Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பாகம்-13

வேலினிக்கு ஆசிரியர் பணி மீது அத்தனை ஆசை இருந்தது. ஆனால் தன் பெற்றோர்களின் விருப்பத்திற்காகவே பொறியியல் சேர்ந்திருந்தாள்.

பொறியியல் சேர்ந்தால் என்ன அதிலும் கூட ஆசிரியராக பணிபுரிய, தனக்கு வாய்ப்பு இருக்கிறது என்று குரு கூறிய பின்பே அதனை பற்றி யோசித்தாள். நிச்சயம் அதை தான் செய்ய வேண்டும்.

ஆனால் தன் குடும்பத்தின் முன்னேற்றம் தன் வருமானத்தை மட்டும் நம்பி இருந்தால் அது அத்தனை சீக்கிரம் நடக்கும் காரியம் அல்ல. ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்றால் அவள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க வேண்டும்.



Advertisement

அதிலும் நல்ல வருமானம் வரும் தான் ஆனால் அதற்கு, இன்னும் பல காலம் உழைக்க வேண்டிய இருக்கலாம். வேலினி முத்தம் வேலையாக தன்னை மட்டுமே நம்பி தன் குடும்பம் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாள்.

இதற்கு முந்தைய வாழ்க்கையில் அவளுக்கு ஏற்பட்ட அந்த அனுபவமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதனால் அவள் முடிவாக செயல்பட்டு தன் குடும்பத்திற்கும் தேவையான வருமானத்தை அவர்களே ஈட்டிக் கொள்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்த பின் தன் கனவை பயணிக்க ஆரம்பித்தாள்.

முதல் வேலையாக பட்டப்படிப்பை முடித்த கையோடு முதுகலையில் சேர்ந்தாள். தாய் தந்தையிடமும் அதை பற்றி அறிவித்து விட்டாள்‌. அவர்களும் அவளை எந்த விதத்திலும் வற்புறுத்தவில்லை. அவள் விருப்பத்திற்கே விட்டிருந்தனர்.

Advertisement

அதற்கு முக்கியமாக அவள் மீது இருந்த நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. அதன்படி இரண்டு வருடம் முதுகலை படிப்யை படித்து முடித்தவள், அடுத்த ஒரு மாதத்திலேயே ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் ஆசிரியாக பணிபுரிய தொடங்கினாள்.

Advertisement

ஆசிரியர் பணிக்கு சென்று முதல் நாள் அங்கு இருக்கும் சூழலை எல்லாம் ஒரு மாதிரி உள்வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பி கொண்டிருந்தாள் வேலினி. மனதில் ஒரு புறம் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபுறம் ஒரு பெரும் சுழல் சுழன்று கொண்டிருந்தது. அது அவள் பாட்டி சிவகாமி குறித்தது தான்.

ஆம், வேலினி மறுவாழ்வை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு வாரத்தில் தன் பாட்டியை தான் போன முறை இழந்த அதே நாள் திரும்ப வரப்போகிறது. “அந்த நாளை தான் கடந்து விட முடியுமா, பாட்டியை இழக்காமல்?” என்று அவள் மனம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இதே போல் போன முறை வேலை கிடைத்தபோது அதை வீட்டில் மகிழ்ச்சியாக சொல்ல, கொண்டாட்டத்தில் இருந்த குடும்பம் அன்றே துக்கத்தில் சூழப்பட்ட நிகழ்வும் ஒரு புறம் அவளை தீண்டி பார்த்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

போனமுறை பாட்டி தன்னை நினைத்து அதிக வேதனை கொண்டு மாரடைப்பு வரை சென்றது அவள் நினைவில் இருந்தது. ஆனால் இம்முறை அது எதுவும் நடக்காமல் அவள் பார்த்துக் கொண்டாள். அதேபோல் அவர் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தினாள்.

கூடவே தாய்க்கு புற்றுநோய்க்காண அறிகுறிகள் இருபப்தாக போன முறையில் எடுத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து இருக்க, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிகிச்சைகளும் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர் அந்த குடும்பத்தினர்.

இப்போது அவள் மனம் நினைப்பதெல்லாம், தன் பாட்டியை காப்பாற்றி விட வேண்டும். அவருக்கு ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்பது மட்டுமே. அதனால் தன்னால் முடிந்த வரை அவர் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

ஒரு புறம் தன் கனவில் இருந்து விலகாமல் அதையும் நிறைவேற்றம் முனைப்போடு இருந்தாள். இந்த விஷயம் குறித்து யாரிடமும் மூச்சு கூட விட முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு அவள் மட்டும் அறிந்தது.

சில நாட்களாக மனதில் இருக்கும் பாரமும் பயமும் குருவை பார்க்கும் போதெல்லாம் அவனிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று துடிக்க ஆரம்பித்தது. ஆனால் அனைத்தையும் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு தவிக்க மட்டுமே முடிந்தது.

அந்த தவிப்பு குருவிற்கும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் அவன் கேள்விக்கான பதில் தான் அவளிடம் அவனுக்கு கிடைக்கவே இல்லை. குரு அமைதியாக எதுவரை இது செல்கிறது என்று பார்க்கலாம் என்று காத்திருக்க ஆரம்பித்தான்.

தெய்வானைக்கு கூட மகளின் தவிப்பு ஏதோ ஒரு இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இவள் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்று சிந்திக்க ஆரம்பித்தார். கேட்கவும் செய்தார். ஒன்னும் இல்லை என்ற பதில் மட்டும் தான் வந்தது. தான் நினைத்ததை தான் செய்து கொண்டிருக்கிறாள்.

தன் கனவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் என் இந்த தவிப்பு என்று அவரும் யோசிக்க ஆரம்பித்தார். சிவகாமி பாட்டி எப்போதும் தன் பேத்தியின் முகம் கண்டு அவளை அறிந்து கொள்பவர், கொஞ்ச நாட்களாக இது எதுவும் அவர் கண்களுக்கு தென்படவில்லை‌. அறிந்து கொள்ளவில்லை.

தாய் இது குறித்து கேட்ட பின்பு தான் அவள் தான். போன முறை போல் இம்முறையும் தவறிழக்கிறோமோ என்று தோன்றியது. போன முறை தானும் துன்பத்தில் ஆழ்ந்து மற்றவர்களையும் ஆழ்த்தியது போல் எதுவும் செய்து விடக்கூடாது என்று தெளிவாக யோசித்து மற்றவர்கள் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.

குருவைப் போல தாயும் அவளின் நடிப்பை எளிதாக அறிந்து கொண்டார். மற்ற யாருக்கும் அவள் நடிப்பு ஏதோ தெரியாமல் போனது விதியா அல்லது காலமா என்பதை கடவுள் ஒருவனே அறிவான்.

தன்னை இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டதாலோ என்னவோ வீட்டில் இருந்த மற்ற யாருக்கும் பெரிதாக அவள் மாற்றம் கண்களுக்கு படவில்லை. தாயையும் ஒரு ஓரளவுக்கு சமாளித்து வைத்தாள்.

இருந்தாலும் அவள் மீது ஒரு கண் வைத்து இருந்தார் தெய்வானை. வேலினி வேலைக்கு சேர்ந்து அன்று ஒரு வாரம் கடந்து இருந்தது. தெய்வானைக்கு என்னமோ மனதே சரியில்லாமல் இருந்தது. முதல் நாள் இரவு கண்ட கெட்ட கனவு வேற அவரை மிகவும் பாதித்தது.

தன் மன பயத்தை ஆறுமுகத்திடம் தெளிவாக கூறியவர், மகளிடம் இருக்கும் மாற்றத்தையும் அவரிடம் தெரிவித்து உடனே மகளின் ஜாதகத்தை பார்த்தாக வேண்டும் என்றார். ஆறுமுகமும் யோசனையுடன் சரி என்று இருக்க, பார்க்கலாம் என்று கூறினார்.

ஆனால் அப்படி இப்படி என்று அடுத்த வாரத்தில் தான் அவர்களால் ஜாதகம் பார்க்க செல்ல முடிந்தது. வேலினி அன்று விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தாள். ஏன் என்று கேட்டவர்களுக்கு உடம்பு முடியவில்லை கால் வலி வயிற்று வலி என்று காரணம் கூறினாள்‌.

அன்று எங்கும் நகராமல் சிவகாமியுடன் அமர்ந்து கொண்டாள். காலையில் இருந்து அவரிடம் அமர்ந்து கொண்டு நகராதவளை தெய்வானையும் கண்டு தான் இருந்தார். இவர்கள் ஜோசியரை பார்க்க கிளம்பினர்.

வீட்டில் யாரிடமும் பெரிதாக எதுவும் கூறவில்லை. ஜோசியரா ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஏதேதோ கணக்குகள் போட்டு கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கு பிறகு அவர்களை நிமிர்ந்து பார்த்தார்.

ஜாதகத்தை மீண்டும் இவர்களின் கைகளிலேயே கொடுத்து, “இன்னும் 31 நாளுக்கு அப்புறம் என்னை பார்க்க நீங்க திரும்ப வருவீங்க. அப்ப நான் உங்களுக்கு இந்த ஜாதக பலனை சொல்றேன்”, என்று கூறிவிட்டார்.

அதைக் கேட்டு அவர்களுக்கு ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது. அவர் மீண்டும் அவர்களிடம் அதையே கூறி அனுப்பி வைத்து விட்டார்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த தெய்வானைக்கு இது இன்னும் குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. ஆறுமுகம் கூட சரி ஏதோ கூறுகிறார் நிச்சயம் அடுத்த மாதம் வந்து பார்க்கலாம் என்று ஒரு திடத்தோடு இருந்தார்.

ஆனால் தெய்வானையால் அப்படி இருக்க முடியவில்லை. மிகுந்த குழப்பத்தில் இருந்தவர் வீடு வந்து சேர, அங்கு இரவு உணவுக்காக தயார் செய்து கொண்டு பாட்டியுடன் கதைப்பேசி கொண்டு இருந்தாள் வேலினி. அவளைக் காண அவருக்கு மனம் பாரமாக இருந்தது.

ஏதோ தவறாக நிகழப்போவதாக அவருக்குள் தோன்றி கொண்டே இருந்தது. இருந்தும் வேலினியை அமர சொல்லி விட்டு தானே உணவு உணவை தயார் செய்ய ஆரம்பித்தார். சிவகாமி பாட்டி அன்று அனைவருடனும் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தார்.

இடையில் வேலினி திருமணம் பற்றி பேச, அவள் தான் இரண்டு வருடங்களுக்கு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை”, என்று கூறினாள். அதில் பெரிதாக விருப்பமில்லை என்றாலும் அவள் இப்போதுதான் படித்து ஒரு வேலையில் இருக்கிறாள் அதனால் அமைதியாக அவள் போக்குக்கே விட்டு பிடிக்கலாம் என்று எண்ணினர்.

சிவகாமி அன்று பேத்திகளுடன் நேரத்தை செலவழித்த ஆனந்தமாக இருந்தார். வேலினி மனம் மட்டும் திக் திக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. இதயத்துடிப்பு ஒவ்வொரு நொடிக்கும் எகிறி கொண்டிருந்தது. பாட்டி நன்றாக சிரிக்கிறார் அன்று போல் இன்றும் தன் திருமண பேச்சை தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

என்ன ஆகப்போகிறதோ என்று பதட்டம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. நடுவில் குருவிடம்ஒரு முறை பேசியிருந்தாள். அவனுடன் இயல்பாக பேச முடியாமல் மிக பதட்டமாக பேச, அவன் என்ன என்று துருவ ஆரம்பித்தாலும் இவள் எதுவும் கூறவில்லை.

மனது சரியில்லை ஏதோ போல் இருக்கிறது என்று ஒரு காரணத்தைக் கூறி துண்டித்து விட்டாள்‌. அதன் பிறகும் பாட்டியை மட்டுமே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். அவருக்கு உணவை பார்த்து பார்த்து பறிமாறியவள். அவர் போடும் பிபி சுகர் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து, சாப்பிட்டு அவர் உறங்கும் வரை அருகிலேயே இருந்தாள்.

உறங்கிய பின்னும் மற்றவர்கள் அவளை உறங்க கூற, எதுவும் கேளாதவளாக எங்கேயும் நகராமல் அவர் அருகிலேயே படுத்துக் கொண்டாள். இரவு முழுக்க கண் கண்விழித்து அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், அசதியில் காலை 3 மணிக்கு மேல் உறக்கத்தை தழுவினாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது அவளை தழுவிய உறக்கம், களைந்தது என்னவோ அவள் தாயின் அழு குரலில் தான்.

ஆம் சிவகாமி பாட்டி தன் உலக வாழ்வை முடித்துக் கொண்டு வானுலகம் சென்றிருந்தார். எத்தனை போராடினாலும் அவன் கொடுக்க வேண்டியதை கொடுத்துத்தான் ஆவான். எடுத்துக் கொள்வதையும் எடுத்துக் கொண்டுதான் ஆவான்.

அதனை தடுக்கவும் கொடுக்கவோ யாராலும் முடியாது என்பது எத்தனை உண்மை என்பது வேலினிக்கு சிவகாமி பாட்டியின் மரணம் சரியாக புரிய வைத்திருந்தது. எத்தனை பெரிய வரம் வாங்கி வந்தாலும் நாம் நேசிப்பவர்களின் மரணத்தை நம்மால் பிடித்து நிறுத்தவே முடியாது என்ற நிதர்சனம் வேலினியை நெற்றி பொட்டில் தாக்கியது

வேலினி இம்முறை தன்னை நன்றாக தேற்றிக் கொண்டாள். போன முறை தன் வருத்தம் மட்டும் பெரிதென எண்ணி மூலையில் முடங்கி இருந்தவள், வேலை போய் விடுமோ என்ற பயத்தில் வேலைக்கு திரும்பி இருந்தாள்.

ஆனால் இம்முறை அப்படி அல்லாமல் தன் குடும்பத்தில் இருப்பவர் அனைவரின் சோகத்தையும் கண்ணாற கண்டாள். அவர்கள் அனைவருக்குமே அது பெரிய இழப்பாக இருந்தது. ஆறுமுகத்திற்கு பெற்ற அன்னையின் இழப்பும், குழலினிக்கு தன் செல்ல பாட்டியின் இழப்பு கூடவே தெய்வானைக்கு தன்னை அன்னை போல் பார்த்துக் கொண்ட தன் அத்தையின் இழப்பு என்று அவர்களையும் அது உடைந்து போக வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

அவர்களை தேற்றும் பணியில் ஈடுப்பட்டாள். அவளுக்கு குருவும் உறுதுணையாக இருந்தான். பாட்டி இறந்த செய்தி கேட்டு முதல் ஆளாக வந்து நின்றவன் அவன் தானே. அவரை இறுதி யாத்திரை சரியாக நடக்க தந்தைக்கு தோள் தந்து நின்றான்.

சொந்தங்கள் இவன் யார் என்று கேட்ட போது ஆறுமுகம் குடும்ப நண்பர் என்று அறிமுகம் படுத்தி வைத்தார் அனைவரிடமும். உண்மையில் அவன் அந்த குடும்பத்தின் நலம் விரும்பி, அனைவரிடமும் தோழன் போல் தான் பழகுவான். வேலினி சடங்குகள் எல்லாம் முடித்து உறவுகள் எல்லாம் ஊர் திரும்பி, நான்கு நாட்களில் பணிக்கு திரும்பினாள்.

கல்லூரியில் ஒரு பக்கம் கடமை மறுபக்கம் வீட்டில் மற்றவர்களிடம் கவனிப்பு என்று நாட்களை நகர்த்த ஆரம்பிக்க, 30-வது நாள் சாமி கும்பிடும் நாளும் வந்தது. அன்றுஉ சிவகாமி பாட்டிக்கு படையல் வைத்து அனைவரும் சாமி வணங்கி விட்டு , கடைசியாக சிவகாமி பேசிக் கொண்டிருந்ததை பற்றி எண்ணித் கொண்டிருந்தார் தெய்வானை.

அப்போது தான், அன்று தானே ஜோசியரை பார்க்க சென்றோம் என்பதும் கூட நினைவு வந்தது. ஜோசியர் சொன்ன 31-வது நாள் நாளை தானே‌ என்று.

தெய்வானை அதிகம் எல்லாம் யோசிக்கவே இல்லை ஆறுமுகத்திடம் அன்றே கூறி, மறுநாள் அவரை அழைத்துக்கொண்டு ஜோசியரை பார்க்க சென்று விட்டார்.

அவர்கள் சென்றதும் ஜோசியர், “உங்களுக்காக தான் காத்திட்டிருக்கேன்” என்று கூறி அவர்களை வரவேற்க அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் இருந்து ஏதோ பெரிதாக வரப்போகிறது என்பது மட்டும் அவர்களுக்கு விளங்கியது, அதனால் அமைதியாக வேலினியின் ஜாதகத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு அமர்ந்து விட்டனர்.

வருவாள்….

மகாஆனந்த் ✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!