“மேடம்! கொஞ்சம் பக்கத்துல இருக்க என்னையும் ரசிக்கலாம்..” தன்னை மறந்து பத்திரிக்கையை கையில் வைத்து ரசித்துக்கொண்டிருந்தவள், கண்ணனின் குரலில்… விழித்துக் கொள்ள,
“அப்படி என்ன இருக்கு அதுல ரதி.” என்றான் தெரிந்தும் தெரியாது போல்.
“நீதான் இருக்க ஆழி. ” என்றவள் பின் நின்று கொண்டிருக்கும் கண்ணனை தலையை நிமிர்த்தி பார்தாள் வெட்கத்தோடு. அவனும் இவளை குனிந்துகொண்டு பார்த்திருக்க…. காதல் விழிகள் திருமணத்தில் குறிப்பிட்டிருக்கும் நாளை எண்ணி வெட்கி சிவந்து.
“ஆழி இந்த பத்திரிகையில ஒரு சின்ன கரெக்ஷன் பண்ணனும்…” காதலனின் பார்வையில் தன்னை தொலைத்து இருந்தவள் சில நொடிகளில் இருக்கும் இடம் உணர்ந்து பேச்சை ஆரம்பித்திருக்க,
அவனோ அதை இன்னும் உணராமல்,” என்ன ரதி..” குரலில் கிறக்கத்தோடு கேட்க,
“ம்ம்” என்று விட அதன் பின்னே உணர்ந்தான் ஆரதியின் வார்த்தையை. அதில் உதடுகள் தானாய் பூச்சிரிப்பை சிந்த ஆரம்பித்திருந்தது.
“எதுக்கு சிரிக்கற… இப்ப மட்டும் நீ மாத்தலனா கல்யாணத்துக்கு அப்புறம் உன் பேர என் பேரு பின்னாடி சேர்த்துக்க மாட்டேன் போ.” என ஆரதி சிறுபிள்ளையாய் மிரட்ட,
“ஓய்…என்னடி பத்திரிக்கை அடிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லாம.. இப்ப சொல்ற. எப்படி மாத்த முடியும். “
“அதெல்லாம் எனக்கு தெரியாது… நிச்சயம் முடிந்தாலே பாதி பொண்டாட்டி தான. பொண்டாட்டி சொன்னா கேட்கணும். இல்லனா அவ்ளோ தான்.”
” ஹ்ம்ம்… மாத்திட்டா போச்சு. பதிலுக்கு புருஷனுக்கு என்ன கிடைக்கும்.” என்றவன் அவள் தலையை நிமிர்த்தி முத்தமிட அதில் பதிலை மறந்தவள்… மெல்ல இமை முடி மதிமயங்க அவனின் முத்தங்களோ தடையின்றி பயணித்தது. இவர்களின் நேரம் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று இருக்க அந்தோ பரிதாபம் பத்திரிகைதான் வெட்கத்தோடு கீழே விழுந்துவிட்டது.
“அம்மா! அம்மா…! இருங்க.. இருங்க உள்ள போகாதீங்க. “கல்யாண வேலையா வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும் மஹாலட்சுமியை தடுத்த சித்து,
“இங்க பாருங்கம்மா உங்க பையனோட ஷூ இருக்கு.” என்றான் எதையோ கண்டு பிடித்த மிதப்பில்.
வேலையாக அலைந்துவிட்டு அலுப்பாக உள்ளே நுழைந்த மஹாலட்சுமிக்கு இது கடுப்பைக் கிளப்ப, “அதுக்கு என்னடா…”
“அதுக்கு என்ன வா… உங்களுக்கு தெரியாது ம்மா.. உங்க பையன பத்தி. எனக்கு தான் தெரியும். அவன் ஒரு காதல் சைக்கோ. தம்பி இருக்கான்னு கூட பார்க்க மாட்டான். இப்போ வீட்ல ஆளே இல்ல சும்மா இருப்பானா. ஒரு அம்மாவா நீங்க அதெல்லாம் பார்க்க கூடாது. ” கொஞ்ச நேரம் இருங்க என்றவன்,
கதவை நாலைந்து முறை தட்டி..,”ஹலோ ! காதல் ஜோடி உங்க ரொமான்ஸ் முடிஞ்சுதா நாங்க உள்ளே வரலாமா?”
சித்து கூறியது போலவே உள்ளே இருவரும் ஒத்திகை நடத்திக் கொண்டிருக்க… அப்பாவி ஜீவனின் வார்த்தை காதில் விழவில்லை.
அதில் எதையோ உறுதி செய்துவிட்ட மிதப்பில் தாயிடம் திரும்பியவன், “பார்த்திங்களா… ஆல் டீடெயில்ஸ் ஐ நோ மம்மி. இப்ப பாருங்க அவங்க ரெண்டு பேரையும் எப்படி வாசலுக்கு வர வைக்கிறேன்னு.”
“அய்யோ அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு.. யாராது வாங்க யாராது வாங்க… ஐயோ எங்க அம்மா மஹாலட்சுமிக்கு மயக்கம் வந்திருச்சு போல…. மாதுளை ஜூஸ் இருந்தா கொண்டு வாங்களேன்…” சுதியை உச்ச ஸ்தானத்தில் வைத்து கத்த அதில்தான் இருவரும் சுயநினைவு பெற்று வாசல் அருகே ஓடி வந்தனர்.
வேகமாக இருவரும் ஓடி வர அவர்களை விட வேகமாக உள்ளே ஓடிய சித்து , “கொஞ்சம் இருக்கிற இடம் பார்த்து ரொமான்ஸ் பண்ணுங்க. சின்ன பையன் உங்களால தான் ரொம்ப கெட்டுப் போற. அதான் கல்யாணம் பண்ண போறாங்க தான அந்த வாலை சுருட்டி வச்சா என்ன..” என்றவன் நில்லாமல் தன் அறைக்குள் ஓடி விட, தாயின் முன் நெளிந்து வளைந்து குழைந்து.. ஒரு வழி ஆகிவிட்டான் கண்ணன்.
ஆரதியோ வெட்கத்தில் அவனுடன் சேர்ந்து இன்னும் குழைய .. “கொஞ்சமாச்சும் வெட்கம் இருக்கா. அம்மா முன்னாடி இப்படி குழைஞ்சிட்டு நிக்கிறீங்க ச்சீ போங்க..”மேலே சென்றவன் மீண்டும் கீழே வந்து அவர்களை கலைக்க, மஹாலட்சுமி தான் சிரித்தபடி உள்ளே சென்று விட்டார்.
*******************************
“அண்ணி! கல்யாண தேதி முடிவாகி பத்திரிக்கை வரைக்கும் வந்துடுச்சு. இனிமேலும் ஆதி இங்க இருக்க வேணாம். கல்யாணம் முடியுற வரைக்கும் எங்க கூட ஊர்ல இருக்கட்டுமே. நாங்களும் அவளைப் பிரிந்து இருக்க போறோம். என்னை விட அவருக்குத்தான் இதுல ரொம்ப வருத்தம். அதனால ஆரதியை கூட்டிட்டு போற அண்ணி.”
“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க. அந்த வீடு இந்த விடுங்க பிரிச்சு பேசுறீங்க. ஆரதி பிறந்ததுமே இந்த வீட்டுக்கு சொந்தம் ஆயிட்டா. நாங்க தான் பெரிய மனசு பண்ணி போனா போகுதுன்னு கொஞ்ச நாள் உங்க வீட்டில விட்டிருந்தோம். இதுக்கு மேல நீங்களும் அண்ணனும் அவசியம் அங்கு இருக்கணுமா… இங்க வந்திடுங்க அண்ணி. “
“உங்க அண்ணன் கிட்ட இத பத்தி பேசின அண்ணி. அவருக்கு அந்த ஊரையும் விவசாயத்தையும் விட்டுட்டு வர விருப்பமில்லை. கொஞ்ச நாளைக்கு மட்டும் ஆரதியை அனுப்பி வைங்க. அப்புறம் உங்க மருமக உங்க வீட்டுக்கே வந்துடுவா. “
“என்னோட மகன் சம்மதிச்சா தாராளமா கூட்டிட்டு போங்க அண்ணி…”மூத்த மகனின் மீது நம்பிக்கை வைத்து மஹாலட்சுமி கூற,
நடந்ததோ வேறு.
சரஸ்வதி சண்முகத்தின் நிலைமை புரிந்து, ஆரதியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கண்ணன் அனுப்ப சம்பாதிக்க அதற்கு மாறாக….
சித்து பெரும் போராட்டமே நடத்தி விட்டான் அவ்வீட்டில். இதை கண்ணனே எதிர்பார்க்கவில்லை. தம்பியை குழந்தையாய் பாவித்து சமாதானம் செய்ய… அண்ணனை அணைத்துக் கொண்டு அவன் புலம்ப இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரதிக்கு தான் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது. ஒருவாரு பேசி சமாதானப்படுத்த நாளை மறுநாள் பல நாள் கழித்து .. ஆரதியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தான் சித்து.
கண்ணனின் திருமணத்திற்காக ரதிதேவி சென்னை வந்து இருக்க… கண்ணனின் வீடு சொந்தங்களால் நிரம்பி இருந்தது. ரதிதேவி முன்பு போல் இல்லாமல் தன் தந்தையின் தொழிலை கையில் எடுத்து அதில் பல தடுமாற்றங்களை தாண்டி நிற்க ஆரம்பித்து இருக்கிறாள். மகேஸ்வரி திருமணத்திற்கு முந்தினம் வந்துவிடுவதாக உறுதியளிக்க ரதிதேவி மட்டும் வந்திருந்தாள். வந்தவள் இத்தனை நாள் வீட்டில் இல்லாத குறையை பேச்சுக்களால் தீர்த்துவிட்டு மாலை வேளை தன் தந்தையைப் பார்க்க சிறைச் சாலைக்கு சென்றிருந்தாள்.
திட்டமிட்டு செய்யவில்லை என்றாலும் தவறு தவறுதானே. அதற்கான தண்டனையை தான் மணிகண்டன் மனப்பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது தன் மகளையும் மனைவியையும் அரவணைக்க. அதில் கவலை இருந்தும்… அந்த நாளுக்குள் தன்னை முழுவதுமாக திருத்திக்கொள்ள முடிவெடுத்திருந்த மணிகண்டன் அதில் வெற்றியும் கண்டுவிட்டார். ஒவ்வொரு முறையும் மகள் மட்டுமே வர மனைவி வரவில்லை என்ற ஏக்கம் மட்டுமே அவருக்குள். மகேஸ்வரி க்கும் தன் கணவனை பார்க்க ஆசைதான். இருந்தும் அவரை கண்டுவிட்டால்… தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதாலே வர மறுக்கிறார்.
ரதிதேவியுடன் வந்திருந்த ஆரதி, “சார் இந்த நிலைமையில உங்ககிட்ட சொல்றது சரியா தப்பான்னு தெரியல. ஆனா சொல்லனும்னு நிறைய ஆசை. உங்களுக்கு கண்ணன் மேல கோபம் இருக்கலாம் ஆனால் அவன் தனிப்பட்ட முறையில் உங்களை தண்டிக்கல. ” ஆரதியின் பேச்சிற்கு தெரியும் என்பதுபோல் மணிகண்டன் தலையசைக்க மேலும் தொடர்ந்த ஆரதி, “எனக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் முடிவாகி இருக்கு. உங்க ஆசீர்வாதம் கண்டிப்பா வேணும்.”
உள்ளம் மகிழ்ந்த மணிகண்டன் அதை வார்த்தைகளால், “கண்ணன் சார் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. ஒவ்வொரு தடவையும் என் மகள் பார்க்க வரும்போதுலாம் உங்கள பத்தி பேசாம போனதே இல்லை. நாராயணன் சார் என் தொழிலுக்கு எந்த அளவுக்கு உதவி பண்றாருன்னு எனக்கு தெரியும். உங்களுக்கு நன்றி தான் சொல்லணும். நிச்சயமா நீயும் கண்ணனும் நல்லா இருப்பீங்க. என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார் தூய மனதுடன். அவரின் வார்த்தையில் பூரித்தவள் தந்தை மகளுக்கு பேச தனிமை கொடுத்து சென்று விட்டாள்.
கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும் வானதி முன்பைவிட இப்போது நன்றாகவே பொருந்தி இருந்தால் அந்த கல்லூரியில். அவளுக்கென நண்பிகள் வட்டாரமும், ஆசிரியர்களின் ஆதரவும் ஏராளமாக இருந்தது. படிப்பு அவளுக்கு பிடித்த ஒன்று என்பதால் தன் கவலை அத்தனையும் ஒதுக்கி வைக்க இது பேருதவியாக இருந்தது. இப்பொழுதெல்லாம் வானதியின் வீடு சிறிது சிறிதாக சிரிப்பில் நனைய ஆரம்பித்திருந்தது. வெகுநாட்கள் கழித்து ராசாத்தி முகத்தில் ஒரு தெளிவும், சேகர் முகத்தில் ஒரு திருத்தமும் வந்திருந்தது. அதை வானதி உணர்ந்தாலும் இன்னும் தன் தந்தையை மன்னிக்கவில்லை. ஆனால் சிறிது… மாற்றமாக தந்தையுடன் உணவு உண்ணும் அளவிற்கு வந்திருந்தாள். கல்லூரி செலவை ஆரதியே பார்த்துக் கொள்வதால்.. பெற்றோர்கள் இருவரும் வீட்டு செலவிற்கு போக தங்களின் ஒரே மகளுக்காக சேர்த்து வைக்க தொடங்கியிருந்தனர்.
அதிலும் சேகர்… ஒரு படி மேல் சென்று வானதிக்காக முதல் முறை கம்மல் ஒன்றை வாங்கியிருந்தார். வாழ்நாளில் தந்தை எடுத்துக்கொடுத்த முதல் நகை இது வானதிக்கு. வழக்கம் போல் கோபமாக கத்தி விட்டு உறங்கச் செல்ல.. ஏனோ தந்தையின் பரிசளிப்பு மனதை அசைக்க செய்திருந்தது. இரண்டு நாட்களாக அந்த கம்மல் டிவியின் மேல இருக்க …. பார்வை அவ்வப்போது அதை தீண்டியது. மூன்றாம் நாள் பார்வைக்கு பதில் கை தீண்ட அழகாக அவள் காதில் பொருந்திக் கொண்டது. அணியும் பொழுது ஒருவித தயக்கம் இருந்தாலும் அதன் பின்னான நாட்களில் அவள் நடையிலும் பேச்சிலும் ஒரு கர்வம் கூடியிருந்தது. வெகு நாட்கள் கழித்து ஆரதியிடம் சேகரை பற்றி பேசும் அளவிற்கு.
கண்ணன் ஆரதி திருமணத்தில் எல்லாரையும் விட வானதிக்கு தான் பெரும் மகிழ்ச்சி. பல நாட்களாய் அவள் மனதில் சூழ்ந்திருந்த குற்ற உணர்வு நீங்க ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் வானதியின் முகத்தில் அடிக்கடி சிரிப்பு. அதை அவளுக்கே தெரியாமல் ரசிக்க ஆரம்பித்திருந்தான் சித்து. என்ன வேலை இருந்தாலும் வானதியை அழைத்து வருவதை மட்டும் சித்து தவிர்ப்பதில்லை. கல்லூரியிலிருந்து வீடு வரைக்கும் அவளுடனான பேசிக்களும், பார்வைகளும் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சாரல் மழையை உருவாக்கியிருக்க அதில் மொத்தமாக நனையும் நாளுக்காக காத்திருந்தான்.
சித்துவின் மாற்றங்கள் முதலில் வானதிக்கு புரியாமல் போக… சில நாட்களில் உணர ஆரம்பித்தாள். ஆனாலும் சித்துவின் மீது அவளுக்குள் எந்த உணர்வும் உதிக்கவில்லை. உதிக்கவில்லை என்பதைத் தாண்டி…. தகுதி இல்லை என்பதே அவளின் எண்ணம்.
வெகுநேரம் கண்ணனுக்காக காத்திருந்த ஆரதி … நேரம் செல்வது உணர்ந்து போனில் அழைக்க..
“ஆழி… எங்க இருக்க? “
“உன் மனசுல தான் பொண்டாட்டி…”
“ப்ச்!.. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது ஆழி. அப்பா ஊர்ல இருந்து வந்ததும் ரெஸ்ட் எடுக்காம எங்க கூட கடைக்கு வந்து இருக்காரு. நீ என்னடான்னா லேட் பண்ற. சீக்கிரம் வா ஆழி.”
நிச்சயதார்த்தம் எந்த ஆரவாரமும் இல்லாமல் நடந்திருக்க … அதைப் போக்கும் விதமாக சித்து தன் அண்ணனுக்கும் ஆரதிக்கும் கல்யாண கலையை சிறு சிறு செயலிலும் காட்ட ஆரம்பித்து இருந்தான். அதில் ஒன்றாக இன்று குடும்பம் மொத்தமும் ஜவுளிக்கடையில் சூழ்ந்திருக்க , கண்ணன் ஒருவனே இன்னும் வரவில்லை. வேலைகளை முடித்துவிட்டு கடைக்கு வந்து கொண்டிருந்தவனை ஆரதி அவசரப் படுத்த, “வந்துட்ட ரதி… ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்.”
கண்ணன் வருவதற்குள் பெரியவர்கள் புடவை எடுக்க துவங்கி இருந்தனர். சொன்னது போலவே பத்து நிமிடத்தில் வந்தவன் தன் ரதியை தேடி உள்நுழைய.. கண்ணன் கூடவே தினேஷும் வந்திருந்தான்.
ரதிதேவி சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றதில் இருந்து தினமும் தினேஷிடம் அழைப்பு வந்துவிடும். அதை பார்த்தாலும் ஒருநாளும் எடுத்ததில்லை ரதி தேவி. காலை மதியம் மாலை இரவு என நேரம் பிரித்து தேவிக்காக அழைப்பை தூது அனுப்ப… தேவியின் தரிசனம் மட்டும் கிடைத்தபாடில்லை தினேஷ்க்கு.
கண்ணன் வருவதை அறிந்து ஆரதி பார்வையாலேயே பஸ்பமாகி கொண்டிருக்க…. அதை அறிந்து சிரித்துக் கொண்டே வந்தவன், ” சாரி பொண்டாட்டி… ” என்பதோடு நில்லாமல் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்த.. அங்கிருந்த சித்து தலையில் அடித்துக் கொண்டான்.
நாராயணன், மஹாலட்சுமி , சண்முகம், சரஸ்வதி, ராசாத்தி ,சேகர்…என மூத்த ஜோடிகள் அனைவரும் திருமண பெண்ணிற்கு புடவை எடுத்துக் கொண்டிருக்க அவர்களிடம் சென்ற கண்ணன், “என் பொண்டாட்டிக்கு நானே புடவை செலக்ட் பண்ணிக்கிறேன். நீங்க உங்களுக்கு எடுத்துக்கோங்க. கொஞ்ச நேரத்துக்கு இங்க நிக்கிறான் பாருங்க குரங்கு சித்தேஷ் இவனை மட்டும் எங்ககிட்ட அனுப்பிடாதீங்க…” என்றவன் ஆரதியை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட…
மூத்தவர்கள் சிரிப்புடன் தங்களுக்கு ஆடை எடுக்க சென்றுவிட்டனர்.
சித்து மட்டுமே தனியாக நின்று கொண்டிருக்க… தினேஷை அழைத்துக்கொண்டு ஆண்கள் பிரிவிற்கு செல்லலாம் என முடிவெடுத்து தேட … அவனோ ,
புடவையை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தவள் அவன் வரவை அறிந்தாலும் நிமிர்ந்து பார்க்காமல்,”என்னமோ…எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டு செய்ற மாதிரி பேசறீங்க.”
“ஹ்ம்ம்.. அதைத்தான் நானும் சொல்ற. திடீர்னு உங்களை பார்த்ததும் இந்த சின்ன மனசு எப்படி துடிக்குது பாரு ங்கள். இனிமே என்கிட்ட சொல்லிட்டே வாங்க நான் தயாராக இருக்கிறேன் முன்னாடியே. “
அவனின் பேச்சில் கடுகடுத்து திருப்பிக்கொள்ள, “வேணும்’னா உங்களுக்கு பொருத்தமான ஒரு புடவையை எடுத்து தரட்டுமா.”
“யாரு நீங்க எனக்கு எடுத்துக்கொடுக்க” வெடுக்கென சொல்லி விட்டாள்.
“அதுதாங்க நானும் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்க. தெரியல….. அன்னைக்கு முதல் முதலா மேடம் வீட்டுல உங்களை பார்த்ததும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. உங்களுக்கு என்ன பிடிக்கலைன்னு தெரிஞ்சும் உங்க பின்னாடியே வர அளவுக்கு நான் யாருன்னு சத்தியமா புரியல. ஒருவேளை உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. கண்டிப்பா தெரிஞ்சுக்கிறேன்.”
“சினிமா ரொம்ப பாப்பீங்களோ… டயலாக் லா டக்கு டக்கு’னு வருது.”
“இல்லங்க நம்ம வேலைக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இனிமே பார்க்கணும்.. எப்படி சைட் அடிக்கணும், லவ் பண்ணனும், சண்டை போடணும், ரொமான்ஸ் பண்ணனும் ,சமாதானப்படுத்தனும்’னு நிறைய ஐடியா கிடைக்கும் போல.” என்றவனை நிமிர்ந்து பார்த்தால் ரதிதேவி.
ஆறு மாதங்களாய் அவனிடமிருந்து அழைப்பு வருவதற்கான காரணம் புரிந்தாலும்… முன்பு தவறு செய்தது போல் இதிலும் தவறு செய்துவிடக் கூடாது என்பதற்காகவே பொறுமையாக இருந்தாள். சில நாட்கள் அவன் அழைப்பு பிடிக்காமல் போனாலும்… கடந்த சில மாதங்களாக அந்த அழைப்பிற்காக தவம் கிடக்க ஆரம்பித்திருந்தாள் ரதிதேவி. சென்னை வந்ததும் முதலில் தினேஷின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தான் வந்து இரண்டு நாட்கள் ஆகியும்… பார்க்க வராத தினேஷின் மீது கொலை வெறி இருக்கு அதை காட்டவே இந்த பொய்க் கோபம்.
அந்தப் பொய் கோபமும் தினேஷின் முகத்தை கண்டதும் காணாமல் போக..”பேசியே ஆள மயக்கிடுவிங்க…”
“நானாது பரவால்ல பேசி மயக்கிட்ட…நீங்க பேசாமலே என்னை மயக்கிட்டிங்க.”என்றான் ரசனையாக
அதில் வெட்கத்தை பூசிக் கொண்டவள்..”என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.”
“சேர்ந்து வாழுற அளவுக்கு தெரியும் திவி.” என்றான் அடுக்கி வைத்திருந்த புடவையை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டே…
“ஆமா அது என்ன திவி.”.. கேட்டவளின் குரலில் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
“உங்க அப்பாக்கு ரதி. கண்ணன் சார் வீட்ல எல்லாருக்கும் தேவி. பிரெண்ட் சைட்ல ரதிதேவி. அவங்கள் ல இருந்து நான் கொஞ்சம் வித்தியாசமா தெரியணும் ல. ரதி ல இருந்து தி… தேவி ல இருந்து வி… திவி. எனக்கு மட்டுமே திவி.”
தினேஷின் வார்த்தையில்… சொக்கி விட்டவள், “தினு அப்பா ஜெயில்ல இருக்காரு. நீங்க ஒரு போலீஸ் ஆபீஸர். உங்க வீட்ல எப்படி ஒத்துப்பாங்க.”
“வீடுன்னு ஒன்னு இருந்தா தானுங்க ஒத்துக்க..” அவனின் வார்த்தைகள் சாதாரணமாகத்தான் வந்தது. அதை கேட்ட ரதிதேவி தான், அதிர்ச்சியில்…”தினு..” என நிறுத்த,
“குடும்பம் இல்லாத பேச்சிலர் போலீஸ்காரன் நான். என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு ஒரு குடும்பத்தை தரீங்களா…”
தினேஷிக்கு பதில் சொல்ல ரதி தேவியிடம் வார்த்தைகள் இல்லாமல் போக கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நிமிடங்கள் கடந்தும் இருவரும் அப்படியே இருக்க அதைக்கண்ட சேல்ஸ் கேர்ள்,
“30 புடவைக்கும் மேல ரெண்டு பேரும் கலைச்சி போட்டுட்டீங்க. பேசி ஒரு முடிவுக்கு வந்தீங்கன்னா நான் வேற கஸ்டமரை பார்க்கப் போவேன்.” என்றார் பாவமாக.
அவரின் வார்த்தையில் உயிர்பெற்ற ரதிதேவி…தினேஷிடம், “ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம் நம்ம கல்யாணத்துக்கு நீங்கதான் புடவை எடுக்கணும். இப்பவே எனக்கு ஒரு நல்ல புடவையை எடுத்து ட்ரெயின் ஆகிக்கோங்க தினு “என்றவளின் பேச்சில் அத்தனை காதல்.