Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

19 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 19

.



Advertisement

 

“அப்பா காலேஜுக்கு போறேன் யாழி பேபி” என இரண்டு வயது மகளிடம் கொஞ்சி… கெஞ்சிக் கொண்டிருந்தான் கௌதமன். மகள் அசைவதாக இல்லை. ஃசோபாவில் அமர்ந்திருந்த மகளின் முகம் அந்த நீள சாய்வு இருக்கையில் புதைந்திருந்தது.

Advertisement

மகளின் தோளைத் தொட்டுத் திருப்ப முயன்றால் இன்னும் அடமாய் முகத்தை உள்ளுக்குள் புதைத்தாள்.

Advertisement

“ஊருக்கு முன்னாடி எழுந்து உக்காந்துகிட்டு… என்னவாம் உன் பொண்ணுக்கு?” மகனிடம் தேநீரைக் கொடுத்தவர், பேத்திக்கான ராகி மற்றும் தேங்காய்ப் பால் பானம் கொண்ட சிப்பரை நீட்டினார்.

Advertisement

மகள் அருகில் அமர்ந்தவன் தேநீரை அருந்திக் கொண்டே, “வேட்டி சட்டையைப் பார்த்து மேடம் கண்டுபிடிச்சுட்டாங்க. காலேஜ் போறேன்னு சொன்னா நம்பல. நானும் வரேன்னு அடம்…” எனக் கிசுகிசுத்தான்.

“கூட்டிட்டு போயிட்டு வா” என்றார் பேத்தியின் முதுகைப் பார்த்தவர்.

“ம்மா… கல்யாணம் முடிஞ்சதும் டிரெஸ்ச மாத்திட்டு காலேஜ் போறேன் மா.”

“வயசு ரெண்டாகுது. பிளே ஸ்கூல்ல போடுனா கேக்கறியா? அவளும் எவ்வளவு நாள் தான் தனியா விளையாடுவா?”

“பார்த்துட்டு இருக்கேன் மா… போடலாம். முதல்ல ‘பாட்டி’(potty) டிரெயின் பண்ணனும். அங்க எல்லாம் நேரத்துக்கு டையப்பர் மாத்தாட்டா குழந்தைக்கு ரேஷ் வந்துடும்” என்றவன் மகளைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டான்.

மகள் பிடிவாதமாக மடியிலிருந்து இறங்கி, மீண்டும் அதே இடத்தில் கைகட்டி அமர்ந்தாள்.

“இந்தா குடி” என சிப்பரை மகளிடம் நீட்டியவன், “அப்பா நிஜமா காலேஜ் போறேன். லேட்டானா டீச்சர் அப்பாவ திட்டுவாங்க. நீ சமத்தா பாட்டி கூட இருப்பியாம்… அப்பா சீக்கிரம் வந்துடுவேனாம்” என மகளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

“நானுக்கும் வன்னும்” என உதடு பிதுக்கி முறைக்கும் மகளை ஆசையோடு கண்கள் வருடின. அத்தனை அழகு அவன் மகள். ஈர விழிகளும், கொஞ்சும் முகமும், பிதுங்கிய பவள இதழ்களுமாக அவனையே முறைக்கும் அவன் மகளை என்ன செய்வது? முத்தம் ஒன்றை நெற்றியில் வைத்தான். நெற்றியிலிருந்து முத்தத்தைத் தட்டி விட்டாள் குழந்தை. கோபமாம்!

“கொழுப்ப பாரேன்” எனச் சிரித்த பாட்டியும் முறைப்பை வாங்கிக் கொண்டார்.

“இன்னைக்கு ஃபிரைடே… ஈவ்னிங் வந்ததும் ஐஸ்கிரீம் வாங்கப் போகலாம்” என்றது வேலை செய்ய ஆரம்பித்தது.

கன்னம் காட்டினாள் மகள். முத்தம் வைத்தவன், “ஐஸ் கிரீம் வாங்க பைக்ல போறோம்” என்றான்.

முகவாயை உயர்த்திக் காட்டினாள் மகள். குட்டி முத்தம் வைத்தவன், “அப்படியே பீச்” என்றான்.

கையை நீட்டினாள் குழந்தை. ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் கொடுத்தான். “தண்ணில விளையாடலாம்” என்றான்.

காலை அப்பாவின் முகத்திற்கு நேராக நீட்டினாள் கௌதமனின் செல்ல மகள். பாதம் பற்றி இதழ் பதித்தான் தகப்பன். அப்பாவின் மடி மீது ஏறி அமர்ந்தாள் யாழி. அப்பாவின் கன்னம் ஈரம் ஆனது. சிப்பரை வாங்கி வாயில் வைத்தாள்.

பார்த்து அமர்ந்திருந்த வைஷாலி, “இவ்வளவு அடம் ஆகாது டா” என எழுந்தார்.

“இவ அடமா…? இது கூட இல்லாட்ட எப்படி?” என்றான் புன்னகை மாறாது. “செல்லம் மா என் பொண்ணு. அறிவாளி!” என்றவனுக்கு யாழினியை பார்த்து பெருமிதமே. ஒரு வருடமாகக் கல்லூரிக்குச் செல்கிறான். “அப்பா டாடா” என முத்தம் கொடுத்து வழி அனுப்பும் குழந்தைக்கு இன்று தெரிகிறது அப்பா எங்கோ தன்னை விட்டுச் செல்கிறார் என்று. மகள் அறிவாளி தானே? தன்னோடு இருக்க விரும்பும் மகள் பாசக்காரி தானே? இதில் அடம் எங்கிருந்து வந்தது?

“நானும் இப்படித் தான் அப்பா பைத்தியமா இருந்தேனா மா?”  என அன்னையின் முகம் பார்த்தான்.

வைஷாலி, “நீ சின்னதுல இருந்தே என் பிள்ள. சும்மாவா கையில டேட்டூவ போட்டுகிட்ட?” என்றார் பெருமை கொள்ளாதவராய்.

அவன் அம்மாவைச் சமாதான படுத்த மட்டுமே பச்சை குத்திக் கொண்டான். அந்த மூன்று வார்த்தைக்கே அப்படி வலித்தது. வலியைத் தாங்க அன்றும் மூக்கு முட்ட குடுத்தானே. மார்பை ஒரு முறை வருடியவன், ‘இவன் யாருக்காக இதை இதயத்தில் வடித்திருப்பான்? இவ்வளவு வலிக்கு சொந்தக்காரி யாராக இருக்கும்?’ என நினைத்தவனால் பெருமூச்சு ஒன்றே விட முடிந்தது.

“என்ன டா பெருமூச்சு பலமா இருக்கு?”

“அப்போ என் பொண்ணு என்னை மாதிரி இல்ல!” என்ற வாக்கியத்தில் சலிப்பு இழையோடியது.

“இவ உன் பொண்ணே இல்ல டா” என முனகிக்கொண்டே வைஷாலி எழுந்து சென்றுவிட, கௌதமன் உலகம் நடுக்கம் கொண்டது நிஜம். “அம்ம்மா” என்றவனால் அதைச் சகிக்கவே முடியவில்லை. மகளைப் பார்த்தான், சிப்பி கப்பை வாயில் தொங்க விட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள். கேட்டிருக்காது எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டான்.

“மா… தூக்கத்தில கூட இனிமேல் இப்படிப் பேசக் கூடாது” என அன்னையிடம் கண்டிப்போடு கூறியவன், “கௌதமன் பொண்ணு யாரு?” எனக் கேட்டு, “யாழினியாள்” என்ற பதிலையும் மகள் மூளைக்குள் ஏற்றினான்.

“நீங்க உங்க அப்பா மாதிரி, பேபி.” என மகளுக்குப் போதித்தான்.

“ஆலி பேபி அப்பா மாடி” என அவள் அப்பா கூறியதை ஆமோதித்தாள்.

கேள்வி: குட்டி யாழி, அம்மாவைப் போலா? அப்பாவைப் போலா?

பதில்: என்ன கேள்வி இது? நூலைப் போல் சேலை. அப்பாவை போல் குட்டி யாழி.

கைப்பேசி ஒலித்தது. மகள் எட்டிப் பார்த்தாள். “பிக்கி மாமா” எனச் சிரித்தாள்.

“அவுச்! லேட் ஆகிடுச்சு. மாமா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. மாமாக்கு கோவம் வரபோகுது. அப்பாக்கு டாடா சொல்லுங்க” என எழுந்தான். கன்னத்தில் முத்தம் கொடுத்து, “டாடா அப்பா” என வழியனுப்பினாள் செல்ல மகள்.

திருமண மண்டபம்:

ஹே பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி

ஹே பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

கண்டத பேசி… டைம் வேஸ்ட் பண்ணாத

பையன் தங்கம்… மிஸ்சு பண்ணாத

மண்டபத்தைப் பாடல் நிறைத்தது. திருமண மண்டபம் விழித்து திருமண விழா நடை பெறுவதற்கான சகல அம்சங்களையும் பூசிக்கொள்ள ஆரம்பித்து மணித் துளிகள் கடந்திருந்தன. பூக்களால் எழுதப்பெற்றிருந்த மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் பெயரை ஏந்தியிருந்த ‘ராஜீவன் வெட்ஸ் ரசிகா’ என்ற பலகையை பார்த்தவாறே விக்ரமும் கௌதமனும் மண்டபத்தில் நுழைந்தனர்.

சோம்பலாக விக்ரம் கழுத்தை தேய்த்துக் கொண்டே பார்வையை அலையவிட்டான். காலை மூன்று வரை மண்டபத்தில் இருந்தவனுக்குத் தூக்கப் பற்றாக்குறை. “இங்க.. விக்ரம்” என்ற சத்தம் வந்த திசையை நோக்கி ஆண்கள் இருவரும் நடந்தனர்.

சொந்தபந்தங்கள் எனப் பெரிய குடும்பத்து விழா என்பதால் முன் இரவு திருமண வரவேற்புக்குக் கூட்டம் அலைமோதியது. விழா முடிந்து மணமக்கள் மேடையை விட்டு இறங்கும் பொழுது பதினொன்றாகி இருந்தது. இன்று காலை எட்டு மணிக்கு முகூர்த்தம் என்பதால் காலை ஐந்து மணிக்கு முன்பே மண்டபம் பரபரப்பைப் பூசிக்கொண்டிருக்கிறது.

ராஜீவனின் குடும்பம் துபாய் வாசம் என்றாலும் தமிழ் நாட்டில் அவர்கள் பக்க உறவுகள் அதிகம். போதாதற்கு, தமக்கை மான்வியின் திருமணம் முடிந்த பின் ராஜீவனின் கல்லூரி விடுமுறை நாட்கள் விசாகன் வீட்டில் என்பதால் அவர்கள் பக்க சொந்தங்களும் ராஜீவனுக்கு நன்கு பழக்கமே. இப்பொழுதும் இந்தியா வந்தால், தமக்கையின் வீட்டில் இரண்டு நாளாவது தங்காது செல்ல மாட்டான் ராஜீவன். சொந்தங்களில் எந்த விழாவென்றாலும் பெற்றவர்களோ இல்லை ராஜீவனோ கண்டிப்பாக வந்து செல்வது வழக்கம். இப்படியாக இந்தியாவின் தொடர்பைப் பிடித்தே வைத்திருந்தனர் ராஜீவனின் குடும்பம். இதனாலேயே, பெண் வீட்டினருக்குப் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் பக்கக் கூட்டம் திருமண வரவேற்புக்கு மண்டபத்தை நிறைத்திருக்க, இன்று அதைக் காட்டிலும் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தனர்.

ராஜீவனுக்கு சென்ற மாதம் வரையுமே திருமணம் செய்து வைக்கும் எந்த எண்ணமும் இல்லை பெற்றவர்களுக்கு. மகன் படித்த படிப்பு ஒன்றாயிருக்க, அவனோ படிப்புக்குச் சம்பந்தமே இல்லாது திரைப்பட உலகில் நுழையும் எண்ணத்தோடு கேமராவும் கையுமாக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறான். பெற்றவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், அவன் அதைப் பற்றி கவலை கொண்டதாகவே தெரியவில்லை.

“டைரஷ்னல இன்ட்ரெஸ்டா?” எனக் கேட்ட பெற்றவர்களிடம், “டைரஷன் இல்ல சினிமாட்டோகிராப்பி தான் விருப்பம்” என்றான். அவர்களுக்கு அவன் விருப்பம் புரியவில்லை. “பொழப்ப பாருடா…” என்றதற்கு, “இப்போ அதத் தான் பாக்குறேன்” என்றான்.

“எது? இப்படிக் கல்யாணத்துக்கு வீடியோ எடுக்கறதா? மானம் போகுது. வெளியில சொல்ற மாதிரி தொழில் செய்யலாமே” என்றதற்கும், “பேஷன் எதுவோ அதுல ஈடுபட்டா தான் முன்னேற முடியும்” எனத் தத்துவம் கூறினான் மகன்.

சினிமாட்டோகிராப்பியில் அவனுக்கென தனிப் பெயரைச் சம்பாதித்து இருக்கிறான் ராஜீவன். அந்த பெரிய பெரிய கேமிராக்களை அவன் கையாளும் விதமே தனித் தான். தற்சமயம் பெரிய பெரிய திருமண வைபவங்களுக்கு சினிமாட்டோகிராப்பி செய்வதால் வருமானம் ஒரு பொருட்டே இல்லை அவனுக்கு. இந்தத் துறையில் நல்ல எதிர்காலம் இருந்தாலும் அவன் இலக்கு வேறு.

காலம் கனியக் காத்திருப்பவனுக்குத் திருமணம் என்பதில் நாட்டம் இருக்கவில்லை. ஒரு முறை ஒருத்தியிடம் மனதைக் கொடுத்து… அதை அவள் சிதைத்து எனப் பட்டபின் பெண்கள் பக்கம் நட்புக்குக் கூட பேசுவதில்லை. வருமானம் ஈட்டி தந்தாலும் அவன் தொழிலில் பெற்றவர்களுக்கு விருப்பமில்லை. ‘வீடியோகிராப்பர்’ என்பதற்கும் ‘சினிமாட்டோகிராப்பர்’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவர்களை பொறுத்தமட்டில் அவன் திருமண வீட்டில் வீடியோ படம் எடுக்கிறான், அவ்வளவே. “பணம் சம்பாதிச்சா போதுமா… அதுல கிடைக்கிற மரியாதை முக்கியம் இல்லையா?” எனக் கேட்கும் பெற்றவர்களுக்கு அக்கு வேறு ஆணி வேறாக விளக்கியும் பிரயோஜனம் இல்லை.

ஆக… மகன் அவர்கள் அந்தஸ்திற்குத் தகுந்த வேலையில் இல்லை என்ற காரணத்தால் பெற்றவர்களுக்கு மகனின் திருமணம் பற்றிச் சென்ற மாதம் வரையுமே எண்ணமில்லை. காலத்தை வெல்ல யாரால் முடிகிறது? திருமணம் நேரம் அமைந்தது போலும், தோழியின் மகளை அவன் அன்னைக்குப் பிடித்துவிட ஒரே மாதத்தில் பேசி முடித்து திருமணம் வரை வந்துவிட்டது.

விடுமுறைக்கு துபாய் சென்றிருந்த ரசிகாவின் குடும்பத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த விலாசினிக்குத் தோழியைப் பார்த்த ஆனந்தம். வீட்டிற்கு அழைத்துச் சென்றார் விலாசினி. இருபத்தி ஐந்து வருட விட்ட கதைகளைத் தோழிகள் பேசி தீர்த்தனர். மகள், மான்வியைப் பற்றின பேச்சு வர, களஞ்சியம் கல்லூரியின் உரிமையாளர்கள் தங்கள் சம்பந்தி என்பதைக் கூற, தோழியின் புருவங்கள் உயர்ந்தன. அதன்பின் பேச்சினோடே வந்தது ரசிகா மற்றும் ராஜீவனைப் பற்றிய விபரங்கள். பேச்சு பிள்ளைகளின் படிப்பைத் தாண்டி திருமணம் பக்கம் சென்ற சில பல நிமிடங்களில் இருவரும் சம்பந்திகளாக விருப்பம் கொண்டனர்.

விருப்பம் இரு குடும்பத்தினரோடும் பகிரப்பட்டது. மகனுக்கு ஒழுங்கான வேலை இல்லை என மோகனுக்கு வருத்தம் என்றாலும், அவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை. சொந்தத் தொழில். நல்ல வருமானம். அவன் துறையில் அவனுக்கென்று ஓர் இடமும் பெயரும் இருக்க, ராஜீவனை விட ரசிகா குடும்பத்திற்கு மனமில்லை. இரு குடும்பத்தினருக்கும் தடை ஏதும் இல்லை என்பதால், சம்பந்திகளாக முடிவெடுத்தனர்.

குடும்பம், இரு வாரங்கள் முன்பே சென்னைக்கு வந்திருக்க, தொழிலின் காரணமாக ராஜீவனால் சில தினங்கள் முன்பு தான் சென்னைக்கு வர முடிந்தது.

 வந்திறங்கிய நிமிடத்திலிருந்தே நிற்க நேரம் இல்லாது ‘திருமணச் சடங்கு’ என அவனை ஒருவழியாக்கினர். இன்பமாகவே அவர்களின் இம்சைகளுக்கு எல்லாம் இணங்கினான் ராஜீவன். காதல் முறிவு என்பது இப்பொழுதெல்லாம் சகஜமாகியதாலோ இல்லை அதிலிருந்து வெளிவர அவனுக்குப் போதிய அவகாசம் இருந்ததாலோ இந்தத் திருமணத்தில் ராஜீவனுக்கு முழு விருப்பமே.

திருமணத்திற்கென்றே பெரிய வீடொன்றை ஒரு மாதத்திற்கு வாடகை எடுத்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர். இன்று, சொந்த பந்தங்கள் நட்பு வட்டங்கள் என அந்த பெரிய வீடு சிறிதாகியிருந்தது. ஒரு வாரம் முன்பே வந்திருக்கலாமோ என எண்ண வைத்தனர் சுற்றி இருந்த இளமை கூட்டம். கான்பூரில் கல்லூரிப் படிப்பை முடித்து துபாய்க்கு சென்றபின் ராஜீவன் வாழ்வில் இப்படியான இனிமையும் சிரிப்பும் இந்தத் திருமணத்தை ஒட்டித் தான். தினங்கள் இரு நொடிகளாகக் கடந்திருக்க, நேற்று காலையில் பெண் மாப்பிள்ளையின் நிச்சயம் இதே மண்டபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

நிச்சயம் முடிந்து சில பல சாங்கியங்கள் முடிய… திருமண வரவேற்பும் ஆரம்பமானது. விசாகன் பக்க ஆட்களும், மோகன் பக்க ஆட்களும் மட்டுமே தெருவில் நெரிசலை உருவாக்கி இருக்க, பெண் வீட்டினர் பக்கக் கூட்டமும் மிக அதிகம். மாலை ஆரம்பித்த வரவேற்பு விழா முடிந்து படுக்கையில் அக்கடா என விழுந்த வேளை திருமண நாளும் ஆரம்பித்திருந்தது.

நான்கு மணி நேரமாவது தூங்கக் கிடைத்ததே என ராஜீவன் நிம்மதியோடு கண்மூடி, இதோ… ஐந்து மணிக்கு எழுந்து கையில் இருக்கும் காபி கோப்பையோடு மாடி அறைக்கு வெளியே நின்று மண்டபத்தின் பரபரப்பை வேடிக்கை பார்த்து நிற்கிறான்.

காபி கோப்பையைக் கொடுத்துச் சென்ற யசோவின் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது. வந்த நாளில் இருந்தே இவளைப் பார்க்கிறான். ஒருவரிடமும் பேசுவதில்லை. புன்னகை மன்னி போல் பார்ப்பவரிடம் புன்னகையை மட்டுமே சிந்துகிறாள். அக்காவின் வீட்டில் முன்பு பார்த்த நினைவில்லை.  ஆனால் விசாகன் வீட்டில் மகளைப் போல வலம் வருகிறாள். இப்பொழுதும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்கிறாள். இரண்டு வயதைத் தாண்டிய ஆத்விக்கும் “அத்தமா” என அவள் பின்னாலேயே சுற்றி வருகிறான். விசாகன் வீட்டுப் பக்க உறவாக இருக்க வேண்டும்.

நேற்று மாலை நடந்தேறிய வரவேற்பு விழாவில், இசைக் குழுவின், இசை மண்டபத்தை நிறைத்திருந்தது. மான்வி அடமாய் இவளை மேடை ஏற்றி விட, இவள் இரு பாடல்களுக்குப் புல்லாங்குழல் வாசித்தாள். மேடையில் நின்றிருந்த ஜோடிக்காக அவள் வாசித்ததை மிக மிக ரசித்தான் ராஜீவன். மூன்று நாட்களின் முப்பது முறையேனும் நேரில் பார்த்திருப்பான்… ஒவ்வொரு முறையும் அழகான ஒரு புன்னகையைச் சிந்திச் செல்வாள். மழை நின்ற பின்னும் தென்றலுக்குச் சாரலோடு கொட்டும் சரக்கொன்றை போல் புன்னகையைச் சாரலெனச் சிதறவிட்டுச் செல்வாள். அவனுக்கு அவள் புன்னகை சாரலாகத் தான் தோன்றியது. இன்றும் அப்படித் தான் அவள் சாரலில் நனைந்து நிற்கிறான்.

அவன் மனைவியாகப் போகும் ரசிகா கடைசியாக எப்பொழுது இப்படித் தன்னை பார்த்துப் புன்னகைத்தாள்? மாடியில் இருக்கும் தன் அறைக்கு நேர் எதிர் அறையை மணப்பெண்ணுக்கு கொடுத்திருக்க, அவன் கண்கள் அந்தப் பக்கம் சென்றன. அங்கும் ஆட்கள் வருவதும் போவதுமாகப் பரபரப்பாகவே இருந்தது. துபாயில், அம்மாவின் தோழி மகள் எனப் பார்த்துப் பேசியது. பேசப் பழகச் சுலபமாக இருந்தாள்.

அன்று, சிரித்தாள்… சிரிக்க வைத்தாள். அதனால் அவளோடு பேசப் பிடித்தது. “சுற்றிப் பார்க்க என்னோடு வாயேன்” என அவள் மூக்கு சுருக்கி கேட்கவும் மறுக்காது போகத் தோன்றியது. அன்று முழுவதும் அவளுக்கு இடங்களைச் சுற்றிக் காட்டினான். அன்றைய ஒரு நாள் பழக்கம் மட்டுமே அவளோடு. அம்மாவின் தோழி மகள் என்ற எண்ணத்தோடு மட்டுமே அவளோடு நேரம் செலவழித்தவன், தன் வாழ் நாள் முழுவதும் அவளோடே என்றபோது யோசனை தான் அவனுக்கு. “இப்போதைக்குத் திருமணம் வேண்டவே வேண்டாம்” என்றான்.

விலாசினிக்குத் தோழியின் சம்பந்தத்தை விட மனம் இல்லாது நித்தம் மகனிடம் ‘திருமணக் கோரிக்கையை’ வைத்தார். “இப்பவே எதுக்கு மா கல்யாணம்?” எனப் பேசி பார்த்தான். விலாசினி கேட்பதாக இல்லை. “நல்ல குடும்பம் டா ராஜீவா. பொண்ணும் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு டா” என மகனின் மூளையைச் சலவை செய்வதிலேயே முனைப்பாக இருந்தார். கரைப்பார் கரைக்கக் கல்லும் கரைந்தது.

“அந்த பொண்ணுட்ட பேசிட்டு சொல்றேன்” என்றவன், பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கும் முன்பே “உனக்கு ஓக்கேவா?” என ரசிகாவிடம் கேட்டான்.

“ஓக்கே” என்ற பின்பே அவனும் “உங்க இஷ்டம் மா” எனத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

இரு குடும்பத்தினருக்கும் இடையே திருமணப் பேச்சு ஆரம்பமானது. அதன்பின் ஓரிரு கைப்பேசி உரையாடல்கள் நடந்தேறியது. மடை திறந்த வெள்ளம் போல் இல்லை என்றாலும் தயங்கித் தயங்கி பேசினாள் ரசிகா. பெண்களுக்குத் திருமணம் என்றதும் வெட்கம் எங்கிருந்து தான் வருகிறதோ இவனுக்குப் புரியவில்லை. நேற்று அவளைக் கைபிடித்து மோதிரம் போட்ட போதும் பெண் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. மெல்லச் சிரித்துக் கொண்டான்.

‘நீ என்னைப் பார்த்தால் ஒழிய நான் மோதிரம் இடுவதில்லை’ என்பது போல் பற்றிய கரமும் மோதிரமுமாக அவள் முகம் பார்த்து நின்றிருந்தவனை அவள் பார்த்த பின்பே மோதிரம் அணிவித்தான். இவன் புன்னகைக்க அவளும் புன்னகைத்ததாக நினைவு. ஆனால்… அது சாரலாக அவனைத் தாக்கவில்லை என்பதே நிஜம்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!