே சந்தோஷம்தான்.”, என்று சிரித்தான் விக்ரம்.
“என் புருஷன் என்னை பார்த்துக்குவார். நீ உன் பொண்டாட்டிகிட்ட நல்ல பேரு வாங்கற வழியைப் பாரு”, என்று வேதாவைப் பார்த்து கண்ணடித்தவள், பர்வத்தை சமாதனப் படுத்தப் போனாள்.
வேலையோடு வேலையாக கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னர், மேல் வீட்டிற்கு தனிக்குடித்தனம் சென்றார்கள் விக்ரமும் வேதாவும். அவர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்தபின், விக்ரம் அதை சிந்துவிற்கு தனியறையாய் மாற்ற டிசைனரை அழைத்துப் பேசினான். அவளுக்கென்று தனியாய் படி வைத்து ஏறி படுப்பதுபோல கட்டில், அதற்கேற்ற பெரிய கண்ணாடி பதித்த அலமாரி, படிக்கும் மேசை, நாற்காலி , புத்தக அலமாரி, என்று எல்லாம் பிங்க், வைட் கலரில் கார்ட்டூன் படங்களுடன் அழகாய் வடிவமைக்கச் சொல்லியிருந்தான்.
விலையைக் கேட்டு மாலினியும் ராகவனும் தயங்க, “ அண்ணா, இது சிந்து எனக்கு நான் கேட்டதை விட சிறப்பா ஒரு சித்தியை கைகாட்டினதுக்கு என்னோட பரிசு. வேதா எனக்கு கிடைக்க காரணமே அவதானே ? நம்ம வீட்டு இளவரசிண்ணா சிந்துமா. நமக்கெல்லாம் இப்படி தனி ரூம் அமையலை. அவளுக்கு இருக்கட்டுமே?”, என்று முடித்துவிட்டான்.
மஞ்சரி வீட்டிலோ கல்யாணக் களைகட்டியிருந்தது. முகூர்த்ததிற்கு ஐந்து நாட்கள் முன்னர் பந்தக்கால் நடும் விழாவிற்கு பர்வதத்தை அழைத்தார் காஞ்சனா. இரண்டு மருமகளுங்களையும் கூட்டிட்டு வாங்க அண்ணி. உடன் அவர் அக்காவும், கைலாசத்தின் பெரியம்மா, கோமதி, அவரின் அண்ணி என்று விடியலிலேயே வீடு நிரம்பி வழிந்தது.
பந்தக்கால் வைபோகம் முடிந்து, மஞ்சரிக்கு நலங்கு வைத்தார்கள். மிதமான அலங்காரத்தில் அழகாய் அம்ர்ந்திருந்தாள் மஞ்சரி. வேதா தன் அண்ணனுக்கு மொபைலில் லைவ் ரிலே செய்து கொண்டிருந்தாள். இதற்கு மாப்பிள்ளை வர வேண்டாம் என்று அவனை ஆட்டத்தில் சேர்க்கவில்லை. ‘கல்யாணம் முடியட்டும், உங்ககிட்டேர்ந்து அவளை கடத்திகிட்டு போறேன். பார்த்துகிட்டே இருங்க.’ , என்று கறுவிக்கொண்டிருந்தான் ராஜேந்திரன்.