தன்னிலை தெளிந்த மைக்கேல் கனமாக இருந்த கண்ணிமைகளை கடினப்பட்டு பிரிக்க, அதை உணர்ந்த கண்ணன் அமைதியாக பார்த்து இருந்தான். எழுந்த மைக்கேல் இடம் தெரியாமல் முழிக்க,
“மைக்கேல் சார்! நல்ல உறக்கம் போல.. இந்த மாதிரி நிம்மதியாக தூங்கி பல நாள் ஆச்சு நாங்க!” குரல் வரும் திசையில் கண்ணனைக் காண, அதிர்ச்சியில் அரக்கப் பரக்க எழுந்து அமர்ந்தான் மைக்கேல்.
“பொறுமையா எந்திரிங்க. என்ன அவசரம். உங்களை அலுங்காம குலுங்காம இங்க கூட்டிட்டு வந்து இருக்கோம். நீங்க எப்படி அவசரப் படுறீங்களே மைக்கேல்.”
அதிர்ச்சியில் செயலிழந்த மூளை பல நாள் கழித்து கண் முழித்ததைப்போல நடந்ததை மறந்து இருந்தான் மைக்கேல். அவனை தெளிய வைக்க முகத்தில் தண்ணீர் அடிக்க, அதன் பின்னே ‘வீட்டிலிருந்து அங்கே எப்படி வந்தோம்’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
“சார் ! நான் வீட்ல தூங்கிட்டு தானே இருந்தேன்! இங்க எப்படி வந்தேன்? என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க.? நான் எந்த தப்பும் பண்ணல. யாரோன்னு நினைச்சே என்ன கூட்டிட்டு வந்திருக்கீங்க.”
அதன்பின் அந்த விசாரணை அறை முழுக்க முழுக்க மைக்கேலின் அலறல் சத்தம் கேட்டது. அதிலும் திறமையாக வெளிக் காயங்கள் எதுவும் தெரியாமல். இத்தனை நாள் மனதில் அவன் மீது இருந்த கோபத்தை உள்காயங்கள் ஆக காட்டி இருந்தனர். மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் நீதிபதி முன் ஆஜர் படுத்த, ஒருவார காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த கண்ணனும், தனிப் படை அதிகாரிகளும் ஆர்வமாக மைக்கேலை காவலுக்கு எடுத்து இருந்தனர்.
இனி இவ் வழக்கை கையாள்வது எளிது என்பதை உணர்ந்து கண்ணனும் உடற்கூறு ஆய்வு வாங்க மருத்துவமனைக்கு விரைய, கல்லூரியில் வேலையை முடித்த மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனை வராண்டாவில் காத்துக்கொண்டிருந்த கண்ணனை அடைந்த மூவரும் விசாரிக்க, “இன்னுமொரு 20 மினிட்ஸ் ஆகும்’னு சொல்லி இருக்காங்க ரதி.”
நின்றிருந்த நால்வரில் மூவருக்கு திகில் கலந்த படபடப்பாக இருக்க, வானதிக்கு மட்டும் நொடி ஒவ்வொன்றும் மனதினில் ஆயிரம் இடியை இறக்கி இருந்தது. தன் முன் பிறந்த அவளின் அழகிய முகம், பேச்சு, அழுகை, செய்கை என ஒவ்வொன்றும் மாறி மாறி அந்த இடியில் அவளை நடுங்க வைக்க தொடங்கியிருந்தது. யாருக்கு எப்படியோ அவள் மனசாட்சி உறுதியாக நம்பியது வரும் செய்தி தன் அக்காவின் இறப்பு செய்தி என்று.
எங்கோ இருந்தவள் சம்பந்தமே இல்லாமல் இவர்கள் கையில் வந்திருக்க, தானும் இங்கு வந்திருக்கும் செயலே தெளிவாக உணர்த்தி இருந்தது . ‘ஐந்து வயதில் அக்காவின் கை பிடித்து நடந்ததும், தலை வாரி விடும் தோரணை பிடிக்கவில்லை என கலைந்து ஓடியதும், பல நாள் பட்டினி கிடந்து புழுவாய் இருவரும் துடித்ததும், தந்தையிடம் அடிவாங்கும் தாயை காக்க முதல் ஆளாய் தன் அக்கா நின்றதும்.. வெகுவாய் நிழல் படம் ஓட ஆரம்பித்தது மனதில். இத்தனை தூரம் சுமைகளை சுமந்து கொண்டு வந்தவள் இன்று காதலால் சுமையாய் ஆகிவிட்டாலே என்ற ஆதங்கம் தங்கையின் மனதில் ஆலமரமாய் விதைந்திருந்தது. இது அக்காவா இருந்தா என்ன செய்றது? அம்மாவை எப்படி சமாளிக்கிறது? இனி எப்படி வாழ்வது? அக்காவின் மரணத்திற்கு யாரை கை காட்டுவது? ஊருக்கு முன்னால் பேசும் பொருளாக மாறி விடுவாளோ ‘ என்ற லட்ச கேள்விகள்.. லட்சியத்தை சுமக்கும் பெண்ணின் உணர்வுகளில்.
தன் எண்ணத்தோடு நினைவுகளை கலக்க விட்டவள் அதிலிருந்து வெளி வராமல் சிலையாக அமர்ந்திருக்க, அதை மூவரும் கவனித்தாலும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. வரும் ரிசல்ட்டை வைத்தே இனி வானதியை நெருங்க முடியும் என்பதை அவர்களும் உணர்ந்திருந்தனர். நொடிகளும் இதயத்தின் ஓசைக்கு ஜதி சேர்த்து ……டிக் டிக்…….என அப்படி இப்படி நகர்ந்து 20 நிமிடத்தையும் அடைந்திருந்தது.
கூடுதலாக 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட மருத்துவர்கள் வெளியில் வர, அதை வாங்க இருக்கையில் இருந்து வேகமாக ஓடினால் வானதி. கால்கள் நலமாக இல்லை என்பதை உணர்த்த கீழே விழ வைத்தது. வலியையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்றவள்… முன்னேறி நடக்க, அவளை தடுத்து நிறுத்தி தானே வாங்கிக் கொண்டான் கண்ணன்.
‘ப்ளீஸ்! கொடுங்க….’ என அழுகையும் கலவரமும் சேர்ந்து முகத்தில் சைகை காட்ட,
‘முடியாது’ என்பதைப் போல் மறுத்து தலையசைத்தான் கண்ணன்.
காது இரண்டையும் பொத்தியவள், அமர்ந்துகொண்டு அழ ஆரம்பிக்க, கண்ணன் அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். ஆரம்பித்தவனின் கண்கள் அனிச்சையாக கலங்க, புரிந்து போனது ஆரதி, சித்து இருவருக்கும்.அது அனிதாதான் என்பது.இதுவரை அனுமானங்களில் சுற்றிக் கொண்டிருந்தவர்களை அசைத்துப் பார்த்தது அந்த ரிப்போர்ட்.
மூவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வானதியை பார்த்திருக்க, அவளோ தனக்குள் முடியுமட்டும் அழுதுவிட்டு, தலைநிமிர்ந்து கண்ணனிடம்… ‘இல்ல தான சார்’ என்ற கேள்வியோடு கண்ணை தூது விட, அவளை எதிர் கொள்ள முடியாமல் திரும்பி கொண்டான்.
போதும் இந்த ஒரு சைகை போதும்… உயிரை உருக்க. அமர்ந்திருந்தவள் தரையில் தன் கைகளை அடித்து கொண்டே …. ” இல்ல…இல்ல …இல்ல அது என்னோட அக்கா இல்ல. நான் நம்ப மாட்டேன்……. சத்தியமா அது என்னோட அக்கா இல்ல…. நீங்க பொய் சொல்றீங்க…. இந்த டாக்டருங்க எல்லாரும் பொய் சொல்றாங்க. என் அக்கா உயிரோட தான் இருக்கா. அவ சாகல…. நீங்க பொய் சொல்றீங்க. என் அக்கா உயிரோட தான் இருக்கா. என்ன படிக்க வைக்கணும்’னு எங்கேயோ வேலை பார்த்துட்டு இருப்பா. எங்களைத் தாண்டி எதையும் யோசிக்க மாட்டா. அவளுக்கு நாங்க மட்டும் தான் உலகம். நீங்க எல்லாரும் பொய் சொல்றீங்க….. இல்ல ன்னு சொல்லுங்க… ப்ளீஸ் தயவு செஞ்சு அது என் அக்கா இல்ல ‘ன்னு சொல்லுங்க.! ப்ளீஸ் சார் அது என் அக்கா இல்ல ‘னு சொல்லுங்க.! ப்ளீஸ்…! ப்ளீஸ்…! “தரையில் படுத்துக்கொண்டு அழுபவளை ஓடிச்சென்று ஆரதி தாங்க ,
“சொல்லுங்க அக்கா.! நீங்களாவது சொல்லுங்க! அது என் அக்கா அனிதா இல்ல தான. பொய் சொல்றாங்க தான…. சொல்லுங்க… தயவு செய்து சொல்லுங்க..க்கா. என் அக்காவ கண்டு பிடிச்சு தரேன்னு சொன்னிங்க தான.. கொடுங்க உயிரோடு கண்டுபிடிச்சி கொடுங்க. நாங்க எங்க ஊருக்கு போறோம். என்னோட அக்கா இனிமே வேலை பார்க்க வேணாம். என்ன படிக்க வைக்க வேணாம். எங்ககூட இருந்தாலே போதும்… சொல்லுங்க அக்கா. உள்ள இருக்க பொண்ணு என் அக்கா இல்ல தான.” அழுகை கதறலாக மாறியது. உள்ளே இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட.. அவளை சுற்றி திரண்டு நிற்க, அதை பற்றி கவலை இல்லாமல் ஆரதியை கட்டிக் கொண்டு அழ தொடங்கினாள்.
இடையில் சித்துவும் அவளிடம் வர, ஆரதியிடம் இருந்து சித்துவின் தோல்களுக்கு மாறியவள் , “நீயாது சொல்லு சித்து. உள்ள இருக்குறது என் அக்காவா. அவளை எழுந்து வரச் சொல்லு… ஊருக்கு கூட்டிட்டு போறோம். என் அக்காவ பேச சொல்லு. ஏன் இப்படி நடந்துச்சுன்னு சொல்ல சொல்லு.. ப்ளீஸ் சித்து நீயாது சொல்லு… யாராவது சொல்லுங்க… யாராவது சொல்லுங்க….”பெண்ணவள் காட்சிப்பொருளாக மற்றவர் முன் கண்ணீர் வடிக்க தன்நிலை முடியாமல் மயங்கி சரிந்தாள்.
அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் செல்ல, மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் கரு விழி அசைய ஆரம்பிக்க, ‘மீண்டும் அழுகையை தொடங்கி விடுவாளோ’ என்ற கவலையோடு பார்த்திருந்தனர் மூவரும். கருவிழி அசைந்தாலும் இமை திறக்காமல் மௌனமாக ரத்தத்தை கண்ணீராய் வெளியேற்ற ஆரம்பித்தாள் வானதி.
அரை மணி நேரம் கடந்தும் விழி திறக்காமல் அடம்பிடித்தவளை இமை திறக்க செய்தான் கண்ணன். தன் கைகளால் அவள் தலை வருடி. திறந்த விழியில் ஆயிரம் ஆதங்கம்.
பெரும் ஓசையை அடக்கி சிறு ஓசையாய் வெளிவந்தது , “என் அக்கா செத்துப்போயிட்டாளா சார்? இனிமே அவ உயிரோட வர மாட்டாளா? நான் அவ முகத்த கடைசியா எட்டு மாசத்துக்கு முன்னாடி பார்த்தது. இனிமே அந்த முகத்தை என்னால பாக்க முடியாதா? ஏன் சார் …?”
“இனிமே உன் அக்கா வர மாட்டா. இதுதான் உண்மை. இத ஏத்துக்கோ மா. நீயே இப்படி அழுதா உன் அம்மாவை யோசிச்சு பாரு. அவங்களுக்கு இனிமே எல்லாமே நீ தான். நீ மட்டும் தான். ஈடு செய்ய முடியாத இழப்பு தான். வெளியே வந்துதான் ஆகணும்.”
வலது கண்ணில் ஒரு சொட்டு நீர் வெளியேற, இடது கண்ணில் வெளியேறாமல் தேங்கி நின்றது கண்ணீர். அதை இமை இறக்கி வெளியிட்டவள் தலை குனிந்தே இருக்க, “ரதி… அனிதா உடம்ப வாங்க ஏற்பாடு பண்றேன். ராசாத்தி ஆண்ட்டி கிட்ட பொறுமையா விஷயத்தைச் சொல்லு. அதுக்கு முன்னாடி அம்மா கிட்டயும் அத்தை கிட்டயும் சொல்லிடு. அவங்க கொஞ்சம் பார்த்துப்பாங்க. நான் மத்த ஏற்பட்ட பண்ற…” என்றவன் வானதியின் அருகில் இருந்து எழ…,
அவன் கையை பிடித்து தடுத்தவள், “என் அக்கா உடம்பை நான் வாங்கமாட்டேன். எனக்கு ஞாயம் வேணும். இத யாரு பண்ணாங்கன்னு தெரியனும். அது எத்தனை வருஷம் ஆனாலும் சரி. இந்த நிலைமையோட என் அம்மாகிட்ட எடுத்துட்டு போனா அவங்க செத்துரு வாங்க. ஒரே நேரத்துல ரெண்டு இழைப்பை என்னால தாங்கிக்க முடியாது.” நிறுத்தி நிதானமாக அதேநேரம் அழுத்தமாக வந்தது வானதி இடமிருந்து வார்த்தைகள்.
“வானு! உன்னோட உணர்வு புரியுது. இது அவ்வளவு ஈஸி இல்லை. குற்றவாளி யாருன்னு தெரியாத வரைக்கும் உடம்ப வாங்காம இருக்கலாம். ஆனா அதுக்கு குடும்பத்தோட ஒத்துழைப்பு வேணும். எப்படியா இருந்தாலும் உன் அம்மாகிட்ட சொல்லி தான் ஆகணும். ரொம்ப நாளா தண்ணில இருந்து உடம்பு. அதுவும் எரிந்த நிலையில. இதுக்கு மேலயும் விட்டு வைக்கிறது சரியில்லை. கொஞ்சம் புரிஞ்சுக்க பாரு.சித்துவின் வார்த்தையில் மேலும் சில கண்ணீர்த்துளிகள் வெளியேற,
கை இரண்டையும் ஒன்று சேர்த்து வணங்கியவள் ஆரதியிடம், “என்ன உங்க தங்கச்சின்னு சொன்னீங்க. அப்போ இறந்த என் அக்காவும் உங்களுக்கு தங்கச்சி தான. உங்க ரெண்டு தங்கச்சிங்களுக்காக இந்த ஒரு உதவியை மட்டும் செய்ங்க. வாழ்க்கையில உங்கள எப்பவும் மறக்க மாட்டேன். உங்க தங்கச்சியை கொன்னவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்க. குறைஞ்சபட்சம் அவன் யாருன்னாது காட்டுங்க. என்னால கண்டுபிடிக்க முடியாது. உங்களால முடியும். ப்ளீஸ்க்கா…!” வானதியின் வார்த்தை ஆரதியின் விழிகளிலும் கண்ணீரை வெளியேற்ற ஆரம்பித்திருந்தது. அனிதா இறந்தது ஆரதிக்கு பெரிய வலியைக் கொடுத்திருந்தது.. அதை வானதி முன்னால் வெளிக்காட்ட தான் அவளால் முடியவில்லை. கட்டுக்குள் வைத்திருந்த உணர்வுகள் தங்கையின் வார்த்தையில் வெடித்து விட அவளைக் கட்டிக் கொண்டு அழ தொடங்கினாள்.
கண்ணன் ஆரதியை தேற்ற… தங்கையிடம் இருந்து பிரிந்தவள், “இதுக்கு நிச்சயமா தண்டனை இருக்கு. அவனை உன் முன்னாடி கொண்டு வந்துட்டு அனிதா உடம்பை நானே வாங்கிக்கறேன்.” என்றவள் கண்ணனை காண அவனோ,
“இங்க பாரு வானதி. நான் சொல்ற வார்த்தை சுயநலமாக கூட இருக்கலாம். ஆனா எங்களுக்கு வேற வழி தெரியலை. நீ சொன்ன மாதிரி இதை பண்ணது யாருன்னு கண்டு பிடிக்கிறோம். அது வரைக்கும் நீ தைரியமா இருக்கணும். உன்னை சமாதானப்படுத்த உட்கார்ந்தா.. எங்களால வேலை பார்க்க முடியாது. முக்கியமா ஆதியால. எங்களுக்கான சுதந்திரத்தை உறுதியா நீ தரேன்னு சொல்லு… நிச்சயமா உன் முன்னாடி அவனை நிறுத்துறேன்.”
“இல்ல சார். இனிமே நிச்சயமா அழ மாட்ட. என் அக்காவ கொன்னது யாருன்னு சீக்கிரமா கண்டுபிடிங்க. அது போதும் எனக்கு…”என்றவள் வெளிவரும் கண்ணீரை அடக்க பெரும்பாடு பட்டாள்.