உ
மண்வாசம் : 1
ஆன்றோர்களே சான்றோர்களே என்னைப் போன்றோர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! வந்தனம்! நமோஷ்கார்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள நம் சிங்காநல்லூர் கிராமத்தில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள ரேக்ளா பந்தயத்திற்கு ஊர்த்தலைவர் ஆறுச்சாமி ஐயா சார்பிலும், ரேக்ளா க்ளப் உறுப்பினர்கள் சார்பிலும் உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்.
‘மைக்டைசன்’ மைக்செட்டின் உபயோகத்தால் மைக் பிடித்த மாரிமுத்துவின் கணீர் குரல் எட்டுத் திக்கிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“மாரியண்ணே! சும்மா சொல்லக்கூடாது அம்புட்டு அருமையா பேசுறீங்க” என மெச்சுதலாய்க் கூறினான் மேடைக்கு அருகில் அவன்புறம் வந்த முருகேசன்.
அதற்குத் தலை சாய்த்து புன்னகைத்த மாரிமுத்து, மைக்கை தன் கை கொண்டு மறைத்துவிட்டு,
“நம்ம சுத்து வட்டாரத்துல ஒரு பய இப்படி பேசுவானா? அதெல்லாம் இந்த மைக் மாரிமுத்துனால மட்டும் தான் முடியும்” எனப் பெருமை தட்டிக்கொண்டு,
“அப்படியே குடுகுடுன்னு ஓடிப் போய் நம்ம சோடாக்கடை சொக்கலிங்கத்துகிட்ட இருந்து அண்ணனுக்கு ஒரு சோடா வாங்கிட்டு ஓடியாடா” என்றான்.
‘இதுக்கு இந்தப் பரட்டயனை பாராட்டாமையே இருந்திருக்கலாம்’ என்று நினைத்தபடி சொக்கலிங்கத்தின் சோடாக் கடையை நோக்கி சோகமாய் நடையைக் கட்டினான் முருகேசன்.
சில நிமிடங்களில் சோடா கைக்கு வரவும், பாட்டிலை மேலும் கீழும் குலுக்கி கோலியை உள்ளே தள்ளிவிட்டு சோடாவை ஒரே மடக்கில் குடித்து முடித்தான் மாரிமுத்து. நீர்மம் உள்ளே செல்லவும் தொண்டையைச் செருமி நிலைபடுத்திக் கொண்டு மீண்டும் மைக் பிடித்தான்.
நம் கொங்கு மண்ணின் கிராமங்களில் பாரம்பரியமாக நடத்தப்படுவது தான் இப்போட்டி. நம் மண்ணின் மைந்தர்களுக்கு ரேக்ளா பந்தயம் வெறும் போட்டி மட்டும் அல்ல, அது நம் ஊண் உயிரோடு சேர்ந்து நம் உணர்வுகளோடு கலந்த ஒன்று. இன்னும் சற்று நேரத்தில் சாலையில் சீறும் ஏறுகளோடு சீறிப்பாய உள்ளனர் நம் கொங்கு மைந்தர்கள். போட்டியைக் கண்டு களிக்கத் தயாராகுங்கள்.
தெருவிற்குத் தெரு வைத்திருந்த ஒலிபெருக்கியால் அவன் பேசுவது ஊர் முழுக்க எதிரொலிக்க, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
ரேக்ளா பந்தயத்தைக் காண ஊர் மக்கள் ஒவ்வொருவராய் போட்டி நடக்கும் இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தனர். ஊரே அவ்விடத்தில் கூடியிருக்க, தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தன் வீட்டுப் பணியாள் மாடசாமி பின்தொடர, தன் புடவை முந்தானையால் முகத்தை மறைத்தபடி வேக நடையோடு பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் அவர். அவ்வூரின் பெரியவீட்டுப் பெண்மணியான ரங்கநாயகி.
பால் நிறத்திலான ஒரு எட்டு கஜம் சேலையை பின்னங்கொசுவம் வைத்துக் கட்டி, எண்ணெய் தடவி நன்கு வாரி முடிந்த கூந்தலோடு தன் நெற்றி நிறைய திருநீறு அணிந்தபடி அவர் வீதியில் நடந்து போகையில், கையெடுத்து கும்பிடத் தோன்றும் அளவில் தெய்வீகம் அவரிடம் குடிகொண்டிருக்கும்.
ஆனால் இன்று தன் தோற்றத்தை மறைத்துக் கொண்டு செல்லும் அளவிற்கு அவருக்கு என்ன நேர்ந்ததோ?
“என்ன நாயகி முக்காடு போட்டுக்கிட்டு இம்புட்டு வெரசலா எங்க போற?”
ஓட்டமும் நடையுமாய் விரைந்து கொண்டிருந்த ரங்கநாயகியை அடையாளம் கண்டுகொண்டு உடனே அவரை நோக்கி வேகமாய் குரல் கொடுத்தார் சுப்பாத்தா.
சூப் கடை வைத்திருக்கும் சுப்பாத்தா தான் அத்தெருவின் சிசிடீவி கேமரா. வயதானாலும் அவர் கழுகுப் பார்வையில் இருந்து ஒரு விடயமும் தப்பாது. அவர் தன்னை கண்டுகொண்டதில்,
“மாடசாமி நீ முன்னால போ” என தன்னுடன் வந்தவனை முன்னால் அனுப்பிவிட்டு,
“மொல்ல பேசு சுப்பாத்தா, நீயே கத்தி ஊரக் கூட்டிருவ போல” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே மெல்ல அவரருகில் வந்து மறைவாய் அமர்ந்தார் நாயகி.
“பெரியூட்டம்மா நீயே இப்படி முக்காடு போட்டுக்கிட்டு போனா அதைப் பார்க்குற நாலு பேரு என்ன நினைப்பாங்க? உன்ர மகன் ஆறுச்சாமிக்கு தெரிஞ்சா என்னாகுறது?”
“அட நானே என்ர மகனுக்குத் தெரியாம தான் போய்க்கிட்டு இருக்கேன். ஊர் கண்ணுக்கு தப்பிச்சாலும் உன்ர கண்ணுக்கு தப்பிக்க முடியுமா?” என்றதில், தனக்கு இருக்கும் நாலு பல்லும் நன்றாய் தெரியும்படி பெரிதாய் சிரித்த சுப்பாத்தா,
“சரி என்ன காரியமா போற?” எனக் காரியத்தை தெரிந்துகொள்வதில் கண்ணாய் இருந்தார்.
“இன்னைக்கு என்ர சின்னப் பேத்தி அரசி வெளிநாட்டுல இருந்து வாரா அல்லோ.. அவளக் கூட்டியாரத்தான் போய்ட்டு இருக்கேன்” என மலர்ந்த முகமாய் தன் வேகத்திற்கான காரணத்தை நாயகி முன்வைக்க,
‘சின்னவ ஊருக்கு வாராளா! இனி ஊர ஒருவழி பண்ணாம விடமாட்டா’ என்று நினைத்தாலும் நாயகியிடம் புன்னகைத்துவிட்டு,
“அடடே வெளிநாட்டுக்கு படிக்க போன புள்ள படிப்பு முடிஞ்சு திரும்பி வருதா.. நெம்ப சந்தோசம் நாயகி. காரவுட்டு கூட்டியாராம பஸ்சுலையா வரச் சொல்லியிருக்குற?” என கண்களை விரித்து கன்னத்தில் கைவைத்துக் கேட்க,
“நம்மூட்டு டிரைவர் மணியனைத் தான் அனுப்பிவுட்டோம் சுப்பாத்தா. பொள்ளாச்சி ஸ்டேசன் வரைக்கும் வந்த புள்ள திடுதிப்புன்னு பஸ்ல வர்றேன்னு சொல்லி அவனை திருப்பி முடுக்கி விட்டிருக்கா. அந்தக் கூறு கெட்டவனும் மண்டையை மண்டையை ஆட்டிட்டு அவ கொண்டுவந்த பொட்டிகளை மட்டும் தூக்கிட்டு வந்திருக்கான். அவன் வந்து சொல்லித்தேன் விஷயம் தெரிஞ்சு நான் இப்போ போய்கிட்டு இருக்கேன்”
“அட இதுவேறையா.. எப்படியும் நாலு மணி பஸ்சுக்கு தான் வருவா. இன்னும் நேரம் கெடக்குது. நீ செத்த நேரம் உக்காந்து நாயம் பேசிட்டு போலாம்” என பேச்சுக்கு அழைக்க,
“நம்மூரு பஸ் காரனை லேசுல நம்ப முடியாது. எல்லாம் கடனேன்னு வண்டி ஓட்டுறவனுங்க. பஸ்ச கிஸ்ச நிறுத்தாம போய்ட்டானுகனு வெய்யு.. அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டே வந்துடறேன். அவ அப்பன் வேற ரேக்ளா போட்டிக்கு தலைமை தாங்க போயிருக்கான். அவன் வர்றதுக்குள்ள நானும் வீடுபோய் சேரோணும். இவ பண்ணுன விஷயம் தெரிஞ்சா அவன் வேற குதி குதின்னு குதிப்பான்” என்றபடி பேச்சுக்கு சிக்காது பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடைபோட்டார்.
பெரிய மாடு, நடுத்தர மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என நான்கு வகைபடுத்தப்பட்ட பிரிவுகளில் மாடுகள் எல்லாம் தயாராய் நின்றிருக்க, அலங்கரிக்கப் பட்டிருந்த ஒவ்வொரு வண்டியிலும் இருவர் அமர்ந்தபடி, காளைகளோடு காளையர்களும் தயாராய் இருந்தனர்.
“மாப்ள! இந்தத் தடவ நம்ம தான் ஜெயிக்கோணும் பார்த்துக்கோ. இல்லாட்டி ஊர்ல ஒரு பய நம்மள மதிக்கமாட்டான். செல்லாக் காசு ஆக்கிருவானுக” என்ற சேதுராமனை ஆழமாய் பார்த்தபடி தலையசைத்தான் லோகநாதன்.
‘நம்ம ஜெயிக்கலைனாலும் பரவாயில்ல, இந்தத் தடவ அவனுக மட்டும் ஜெயிச்சிடக் கூடாது’ என்னும் செய்தி இருந்தது அவன் பார்வையில்.
அப்போது அவர்களுக்கு அருகில் ‘ஜல் ஜல்’ என்ற சத்தத்தோடு, இருபுறமும் காங்கேயம் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டி ஒன்று வந்து நிற்கவும்,
“பாண்டியருக வந்துட்டாங்க டோய்..!”
பெரியவர் ஒருவர் கூட்டத்தில் குரல் கொடுக்க, காளைகளுக்கேற்ப கட்டுக்கோப்பான உடலமைப்புடைய அவ்விருவரின் புறமே அங்கிருந்த அனைவரது பார்வையும் பதிந்திருந்தது.
அவ்விருவரது தோரணை, இம்முறையும் வெற்றியின் நாயகி அவர்களுக்குத்தான் மாலை சூடப் போகிறாள் என்பதை பறை சாற்றுவதாய்த் தான் இருந்தது.
தன் கையிலுள்ள செம்புக் காப்பை இறுக்கமாய் பின்னுக்குத் தள்ளி, காளைகளின் தலைக் கயிற்றை ஒருகையால் இழுத்துப் பிடித்தபடி, மறுகையால் தன் மீசையை நீவியபடி கம்பீரமாய் வண்டியில் அமர்ந்திருந்தான் அவன்.
பாண்டியன்!
விக்ரம பாண்டியன்..!
அவனுக்குப் பின்னால் தன் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி கையிலிருந்த சாட்டை வாரை அழுந்தப் பற்றி அருகிலிருந்த வண்டியில் நின்றிருக்கும் சேதுராமனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் இன்னொருவன். அவன்,
குலசேகர பாண்டியன்..!
அவ்விருவரையும் கண்ட லோகநாதன் மற்றும் சேதுராமனின் அகமும் முகமும் சேர்ந்து வெறுப்பை வெளிக்காண்பித்தது. ரேக்ளா பந்தயத்தில் பாண்டியரின் தொடர் வெற்றியே அவர்களது நெஞ்சத்தில் வஞ்சத்தை அதிகரிக்கச் செய்திருந்தது.
“மாமா…!”
அவர்களுக்கு வெகு அருகில் மென்சாமரம் வீசியதுபோல் மென்மையாய் ஒலித்த மங்கையின் குரலில் நால்வருமே அவளைத் திரும்பிப் பார்த்திருந்தனர்.
அங்கு குலசேகரனின் உடன்பிறந்த அக்கா மரகதவள்ளியின் ஒரே மகளான அரும்பு நின்றிருந்தாள்.
“நீங்கதான் ஜெயிக்கோணும். கண்டிப்பா இந்தத் தடவையும் நீங்க தான் ஜெயிப்பீங்க” என்றாள் பாண்டியர்கள் இருவரிடமும்.
ஒரு கீற்றுப் புன்னகையோடு விக்ரமன் தலையசைக்க, அரும்பின் பார்வை என்னவோ குலசேகரனிடம் தான் நிலைத்து நின்றது.
அவள் அந்த மாபெரும் ஜனத்திரளில் புகுந்து கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவர்களை நெருங்கும்வரை அவளையே பார்த்திருந்த குலசேகரன், அவள் அவர்கள் அருகில் வந்ததும் அவள் வருகையை விரும்பாதவன் போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.
“நீ மொதல்ல இங்கிருந்து கிளம்பு!”
அவன் அப்படிச் சொல்லியதில் முதலில் முகத்தை சுருக்கினாலும் அருகிலிருந்த சேதுராமனையும் லோகநாதனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின் அவனிடம் தலையசைத்து அங்கிருந்து சென்று கொண்டாள் அரும்பு.
சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தம்!
‘பாம்.. பாம்’ என ஒலி எழுப்பியபடி அசைந்தாடி ஒருவழியாக அவ்விடம் வந்து சேர்ந்தது அப்பேருந்து.
பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிக் கொண்டிருக்க, நாயகியின் கண்கள் ஆசையாய் தன் பேத்தியைத் தேடியது. அனைவரும் இறங்கி இருக்க, உள்ளே நடத்துனரோடு ஒரு பெண் சத்தமிட்டுக் கொண்டிருப்பது காதில் விழ, கீழிருந்தபடி எட்டிப் பார்த்தார்.
“நீ மொதல்ல எங்க பஸ்ஸவிட்டு கீழ இறங்கு மா” உச்சகட்ட கொதிப்பில் நடத்துனர்.
“ஹலோ! இது கவர்மென்ட் பஸ். இதென்ன உங்கப்பன் வீட்டு சொத்தா? என்ன இறங்கச் சொல்ல நீ யாரு? நான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கேன். இதுல ட்ராவெல் பண்ண எல்லா ரைட்சும் எனக்கு இருக்கு. நீ மீதிக்காசு தராம எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்க. அதை தட்டிக் கேட்டா என்னை இறங்க சொல்லுவியா? உங்கள எல்லாம் கோர்ட்டுல நிறுத்தறனா இல்லையானு பாருங்க” என வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் லெமன் எல்லோ டாப்ஸ் சகிதம் பேசிக்கொண்டிருந்த பெண்ணை உற்றுப் பார்த்தார் ரங்கநாயகி.
“யோவ் என்னையா கசமுசன்னு சத்தம். அந்தப் புள்ளைக்கு மீதிய கொடுத்துதான் தொலையேன்யா” என ஓட்டுனர் குரல் கொடுக்க,
“அட நான் அப்பளயாவே கொடுத்துட்டேங்க. எல்லாருக்கும் மீதிய கொடுக்கோணும்னு சத்தம் போடுது இந்த பொண்ணு.. நான் என்ன கன்டெக்டரா இல்ல பிச்சக்காரனா சில்லறையா வெச்சு சுத்திக்கிட்டு இருக்க” என அவர் புலம்ப,
“இப்படி ஊரை ஏமாத்துறதுக்கு கோவில் வாசல்ல போய் பிச்சை எடுக்கலாம்” என அவள் சத்தமாய் முணுமுணுக்க, நடத்துனர் கோபமாகி பேச வாயெடுத்த நொடி,
“எவன்டா அது என்ர பேத்திகிட்ட வம்பு வளக்கறது. பிச்சுப் புடுவேன் பிச்சு” என குரல் உயர்த்தினார் நாயகி. அவரது குரல் கேட்ட அடுத்தநொடியே அவரருகில் வந்து குவிந்தனர் ஊர்க்காரர்கள்.
‘ஐயோ! இந்த மாடர்ன் மங்காத்தா இந்தாத்தா பேத்தியா?’ என அதிர்ந்து பார்த்தனர் ஓட்டுனரும் நடத்துனரும்.
“அப்பத்தாஆஆ..” என புன்னகையுடன் வண்டியில் இருந்து கீழே குதித்து இறங்கினாள் அரசி.
“அரசி! என்ர சின்னக் குட்டி. வந்துட்டியா.. வா கண்ணு வா” என கன்னம் வழித்து திருஷ்டி கழித்துக் கொண்டிருக்க, அதற்குள்,
“நம்ம பெரியாத்தா கிட்டயே எவனோ வம்பு வளக்குறான் ஓடியாங்க டோய்” என்ற ஒருவரின் குரலுக்கு நொடியில் இன்னும் ஆட்கள் அவ்விடம் குவிய,
“யாராத்தா நம்ம அம்மணி கிட்ட வம்பு பண்ணுறது” என்றொருவர் கேட்க,
“இந்த கன்டக்டர் கடையாப் போனவன்தே..” என நாயகி திரும்பி நடத்துனரை கைக்காண்பிக்க, உடனே அங்கிருப்போர் அனைவரும் நடத்துனரை முறையோ முறையென முறைக்க,
‘ஒன்னு கூடிட்டாங்கயா.. ஊர்க்காரங்க எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க. கொஞ்ச நேரம் நின்னாலும் இனி உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என அதற்குமேல் வம்பை வளர்க்காது அனைவர்க்கும் அருகிலிருந்த கடையில் சில்லறை மாற்றிக் கொடுத்துவிட்டு விரைந்து பேருந்தைக் கிளப்பினர்.
“எப்படி கண்ணு இருக்கற? பாத்து எத்தனை வருஷம் ஆகுது. என்னைய கூட பாக்க வரலையல்லோ நீயு. என்ர கிட்ட பேசாத போ” என நாயகி கண் கலங்கியவாறு முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவர் முகத்தை பிடித்து தன் புறம் திருப்பியவள்,
“ஆத்தா! நான் படிக்கத் தானே போனேன்? அது முடிஞ்சதும் உடனே கிளம்பி வந்து உங்க முன்னாடி நின்னுட்டனல்ல. இனி உங்களை விட்டு எங்கயும் போகமாட்டேன் போதுமா” எனப் புன்னகைக்க, அவரும் தலையசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“நல்லா இருக்குறீங்களா அம்மிணி” என மாடசாமி நலம் விசாரிக்க,
“ஹ்ம்ம்.. நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க” என்று பேசியபடி அவளும் நாயகியோடு வந்து கொண்டிருந்தாள்.
வாய் பேசிக்கொண்டு வந்தாலும் கண்கள் மட்டும் நிலையாய் ஓரிடத்தில் இல்லை அரசிக்கு. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தன் ஊரில் கால் பதிக்கிறாள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறாள். இன்றுதான் ஒரு உயிர்ப்பே வந்ததுபோல் இருந்தது. அவளின் ஒவ்வொரு செல்லும் புது உயிர் கொண்டது.
கண்கள் அங்கும் இங்கும் சுழல, எங்கும் அதிக அளவில் மாற்றமில்லை. ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள் மட்டும் தார்சு வீடுகளாய் மாறி இருந்தது. மற்றபடி,
அதே தெரு.
அதே கடை கண்ணிகள்.
அதே அரசமரத்தடி பிள்ளையார்.
அதே நூலகம் என அனைத்தும் அதுவாகவே அப்படியே இருந்தன.
அதுபோல் மனிதர்களும் அப்படியே இருப்பார்களா??
இம்மண் கொண்ட நினைவுகள் போல் ஒவ்வொருவரின் மனம் கொண்ட நினைவுகளும் நாளுக்கு நாள் கூடியிருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்று நினைத்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
‘ஜல்.. ஜல்’ என்ற சத்தத்தில் சிந்தனை கலைந்து சுற்றும் பார்த்தாள். இருபுற சக்கரங்களிலும் வண்ண வண்ணக் கொடிகள் கட்டிய மாட்டு வண்டிகள் அலங்காரத்துடன் செல்வதைக் கண்டவள், கண்கள் மின்ன
“இன்னைக்கு நம்மூர்ல ரேக்ளா போட்டி நடக்குதாங் ஆத்தா?” என்று நாயகியிடம் விசாரிக்க,
“ஆமாங் கண்ணு, ரேக்ளா பந்தயம் தான் நடக்குது. உங்கப்பனுக்கு இங்க நடந்தது எல்லாம் தெரியவேண்டாம் கண்ணு. நீ கீன அவசரப்பட்டு சொல்லிப்புடாத. உன்னையவே நம்ம மணியனை விட்டு தான் கூட்டியாறச் சொன்னான். நீ தான் காரை விட்டுட்டு பஸ்சுல ஏறியிருக்க. இத்தனை வருஷம் கழிச்சு வர்ற புள்ளைன்னு நீ வீடு வர்ற வரைக்கும் காத்திருக்க மனசு கேக்காம நானும் உன்னைய பார்க்க ஓட்டமா ஓடியாந்துட்டேன். உங்கப்பன் வர்றதுக்குள்ள வேகமா எட்டுவெச்சு ரெண்டு பேரும் வீடு போயிரலாம் வா” என்று பரபரக்க, அவளோ மிகப் பொறுமையாய்,
“ரேக்ளா ரேஸ் பார்த்துட்டு அப்பறம் வீட்டுக்கு போலாங் ஆத்தா” என்றாள்.
அதில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார் நாயகி. கிளம்பும்போதே ஆறுச்சாமி கண்டிப்புடன் சொல்லிச் சென்றார், போட்டி நடக்கும் இடத்தில் வீட்டினர் யாரும் தலை காட்டக் கூடாதென்று. அரசி வருவதை மனதில் வைத்து தான் அவர் அப்படிக் கூறுகிறார் என்று நாயகிக்கும் புரிந்திருந்தது.
“ரேக்ளா பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுங் ஆத்தா. எனக்கும் பார்க்கணும் போல இருக்கு”
ஆசையாய் அவள் கேட்க, அதற்கு மேலும் மறுக்கத் தோன்றாது ஒப்புக்கொண்டவர், அவரது மகன் கண்ணில் படாதவாறு சென்று திரும்ப வேண்டும் என்று எண்ணிக்கொண்டு,
“மாடசாமி நீ வீட்டுக்கு போ நம்ம பெரிய அம்மிணி கேட்டா, கொஞ்ச நேரத்துல வந்திருவோம்னு மட்டும் சொல்லு” என்றுவிட்டு அரசியோடு போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.
அவ்விடத்தில் இருந்து சரியாக ஆறு கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தது அந்த ஜீப்.
சேத்துமடை கிராமத்தில் இருந்து சிங்காநல்லூர் கிராமம் நோக்கி ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான் மாறன்.
நன்மாறன்..!
“ண்ணோவ்! கட்ட வண்டியை நல்லா அடிச்சோட்டு ண்ணா” என்று அவனை துரிதப்படுத்தினான் அவனருகில் அமர்ந்திருந்த சிறுவன் கலையரசன்.
“ஏன்டா என்ர வண்டி உனக்கு கட்ட வண்டியா? ஓபன் மாடல் ஜீப்ல உங்களை ஏத்திட்டு வந்தா நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ” என மாறன் அவன் தலையைத் தட்ட,
“ஏத்திட்டு வந்து என்ன பிரயோசனம்? உன்ர வண்டிக்கு பக்கத்துல போற மாட்டு வண்டி கூட வேகமா போகுது. உன்ர கூட வந்ததுக்கு நான் நடந்தே போயிருப்பேன். இந்நேரம் ரேக்ளா பந்தயமே முடிஞ்சு போயிருக்கும்” என்று நொந்துகொண்டான் பின்பக்கம் அமர்ந்திருந்த அகிலன்.
“இது சரிப்பட்டு வராது. நீ வண்டியை திருப்புண்ணே நம்மூருக்கே நடையைக் கட்டுவோம்” என கவினும் அவன் பங்கிற்கு மாறனை வார,
“அட இருங்கடா போய்ட்டு தானே இருக்கேன். உங்களை பாவம் பாத்து வண்டில ஏத்துனது தப்பா போச்சு” என்று மாறன் தன் வண்டியின் வேகத்தைக் கூட்ட, தங்களது வாய்க்கு வேகத்தடை போட்டுக் கொண்டவர்கள் எல்லாம் எதிர்காற்றின் வேகத்துக்கு வானில் பறப்பதுபோல் இருந்தனர்.
சிறார்கள் செல்வது என்னவோ ரேக்ளா பந்தயத்தைக் காண மட்டுமே. ஆனால் மாறன்?
வாசம் வீசும்…