Skip to content
Post Views: 3,606
“அம்மாடி, பிருந்தா, இந்தா இந்த சொளவுல இருக்கிற மோர் மிளகாயை எடுத்துட்டுப் போய் வெயில்ல காய வை” என்று பிருந்தாவின் கையில் சொளகை(மூங்கில் முறம் போல கொஞ்சம் முக்கோண வடிவத்தில் இருக்கும் முறம்) கொடுத்தார் காந்தி ஆச்சி.
“அம்மா, நீ என்ன பண்ற? பிருந்தா கிட்ட ஏன் இப்படி வேலை சொல்லிட்டு இருக்க? கொண்டா, நான் போய் வச்சுட்டு வர்றேன்” என்ற கோமதியிடம்,
“ஏன்? சொன்னா என்ன? நான் இப்படி நடந்துகிட்டா தான் அவளுக்கு என்னோட ஒட்டுதல் வரும்!
இல்லன்னா அவ தன்னை ஒரு விருந்தாளி மாதிரி நினைச்சுப்பா! அப்படி இல்லாம அவள் இத தன் வீடு மாதிரி உரிமையா நினைச்சு இருக்கணும்னு தான் சொல்லுதேன்” என்றார் ஆச்சி!
Advertisement
“நீங்க கொடுங்க”, என்று ஆச்சி கையில் இருந்து வாங்கிக் கொண்டு முன் வாசலில் போடப் பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் துணி விரித்து மோர் மிளகாயை காய வைக்க ஆரம்பித்தார்!
காலையில் குளித்து முடித்து, நெற்றியில் வகிட்டில் குங்குமம் மட்டுமே வைத்துக் கொண்டு வேறெந்த மேக்கப்பும் இல்லாமல், நுனிக் கொண்டை போட்டுக் கொண்டு அதில் ஒரு இனுக்கு சந்தன முல்லை சரத்தை வைத்துக் கொண்டிருந்தார்!
வாசலில் கார் சத்தம்!
Advertisement
மிளகாயைக் காய வைத்துக் கொண்டே யாரென்று நிமிர்ந்து பார்த்தவருக்கு, பல வித உணர்ச்சிகள்!
Advertisement
மகிழ்ச்சி, நிம்மதி, குற்ற உணர்வு, அழுகை எல்லாம் கலந்து கட்டி அடித்தன அவரை!
ஆமாம்! காரிலிருந்து இறங்கியது சதா தான்!
கூட வந்தது, ரிஷியும் மான்சியும்!
Advertisement
முதல் நாள் தான் மான்சி, பிருந்தாவிடம், “மாமா வந்துட்டார், நீங்க பேசுங்க” என்று வீடியோ கால் பண்ணினாள்!
ஆனால் பிருந்தாவுக்கு ஒரே தயக்கம்! அதனால், “வேண்டாம்மா..” என்று மறுத்து விட்டார்!
“மாமாவும் உங்கள ரொம்ப மிஸ் பண்றார் தான்!
அதான் எல்லா பிரச்சினையும் முடிஞ்சுடுச்சே,
நீங்க இன்னும் ஏன் இப்படி அப்செட்டாவே இருக்கீங்க!” என்று பல முறை பேச சொல்லியும் அவர் பேசாததால், பிருந்தா பற்றி சதா சொல்லிக் கொண்டிருந்ததைக் காட்டினாள் மான்சி!
அதைக் கேட்டு மேலும் அழுகை அழுகையாக வந்தது பிருந்தாவிற்கு!
இப்போது சதாவே அவரைத் தேடிக் கொண்டு வந்தும் கூட அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், மீண்டும் அழுதுக் கொண்டே உள்ளே ஓடி விட்டார்!
அழுதுக் கொண்டே அறைக்குள் ஓடிய பிருந்தாவை கேள்வியாக பார்த்த கோமதியும், ஆச்சியும், மான்சி ரிஷியோடு உள்ளே நுழைந்த சதாவைக் கண்டு மகிழ்ந்து, அவரை வரவேற்றவர்கள், அவரிடம் பிருந்தா இருக்கும் அறையைக் காண்பித்து போய் பேச சொன்னார்கள்!
உள்ளே வந்த சதாவைக் கண்டு ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதார் பிருந்தா!
“என்னை..என்னை.. மன்னிச்சுடுங்க மாமா.. நான் புத்திக் கெட்டுப் போய் இப்படி ஒரு சதி வலையில சிக்கி , நானும் அசிங்கப்பட்டு, உங்கள, நம்ம குடும்பத்தை கேவலப்படுத்த பார்த்தேன்!
நல்லவேளை இவங்க எல்லாம் வந்து என்னோட மானத்தைக் காப்பாத்திட்டாங்க! இல்லைனா என்னோட நிலைமை!” அவர் மீண்டும் அழ ஆரம்பிக்க,
“சரி.. விடு பிந்தும்மா! இதில உன்னோட தப்பு மட்டும் இல்ல! என்னோட தப்பும் இருக்கு!
உன் பிறந்த வீட்டு ஆளுங்க மேலயும் தப்பு இருக்கு!
ஏன்னா, ஆரம்பத்தில் இருந்து ஒரே தங்கச்சி, கடைக்குட்டி செல்லம், அப்படி இப்படின்னு உன்னை அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்தது, நீ தப்பு செய்யும் போது உன்னைக் கண்டிக்காம விட்டது எல்லாமே அவங்க தப்பு தான்!
அங்க தான் அப்படி வளர்ந்தேன்னா, இங்கயும் உன்னை அப்படியே விட்டுட்டாங்க அண்ணனும் அண்ணியும்!
அவங்களாவது உனக்கு கொஞ்சம் பொறுப்பைப் பிரிச்சுக் கொடுத்து, உன்னை ஒரு பொறுப்பான ஆளா இருக்க விடாம, அவங்களும் இருந்துட்டாங்க!
உன்னை மட்டுமில்ல, என்னையும் தான்!
எல்லாத்துக்குமே ஸ்பூன் பீட் பண்ணியே வளர்ந்துட்டதுனால, நீ எதுக்கும் கஷ்டப்பட்டதில்ல!
எதுக்கும் மெனக்கிட்டதும் இல்ல! அதனால தான் உனக்கு அடுத்தவங்க கஷ்டம் என்னன்னு தெரியாமலே போச்சு!
அதே மாதிரி எல்லோரும் நீ சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்து பழகிட்டதுனால, அதுக்கு நேர் மாறா நடந்த மான்சியை உனக்கு பிடிக்காம போச்சு!
ஆனா உன் சொல்லுக்கு ஆமாம் சாமி போடுறவங்க எல்லாருமே உனக்கு நல்லது நினைக்கிறவங்க இல்ல!
அதே சமயம், உன்னை எதிர்த்து பேசுறவங்க எல்லோருமே உனக்கு எதிரானவங்க இல்லன்ற உண்மையை நீ தெரிஞ்சிக்க,
உனக்கு ஒரு சந்தர்ப்பமும் அமையவே இல்லை! நீ என்ன பண்ணுவ!
சரி விடும்மா.. இனி எல்லாமே நல்லதா நடக்கட்டும்!
உனக்கு ஒண்ணு தெரியுமா பிருந்தா, நம்ம பொண்ணும் அப்படியே உன்னோட ஜெராக்ஸ் மாதிரி தான் வளர்ந்துருந்தா!
அப்படியே உன்னை மாதிரி! ஆனா அவ உன்னை விட ரொம்ப லக்கி தெரியுமா? அது தான் என்னை மாதிரி இல்லாம நவ்தீப் புருசனா கிடைச்சுருக்கான்!
கொஞ்ச நாளிலேயே ரொம்ப அழகா அவளை நல்லபடியா பொறுப்பா மாத்திட்டான் தெரியுமா!
நான் கூட அவ இப்படி எதுக்குமே லாயக்கு இல்லாம இருக்காளேன்னு நினைச்சு ரொம்ப நாள் கவலைப் பட்டுருக்கேன்!
ஆனா அவளையும் நல்லா ட்ரைன் பண்ணி, இப்போ அவளை ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோருக்கே ஓனராகிட்டான் நம்ம மாப்பிள்ளை!
அவ தன்னோட சொந்தக் கடைன்னு தெரியாமலே அதுல வேலைக்கு சேர்ந்து கஷ்டப்பட்டு வேலைக் கத்துகிட்டு, இப்ப அவளே பொறுப்பா நடத்தற அளவு வளர்ந்துட்டு இருக்கா!
எனக்கே ரொம்ப ஆச்சர்யம் தான்! இவ்வளவு ஷார்ட் பீரியர்ட்ல என் பொண்ணு இவ்வளவு விசயம் கத்துக்கிட்டு இருக்காளேன்னு!
அப்படி ஜகஜாலம் பண்ணி அவளை இந்த அளவு கொண்டு வந்துட்டான் நவ்தீப்!” என்றார் சதா ரொம்பவும் சந்தோசமாக!
“ஷ். ஷ். என்ன இது மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசுறீங்க?” என்றார் பிருந்தா!
“அய்யோ.. அவ்வளவு தூரம் ஆகிடுச்சா? அவனை கல்யாணம் பண்ணி வச்சதுக்காக தானே நீ கோவிச்சுகிட்டு தகராறு பண்ணினே?”
“தப்பு தான்! நீங்க அவசரப்பட்டு, என் மேலே உள்ள கோவத்துல, நவ்தீப்புக்கு ஜோவைக் கட்டி வச்சுட்டீங்கன்னு தான் கோபப்பட்டேன்!
ஆனா அவ அவர ஏத்துக்கிட்டு சந்தோசமா வாழறான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் வேறன்ன வேணும் எனக்கு!
கவுதம் அவங்களோட போட்டோ அனுப்பி இருந்தான் எனக்கு!
என் பொண்ணு கண்ணுல அவ்வளவு சந்தோசம், லவ் தெரிஞ்சது! எனக்கு என்ன வேணும்ங்க இதுக்கு மேலே!”என்றவரை தோளோடு அணைத்துக் கொண்டார் சதா!
“சரி..வா. வெளியே எல்லோரும் நமக்காக காத்துருக்காங்க. வா” என்று அவரின் கையைப்பிடித்து அழைத்து வந்தார் சதா!
இருவரும் முகத்தில் சின்ன சிரிப்புடன் வெளியே வந்ததை மகிழ்வுடன் கண்டார்கள் வீட்டினர்!
முற்றத்தில் இருந்த அந்த பழைய மாடல் டிவியில் பழைய சிவாஜி பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.
இவர்கள் வெளியே வந்த நேரம் சிவாஜி, கே ஆர் விஜயாவைப் பார்த்துப் பாடும், “ஐம்பதிலும் ஆசை வரும்” பாடல் ஒளிப்பரப்பாக,
“என்ன சித்தப்பா, ரொம்ப டைமிங் சாங் போல இருக்குல்ல!” என்றான் கிண்டலாக!
“உதைபடுவ ராஸ்கல்! என்ன பேச்சு இது மருமக முன்னாடி!” என்று செல்லமாக அதட்டினார் சதா!
பிருந்தாவின் முகமோ சிவந்தே போய் விட்டது!
“அண்ணி.. பாருங்க உங்க மருமகனை!” என்று கோமதியின் அருகில் சென்றார் கோமதி!
—
அடுத்த மாதம்.
வீடே ஒரே பரபரப்பாக இருந்தது!
காரணம் கவுதம் நம்ரதா திருமணம்!
இரு வேறு மாநில சம்பிரதாயங்கள்!
இரு வீட்டரையும் திருப்திப்படுத்த என்று வேண்டி மிகவும் மெனக்கிட்டர்கள் இரு வீட்டுப் பெரியவர்களும்!
நவ்தீப், ஜோ ஜோடியும், ரிஷி மான்சி ஜோடியும் சுழன்று சுழன்று வேலைப் பார்த்தார்கள்!
காந்தி ஆச்சியும் கோமதியும் சுப்பு ஆச்சியும் ஸ்வாமிநாதன் வீட்டுக்கு பத்து நாள் முன்பே வந்து விட்டார்கள்!
வீட்டை அவர்கள் பார்த்துக் கொள்ள, பத்திரிக்கை வைப்பது, குலதெய்வக் கோவில் பூஜை, முஹூர்த்த கால் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஸ்வாமிநாதன் சாந்தாம்மா, சதா பிருந்தா பிசியாக இருக்க, நவ்தீப், ஜோ ஜோடியும், ரிஷி மான்சி கேட்டரிங் டெக்கரேசன் ஏற்பாடு மாதிரி வேலைகளை செய்தார்கள்!
நம்ரதா வீட்டு உறவினர்கள் தங்கும் ஏற்பாடுகளும் இருந்தன!
ரிதனிக்கு தான் அவர்களோடு நல்லப் பழக்கம் என்பதால் அவள் தான் உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்!
அவள் கூட துணைக்கு வந்தான் ஜீவன்!
டெல்லி சென்ற கொஞ்ச நாட்களிலேயே அவன் நன்றாகவே ஹிந்தி பேசக் கற்றுக் கொண்டிருந்தது அவனுக்கு நம்ரதா வீட்டு ஆட்களோடு பேச உதவியது!
“ஹலோ.. அங்க பார்த்து ஒண்ணும் யூஸ் இல்ல! அது ஏற்கனவே எங்கேஜ்டு!
அந்த மெரூன் கலர் குர்தா கை தான் அவளோட ஆள்!
அதனால போதும் அங்க பார்த்து ஜொள்ளு விட்டது!” என்றாள் ரிதனி நம்ரதாவின் உறவுப் பெண்ணொருத்தியை பார்த்துக் கொண்டிருந்த ஜீவனைப் பார்த்து, அவனருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு!
“நீ.. பார்த்த.. நான் ஜொள்ளு விட்டதை! நான் சும்மா தான் பார்த்தேன்! நானெல்லாம் ரொம்ப குட்பாய்! ரொம்ப..ரொம்ப நல்ல பையனாக்கும்!”
“ஓ.. நல்லப் பையன்!.. நீங்க.. சொன்னாங்க சொன்னாங்க! நேத்து கூட மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் உச்சியிலிருந்து!”
“ஓ. சொன்னாலும் சொல்லியிருப்பாங்க!”
“ஓ! அப்படி.!” என்று சிரித்தவள், “அப்போ அந்த நல்லவர், எங்க உங்க மொபைலைக் கொடுங்க பாக்கலாம்!” என்றாள் ரிதனியும்!
“எவன் ஒருவன் எந்த தயக்கமும் இல்லாம உடனே அவனோட போனைக் கேட்டவுடன் பார்க்க கொடுக்கிறானோ அவனே யோக்கியவான்!” என்றாள் தத்துவம் போல!
“அப்படியெல்லாம் ஒண்ணும் ப்ரூவ் பண்ண அவசியம் இல்லை! நீ நம்பலன்னாலும் அது தான் நிஜம்!” என்றான் ஜீவனும் அவளோடு சிரித்துப் பேசியபடியே தன் மொபைலை நோண்டியபடி!
சட்டென்று அவன் எதிர்பாரா நேரம் அவன் கையில் இருந்த போனைப் பிடுங்கி அதை பார்க்க ஆரம்பித்தாள் ரிதனி!
“ஏய்.. ஏய்.. என்ன பண்ற?” அவளின் கையை மடக்கிப் பிடித்து அவளிடம் இருந்து போனை பறிக்க முயற்சித்தான் ஜீவன்!
அவனோடு மல்லுக்கட்டியபடி அதன் கேலரியில் இருந்த போட்டோக்களை பார்த்தாள் ரிதனி!
அதில் வித விதமாய் பல போட்டோக்கள்! அத்தனையும் ரிதனியின் போட்டோக்கள்!
அவள் அவற்றைப் பார்த்து விட்டதை தெரிந்து கொண்டவுடன், “அய்யோ” என்று மாட்டிக் கொண்ட வெக்கத்தோடு தலையில் கை வைத்துக் கொண்டான் ஜீவன்!
“என்ன இது? ம்ம்..” என்று கோவை சரளா ஸ்டைலில் கேட்டாள் ரிதனி!
“போட்டோஸ்!”
“எதுக்கு என் போட்டோஸ் உங்க போனில்!”
“அது.. வந்து.. சும்மாஆ” என்றான் அவனும் வடிவேல் மாடுலேசனில்!
“ராத்திரி.. எனக்கு தூக்கம் வரலைன்னா, பயமா இருந்துச்சுன்னா, இந்த சாமியாரிணி போட்டாவை பார்த்தா, அப்படியே எனக்கு அப்படியே அம்பாளைப் பார்த்த மாதிரி ஒரு தைரியம் வரும்” என்று தன் கைவிரல் நுனியைப் பிடித்துக் கொண்டு பேசினான் அதே வடிவேல் பாணியில்!
“ஓ. என்னைப் பார்த்தா உனக்கு சாமியாரிணி மாதிரி இருக்கா!”
“பின்னே? நானும் உன் பின்னாடி இந்த பத்து நாளா சுத்திட்டு இருக்கேன்! ஏதுடா, ஒருத்தன் இப்படி நம்ம பின்னாடியே காரணம் இல்லாம சுத்திட்டு இருக்கானேன்னு கொஞ்சமாச்சும் திரும்பி பார்த்தியா?“
“அதுக்கு.. இப்படி தான் என்னை சொல்லுவியா? உன்னை” என்று அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து அடிக்க போனாள் ரிதனி!
“ஏய்.. என்ன இது உன் அண்ணன்ங்க கல்யாணத்தில் எல்லாம் இந்த ஜீவனை யாராவது இப்படி கட்டையால அடிக்கனும்னு வேண்டுதலா?
பார்த்துக்கோ, எனக்கு அடிபட்டு மயங்கினா, நான் அப்படியே உன் மேலே தான் சாஞ்சுப்பேன்! அன்னிக்கு மாதிரி! சாயட்டும்மா” என்று சொல்லி அவள் மேல் சாயப் போனான் ஜீவன்!
“ஏய்.” என்று சொல்லி கட்டையைக் கீழேப் போட்டு விட்டு அவன் தோளில் அவளே சாய்ந்து கொண்டாள் ரிதனி!
“நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள் அவன் காதில் ரகசியமாய்!
“அத தானே நாங்களும் சொல்லுறோம்!” என்றபடி அவர்கள் பின்னால் இருந்த வரவேற்பு பேனர் பின்னால் இருந்து வந்தார்கள் நவ்தீப், ஜோ ஜோடியும், ரிஷி மான்சி ஜோடியும்!
அடுத்து சில மாதங்களில் வந்த குருப்பெயர்ச்சிக்கு பின் நல்லதொரு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு, வீட்டுப் பெரியவர்கள் எல்லோர் ஆசியுடனும் ரிதனியின் கணவன் ஆனான் ஜீவனும்!
சுபம்!
error: Content is protected !!