ஆட்கொணர்வு மனு விற்கு கொடுக்கப்பட்ட இரண்டாம் தவணையும் முடிந்திருக்க , மந்தவெளி காவல் நிலையத்தின் போலீஸ்காரர்கள் அனிதாவை கண்டுபிடிக்க முடியாமல் திணற , அதைக் கேட்ட நீதிபதிகள் காவல்துறைக்கு எதிராக கண்டன கருத்துக்களை தெரிவித்ததோடு இதை சிபிஐக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சித்து ஆரதியின் உதவியோடு அவள் சேகரித்து அனைத்தையும் தனிப்பிரிவு நீதிபதி சிறப்பு ஆணை பிரிவில் சமர்ப்பித்து சிபிஐக்கு மாற்றப்படுவதை தடுத்து விட்டான். மேலும் இவ்வழக்கு.. அடையாறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரின் உதவியோடு ஆரதி தொடர்ந்து சந்திரனை பிடிக்கும் வேட்டையில் இறங்கி இருந்தாள். சந்திரனின் புகைப்படம்.. ஒரு பாதி மட்டும் அவளிடம் இருப்பதால் அதைக் கொண்டு அனிதா வேலை செய்த இடத்தில் இருந்து சென்னையில் உள்ள பல இடங்களில் ஆய்வு செய்ய ஆரம்பித்தாள். சந்திரன் உபயோகித்த வண்டி எண்ணை வைத்து விசாரணையைத் தொடங்க அது போலி எண்ணாக இருந்தது. ஆரதி இதுவரை கையில் எடுத்த வழக்குகளின் இது மிகவும் சிரமமாக இருந்தது. தடயங்கள் கையில் இருந்தாலும் அதை உருவகப்படுத்த சரியான வழிகள்தான் கிடைக்கவில்லை. அவனுடைய பெயரும் ஒரு பாதி முகமும் மட்டுமே அவளோடு ஆதாரமாக இருக்கிறது. ஒருபுறம் அனிதாவை நினைத்து கோபமும் வந்தது. எந்த தகவலும் இல்லாமல் எந்த அடிப்படையில் இந்தப் பெண் அவனை காதலித்தால் என்று.
கண்ணன் சித்து ஆரதி மூவரும் இரு வழக்குகளில் பிடிப்படப்போகும் கயவனுக்காக காத்திருக்க குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்களின் திருமண சம்மத்திற்காக காத்திருந்தனர்.
விசாரணையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஆரதியை அழைத்த நாராயணன், “ஆதி கொஞ்சம் பேசணும் ஃப்ரீயா டா.”
“என்ன மாமா இது பெர்மிஷன் கேக்குறீங்க. என்ன பேசணும்’னு சொல்லுங்க. நான் எப்பவுமே உங்களுக்காக ஃப்ரீ தான்.”
“உனக்கே தெரியும். வீட்டில என்ன நடந்துச்சுன்னு. பிள்ளைங்க விருப்பத்தை கூட தெரிஞ்சுக்காம இத்தனை நாள் இருந்தது நினைச்சு எங்க நாலு பேருக்கும் ரொம்ப வருத்தம். இதுல தேவையில்லாம இன்னொரு பொண்ண வேற நுழைச்சு பெரிய தப்பு பண்ண பார்த்தோம். எல்லாமே நல்லபடியா முடிஞ்சதனால நிம்மதி. இல்லனா நாலு பேரோட வாழ்க்கை என்ன ஆகி இருக்கும். அன்னைக்கு நாளுக்கு அப்புறம் இந்த வீட்டில முன்ன மாதிரி பேச்சு சத்தம் எதுவும் இல்லை ஆதி. உன் அத்தை பத்தி சொல்லவே வேணாம். ஏற்கனவே உன்ன கண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும்’னு தான் அவளோட அதிகபட்ச ஆசை. அது நடக்காம போனதும் எவ்வளவு வருத்தப்பட்டான்னு எனக்குத்தான் தெரியும். அதனாலதான் அவசர அவசரமா சித்து கூட உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினது. சின்ன மருமகளாவது நீ அவ கூட இருக்கணும்’னு ஆசைப்பட்டு.”
“மாமா இப்போ தான் அத்தை ஆசைப்பட்ட மாதிரி எனக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது. அப்புறம் என்ன?”
“அது தாண்டா இப்ப கேள்வி. எப்ப பண்ணிக்க போறீங்க. உன் அத்தையோட ஆசை நிறைவேறப் போகுது ஆனா அதைப் பத்தி ரெண்டு பேரும் பேசாம இருக்கீங்களே. இந்த தடவையாது உங்க கிட்ட சம்மதம் கேட்டு எல்லா ஏற்பாடும் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்கோம். “
“எனக்கு கல்யாணம் பண்றதுல எந்த பிரச்சினையும் இல்ல மாமா. கண்ணன் தான் இப்போ எடுத்திருக்க கேஸ் முடியட்டும்’னு சொன்னான்.”
“உங்க எண்ணங்கள் சரிதான். ஆனா எங்க நிலைமையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. உன் அத்தை எவ்வளவு மனசு உடைஞ்சு போய் இருக்கா தெரியுமா. இன்னமும் அத்த உன் கிட்ட பேசாம இருக்குறதுக்கு காரணம்.. தெரியுமா ஆதி?”
தெரியும் என்பது எப்படி தலையசைத்து, “நான் கண்ணாவை திட்டுனதால அத்தை கோவமா இருக்காங்க.”
“இல்லை” ஆரதியின் வார்த்தைக்கு பட்டென பதிலளித்தார் நாராயணன். அவரின் வார்த்தையில் யோசனையோடு பார்த்த ஆரதிக்கு,
“கண்ணனை நீ திட்டியதால இல்லை. அன்னைக்கு சண்டை நடக்கும் போது நீ சொன்ன வார்த்தை தான் காரணம்.”
இப்பொழுதும் அவளுக்குப் புரியாமல் போக, “நான் என்ன மாமா சொன்ன.”
“என்னால தான் உங்க வீட்டில இன்னைக்கு பிரச்சனை…சாரி அத்தை னு சொன்னியா ஆதி.”
நாராயணனின் வார்த்தையில் அதிர்ந்த ஆரதி தன் யோசனையில் அன்றைய நாளை புரட்டிப் பார்க்க, அவள் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது.
“மாமா நான் வேணும்’னு சொல்ல. அன்னைக்கு நடந்த பிரச்சனையில நான் ரொம்பவே குழப்பத்துல இருந்தேன். கண்ணன் அங்கிருந்து கிளம்பி போகவும், அத்தையோட அழுகை எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்திடுச்சி. ” உளமார வருந்திக் கூற,
“தெரியும் டா ஆதி. ஆனா ஒன்னு யோசிச்சு பாரு. தன்னோட ரெண்டு பசங்களையும் விட அதிகமா பாசம் வைத்திருக்கிறது உன் மேல தான். அப்படி இருக்க நீ தனியா பிரிச்சு பேசினதும் அவளால தாங்க முடியல. எப்படியாது உன்னையும் இந்த வீட்டுக்குள்ள சேர்க்க தான் அவ எவ்வளவு பாடுபட்டாள். கடைசில அது எங்கேயோ போயி அவளோட ஆசைக்கே வந்து நின்னுடுச்சி. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. எல்லாமே தெரிஞ்சு அமைதியா இருந்த சித்துவும், கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கும் போது வேணான்னு மறுத்த நீங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு வகையில அவளை ஏமாற்றி இருக்கீங்க தானே. அதோட வெளிப்பாடுதான் இந்த மௌனம். இதே நிலைமை போச்சுன்னா இன்னும் சிக்கல்தான் ஆகும். யோசிச்சு நல்ல முடிவா எடு ஆதி. உன்னோட வார்த்தைக்கு கண்ணன் கண்டிப்பா மறுப்பு சொல்ல மாட்டான்.” ஆரதிக்கு யோசிக்க நேரம் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டார் நாராயணன்.
அவர் சென்றதும் அருகில் வந்த சரஸ்வதி, “உங்களுக்கு ஒரு நியாயம் இருக்க மாதிரி எங்களுக்கும் ஒரு ஞாயம் இருக்கு ஆதி. எங்க நாலு பேரோட வாழ்க்கை உங்க மூணு பேரை சுற்றி தான் இருக்கு. கொஞ்சம் யோசிச்சு பாரு நம்ம ரத்த பந்தம் கூட இல்லை இந்த வீட்டுக்கு. இருந்தாலும் உன்னை தன்னோட மருமகளாகிக்க இவ்வளவு போராடுற இந்த குடும்பம் கிடைச்சது பெரிய வரம் உன் வாழ்க்கையில. அது அனுபவிக்காம தள்ளி போடாத ஆதி. ஒரு அம்மாவா இது தான் நான் உனக்கு சொல்ல முடியும்.”
இருவரின் வார்த்தையில் உள்ள உண்மைகள் புரிய இதைப் பற்றி கண்ணனிடம் பேச முடிவெடுத்தாள் ஆரதி.
ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முன்பு மைக்கேல் இருந்த ஏரியாவில் அவனது நண்பர்களையும், சொந்தக்காரர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தனர். பிடிப்பட்ட அத்தனை நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்த வெகுநாட்களுக்குப் பிறகு யாரை தேடிக்கொண்டிருந்தார்களோ, இவர்களை இத்தனை நாள் தொடர் அலைச்சலில் வைத்திருந்தானோ அந்த மைக்கேல் புகைப்படம் கிடைத்துவிட்டது. மேலும் அவன் இருக்கும் வீட்டு முகவரியும் கிடைத்துவிட தனிப்படை அதிகாரிகளோடு கண்ணனும் அங்கு புறப்பட்டான். போருரை தாண்டி உள்ள.. ஆட்கள் குறைவாகவே வசிக்கும் இடத்தில் மைக்கேலின் வீடு இருக்க அங்கு விரைந்த அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்ததாக தகவல் வந்தது.
மைக்கலை பற்றி விசாரிக்க, வீட்டின் அக்கம்பக்கத்தில் இருப்போர், “இந்த வீடு வந்த புதுசுல மைக்கேல் தினமும் வருவாரு. ஆனா கொஞ்சம் மாசத்துல இருந்து அவர் இங்க வரதே இல்ல. அவங்க மனைவிகிட்ட கேட்டா என் புருஷன் வேலைக்கு போய் இருக்காருன்னு சொல்லி சமாளிப்பாங்க. மைக்கேலுக்கு மொத்தம் மூணு பசங்க. ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி யார்கிட்டயும் சொல்லாம வீட்டை காலி பண்ணிட்டாங்க ராத்திரியோட ராத்திரியா. இது அவங்களோட சொந்த வீடு தான் சார். வீடு பூட்டி இருக்கறதால தான் அவங்க இல்லை என்ற விஷயமே எங்களுக்கு தெரிஞ்சது.”
இவ்வளவு தூரம் வந்தும். பல நாள் காத்திருப்பில் வேட்டையாடும் சிங்கமாய் இறை தேடிவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் கிடைக்க, மைக்கேல் கையில் கிடைத்தால் கோர்ட்டில் ஒப்படைக்கும் எண்ணம் கண்ணன் உட்பட யாருக்கும் இல்லை. காற்றை வந்தவர்கள்… சுழன்றடிக்கும் இடம் கிடைக்காமல் மீண்டும் தன் இடத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
வாகனத்தில் சென்று கொண்டிருந்த கண்ணனுக்கு எண்ணங்கள் நிதானத்தில் இல்லாமல் எங்கெங்கோ கட்டுக்கடங்காமல் செல்ல ஆரம்பித்தது. இத்தனை வழக்குகளில் இந்த மைக்கேல் மட்டும் விதிவிலக்கு. ஒவ்வொரு தடவையும் தேடிச் செல்லும் பொழுது.. மீண்டும் மீண்டும் ஓட வைக்கும் இக் குற்றவாளியை பார்வையாலேயே பஸ்பமாகும் வெறி உள்ளுக்குள் உருவாகியிருந்தது.
அவனுக்குப் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த காவல் அதிகாரிகளுக்கும் அதே நிலைமை தான். இந்த ஏழு மாத காலமாக இவர்கள் நிம்மதியாக தூங்குகி இருப்பது குறைவுதான். கையில் சிக்கி விட்டால் மைக்கேல் நிலைமை அந்தோ பரிதாபம் தான். இந்நிலையில் அங்கிருந்த அதிகாரி ஒருவர் கண்ணனிடம்,
“சார் ! இவனை எப்படியாவது பிடிச்சே ஆகணும் சார். இவ்வளவு தூரம் நம்மளை அலைய வைச்சவனை சும்மா மட்டும் விடக்கூடாது. கையில் கிடைத்ததும் மொத்தமா என்கவுண்டர் பண்ணிடலாம் சார்.”
“எனக்கும் அதே எண்ணம்தான் சார். மேலிடத்திலிருந்து வர கேள்விக்கு பதில் சொல்ல முடியல. ஒரு பக்கம் மீடியாக்காரங்க வேற. இந்த மைக்கேல் கிடைக்காம ராபர்ட் பத்தி எதுவும் பேச முடியாது. கிடைக்கட்டும் இருக்க அவனுக்கு.”
“சார் அவன்கிட்ட இருந்து வாக்குமூலம் வாங்கிட்டு.. என்கவுண்டர் பண்ணிடலாம் சார்.” அதிகாரியின் பேச்சுக்கு மற்றொரு அதிகாரியோ,
“என்ன சார் நீங்க நம்ம எல்லாரையும் இவ்வளவு தூரம் அலைய வச்சிருக்கான். அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் தண்டனை கொடுக்கலாமா. நம்ம கஸ்டடியில வைச்சி உயிர் வலி என்னன்னு காட்டணும். உடம்புல இருக்க ஒவ்வொரு பார்ட்டையும் தனித்தனியா அடிச்சே வெளிய எடுக்கணும். அவனோட ரத்தத்தை பார்க்காம என் கோவம் அடங்காதது.”
இவர்களின் உரையாடல்களை இருக்கையில் தலைப்பகுதியை சாய்த்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் கண்ணன். சில நிமிடங்கள் கடந்து அடையாறு சிக்னலில் வாகனம் நிற்க , அப்பொழுதுதான் தன் கோபத்தை மறந்து கண்மூட ஆரம்பித்தான். ஆரம்பித்தவன் அதே வேகத்தில் கண் திறந்து, சடாரென எழுந்து உட்கார்ந்து,
“டிரைவர் அண்ணா! சீக்கிரமா கமிஷனர் ஆபீஸ் க்கு வண்டிய விடுங்க. “
கண்ணனின் அவசரத்தில் அங்கிருந்தவர்கள்,” என்ன ஆச்சு சார்.”
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராபர்ட் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்க போயிருந்தேன். அப்போ ராபர்ட் டெட் பாடி கூடவே தனியா ஒரு பார்ட் இருந்ததில்லையா அதோட ரிப்போர்ட் கேட்டிருந்தேன். ரொம்ப அழுகிய நிலையில் இருந்ததால.. அதுவும் உறுப்பு ரொம்ப சின்னதா இருந்ததால சென்னை மெடிக்கல் காலேஜ் க்கு அனுப்பி இருக்கிறதா சொன்னாங்க. அப்புறம் நான் கொல்கத்தா ல இருக்கும்போது கால் பண்ணி ரிப்போர்ட் ரெடி ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. அதை கமிஷனர் ஆபீஸில் கொடுக்கச் சொல்லி நான் தான் சொல்லி இருந்தேன். எனக்கு ஒரு மெயிலும் பண்ணியிருக்குறதா சொன்னாங்க. அதுக்கப்புறம் நடந்த பிரச்சனையில பார்க்க மறந்தே போயிட்டேன். அந்த ரிப்போர்ட் என்னன்னு போய் பார்க்கணும் சார். கண்டிப்பா அதுல ஏதாச்சும் இருக்கும்.”
“சார் அப்படிப் பார்த்தாலும் அது ராபர்ட் ஓட உடம்புல இருந்த ஏதாச்சும் ஒரு பார்ட்டா தான் இருக்கும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுல அது மிஸ் ஆகி இருக்கும்னு காட்டி இருக்குமே.”
“இல்ல சார் அது ராபர்ட் ஓட உடம்புல இருந்த எந்த பார்ட்டும் இல்ல. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதை கன்ஃபார்ம் பண்ணி இருந்தாங்க. அந்த உறுப்பு வேற யாருடையதாவது இருக்கலாம். அந்த ரிப்போர்ட் பார்த்தாதான் தெரியும் சார்.”
ராபர்ட் உடம்பில் இருந்து கைப்பற்றப்பட்ட உறுப்பு எப்படி ராபர்ட்டின் உறுப்பாக இல்லாமல் போனது என்ற பெரும் குழப்பம் அங்கிருந்த தனிப் படை அதிகாரிகளுக்கு. கண்ணனின் வார்த்தையில் அவர்களுக்கும் அந்த ரிப்போர்ட்டை பார்க்க ஆர்வம் பிறக்க வேகமாக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர்.