Skip to content
Post Views: 4,429
காதல் அன்று
மித்துவுக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு விட்டுக் கொண்டிருந்தான் ராகவ்.
வருடா வருடம் கிருஷ்ணர் ஜெயந்தியின் போது அவர்களின் செல்லக் கண்ணனுக்கு இப்படி கிருஷ்ணர் வேஷம் போட்டு விட்டு போட்டோ எடுத்து வைப்பது வித்யாவிற்கு ஒரு ஆசை.
Advertisement
வருடா வருடம் ரொம்பவும் கோலாகலமாக கொண்டாடுவாள் கிருஷ்ணர் ஜெயந்தி பண்டிகையை!
அவளுக்கு ரொம்பவும் பிடித்தப் பண்டிகை ஆதலால்!
அவளின் ரெண்டு செல்லக் கண்ணன்களுக்கும் அன்று விசேஷ கவனிப்பு தான்!
Advertisement
ராகவ் அவளின் பெரிய கண்ணன், மித்து அவளின் குட்டிக் கண்ணன்!
Advertisement
இந்த முறை கொஞ்சம் சிக்கனமாக என்றாலும், கொண்டாட்டம் உண்டு!
வாசலில் இருந்து உள்ளே வரை கிருஷ்ணன் பாதம் வரைந்து கொண்டிருந்தாள் வித்யா!
சீடை முறுக்கு எல்லாம் இந்த முறை கடையில் தான் வாங்கியிருந்தார்கள்!
Advertisement
போன முறை சீடை வெடித்து, எண்ணை கொட்டி விட்டதை தொடர்ந்து வீட்டில் செய்ய பெரிய தடை போட்டு விட்டான் ராகவ்!
மாலை நேரம் அவள் வைத்திருக்கும் வெள்ளி கிருஷ்ணர் விக்கிரகம் ஒன்றிற்கு அபிசேகம் செய்து வஸ்திரம் அணிவித்து, அவல் வெண்ணை, பழங்கள், சீடை முறுக்கு எல்லாம் வைத்து பூஜை செய்தாள்.
பின் குட்டி கிருஷ்ணன் மித்துவுக்கு ஊட்டி விட்டார்கள் ராகவும் வித்யாவும்!
திவ்யா வந்து மித்துவைத் தூக்கிக் கொண்டுப் போய் விட்டாள் அவள் வீட்டிற்கு!
அவர்களிடம் கொஞ்சம் பலகாரம் கொடுத்து அக்கம் பக்கம் ப்ளாட்களில் கொடுக்க சொல்லி அனுப்பினாள் வித்யா!
ராகவிற்கு ஒரு போன் வரவே அவன் பேசிக் கொண்டிருந்தான்!
வித்யா பூஜா மாடத்தில் இருந்தவற்றை எல்லாம் சுத்தம் செய்து விட்டு , எல்லோருக்கும் கொடுத்து விட்டது போக மீதி இருந்த பலகாரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்த வித்யாவை அப்படியே அலாக்காக தூக்கிக் விட்டான் ராகவ்!
“ஷ், என்ன மாமா இது?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவளை மெல்ல கீழே இறக்கி விட்ட ராகவ்,
“இப்ப தாண்டி சியாம் அண்ணன் போன் பண்ணினார்.
வேலை விசயத்தில் அவரால் எனக்கு ஒண்ணுமே செய்ய முடியாமல் போனதில் அவருக்கு உறுத்திக் கொண்டே இருந்திருக்கும் போல!
அது தான் எனக்காக ரொம்ப யோசிச்சு, அவர் ஒண்ணு பண்ணியிருக்கார்!
அவங்களுக்கு ஊட்டியில் எஸ்டேட் இருக்கு! அது அவங்க அம்மாவோடது! அதை தான் இப்ப என்னை பார்த்துக்க சொல்றார்!
உனக்கும் பீஸ்புல்லா இருக்கும்டா. என்ன இந்த கம்பெனியில் கொடுத்த அளவு சம்பளம் கொடுக்க முடியாது,
ஆனா கொஞ்சம் கொஞ்சமா பண்றேன்! நீ பேசாம அங்க போய்டுடா, என் பொண்டாட்டி பேமிலி அங்க வந்து தலையிட முடியாது, ஏன்னா அது நான் சம்பாரிச்சுது இல்ல, என் அம்மாவோடது.
அவங்கள போய் இவங்க ஒண்ணுமே கேக்க முடியாது! அது தான் சொல்றேன்னு சொன்னார் மயிலு!
என்ன நாம அங்க போய்டலாமா?”
“அதெல்லாம் நீங்க எங்க கூபிட்டாலும் நான் வரேன் மாமா! உங்க விருப்பம் தான் என்னோடதும்!”
“சரிடி இப்ப இந்த சந்தோசமான விசயம் சொல்லிருக்கேன், போய் ஏதாச்சும் ஸ்வீட் எடுத்துட்டு வா!”
“ஸ்வீட் இப்ப ஒண்ணுமே இல்லயே மாமா, இரு நான் கேசரி கிண்டி தரேன்!”
“அதெல்லாம் அப்புறம், எனக்கு இப்பவே வேணும்!”
“இப்பவேன்னா எப்படி மாமா, இருந்த ஒரே ஒரு இனிப்பு சீடையையும் இதோ இப்ப தான் நான் வாயிலே போட்டேன்” என்று தன் வாயைக் காட்டினாள் வித்யா!
“அப்போ அதைக் கொடு” என்றவன், அதை பெற்றும் கொண்டான் கணவன் ஸ்டைலில்!
———-
மாலை நேரம். மதிய தூக்கம் போட்டிருந்தான் ராகவ்!
ராகவ் ஊட்டி எஸ்டேட் வேலையில் சேர்ந்து விட்டான். இப்போது இரண்டு நாள் லீவ் எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.
அவனால் உடனே அங்கே அவர்களை அழைத்துப் போக முடியவில்லை!
முதலில் புரட்டாசி மாதம் குடி பெயர வேண்டாம் என்றார்கள், அப்புறம் வந்து விட்டது ஐப்பசி மழைக் காலம்!
ஒரேடியாக தை மாதம் போய் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்!
அப்போது அவள் அம்மா லதாவும் இந்தியா வர இருக்கிறார்.
அவர்கள் வீட்டில் இது வரை குடியிருந்தவர்கள் காலி செய்து போய் விட, அந்த வீட்டை கொஞ்சம் மராமத்து வேலைகளை பார்த்து வேறு ஆளை பார்த்து வைத்து விட்டு போகும் வரை அவர் இங்கேயே அவர்கள் வீட்டு மாடி போர்சனில் தான் இருக்க போகிறார்!
அவர் வந்தால் இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும்!
மித்து கேஜி தான் படிக்கிறான் என்பதால், படிப்பை கொஞ்சம் ப்ரேக் விட்டாலும் பரவாயில்லை, ஒரேடியாக பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவு!
தூக்கத்தில் இருந்து விழித்தவன் , பக்கத்தில் உறங்கிய வித்யாவைக் காணாமல் எழுந்து உட்கார்ந்தான்!
அப்போது தான் அவள் பக்கத்து வீட்டில் இருந்து உள்ளே நுழைந்ததைக் காண முடிந்தது.
“எங்கடி போய்ட்ட?”
“ம்ம். திவ்யா வீட்டுக்கு தான்! அங்கே அவள் அப்பாவுக்கும் அம்மாவிற்கும் ஒரே சண்டை, நான் தான் சமாதானம் செய்து விட்டு வந்தேன்!”
“ஓ அடுத்த வீட்டு பஞ்சாயத்தைத் தீர்க்கிற அளவு மேடம் நாட்டாமை ஆகிட்டீங்களா?”
“அச்சோ.. இல்ல மாமா, அந்த பிரச்சினைல நானும் இருக்கேன்!”
“என்னடி சொல்ற?“
“நான் ஒண்ணும் பண்ணல மாமா, நானும் திவ்யா அம்மாவும் நேத்து ஒரு ஜோசியர்கிட்ட போனோம்.
அவங்க தான் யாரோ ரிலேடிவ் சொன்னாங்கன்னு கூட்டிட்டுப் போனாங்க!
அவங்க ரிலேடிவ் கூட அவங்க டிவோர்ஸ் ஆன பையனுக்கு பெண் தேடிட்டு இருக்காங்களாம்!
அந்த ஜோசியர் அப்படியே நடந்ததை அப்படியே சொல்றாருன்னும் அவங்க சொல்லி, நானும் அவங்களும் போனோம்!
அங்க போனா அந்த ஜோசியர், திவ்யா ஜாதகத்தை பார்த்து விட்டு, இந்த பொண்ணு படிச்சு முடிக்கிறதுக்குள்ள கல்யாணம் ஆகிடும்!
ஆனா ஒரு சின்ன குறையுள்ள மாப்பிள்ளை தான் அமையும்னு சொன்னார்!
என்ன குறைன்னு கேட்டா, ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ண தான் இந்த பொண்ணுக்கு அமைப்பு இருக்குன்னு சொல்லிட்டார்!
அதை கேட்டவுடன் திவ்யா அம்மா ஒரே அப்செட்!
நான் கூட நம்ம மித்துவோடதை கொடுத்துப் பார்க்கலாம்னு தான் நினைச்சேன், இந்த ஆள் இப்படி சொல்லவும் பார்க்கவே இல்லை, எடுத்துட்டு வந்துட்டேன்!
இதை வீட்டில் வந்து சொல்லி ஒரே அழுகை அவங்க! அதை கேட்ட திவ்யா அப்பா, ஒரே சத்தம்! பயங்கர திட்டு அவங்களுக்கு!
சும்மா அவ கூப்பிட்டா, இவ கூப்பிட்டான்னு இப்படி என்னை கேக்காம எங்கயாச்சும் பாப்பா ஜாதகத்தை எடுத்துட்டு எங்காச்சும் போனே, அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் ஆமா!
இதில இந்த பொண்ணை வேற கூட்டிட்டு போய் இருக்க, ஏற்கனவே அவங்க பயங்கர மனக் கஷ்டத்தில் இருக்காங்க.
அவன் வேற எதாச்சும் சொல்லி கில்லி வச்சு அது இன்னுமும் ஜாஸ்தி ஆச்சுன்னா என்ன பண்றது? என்று ஒரே திட்டு!”
“அவர் இடத்தில் நான் இருந்தா நானும் அதே தான் சொல்லியிருப்பேன்!” “என்றான் ராகவும்!
அது சரி, திவ்யா என்ன சொன்னா இதுக்கு? அவ ஒண்ணும் அப்செட் ஆகலையே?”
“அவளா! அவ விழுந்து விழுந்து சிரிச்சா! போம்மா லூஸு அம்மான்னு!
அவ தனக்கு வர வேண்டிய மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு பயங்கர கனவோட இருக்கா!
அவ மாப்பிள்ளைக்கு பெஞ்ச்மார்க் நீங்க தான்!
உங்கள மாதிரியே ஹான்ட்சமா, ரொம்ப கேரிங்கா இருக்கனுமாம்!” வித்யா சொல்லி சிரித்தாள்!
“ம்ம். பார்த்துக்கோ உன் மாமாவோட அருமை பெருமையை!”
“அது தான் எனக்கே தெரியுமே மாமா! நான் ரொம்ப லக்கி” என்று அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டவள், “இப்ப தான் மாமா உன் முகத்தில் அந்த பழைய சந்தோசமே வந்திருக்கு!” என்றாள்.
அது இப்படியே நிலைச்சு இருக்கனும் மாமா!”
“கண்டிப்பா நிலைச்சு இருக்கும்டி! கொஞ்சம் வருமானம் கம்மியாய் இருந்தாலும் நாம அங்க ஊட்டியில போய் ரொம்ப சந்தோசமா தான் இருக்க போறோம்!” என்றான் ராகவ்!
மாலை வெளியே கோவில் ஷாப்பிங் என்று கொஞ்சம் ஊர் சுற்றி விட்டு, டின்னர் வெளியேயே முடித்து விட்டு வீடு திரும்பினார்கள்.
வீடு திரும்பிய போது, திவ்யா அப்பா ராகவிற்காக காத்து இருந்தார் அவர் வீட்டு வாசலில்!
அவனைக் கண்டதும் இருவரும் டெரசிற்கு போய் ஏதோ பேசிக் கொண்டு இருந்து விட்டு வந்தார்கள்!
அவர்கள் இப்போது அடிக்கடி இப்படி தனியே போய் ஏதோ பேசுகிறார்கள்!
ரொம்ப நேரம் ஆளைக் காணாமல் வித்யா அவனைத் தேடிக் கொண்டு மேலே சென்றபோது அவர்களே பேசி முடித்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்!
அவர்கள் பேசியது கொஞ்சம் அவள் காதில் விழுந்தது!
“இந்த விஷயம் இப்ப வித்யாவுக்கு தெரிய வேண்டாம் சார்!”
“இல்லைப்பா சொல்லிடறது கொஞ்சம் நல்லது” என்று அவர் ஏதோ சொல்ல “இப்ப வேண்டாம்” என்று அவன் மறுத்துக் கொண்டிருந்தான்!
அப்படியென்ன அவளுக்கு தெரியக் கூடாத விசயம் மாமாவிடம்!
சரி. மாமா சொல்ல வேண்டாம் என்று நினைத்தால் சொல்ல வேண்டாம்!
சொல்லும் போது கேட்டுகிட்டா போதும் என்றே தான் நினைத்தாள் ராகவின் அந்த செல்ல மயில்!
error: Content is protected !!