ஆரதி வெகு நேரம் அசையாமல் தன் அத்தையின் அறையவே பார்த்திருந்தாள். அதை கவனித்த சரஸ்வதி, “ஆதி! அண்ணிக்கு ஒன்னும் ஆகாது. இப்படியே நிக்காத . வந்து உட்காரு..”
“என் அத்தைக்கு ஒன்னும் ஆகாது. அது எனக்கே தெரியும். ஆனா அம்மா.. இப்போ அத்தை இப்படி இருக்குறதுக்கு நான்தான் காரணம்.”
“இப்ப வருத்தப்பட்டு நிக்கிறது ல எந்த பலனும் இல்லை. இப்படி ஒன்னு நடக்கக்கூடாது’னு தான் உன்கிட்ட எவ்வளவோ பேசினோம்.”
சரஸ்வதியின் வார்த்தையை தவிர்க்க விரும்பிய நாராயணன், “என்னம்மா நீ.. இப்ப எதுக்கு இந்த பேச்சு. இதுல தப்பு எல்லாரு மேலயும் இருக்கு. ஆதி மட்டும் காரணமில்லை.மஹாக்கு எதுவும் இல்லை…. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.”
இவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டிருந்த கண்ணன் என்னவென சித்துவிடம் கேட்க, அன்று வீட்டில் ஆரதியிடம் பேசியதை தெரிவித்தான்.
கண்ணனுக்கு இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. இன்று தான் இத்தனை நாள் அலைந்த அலைச்சலுக்கு பலன் கிடைத்தது. அதை முழுசாக அனுபவிக்க விடாமல் அனிதாவின் பிரச்சனை உருவாகிவிட்டது. அதையும் சேர்த்து கவனிப்பதற்குள் அன்னையின் பிரச்சனை. வெளி வேலைகளில் தீர்வு காண ஓடியவன் தன் வீட்டை கவனிக்க மறந்து விட்டான். ஆரதி அவனின் வாழ்வில் முக்கியமான அங்கம். அதை அவசர அவசரமாக இத்தனை பிரச்சனைக்களுக்கு நடுவில் சேர்த்துக் கொள்ள மனம் விரும்பவில்லை. அதிலும் வானதி இருக்கும் நிலையில்…யோசிக்கவே மனம் வரவில்லை. அதே நேரம் இத்தனை நாள் தன் அன்னையை காயப்படுத்திய செயலுக்கு மருந்தாக வேறு எதையும் கொடுக்க முடியாத நிலை. ஆரதிக்கும் எதிர்கால கனவுகள் ஏராளம். அதை கைப்பற்றும் நொடியே தகர்த்தெரியவும் முடியாது. காதலனாய், மகனாய், காவலனாய்.. எந்தப்பக்கம் நிற்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்க கூட அவனிடம் உறுதியில்லை. யாரோ ஒருவரை விட்டுக்கொடுத்து யாரோ ஒருவரை காயப்படுத்தியே தீர்வு காணப் போவதாக உள்மனம் எடுத்து உரைத்து கொண்டே இருந்தது. தன் அன்னையிடம் அனிதாவை பற்றி சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்வார். ஆனால் மனதில் இருந்த எண்ணங்களுக்கு ஆணிவேராய் இந்தப் பிரிவு அமைந்துவிடும். மேலும் மேலும் அவரின் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதையும் உணர ஆரம்பித்தான் கண்ணன்.
அறையில் இருந்து வெளியில் வந்த மருத்துவர், “ஹி இஸ் பைன். கொஞ்சம் சோர்வா இருக்காங்க. உடம்புல போதுமான அளவு நீர் ஆதாரம் இல்ல. லோ பிபி…இருக்கு. ஓவர்தின்கிங்..ல உடம்பு கவனிக்காம விட்டு இருக்காங்க. சரியா சாப்பிடுறது இல்லை னு நினைக்கிறேன். இந்த வயசுக்கு மேல ஓய்வு ரொம்ப அவசியம். அதுவும் மனசு அமைதியா இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். இப்போதைக்கு பிரச்சினை இல்லை. இனிமே பிரச்சனை வராமல் இருக்கிறது அவங்க கைல தான் இருக்கு. முடிஞ்சவரைக்கும் அதிகமா யோசிக்க வைக்காம ரிலாக்ஸா இருக்கு சொல்லுங்க. ட்ரிப்ஸ் ஏறுது..இன்னும் ஒரு டூ ஹவர்ஸ் ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.” தகவலை சொல்லி விட்டு மருத்துவர் தன் அறையை நோக்கி செல்ல,
“சார் அம்மாக்கு வேற எந்த பிரச்சினையும் இல்லையே?”கண்ணனின் கேள்வியில் நடை தடைப்பட நின்றவர்,
“எந்தப் பிரச்சினையும் இல்லை சார். பிரச்சனை மனசுல தான். அத நாங்க சரி பண்ண முடியாது. முடிஞ்சவரைக்கும் என்னன்னு கேட்டு சரி பண்ண பாருங்க.”
“தேங்க்ஸ் டாக்டர்.”
அனைவரும் அறைக்குள் நுழைய , அந்த வீட்டின் மஹாலட்சுமி தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். தனிமையில் வாழ்ந்தவர் நாராயணன் காதல் கிடைத்ததால் தான் வாழ்வின் இன்பத்தையே காண ஆரம்பித்தார். அதிலும் அதை கல்யாணமாக மாற்ற சண்முகம் செய்த உதவி ஆணித்தரமாக மஹாலட்சுமியின் மனதில் பதிந்து விட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை தங்கையாக ஏற்றுக்கொண்ட சண்முகத்தை இன்றுவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பெண் குழந்தை மீது அலாதி பிரியம் கொண்ட மஹாலட்சுமிக்கு ஆரதி ஆசையின் வடிகாலாய் அமைந்து விட்டாள். அவளின் சேட்டை, பக்குவம், அன்பு, தைரியம் அனைத்தையும் கண்டவருக்கு உள்ளுக்குள் ..ஆசை விதை ஆயிரம் கால மரமாக வளர்ந்து இருந்தது. முதலில் அது நொருங்கிய நொடியே மிகவும் வருந்தியவருக்கு, இரண்டாவது முறையும் நடக்கவே நடக்காது என்பது புரிய மொத்தமும் தன்நிலை மறந்து விட்டார். அன்று கண்ணனும் ஆரதியும் விரும்புவதை கேட்டவருக்கு ஆனந்தத்தை விட ஏமாற்றமே பெரிதாக இருந்தது.
ஒன்று தன் நேசித்தவர்களே தன்னிடமிருந்து மறைத்தது. மற்றொன்று பிள்ளைகளின் மனதை கூட புரிந்து வைத்துக் கொள்ளாத தாயாக இருந்தது. சம்பவம் நடந்ததிலிருந்து இந்த இரண்டும் மாறி மாறி அவரை தாக்க ஆரம்பித்து இருந்தது. அதன் விளைவே இன்று மருத்துவமனை.
தாயின் அருகில் சென்றவன் கைப்பிடித்து, “அம்மா… “
பிள்ளை அழைப்பு கேட்டு விட்டதோ என்னமோ மெல்ல கண் திறந்தார்.
மகன் கேட்கப்போகும் கேள்விக்கு முன்னரே தான் நலம் என்பதை குறிப்பால் உணர்த்தியவர் எழுந்து அமர முயல, வாழ்வின் இரு தூண்களும் அவரை தாங்கிக் கொண்டது. அப்போதுதான் தன் கணவனைக் காண, கண்களில் ஆயிரம் கண்டிப்பு. மௌனமாக அவரையும் கடந்து பார்வையைச் சுழல விட, கதவின் மீது சாய்ந்துகொண்டு ‘அழவா’ என்ற பாவத்தோடு நிற்கும் மருமகளை கண்டவர் அழைக்க,
அத்தையின் மடி சேர்ந்தவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.
கண்ணனும் அதையே பின்பற்ற அண்ணன் வழியை தம்பியும் பின்பற்றினான். வெகுநாட்கள் கழித்து மடி நிறைந்தது தாய் உள்ளத்திற்கு. சில நாட்களாக ஏதோ ஒன்று இவர்களுக்குள் மறைமுகமாக தடை ஏற்படுத்தி இருக்க இன்று அதையும் உடை தெரிந்துவிட்டது பாசம்.
“சாரி அத்தை! எனக்கு வாய்த்தவறி அப்படி ஒரு வார்த்தை வந்துடுச்சு. நீங்களே இல்லைன்னு சொன்னாலும் இது என்னோட வீடு தான். அத யாராலயும் மாத்த முடியாது. நான் உங்க மருமக தான… ஏண்டி இப்படி பண்ணன்னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். இப்படியா உடம்ப கவனிக்காம இருந்து பழி வாங்குவீங்க…..”
பதிலேதும் சொல்லாமல் தலையை தடவிக் கொண்டிருக்க.. அன்னையின் கையைப் பற்றி தன் கன்னத்தில் ஒற்றியவன்,”உங்களை ஏமாற்றணும்னு என்னைக்கும் நான் நினைக்கல…ம்மா. என் அம்மா எனக்கு எல்லாத்தை விட பெருசு. சூழ்நிலை இப்படி ஆகும்னு எதிர்பார்க்காம பண்ணிட்டோம். அது உங்களை இவ்வளவு பாதிக்கும் னு நினைக்கல ம்மா. கொஞ்ச நாளா ரொம்ப வேலை. சாப்பிடக் கூட நேரம் இல்லாம இருந்த ம்மா. அதான் உங்ககிட்ட பேச முடியல. வீட்ல உங்கள சுத்தி எல்லாருமே இருக்காங்கன்னு தான் நான் என்னோட வேலையை பார்க்கப் போனேன். யார் இருந்தாலும் என் அம்மாவை நானும் பார்த்து இருக்கணும்’னு இப்ப புரியுது. இனிமே இந்த தப்பை பண்ண மாட்டேன். என் அம்மா ஆசைப்பட்டது ஒவ்வொன்னா நடக்கும். ப்ராமிஸ் ம்மா . இனிமே இப்படி இருக்காதீங்க. ரதி என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியமோ.. அதே மாதிரி தான் நீங்களும். “
“பாரு ஆதி சார்க்கு ரதி முக்கியமா.. இவன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம.. இந்தப் பேரைச் சொல்லி தான் இவ்வளவு பிரச்சினை. திரும்பவும் ஆரம்பிக்கிறான் பாரு.”
என்றவனுக்கு முறைப்பை பரிசாக தர,
“என்ன லுக்கு… என்னோட அம்மா மகாராணி மாதிரி மட்டன் பிரியாணி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.. சும்மா இல்லாம என்னென்னமோ சொல்லி இப்படி ஆபரேஷன் பண்ண ஆயா மாதிரி படுக்க வச்சிட்ட. இப்போ உனக்கு சந்தோஷம்தான. நல்லவேளை என்னோட அம்மாக்கு ஒன்னும் ஆகல. இல்லனா என்னோட கல்யாணத்தையும் குழந்தையும் பார்க்காம கஷ்டப்பட்டு இருப்பாங்க. நீ எல்லாம் ஒரு மகனா..! உன்னை பெத்ததுக்கு எங்க அம்மா பினாயில் வித்து இருக்கலாம்.” தம்பியின் பேச்சில் மேலும் முறைத்தவன் அடிக்க கை ஓங்க, அதற்குள் அடித்துவிட்டார் நாராயணன்.
“நாங்களாவது பரவாயில்லை பேச மட்டும் தான் செய்றோம். நீ சொந்த வீட்டுக்குள்ள ரகசியமா குடும்பம் நடத்துனியே அந்த தைரியம் எல்லாம் எங்களுக்கு இல்லை.”இந்த முறை ஆரதியும் சேர்ந்து அடிக்க, மஹாலட்சுமியின் உதட்டில் பல நாள் கழித்து புன்னகை. சரஸ்வதி, ரதிதேவி, வானதி, ராசாத்தி என அனைவரும் தொடர்ந்து நலம் விசாரிக்க அத்தனை பேருக்கும் சிரித்த முகமாகவே பதிலளித்தார் மஹாலட்சுமி.
“அத்தை! கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன். என்ன பண்ணா நீங்க சந்தோஷமா இருப்பிங்க. சொல்லுங்க… இனிமே உங்கள எதுக்காகவும் கஷ்டப்படுத்த மாட்டேன். ” ஆரதியின் பேச்சுக்குக் கண்ணனும் இணைந்து கொள்ள, மஹாலட்சுமிக்கு பதில் கூற வருவதற்குள் சரஸ்வதி முந்திக் கொண்டு,
“அண்ணி என்ன நடந்தா சந்தோஷமா இருப்பாங்கன்னு தெரியாதா? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும். எந்த சாக்கும் சொல்லாம.. உங்க கல்யாணத்துக்கான வேலையை ஆரம்பிச்சாலே போதும் அண்ணி சரி ஆகிடுவாங்க.”
சரஸ்வதியின் பேச்சில் இருவரும் ஒருசேர வானதியை பார்க்க, அவளோ அங்கிருந்து நகர்ந்து இருந்தாள். இதுதான் நடக்கும் என்பதை முன்னரே யூகித்த ஆரதி சம்மதம் தெரிவிக்க, அதன்பின் கண்ணனின் உதடுகளும் தானாய் சம்மதித்தது அன்னைக்காக.
“அம்மா உங்க இஷ்டப்படியே கல்யாணம் நடக்கட்டும். ஆனா அத ஒரு வாரம் கழிச்சு ஆரம்பியுங்க. இப்ப நான் எடுத்திருக்க கேஸ் கொஞ்சம் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இனிமே இந்த மாதிரி இருக்காதீங்க. உங்கள இந்த மாதிரி பாக்க முடியல மா. சித்து சொன்ன மாதிரி என் அம்மா எப்பவுமே எனக்கு மகாராணி தான். அவங்க எப்பவுமே சிரிச்ச முகத்தோட அந்த வீட்டை ஆளனும். “
ஒரு வார்த்தை பேசாமல்.. தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்ட மஹாலட்சுமிக்கு உள்ளுக்குள் வெகு நாட்கள் கழித்து பரம நிம்மதி. அதை வெளிக்காட்டும் விதமாக,
“எனக்காக நீங்க சம்மதிக்க வேண்டாம்…ஆதி. இனிமே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் என்னை மறந்து இத்தனை பேரையும் கஷ்டப் படுத்திட்டேன்.” அத்தையின் பேச்சை இடை வெட்டிய ஆரதி,
“உங்களுக்காக இல்ல அத்தை. நெஜமாவே அன்னைக்கு வீட்ல சண்டை நடந்த அப்பவே கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்தான். கண்ணாவோட வேலைக்காக தான் அமைதியா இருந்தேன். இனிமே எந்த பிரச்சினையும் இல்லை… நீங்க கல்யாணம் வேலைய ஆரம்பிங்க.”
ஆரதியின் வார்த்தையில் பெரும் மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்த மஹாலட்சுமி மருமகளை மார்போடு சேர்த்து அனைத்து முத்தமிட அதை கண்டவர்களின் கண்ணில் நிறைவான மகிழ்ச்சி.
“அம்மா இவங்க கல்யாணம் பண்ணலனா கூட பரவாயில்ல. உங்க ஆசைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சீக்கிரமா உங்களுக்கு பிடிச்ச பொண்ணா
பாருங்க. “
இப்படியே கடைசி வரைக்கும் பேசிட்டே தான் இருக்கப் போற. உனக்கு அறுபதாம் கல்யாணம் கூட கிடையாது. கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான். வீட்ல சும்மா வெட்டியா இருக்காம.. எங்க கல்யாண வேலையை கவனி போ… ” என்ற கண்ணன் வெளியில் செல்லுமாறு ஜாடை காட்ட, அதைப் புரிந்து கொண்ட சித்துவும் வானதி இருக்கும் இடம் நோக்கி சென்றான்.
வெளியில் வந்தவன் வானதியை தேட அவள் அங்கு இல்லை. பதட்டமாகி மருத்துவமனையில் உள்ள சிறு பார்க்கிற்க்கு தேடிக் கொண்டு வர, மாலை மறையும் சூரியனை விழி கலங்கிய கண்களோடு பார்த்து கொண்டு நின்றிருந்தாள் வானதி.