Skip to content
Post Views: 2,027
நதி 8
யமுனாவிடமிருந்து அன்று வேகமாக விலகி சென்றவன் அதன் பின் வந்த நாட்களில் அவளின் கண்ணில் படவே இல்லை.
Advertisement
எதார்த்தமாக நடப்பதாய் இருந்தால் எங்காவது அவள் கண்ணில் தட்டுப்பட்டிருப்பான்.
ஆனால் அவன் தான் திட்டமிட்டு விலகி போகிறானே அப்புறம் எப்படி அவளின் கண்ணில் படுவான்..?
Advertisement
Advertisement
எந்த காரணத்திற்காகவும் மேல் தளத்திற்கு செல்வதை அறவே நிறுத்தியிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
அதே போல ஆட்கள் வரும் போகும் நேரத்தில் அலுவலக அறையிலோ அல்லது உள் செக்ஷனிலோ இருந்து கொள்பவன் அனைவரும் சென்றுவிட்டதை உறுதி செய்த பிறகே வெளியே வந்து மற்ற வேலையை பார்க்க துவங்குவான்.
Advertisement
இவனின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் யமுனாவிற்கு மட்டும் தான் தெரியும் என இவன் நினைத்திருக்க, குமரனும் தீனாவின் அத்தனையையும் அறிந்து வைத்துக்கொண்டு, ‘அடுத்து என்ன..?’ என கண்காணித்து கொண்டிருக்கிறான் என்பது அவன் அறிந்திருக்கவில்லை.
அன்று,
தீனா மேலேறி சென்றதும் உள்ளே சென்றவனுக்கு மனது கேட்காமல், “அவரு சொன்னா அப்படியே விடுவீயா முட்டாள்..? அவருக்கு நம்ம பார்க்கலன்னா யார் பார்ப்பா..?” என புலம்பிக்கொண்டே மேலே வர, யமுனா தலை கோத தீனா படுத்திருக்கும் நிலை தான் அவன் கண்ணில் பட்டது.
முதலில் புரியது திகைத்து பார்த்தவன், “ஓஹோ..! கதை அப்படி போகுதோ..?” என மனதில் நினைத்துக்கொண்டு மெல்லிய சிரிப்போடு அவர்களை பார்த்திருந்தான்.
தீனா எழுந்து அவளை பார்த்தது, பின் வேகமாய் அவளிடமிருந்து விலகியது, எல்லாம் கண்டவனுக்கு, ‘காதலர்களின் ஊடலோ..?’ என்று தான் நினைத்தான்.
அவன் அறிந்த வரையில் யமுனா நல்ல பெண் தான். தீனாவை பொறுத்தவரை தங்கமணி சொன்னது போல அவனுக்கு வருபவள் மிகவும் அதிர்ஷ்டசாலி தான்.
எனவே இருவரும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அவனுக்கு.
‘ஆமா, இது எத்தன நாளா நடக்குதுன்னு தெரியலையே..? எப்படி இருந்தாலும் பூனைக்குட்டி வெளிய வந்து தானே ஆகனும்.. வரட்டும்..’ என நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
தீனாவை ஹாஸ்பிடல் அழைத்து சென்றிருந்த போது பேச்சு கொடுத்ததில் தீனா திருமணம் என்ற எண்ணமே இல்லாதது போல பேச குழம்பிப்போனான் குமரன்.
“அந்த பொண்ணுகிட்ட கண்ணாலையே காதல காட்டிட்டு. இவரு என்ன கல்யாணமான்னு இப்படி பிகு பண்ணிட்டு இருக்காரு..?
இவருக்கு அந்த பொண்ணு மேல ஆர்வம் இல்லன்னா எப்படி அப்படி ஒரு பார்வை அந்த பொண்ணை பார்த்திருக்கனும். அதுல இருந்த காதலும் ஏக்கமும் என் கண்ணுக்கு நல்லாவே தெரிஞ்சதே..! அப்ப என்ன பிரச்சினை..? மணி அண்ணே கிட்ட சொல்லலாமா..?” என யோசித்தவன்,
“இல்ல.. கொஞ்ச நாள் போகட்டும். என்ன விசயமுன்னு முழுசா தெரிஞ்சுக்கிட்டு அவர்கிட்ட கொண்டு போலாம்..” என முடிவெடுத்து காத்திருந்தான் தக்க சமயத்துக்காக.
அந்த முடிவின் படி அப்போது இருந்து தீனாவை கண்காணிக்க ஆரம்பித்தவனுக்கு அடுத்த நாளே உறுதியாகி போனது தீனாவின் மேல் யமுனாவிற்கு இருக்கும் பாசமும் அன்பும்.
அவனின் உடல்நிலை கருதி அடுத்த நாள் அவள் சமைக்கும் போது சளிக்கான கசயத்தை வைத்து தனியாக எடுத்து வைத்துவிட்டு, சாரதா வசந்தியோடு கங்காவையும் அனுப்பிவிட்ட பிறகு பொறுமையாய் கிளம்பி வருவது போல அதை கொண்டு வந்தவள் தீனாவை காண முடியாது அந்த நேரம் வெளியே வந்த குமரனை அழைத்தவள்,
“அண்ணே.. இத அவங்களுக்கு கொடுத்துடறீங்களா..?” என தயங்கி கேட்ட விதமே காட்டி கொடுத்தது நேற்று இவன் கண்டதை அவளும் பார்த்திருக்கிறாள் என்பதை.
அவர்களின் விசயம் தெரியும் என்பதனால் தான் துணிந்து தன்னிடம் தீனாவிடம் கொடுக்க சொல்கிறாள் என்பது புரிந்ததால்,
“நீயே கொடுக்கலாமே ம்மா..?” என்றான்.
“ஊக்கும்.. நாந்தானே..! கொடுத்தா ஒத்த சொட்டு மிச்சவைக்காம குடிக்கற மகராச மேல தானே எனக்கும் ஆச வந்திருக்கு..” என நொடித்துக்கொண்டு அவள் சொன்ன விதத்தில் அத்தனை சிரிப்பு குமரனுக்கு.
“ஏ ம்மா குடிக்க மாட்டாரா..? அதெல்லாம் சொட்டு என்ன.. விட்டா கழுவி கூட வாயில கவுத்துக்குவாரூ..” என்றான் ஒரு ஆணாய் அவனின் மனம் உணர்ந்து.
“நடந்தா சரி தான். மறக்காம குடிக்க வைங்க ன்னே..” என்றவளின் வார்த்தை தட்டாமல் நிறைவேற்றியவனே அவன் தானே.
தீனா சந்தேகமாய், “யாருடா கொடுத்தா..?” என கேட்ட போது,
“நேத்து நீங்க கிடந்த கெடைக்கு பக்கத்து வீட்டுல இருக்கற சுதாக்கா கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன் ண்ணே..” என்றிருந்தான்.
யமுனாவின் பேரை சொல்லி, ‘எங்கே அவர் அதை தொடாமல் இருந்துவிடுவாரோ..!’ என்ற அச்சமே அவ்வாறு பொய் சொல்ல வைத்தது.
அவன் அதை குடித்ததை சிறிது நேரத்திலேயே யமுனாவிற்கு தகவலாய் கடத்தியும் விட்டான் அந்த தூதுவன்.
யமுனாவிற்கு தீனாவின் மீதான அக்கறையை கண்டவனுக்கு தீனா மேல் தான் கோபமாய் வந்தது.
ஆனால் அதை வெளிக்காட்ட முடியாத படி தான் தீனாவின் நடவடிக்கையும் இருந்ததே..!!
யமுனா அறியாத படி அவளை மறைந்திருந்தோ அல்லது சிசிடிவி மூலமோ அவனை மறந்து சில நிமிடம் பார்த்து நிற்பதை உடனிருந்து கண்டு கொண்டு தானே இருந்தான்.
‘இவருக்கு என்ன தான் பிரச்சன..? எதுக்கு இவரும் கஷ்டப்பட்டு அந்த புள்ளையையும் இப்படி தவிக்க விடறாரு..?’ என நினைத்த போதும், தீனாவின் விழியில் தெரியும் வலி அவனை நிதானிக்க வைத்தது.
‘தீனா ண்ணா விசயத்துல ஏதோ பலமான காரணமிருக்க தான் விலகி போறாரோ..? அது என்னவா இருக்கும்..?
அது எதுவா இருந்தாலும் சீக்கிரம் ரெண்டு பேரும் ஒண்ணா சேரனும்.. ஆண்டவா..’ என மனதார வேண்டிக்கொண்டான் இருவரின் மேலும் பாசம் கொண்டவனாய்.
அவனின் ஆத்மார்த்தமான வேண்டுதல் அந்த இறைவனிடம் சென்று சேர்ந்ததோ..?
தீனாவின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கும் முடிவு கட்டும் விதமாய் வந்தது அந்த ஞாயிறு.
எப்போதையும் போல அன்றும் எழுந்து தனது துணி துவைக்க வேண்டி எடுத்து சென்றவன் அதை ஊற வைக்க டிட்டர்ஜென்ட் பவுடர் இல்லாமல் இருப்பதை கண்டு,
“போன வாரமே தீந்து போச்சு. வாங்கனுமுன்னு நினைச்சு மறந்தாச்சா..?” என புலம்பிக்கொண்டே கீழே வந்தான்.
உள் பனியனோடு இருந்ததால் அதற்கு மேலே ஒரு டீ சர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு சைக்கிளை எடுத்தான் கடைக்கு செல்ல.
“நீ எப்பவும் உன் ஆள் நினைப்புல சுத்தினா மத்தது மறந்து தான் போகும்டா..” என மனசாட்சி குபீரென அவன் முன் குதித்து ஹேண்டில் பார் மீது அமர,
“மரியாதையா போயிடு. நானே செம காண்டுல இருக்கேன்..” என்றான் தீனா கோபமாக.
“உன்னோட இந்த கோபமெல்லாம் பார்த்து நா அசரமாட்டேன் பாத்துக்கோ.. யாருகிட்ட..?
உன் மனசுக்கு திரை போட்டு மறச்சு வைக்கலாம். ஆனா உள்ளேயே இருக்கற எனக்கு தெரியும்டா.. உண்மை என்னன்னு..” என அது கெத்தாக சொல்ல,
“என்ன தெரியும் உனக்கு..?” என்றான் தீனாவும் தனது கெத்தை விடாமல்.
“எல்லாமே தெரியும். நீ உன் பாப்பாவ விரும்பறதும் தெரியும். அவகிட்ட இருந்து அதை மறைக்க போராடறதும் தெரியும்..” என்று கள்ளச்சிரிப்பு அது உதிர்க்க,
“சும்மா உலறாம அடங்கு..” என்றான் அதில் காண்டாகி.
“யார் உலறனா..? நானா..?! நான் எப்பவும் உண்மைய மட்டும் தான் சொல்வேன்.
அதுவும் உன்னோட மனசுக்குள்ள இருக்கற உண்மைய..” என்றது மனசாட்சியும் ரோசம் கொண்டு.
“ஆமா. பெரிய உண்மை விலும்பி தான்.. நீ.. ப்பே..” என்றான் தீனா உதாசினமாக.
“அடேய்.. தம்பிப்பையலே.. உனக்கு அவகூட எப்படியெல்லாம் வாழனும். என்ன என்ன செய்யனுமுன்னு ஆசைப்படறேன்னு அக்குவேறா ஆணிவேறா எனக்கு தெரியும்டா. நாள கடத்தாம அவகிட்ட போய் சொல்லுடா..” என்றது ஆலோசனையாக.
“என்னத்த..?” என்றான் ஏதும் அறியாதவனாய் தீனா.
“ம்ம்.. உன் காதல..” என்றதும்,
“அப்படி ஒண்ணு இருந்தா தானே சொல்ல..?” என தீனா அலட்டாமல் சொல்ல,
“அடேய்.. என்னடா முதல்ல இருந்து ஆரம்பிக்கறே..?” என அலறியது மனசாட்சி.
error: Content is protected !!