Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 35

அத்தியாயம் 35

பாரி, வில்வா, அருந்ததியின் பிசியோதெரபி சென்டர் தயாராகி ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. அந்த கட்டிடத்தின் வெளிப்புறம் முழுவதும் வண்ண வண்ண சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொளித்துக் கொண்டிருந்தது.



Advertisement

மறுநாள் காலை திறப்பு விழா.

பாரி, வில்வா, அவினாஷ் மூவரும் பரப்பரப்பாக விழாக்கான ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

இவர்கள் வீட்டில் இருந்து வண்டியில் வந்தால் பத்து நிமிட பயணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தை வாங்கி போட்டிருந்தார் முருகானந்தம் தாத்தா. கீழ் தளத்தை பார்க்கிங்கிற்கு விட்டுவிட்டு மேலே இரண்டு தளத்தில் கட்டிடம் எழுப்பியிருந்தார்கள்.

பக்கத்து இடத்தையும் தாத்தாவே வாங்கி போட்டு இருக்கிறார். பின்னாளில்  விரிவு படுத்த தேவை என்றால் அப்பொழுது சுலபமாக இருக்கும் என்று.

Advertisement

இப்பொழுது அந்த இடத்தை சுத்தம் செய்து கொட்டகை போட்டு, சாப்பிட ஏதுவாக  தயார் செய்திருந்தாரக்ள்.

முருகானந்தம் தாத்தா ஆசைக்காக நிறைய பேரை அழைத்திருந்தார்கள். சுமதி சங்கரன் வீட்டு உறவினர்கள், தர்மராஜ் வீட்டு  உறவினர்கள் நண்பர்கள் பழகியவர்கள் என அனைவரையும் அழைத்திருந்தார்கள். சீதா லட்சுமி மிஸ் வீட்டினரையும், ராஜி விக்ராந்தையும் அழைத்திருந்தார்கள்.

காலை நாலரை மணிக்கு கணபதி ஹோமம். அனைவரின் விருப்பப்படி வீர ராகு தாத்தாவும் பாட்டியும் தான் ஹோமத்தில் அமர்ந்தார்கள். விழா கிட்டத்தட்ட ஒரு திருமணம் போல ப்ரம்மாண்டமாக இருந்தது. பாரி, வில்வா, அவினாஷ், அருந்ததி என்று சிறுவர்கள் காலில் சக்கரம் கட்டிவிட்டதை போல ஓடி ஓடி அனைத்தையும் கவனித்தனர்.

“வீட்டுக்கு போனதும் பிள்ளைகளுக்கு சுத்தி போடணும்” என்றார் தமயந்தி சுமதியிடம். இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ராஜி விக்ராந்த் மகள்களுடன் வருகை தந்தனர்.

பாரியும் வில்வாவும் ஓடி சென்று அவர்களை வரவேற்றார்கள். பின் குடும்பத்தார்கள் அனைவரும் வரவேற்றனர்.

சரியாக எட்டு மணிக்கு, மூன்று தாத்தாக்களும் ஒன்றாக ரிப்பன் வெட்டி முறையே திறப்பு விழாவை நடத்தினர்.

விருந்தினர்கள் அனைவரும் உள்ளே சுற்றி பார்த்து, வாழ்த்து கூறிவிட்டு அப்படியே உணவு உண்ண சென்றார்கள். பின் கீழ் தளத்திலே வட்ட மேஜைகளும் நாற்காலிகளும் போட பட்டிருந்தது. அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் சிலர்.

ராஜியின் குடும்பம் சுற்றி பார்த்து பாரி வில்வா அருந்ததி மூவரிடத்திற்கு  வந்தனர்.

“ரொம்ப நல்லா இருக்கு எல்லாம். வாழ்த்துக்கள்” என்றார் விக்ராந்த் மனமார்ந்து.

“நீ தான் சின்னுவா? பரவாயில்லையே நீயும் இப்பவே பிசினஸ் வுமன் ஆகிட்ட” என்றார் அருந்ததியை பார்த்து.

“ஆமா அங்கிள், ஆனா நான் டூ இயர்ஸ் அப்புறம் தான் இங்க ஜாயின் பண்ணப்போறேன். அதுவரை கேம்பஸ்ல கிடைச்ச ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ணப்போறேன். அப்ப தானே எனக்கும் எக்ஸ்பிரின்ஸ் கிடைக்கும்”

“வெரி  குட்.. அப்படி தான் இருக்கணும். நீ சுயமா நின்னப்புறம் இங்கே சேர்ந்தா தான் உனக்கு ஒரு மதிப்பு இருக்கும். இப்ப சேர்ந்தா உனக்கு திறமை இருந்தாலும், சலுகையில் கிடைச்ச மாதிரி தான் எல்லாருக்கும் தோணும்”

“கருணாக்கா கூட இதை தான் அங்கிள் சொன்னாங்க” என்றாள் அருந்ததி  பெருமையாக.

“ஓ, எங்க கருணாம்பிகையை காணும்?” என்றார் விக்ராந்த்.

 

“அவளுக்கு லீவ் கிடைக்கலை சார், நாளைக்கு ஒரு எக்ஸாம் வேற இருக்கு, அதான் வர முடியலை” என்று கூறிக்கொண்டு  இவர்களிடத்திற்கு வந்தார் சுமதி.

——————-

கருணாவால் தான் வர முடியவில்லை அவளுக்கு எக்ஸாம் இருந்ததால்.

” உனக்கு எப்ப வர முடியுமோ அப்போ பங்க்ஷனை வைச்சிக்கலாம்” என்று தான் நண்பர்கள் கூறினார்கள்.

“இல்லை, என் ஒருத்திக்காக பார்க்க கூடாது. ஏற்கனவே நீங்க டெல்லிக்கு போனதால தான் இரண்டு வருஷம் லேட். தாத்தாக்கு ரொம்ப ஆசை, அவரை மேலும் காக்க வைக்கிறது நியாயமா இருக்காது,” என்று பேசி சம்மதிக்க வைத்திருந்தாள்.

அனைவரையும் சமாதானம் செய்திருந்தாலும், அவளுக்கு வர முடியவில்லை என்பது மிகவும் வருத்தம்.

அனைவரும் ஒன்றாக இருக்கும்பொழுது தான் கருணாவிற்கு அழைத்து பேசினார்கள்.

ஏனோ அவளால் அன்று படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்பொழுது அவள் கைபேசியில் மெசேஜ் டோன் வந்தது. புன்னகையோடு அதை ஒலிக்க விட்டாள்.

“இங்கே ஒரு விஷேசம் நடக்க போகுதுன்னு உன் மனசு முழுக்க இங்கே தான் இருக்கும்ன்னு எனக்கு தெரியும் கருணா.. நீ கவலையே படாத.. இங்கே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும், நான் உனக்கு சொல்லிட்டே இருக்கேன். நீ எதையும் மிஸ் பண்ண மாட்ட… இது என்னோட பிராமிஸ்.

நீ போன் பேசும்பொழுது நானும் அங்கே தான் இருந்தேன். உன் முகம் வாடிப்போச்சு..

எப்படி எனக்கு தெரியும்னு யோசிக்கிறியா.. உன் குரலை வச்சு உன் முக வாட்டம் எனக்கு தெரிஞ்சுது.. நீ வாடினா, என்னால இயல்பா இருக்க முடியல கருணா… 

சின்ன சின்ன சந்தோசங்கள் மிஸ் செஞ்சாலும் மனசுக்கு வருத்தமா தான் இருக்கும். ஆனா இதைவிட பெரிய சந்தோசங்கள் நாம சேர்ந்து கொண்டாட காத்துகிட்டு இருக்கு… 

இப்ப முகத்தை கழுவிட்டு, சிரிச்ச முகமா உன் வேலையை ஆரம்பி..”

என்று அவினாஷின் குரல் மயில் இறகால் அவள் மனதை வருடியது போல இருந்தது.

அன்றில் இருந்து இதோ இப்பொழுது வரை அவ்வப்பொழுது அவினாஷ் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டே தான் இருக்கிறான்.

சில விஷயங்கள் பிறகு மறந்து விடுவோம் என்று தோன்றினால் உடனே ஒரு மெசேஜ் போட்டு விடுவான்.

அதற்காக காதில் ஹெட் போன்ஸ் போட்டு கொண்டு தான் சுற்றிக்கொண்டிருந்தான்.

——————————-

“எல்லாரையம் சாப்பிட கூப்பிட்டுட்டு  போங்க ப்பா” என்றார் சுமதி.

“நான் கூட்டிட்டு போறேன்” என்று அருந்ததி அவர்களை அழைத்துக்கொண்டு முன்னே சென்றாள்.

“அக்காஸ், நீங்க ரெண்டு பேரும் சாரீல்ல சூப்பரா இருக்கீங்க” என்றாள் அருந்ததி ஹர்ஷ் வர்ஷிடம்.

“சின்னு, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்” என்றாள் வர்ஷ்.

“ஆமா சின்னு, பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது” என்றாள் ஹர்ஷ்.

அருந்ததி மலர்ந்து சிரித்தாள். இப்படி சின்னு சின்னுன்னு கூப்பிடுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

“என்ன ராஜிம்மா, எங்க மிஸ் ட்ரைனிங் பார்த்தீங்கள்ல, தமிழ் எப்படி விளையாடுது” என்று கூறிக்கொண்டே வந்து இணைந்து கொண்டார்கள் பாரியும் வில்வாவும். 

“ஏன் நான் தமிழ் சொல்லி கொடுக்கலையா?” என்றார் ராஜி பல்லை கடித்துக்கொண்டு.

“ராஜிம்மா நீங்க அம்மான்னு கூப்பிட சொல்லிக்கொடுக்காட்டியும் பரவாயில்லை, மம்மி யாவது சொல்லி கொடுத்திருக்கணும், அதையும் சுருக்கி மீ மீ ன்னு இல்ல கூப்பிடறாங்க.. இதுல நீங்க தமிழ் சொல்லி கொடுத்த லட்சணம் தெரியுது”

“அது ஷார்ட்டா… “

“தெரியுமே உங்க ஷார்ட்… ஹா ஹாஹா ஹா” என்று இருவரும் சிரித்தனர்.

 பேசிக்கொண்டே இவர்கள் மூவரும் சற்றே பின் தங்கி விட்டார்கள்.

“நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் பாரு வில்லு” என்றார் ராஜி.

“நாங்களும் தான் ராஜிம்மா, பேசாம நீங்களும் சென்னை வந்துடறீங்களா?”

“ஆன், நான் விதுவை  விட்டுட்டு எல்லாம் வரமாட்டேன். எனக்கே இப்ப தான் அவர்கூட செலவழிக்க நேரம் கிடைச்சிருக்கு…” 

“என்ன ஹர்ஷ், உங்க மீ நம்மகூட வராம அங்கேயே நின்னுட்டா?”  என்றார் விக்ராந்த்.

“பப்பா, எங்களை கூட மீ மிஸ் பண்ணல, அவங்க அப்ரென்ட்டீஸ்களை தான் மிஸ் பண்றாங்க. அதான் பார்த்ததும் பாச மழை பொழிஞ்சுட்டு இருக்காங்க”

“மீ, சாப்பிட்டு அப்புறமா பேசுங்க வாங்க” என்றாள் வர்ஷ் அங்கே இருந்தே.

“ஆமா ராஜிம்மா, வாங்க சாப்பிட்டுட்டு அப்புறம் நாம பிரீயா பேசலாம்” என்று அழைத்து சென்று அமர வைத்தனர்.

இருவரும் அவர்கள் நால்வரையும் ஸ்பெஷலாக கவனித்தனர்.

“என்ன வில்வா அத்தான், மாமா பொண்ணுங்க நாங்களும் இங்கே தானே இருக்கோம், எங்களையும் கவனிக்கிறது” என்று கிண்டலடித்தார்கள் அவனது மாமா பெண்கள்.

“அதானே! பாரி உன் அக்கா, தங்கச்சி, அத்தை பொண்ணுங்க நாங்களும் இங்கே தானே இருக்கோம்” என்று கூச்சலிட்டனர் பாரியின் உறவு பெண்கள்.

பெண்கள் அனைவரும் செட் சேர்ந்துகொண்டு கலாட்டாவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

“உங்களை கவனிக்க தான் ஸ்பெஷல் போர்ஸ் இருக்கு இல்ல..” என்றான் அங்கே நின்றுகொண்டிருந்த மூன்று தாத்தாக்களையும் காட்டி, 

“தாத்தா, அரட்டை அடிக்காம கவனிங்க.. பாருங்க யாரும் கவனிக்கலைன்னு சொல்லறாங்க” என்று தாத்தாக்களையும் கிளப்பி விட்டு, எப்படி என்று

பெண்களை பார்த்து சிரித்தனர் பாரியும் வில்வாவும்.

“அடப்பாவிங்களா.. எல்லா ஓல்ட் டிக்கெட்ஸையும் நம்மளை நோக்கி திருப்பி  விட்டுட்டானுங்களே” என்று பெண்கள் நொந்து போய் விட்டனர்.

பின்னே தாத்தாக்களோடு தர்மராஜ், சங்கரன், சுமதி, தமயந்தி என்று அனைவரும் வந்து மாறி மாறி கவனித்து மூச்சு முட்ட சாப்பிட வைத்தே அனுப்பினார்கள்.

உணவிற்கு பின் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஸ்ரீனிவாசன், சீதா மிஸ் வரவில்லையா” என்று கேட்டார் தமயந்தி.

“சீதாவுக்கு அஞ்சாவது மாசம், கூட்டம் இருக்கும்ன்னு தான் கூட்டிட்டு வரல, இன்னொரு நாள் வந்து பார்க்கிறதா சொல்ல சொன்னாங்க, சொல்ல மறந்துட்டேன்” என்றார் ராஜி.

“எப்பவுமே ஜீன்ஸ் சுடிதார்ன்னு தான் பார்த்திருக்கோம், புடவையில் வித்யாசமா இருக்கீங்கம்மா, நல்லா இருக்கு” என்றார் சுமதி பெண்களிடம்.

அவர்களுக்கும் வெட்கம் எல்லாம் வரவில்லை, அப்படியா சரி என்பதை போல பார்த்து வைத்தனர்.

உண்மையில், ஹர்ஷும் வர்ஷும் புடவையில் கொஞ்சம் வித்யாசமாக தோன்றினார்கள்.

சுமதியும், தமயந்தியம் ஐந்து நிமிடங்கள் பேசி இருந்துவிட்டு மத்த விருந்தினரை கவனிக்க எழுந்து சென்றுவிட்டனர். 

“போலாமா ராஜி?” என்றார் விக்ராந்த்.

“பத்து நிமிஷம் விது, பாருயும் வில்லுவும் ரிட்டர்ன் கிப்ட் எடுத்திட்டு வர போயிருக்காங்க. வந்ததும் கிளம்பலாம்”

“மீ, காஃபி குடிக்க மறந்துட்டோம், நாங்க போய் எடுத்துட்டு வர்றோம்” என்று மகள்கள் இருவரும் எழுந்து சென்றார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள் கூட்டம், 

“சரியான சோளக்காட்டு பொம்மையாட்டும் இல்ல இருக்குதுங்க ரெண்டும்..”

என்று கமெண்ட் அடித்தனர்.

“ஆமா டீ.. எப்படி விறைப்பா இருக்காங்க பாரேன்” என்று சத்தமாகவே ரகசியம் பேசினார்கள்.

ரிட்டர்ன் கிப்ட் எடுத்துக்கொண்டு வந்த பாரி வில்வா காதிலும் விழுந்தது.

“ஹலோ, என்ன என்ன சொல்றீங்க? அவங்களை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று அவர்களிடத்தில் நேரே சென்று சண்டைக்கு நின்றுவிட்டனர்.

ராஜி சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்து கொண்டார்.

இரண்டு டேபிள் தள்ளி இருந்த டேபிளில் தான் ராஜியும் விக்ராந்தும் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் பேசியது அவர்களுக்கும் கேட்டது தான், ஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை இருவரும்.

விக்ராந்த் முக்கிய போன் என்று எழுந்து வெளிய சென்றுவிட்டார்.

ஆனால், தங்கள் இடத்திற்கு வந்த பெண்களை இப்படி கிண்டலாக பேசுவதை பொறுக்க முடியாமல் பாரியும் வில்வாவும் பொங்கி விட்டனர்.

அவங்க பொண்ணுங்கன்னு நீங்க சொன்னா தான் தெரியும்” என்றாள் ஒரு பெண்  துடுக்காக.

“ஆமா, சினிமாவுல ஹீரோக்கு பெண் வேஷம் போட்ட மாதிரி இருக்கு” என்றாள் இன்னொரு பெண்.

“நீங்க சொல்லாட்டியும் அவங்க ரெண்டு பேரும் ஹீரோஸ் தான். அவங்கக்கூட நேருக்கு நேர் நின்னு உங்களால் ஜெயிக்க முடியமா?”

“ரொம்ப பேசாதீங்க.. எங்களுக்கும் டேலண்ட் எல்லாம் இருக்கு”

“அப்ப அவங்க கூட டூ வீலர் ரேஸ் போங்க.. அதுல மட்டும் ஜெயிச்சிடுங்க.. அப்புறம் நீங்க சொல்றதை நாங்க கேக்கறோம், தோத்திட்டீங்கன்னா நீங்க அவங்க கிட்ட சாரி கேட்கணும்”

“நாங்க வில்லேஜ்ல இருந்து வந்ததனால வண்டி ஓட்ட தெரியாதுன்னு நினைக்கிறீங்க போல.. வரச்சொல்லுங்க, ஒரு கை பார்த்திடலாம்”

கார சாரமாக இவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கையில்,’கையில் காஃபியுடன் வந்து அமர்ந்தார்கள் இருவரும்.

“எனக்கு எங்கே காஃபி” என்றார் ராஜி.

“உங்களுக்கு காஃபி கொடுக்க கூடாதுன்னு பப்பா சொல்லிட்டு தான் போன் பேசவே போனாங்க”

“அடப்பாவிகளா…”

“ராஜிம்மா, ராஜிம்மா” என்று இவர்களிடம் வந்தனர் நண்பர்கள் இருவரும் மூச்சு வாங்க.

“என்ன மீ.. ரொம்ப சூடா தெரியறாங்க..”

“உங்களுக்காக தான் பேசிட்டு வந்திருக்கோம், இப்ப நீங்க இவங்க கூட பைக் ரேஸ்ல கலந்துக்குறீங்க.. அவங்க முகத்துல கரியை பூசுறீங்க..”

இருவரும் அசையாமல் காஃபியை குடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

“ஓ வண்டி எடுத்துட்டு வரலையா, எங்க பைக் இங்கே தான் இருக்கு அதை யூஸ் பண்ணிக்கலாம்”

“இப்ப எதுக்கு நாங்க இதுல கலந்துதுக்கணும்?”

“அவங்க உங்களை கிண்டல் செய்றாங்க. நீங்க யாருன்னு காட்டணும் இல்ல?”

இவர்களை சுற்றி தான் அனைவரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

“இவ சேலை கட்டி இருக்கிறதை பார்த்து நானும் நான் கட்டி இருக்கிறதை பார்த்து இவளும் காலையில இருந்து சிரிச்சுக்கிட்டு தான் இருக்கோம்”

“மீ ஆசைப்பட்டாங்க, அத்தை கேட்டாங்கன்னு தான் கட்டி இருக்கோம். அதை  பார்த்து அவங்க கருத்தை சொல்றாங்க.. இதுல எதுக்கு டென்ஷன்..” என்றனர் கூலாக.

நண்பர்கள் ராஜியை பார்க்கவும், “போங்கப்பா , நானே காஃபி குடிக்கலாம்னு நினைச்சா, விது கெடுத்துவிட்டுட்டு போய்ட்டாரு, நான் போய் அவருக்கு தெரியாம ஒரு காஃபி குடிச்சிட்டு வர்றேன். இந்த மொக்கை பஞ்சாயத்தை நீங்களே பாருங்க” என்று சற்று தூரத்தில் இருந்த அருந்ததியிடம் சென்று விட்டார்.

“சின்னு, எனக்கு ஒரு காஃபி ப்ளீஸ்” என்றார்.

“வாங்க வாங்க.. எதுக்கு ப்ளீஸ்” என்று பேசிக்கொண்டே அவரை அழைத்துக்கொண்டு சென்றாள்.

“உங்க உடை பத்தி மட்டுமில்லாமல், உங்க உடல் வாகை பற்றியும் உங்க மேனரிசம் பத்தியும் சொன்னது தப்பு தானே..”

“சரி தப்பு எல்லாம் அவங்க அவங்க பார்வையில் தான்  நாத்தன்..” என்றாள் வர்ஷித்தா.

அவள் அழைப்பை கேட்டு பக்கத்தில் இவர்கள் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் சிரித்துவிட்டனர்.

அவன் முறைக்கவும், யாருக்கும் தெரியாமல் அவனை பார்த்து கண்ணடித்தாள் வர்ஷித்தா.

வில்வா அதிர்ச்சியாக வர்ஷித்தாவை பார்த்து முழித்துக்கொண்டு நின்றுவிட்டான்.

“அவங்க சொல்ற மாதிரி எங்களுக்கு நளினம் நாட்டியம் எல்லாம் வராமல் இருக்கலாம், அது வந்தே ஆகணும் இல்லையே வேந்த்தன்” என்றாள்  ஹர்ஷிதா.. அனைவரது கவனத்தையும் திசை திருப்ப.

அதில் தன்னை மீட்டுக்கொண்டான் வில்வா.

“நாங்க போட்டின்னு சொல்லிட்டோமே”, என்றனர் இருவரும் சங்கடமாக.

“நாங்க ரெடியா தான் இருக்கோம்” என்றனர் அந்த பெண்களும்.

“நிச்சயம் பைக் ரேஸ்ல நாங்க ஜெயிச்சிடுவோம், இவங்க தோத்துப்போகலாம், ஆனால் அதை வச்சு என்ன ப்ரூவ் பண்ண முடியும்?”

“எங்களுக்கு நளினம் வராத மாதிரி, அவங்களுக்கு பாக்ஸிங் வராது.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்னு நல்லா வரும்.. அதை வைத்து கிண்டல் அடிக்கிறது வேஸ்ட்.. அதை சீரியசா எடுத்துக்கிறது டைம் வேஸ்ட்.. அதே போல தம்பட்டம் அடிக்கறதும் வேஸ்ட்..”

இவர்கள பேசுவதை கேட்ட பெண்கள் குழுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .

“நாங்க சும்மா விளையாட்டா தான் சொன்னோம், சாரி “என்றனர் உணர்ந்து.

“இட்ஸ் ஓகே..” என்று சிரித்து கொண்டனர் இருவரும்.

“நீங்க சொல்ற மாதிரி ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் ரூபம் தான் இல்லையா?” என்றாள் ஒரு பெண், நாங்களும் பேச்சில் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்க.

“ஹா.. ஹா.. நாங்க எப்ப அப்படி சொன்னோம்.. நீங்க வேந்த்தனை கவர் செய்ய பேசணும்னா நீங்க நேரடியாவே அவங்க கிட்ட பேசிக்கோங்களேன், எதுக்கு எங்களை இழுக்குறீங்க?” என்றாள் ஹர்ஷித்தா பளிச்சென்று.

ஏனென்றால், ரொம்ப நேரமாக அந்த பெண் பாரியை தான் சைட் அடித்துக்கொண்டிருந்தது. அதை ஹர்ஷிதா கவனித்தே இருந்தாள்.

பாரி ஹர்ஷித்தாவை பார்த்து என்ன இது என்று முழிக்கவும், ஹர்ஷித்தாவும் யாரும் அறியாமல் அவனை  பார்த்து கண்ணடித்துவிட்டு அமைதியாக நின்றுகொண்டாள்.

உண்மையில் அந்த பெண் பயந்தே விட்டது. சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக பாரியை சைட் அடித்தாள், அவ்வளவே. அங்கே இருக்கும் அவள் அம்மாவிற்கு மட்டும் இது தெரியவந்தது, அவளை உரித்துவிடுவார்.

பாரி நண்பனை பார்த்து பாவமாக முழித்தான்.

நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு,

“எங்களை பொறுத்தவரைக்கும், ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்” என்றாள் வர்ஷித்தா.

ஒரு பாரதியார் பாட்டு கூட இருக்கு தானே 

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;

பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”

என்று கம்பீரமாக கூறினாள் வர்ஷித்தா.

அனைவரும் கைதட்டி ஆமோதிப்பாக தலையசைத்தார்கள்.

ஒரு சினேக சிரிப்போடு பெண்களிடம் விடைபெற்று உள்பக்கம் சென்றனர் இருவரும். அங்கே தர்மராஜும் சங்கரனும் இவர்களிடம் பாக்ஸிங் பற்றி ஆசையாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

 மற்ற பெண்களும் களைந்து சென்றார்கள்.

பாரியும் வில்வாவும் தான் ஆங் என்று வாய் பிளந்து நின்றுகொண்டு  இருந்தார்கள்.

“என்னடா ரெண்டு  பேரும் இப்படி வாயை பொலந்து கிட்டு  இங்கேயே நிக்குறீங்க.. நிறைய பேர் கிளம்ப நிக்குறாங்க.. அவங்களுக்கு கிப்ட் கொடுங்க போங்க” என்று வந்து விரட்டினார் பாட்டி.

“அங்க பாருங்கடா, அவி பையனை, உங்க வயசு தானே.. எப்படி வேலையும் பார்த்துட்டு, ஆபிஸ் காலும் பேசிகிட்டு பம்பரமா சுத்துறான், அவனை பார்த்து கத்துக்கோங்க” என்று கூறி சென்றார்.

இவர்கள் அவினாஷை திரும்பி பார்த்தனர்.

அவன் பேசிக்கொண்டே வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான் தான். ஆனால், ஆபிஸ் கால் போல தோன்றவில்லை. 

சரியாக அப்பொழுது ராஜியும் அருந்ததியும் இவர்களிடம் வந்துவிட்டார்கள்.

“என்ன வில்லு, பஞ்சாயத்தை முடிச்சிட்டீங்க போல”

“இப்ப வேற பஞ்சாயத்தை பார்க்கணும் போல ராஜிம்மா..”

“இதுவாச்சும் தேறுமா?”

அவரை முறைத்துவிட்டு, “சின்ன பாப்பா உங்க அண்ணா முழியே சரி இல்லையே, ஆபிஸ் கால்லா பேசுறான்” என்றான் அருந்ததியிடம்.

“நான் சொல்லிட்டே தான் இருக்கேன், நீங்க தான் நம்பலை. ரொம்ப நாளா அவன் போக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு”

“ஆமா பாப்பா, இந்த ஹெட் போனை கூட ஒரு வாரமா கழட்டவே இல்லை..”என்றான் பாரி. 

“நானும் நோட் பண்ணேன் பாரு, வில்லு… அவி போன் பேசும் போது, சுத்தி வேற யாரவது பார்க்குறாங்களானு திருட்டு முழி முழிச்சிட்டு அப்புறமா தான் பேசுறான்” என்றார் ராஜி.

இவர்கள் நால்வரும் சுற்றத்தை மறந்து குசு குசுவென பேசிக்கொண்டிருந்தனர்.

“ராஜி போலாமா?” என்று விக்ராந்தின் குரலில் தான் களைந்தனர்.

“டேய், ஏதுவானுலும் எனக்கும் அப்டேட் பண்ணுங்க” என்று மூவரிடமும் ரகசியமாக கூறி விடைபெற்றார் ராஜி.

———————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!