திருமணம் நல்லபடியாக முடிந்திருக்க பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சரஸ்வதி மஹாலட்சுமி இருவரும் ஆரத்தி எடுத்து முடித்து உள்ளே வர சொல்லும் வரை அமைதியாக நின்றிருந்தான் சித்து. வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல போன வானதியை தடுத்து நிறுத்தியவன் நேராக ராசாத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
“அத்தை! படிச்சி முடிக்கிற வரைக்கும் உங்க பொண்ணு இங்கேயே இருக்கட்டும். என் மேல நம்பிக்கை இருந்தா எந்த கேள்வியும் கேட்காம சம்மதம் சொல்லுங்க. ” மகளின் மணவாழ்க்கையில் மகிழ்ந்து கொண்டிருந்த பெற்றோருக்கு இது அதிர்ச்சியாக இருக்க…. பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சித்து கிளம்பியதும் பின்னாலே வந்து கொண்டிருந்த ஆரதி தான், “அம்மா அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல. அதனாலதான் அவசர அவசரமா கல்யாணம் நடந்து இருக்கு. அவங்களே பேசி சமாதானம் ஆகட்டும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க. ” என சித்து விற்கு ஆதரவாக பேசினாள்.
ஏற்கனவே கண்ணன் திருமணத்தைப் பற்றி பேசும் போது இதைப் பற்றி சொல்லி இருந்ததால்… அரை மனதாக சம்மதித்தனர். அவர்களின் சம்மதம் கிடைத்ததும் , “அன்னைக்கு என்ன சொன்ன…? என்னோட பார்வையும் பேச்சும் தப்பா இருக்கா . ஆதரவு கேட்டு வந்த உன்னை யூஸ் பண்ணி கழட்டிவிட பார்த்தனா… உரிமை இல்லாத உன் கைய புடிச்சதுக்கு தான அவ்ளோ கேள்வி கேட்ட…. இப்போ எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதுமட்டுமில்லை கண்ணன் என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான். யாரோ ஒருத்தங்க சொன்னதுக்காக…. என்னலாம் பேசிட்ட. இனி நீயே மனசு மாறி… யார் என்ன சொன்னாலும் கவலையில்லை னு என்ன தேடி வரனும் அப்போ தான் நம்ம வாழ்க்கை ஆரம்பம் ஆகும். அது வரைக்கும் நான் கட்டின தாலியோட தனியா இரு.” என வீரமாக வசனம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த சிந்துவிற்கு தர்ம அடி கிடைத்தது மஹாலக்ஷ்மியின் கையால். மாமியாரை சமாதானப்படுத்திய சித்துவால் தாயை சமாதானப்படுத்த முடியவில்லை. ஏதேதோ காரணம் சொல்லியும் கேட்காமல் போக…”அம்மா.. நீ வேற ஏம்மா சும்மா இம்சை பண்ற. நானே என் பொண்டாட்டிய விட்டுட்டு வந்துட்டேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்.” என பாவமாக கூற ,
“டேய் என்னடா உளர்ற. நீ தான அந்த பொண்ண ராசாத்தி வீட்ல விட்டுட்டு வந்த.” கோபத்தில் கத்துக் கொண்டிருக்கும் தாயின் வாயை முடியவன்,
“நான் இல்லைனா சொன்னேன்… அந்த மாதிரி வீரமா டயலாக் பேசிட்டு வந்தா.. என் பின்னாடியே சமாதானப்படுத்த வருவான்னு நினைச்சு பண்ண. அவ என்னடான்னா குத்துக்கல் மாதிரி உக்காந்துட்டா பேசாம. நானே கல்யாணமான கையோட வாழா வெட்டியா உட்கார்ந்துட்டன்னு ஃபீல் பண்ற நீங்க வேற.அன்னைக்கே அந்த தினேஷ் சொன்னா… கல்யாணம் ஆனாலும் முதலிரவு நடக்காதுன்னு. என்ன வாயோ பலிச்சிடுச்சி” என்றவன் புலம்பிக் கொண்டே தன் அறைக்குச் சென்று விட்டான்.
“ஆரதி இவன் என்ன சொல்லிட்டு போறான். நான் பெத்த ரெண்டுமே பைத்தியங்களா இருக்குங்க. சரஸ்வதி அண்ணி அன்னைக்கு நடந்ததை என்கிட்ட சொன்னாங்க. அதனால்தான் கண்ணன் பேச வந்ததும் உடனே சம்மதம் சொன்னேன். ரெண்டு பேரும் சமாதானமாகி வாழ்வாங்கன்னு பார்த்தா இந்த லூசு இப்படிப் பண்ணிட்டானே…..” என மூத்த மருமகளிடம் புலம்பிக் கொண்டிருக்க… சரியாக உள்ளே நுழைந்தால் இளைய மருமகள் வானதி. வந்தவளைப் பார்த்ததும் புரிந்து கொண்ட மஹாலட்சுமி சிரித்த முகமாக உள்ளே அழைக்க பெட்டி படுக்கையோடு வலது காலை எடுத்து வைத்து புகுந்த வீட்டிற்குள் நுழைந்தால் வானதி.
மனைவி வந்த செய்தியை சித்துவிற்கு தெரியப்படுத்த, மனதிற்குள் குத்தாட்டம் போட்டவன் வெளியில் மிகுந்த கர்வத்துடன் நின்றிருந்தான்.
“அத்தை… கல்யாணம் ஆன கையோட என் புருஷன் என்னை பிறந்த வீட்டுல விட்டுட்டு எங்கையோ ஓடி போயிட்டாங்க. அவங்க திரும்பி வர வரைக்கும் இந்த வீட்டுல இடம் தரீங்களா…” என கண்ணன் சொல்லி கொடுத்தப்படி அழகாக நடிக்க , மஹாலட்சுமியின் செல்ல மருமகளாகி போனாள் அன்றிலிருந்து வானதி. சித்தேஷ் கண்ணனுக்கு தான் ஒவ்வொரு நாளும் சோதனைக் களமாக மாறியது. கட்டிய மனைவி கண்முன்னே இருந்தும் பேச முடியாத நிலை. இதில் உச்சகட்ட சோதனையாக அவன் அறைக்கு எதிரில் உள்ள அறையே வானதிக்கு ஒதுக்கப்பட… அன்று திறந்திருந்த சித்துவின் அறை கதவுதான் இன்னும் மூடவில்லை.
(சித்து சென்ற சிறிது நேரத்திலே…. வந்த கண்ணன், “வானதி அவனுக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை. உன்னுடைய நிலைமை புரிஞ்சுதா… துணையா இருக்கணும்’னு அவசரமா கல்யாணம் பண்ணான். படிச்சு முடிக்கிற வரை உன் கவனம் வேற எதுலையும் இருக்கக்கூடாதுன்னு தான் இங்க விட்டுட்டு போய் இருக்கான். உனக்கு உன் புருஷன் வேணும்’னு நினைச்சா நம்ம வீட்டுக்கு ஓடு. படிப்பு முடியுற வரைக்கும்… ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க நல்ல வாய்ப்பா பயன் படுத்திக்கோங்க.” அதன்பின் அங்கிருக்க வானதியால் முடியுமா என்ன.)
ஜாடை மாடையாக பேச்சு, காலை மாலை கல்லூரிக்கு அழைத்துச் செல்வது, கிடைக்கும் தனிமையை பேசி செலவழிப்பது, உரிமையாய்… அதே நேரம் யாரும் கண்டுகொள்ளாத படி கவனமாய் ரசிப்பது, என இருவரின் வாழ்வும் அதன் பின்னான நாட்களில் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது. இளைய ஜோடி ரகசியமாய் காதலித்துக் கொண்டிருக்க, ரகசியமாய் காதலித்து.. திருமணம் முடித்த இளம் தம்பதிகள் வாரிசின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் காத்திருப்பு போதும் என்று உணர்ந்த கடவுள்.. ஒன்பதாம் மாத தொடக்கத்தில் மேடிட்ட வயிற்றோடு இருந்து ஆரதிக்கு வலியை ஏற்படுத்த அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
மூத்தவர்கள் ஒருபுறம்… பதறிக்கொண்டு இருக்க அதை விட அதிக ஆர்ப்பாட்டம் செய்தனர் கண்ணனும் சித்துவும். உள்ளே இருந்த ஆரதிக்கு இருவரின் சத்தங்களும் கேட்க.. வலியை தாண்டிய சிரிப்பு அவள் முகத்தில். பொறுமை காக்கும்படி செவிலியர் பலமுறை கூறியும் அடங்காதவர்களை… உள்ள வர வைத்த ஆரதி,
“டேய் அறிவுகெட்டவனுங்களா… எதுக்குடா இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்றீங்க….. நீங்க கத்துற கத்துல தான் குழந்தை பயந்துகிட்டு வெளியே வர மாட்டேங்குது…..வாய மூடிக்கிட்டு ரெண்டு பேரும் பேசாம இருங்க… புள்ளத்தாச்சி நானே சும்மா இருக்கேன். உங்களுக்கு என்னடா… வெளிய போங்கடா…. வரும் வலியை பற்களுக்கு இடையில் நிறுத்தி… பொறுத்துக் கொண்டு பேச அதன் பின் ஆண் சிங்கங்கள் இரண்டு அடிபட்ட சிங்கங்களாய் அமைதியாக இருந்து கொண்டனர். அண்ணன் தம்பி செய்யும் சேட்டையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த வானதிக்கும் எதிர்கால கனவுகள் கண்முன் தோன்ற ஆரம்பித்தது. ஆரதி சொன்னதுதான் உண்மை என்பது போல் இருவரும் அமைதியான அடுத்த சில நொடிகளில்….. உதிரத்தோட வெளியில் வந்தது பூக்குவியல்.
குழந்தையின் சத்தத்தில்….தான் போன உயிர் திரும்ப வந்தது கண்ணனுக்கு. சிறிது நேரத்திலேயே குழந்தையை அள்ளி வந்து தகப்பன் கையில் சேர்க்க, சிவப்பு நிறத்தில்…சிறு பஞ்சு உடலோடு கண்ணை மூடிய படி… வெள்ளை துணியில் இருக்கும் குழந்தையைக் கண்ட கண்ணனுக்கு பிறவி பலன் கிடைத்த மகிழ்ச்சி. மீசை முடி படாமல் பதமாக முத்தமிட…..”குட்டி ஏஞ்சல்…. வந்தாச்சு.” என உற்சாகமாக கத்தினான் சித்தேஷ். குழந்தை மஹாலட்சுமி கைக்கு மாற கண்ணன் ஆரதி அறைக்குள் நுழைந்தான். சோர்வாக உறங்கிக்கொண்டிருந்த மனைவியை முத்தமிட்டு அணைத்துக் கொள்ள…இதற்காகவே காத்துக்கொண்டிருந்த சித்து இருவருக்கும் தெரியாமல் அழகாக புகைப்படம் எடுத்தான்.
மூன்று நாட்கள் கழித்து குழந்தை வீட்டுக்கு வர…. சித்துவிற்கு தான் தலை கால் புரியவில்லை. உலகம் மறந்து குட்டி ஏஞ்சலிடம் தஞ்சம் புகுந்தவனை பிரிக்க படாதபாடு பட வேண்டியதாக இருந்தது அக்குடும்பத்திற்கு. மூன்று நாட்கள் கழித்து தங்கள் அறைக்குள் நுழைந்த ஆரதிக்கு ஆனந்த அதிர்ச்சியாக… வீட்டிற்கு வந்த புதிதில் நெய்பாலிஸ் வைப்பதற்காக காலைப்பிடித்து கொண்டு இருவரும் பார்த்துக் கொண்டிருந்த காட்சியும், மருத்துவமனையில் கண்ணன் முத்தமிட்ட காட்சியும் புகைப்படமாக சுவற்றில் மாட்டியிருந்தது.
கண்ணன் ஆரதி வாழ்வில்…. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது வந்த வரவு. வீட்டில் உள்ளவர்களின் கைக்கு மாறி மாறியே ஓய்ந்து போனாள்… குட்டி ஏஞ்சல் அகலிகை. அதுவும் சித்துவிற்க்கு உலகமாகிய போனாள் அகலிகை. பெயர் சூட்டுதல் முதல்….. அகலிகைக்கு ஒவ்வொன்றும் அவனே முன்னின்று செய்ய கண்ணனுக்கு தான் பொறாமைத் தீ. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால்…. அகலிகை, சித்து கூச்சல் தான் அவன் காதுகளில் முதலில் விழும். தூக்கத்தில் கூட… சித்துவின் குரல் கேட்டால் முழித்து விடும் அந்த சுட்டி. அவனிடமிருந்து தன் இளவரசியை வாங்குவதே கண்ணனுக்கு பெரும்பாடாக இருந்தது. அதிகமாக இரவில் மட்டுமே அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க…. மகளை இடது மார்பிலும் மனைவியை வலது மார்பிலும் சேர்த்து அணைத்துக் கொள்வான்.
ரதிதேவி… அகலிகையை காணவரும் சாக்கில் அடிக்கடி தினேஷை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் முழு திருப்தி ஏற்படவில்லை போல… தன் தந்தை தொழிலை அடுத்த கட்டமாக சென்னைக்கு மாற்றிக் கொண்டாள். இந்த கனவில் தான் தன் தந்தை ஜெயிலில் இருக்கிறார் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் துவண்டும் போபவளை பக்கத் துணையாக நின்று தேற்றிக் கொண்டிருந்தான் தினேஷ். வானதியும் கொஞ்ச நாட்களாக சித்துவை மறந்து… அகலிகை யோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாள். அகலிகை உயிர் ஜனித்து ஆறு மாதங்கள் கடந்து இருக்க….. மீண்டும் தன் பணிக்குச் செல்ல ஆரம்பித்தாள் ஆரதி. அகலிகையின் உருவம் மட்டுமே ஆரதி போல் குணம் தந்தையைக் கொண்டது. சரியான நேரத்திற்கு ஆரதி வரவில்லை என்றால்…. அன்றைய தினம் அவள் நிலை அந்தோ பரிதாபம்தான். அதேதான் கண்ணனுக்கும்.
வானதி வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டு நிறைவு செய்து விட்டு மூன்றாம் ஆண்டின் இறுதித் தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறாள். வேலைக்குச் செல்லும் ஆரதிக்கும் சரி.. படித்துக்கொண்டிருக்கும் வானதிக்கும் சரி.. அந்தக் குடும்பமே உறுதுணையாக இருந்தது. அதிலும் கண்ணன் சித்து இருவரும் தேவைப்படும் நேரத்தில் சரியாக அவர்களின் பக்கம் நிற்க…. பெண்களின் வாழ்வில் பேரின்பம். கூடவே அகலிகையின் சேட்டையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது…….. பேத்திக்காக சண்முகம் சென்னைக்கே வந்து விட்டார்.
அகலிகையின் அகவை ஒன்றை தொட இருக்கும் நிலையில்…. மணிகண்டன் தன் சிறை தண்டனையை முடித்து வெளியில் வந்தார். உள்ளே செல்லும் முன் அந்தக் குடும்பம் எப்படி பழகியதோ அதேபோல் எந்த மாற்றமும் இல்லாமல் திரும்பி வந்தபோதும் பழகியது. அதில் மணிகண்டன் ஓரளவுக்கு நிம்மதி அடைய…. பெங்களூருக்குச் சென்று தன் மனைவி மகளை பார்த்தார். அதுவரை இருந்த பெரும் பாரம் ரதி தேவிக்கு இறங்க…. அந்தக் குடும்பமும் பழைய நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது.