Skip to content
Post Views: 3,990
யாதுமாகி #1
மாப்பிள்ளை தயவுசெய்து குழந்தையை கொடுங்க அவ வலியால் துடிக்கிறா… வேதவல்லி மன்றாடினார்.
இரும்பாய் இறுகி நின்றான்,அவன் உடல் மொழியில் எதுவும் உணர இயலவில்லை.
மாப்பிள்ளை என் பொண்ணு பண்ணினது சரின்னு நான் சொல்ல வரலை இப்போ குழந்தையை கொடுங்க எதுவானாலும் நாளை மறுநாள் பேசிக்கலாம்.ஒரு தாயாய் உள்ளம் வெதும்பி கெஞ்சினார் வேதவல்லி.
Advertisement
ஏய் வேதா…என்ன நீ கெஞ்சிகிட்டு இருக்க, போய் குழந்தையை தூக்கிட்டு வா! நரை மீசை துடிக்க தர்ஜித்தார் வெங்கடாசலம்.
அலட்சியமாய் அவர் கர்ஜனையை ஒதுக்கி சிவந்த விழிகளை அகற்றி முறைத்தான் விஷ்ணு.
“ வாங்க சம்பந்தி” வெங்கடாசலம், வேதவல்லி தம்பதிகளை வரவேற்றார் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த வேணுகோபாலன்.
Advertisement
நாங்க ஒன்னும் உறவாடி விருந்து சாப்பிட வரலை…. எங்க பேர குழந்தையை தூக்கிட்டு போக வந்திருக்கோம். வார்த்தைகள் விளாசினார் வெங்கடாசலம்.
Advertisement
வேணுகோபாலன் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் மகனை தவிப்புடன் பார்த்தார்.
அவன் எங்க அப்பாவுக்கு பேரன்,அப்புறம் தான் உங்களுக்கு பேரன். வார்த்தைகளில் அழுத்தமே அவன் கோபத்தை பிரதிபலித்தது.
என் பொண்ணு இல்லாம தான் உங்களுக்கு பேரன் வந்துட்டானா? வெங்கடாச்சலம் பொங்கிவிட்டார்.
Advertisement
ஹா…ஹா…மீசையை முறுக்கியவன் நான் இல்லாம தான் உங்க பொண்ணு பிள்ளை பெத்தாளா? விஷ்ணு நறுக்காய் சுருக்கென்று கேட்டான்.
மருமகனின் அளவுக்கு மீறிய பேச்சில் ஆடிப்போய் முகம் கன்றி நின்றார் வெங்கடாசலம்.
விஷ்ணு என்னப்பா பேச்சு இது? வேணு கடுமையாய் மகனை முறைத்தார்.
சம்மந்தி பொம்பளைங்க விஷயம்தான் இருந்தாலும் சொல்றேன்… உங்க மருமகளுக்கு பால் கட்டி,நெஞ்சு வீங்கி காய்ச்சலில் கிடக்கிறா… வேதம் கண்ணீருடன் முறையிட்டார்.
விஷ்ணு குழந்தையை கொடுத்து அனுப்பு! வேணு பல்லை கடித்தார்.
சாரிப்பா என் குழந்தையை கொடுக்க முடியாது! வேணும்னா அவளை இங்கே வர சொல்லுங்க. அலட்டல் இன்றி பதில் கொடுத்தான்.
விஷ்ணு நீ பேசுறது ரொம்ப தப்பு! பால் குடி மறவாத ஆறு மாச குழந்தையை தாய் கிட்ட இருந்து பிரித்து தூக்கிட்டு வந்தது ரொம்ப தப்பு.
அப்பா உங்க பஞ்சாயத்தை ஊருக்கு மட்டும் போதும் வீட்டுக்குள்ள வேண்டாம் ப்ளீஸ்! முகத்தில் அறைந்தார் போல் பதில் கொடுத்தான்.
சட்டென்று தந்தையின் முகம் வாடியது அவனுக்கு பொறுக்கவில்லை தான் ஆனால் வேறுவழியில்லை.
வேதா என்னடி பிச்சை கேட்டுக்கிட்டு இருக்க… நான் போய் குழந்தையை தூக்கிட்டு வரேன்! கடுமையான கோபத்துடன் அறைக்குள் செல்ல முயன்ற வெங்கடாசலத்தை கரம் நீட்டி தடுத்தான் விஷ்ணு.
மாமனார் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்…. என் அறைக்குள் அத்துமீறி நுழைந்தால் நடக்கிற கதையே வேற… விஷ்ணுவின் உச்சஸ்தாயி கத்தலில் அப்படியே ஆணி அடித்தார் போல் நின்று விட்டார்.
என்ன மனுஷன் நீ? ஈவு இரக்கமே இல்லாம என்ன பிறவியோ… இரண்டு கால் ஜந்துவை போல் மருமகனை பார்த்து வைத்தார்.
நான் மனுஷனோ இல்லையோ உங்க பொண்ணோட புருஷன்!சிரிக்காமல் பதில் சொன்னான்.
குழந்தையை எப்படி வாங்கிட்டு போகணும்னு எனக்கு தெரியும்! அடி குரலில் இருந்து கர்ஜித்து சவால் விடுத்தார்.
முடிந்தால் செய்யுங்க! பதிலுக்கு நெஞ்சை நிமிர்த்தி மீசையை முறுக்கி விட்டு சவால் விடுத்தான் விஷ்ணு.
விஷ்ணு ஏன் இப்படி பண்ற? வேணு குரலில் வேதனை தெரிந்தது. தோளுக்கு மேல் வளர்ந்த மகனை எப்படி கண்டிப்பது என்று அவருக்கு தெரியவில்லை.
அப்பா இது என்னோட லைஃப் நான் பார்த்துக்கிறேன்.
‘வாயை மூடிட்டு போங்க “ என்று சொல்லாமல் சொல்லும் மகனை இயலாமையுடன் நோக்கினார்.
என்கிட்ட மல்லுக்கு நிற்கிறதை விட்டுட்டு பிள்ளையை பெத்தவளை வீடு வந்து சேர சொல்லுங்க! அதுதான் நல்ல பெத்தவங்களுக்கு அழகு. இறுதியாய் உறுதியாய் கூறினான்.
நான் போலீசோட வருவேன்!
ம்ம்ம்ம்…. சூப்பர்…வாங்க பார்த்துக்கலாம்… அசால்டாய் தோளை குலுக்கினான்.
லாயர் என்ற திமிரு? கோபமாய் சீறினார் வெங்கடாசலம். அதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
ம்கூம்….இது திமிர் இல்லை, உங்க பொண்ணோட புருஷன் என் குழந்தையோட தகப்பன் அந்த பெருமை, கொஞ்சம் மிதப்புன்னு கூட சொல்லலாம்! வலித்த மனதை இயல்பாகி சிரித்தான்.
இறுக்கமான அந்த சூழலில் யாருக்கு என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை. சற்று நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது.
மங்களம்மா என்னோட மாமனார் மாமியார் வந்து இருக்காங்க…. மணக்க மணக்க பில்டர் காபி கொண்டு வாங்க!கிச்சனை நோக்கி குரல் கொடுத்தான்.
வேதமோ என்ன செய்வது என்று தெரியாமல் முந்தானையை முறுக்கிக் கொண்டிருந்தார்.
எவ்வளவு தலை பாட அடிச்சுகிட்டேன் இந்த கிராமத்து வாழ்க்கை உனக்கு செட் ஆகாதுன்னு… கேட்டாளா பாவி மக? இயலாமையில் இறுதியாக புலம்ப ஆரம்பித்துவிட்டார் வெங்கடாசலம்.
இந்த கிரராமத்தானை கட்டிக்கிட்டு உங்க பொண்ணு கழனியில் நடவு நடவும், களை பறிக்கவும், அரப்பு அறுக்கவும் போகல…மகாராணி கணக்கா பொன்னுசாமி கவுண்டர் வீட்டுல கம்பீரமாதான் இருந்தா! சூடாக பதிலடி கொடுத்தான்.
பேச்சு முற்றி ராசாபாசம் ஆவது போல் தோன்ற…. இடைபுகுந்த வேணு சம்மந்தி எந்த
பிரச்னைனாலும் உங்க பொண்ணு சொல்லிக்காம குழந்தையை தூக்கிட்டு போனது தவறில்லையா? வேதனையுடன் கேட்டார்.
தப்புதாங்க…. நாலு நாள் வச்சிருந்து புத்திமதி சொல்லி அனுப்பி வைக்கிறேன். இப்போ குழந்தையை கொடுங்க! ஏறத்தாழ வேதம் கெஞ்சினார்.
பரிதாபமாக மகனை பார்த்தார் வேணு.
காபி சாப்பிடுங்க! உபசாரம் செய்ய தொடங்கி விட்டான் விஷ்ணு.
கொதிப்புடன் திரும்பி நடந்தார் வெங்கடாச்சலம்.
அத்தை மங்கள்ளம்மா காபி செம்ம டேஸ்டா இருக்கும் என்றான் சீரியஸாய்.
“—————-”
குழந்தையை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
தாயும், தகப்பனும் வெறுங்கையுடன் வருவது கண்டு கதறினாள்.
அவளுக்கு தெரியுமே…அவளை கட்டியவன் குணம் என்வென்று.
அம்மா என் குழந்தை இல்லாம ஏன் வந்தீங்க? கண்ணீரில் கரைந்தாள்.
பெற்றவர்கள் என்ன சொல்ல என்று தெரியாமல் கையை பிசைந்தனர்.
இப்போ அழுது கரைந்து என்ன பண்ண? நீயே உன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட…. மகளிடம் கடுகடுத்துவிட்டு போனார் வெங்கி.
“—————-”
டேய் தம்பி விஷ்ணு . பச்ச குழந்தையை தாய்கிட்ட இருந்து தூக்கிட்டு வந்துட்ட…அது ஏக்கத்துல விம்மி அழுகுதேப்பா…. வேதனையுடன் பேரனை முறைத்தார் அன்னம்.
ஆமாம் தம்பி குழந்தைக்கு இன்னும் புட்டிபால் பழக்கல.. குழந்தை பாலை கக்குது, தாய் முகம் தேடி அழுது அழுது தொண்டை வறண்டு போச்சு…. பச்சை குழந்தை தாங்காது தம்பி! சமையல்கார மங்களம்மா வருத்தமாய் கூறினார்.
தொட்டிலில் துவண்டு கிடக்கும் தன் உயிரில் உதித்த பொக்கிஷத்தை கண்டான்.
பிரணவ் குட்டி அப்பா இருக்கேன்டா…மகனை அள்ளி அணைத்துக்கொண்டான்.
குழந்தைக்கு லேசாய் உடம்பு சுட ஆரம்பித்துவிட்டது. மனம் தடதடக்க தொடங்கி விட்டது.
விஷ்ணு மரியாதையா குழந்தையை பெத்தவ கையில் கொடுத்துட்டு வா! அன்னம் கட்டளை பிறப்பித்தார்.
“—————-”
அழுது ஓய்ந்து பால்கட்டிய வலியுடன் கட்டிலில் சுருண்டு கிடந்தாள் நேத்ரா.
கதவு தட்டப்படவே…. இந்நேரம் யாரு? சோர்வுடன் எழுந்து வந்து சுரத்தில்லாமல் கதவை திறந்தாள்.
எதிரில் கணவன் கையில் குழந்தையுடன் நிற்பதை கண்டவளுக்கு நம்ப முடியவில்லை.
திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நிஜம் தானா என்றொரு பயம் அவளுக்கு.
error: Content is protected !!