தேனிலவுக்கு வந்திருந்த ஜோடிகள் … வந்த வேலையை முடித்துவிட்டு இனிமையான நினைவுகளுடன் தங்களின் இல்லத்திற்கு திரும்பி இருந்தனர். ஆரதி கண்ணன் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருக்க , எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அழகாக சென்று கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததிலிருந்து கண்ணன் சித்துவிடம் எதுவும் பேசவில்லை அன்று நடந்ததைப் பற்றி. சித்தும் இதை எதிர்பார்த்து இருந்ததால் எதுவும் நடவாததுபோல் தன் நடவடிக்கையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தான். அண்ணன் தம்பி இருவரும் அன்று நடந்ததைப் பற்றி பேசாமல் இருக்க ஆரதியும் மௌனம் காத்தாள். தினமும் வீட்டிற்கு மாலையானால் வரும் வானதி அன்று நடந்த சம்பவத்தில் இருந்து வருவதை தவிர்த்து இருந்தாள். மஹாலட்சுமி இதைப்பற்றி வீட்டில் புலம்பும் போதெல்லாம் சரஸ்வதியும், சித்துவும் அமைதியாக இருந்துக் கொள்ள ஆரதி தான் சமாதானம் படுத்துவாள். ராசாத்தியிடம் இதைப் பற்றி கேட்க ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார். சரஸ்வதி மூலம் அன்று நடந்ததை அறிந்து கொண்டால் ஆரதி. இதைப்பற்றி வானதியிடம் பேச செல்லும்போதெல்லாம் அவளோ வேலை இருப்பதாகச் சொல்லி ஒதுங்கிக் கொள்வாள் . அவளைப்போலவே சித்துவும் தன்னிடம் பேசாமல் இருக்க…. மௌனம் உடைந்து வார்த்தை வெளி வரும் நாளுக்காக காத்திருந்தாள்.
வெகுநாட்கள் கழித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக உணவருந்தி கொண்டிருக்க, “உங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனை ஆதி.” உணவருந்திக் கொண்டே நாராயணன் கேள்வி கேட்க,
புரியாத முகபாவத்துடன்,” எனக்கும் கண்ணனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல மாமா. நாங்க சந்தோஷமா தான் இருக்கும்.” என்றாள் ஆரதி.
“உங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை’னு பார்த்தாலே தெரியுது. நான் கேக்குறது உனக்கும் இதோ இவனுக்கும்..” என்றவர் தன் மகன் சித்துவை சைகை காட்டி கேட்க,
“தெரியல மாமா. யாரும் என் கூட பேசல நானும் பேசல. ” கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு மௌனமாகவே உண்டு கொண்டிருந்தாள் ஆரதி.
“அப்பா! எனக்கும் ஆரதிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. உங்க சின்ன பையனுக்கு தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதான் இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி திரியுறான். முதல்ல என்ன ஏதுன்னு கேட்டு சரி படுத்துங்க.”
“என் மேல அப்படி என்ன உனக்கு அக்கறை. எதுவா இருந்தாலும் நானே என்னை பார்த்துப்பேன். நீயும் உன் பொண்டாட்டியும் என் விஷயத்துல தலையிடாதீங்க..” என கோவமாக சித்து பதில் தர, அங்கிருந்து எழுந்து ஹாலிற்கு வந்துவிட்டால் ஆரதி.
அவ்வீட்டில் கண்ணன் ஆரதி சண்டையும், சித்து கண்ணன் சண்டையும் பலமுறை அரங்கேற்றம் நடந்திருக்க… புது அவதாரமான ஆரதி சித்து சண்டை பெற்றோருக்கு வினோதமாகவே தெரிந்தது. எப்போதும் போல் அவர்கள் அமைதியாகவே இருந்து விட நாட்களும் வேகமாக ஓடத் தொடங்கியது.
திருமணம் ஆனதில் இருந்தே தினமும் காலையில் ஆரதியின் தரிசனத்தை கண்ட பின் தான் சூரியன் தரிசனம் கூட கிடைக்கும் கண்ணனுக்கு. அதே வழக்கத்தை இன்றும் கடைப் பிடிக்க இருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது பக்கத்தில் ஆரதி இல்லாமல். அவளைத் தேடியவன் நேரம் உணர்ந்து வேலைக்கு தயாராக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். பத்து நிமிடங்களுக்கு மேலாக செலவழித்தவன் வெளியில் வர, மெத்தையில் அமர்ந்து இருந்த ஆரதி தீவிரமான யோசனையில் இருந்தாள். அதை கண்ட கண்ணன், “ஏன் டி காலைல எங்க போன? “
“ப்ச்! எங்கேயோ போனேன் என்ன இப்போ? நீ வேலைக்கு கிளம்பி போ.. இனிமே தினமும் என்னை எதுக்கும் எதிர்பார்க்காத.” என ஆரதி யோசனையை கலைக்காமல் பதில் சொல்ல,
“வர வர.. கொழுப்பு கூடி போச்சுடி உனக்கு. வேலைக்கு டைம் ஆகுது அதனால உன்னை சும்மா விடறேன். சாயங்காலம் வந்து இதுக்கும் சேர்த்து கச்சேரி வைக்கிற இரு.” என்றவனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை ஆரதி.
அதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு தயாராகியவன் அவளிடம் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் கிளம்பிய அடுத்த சில நொடிகளில் பால்கனிக்கு சென்ற ஆரதி….. கீழே பார்க்க, போர்ட்டிகோவில் உள்ள வாகனத்தை இயக்க தயாராக நின்று கொண்டிருந்தான் கண்ணன்.
“மாமா….”
கோபத்தோடு மேலே பார்த்தவனை கண்டு சிரித்த ஆரதி பால்கனியில் இருந்து எதையோ தூக்கிப் போட சரியாக பிடித்து கொண்டான் கண்ணன். பிடித்ததை உள்ளங்கையில் வைத்து பார்த்தவனுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. தன்னை மறந்து… தந்தையானதை ரசித்துக் கொண்டிருந்தான்.
“ஓய்…… எடுபிடி….. இனிமே என்னோட சேர்ந்து நம்ம குழந்தைக்கும் எடுபிடி வேலையை பார்க்கப் போற….” என்றவள்.. நொடி இடைவெளி விட்டு கங்கிராஜுலேசன்….. ஆழிக்கண்ணன் நீங்க அப்பா ஆக போறிங்க….. உங்க பொண்டாட்டி ஆரதி ஆழிக்கண்ணன் அம்மா ஆக போறாங்க.” உற்சாகமாக கத்தியவளின் குரல் வீட்டின் ஹாலில் உள்ளவர்களுக்கும் கேட்டுவிட காலை வேளையில் சிறு மணி புறாவின் வருகையை அறிந்து கூக்குரல் இட்டுக் கொண்டனர் அனைவரும். ஆரதியின் கத்தலில் உயிர் பெற்ற கண்ணன் தலையில் அடித்துக் கொண்டு வேகவேகமாக வீட்டிற்குள் நுழைய…
அங்கு உள்ளவர்களோ மாற்றி மாற்றி வாழ்த்து தெரிவித்து கொண்டே மாடிப்படி ஏறி கொண்டிருந்தனர். மீண்டும் தன் தலையில் அடித்தவன் அவர்களை முந்திக்கொண்டு மாடி ஏறி, “யாராது என்னையும் என் பொண்டாட்டியும் டிஸ்டர்ப் பண்ணிங்க அவ்ளோதான்…”என்றவன் நில்லாமல் தன் அறைக்கு ஓடி விட்டான்.
அங்கு அவனுக்கு முன்னே வந்திருந்த சித்தேஷ் கண்ணன் , “ஏஞ்சல் நம்பவே முடியல…. நான் அதுக்குள்ள சித்தப்பா ஆகிட்டனா. நீ எனக்கு எப்பவுமே ஒரு பேபி தான். இனிமே இரண்டு பேபி. என் பொண்ண நான்தான் பார்த்துப்பேன். அவ கேக்குற எல்லாமே செஞ்சு தருவேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்க…… ஆதி.” என தன் தோழியை கொஞ்சிக் கொண்டிருந்தான். அதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆழிக் கண்ணன் தம்பியின் சட்டைக் காலரைப் பிடித்து தரதரவென அறையைக்கு வெளியில் தள்ளி கதவை அடைத்து விட்டான்.
“லூசாடி நீ… இவ்வளவு நேரம் இங்க தான இருந்தேன். ஒரு வார்த்த சொல்லாம கீழே போனதும் சொல்ற. மொதல் மொதல்ல புருஷன் கிட்ட சொல்லனும்’னு தான் ஆசை படுவாங்க…. நீ என்னடான்னா….. ஊருக்கே ஏலம் விட்டு இருக்க.” என்றவனின் பேச்சு நின்றது ரதியின் அணைப்பில். அதன் பின்னே நிலை உணர்ந்து அவனும் அணைத்துக். கொள்ள நடுவில் குழந்தை மட்டும் சுகமான கதகதப்பில் உயிர் பெற்று வெளியில் வர காத்து கொண்டிருந்தது.
“உன் கிட்ட தான் முதல்ல சொன்ன ஆழி.. உன் கண்ணுல எனக்கான காதலை பார்த்ததுக்கு அப்புறம்தான் ஊருக்கே சொன்னேன். ” என காதலோடு சொன்னவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “திடீர்னு உள்ளங்கையில அந்த ரெண்டு கோடு இருக்க கிட் பார்த்ததும் என்னமோ…. எப்படி…. சொல்றதுன்னு தெரியல ரதி. சந்தோஷமா இருக்கு..” என்றவன் மேலும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க கதவு வேகமாக தட்டப்பட்டது. சலிப்போடு கதவை திறக்க மொத்த குடும்பமும்…. ஆரதியை ஆக்கிரமித்துக் கொண்டது.
மாலை நேரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையை உறுதி செய்தவன் மிகுந்த காதலுடன் தன் மனைவியை கவனித்துக் கொண்டிருக்க, “ஆழி உனக்காக பிள்ளை எல்லாம் பெத்துக் கொடுக்க போறேன் எனக்கு ஒன்னும் இல்லையா..” என்ற வார்த்தையில் சிரித்த கண்ணன், ” நம்ம பிள்ளை டி….” என திருத்த, “அது தெரியும்….ஆழி. எனக்கு ஒன்னும் இல்லையா?”
“என்னடி வேணும் கேளு. நீ சும்மா கேட்டாலே நான் மறுக்க மாட்டேன். இப்பவா மறுக்க போறேன்…”
“தெரியுமா அப்போ… நானும் சித்துவும் பிளான் பண்ணி தான் பேசாம இருக்க மாதிரி நடிக்கிறோம்’னு.”
“உங்க ரெண்டு பேரையும் பிறந்ததிலிருந்தே பாத்துட்டு இருக்கேன். உங்க தகடு தித்தம் அத்தனையும் எனக்கு அத்துப்படி. வீட்ல இருக்கிறவங்களை ஏமாத்தலாம்….. என்னை ஏமாத்த முடியாது. அன்னைக்கு என்கிட்ட நீ சமாதானம் ஆகும் போதே தெரியும் ஏதோ பிளான் வச்சிருக்கேன்னு. என் பிள்ளையை வைச்சி உன் காரியத்தை சாதிக்க பார்க்கிறாயா.”
“டேய் ரொம்ப பேசாத. நாங்க ரெண்டு பேரும் பேசாம இருந்தா… எல்லாரும் வருத்தப்படுவாங்க அதைப் பார்த்து நீ ஏதாச்சும் பண்ணுவேன்னு தான் பிளான் பண்ணோம். நீ என்னடான்னா கண்டுக்கவே இல்ல . என்ன பண்ணலாம்’னு யோசிச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள பாப்பா எனக்கு ஹெல்ப் பண்ணிடுச்சு அவ்வளவுதான். இதை வச்சி தான் உன்கிட்ட காரியம் சாதிக்கணும்’னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இந்த குழந்தைன்னு இல்ல இன்னும் பத்து குழந்தை வந்தாலும் உன் கிட்ட முதல் உரிமை எனக்குத்தான்.” என்றவள் சிலுப்பிக் கொண்டு திரும்பி படுத்து விட… “கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாது டி உனக்கு மட்டும்…”
ஆரதி உறங்கியதை உறுதி செய்து கொண்டவன் ராசாத்தியிடம் பேசி வானதியை தனியே அழைத்து வந்திருந்தான் கண்ணன்,
“இந்த நேரத்துல உன்னை எதுக்காக பார்க்க வந்து இருக்கன்னு தெரியுமா வானதி. ” என கண்ணன் கேள்வி எழுப்ப, நடுக்கத்துடன் “தெரியாது சார்” என பதில் அளித்தாள்.
“பொய்…. உனக்கு தெரியும் நான் சித்துவை பத்தி தான் பேச வந்திருக்கன்னு. உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியும். சித்து சொல்லல… ஒரு போலீஸ்காரனா வெளியே நடக்கிற தப்பையே கண்டுபிடிக்கும் போது தம்பியோட விஷயம் தெரியாம போகுமா. முதல்ல ஒரு அண்ணனா… உன் மேல செம கோவம் எனக்கு. அதை காட்டிட கூடாதுன்னு தான் இங்க வந்ததிலிருந்து உன்னை பார்த்து பேசல. வெளில பார்க்கிற எல்லாருக்கும் சித்துவை நான் அடிமை மாதிரி நடத்துறன்னு தான் தெரியும். உண்மை அது இல்லை. என் தம்பிகிட்ட எனக்கு இருக்க உரிமை. ஆரதி விஷயத்துல அவன மாதிரி அன்பு காட்ட முடியலன்னு பொறாமை. எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும்…. யாரு மனசையும் காயப்படுத்தாத அவனோட குணம். இப்படி இன்னும் நிறைய இருக்கு. சித்து இல்லாம என்னால இருக்க முடியாது. அதே தான் அவனுக்கும். என்னதான் ஆதி ஆதி ன்னு சொல்லிட்டு இருந்தாலும்… என் தம்பிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் இது வேணும்’னு அவன் கேட்டதில்லை. கேட்கிற மாதிரியான சூழ்நிலையை நான் கொடுத்ததும் இல்லை. முதல் தடவை உன்னை கேட்டான். அவன் நினைச்சிருந்தா அம்மா,அப்பா கிட்ட இதைப்பத்தி பேசி இருக்கலாம். ஆதி மூலமா நடத்த காரணம்… உன்னை யாரும் தப்பா பேசிட கூடாதுன்னு தான். உனக்குள்ள எந்த தாழ்வு மனப்பான்மையும் வந்துட கூடாதுன்னுதான்… நாங்களாகவே பொண்ணு கேட்டு வர மாதிரி பிளான் பண்ணான். என் தம்பிக்கும் உனக்கும் நடுவுல இங்கு யாருக்கும் உரிமை இல்லை. அதே மாதிரி ரெண்டு பேருக்கும் கல்யாணமே ஆனாலும் சரி அவன் எனக்கு எப்பவுமே தம்பிதான். என் தம்பியை காயபடுத்தனும்’னு நினைக்காத…. உன் இடத்துல வேற யார் இருந்திருந்தாலும்…. இந்த கண்ணன் வேறயா தெரிஞ்சிருப்பான். இங்கு வந்ததிலிருந்து உன்ன பார்க்கலையே தவிர உன்னோட நடவடிக்கை ஒவ்வொன்னையும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்கேன். நீயும் என் தம்பிய விரும்புறன்னு தெரியும். நாளைக்கு எங்க வீட்ல பேசிட்டு… கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன். நாளைக்கு காலைல வரைக்கும் உனக்கு டைம் அதுக்குள்ள யோசிச்சு சொல்லு. உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம். உன் அம்மா அப்பா என்ன நினைப்பாங்கன்னு யோசிக்காத. நான் இங்க வந்ததுமே… அவங்க கிட்ட இத பத்தி பேசிட்டேன். உனக்கு சம்மதம்’னா கல்யாணம் பண்ணி தர அவங்களுக்கும் சம்மதம்’ன்னு சொல்லிட்டாங்க.” என கண்ணன் வெகுநேரம் வானதியோடு உரையாட… விசும்பலான அழுகை மட்டுமே அவளிடம்.
“சார் என்ன மன்னிச்சிடுங்க. உங்க தம்பிய அப்படி பேசினது தப்புதான். நானும் சந்தோஷமா அந்த மாதிரி வார்த்தையை விடல. என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. உங்க கிட்ட உதவி கேட்டு வந்தவங்க நாங்க. கேட்டதையும் விட அதிகமா செஞ்சி இருக்கீங்க. (https://ausoma.org/) இதுக்கு என்ன கைமாறு செய்ய போறோம்’னே தெரியல. அப்படி இருக்க உதவி செஞ்ச உங்க வீட்லையே உரிமை கொண்டாட முடியுமா. மூளைக்கு தப்பன்னு தெரிந்தாலும் மனசுக்கு தெரியல சார். அது சித்து பின்னாடி தான் போகுது. அன்னைக்கு மண்டபத்துல… நானும் சித்துவும் ஒருத்தர ஒருத்தர் அறியாமை பார்த்துட்டு இருந்ததை வச்சு… இங்க பக்கத்து வீட்ல இருக்க ஒருத்தவங்க ரொம்ப தப்பா பேசிட்டாங்க. அதைக் கேட்டதும்…. காதலை விட தன்மானம் பெருசா பட்டுச்சு. அதனால் தான்….” தன் தரப்பு விளக்கத்தை அழுகையோடு செல்லி முடித்தாள் வானதி.
“உன்னோட உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதே மாதிரி இந்த உலகத்திற்காக வாழ நம்ம பிறக்கல. என் அம்மா அப்பாவே தப்பா நினைக்காத அப்போ வேற யாரு நினைச்சாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. என் தம்பியோட மனைவி நீதான். நாளைக்கு வந்து வீட்ல பேசுறேன். இப்ப போ…” என அழகாக தன் தம்பி மனைவியை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தான் கண்ணன்.
மறுநாள் விடிந்ததும் பெற்றோர்களிடம் பேசிய கண்ணன் முறையாக வானதியை பெண் கேட்க ஏற்பாடு செய்திருந்தான். இதை அறிந்த ஆரதி தன் கணவனை காதலோடு கட்டிக்கொள்ள, சித்துவோ…’என் மாமியார் வீட்டுல என்ன பேசி தொலைச்சானோ…தெரியல. ஏற்கனவே அவங்க மனசுல இவன் தான் ஹீரோ. இப்ப இன்னும் பெரிய ஹீரோவா இருப்பானே…..’ சந்தேகப் பார்வையோடு பார்த்துகொண்டு இருந்தான். அவனின் மன ஓட்டத்தை கண்டுகொண்ட கண்ணன், “ரொம்ப யோசிக்காத டா… வீட்ல மொத்தத்தையும் சொல்லிடுவேன். அப்புறம் கடைசி வரைக்கும் சன்னியாசம் தான்..” என்றவனிடம் ஆசிர்வாதம் வாங்குவது போல் காலில் விழுந்து சரணடைந்தான் சித்து…
பெண் பார்க்கும் படலமே நிச்சயதார்த்தமாகி இருக்க…. முகூர்த்த நேரம் கிடைக்காமல் நான்கு மாதம் கழித்து கல்யாணம் என முடிவாகி இருந்தது.அதே நேரம் ரதியாழியின் வாரிசும் தன் வளர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி ஏழாம் மாதத்தில் வந்து நிற்க… வளைகாப்பும், திருமணமும் அவ்வீட்டில் கலைகட்ட ஆரம்பித்தது.
முதலில் திருமணமும் அடுத்து வளைகாப்பும் என்றிருந்த நிகழ்வை… அடம்பிடித்து மாற்றி அமைத்தான் சித்தேஷ் கண்ணன். தன் ஏஞ்சலின் வளைகாப்பை… திருமணத்தை விட மிக விமர்சையாக நடத்தி இருந்தான். வர இருக்கும் புதுவரவு… யாருக்கு உரிமை என்ற பெரும் போட்டி அண்ணன் தம்பியிடம் அடிக்கடி உருவாக அந்த வீடு போர்க்களம் ஆகியது ஒருபுறம்…. மறுபுறம் வானதியின் மனது தன் வருங்கால கணவன் சித்தேஷ் கண்ணனிடம் அலைபாய ஆரம்பித்திருந்தது. அன்றைய நிகழ்வுக்குப் பின் பேசாமல் இருந்த சரஸ்வதியும்… வானதி நிலை உணர்ந்து பேசிவிட்டார். ராசாத்தி சேகர் இருவருக்கும் தன் மகளின் மகிழ்வான வாழ்க்கையை நினைத்து நிம்மதி அடைந்தனர். சேகர்… தன்னுடைய வருமானத்தில் இருந்து வளைகாப்பில் ஆரதிக்கு சிறு மோதிரத்தை பரிசளிக்க… அவரின் மாற்றத்தில் அந்த இல்லமே குதுகளித்தது. பொறுப்பான தந்தையாய் தன்னால் முடிந்ததை வானதிக்கு சேர்க்க ஆரம்பித்து இருந்தார்.
ஆரதியின் வளைகாப்பு வெகு விமரிசையாக நடந்து இருக்க.. அடுத்தாக சித்தேஷ் கண்ணன் வானதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது…. சென்னையில் உள்ள பிரபலமான திருமண மண்டபத்தில். வந்தவர்களை தன் வழக்கமான சிரிப்போடு வரவேற்று கொண்டிருந்த சித்தேஷ் கண்ணனை அவ்வப்போது பார்வையால் தீண்டி கொண்டிருந்தாள் வானதி. அவளின் பார்வையை உணர்ந்தாலும்…. பாராமுகத்தையே பரிசளித்தான் . அவனின் நிராகரிப்பு வலித்தாலும் … நாளை மனைவி என்ற உரிமையோடு பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தாள் வானதி. சித்தேஷ் கண்ணனின் உறுதி புரியாமல்.