விடியற்காலை ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்துவிட்ட ஆரதி, வலப்பக்கம் இருக்கும் குளியலறைக்குள் நுழைந்து பேருக்கேன… காக்காக் குளியல் போட்டுவிட்டு வெளி வந்தவள் அடுத்ததாக நின்றது… நிலைப்பேழை கண்ணாடி முன்பு தான். கண்ணாடியில் தன்னை பார்க்க எண்ணிய விழிகளில் விழுந்தது என்னமோ கண்ணனின் புகைப்படம்தான். அதன் பின்னே தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்தவள்…. இரவு உடையை அணிந்து கொண்டு தன் அறையை நோக்கி ஓடினாள். ‘ஐயோ யாராவது பார்த்தா என்ன ஆகுறது. இப்படியா பண்ணுவ ஆதி. இது மட்டும் அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் நம்ம.’ மனசாட்சியோடு பதறியவள் தன் அறைக்குள் வந்து நிலைப்பேழையை திறந்து அதிலுள்ள டுனிக் டாப்ஸ் அதற்கு பொருத்தமாக டெனிம் லெக்கிங்ஸ் எடுத்த அணிந்து கொண்டாள். அடுத்ததாக தலைமுடியை டிரையர் கொண்டு காய வைத்து… அரை வகுடு எடுத்து விட்டு காதோரமாக ஒருபக்க முடி எடுத்தவள் அதை முறுக்கி சிறு கிளிப் கொண்டு நிறுத்தினாள். அலைபோல் மேலெழும்பி இருந்த இரு புருவத்துக்கும் சமாதான பாலமாக சிறு கருப்பு நிற பொட்டு இட்டவள் ஒரு முறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துவிட்டு தன் அறையை விட்டு கீழே சென்றாள்.
“வாங்க ! வாங்க ! மகாராணி… என்ன இவ்வளவு சீக்கிரமா எழுந்து வந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்’ல. பாவம் நேத்து ரொம்ப களைச்சுப் போய் வந்தீங்க. உங்களுக்காக வீட்டில சேவை செய்யவே மகாலட்சுமி னு ஒருத்தர் இருக்காங்க. அப்புறம் எதுக்கு நீங்க வீணா எந்திரிச்சு வரீங்க. நீங்க இருக்க இடம் தேடியே எல்லாம் வருமே. போங்க மகாராணி போயி உங்க அறையிலே ஓய்வெடுங்க.” என்ற சித்து விற்கு,
“நீ என்ன சொன்னாலும் நான் இந்த வீட்டு மகாராணி தான். வேணும்னா அத்தை மாமா கிட்ட கேட்டு பாரு. பேசாம போடுற சாப்பாட்டை தின்னுட்டு அமைதியா இரு. இல்லை’ன்னா அடுத்த வேளை சோத்துக்கு நீ ஹைகோர்ட்டில் ல நிற்க வேண்டியதுதான்.” என்றவள் திரும்பி தன் அத்தையிடம், “ஏன் அத்தை இவனுக்கு சாப்பாட்டை கொஞ்சம் கம்மி பண்ண கூடாதா. மிச்சமிருக்க எதையும் விட்டு வைக்காம தின்னு தின்னே இந்த மாதிரி வாய் கொழுத்து போய் பேசுறான். ” ஆரதி.
“அவன் அப்படி தான்டா சும்மா எதையாவது பேசிட்டு இருப்பான். நீ வா வந்து டீ குடிச்சிட்டு சாப்பிடு.” என்று மகாலட்சுமி அழைக்க
“வாடா தின்றதுக்கே பொறந்தவனே… நான் வரணும்னு தானே இன்னும் சாப்பிடாம இருக்க. வா வந்து கொட்டிக்கோ.” என்ற ஆரதியின் தலையில் கொட்டியவன் ..
“உனக்காக ஒன்னும் வெயிட் பண்ணிட்டு இல்லை. நான் சாப்பிடுற நேரம் இதுதான் நீ வந்து கொட்டிக்கோ வா…!” சித்தேஷ்.
“சித்து எதுக்குடா பிள்ளையை அடிக்கிற. ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க.” என்றவர் இருவருக்கும் பரிமாற…. கவனம் முழுவதும் சித்துவிடும் வைத்திருந்த ஆரதியின் நாசியில்… நெய் மிதக்க மிளகு களால் அழகு படுத்தி வைத்திருந்த வெண்பொங்களின் வாசனை வர..அரைநொடி திடுக்கிட்டவள் அவசர அவசரமாக அருகில் இருக்கும் இரண்டு சுடு பெட்டிகளையும் திறந்து பார்க்க…. அதில் அவள் நினைத்தது போலவே வெண்பொங்கல் காட்சி அளித்தது.
வெண் பொங்கலை கண்டவளின் கண்களில் பல நட்சத்திரங்கள் மின்ன… தன் அத்தையிடம் திரும்பியவள் அவசரமாக “அத்தை! எனக்கு சாப்பாடு வேணாம். இவன் கிட்ட பேசினதுல மறந்தே போயிட்டேன். இன்னைக்கு நான் ஆபிஸ்க்கு போகணும். 10 மணிக்குலாம்… ஆபீஸ்ல வர சொல்லி இருந்தாங்க. ” என கூற மகாலட்சுமியோ, “என்னடா சொல்ற. நீ தானே நேத்து ராத்திரி சொன்ன ..வேலைக்கு போக இன்னும் மூன்று நாள் டைம் இருக்குன்னு. இப்போ இப்படி சொல்ற.”
என்ன பதிலளிப்பதென்று தெரியாமல் முழித்த…. ஆரதியை பார்த்த சித்து, “அம்மா! ஏதோ வேலை இருக்குன்னு சொல்லுறா போய்ட்டு வரட்டும்.”
“நான் போக வேணாம்’னா சொல்றேன். எதுவா இருந்தாலும் இரண்டு வாய் சாப்பிட்டு போகட்டும்.” மகாலட்சுமி.
“இல்லை அத்தை. நான் போயிட்டு ஒரு.. ஒரு மணி நேரத்துல வந்துருவேன். வந்து சாப்பிடுறேன்.” என மகாலட்சுமி முகத்தை கூட பார்க்காமல் அறைக்கு ஓடியவள்…. தன் கைப்பையை எடுத்துக்கொண்டு , சித்துவின் அறைக்குள் நுழைந்து அவனது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு, வேகமாக வாசல் நோக்கி செல்ல… “ஆதி! சித்துவே உன்னை கூட்டிட்டு போவா நில்லு மா…” என்றவரின் கத்தலை காதில் வாங்காதது போல் வாகனத்தை இயக்கி பறக்க தயாரானாள் ஆரதி.
‘எப்படி மிஸ் பண்ணோம். எப்ப வந்தான்’னு ஒன்னுமே புரியலையே. என்னை பார்த்து இருப்பானா? நான் வந்தது தெரியும் தானே. அப்போ கண்டிப்பா பார்த்திருப்பான்.’ என்றவள் திடீரென சடன் பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்த…. ‘ஐயையோ…. ஒருவேளை என்னை அவன் ரூம்ல பார்த்திருப்பானா! போச்சு போச்சு எல்லாமே போச்சு. அவசரப்பட்டு கிளம்பி வந்துட்டோமோ. பேசாம வீட்டிலேயே பார்த்திருக்கலாம். இப்ப திரும்பிப் போலாமா வேணாமா. போன அத்தை கிட்ட என்ன சொல்றது. ஐயோ !அந்த சித்து வேற கேள்வி கேட்டு கொல்லுவானே. எல்லாம் என் நேரம். ஒருவேளை வீட்டுக்கே வரலையா? இல்லன்னா காலையில ஏதாச்சும் சம்பவம் நடந்திருக்குமே. ஹான்!! அப்போ நம்ம ஆளு வீட்டுக்கு வரல. நம்ம போய் பாக்கறது தான் சரி.’ என்று அவளே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டவள் புறப்பட்டாள்… டெபுடி கமிஷனர் அலுவலகத்திற்கு.
“நான் பெங்களூர் போயிருந்த இந்த நாலு நாள்ல ஒரு மாற்றமும் நடக்கல அப்படி தானே சொல்றீங்க. சரி! இருந்துட்டு போகட்டும். ஆனா, யார் யார் என்னென்ன வேலை பார்த்து இருக்கீங்க இந்த நாலு நாள் னு முழு தகவலும் எனக்கு உடனே வேணும். அது எப்படி இவ்வளவு சாதாரண பதில் சொல்றீங்க. ராபர்ட் மேல மட்டும் இப்ப வரைக்கும் இருபதுக்கும் மேல கொலை வழக்கு இருக்கு. இத்தனை கொலைகளை பண்றவன் பின்னாடி சப்போர்ட் இல்லாம இருக்குமா என்ன? சொல்லப்போனா இங்க இருக்கவங்களே அவனுக்கு உதவி செஞ்சுட்டு இருப்பீங்க. இப்ப வரைக்கும் எப்படி இருக்கோ எனக்கு அதை பற்றி கவலை இல்லை. இனிமே எதுவா இருந்தாலும் என் பார்வைக்கு கண்டிப்பா வரணும். அந்த ராபர்ட்டை பிடிச்சே ஆகணும். மேலிடத்திலிருந்து அவ்ளோ பிரஷர். கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. இன்னைக்கு கமிஷனர் கூட மீட்டிங் வேற இருக்கு. ஏற்கனவே அந்த ஏசி என்னை எப்படா வேலையை விட்டு அனுப்பலாம்’னு பார்த்துட்டு இருக்காரு. இந்த கேஸ்ல சின்னதா அவருக்கு சாதகமாக கிடைச்சா போதும். மொத்தமா என் வேலைக்கு வேட்டு வைச்சிடுவாரு. இனிமே ராபர்ட் கேஸ் என்னோட மொத்த கண்ட்ரோல் ல வரணும். ” என காவல் உடை அணிந்த கம்பீர சிங்கமாய் தன் கீழிருக்கும் காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தான் சென்னையின் இளம் டெபுடி கமிஷனர் திரு. ஆழிகண்ணன்.
ஆழிக்கண்ணன் பேச்சை நிறுத்த… அதுவரை அனுமதி கேட்டு வெளியில் நின்றிருந்த காவலாளி உள்ளே வந்து.. “சார் உங்கள பார்க்க ஆரதி னு ஒரு லேடி வந்திருக்காங்க.” என்றதும்,
சிங்கமென உரையாடிய முகம் பாலைக் கண்ட பூனையாய் மெல்ல கல்மிஷம் கூட……. ‘வந்துச்சா வீரமங்கை. இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்’னு எதிர்பார்த்தேன். வீரமங்கை வேகத்தைக் கண்டு வியக்க.’என்று உள்ளுக்குள் குதித்தவன் வெளியில்… அமைதியாக “யாராயிருந்தாலும் இப்ப பார்க்க முடியாது சார். வெயிட் பண்ண முடிஞ்சா வெயிட் பண்ணச் சொல்லுங்க. இல்லனா நாளைக்கு வர சொல்லுங்க.” என்றுவிட்டு தன் வேலையை பார்க்க,
ஆழிக்கண்ணனின் பதிலை கேட்ட ஆரதி சோகமாக காத்திருக்க…. நேரமும் பதினொன்றை கடந்தது. சோகம் கோவமாக மாற…. ஆழிக் கண்ணனின் அறை நோக்கி சென்றவளை காவல் அதிகாரி தடுத்து நிறுத்த…
“சார்! என்னை அவருக்கு நல்லா தெரியும். வேற யாராச்சும்’னு நினைச்சி வெயிட் பண்ண சொல்லி இருப்பாங்க. ” என்றவளின் பதிலில்… கடுப்பாக பார்த்த அதிகாரி,
“உன் பேர் ஆரதி ன்னு சொல்லி தான் கேட்டேன். யாரா இருந்தாலும் வெயிட் பண்ண சொல்லுங்கன்னு சார் தான் சொன்னாங்க. அதனால இங்கேயே இருங்க . சார் கூப்பிடாம உள்ளே போகக்கூடாது.”
“ப்ச்ச்..! நீங்க தள்ளுங்க நானே பேசுகிறேன்…” என்றுவிட்டு ஆழி கண்ணனைக் காணச் செல்ல, அப்பொழுதுதான் தனது குழு கலந்துரையாடலை முடித்துவிட்டு அனைவரையும் கிளம்ப சொல்லி கொண்டிருந்த ஆழிக்கண்ணன்
சட்டென கதவு திறக்கப்படும் ஓசையில் திரும்ப, அது ஆரதி என உணர்ந்தவன் அனைவரையும் வெளியேற்ற…..
“யாரைக்கேட்டு உள்ள வந்த? இப்படித்தான் பர்மிஷன் கேட்காம வருவியா..! “
“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது”
“உன்னை யாரு வெயிட் பண்ண சொன்னது”
“எப்ப ஊரிலிருந்து வந்த…”
“யாரைக் கேட்டு உள்ளே வந்த’ன்னு கேட்டேன். முதல்ல அதுக்கு பதில் சொல்லு.”
“ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
“அதுக்கு….”
கோபமாகிய ஆரதி “இப்போ உனக்கு என்ன…. எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கிறது. நான் தான்னு தெரிஞ்சும் வெயிட் பண்ண வச்சிருக்க. சாப்பிடாம கூட வந்திருக்கேன்.” என்றவள் முறைப்பாக அவனைப் பார்க்க….,
“ஏய்!!! இப்ப எதுக்குடி கத்திட்டு இருக்க. உன்னை நானா சாப்பிடாம கூட வர சொன்னேன். இது என்ன உன்னோட வீடா. மீட்டிங் நடக்குது னு…. வெயிட் பண்ண சொன்னேன். எனக்கு என்னோட வேலைதான் முக்கியம். அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம். வேலை நடக்குற நேரத்துக்கு வந்துட்டு…. கத்திக்கிட்டு இருக்க. முதல்ல உன்னை யாரு கிளம்பி வர சொன்னது… போ இங்கிருந்து…” என்றவனின் பேச்சிற்கு பதில் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டாள் ஆரதி.
‘இவனுக்கு மட்டும் தான் வேலை இருக்கு. நான் சும்மா வெட்டியா வெட்டுக்கிளியை பிடிச்சி விளையாடிட்டு இருக்கேன். எனக்கு தேவைதான். கோலி கண்ணனுக்கு கொழுப்பு ரொம்ப. வீட்டுக்கு தானே வருவ வா….. பேசின வாய்ல காலைல வச்ச பொங்கலாலையே அடிக்கிறேன். டிபி வந்தவன் கிட்ட… டீ விக்கிறவன் மாதிரி இருந்துட்டு இவன் டெபுடி யா பெரிய டெபுடி. அங்கயே நல்லா திட்டுட்டு வந்திருக்கணுமோ…. தப்பு பண்ணிட்டியே ஆதி தப்பு பண்ணிட்டியே. நீ கேட்கிற கேள்வி ல இனி அந்த கோலி கண்ணன்….. உன்னை எங்க பார்த்தாலும் சலாம் போட்டு குனிஞ்சி நின்னிருக்கணும். உன்னோட வீரம்’லாம் எங்க போச்சு ஆதி. போயும் போயும்…. இவன் கிட்டையா அசிங்கப்பட்டு நின்ன. இன்னைக்கு வரட்டும் வீட்டுக்கு. நாளைக்கு அவனே….. என்ன கூட்டிக்கிட்டு அவன் ஆபீஸ்க்கு போகல… நான் ஆரதி இல்லை. ச்சே! இவனை நம்பி சாப்பிடாம கூட வந்துட்டோம். இதுக்குத்தான்… என்ன நடந்தாலும் சோறு தான் முக்கியம் ன்னு சொல்றாங்க போல. ஐயோ! என்னை இப்படி நடு ரோட்டுல வண்டி ஓட்டிக்கிட்டு புலம்ப வைச்சிட்டானே…..’ என மனதில் கண்டபடி ஆழிக் கண்ணனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஆரதியை தடுத்து நிறுத்தியது…. போக்குவரத்து சமிக்ஞை ( signal).
மஞ்சள் நிறத்தில் இருந்து… பச்சை நிறத்திற்கு மாற இன்னும் சில நொடிகளே இருக்க, ஆரதி தன் இரு சக்கர வாகனத்தை இயக்க தயாராகிக் கொண்டிருந்த நேரம்….. அவளின் பின்னிருக்கையில் திடீர் சுமை கூட…. திரும்பிப் பார்த்தாள்.
“என்னை என்ன பார்த்துட்டு இருக்க வண்டியை எடு.. எல்லாரும் போயிட்டாங்க . நீ மட்டும் நடுரோட்டுல நல்லெழும்பை பார்த்த மாதிரி வாய பொளந்துகிட்டு இருக்க…” இன்று ஆழி கூற, இடமறிந்து அமைதியாக வாகனத்தை இயக்கிய ஆரதி சிறிது தூரம் சென்றதும் இயக்கிய வாகனத்தை நிறுத்திவிட்டு, அவனைக் காண……
“மிஸ்டர் எடுபிடி….
“ஏய் ஆதி!!! “
“சாரி! சாரி! டெபிடி ….. உங்களுக்கு இப்போ வேலை இல்லையா. எதுக்காக இப்படி அடுத்தவங்க வண்டில வெட்கமே இல்லாம இடம் பிடித்து உங்க பொன்னான நேரத்தை…. வீணா கிட்டு இருக்கீங்க…” என்ற அவளுக்கு,
“என்ன பண்ண ரிப்பேரு…. சரி சரி முறைக்காத…. ரிப்போட்டருருரு… இன்னைக்கு என்னோட பொன்னான நேரத்தை இந்த பொண்ணுகிட்ட செலவு பண்ண சொல்லி விதி இருக்கு போல…” என்று பதில் அளித்துவிட்டு வாகனத்தை இயக்க முயற்சிக்க…. அவனது செயலை அறிந்தவள் பேசாமல் வாகனத்தை இயக்கினாள்.
“ஆதி நல்ல ஹோட்டலா பாத்து நிறுத்து.”
“இல்ல எனக்கு பசிக்கல நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன்.”
“நீ எங்கேயாவது சாப்பிடு டி எனக்கு என்ன… நான் இன்னும் சாப்பிடல அதுக்காக தான் நிறுத்த சொன்னேன். ஹோட்டல் க்கு தான் போக சொன்னேன் . உனக்காக இல்ல.. பேசாம போ.”
“நம்பிட்டேன் எடுபிடி”
எடுபிடி ரிப்பேரு…. பேசுற மீதியை நாளைக்கு பார்ப்போம்.