கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்த கண்ணன் அங்கு இருப்பவரிடம் விசாரித்து ரிப்போர்ட்டை கையில் எடுக்க, ஏனோ அத்தனை நடுக்கம் அவன் கைகளில். அன்று அதை கையால் எடுக்கும் பொழுது ஏற்பட்ட அதே உணர்வை இன்றும் உணர்ந்தான். மெல்ல முதல் அட்டை பக்கத்தை பிரித்து படிக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் கேள்வியாக படித்தவனின் பார்வை மேலும் முன்னேற, விழிகளின் பாவை அசையாமல் அப்படியே நின்றது. அதிர்ச்சியில் பார்வை இழக்கும் அளவிற்கு அப்படி ஒரு அதிர்வு. கருவிழிகள் ஆயிரம் மடங்கு பெரிதாகி நான் படித்தது உண்மையா என சந்தேகித்து, உண்மைதான் என்பதை அறிந்து இயல்புக்கு திரும்பாமல் அதே நிலையில் நின்றது.
ஒரு போலீஸ்காரனின் வாழ்வில் ரத்தமும், சூழ்ச்சியும், அருவருப்பும், ரகசியமும் புதிதில்லை. ஒவ்வொரு காவல்துறை காவலர்களும் நாளுக்கு ஒன்று என ஒரு சடலத்தை கைப்பற்றுகிறார்கள். அத்தனையும் ஏதோ ஒரு வகையில் அதிர்வு என்றால்… இது பேரதிர்வு.
அதிர்ச்சியில் அப்படியே நிற்கும் கண்ணனைக் கண்ட அதிகாரிகள் கையில் இருப்பதை வாங்கி பார்க்க அவர்களுக்கும் அது அதிர்வாகத்தான் இருந்தது. சில நொடிகளில் தங்களை மீட்டுக் கொண்ட அதிகாரிகள் கண்ணனிடம் ” என்ன சார் இது” என்று அதிர்ச்சியோடு கேட்க,
“கர்ப்பப்பை”
” இது எப்படி சார் ராபர்ட் டெட்பாடி கூட..”
மனமும் உடலும் பதில் சொல்ல மறுத்தது. அங்கிருப்பவர்கள் கண்ணனை தொட்டு சுய நினைவிற்கு கொண்டுவர, “அந்த இடத்துல திரும்பவும் சர்ச் பண்ண சொல்லுங்க சார். வேற ஏதாச்சும் ஒரு சடலம் இருக்கான்னு பார்க்க சொல்லுங்க. நிச்சயமா அங்க இன்னொரு ஒரு டெட்பாடி இருக்கு.”
“என்ன சார் இது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா.. ராபர்ட் பின்னாடி ஒரு மர்மமா இருக்கு.”
“தெரியல சார். இன்னும் எடுத்த கேஸையே முடிக்க முடியாம இருக்கோம். இதுல சம்பந்தமே இல்லாம இது எப்படி ராபர்ட் டெட் பாடியோட வந்துச்சு. நீங்க அந்த இடத்துல தேடுதலை ஆரம்பியுங்க. நான் அந்த மருத்துவரை பார்த்து பேசிட்டு வரேன்.”
அடுத்த 40 நிமிட பயணத்தில் கண்ணன் மருத்துவரை அணுகி இருக்க, “உண்மைதான் சார். முதல்ல எங்களாலையே நம்ப முடியல. ஒரு ஆணோட இது எப்படி சேர்ந்து இருக்க முடியும். அதனாலதான் இத தெளிவு படுத்திக்க கொஞ்சநாள் தேவைப்பட்டுது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஆணுக்கு மாதவிலக்கு வரதா கேள்விப்பட்டிருப்போம். அந்த மாதிரி ஏதாச்சும் இருக்கும்னு யோசிச்சுதான் ஆராய்ச்சியில ஈடுபட்டோம். ஆனா அந்த கர்ப்பப்பைக்கும் ராபர்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணோட சம்பந்தப்பட்ட கர்ப்பப்பை. சில மாதங்களுக்கு முன்னாடி… இத எடுத்திருக்காங்க. எடுத்ததும் பாலிதீன் கவர்ல மண்ணோடு சேர்த்து இந்த கர்ப்பப்பையும் வச்சி இருக்கமா கட்டி இருக்காங்க. அதுக்கு மேல ரெண்டு மூணு பாலிதீன் கவர் சுத்தி தண்ணியில எறிஞ்சு இருக்காங்க. குறைந்தது ஒரு மூன்று மாசமாவது இருக்கும். கூவ தண்ணியில ஊறிப்போய்… மீன்களோட தாக்குதலால பாலிதீன் கவர் ஊறி உதிர ஆரம்பித்து மண்ணோடு சேர்த்து அழுக ஆரம்பிச்சிருக்கு. கிட்டத்தட்ட இது பசை மாதிரி மாறி இருக்கு அழுகி. தண்ணியோட தண்ணியா நகர்ந்து வந்து இந்த டெட்பாடி கூட சேர்ந்து இருக்கலாம். ஏற்கனவே ராபர்ட் உடம்பு அழுகிய நிலைக்கு உருவாகியிருக்க இது அதோட ஒட்டி இருக்கும். இன்னும் ரெண்டு மூணு நாள் போயிருந்தா ஒருவேளை மீண்டும் தண்ணியோட தண்ணியா எங்கேயாவது நகர்ந்திருக்கும். எங்களுக்கு இந்த கூறாய்வு ரொம்பவே ஷாக்கிங் தான் சார். நிச்சயமா நினைச்சு பார்க்கலை. இது யாரோடதுன்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதே இடத்துல கண்டிப்பா வேற ஒரு டெட்பாடி இருக்கலாம்.” ரிப்போர்ட்டாக கொடுத்ததை மருத்துவர் வாய் விட்டு மீண்டும் ஒருமுறை கூறிக் கொண்டிருக்க, கேட்டுக்கொண்டிருக்கும் கண்ணனுக்கு தான் இன்னும் வெளிவர முடியவில்லை. சுரமே இல்லாமல் அவரிடமிருந்து அனுமதி பெற்று கிளம்பியவன் நேராக சென்றது அடையாறின் கூவம் ஆற்றுக்கு தான். அன்றுபோல் இன்றும் மக்கள் பரவசமாக என்னவென்று பார்த்திருக்க ஆரம்பித்தனர். தன் உத்தரவு தரும்வரை மீடியாக்கள் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று கண்ணன் உத்தரவு பிறப்பித்ததால் இந்த முறை அவர்களின் தொல்லை இல்லை.
தொடர்ந்து தேடுதல்கள் நடந்துகொண்டிருக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் கடந்தது. வீட்டில் இருந்தும் ஆரதியிடம் இருந்தும் வந்த அழைப்புகளை ஏற்க மனமில்லாமல் நிராகரித்தவனின் பார்வை அந்த கூவம் ஆற்றின் மீதே இருந்தது. நள்ளிரவைத் தாண்டியும் விடாமல் காவலர்களும், தீயணைப்பு துறைகளும் வேலையில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க , மோப்ப நாய்களின் உதவியோடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர் மற்றொரு அதிகாரிகள். அடையாறு கூவம் முழுவதும் தேடியும் கிடைக்காமல் போக அவை இணையும் கிண்டி கூவத்தில் அடுத்த தேடுதல் நடந்தது. அங்கும் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட , ஒவ்வொரு நொடியும் நடுங்கும் மரண ஓசையில் அங்கிருப்பவர்களை நிறுத்தி இருந்த அந்த இரவோ விடியற்காலை மூன்றை தொட்டிருந்தது.
“சார்ர்ர்ர்…”
ஓசை ஒருவரிடமிருந்து வர அங்கிருந்த அத்தனை இதயங்களும் விழித்துக்கொண்டு பதைபதைப்பாக ஓசை வரும் வழியை நெருங்கியது.
அங்கு மோப்ப நாய் இரண்டும் கட்டியிருக்கும் கயிறை தாண்டி வேகமாக முன்னேறி புதரில் இருக்கும் செடிகளை சீண்டி கொண்டிருக்க அதை அப்புறப்படுத்தி தேடச் சொன்னான் கண்ணன். ஒரு மணிநேர சீரமைப்பிற்கு பிறகு கண்ணில் ஒரு சாக்கு மூட்டை தென்பட அதை மேலே எடுத்து வர தொடங்கினார்கள்.
சாக்குமூட்டையில் இருப்பது சடலம் என்பது அங்கிருந்த காவலர்களுக்கு தெரிந்துவிட முன்னேற்பாடாக ஆம்புலன்சுக்கு சொல்லியிருந்தனர். எடுத்து வந்ததை பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அப்படி ஒரு குமட்டல். அதையும் சகித்துக்கொண்டு பார்க்க தயாரான அதிகாரிகளுக்கு பலனாக அழுகிய நிலையில் மேல் பாதி உடம்பு முற்றிலும் எரிந்த நிலையில் கீழ் பாதி உடம்பும் மட்டும் கொண்ட பெண் சடலம் ஒன்று இருந்தது.
பெண் சடலத்தை எதிர்பார்த்தே வந்திருந்த கண்ணனுக்கு ‘நினைத்தேன்’ என்பதைப்போல் முக பாவங்கள் மாற, மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை துரிதமாக செயல்படுத்தினான். உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவ்வுடல் அதற்கான தேடலில் ஈடுபட்டிருக்க இங்கே கண்ணனோ,
“இந்தப் பெண்ணை பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுங்க. சென்னையில யார் யாரெல்லாம் காணாமல் போய் இருக்காங்கன்னு லிஸ்ட் எடுங்க. மீடியா எந்த கேள்வி கேட்டாலும் இப்போதைக்கு எதுவும் யாரும் சொல்லக்கூடாது. உடற்கூறு ஆய்வு தகவல் வரட்டும்.” மனம் முழுதும் பாரத்துடன் அங்கிருந்து புறப்பட்ட கண்ணனின் சிந்தனையில்,
ஒரு ஆணின் சடலத்தோடு…. சம்பந்தமே இல்லாமல் இருக்கும் கர்பப்பையை ஆண் சடலத்தோடு எண்ணிப் பார்க்கவே அவன் மனம் திகில் கொண்டது. அந்த ரிப்போர்ட்டை படித்த நிமிடங்களுக்கு மனம் செல்ல, அனல் நடுக்கம் அவன் உடம்பில்.
தன் கடமைகளை முடித்துவிட்டு மதியம் போல் வீட்டிற்கு வந்தவனின் முகத்தை வைத்து எதுவோ ஒன்று சரியில்லை என்று உணர்ந்த மஹாலட்சுமி, சரஸ்வதியிடம் ஜாடை காட்ட,
“கண்ணா என்ன ஆச்சு ரொம்ப சோர்வா இருக்க.”
நேற்று இரவு முதல் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவர் மடியில் தலை வைத்து, “அத்தை நான் நிறைய கொலைகள், தற்கொலைகள் பார்த்து இருக்கேன். இன்னும் பல சம்பவங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடந்திருக்கு. ஆனா இன்னிக்கு நடந்தது என் மனச ரொம்பவே பாதிச்சிடுச்சி. அது சாதாரண உறுப்பு இல்ல கர்ப்பப்பை. இந்த பூமி இப்ப வரைக்கும் சுழன்று கொண்டிருக்க காரணமான அச்சாணி. அந்த பொண்ணு யாரு என்னன்னு தெரியல. ஆனா இந்த மாதிரி ஒரு மரணம் கண்டிப்பா வந்திருக்கக் கூடாது. எனக்கு அம்மாவும் நீங்களும் வேற வேற இல்ல. உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஒருசேர தாய் பாசத்தை உணர்ந்து இருக்கேன். பெண்ணா பிறந்தாலே அந்த உணர்வு இருக்கும்னு நிறைய தடவை இந்த உலகமே உணர்ந்து இருக்கு. அப்படிப்பட்ட ஒன்ன இந்த அளவுக்கு பண்ண எப்படி மனசு வந்துச்சு. அன்னைக்கு அத தொடும்போது அப்படி ஒரு நடுக்கம். எப்பவோ இறந்த பெண்ணோட கர்ப்பப்பை எங்கெங்கேயோ சுற்றி கடைசியில என் கைக்கு வந்து இருக்கு அத்தை. நினைச்சாலே பயமா இருக்கு.”
அதைக்கேட்ட இருவருக்கும் மனம் பதைக்க தான் செய்தது. ஒரு பெண்ணாய் அதன் புனிதம் அறிந்தவர்கள் ஆயிற்றே. இதைக் கேட்கும் தங்களுக்கே இப்படி என்றால் பார்த்த மகனின் நிலைமை சொல்லியா தெரிய வேண்டும். தங்கள் கவலையும், பயமும் இதற்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் கண்ணனை தேற்ற,
“கண்ணா! இதுக்கே சோர்ந்து போகலாமா. இது நீ கவலைப்பட வேண்டிய நேரம் இல்லை. தப்பு பண்ணவங்க யாருன்னு கண்டு பிடித்து தண்டனை வாங்கி கொடு. அத தொடும் போது ஒரு நடுக்கம் வந்துச்சுன்னு சொன்ன இல்ல… அதே நடுக்கம் இத செஞ்சவங்களுக்கும் வரணும். அதுக்கு முதல்ல நீ தெளிவா இருக்கணும்.” தாயின் பேச்சில் அத்தையிடம் இருந்து தாயின் மடிக்கு மாறியவன் சில நிமிடங்களில் கண்மூடி உறங்க ஆரம்பித்தான்.”
நீதிபதியின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட புது அதிகாரியோரி தினேஷ் உடன் ஆரதி இன்றும் புலன் விசாரணையைத் தொடங்கி இருந்தாள்.
“மேடம் அந்த டைரியில் ஒரு நாள் அனிதாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனது எழுதி இருந்தாங்க இல்லையா!”அதுல தேதியும் குறிப்பிட்டு இருக்கு தான. அந்த தேதியில இங்க சுத்தி இருக்க ஆஸ்பிட்டல்ல விசாரிச்சு பார்த்தா என்ன?”
“நல்ல ஐடியா சார்.” அனிதா சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் தன் கைப்பையில் வைத்திருந்தவள் அந்த டைரியை எடுத்து தேதியை பார்த்தாள். அதனடிப்படையில் சுற்றியுள்ள சிறு மருத்துவமனைகளில் விசாரிக்க ஆரம்பித்தனர். ஐந்தாவது மருத்துவமனை ஒன்றில் நுழைந்து விசாரிக்க அனிதா குறிப்பிட்ட தேதியில் அவள் பெயரில் ஒரு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அங்கு உள்ள கேமராவை ஆய்வு செய்ய அனிதாவும் அவளுடன் ஒரு வாலிபனும் வந்து மருத்துவம் பார்த்ததும், அனிதா சொன்னதுபோல் சந்திரனே அனைத்து செலவிற்கும் பணம் செலுத்துவது பதிவாகி இருந்தது. ஆனால் அதில் சந்திரனின் முகம் தெளிவாக இல்லை. காரணம் தலையில் தொப்பி அணிந்து கொண்டு முகத்தை கர்சீப்பால் கட்டியிருந்தான்.
“சார் இவன் ரொம்ப தெளிவா பிளான் பண்ணி தான் இந்த பொண்ண ஏமாத்தி இருக்கான். எங்கெல்லாம் கேமரா இருக்குன்னு நல்லா தெரிஞ்சுகிட்டு இவன் முகத்தை காட்டாம சாமர்த்தியமாக செயல்பட்டு இருக்கான்.”
அந்தப் பதிவையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப தயாரான ஆரதி சற்று நேரம் கார் பார்க்கிங்கில் நிற்க,
“மேடம் என்ன ஆச்சு.”
“எப்படிப்பட்டவனாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்துல தப்பு பண்ணி இருப்பான் தான சார். இதுல இந்த சந்திரன் மட்டும் என்ன விதிவிலக்கா..!”
“என்ன மேடம் சொல்றீங்க.”
“நமக்கு ரொம்ப பெரிய ஆதாரத்தை குடுத்துட்டு போயிருக்கான் சார்.”
“மேடம்….”
” ஹ்ம்ம்! ஆமா சார். அவன் இந்த மருத்துவமனைக்கு வந்த நேரத்தை வச்சி பில் பண்ண பில்லிங் காபி வாங்குனோம் இல்லையா! அதுல அவனோட உண்மையான பெயரை எழுதி இருக்கான். அதுமட்டுமில்ல ரெஜிஸ்டர் பண்ற இடத்துல அவனோட ஏரியா பேரும் இருக்கு.”
“சூப்பர் மேடம் இத நான் கவனிக்கல.”
“நான் கவனிச்சேன் சார். ஆனா வெளிக் காட்டிக்கல . நம்ம அவனை தேடுறது எந்த ஒரு வகையிலும் அவனுக்கு தெரிய கூடாது. இங்க அவனுக்கு தெரிந்த ஆட்கள் யாராவது இருந்தா? அதனால தான் அமைதியா வந்துட்டேன்.”என்றவள் தினேஷிடம் அதன் நகலை கொடுத்து அந்த ஏரியாவில் விசாரிக்க சொல்ல, அவரும் புறப்பட்டார்.
****************************
மாலை போல் வீட்டிற்கு வந்த சித்துவிடும் கண்ணன் கூறியதைப் பற்றி கூறிய சரஸ்வதி,
“கொஞ்சம் அவன்கிட்ட பேசு சித்து. கண்ணா வெளியில தைரியமா இருந்தாலும். உள்ள ரொம்பவே ஏமோஷனல் டைப். இந்த விஷயத்துல அவன் ரொம்ப கஷ்டப்படுவான் . நீயும் ஆரதியும் பேசுங்க.”
அத்தையின் வார்த்தைக்கு சரி என்று சொன்னாலும் சித்துவின் மனதிற்குள் வேறு ஒரு எண்ணம் வரத் துவங்கியிருந்தது. அதை ஆரதியிடம் சொல்லியவன் அவளின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்திலே அவளும் வந்தாள்.
“சித்து… கண்ணன் எங்க?”
“இன்னும் வீட்டுக்கு வரல ஆதி. அவனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”
தன் அலுவலகத்தில் கடந்த 6 மாதமாக காணாமல் போன பெண்களின் பட்டியலைப் பார்த்து கொண்டிருந்தவனிடம், “சார் அந்த பொண்ணோட மெடிக்கல் ரிப்போர்ட் வந்துடுச்சு.”
மனதை திடப்படுத்திக் கொண்டு அதை கையில் வாங்கும் நேரம் ஆரதியும், சித்துவும் அவனை காண வந்திருக்க,
சிறிது நேரம் காத்திருக்க சொன்னவன் அந்த ரிப்போர்ட்டை படிக்க ஆரம்பித்தான்.அதில்,
பெண்ணின் வயது இருபதிலிருந்து இருபத்தி நான்குக்கு இடையில் இருக்கலாம். வயிற்றில் கனமான பொருளால் அடுத்ததற்கான அடையாளம் இருப்பதாகவும், மூச்சு விட முடியாமல் இறுக்கமாக கழுத்தை நெரித்து இருப்பதற்கான அடையாளமும் இருப்பதாக இருந்தது. அதில் தான் அப்பெண் மயக்கமாகி இருக்கிறாள். மயக்கத்தில் இருக்கும் பொழுதே வயிற்றுப் பகுதி கிழிக்கப்பட்டு கர்ப்பப்பை வெளியில் எடுத்து இருப்பதாக எழுதி இருந்தது. அதைப் படித்ததும் கண்ணனுக்கு தன்னிலை மறக்கச் செய்ய, வேகமாக ஆரதியை அழைத்தான்.
வந்தவளுக்கு கண்ணன் நிலைமை புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது. அவனைத் தேற்றுவதில் அவள் இருக்க, ரிப்போர்ட் சித்துவின் கைகளுக்கு மாறியது.அதில்,
சுயநினைவு பெற்று கத்த ஆரம்பித்த அவளின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுக் கொன்று இருக்கிறார்கள். பின் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து இருக்கிறது என்றும் உடம்பின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்ததாக குறிப்பிட்டிருந்தது. அதில் மேலும் இறந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது.