சிறு தூரப் பயணங்களில் கமிஷனர் வீட்டை அடைந்தவர்கள் வீட்டின் காவலாளியிடம், கண்ணன் உத்தரவு பெற.. அவருக்கு ஏற்கனவே தெரிவித்திருக்க, உள்ளே அனுமதித்தார்.
கமிஷனரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்கள் தனிப்பட்ட கோரிக்கையை வைக்க, வானதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து ராபர்ட் விசாரணை யோடு அனிதாவின் விசாரணையும் ரகசியமாக நடத்தப்பட அனுமதி அளித்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அனிதா தொடர்பான ரகசிய விசாரணை முடிய வேண்டும் என்ற கட்டளையோடு. அதுவரை அனிதாவின் உடலை மருத்துவமனையில் பாதுகாக்கவும் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு உள்ளதால்..சிறப்பு நபராக அனுமதிக்கப்பட்ட தினேஷை இதில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தார். மேலும்… இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இடம் ஏற்கனவே வைத்த கோரிக்கையோடு இதையும் கோரிக்கையாக சமர்ப்பித்து உத்தரவு பெற கூறியிருந்தார். சட்டப்படியான நடவடிக்கையை சித்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான். ஏற்கனவே அனிதா வழக்கை அவனே பார்த்துக் கொண்டிருக்க இது மிகவும் எளிதாக்கியது.
மூவரும் அனிதாவின் உடலைக் காண எவ்வளவு வற்புறுத்தியும் அதை உறுதியான மனத்தோடு மறுத்துவிட்டாள் வானதி. வேறு வழியில்லாமல் அவளுடன் வீட்டிற்கு பயணப்பட , அங்கே அவளுக்காகவே காத்திருந்தார் ராசாத்தி.
வானதி நேற்றிலிருந்து அமைதியாக இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று ஆரதியுடன் வெளியில் செல்ல, தாயுள்ளம் சந்தேகிக்கத் தொடங்கியது. அதை தெளிவுபடுத்திக் கொள்ளவே இன்று விடுப்பு எடுத்து அரை நாளில் வந்திருந்தார்.
“வானதி எங்க போய்ட்டு வர…”
தாயின் முகத்தை கண்டதும்.. அனிதாவின் முகம் ஞாபகத்துக்கு வர கலங்கிய கண்ணை மறைப்பதற்கு பெரும்பாடு பட்டாள். அவளின் நிலை உணர்ந்து சித்து தான்,
“ஆண்ட்டி! வானதிக்கு காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு. வானதியை நேர்ல மீட் பண்ணனும் னு கேட்டாங்க. அதுக்காக தான் ரெண்டு நாளா கூட்டிட்டு போனோம். அடுத்த வாரத்துல இருந்து.. வானதி காலேஜுக்கு போக போறாங்க. “சித்துவின் பதிலில் நிம்மதி அடைய, அமைதியாக இருந்து கொண்டார். அவரின் நிம்மதி நிலையில்லாதது.. என்பதை வானதி மட்டுமே அறிவாள்.
“மேடம் அந்த பசங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.நீங்க இப்போ வந்தா விசாரணையை ஆரம்பிக்கலாம்.” தினேஷின் தகவலை கண்ணனுக்கு தெரிவிக்க வானதியை வீட்டில் விட்டுவிட்டு மூவரும் அங்கு விரைந்தனர். இதற்கிடையில் போனில் தினேஷிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்திருக்க, அவனுக்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
வீட்டின் வெளியில் நால்வரும் நின்று கொண்டிருக்க, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சித்து கதவை தட்ட சிறிது நேரத்திலே திறக்கப்பட்டது. அதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கும் ஆண் வெளியில் வந்து யார் என விசாரிக்க,
“இங்க சந்திரன் னு யாராவது இருக்காங்களா?” தினேஷ்
சந்திரனின் பெயரை கேட்டதும் பயத்தில் கதவை அடைக்க அதற்குள் ஆரதி அதை தடுத்து உள்ளே சென்றாள். அந்த சத்தத்தில் வீட்டில் இருந்த மற்ற இருவரும் யார் என வந்து பார்க்க, வீட்டுக்குள் புதிதாக வந்திருப்பதைக் கண்டு குழப்பத்தில், “யாரு நீங்க எல்லாம்? எதுக்காக கதவை இப்படி தள்ளுறிங்க?”
“யாருன்னு அப்புறம் சொல்லலாம்… முதல்ல நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று கண்ணன் உள்ளே வர,
அவனது தோற்றமே யார் என்பது கூறிவிட, பயத்தில் வெலவெலத்து போயினர் மூவரும்.
“சந்திரன் எங்க?”
“தெ.. தெரியாது.”
“அனிதா எங்க?”
இந்த முறை தெரியாது என்ற பதிலைக் கூட சொல்ல நா எழவில்லை மூவருக்கும். பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் மூவரில் ஒருவனை அழைத்த கண்ணன், தன் கையில் இருக்கும் பிஸ்டலால் கழுத்தை சுற்ற …, அதை பார்த்த மற்ற இருவருக்கும் உயிரே போனது.
“இங்க பாருங்க.. உங்க கிட்ட பொறுமையா விசாரிக்க நேரமில்லை. இங்க சந்திரன் அனிதா வந்ததற்கான ஆதாரம் இருக்கு. ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லுங்க. இல்லன்னா மூணு பேர் உயிரும் இங்கயே போயிடும்.”என்றவன் துப்பாக்கியால் பிடித்திருந்தவனை விட, அவன் அலறி அடித்து ஓடி நண்பர்களுடன் நின்று கொண்டான்.
“சார் நாங்க மூணு பேரும் ஒரே ஊரை சேர்ந்தவங்க. சென்னைக்கு புதுசு. ஒரு எம்என்சி கம்பெனிக்கு வேலைக்கு போனோம். 15 நாள் ட்ரெய்னிங் இருந்தது. எங்களை மாதிரியே வேலைக்கு வந்து இருந்தான் சந்திரன். அப்போதான் எங்களுக்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 15 நாள் ட்ரெய்னிங் ல அவன் சரியா வேலை பார்க்கலன்னு அனுப்பிட்டாங்க. ஆனா எங்க கூட நல்லா பேசிட்டு இருந்தான். ஹாஸ்டல் சாப்பாடு எங்களுக்கு ஒத்துக்கல. தனியா வீடு எடுத்து தங்கலாம்னு முடிவு பண்ணோம். சென்னைக்கு புதுசு என்றதால வீடு பார்க்க சிரமமா இருந்துச்சு. சந்திரன் கிட்ட தான் உதவி கேட்டோம். அவன்தான் இந்த வீட்டை பார்த்து கொடுத்தான். அதிலிருந்து அடிக்கடி வீட்டுக்கு வருவான். ஞாயிற்றுக்கிழமை ஆனா இங்க தான் இருப்பான். ஒருநாள் நாங்க நாலு பேரும் கடைக்கு போணோம். அது அனிதா வேலை பார்க்கிற கடைதான். பொருள் வாங்கிட்டு பில் போடும்போது என்னோட ஃபோன் காணோம். எங்க பக்கத்துல அனிதாதான் நின்னுட்டு இருந்தாங்க. அவங்க தான் எடுத்தாங்க நினைச்சு நாங்க சண்டை போட்டோம். அனிதா ரொம்ப கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஊர விட்டு வேலைக்காக இங்க வந்திருக்க, வேலை இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவன்னு கெஞ்சி கேட்டாங்க. அந்தக் கடையில அப்போ கேமரா இல்ல. இந்த விஷயம் ஓனர் வரைக்கும் போய் கடைசில அந்த போன் பேஸ்கட்டிலேயே இருந்துச்சு. நாங்க கஷ்டமரா போனதால ஓனரால ஒன்னும் பேச முடியல. அன்னைக்கு ராத்திரி… ரொம்ப நேரமா அந்த பொண்ண பத்தி பேசிட்டு இருந்தான். அவனோட பேச்சு எங்களுக்கு பிடிக்கல. எதோ போதையில பேசுறான்னு நினைச்சோம். கொஞ்ச நாள் கழிச்சு ஒருநாள் அனிதாவை இங்க கூட்டிட்டு வந்தான். அப்போ தான் எங்களுக்கு தெரியும். ரெண்டு பேரும் காதலிக்கிறது. அன்னைக்கு முழுக்க அந்த பொண்ணு இங்க தான் இருந்துச்சு. அப்புறம் அடிக்கடி வரதும் போவதுமா இருக்கும். பகல்ல நாங்க வேலைக்கு போறதால ஒன்னும் தெரியல சார். சந்திரன்தான் இந்த வீட்டை பார்த்து கொடுத்ததால எங்களால ஒன்னும் சொல்லவும் முடியல. அப்படியே கொஞ்சம் மாசம் கழிச்சு….அனிதா வேலையை விட்டு நின்னுட்டான்னும், ஒரு வரம் மட்டும் இந்த வீட்டில தங்க இடம் கொடுங்கன்னு கெஞ்சி கேட்டான். வயசு பொண்ணுக்கு போக இடம் இல்லன்னு… நாங்களும் ஒரு வாரம் அந்த பொண்ண இங்க விட்டுட்டு வெளிய தங்குனோம். எங்களுக்கான எல்லா செலவையும் அப்போ சந்திரன்தான் பார்த்தான். ஒரு வாரம் கழித்து.. போன்ல, அனிதாக்கு வேலை கிடைச்சிருச்சு. அவ வேற இடத்துல தங்க போற நீங்க வாங்கன்னு சொன்னான். அவ்வளவுதான் சார் எங்களுக்கு தெரியும். அதுக்கப்புறம் அந்த பொண்ணு இங்க வரவே இல்லை. இவனும் வரத குறைச்சிக்கிட்டான். அனிதா கூட சந்திரன் தங்கி இருந்ததா பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. ஹவுஸ் ஓனர்க்கு தெரிஞ்சி வீட காலி பண்ணச் சொல்லிட்டாரு. அவர் கிட்ட ரொம்ப கெஞ்சி இங்கேயே தங்க சம்மதம் வாங்கினோம் சார். ஒரு மூணு மாசம் கழிச்சு போன் பண்ணி , நான் வெளியூர் போற… டா. எனக்கு அனிதாக்கும் சின்னதா ஒரு பிரச்சனை. என்னை பத்தி யாரும் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லுங்கன்னு சொன்னான். அவனால ஏதாச்சும் பிரச்சினை வரும்னு அதுக்கப்புறம் நாங்களும் பேசுறத விட்டுட்டோம்.”
“வெளிநாட்டுக்கா?”
“ஆமா சார்! ஆனா, எந்த இடம்னு சத்தியமா எங்களுக்கு தெரியாது.”
“அவனோட வீடு தெரியுமா? “
“தெரியாது சார். வீட்டை பத்தி எதுவுமே சொல்ல மாட்டான். அடிக்கடி வேற வேற பைக்ல வருவான். அவங்க அப்பா பெரிய ஆள்னு சொல்லி இருக்கான். என்ன ஏதுன்னு விவரமா சொன்னதில்லை. நாங்க கேட்டாலும் எதாவது செலவு பண்ணி அந்தப் பேச்சை மாற்றிடுவான்.”
“அவனோட போன் நம்பர் என்ன?”
ஏற்கனவே சித்து கண்டுபிடித்த தொலைபேசி எண்ணை கூற,”கண்ணா இது எங்கிட்டையே இருக்கு. அந்த நம்பர் வேற ஒருத்தர் நம்பர். ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு. அவரோட போன திருடி இவன் யூஸ் பண்ணி இருக்கான். “
“வேற ஏதாச்சும் நம்பர் இருக்காடா?”
மூவரில் ஒருவன் இல்லை என்று தலையசைக்க, மற்றொருவன் ஆமாம் என்று சொல்ல வந்து நிறுத்தி விட்டான். அதை கவனித்த தினேஷ்,
“உனக்கு அவன் நம்பர் தெரியுமா?”
திரும்பி மற்ற இரு நண்பர்களும் பார்த்தவன் எச்சிலை விழுங்கி, “தெரியாது சார் ஆனா அவ போன் ல ரெண்டு சிம் கார்டு இருக்கும். நான் பார்த்து இருக்கேன்.”
இதற்கு மேல் எதுவும் தெரியாது என்று மூவரும் சரணடைந்து விட, “ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்தா என்ன ஏதுன்னு கேட்காம விட்டுட்டு போவீங்களா? உங்க கூட பொறந்த தங்கச்சியா இருந்தா இந்த மாதிரி செய்வீங்களா டா? வீடு எதுன்னு கூட தெரியாத அளவுக்கு அப்படி என்ன பிரெண்ட்ஷிப். எவனாவது செலவு பண்ணா அமைதியா அனுபவிப்பிங்களா? இப்போ அனிதா இறந்துட்டா தெரியுமா? “
கண்ணனின் பேச்சில் மூவரும் அரண்டு நிற்க, “இனிமே நீங்க மூணு பேரும் என் பார்வையில தான் இருப்பீங்க.நாங்க விசாரிச்ச விஷயம் சந்திரன் காதுக்கு போக கூடாது. எங்க போறதா இருந்தாலும் என் கிட்ட சொல்லிட்டு தான் போகணும். புரிஞ்சுதா?” புரிந்தது என்பதைப்போல் தலையசைக்க, அங்கிருந்து புறப்பட்டனர் நால்வரும்.
“கண்ணா! ராபர்ட் கொலை நடந்த இடமும் அனிதா இருந்த இடமும் ஒரே இடம். இதுல ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமோ?”
“எனக்கும் அதே யோசனைதான் ரதி.”
இருக்கு ஆதி! அனிதாவை நிச்சயமாக அங்க கொலை செய்திருக்க முடியாது. வேற எங்கேயோ கொலை நடந்திருக்கு. அதுக்கப்புறம் இங்க வந்து இருக்காங்க. நிச்சயமா இது அவனுங்களுக்கு பழக்கப்பட்ட இடமாக இருக்கும். மைக்கேலுக்கும் இதுல சம்பந்தம் இருக்கலாம் .இல்ல’ன்னா அவனோட சேர்ந்த யாரோ ஒருத்தர் இதை பண்ணி இருக்கலாம். மைக்கேல் ஓட வயதும், நம்ம தேடிக்கிட்டு இருக்க சந்திரனோட வயதும் வேற வேற. ஆனால் குற்றவாளிகள் ஒரே இடம்தான்.” சித்து.
“இப்போ முதல்ல நம்ம விசாரிக்க வேண்டியது மைக்கேலை தான்.” தினேஷ்.
“ஹ்ம்ம்! ஆமா தினேஷ். ஆனா அதுக்கு முன்னாடி ராபர்ட் பத்தி தெரியணும். முதல்ல அதை விசாரிச்சுட்டு, அப்புறம் அனிதா கேசை விசாரிக்கலாம். ஒரே நேரத்துல இரண்டையும் கேட்டா, மாத்தி மாத்தி சொல்லி தப்பிக்க வாய்ப்பு இருக்கு. அதுவுமில்லாம அனிதா பத்தி வெளியே தகவல் எதுவும் வந்துட கூடாது. குற்றவாளி தப்பிக்க வாய்ப்பு இருக்கு.”
********************************
நால்வரும் மைக்கேலை விசாரிக்க கண்ணனின் விசாரணை அலுவலகத்திற்கு நுழைய, சரியாக அந்த நேரம் சித்துவிற்கு போன் வந்தது. அதை உடனே எடுத்தவன்,
“சொல்லுங்க அத்தை!”
“சித்து எங்க இருக்க? அண்ணிக்கு உடம்பு முடியல.
அத்தையின் பேச்சில் திடுக்கிட்டவன், “அத்தை அம்மாக்கு என்ன ஆச்சு? “
“ஒண்ணும் இல்ல டா ..தங்கம். மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. எம்ஆர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். சீக்கிரமா விஷயத்தை மத்த ரெண்டு பேருக்கும் சொல்லிட்டு, வந்து சேருங்க.”
சித்துவின் பேச்சில் மற்ற இருவரும் பதறி என்னவென கேட்க, “எம் ஆர் ஹாஸ்பிடலுக்கு போகணும் கண்ணா. அம்மாவா அட்மிட் பண்ணி இருக்காங்க.”
டிரைவரை மறுத்தவன் தானே காரை இயக்கி, அடுத்த சில நிமிடங்களில் எம்ஆர் மருத்துவமனைக்கு வந்திருந்தான். காரைச் செலுத்தும் வேகமே அவனின் பயத்தை எடுத்துரைத்தது. கொல்கத்தாவிக்கு சென்று வந்ததிலிருந்து தன் தாயிடம் பேசாத நிகழ்வுகள் நினைவில் வர தன்னை தானே கடிந்து கொண்டான் மனதில். நடையை ஓட்டமாக மாற்றி..அத்தையின் தகவலில் மஹாலட்சுமியை சேர்த்திருக்கும் அறை முன் நின்றான்.
அங்கே அவனுக்கு முன்னே… சரஸ்வதி, நாராயணன், ரதிதேவி, ராசாத்தி வானதி எனக் குடும்பமே நின்றிருக்க, “அத்த அம்மாக்கு என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்காங்க? டாக்டர் என்ன சொன்னாங்க?”
மகனின் கையில் அழுத்தத்தைக் கொடுத்து நாராயணன், “ரிலாக்ஸ் கண்ணா. அம்மாக்கு ஒன்னும் இல்ல. சின்ன மயக்கம்தான். தங்கச்சி தான் இவ்வளவு பெருசாகிடுச்சு ஆர்ப்பாட்டம் பண்ணி.”
“அண்ணா! பேசிட்டே இருந்தவங்க திடீர்னு மயக்கம் போட்டு விழுந்தா எப்படி இருக்கும்! அதுவும் அண்ணிய நான் இந்த மாதிரி பார்த்ததே இல்லை.”
“தப்பு சொல்லல மா. கொஞ்ச நாளா அதிகமா யோசிச்சதோட விளைவு. வேற ஒன்னும் இருக்காது. இருக்காதுன்னு நம்புவோம்.” கடைசி வார்த்தையே அவரின் மனதில் இருக்கும் பயத்தை காட்டிவிட, சித்துவும், கண்ணனும் இருபுறமும் அமர்ந்து தன் தந்தைக்கு துணை நின்றனர். இவை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க… ஆரதியோ, எதுவும் பேசாமல் மௌனமாக அத்தையின் அறையவே பார்த்திருந்தாள்.