சூரியன் கொஞ்ச கொஞ்சமாய் தன் கதிர்களை சுருட்டிக் கொண்டதன் பயனாய் வானம் கருமையை தத்தெடுக்க அந்த மாலை மங்கும் வேளையில் சுந்தரமூர்த்தி எதிரில் அமர்ந்திருந்தான் தினகரன்.
அவரிடம் பேச வேண்டும் என்ற முடிவை எடுக்க மனதால் அவன் நிறையவே பிராயத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
சில நாட்கள் முன்பு சுந்தரமூர்த்தி மகளை தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாய் அவரிடம் போய் நிற்பாய் என யாராவது அவனிடம் கூறி இருந்தால் நக்கலாய் சிரித்து இருப்பான்.
ஏனெனில் கல்யாணம் என்பதே கடமைக்காக என்று இருந்தவன்..!!
பழி வாங்கும் பழக்கம் இல்லை என்றாலும் தனக்கு பிடிக்காத ஆட்களை துரும்பாக கூட மதிக்க மாட்டேன் என்ற ஈகோவை கழுத்துவரை கொண்டவன்..!! இன்று இரண்டுமே மறந்து அவள் மட்டுமே போதும் என தவம் இருக்க வைத்த பெருமை காதலையே சாரும்..!
ஆம்..!! காதல் தான்.. இந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்பதில் தொடங்கிய உணர்வு இப்போது இவளின்றி வாழ்க்கையே இல்லை என்னும் அளவு வளர்ந்து விருட்சம் அடைந்து இருந்தது..
முதல் பார்வையில் வந்த காதல் இல்லை என்றாலும்.. இப்போது ஒவ்வொரு சந்திப்பிலும் மீண்டும் மீண்டும் காதலில் விழுந்தான்.
கமலினியுடன் மட்டும் தான் வாழ்க்கை என்று அவன் இருக்க அவளோ உன்னோட வாழ்வதில் நிம்மதி இருக்காது எனச் சொல்லியது அவனை வெகுவாய் தாக்கி இருக்க,
‘காதலும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்..’ என வீசிவிட்டு தான் எழுந்து வந்தான். ஆனால் அந்த எண்ணத்தோடு அன்றைய இரவு வரையில் கூட கடக்க முடியவில்லை. அவனின் கர்வம் அத்தனையும் தகர்ந்து அவளே வேண்டும் என மனம் ஏங்கியது. எங்கே தான் ஆத்திரத்தில் சொன்ன வார்த்தைகளை பிடித்துக் கொண்டு இனி தன் திசையே திரும்ப மாட்டாளோ என்று நிலைக் கொள்ளாமல் தவித்தான்.
அவ்வாறு மிகுந்த யோசனையில் உழன்றவன் இறுதியாக தான் அந்த முடிவை எடுத்தான். அவளுக்கு அது தான் சந்தோஷம் எனில் அதனை கொடுக்க எதுவும் செய்வேன் என நினைத்தான். அதிலும் கமலினியிடம் கூறியபோது அவள் முகத்தில் வந்துபோன பாவனை..!! அதற்காக என்ன வேண்டும் என்றாலும்
செய்யலாம் எனத் தோன்றியது.
இப்போதும் அதனையே மனதில் நிறுத்தி தன் வருகையை உதாசீனப்படுத்தி பேசும் தன் வருங்கால மாமனாரிடம் பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தவன்,
“உங்ககிட்ட நான் இவ்வளவு தன்மையா பேச நினைக்கிறேனா.. இப்ப வார்த்தையை விட்டுட்டு பின்னாடி என்னை மருமகனா பார்க்கும்போது சங்கடமா ஃபீல் பண்ணுவீங்களே என்ற நல்ல எண்ணத்தில் தான்.. அதை நீங்களும் உணர்ந்துக்கணும்…”
என்று சொல்ல கேட்டிருந்த மனிதர் டென்ஷன் ஆகிவிட்டார்.
“திரும்ப திரும்ப அதையே சொல்லி என் கோபத்தை கிளராத…!! உன் அப்பாகிட்ட புரியும்படி தானே சொல்லியமிச்சேன்..!! என்கிட்ட அம்புட்டு ரோஷமா பேசிட்டு போனவன் உன்கிட்ட சொல்லலையா..?”
“ம்ஹும்.. அக்சுவலீ நீங்க அப்பா கிட்ட அப்படி சொன்ன பின்னாடி தான் எனக்கு இப்படி ஒரு எண்ணமே வந்தது. நினைக்காத நினைக்காதன்னு சொல்லியே நினைக்க வைச்சுட்டீங்க..”
என்று அவன் வேண்டுமென்றே சொல்ல சுந்தரமூர்த்தி முகம் போன போக்கை சொல்லவும் வேண்டுமோ..?
“உனக்கு எல்லாம் என் பொண்ணை கட்டித்தர ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்..”
“ஏன்..? அப்போ உங்களுக்கு உங்க மக கல்யாணத்தை பார்க்க ஆசை இல்லையா..?”
அவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ‘நீங்கள் சம்மதிக்கவில்லை என்றாலும் நான் கல்யாணம் செய்வேன்..’ என சொல்லாமல் சொன்னான்.
“டேய்… என்ன தெனாவெட்டு உனக்கு..?”
“ஷ்ஷ்.. கத்தாதீங்க..!! உங்க கூட சண்டை போடுற ஐடியா எனக்கு இல்ல…
என்னங்க நான் உங்களுக்கு பண்ணிட்டேன்..? ஏன் ஆரம்பத்தில் இருந்து என் மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்பு.. உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. நீங்களா தான் என் வழியில் குறுக்கிட்டீங்க..”
“ரொம்ப நல்லவன் மாதிரி கேள்வி கேட்கறீயா..? மீசை அரும்ப ஆரம்பிச்ச வயசுலயே ராஜா அத்தான்கிட்ட கை ஓங்கிட்டு போன ரௌடி பைய தானே நீ.. என்கிட்ட எவ்வளவு திமிர நடந்து இருக்க.. எல்லாத்தையும் மறந்திடுவேன் நினைச்சியா..”
என்று அவர் சொல்லவும் சலிப்பாய் உச்சுக் கொட்டினான்.
“அது நடந்து முடிச்சு பல வருஷம் ஆகிடுச்சு..!! அந்த வயசுல அப்போ இருந்த மனநிலையில் எனக்கு அது தான் செய்ய தோணுச்சு.. இப்பவும் அதை தப்புன்னு நான் ஒத்துக்கவே மாட்டேன்.. உங்க மனசாட்சியை கேட்டு பாருங்க.. தப்பு எங்க மேலயா இல்ல எங்க அப்பாவோட அண்ணனுங்க மேல யா..?”
என்றவன் அவர் பதில் சொல்லாமல் விறைப்பாய் அமர்ந்து இருக்கவும் பெருமூச்சுடன்,
“நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. ஏன்னா.. உங்களுக்கு அவங்க தான் ஒசத்தி..!
எங்க அப்பாவும் உங்களோட அத்தை பையன் தானே.. பெரியப்பா ரெண்டு பேர் மேலயும் வைச்சு இருக்க மரியாதையை நீங்க எங்க அப்பாக்கு கொடுத்ததே இல்ல.. இத்தனைக்கும் உங்களை விட வயசில் மூத்தவர் எங்க அப்பா..!! உங்க பாசம் கூட சமூக அந்தஸ்து பார்த்து தான் வரும் இல்ல..”
என ஏளனமாய் உதட்டை சுழித்து சொல்ல அவர் முகம் கறுத்தது.
“ஆனா… நான் அப்படி கிடையாது.. மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.. அது உங்களுக்கு திமிரா தெரிஞ்சா..”
என அலட்சியமாய் தோளை குலுக்கி அப்பேச்சை நிறுத்தியவன்,
“நீங்க எதிர்பார்க்கிற அந்தஸ்தும் பணமும் இப்ப எங்களுட்ட நிறையவே இருக்கு.. ஆனாலும் உங்களால அதை ஏத்துக்க முடியல.. ஏன்னா உங்களை எல்லாம் எதிர்த்து நின்ன நான் ரௌடியாகவும் உருப்படாமாலும் போயிருந்தால்,
‘பார்த்தியா.. நாங்க சொன்னது தான் சரின்னு..’ எங்க அப்பா அம்மாவுக்கு அறிவுரை சொல்லி திருப்தி பட்டிருப்பீங்க.. அது நடக்காதது ரொம்ப வருத்தம். அப்படி தானே.!! எங்க வளர்ச்சியில் புகைச்சலோட பெரியப்பா பேச்சை கேட்டுக்கிட்டு நீங்க செஞ்ச வேலை எல்லாமும் எனக்கு தெரியும்.. அதையும் மீறி உங்ககிட்ட வந்து நிற்கிறேனா.. அதுக்கு காரணம் கமலினி மட்டும் தான்..”
அதுவரை இறுக்கமாய் பேசி வந்தவன் குரலில் கமலினி என்றதும் தன்னை போல் ஒரு மென்மை பூத்தது எனில் அது சுந்தரமூர்த்தி கவனத்திலும் பதிந்தது.
“கமலினிக்கு நீங்கன்னா உயிர்ன்னு இந்த கொஞ்ச நாளிலே புரிஞ்சுது.. அவளை நேசிக்கும்போது உங்களை வெறுத்தால் அந்த உறவு அர்த்தமாகாதே..!! அதுக்காகவே எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை தேடி வந்தேன்..!! ஏன்னா கமலினிக்கும் என்னை பிடிக்கும்..”
என சொன்னவன் அவர் திகைப்பாய் பார்க்கவும்,
“நீங்க இதை அவகிட்ட கேட்டுக்கிறது தான் சரியா இருக்கும்..” என்றுவிட்டு,
“நான் அவளை சந்தோஷமா பார்த்துப்பேன்… நீங்க என்னை நம்பலேனாலும் தாத்தா இவ்வளவு தூரம் என்னை நம்பி பிடிவாதமா நிற்கிறார்ன்னா அதுக்கு வொர்த் இல்லாமலா இருப்பேன்..?!”
என சொல்லி முடித்து அவர் பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அதன்பின் அடுக்கடுக்காக நின்ற கடை வேலைகளில் பிஸியாகி விட தன் அழைப்பை எதிர்பார்த்து காத்திருப்பாள் என்ற நினைப்பும் உள்ளூர இருந்துக் கொண்டே இருந்தாலும் கமலினியிடம் பேச முடியவில்லை.
அவன் நினைத்தது போல தான் வீட்டில் கமலினியும் நேரம் ஆக ஆக பதட்டமாய் காத்திருந்தாள். என்ன நடந்து இருக்கும் என தெரியாமல் மண்டை காய்ந்தது. அப்பா தன்னிடம் வந்து எதுவும் கேட்டால் என்ன சொல்லாமல் என்று எல்லாம் யோசித்து வைத்து காத்திருக்க வழக்கமான நேரத்தில் சுந்தரமூர்த்தியும் வீடு திரும்பினார்.
‘எதுவும் சொல்வாரா..?’ என கமலினி அவரையே பார்க்க அவர் முகமே சரியில்லை. அவளிடம் சரியாக பேசவும் இல்லை. தினகரனும் அழைக்காமல் இருக்க எல்லாமே சேர்த்து அவளை பயமுறுத்தி இருந்தது.
‘வேண்டாம்.. இல்லை.. மாட்டேன்..’ என கமலினி ஆயிரம் வழியில் வாய்மொழியாக சொன்னாலும் மனம் அதற்கு முரணாக தான் செயல்பட்டது.
இதனால் தன் வீட்டில் முளைக்கும் பிரச்சனைகளின் காரணமாகவே மறுக்க நினைத்தாள். ஆனால்
மழை பொழிவது போல் மனதில் விழும் காதல் மழையையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாதே..!!
முதல் முறையாய் தினகரன் தன்னிடம் பேசியதில் தொடங்கி அவன் காட்டிய ஆர்வம், பேருந்தில் அவர்களுக்கு நடந்த உரையாடல், பார்வையில் அவன் உணர்த்திய அன்னியோன்யம், கரைகள் இல்லாத பெருங்கடலாய் அவனின் நேசம் என எல்லாம் பல வருடங்கள் அவனின் காதலில் வாழ்ந்த உணர்வை கொடுக்க இப்போது நினைக்கும்போது ஏனோ கண்கள் கலங்கியது.
‘ப்ரப்போசல் அக்சப்ட் பண்ணி முழுசா ஒரு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி வீட்டை நினைச்சு பக்கு பக்குன்னு உட்கார வைச்சுட்டீங்களே தீனா..!! நல்லா வருவீங்க..”
என அவள் எண்ணும்போதே,
‘இதையே தொடர முடியாது அது இதுன்னு அவரை உசுப்பேத்தி விட்டுட்டு பேச்சை பாரேன்..’ என அவள் மனசாட்சியே நிந்தித்தது.
தந்தையிடம் தானே நேரடியாக கேட்டுவிட வாய் வராமல்,
‘கடவுளே.. உள்ளதும் கெட்டுட கூடாது..! அதுவே போதும் எனக்கு.. பின்னாடி என்னவோ செஞ்சு நானே ரெண்டு பேரையும் சமாளிச்சுக்கிறேன்..”
என்ற வேண்டுதலோடு அறை நோக்கி நடந்தவளுக்கு பண விஷயம் சற்று பின்னால் தான் சென்று இருந்தது. நாளை வங்கியில் சென்று விசாரித்தால் என்னவென்று தெரிந்துவிடும் என்றதோடு அதனை விட்டுவிட்டாள்.
ஆனால் அதையே எண்ணி மறுகி நின்ற அனன்யாவோ கமலினிக்கு தெரியும் முன் பணத்தை மீண்டும் சேர்பிக்க வேண்டும் என்ற நினைப்போடு கரிகாலனை அழைத்து விஷயத்தை விளக்கி பணத்தை மீண்டும் அனுப்பி விடும்மாறு கேட்க அவனோ,
“செலவாகிடுச்சு.. நோ மணி.. நோ ஹனி பேபி..” என்றான் அலட்சியமாக.. அவன் குரலின் மாற்றம் அப்போது அவளுக்கு விளங்கவில்லை.
“என்ன செலவாகிடுச்சு..?? நேத்து தானே அனுப்பினேன்..”
என கோபமாய் கேட்டவள் பின் கெஞ்சலாய்,
‘என் அக்காக்கு தெரிஞ்சால் பெரிய பிரச்சனை ஆகிடும்.. யார்கிட்டயாவது கேட்டாச்சும் திரும்ப போட்டுடு கே.கே.. பிளீஸ்.. உனக்கு நாளை மறுநாள் வேற எப்படியாவது அரேன்ஜ் பண்ணி தரேன்..”