தாழம்பூ வாசம் நீ…..
22
நாட்கள் ஒன்று இரண்டு என பொறுமையாக நகர்ந்தது… ம்… நான்கு நாட்கள் சென்றுதான் லிங்காவின் வீட்டிற்கே வந்தனர் புதுமண தம்பதி… விருந்து மறுவீடு எல்லாம் முடிந்துதான் வந்தனர்
அங்கு இருந்த, இந்த நான்கு நாட்களில்… சக்தியை விட தாமு மாமாதான் லிங்காக்கு அதிக நெருக்கமானார். வாய்நிறைய, மாப்பிள்ளை… மாப்பிள்ளை… என அழைத்தப்படியே இருந்தார்.
லிங்காவும் சொல்லி சலித்தான்தான் “மாமா… தயவு செய்து இப்படி கூப்பிடாதீங்க… எனக்கு சங்கடமாக இருக்கு… நீங்க லிங்கானே கூப்பிடுங்க..” என எத்தனையோ முறை சொல்லிவிட்டான். அதையெல்லாம் அவர் கேட்பதே இல்லை.
தங்களின் குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றனர்… அங்கே அவர்களின் பழைய வீடு இருக்குமிடம் அழைத்து சென்றனர் பெண் மாப்பிள்ளை இருவரையும். இப்போதும் அதனை வேலையாட்கள் மூலம் பராமரித்து வருகின்றனர். சக்தி அன்று… இன்னும் அமைதியாக இருந்தாள். இதெல்லாம் மணமக்கள் இருவரும் சேர்ந்து சென்றனர்.
தாமு, லிங்காவை… டவுனில் உள்ள வீடு… கட்சி அலுவலகம்.. அங்கிருக்கும் எல்லோருக்கும் லிங்காவை அறிமுகம் செய்து… கிட்ட தட்ட… லிங்காவை ஒரு முக்கிய நபராக… ஆர்பாட்டமாக தன் சொந்தங்களுக்கும்… வெளி உலகுக்கும் காட்டிக் கொண்டிருந்தார் தாமு.
இந்த நான்கு நாட்களில் பகல் நேரம் முழுவதும் தாமுவுடன்தான் லிங்காவின் நேரம்…. அவ்வளவு சுவாரசியமாக இருந்தது… அவனுக்கு. பணம் என்பதை பற்றி நிறையச் சொன்னார்… மனிதர்களின் விதம் சொன்னார்.. சில பல வியாபார விழயம் என எல்லாம் பேசினர் இருவரும்.
அந்த நெருக்கத்தில் தாமு “மாப்பிள்ளை.. எந்த பிராண்டு… வேணும்ன்னு சொல்லுங்க.. எல்லாம் பாரின் பிராண்டும் இருக்கு… ஆனா, புள்ளைக்கு தெரிய கூடாது… சங்கடப்படும்… எப்போ வேண்டும் சொல்லுங்க.. ஏற்பாடு பண்ணிடலாம்…” என சொல்லியும் வைத்தார்.. அவ்வளவு நெருங்கியிருந்தனர் மாமாவும் மாப்பிள்ளையும்.
[the_ad id=”6605″]
அப்படியே அங்கு நாட்கள் சென்று… மறுநாள்… லிங்காவின் வீடு வந்தனர் இருவரும். பெரும் ஆர்பாட்டமாக வந்து, மணமக்களை விட்டு சென்றனர் தாமு தம்பதி. லிங்காவின் வீடும்… பெரும் விருந்து வைத்து, உபசரித்து, அனுப்பினர் அவர்களை.
இந்த நான்கு நாட்களில் இளாதான் முழு பொறுப்பு கம்பெனிக்கு… அப்போதுதான் மூர்த்தி அலுவலகம் வந்தார்.. இளா, கம்பெனியில் இருந்த காலத்திலும் மூர்த்தி வருவார்… மேற்பார்வை பார்த்துவிட்டு சென்று விடுவார். எனவே இளா, அமைதியாக இருந்தான் அன்று.
மூர்த்தி ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்த அமர்ந்தார் இளா டேபிளில்…
இளா “என்ன ப்பா” என்றான் அவரின் முகம் சரியில்லாததை பார்த்து…
தந்தைக்கு எப்படி தொடங்குவது என தெரியவில்லை… லிங்கா அன்று சொல்லியதை… பற்றி பேச வேண்டும் என வந்துவிட்டார்… அலுவலகத்திற்கு.
ஆனால், மகன் ஏதேனும் நினைத்துக் கொள்வானோ என மனமெல்லாம் அடித்துக் கொண்டது. ஆம், இவனை (இளாவை) காரணமாக சொல்லாமல், நிலத்தை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்… எவ்வளவு அமைதியாக பேசினாலும் தன் மகனின் மனம் இதில் வலிக்கவே செய்யும்.. ‘தன்னால்தான்… லிங்காக்கு இப்படியோ’ என தோன்றி விடுமோ… என தந்தை மனம் அடித்துக் கொண்டது… மேலும் ஒரு பயம்.. இதனால் மீண்டும் ஏதேனும்.. முடிவெடுத்து விடுவானோ என ஒரு தயக்கம்… தந்தைக்கு. எனவே ஒரு சில நிமிட அமைதி அங்கே….
தந்தைக்கு ஒரு பெருமூச்சு வந்தது… லிங்காவிடம் ஒரு வழி சொல்லியாகிவிட்டது.. எனவே, அதனை இவனிடமும் சொல்ல வேண்டும்.. என எண்ணியே இங்கு வந்தேன்… என தன்னை திடப்படுத்திக் கொண்டு “அது இளா… லிங்கா அன்னிக்கு… பேசினாம்ப்பா….” என பொறுமையாகச் சொல்லி நிறுத்தினார்.. எப்படி அடுத்து என புரியாமல்.
இளாக்கு இப்போது கொஞ்சம் பொறுமையும் வந்திருந்ததே… முன் போல் அவசர அவசரமாக செய்யும் நிலை எல்லாம் மாறி இருந்ததே அவனிடம்.. எனவே “சொல்லுங்க ப்பா…. எதா இருந்தாலும் சொல்லுங்க… பழைய இளா இல்லப்பா இப்போ” என்றான் திடமான குரலில்.
இந்த வார்த்தைகள் அந்த வயதான தந்தைக்கு எவ்வளவு திடத்தை தரும் என இளா அப்போது உணர்ந்திருக்க மாட்டான்தானே… தந்தை “நல்லது ப்பா, நல்லது..” என்றவர் தொடர்ந்தார்… தானும், லிங்காவும் பேசிக் கொண்டதை சொல்லி, அதற்கு தான் சொன்ன யோசனையையும் சொல்லி முடித்தார்.
இளாக்கு, லிங்காவின் அவசரம் புரிந்திருந்தது… அதற்கான காரணமும் புரிந்திருந்தது.. இளாக்கு. இந்த நிலத்தை தக்க வைக்கவே… இந்த திருமணத்திற்கே சம்மதித்திருப்பான் என்பதும் இளாவின் எண்ணம்.. எனவே, தந்தை இப்படி சொல்லவும்… இளாக்கு, தம்பியின் நிலை தெரிய வேண்டி இருந்தது.. “லிங்கா என்னப்பா சொன்னான்.. நீங்க சொன்னதுக்கு…” என்றான்.
மூர்த்தி “ம்…. என்ன சொல்லுவான்… உடனே ஒத்துக்கிட்டான்… எதோ அதுவரைக்கும் அவன நல்லா வளர்த்திருக்கேன் நான்…
அந்த பொண்ணு பாவம் டா… நம்மகிட்ட என்ன இல்ல இப்போ… நிலத்தை வித்து கடனை.. முக்கியமா அந்த தாமு கடனை அடைச்சி முடிங்க ரெண்டு பேரும்… சரியான நேரத்திற்கு அந்த தாமு உதவி செய்தார்… அதனால்… வட்டி வேணுமான்னு கேட்டு கொடுத்திடு…. நாம பெண்ணெடுத்த வீடு… வரவு செலவு இருக்க கூடாது… அதே மாதிரிதான்… நாளைக்கு காவ்யா வீட்டிலும்… பொண்ணுக்கு செய்யறாங்க அது வேற…. கம்பெனி.. கடன்.. இதுல எப்போதும் அவங்க தலையிட கூடாது… எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க… எல்லாம் அவங்களோடதாதான் இருக்கனும்… இன்னும் ஒரு மாசத்தில்.. இந்த சரக்கு.. அனுப்பின, பணம் வந்திடும்… பார்த்துக்கலாம்… “ என பேசி.. எதை விற்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார் தந்தை.
இளா தந்தையின் சொல்லை இப்போது மறுபேச்சு பேசாமல் ஏற்றான். சிலர்… வாழ்க்கை பாடம் கற்க அதிக விலை கொடுத்திடுவார் போல.
அடுத்தடுத்து வந்த நாட்களில் இளா, தன் தந்தை சொல்லிய வேலைகளை பார்த்தான்.
லிங்காவும் அடுத்த இரண்டு நாளில் வந்ததால்… ஒருவர் மாற்றி, ஒருவர்… கம்பெனி.. விற்பனை.. என அலைந்துக் கொண்டிருந்தனர். நேரம் சரியாக இருந்தது இருவருக்கும்.
[the_ad id=”6605″]
காலை.. இரவு.. இரு வேலையும்… ஆண்கள் மூவரும் அமர்ந்து பேச தொடங்கினர்… காமாட்சிக்கு இப்போதுதான் நிம்மதி.. அப்பாவும் பிள்ளைகளும் சண்டை இல்லாமல் இருந்தால் போதும் என நினைத்துக் கொண்டார்.
சக்தி.. இங்கு இயல்பாக பொருந்தி போனாள். எப்போதும் அமைதிதான் சக்தி.. அவள் இருக்கும் இடம் தெரியாது. எனவே இங்கும் அப்படிதான்.. என்ன நன்றாக வேடிக்கை பார்த்தாள்.
காலையில் எழுந்து வருபவள்… காமாட்சி காபியை கையில் கொடுத்தால் குடிப்பாள்… இல்லையேல்.. அப்படியே தீபக்குடன் பேசியபடியே அவன் பள்ளி கலாட்டாக்களை கேட்டுக் கொண்டிருப்பாள்.
ம்… கிட்சென்… என்பது அவளுக்கு கீரீன் டீ போடும் அளவுக்கு பழக்கமாக இருந்தது… எனவே தீபக் பள்ளி சென்றதும் முதல் நாள்.. கிட்செனுள் வந்தவள்.. ஆடி போனாள்… இரண்டு.. அடுப்பிலும் இட்லி பாத்திரம் வைத்து… சமைத்துக் கொண்டிருந்தனர்.. இவளுக்கு அதிர்ச்சி… அவள் இருக்கும் இடத்தில்… நாலு பெண்கள்… இவள் மட்டுமே கொஞ்சம் உண்பாள்.. அதனால், நாலு இட்லியே அதிகம்… தங்கள் வீட்டில்… அம்மா அப்பா… அங்கும் அப்படிதான்… இங்கு முற்றிலும் வேறு.. ஒரு அளவான பாத்திரத்தில் சாம்பார்.. சட்னி.. இட்லி… எல்லாம் பார்த்து அன்று லதாவிடம் “யாரு க்கா, வராங்க…” என்றாள்.
லதா “எங்க வராங்க….” என்றாள் சட்னிக்கு அந்த சின்ன அடுப்பில் தாளித்தபடி.
“சக்தி பொறுமையாக பேசினாள்… “இல்ல க்கா.. இவ்ளோ சமைக்கிறோமே… கெஸ்ட் வராங்களா…” என்றாள் சிறுபிள்ளையாய்..
லதா சிரித்தேவிட்டாள்… கூடவே “சக்தி… இனி இப்படி கேட்க கூடாது… நாம எத்தனை பேர் இருக்கோம்… பார்த்தியா… ” என்றாள்.
சக்தி “அதுக்கு இரண்டு இவ்வளோ பெரிய பாத்திரமா…” என தீரவேயில்லை அவளின் சந்தேகம்.
லதாக்கு எப்படி விளக்குவது என தெரியவில்லை “அடியேய்… இன்னிக்கு நீதான் எல்லோருக்கும் பரிமாறுற… அப்போ தெரியும்…” என்றாள்.
“நானா…. ஐயோ… எனக்கு பயமா இருக்கு…” என்றாள் மிரண்டபடி.
லதா சிரித்தாள்.. “சரி, நீ இன்னிக்கு லிங்காக்கு மட்டும் செர்வ் பண்ணு.. சரியா…” என சொல்லி தங்கள் வீட்டு பழக்கங்களை அவளுக்கு பழக்கினாள்.
ஆனால், பாவம் லிங்காவிற்கும் ஒழுங்காக பரிமாற வரவில்லை சக்திக்கு… அந்த ஹாட்பாக்சில் இருந்த, இட்லிகளை எடுக்கவே தெரியவில்லை அவளுக்கு… அந்த இடுக்கி போன்ற ஒன்றால் லதா படபடவென பரிமாற… சக்தி திணறினாள்…
லதா “கையில் போடு.. சக்தி” என சொன்னாலும்.. அந்த ஹாட்பாக்சில்… உள்ள சூடான இட்லியை அவளால் எடுக்க முடியவில்லை…
லிங்கா “விடு சக்தி… அண்ணி போடுவாங்க” என்றுவிட்டான். ஆனால் அந்த பெண்ணுக்கு முகம் வாடி போனது.. லதாக்கே லிங்காவின் பேச்சு சற்று… சங்கடமாக போனது..
லதா “போ… காவ்யாவ கூப்பிடு… அம்முக்கு சாப்பாடு ஊட்ட சொல்லலாம்..” என அங்கிருந்து அவளை நகர்த்த தொடங்கினாள்.
மூர்த்தி தன் மருமகளின் முகம் வாடுவது பிடிக்காமல் “இப்போதானே மா, வந்திருக்க.. படிப்ப முடிச்சு வா… எல்லாம் பழகிக்கலாம்.. அப்புறம் பாரு… உன் மாமியாருக்கே… நீ சொல்லி தரலாம்..” என, உள்ளே இருந்த தன் மனைவியையும் இழுத்துவிட்டு.. மருமகளை சமாதானப்படுத்தினார் மாமானார்.
சக்தி லேசாக சிரித்தபடி காவ்யாவை தேடி சென்றாள்.
மற்றபடி… வேறு வேலை எதையும் செய்ய விட்டதில்லை லதாவும்… காமாட்சியும் சக்தியை.. சக்தி “ஏன் அத்த, எனக்கு தெரியாதுன்னு சொல்லலையா” என கேட்டேவிட்டாள்.
[the_ad id=”6605″]
காமாட்சி “இல்ல சக்தி… நீ முதலில் இந்த பத்து நாளும் நம்ம வீட்ட பாரு… நம்ம மனுஷங்களோட பழகு… எப்போ சாப்பாடு.. எப்போ காபி.. அம்முக்கு எப்போ என்ன செய்யணும்… தீபக் எப்போ வரான்… இதெல்லாம் கவனி போதும்… பரிட்சை முடிச்சிட்டு வா… காவ்யா மாதிரி உன்னையும் ட்ரெயின் பண்ணிடறோம்…. நானும் லதாவும்… சரியா..” என்றார் அவளின் மனம் வாடாமல். சக்திக்கு அதில் முகம் சற்று தெளிந்தது.
பின் ஆண்கள் வெளியே சென்றதும்… இப்போது கலகலக்க தொடங்கியது வீடு… சக்தி தன் கல்லூரி பற்றி நிறைய பேசினாள்.. காவ்யா, லதாவும்… தங்களின் பயம்… தயக்கம் என எல்லாம் பேசிக் கொண்டனர்.
காமாட்சிக்கு நன்றாக பொழுது போகிற்று… கூடவே அம்மு.. இப்போது அம்மு சக்தியிடம் ஒட்டிக் கொண்டாள்.. சக்தியும், அவளுக்கு ஊட்ட கற்றுக் கொண்டிருந்தாள்.. காவ்யாவிடம்.
இப்படியே சக்திக்கு எல்லோரும் நெருக்கமாகினர்… லிங்காவை தவிர. ம்… சக்தியிடம் நிறைய பேசினான்தான் லிங்கா. ஆனால், சக்திக்கு.. அந்த நிச்சயத்தில் அவன் நடந்து கொண்டது மட்டும் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.