மைக்கேலிடம், “சரி அவன் தான் உனக்கு உதவி பண்ணலையே. அப்புறம் நாங்க விசாரிக்கும் போது ஏன் சொல்லல. “
“ஏற்கனவே ராபர்ட் விஷயத்துல நான் மாட்டி இருக்க. இது பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம். என்ன இருந்தாலும் ஒரு தகப்பனா என் பையன் வாழ்க்கை முக்கியமா பட்டுச்சு. அதனாலதான் என்ன நடந்தாலும் சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணுனேன் சார்.”
“பரவால்ல அப்பனும் மகனும் எவ்வளவு பெரிய அயோக்கியங்களா இருந்தாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பாசம் தான். அந்தப் பாசம் தான் உங்கள இங்க கூட்டி வந்து விட்டிருக்கு. இனிமேலும் அந்த பாசம் தான் உங்கள கூட்டிட்டு போகப் போகுது… ” என்ற கண்ணன் தனிப் படை அதிகாரிகளை காவலுக்கு வைத்துவிட்டு, ஆரதி சித்துவுடன் புறப்பட்டான்.
தப்பு செய்தவர்களுக்கான தண்டனையை எளிதாக முடிவு செய்த மூவரால் வீட்டில் இருக்கும் அப்பாவியான இரு பெண்களின் கண்ணீருக்கு தீர்வு சொல்ல முடியாத நிலை. இதை எப்படி ராசாத்தியிடம் சொல்லப் போகிறோம் என தெரியாமல் மௌனமாக காரில் பயணித்தனர்.
வீட்டிற்கு செல்வதாக இருந்த பிளான் மாறி கமிஷனரிடம் சென்றவர்கள், “சார் அந்த அனிதா பொண்ண கொன்னது ராபர்ட் தான். அவனோட மகன் தான் அனிதாவை காதலிச்சு இருக்கான். அதுல அந்த பொண்ணு கர்ப்பமாகி இருக்கா. இது பிடிக்காத மைக்கேல் தன் பையன் மாதிரி பேசி அனிதாவை வரவச்சி கொன்னு இருக்கான். அனிதா இறந்தது அவன் பையனுக்குக் கூட இப்ப வரைக்கும் தெரியாது. அவனே வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான் சார்.”
“ஓகே கண்ணன். இத அன்னைக்கு வந்த பொண்ணு கிட்ட சொல்லி டெட் பாடியை வாங்க சொல்லுங்க. அப்படியே இதைப் பத்தி பேசுற பிரஸ் கிட்டயும் பேசிடுங்க. நடக்க வேண்டியதை பாருங்கள்..” என உத்தரவு கொடுக்க அங்கிருந்து புறப்பட்டனர்.
இது நடந்து கொண்டிருக்க வெளியில் நின்றிருந்த சித்து தன் தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூறி விட, அவருக்கோ பெரும் அதிர்ச்சி. சில நொடிகளில் நிலைமையை புரிந்து கொண்டவர் பார்த்துக்கொள்வதாக கூறி வைத்து விட்டு வீட்டில் உள்ள வானதி ராசாத்தி தவிர மற்றவர்களிடம் கூறி விட்டார். கேட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனநிலையில் அனிதாவிற்காக வருத்தப்பட , அந்த வீடு இன்னும் சில நேரங்களில் கேட்க போகும் அழுகைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தது.
ரதி தேவிக்கு அழைத்த ஆரதி, “தேவி விஷயம் என்னன்னு மாமா சொல்லி இருப்பாரு. இதுல இன்னும் நிறைய இருக்கு. அதைப்பத்தி வானதி தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீ உடனே வானதியை கூட்டிட்டு நான் சொல்ற அட்ரஸ்க்கு வா.”
ஆரதியின் ஆணைப்படி வானதியிடம் விஷயத்தை கூறியவள் , கொடுத்த அட்ரஸ்க்கு வர அது தினேஷின் வீடு என்பதை அறிந்துகொண்டாள் கதவை திறந்த தினேஷால். இருக்கும் சூழ்நிலையை கருதி மெதுவாக அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கிருப்பவர்களை கண்டு ஓரளவுக்கு யூகித்து விட்டாள் வானதி.
அவளிடம் எதுவும் பேசாமல் ஒரு அறையைத் திறந்து காட்ட, தன் கோபம் தீரும் வரை சந்திரன், மைக்கேல் இருவரையும் காரணமே தெரியாமல் யூகத்தால் அடிக்க ஆரம்பித்தாள். அடுத்தடித்து அழுகையில் ஓய்ந்தவள் ஒரு கட்டத்தில் முடியாமல் , “யாருடா என் அக்காவ கொன்னது? ரெண்டு பேர்ல யாரு? இல்ல ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணிங்களா? எதுக்காக பண்ணிங்க. என் அக்காவை திருப்பி கொடுங்க… என் அக்கா அனிதாவை திருப்பிக் கொடுங்க. எனக்கு என் அக்கா வேணும். அவள உயிரோட கொடுங்க. ” கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இருவரையும் ஒரு வழி ஆக்கிவிட்டால் வானதி. அங்கிருந்த அனைத்து ஆண்களும் அவளை தடுக்க எங்கிருந்துதான் வந்ததோ அத்தனை வேகம்… தடுப்பவர்களை மீறி அடித்துக் கொண்டிருந்தாள் …..
ஆரதி, “போதும் வானதி” என சொல்லும் வரைக்கும்.
“நீ சொன்ன மாதிரி உன்கிட்ட நிறுத்திட்டேன். இனிமே செய்ய நிறைய இருக்கு. உன்னோட மனசு நிம்மதி அடையாது ஆனா ஏதோ ஒரு வகையில அது குறையும். இவர்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும். இப்போ நீ பண்ண வேண்டியது எல்லாமே ஒன்னு தான். உன் அம்மாகிட்ட விஷயத்தை சொல்ல போறோம். அவங்களுக்கு துணையா இரு. மீதியை நான் பார்த்துகிறேன்.”என்றவளின் வார்த்தைக்கு அடங்கி தன் தாயை காண புறப்பட்டாள்.
வீட்டில் உள்ளவர்கள் சொந்த பந்தங்களை வழியனுப்பி வைத்துவிட்டு… அமைதியாக வாசலையே பார்த்திருக்க வீட்டின் புதல்வர்கள் ஆடையில் சில ரத்தக் கரைகளோடு நுழைந்தனர். மஹாலட்சுமி, சரஸ்வதி இருவருக்கும் அழுகை வர …. வானதியை தாங்கிக் கொண்டனர். சண்முகம் நாராயணன் இருவரும் ராசாத்தியின் கணவர் சேகரை அழைத்து வர புறப்பட்டனர். இன்னும் ராசாத்தி வேலையை விட்டு வரவில்லை அவருக்காகத்தான் அங்கிருந்தவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தன் பணியை முடித்துவிட்டு சோர்வாக வந்த ராசாத்தி அழுதுகொண்டிருக்கும் மகளைப் பார்த்து பதறிக் கொண்டு வர அதுவரை சாதாரணமாக அழுது கொண்டிருந்தவள் தாயை அணைத்துக் கொண்டு கதறி துடித்தாள். எதற்கு என்று தெரியாவிட்டாலும் தன் மகளின் அழுகை அவரையும் கண்ணீர் சிந்த வைக்க மற்றவர்களை கேள்வியாக பார்க்க, யாரும் எதுவும் சொல்ல வில்லை. அவர் அருகில் சென்ற ஆரதி, “அம்மா நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனா நடந்தத ஏத்துக்கோங்க. என்ன மன்னிச்சுடுங்க உங்க பொண்ண உயிரோட தரதா சொன்னேன். இப்போ உங்க பொண்ண கொடுக்குற உயிரோட இல்ல பிணமா.”
கேட்ட ராசாத்தியின் காதுகள் நம்ப மறுத்து மீண்டும் கேட்க தயாராகி, “ஏ ஏ எ…எஎஎ …..என்ன்ன்னன… சொல்ற… எனக்கு நீ சொல்றது புரியல. யாரு யாரு யா…யார பிணமா கொடுக்கப் போற…”
அதற்கு பதில் சொல்ல ஆரதி தயாராக இல்லை. கண்கலங்கி அவரை அணைத்துக் கொள்ள, “சொல்லுமா யாரு… என்… என் என் பொண்ணு… அனிதாவா ..”
தன் அக்காவின் பெயரை தாயே கூறியதும் மீண்டும் கதறித் துடித்து அவரிடம் தஞ்சம் புக, தாயுள்ளம் உயிருடன் மாய்க்க தொடங்கியிருந்தது. எந்த பேச்சுக்களும் அவரிடம் இல்லை. பார்வை ஆரதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க சிலையாக மாற ஆரம்பித்து இருந்தார். அதற்குள் மஹாலட்சுமி, ஆரதி, ரதிதேவி, மகேஸ்வரி என நால்வரும் சுற்றி நின்று துணை நிற்க, தாயிக்கு நால்வரையும் தாண்டி தன் மகள் துணை வேண்டும் என மன்றாடியது.
நிச்சயதார்த்த வீடு இறுதிச் சடங்கிற்கு தயாராக ஆரம்பித்தது. சேகரை அழைத்து வந்திருக்க, அவருக்கு தன் மகள் இறந்தது மட்டுமே தெரியும். குடிகார தந்தையாய் அவரின் வருத்தத்தை காட்டிக் கொண்டிருக்க அதைக்கண்ட வானதி, “எதுக்கு இங்க வந்தீங்க. யாரைக்கேட்டு வந்தீங்க. என் அக்கா சாவுக்கு நீங்கதான் காரணம். “
“நான் என்னம்மா பண்ண…”முதல் முறை வார்த்தையில் அமைதி அவருக்கு.
“என்ன பண்ணல. எல்லாமே பண்ணிட்டீங்க…. நீங்கதான் பண்ணிங்க. உங்க சந்தோஷத்துக்காக எங்க இரண்டு பேரையும் பெத்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க. நீங்க அப்பாவா சரியா நடந்திருந்தா அக்கா எதுக்காக வேலை செய்ய இங்கே வர போறா. எதுக்காக காதலிக்கப் போறா. அவனை நம்பி தன்னையே ஏன் கொடுக்கப் போறா. வயித்துல பிள்ளையோட ஆதரவில்லாம அவன் பின்னாடி ஏன் போறா. கேட்க ஆளில்லாத என் அக்காவ உயிர் இருக்கும் போதே..கர்ப்பப்பை அறுத்து எதுக்கு கொன்னு இருக்கப் போறாங்க. சொல்லுங்க ஏன் கொன்னு இருக்கப் போறாங்க…” தன் தாய் அங்கு இருப்பதை மறந்து உளற,
மகளின் இறப்பு செய்தியை அவரை செயலிழக்க செய்திருக்க இந்த செய்தி முற்றிலும் தேய வைத்திருந்தது.”என்னம்மா சொல்ற … என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.”
அப்பொழுது தான் தன் மடத்தனத்தை உணர்ந்தவள் மறுத்துப் பேச பிடிவாதமாக மகளின் இறப்பை அறிய மன்றாடி நின்றார். அதற்குமேல் வானதியும் கட்டுப்படுத்த முடியாமல் முழுவதையும் சொல்லி முடிக்க தாயின் ஓலம் நின்றபாடில்லை. கேட்டுக்கொண்டிருந்த சேகருக்கு அப்போதுதான் தான் செய்த தவறு உணர ஆரம்பித்தது. மகள் இறந்து விட்டாள் என்பது துக்கமாக இருக்க அவளின் இழப்பு முறை இதுவரை மிருகமாய் இருந்த தந்தை மனதில் வலி சுமக்க தொடங்கியிருந்தது. ‘மகளை தான் காத்திருந்தாள் இந்த நிலைமை வந்திருக்காது ‘ என காலம் கடந்து யோசிக்க ஆரம்பித்தார். இருந்தும் இனி எந்த பயனும் இல்லை என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.
வேலைகள் துரிதமாக நடக்க யாரை பார்க்க ராசாத்தி இந்த ஊருக்கு வந்தாரோ… அவள் முகம் கூட பார்க்க முடியாமல் பொட்டலமாக தூக்கி வரப்பட்டாள். அதைக்கண்ட ராசாத்தியின் உணர்வு சொல்லில் அடங்காது. அங்கிருந்த அத்தனை பேரும் தண்ணீரில் மூழ்கி இருந்தால் ராசாத்தி மட்டும் அதில் உயிரை ஊசலாட செய்திருந்தார். சேகர் தன் மகளின் உடலை வருட செல்ல, ஓடிவந்து தடுத்த வானதி, “தொடாதீங்க என் அக்காவ தொடாதீங்க. அக்கவை தொட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. “
“நான் பண்ணியது எல்லாமே தப்புதாண்டா. என் பொண்ணு முகத்தை தான் பார்க்க முடியல ஒரே ஒரு தடவ தொட்டு பார்த்துக்கிறேன்.”
வேகமாக உள்ளே சென்றவள் சித்துவின் அறையில் இருக்கும் அனிதாவின் டைரியை எடுத்து வந்து சேகரின் முன் வீசியவள்,”இத படிச்சு பாருங்க. ஒரே ஒரு நாள் லீவ் போட்டதுக்கு எவ்வளவு சந்தோஷப் பட்டு இருக்கான்னு. அத எடுக்க வைச்ச அவன் மேல எவ்வளவு காதல் வந்து இருக்குன்னு பாருங்க. ஒரு நாள் கூட ரெஸ்ட் இல்லாம ஓடியிருக்கா. அது கிடைக்கவும் வாழ்க்கை முழுக்க இப்படியே இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டு இதோ இங்கே கிடைக்குறா. அக்காவை நீங்க தொடக்கூடாது. ஒரு அப்பாவா எதுவும் செய்யக் கூடாது. அப்படி ஏதாவது பண்ணா நானும் செத்துருவேன்.”
அதன்பின் சேகர் எதையும் பேசவில்லை மௌனமாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். ராசாத்தியோ நொடிக்கு நொடி தன் மகளின் உடலை தொட்டு தொட்டு பார்த்து கழுவிக் கொண்டிருந்தார். நினைவுகள் அவளை முதலில் தொட்டு பார்த்த நாட்களை நினைவு படுத்தியது.
ஏற்கனவே நீண்ட நாட்கள் காத்திருப்பில் கிடந்த உடல். கட்டியணைத்து அழக்கூட முடியாத நிலை எனவே வேகவேகமாக சடங்குக்கு தயார் படுத்தப் பட்டது. சில மணித்துளிகளில் அனிதாவின் உடல் தன் தாயிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கோ ஒரு பெண்ணை இறுதிச்சடங்கிற்கு கொடுத்துவிட்டு குடும்பமே பரிதவித்துக் கொண்டிருக்க அதற்கு காரணமான தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டேன் என்ற ரீதியில். அதை பார்த்துக்கொண்டிருந்த தனிப் படை அதிகாரிகளும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர அவர்களை அடக்கவில்லை. அனிதாவின் சடங்கை முடித்து விட்டு நேராக மூவரும் இவர்களைக் காண வந்து இருக்க,
“என்ன சண்டை போட்டு முடிச்சுட்டாங்களா?”
“அதெல்லாம் நடந்துட்டு இருக்கு மேடம். எங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.”
“ம்ம்! வாங்க இன்னும் நிறைய பொழுதுபோக்கிற்கு காட்டுவோம்.”
மூவரின் வருகைக்குப்பின் மைக்கேல் சந்திரன் இருவரும் வாயை மூடிக்கொள்ள, “எதுக்கு நிறுத்திட்டீங்க சண்டை போடுங்க. நாங்களும் பார்க்க தான் வந்திருக்கும்.” சித்து.
“சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் ரதி. இந்த தறுதலை மைக்கேலை கோர்ட்ல சமர்ப்பிக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நம்ம பண்ண வேண்டியது பண்ணிக்கணும். அதை பத்தி பேசு…”
ஆரதி சொன்ன விஷயங்களை கேட்ட மைக்கேல், சந்திரன் இருவரும் ஒருசேர அதிர்ச்சியாகி முடியாது என்றனர்.