நேரே அவன் அம்மாவைத் தேடிப் பிடித்து, கையோடு ஒரு ரூமிற்கு அழைத்துச் சென்றான்.
“மா, என்னமோ புள்ள பொறக்க நாளைக்கு காலைல பூஜை இருக்கு, சீக்கிரம் வாங்கன்னுட்டு போறான் அந்த பூசாரி ? யாரைகேட்டு இப்ப இந்த பூஜையெல்லாம் ?”, என்று சீறினான்.
“டேய், அவருக்கு மரியாதை குடுத்து பேசு. வேற நாள் இல்லைடா, இது தை வெள்ளில பண்றது விசேஷம். நாளைக்குத்தான் கடைசீ தை வெள்ளி. அதான் பூஜைக்கு சொல்லிட்டேன். வீட்டை விட்டு நாம ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடனும். “ என்று அலுங்காமல் பதிலளித்தார் பர்வதம்மாள்.
“ மா, இண்ணைக்கு கல்யாணம் பண்ணி மறு நாளே யாராச்சம் குழந்தை வேணும்னு பூஜை பண்ணுவாங்களா ? ஏன்மா இப்படி பண்ற ?” , என்று அலுத்துப் போய் கேட்கவும், அவன் அக்கா காயத்ரியும், அண்ணி மாலினியும் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
“டேய், நீ கல்யாணம் பண்றதே உடனே புள்ள பெத்துக்கத்தாண்டா, மூணு மாசத்தில உன் பொண்டாட்டிக்கு புள்ளய குடுத்துட்டு நீ மூட்டைய கட்டணும் சிங்கபூருக்கு. இதுல காத்திருந்தா பூஜை பண்ணமுடியும் ?”, காயத்ரியின் நக்கலில் அவன் அம்மாவைப் பார்த்துப் பல்லைக் கடித்தான்.
விக்ரம் பதில் பேசினால், இன்னும் மோசமாகத்தான் பேசுவாள். அவன் நகரப்போக, “எல்லாருமே புள்ள பெத்துக்கத்தான் கல்யாணம் பண்றாங்க, நீ மட்டும் என்ன பொது சேவை பண்றதுக்கா கல்யாணம் பண்ண? அதுவும் கல்யாணமான ரெண்டாவது மாசமே நீ மாசமான. இத்தனைக்கும் விக்ரம் மாதிரி ஒரு அவசரமும் உனக்கில்லை. உங்கதை இப்படியிருக்கு, நீ அவனை கேலி பண்றயா ?” என்று திருப்பியடித்தாள் மாலினி.
மகளை மருமகள் பேசுவது பிடிக்காத பர்வதம்மா, “ நீ எதுக்கு இப்ப அவனுக்கு வக்கீலாகுற ? “ என்று மாலினியை அடக்கி, “காயத்ரி வந்தவங்களைப் பாக்காமா, இங்க என்ன பண்ற, போ உன் மாமியாரை போய் கவனி. தேவையில்லாம பேசாத.”, என்று அவளையும் அடக்கிக் கூட்டிக்கொண்டு வெளியேரினார்.
“விட்டுத்தள்ளு விக்ரம். அவ குணம் தெரிஞ்சதுதானே.”, என்று சமாதானம் செய்தாள் மாலினி.
“இல்லையில்ல, காயத்ரிக்கு மட்டும்தான் அத்தை சொன்னாங்க. அப்பவும் அங்க வீட்ல எல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்லித்தான் சொன்னாங்க. மத்த எல்லாருக்கும், ஜாதகம் வரவும், குரு பலன் முடியறத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும் இல்லாட்டா ரொம்ப தள்ளிப்போய்டும்னு ஜோசியர் சொன்னதாத்தான், ரெண்டு வீட்லயும் சொல்லிருக்கோம். கூட , நீ ஃபாரின் போறதுக்குள்ள, பண்ணிடனும்னு சீக்கிரம் வெச்சிட்டோம்னு சொல்லிருக்கு. எல்லாரும் கேக்கதான செய்வாங்க, என்ன திடீர்ன்னு கல்யாணம்னு ?”, என்று பொறுமையாக விளக்கினாள் மாலினி.
மனம் கொஞ்சம் சமன்பட்டாலும், ‘ இந்த ஜோசியக்காரன் தொல்லை இன்னும் தொடரும் போலவே? வேதா, இண்ணைக்கு நைட் டயர்டா இருக்குன்னு சொன்னா, என்ன பண்றது?, அடேய், என்ன அவமானப் பட வெக்கறதுன்னு எல்லாரும் கங்கணம் கட்டிட்டு அலயறீங்களாடா ?’, என்று ஜோசியரையும், பூசாரியையும் மனதுக்குள் தாளித்தான்.
இரவு பத்து மணியளவில் உள்ளூர் சொந்தங்கள் எல்லாம் சென்று, காயத்ரி தவிர்த்து, அவள் வீட்டினரை , அவளின் சின்ன மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்து ராகவன் விக்ரமை அருகே அழைத்தான். “விக்ரம், நீ பத்தரைக்கா உன் ரூமுக்கு போ சரியா? ஒரு அஞ்சு மணிக்கா, நான் கால் பண்றேன். “, என்ற ராகவன், சற்று சங்கடமாக “ம்ம்…பூசாரி சொன்னாரில்லையா ? “, என்று விக்ரமைப் பார்க்க, ‘இதுவும் எல்லாருக்கும் தெரியுமா?’, என்று நொந்தே போனான்.
“கன் பாயின்ட்ல கல்யாணம் படத்துல பார்த்திருக்கேன் அண்ணா. இந்த மாதிரி கன் பாயின்ட்ல ஃபர்ஸ்ட் நைட் கேள்விபட்டதுகூட இல்லை. இதெல்லாம் ரொம்ப அநியாயம். கேக்கமாட்டீங்களா அம்மாவை ?”, என்று முறையிட்டான்.
அவன் முகச்சுளிப்பைப் பார்த்து சிரித்தாவறே, “டேய், நானும் மாலினியும் எவ்ளோ சொன்னோம்டா, ஆனா அம்மா, மூணு மாசத்தில தகையலனா என்ன பண்றதுன்னு பயப்படறாங்க. அதான் ஒரு இன்சுரன்ஸ் மாதிரி, இந்த பூஜை. அந்த பூசாரி இப்படி தை வெள்ளிய பிடிசிட்டு தொங்குவான்னு எதிர்பாக்கலை. அண்ணைக்கு, மூகூர்த்தப் புடவை, தாலியை வெச்சி பூஜை பண்ணப்போன போதுதான் எல்லாம் முடிவாச்சு.”
“ஒண்ணு, அந்த ஜோசியக்காரனை முழுசா நம்பணும், இல்லை, எல்லாம் புருடானு கல்யாணத்தை ஒண்றரை வருஷம் தள்ளிப் போட்டிருக்கணும். இதென்னண்ணா, இப்படி ரெண்டுங்க்கெட்டானா இருக்கு ?”, என்று புலம்பினான்.
“அம்மா பத்தி தெரியுமில்ல, நீ மாட்டேன்னா, புலம்பியே மனுஷன சாகடிச்சுடுவாங்க. அந்த கொடுமையிலிருந்த எல்லாரையும் காப்பாத்தவாவது, கொஞ்சம் கருணை காட்டுடா ராசா.”, என்று விக்கரமின் தாடை பிடித்துக் கெஞ்சினான் ராகவன்.
அண்ணனின் கெஞ்சலில் சிரித்துவிட்டான் விக்ரம். தலையசைத்து விடை பெற்றான் ராகவன். குழந்தைகள் பாட்டியுடன் முன்பே சென்றிருந்தனர்.
மற்றொரு அறையில் பேச்சுக்குரல் கேட்கவும், இவன் அவர்கள் அறைக்குச் சென்று, ஒரு அவசரக் குளியல் போட்டு வேறு வேட்டி சட்டைக்கு மாறினான்.
நல்ல வேளை, சினிமாவில் வருவது போல அறையை பூக்கடையாக்கவில்லை. கல்யாணத்திற்கு வந்திருந்த சில பொக்கேக்கள் ஒரு மூலை டேபிளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து, மெல்லிய நறுமணம். அருகே ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் ஃபளாஸ்க், டம்ப்ளர். புது கட்டிலும், மெத்தையும் மாமனார் வீட்டுச் சீராக வந்திருந்தது. சிறு நீல வண்ணப் பூக்கள் சிதறிய இளமஞ்சள் நிற படுக்கைவவிரிப்பு, ஜன்னல்களுக்கும் இளமஞ்சள் நிற திரைச்சீலை. அறையை இப்போதுதான் பார்க்கிறான். முன்பு பூட்டியிருந்தது. ஆடம்பரமில்லாத அழகு.
கதவு திறக்கும் சத்தம் கேட்கவும், திரும்பினான். தளிர் பச்சை நிறப் புடவையில் ஓவியமாக இருந்தாள் வேதா… முகம் பார்த்தவன், ‘எதோ சரியில்லை போலவே…?’ என்று நினைத்தான். கையில் ஒரு பாட்டில் போல எதுவோ வைத்திருந்தாள்.
“என்னது வேதா கைல?”
[the_ad id=”6605″]
“ம்ம்.. தேங்காய் எண்ணை.”, குரல் சற்று சூடாக இருந்ததோ ? லேசாக உதைத்தது விக்ரமிற்கு, ஆனால், ‘இப்போ எதுக்கு எண்ணை, ஆயில் மசாஜ் பண்ற ஐடியா இருக்குமோ ? ஜொள்ளியது மனம், ஆனா முகம் ஒரு மாதிரி இருக்கே’, என்று யோசித்தவன்,
“எதுக்கு இத கொண்டுட்டு வர ?”, என்று கேட்டான்.
“மாலினி அக்கா, நாளைக்கு பூஜைக்கு உக்கார தகுதி வேணும்னா, யூஸ் பண்ணிக்க சொன்னாங்க. லூப்ரிகேஷனுக்கு உதவுமாம். இதையும் சொல்லி, பத்து சாரியும் சொல்லிட்டு போனாங்க.”, என்று காரமாய் வந்தது பதில். கண்ணிலும் முறைப்பு.
ஐயோ என்றானது விக்ரமிற்கு. “ போச்சு, எல்லாரும் சேர்ந்து சமாதி கட்டிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க போலவே ? ”, என்ன சமாதானம் செய்வதென்று தெரியாமல் திருதிருத்தான் விக்ரம்.