Skip to content
Post Views: 1,350
கருவின் குரல்
அத்தியாயம் 25
அனிஷ் அவ்வாறு துப்பட்டாவை தூக்கி எறிந்தது. அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது,இருந்தும் யாரும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
அர்ஜுனுக்கும் அவள் மீது சிறு வருத்தமே இருந்தும் எந்த எதிர்வினையும் அவள் மீது அவன் காட்டவில்லை.
அனைவரும் மியூசிக்கல் சேர் கேமிற்கு தயாராக இருந்தனர்.பாட்டு போடப்பட்டது, சிலர் உற்சாகமாக அந்த சேர்களை சுற்றி வந்தனர்;சில வயதான பெரியவர்களும் தங்களின் நிலை மறந்து, சிறு குழந்தையாகவே மாறி விளையாடினர்.
Advertisement
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெளிப்பட்டது. முதல் ரவுண்டில் சிலர் வெளியேறி விட்டனர்; இரண்டாம் ரவுண்டிலும் சிலர் வெளியேறி விட்டனர்; இப்படியே ஆறு ரவுண்ட் விளையாடப் பட்டது.
தோற்றவர்கள் முகத்தில் எந்தவிதமான சிறு கலக்கமும் இன்றி மீதம் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு உற்சாகத்தை அளித்தனர்.
கைகளை தட்டிக் கொண்டும்,தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டும், சேரில் உட்காருங்கள் என்று உற்சாகமாக அவர்களை விளையாட வைத்தனர்.
Advertisement
இறுதியாக அனிஷூம் அர்ஜுன் மட்டுமே மீதமிருந்த ஒரு சேரினை சுற்றிக் கொண்டிருந்தனர். மீதம் இருந்த அனைவரும் அவர்களை கைதட்டி ஊக்குவித்தனர்.
Advertisement
கணேசும் புவியும் அவர்களுக்கு பிடித்த பாடல்களை போட்டு அவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
“அவளுக்கென்ன
அம்பாசமுத்திர அய்யர்
ஹோட்டலு அல்வா
மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா
வந்தா பாரு…
அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள
பளவென வந்தான்
வந்தான் பாரு….
Advertisement
அடி ராசாயி
ரோசாயி ராசா மணி
நம்ம ராசாக்கு ராணி
வந்திட்டா ஆ
ரொம்ப சோக்கானது
இந்த சோடின்னு தான் அந்த ஆத்தா தான் சேர்த்து புட்டா”
அங்கு குடியிருந்த குழுவினர் அனைவரும் இந்த பாடலை கோரசாக பாட அனிஷின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ,அர்ஜூனை முறைத்துக் கொண்டு அந்த சேரினை சுற்றி வந்து கொண்டிருந்தாள்.
திடீரென பாட்டு நிறுத்தப்பட்டது. அர்ஜூன் அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டான். அனிஷ் சேரில் அமர்ந்து கொண்டாள். அனிஷே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
பெருந்தன்மையோடு அர்ஜுன் விட்டுக் கொடுத்து ஒரு பொறுப்புடன் நின்று கொண்டிருந்தான். அதை பார்க்கவே அவளுக்கு கடுப்பாக இருந்தது.
போட்டியின் விதிமுறைகளின் படி தோற்றவர் மனம் விட்டு பேச வேண்டும் அல்லவா?
அர்ஜுனுக்கு ஒரு சேரினை ஏற்பாடு செய்து அதில் அவனை அமர வைத்தனர்.
மற்ற அனைவரும் அந்த இடத்தில் வட்டமாக சுற்றி அமர்ந்து கொண்டனர்.
மேனேஜர் முதல் கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.
முதலில் உங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
நான் அர்ஜுன் எம்பிஏ வரை படித்துள்ளேன். மை ஃபேஷனில் மேனேஜிங் பார்ட்னராக உள்ளேன், அவ்வளவுதான்.என்றான்
அவ்வளவுதானா?என மேனேஜர் கேட்க, பெரிதாக சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. அவ்வளவுதான் என்று அதோடு நிறுத்தி விட்டான்.
பள்ளிக்காலங்களில் ஆசிரியரிடம் ஏதாவது அடி வாங்கி உள்ளீர்களா? என்ற கேள்விக்கு நிறைய அடி வாங்கியுள்ளேன். குறிப்பிட்டு சொல்வதென்றால் பரீட்சையில் காப்பியடித்ததற்காக அடி வாங்கி இருக்கிறேன் அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று மிகவும் அவமானமாக கருதினேன் என கூறினான்.
பள்ளி பருவத்தில் ஏதேனும் காதல் வயப்பட்டு இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அப்படி எல்லாம் இல்லை என்றான்.
மழுப்பலாக பதில் கூற வேண்டாம். நிச்சயமாக அனைவருக்குமே அப்படி ஒன்று இருந்திருக்கும். தங்களுக்கும் ஏதேனும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன். ஏதாவது இருந்தால் கூறுங்கள் என மேனேஜர் கேட்க, அப்படி எல்லாம் எதுவுமே இல்லை என திடமாக கூறிவிட்டான்.
மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன் இந்த போட்டியில் தோற்றவர்கள் நிச்சயமாக மனம் திறந்து பேச வேண்டும். நீங்கள் உங்கள் மனதில் இருப்பதை மனதிறந்து பேசுவீர்கள் என நான் நம்புகிறேன்.
அடுத்த கேள்விக்கு செல்லலாமா? என மேனேஜர் கேட்க, தாராளமாக செல்லலாம் என கூறினான்.
தங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?
” இல்லை”.
சரி எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை.
நம்பிக்கை வரும்போது செய்து கொள்கிறேன். ஒருவேளை நம்பிக்கை வராவிட்டால்? என்ற அடுத்த கேள்வியை மேனேஜர் கேட்க, திருமணமே செய்து கொள்ள மாட்டேன். இப்படியே இருந்து விடுவேன் என கூறினான்.
ஒருவேளை தங்களுக்கு ஏதேனும் காதல் தோல்வி உள்ளதா? காதலே இல்லை என சொல்கிறேன், இதில் எங்கிருந்து தோல்வி எல்லாம் வருவது அப்படியெல்லாம் எதுவுமே என் வாழ்வில் இல்லை என்று கூறிவிட்டான்.
சரி தங்களை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?
என்னை பொறுத்தவரை காதல் என்பது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டு செல்லாமல்,வாழ்விலும்,தாழ்விலும் விலகாமல் இருப்பது என்றான்.
என்னதான் இவன் பேசுவதை கேட்காதது போல் போனில் தன் கவனத்தை வைத்திருந்தாலும்,இவன் காதலுக்கான அர்த்தம் கூறியது அவளையும் மீறி அனிஷின் மனதில் ஆழமாக பதிந்தது.
இதே அர்த்தத்தை தானே அவளும் காதலுக்கான விளக்கமாக இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் தேவா ஜானகியை விட்டு பிரிந்து சென்றது, அவர்கள் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்கள்… இதற்கு எல்லாம் ஒரு நொடியேனும் அப்பா தங்களை விட்டு செல்லாமல் இருந்திருக்கலாம் என்று எவ்வளவோ நாட்கள் நினைத்தது உண்டு.
இன்று அதையே அவனும் கூற ஃபோனில் இருந்த மொத்த கவனமும் அவன் அடுத்து சொல்லப் போகும் பதில்களில் நிலைத்து நின்றது.
உங்களது வருங்கால லட்சியம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு ஒரு பெரிய பிசினஸ் ராஜ்யத்தை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய வருங்கால லட்சியம் என்று கூறினான்.
வாழ்க்கையில் எதையாவது இழந்து இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, சிறிது நேரம் யோசனைக்கு பிறகு….
நிறைய இழந்து இருக்கிறேன் என கூறினான்.
என்ன என்று கூற முடியுமா? எங்களால் முடிந்ததை உங்களுக்கு உதவுவோம் என்றார்.
இல்லை அது கொஞ்சம் எமோஷனலாக இருக்கும். அதனால் அது எதுவும் வேண்டாம் என்றான் அர்ஜூன்.
நான் எதற்காக தங்களை மனம் திறந்து பேசுங்கள் என்று கூறினேன் என்றால் அப்போதாவது தங்கள் மனதில் உள்ளதை இங்கு சொல்லிவிட்டு ரிலாக்ஸாக இருப்பீர்கள் என்றுதான்.
இந்த ரிசார்ட் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் இங்கு வந்து செல்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு வந்த அனுபவங்களை மறக்காமல் தங்களது நினைவு பெட்டகத்தில் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு விளையாட்டுக்கு நாங்கள் ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
இன்று ஒரு நாள் மட்டும் தானே தங்கள் மனதில் புதைத்து வைத்துள்ள நீங்கள் இழந்தவற்றை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதன் மூலம் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கலாம் அல்லவா? இன்று தவற விட்டுவிட்டு வாழ்க்கையில் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் அதை நீங்கள் வெளியில் சொல்ல முடியாமல் போகலாம்.
அதனால் இங்கு மனம் திறந்து கூறுங்கள்.. இங்கு இருக்கும் அனைவருமே தங்களுக்கு ஒரு நல்ல நண்பர்களாக இருப்போம் என மேனேஜர் அவன் மனதில் இருப்பதை கூற தயார் படுத்தினார்.
கணேசும்” மச்சான் மனசுல ஏதாவது இருந்தா சொல்லுடா நாங்க இருக்கோம் பாத்துக்கலாம் என்றான்.
கூட்டத்தில் ஒரு வயதான பெண்மணி உன்னை நான் என் மகன் போல் நினைக்கிறேன்.
உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு உடனே நான் அதை வாங்கி தருகிறேன் என்று கூறினார். சிறிது நேரம் யோசித்து விட்டு சரி கூறுகிறேன் என்றான்.
அனிஷும் தனது காதுகளை கூர்மையாக்கி அவன் கூறுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.
என்னுடைய அப்பா ஒரு நல்ல பிசினஸ்மேன். அம்மாவும் அப்பாவும் என்ன பாசமா வளர்த்திட்டு வந்தாங்க..
என்னுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோசமா மகிழ்ச்சியா போயிட்டு இருந்தது.
என்னுடையது ரொம்ப அழகான குடும்பம். திடீர்னு அப்பா இறந்துட்டாரு அம்மா கொஞ்ச நாளே வேற ஒரு திருமணம் பண்ணி போயிட்டாங்க… என்னோட பாட்டி என்னை வளர்க்க ஆரம்பிச்சாங்க…
எனக்கு வீட்டு பிரச்சனை தெரியக் கூடாதுனு நினைச்சு ஒரு கான்வென்ட் ஸ்கூல்ல என்னை பாட்டி சேர்த்து விட்டாங்க…
எங்க ஸ்கூல் ரொம்ப நல்லா இருக்கும்.. எனக்கு ரொம்ப புடிக்கும்.. அங்க நிறைய விளையாடுவேன் பிரண்ட்ஸ் கூட ஜாலியா இருப்பேன்..
ஆனாலும் தனிமை பயம் வந்து என்னை ரொம்ப பயமுறுத்தும் நைட்டு தூங்கினா கூட எனக்கு ரொம்ப பயமா இருக்கும்..
ஏனா இவ்வளவு நாளா அம்மா அப்பா கூட இருந்துட்டு திடீர்னு ஒரு நிமிஷம் எல்லாமே மாறி போயி தனிமையில் தூங்கறே….
அதனால எனக்கு அந்த ஹாஸ்டல் லைஃப் புடிக்கல..
இருந்தும் நான் நல்லா படிச்சா தான் அம்மாக்கும் அப்பாக்கும் பிடிக்கும்னு நான் அந்த இடத்துல என்னை அடாப்ட் பண்ணிக்க ஆரம்பிச்சேன்
விசிட்டர்ஸ் டே நடக்கும் பேரன்ட்ஸ் எல்லாம் வந்து பார்த்துட்டு போவாங்க நானும் அம்மா வருவாங்களானு ஆர்வமா எதிர்பார்ப்பேன்.ஆனா அம்மா வர மாட்டாங்க…
பாட்டி மட்டும்தான் வருவாங்க அம்மா வரலையா கேட்பே பாட்டி ,” அம்மா நெக்ஸ்ட் டைம் வருவாங்கனு” சொல்லுவாங்க எனக்கு அம்மாவ பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.
என்னோட ஹாஸ்டல் ரூமுக்கு முன்னாடி ஒரு மரம் இருக்கும் பால்கனியில் இருந்து அந்த மரத்தை புடிச்சுக்கலாம். நான் அந்த மரத்தை புடிச்சு மேல இருந்து கீழ குதிச்சு என் கையை உடைச்சு கிட்டேன்.
அம்மா வந்து என்ன பாப்பாங்கனு நான் நினைச்சேன். ஹாஸ்டல்ல இருந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் முதலுதவி தந்தாங்க…
பிறகு பாட்டிக்கு தகவல் சொன்னாங்க ,பாட்டி வந்து பாத்துட்டு எங்க ஊருக்கே கூட்டிட்டு வந்து ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க…
“எனக்கு அம்மாவ பாக்கணும் போல இருக்கு பாட்டி நீங்க அம்மாகிட்ட சொல்லி வர சொல்லுங்கனு” சொன்னேன்.
அம்மா வரமாட்டாங்க அவ நம்மள எல்லாம் விட்டு ரொம்ப தூரமா போயிட்டா… தம்பினு சொன்னாங்க…
இல்ல எனக்கு அம்மாவ பாக்கணும்.. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…
நாலாவது படிக்கையிலே பார்த்தது இப்ப நான் எட்டாவது போயிட்டேன். ஏன் அம்மா என்னை வந்து இவ்வளவு நாள் பார்க்கவே இல்லை? நான் இப்ப கண்டிப்பா பார்த்தே ஆகணும் அம்மாவும் வர சொல்லுங்கனு நான் சொன்னேன்..
பாட்டி என்கிட்ட எவ்வளவோ சமாதானம் சொன்னாங்க ..ஆனால் நான் அம்மாவை பார்த்தே ஆகணும்னு பிடிவாதமா இருந்ததுனால கடைசியில் அம்மாவை வர வச்சாங்க…
நானும் காலைலே இருந்தே ரொம்ப எக்சைட்மெண்டா உக்காந்துட்டு இருந்தே…
அம்மா வருவாங்க.. இவ்ளோ நாள் ஸ்கூல்ல நடந்த கதை எல்லாம் சொல்லலாம்.. அம்மா தலைக்கு எண்ணெய் வெச்சு விடுவாங்கனு தலையைக்கூட வாராமே அப்படியே உக்காந்துட்டு இருந்தேன்…
அம்மா வந்தாங்க அவங்க கைல ஒரு சின்ன குழந்தை இருந்தது. இன்னொரு கையில ஒரு சின்ன பையனை புடிச்சிட்டு வந்தாங்க..
அவங்க ரெண்டு பேரும் அம்மாவோட குழந்தைகள்னு எனக்கு அப்போ எனக்கு தெரியல… நான் ஆர்வமா அவங்கள பார்த்துட்டு பெட்ல படுத்துட்டு இருந்தேன்.
அம்மா வந்து ஏதோ ஒரு மூணாவது மனுஷங்களை விசாரிக்கிற மாதிரி எப்படி இருக்க? என்ன ஏதுன்னு மட்டும் கேட்டுட்டு கைல ஒரு குழந்தை வச்சிட்டு அதை கொஞ்சிக்கிட்டே இருந்தாங்க.. இன்னொரு ஒரு பையன் அம்மா வீட்டுக்கு போலாம்… அம்மா வீட்டுக்கு போலாம்… என அழுது கொண்டே இருந்தா…
அம்மாக்கு அவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறதே போதும் போதும்னு ஆயிடுச்சு டாக்டர பார்த்து விசாரிச்சுட்டு அங்க இருந்த நர்ஸுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நல்லா பாத்துக்கோங்க தம்பியைனு சொல்லிட்டு அம்மா கிளம்பிட்டாங்க…
அம்மா போனதுக்கு அப்பறோம் பாட்டி எனக்கு எல்லாம் விஷயங்களையும் சொன்னாங்க…
எனக்கு ஏன்டா அம்மாவை பார்த்தோம் பார்க்கமலேயே இருந்து இருக்கலாம்னு தோணுச்சு..
நாம இருக்கிற இடத்தில இன்னொருத்தங்களை பாக்குற வலி ரொம்ப கொடுமையானது
நான் இருக்க வேண்டிய இடத்துல ரெண்டு பசங்க.. நான் அங்கே ஏதோ ஒரு மூணாவது ஆள் மாதிரி எதிர்ல நின்ன அவங்களை பார்த்துட்டு இருந்தேன்.
இந்த மாதிரி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் வரவே கூடாதுனு நான் நினைக்கிறேன் அப்படின்னு சொல்லி முடித்தான்.
கணேஷ் அவனை ஓடி சென்று அனைத்துக் கொண்டான்.அங்கிருந்த சில பெண்மணிகள் கண்ணீரை துடைத்துக் கொண்டனர்.
இரவு உணவு முடித்துவிட்டு நால்வரும் அவர்களது அறைக்கு சென்றனர்.
அந்த ரிசார்ட், மலையில் உள்ள பாறைகளுக்கு இடையில் ,வருபவர்கள் தங்க மரவீடுகளை கட்டி இருந்தது.இரண்டு பெட்ரூம்களை கொண்ட மர வீடுகள்தான் அவர்கள் நால்வரும் தங்கும் அறைகள்.
ஒரு ரூம்மில் அனிஷும்,பவியும் தங்கி கொண்டனர். இன்னொரு அறையில் ஆண்கள் இருவரும் தங்கிக் கொண்டனர்.
இரண்டிலுமே அட்டாச் பாத்ரூம் இருந்தது. ஹாலில் டீவி சோபா என வீட்டில் இருக்கும் உணர்வையே தந்தது.
அவரவர் ரூம்களில் தூங்க சென்றனர். எவ்வளவு முயன்றும் அனிஷிற்கு தூக்கமே வரவில்லை.
பால்கனிக்கு சென்று குளிர்ந்த காற்றை சுவாசித்தாள்.
முழுநிலவு நாள் வானில் ஜொலித்தது. மரங்களின் நிழல் தரையில் விழுந்ததை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அர்ஜுனுக்கும் தூக்கம் வராமல் போகவே எழுந்து பால்கனிக்கு வந்தான்.
அனிஷ் ஆள் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அர்ஜூன் வந்தான்.
அவன், “இவளா திரும்பி சென்று விடுவோம் “என திரும்பினான்.
“அர்ஜூன் ஒருநிமிஷம்” என்றாள்,அவன் ஆச்சரியமாக திரும்பி இவளை பார்க்க ,”சாரி அர்ஜூன் நீ எவ்வளவு பெரிய கஷ்டத்தை உன் மனசுல வெச்சிட்டு இருக்கே அது தெரியாம நான் வேற உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டே இருக்கே என்னை மன்னிச்சிடு என்றாள்.
சிரித்துக் கொண்டே சாரி எல்லாம் வேண்டா,நீங்க எப்பவும் போல என்கிட்ட பேசுங்க அதுதா எனக்கும் பிடிச்சு இருக்கு என்றான்.
சரி இனி நாம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம் என்று கையை நீட்ட அவனும் அதை ஏற்று கையை நீட்டினான்.
அது ஒரு மலைப்பாங்கான இடம் இரவில் காட்டெருமை நடமாட்டம் இருக்கும் என ரிசார்ட் சார்பாக எச்சரிக்கை செய்திருந்தனர்.
ஒரு காட்டெருமை இவர்களை தாக்க தயாராக நின்றது.
— கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!